அதை நான் கூறலாமா?
குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் டாக்டர் பார்பரா என்ற குழந்தைகள் நல மருத்துவர், “உடன் பிறப்புகள் மத்தியில் ஏற்படும் போட்டி மனப்பான்மைக்கு பெற்றோர்கள் காட்டும் ஓரவஞ்சகம்தான் மிக முக்கிய காரணமாக உள்ளது” என்று கூறியுள்ளார். உதாரணமாக பழைய ஏற்பாட்டில் வரும் யோசேப்பு, அவனது தகப்பனாருக்கு மிகவும் பிடித்தமான மகன். அதனால், அவனது மூத்த சகோதரர்கள், அவன் மீது கோபமும், எரிச்சலும் அடைந்தார்கள் (ஆதி. 37:3-4). அவர்கள் யோசேப்பை எகிப்துக்கு பயணம் செய்து கொண்டிருந்த வியாபாரிகளிடம் விற்றுப் போட்டு, ஏதோ ஒருகாட்டு மிருகம் அவனை அடித்து கொன்றுவிட்டது என்ற செய்தியை பரப்பினார்கள் (37:12-36). யோசேப்பின் கனவுகள் சிதறடிக்கப்பட்டு அவனது எதிர்காலம் நம்பிக்கை அற்றதுபோல் காணப்பட்டது.
ஆயினும், யோசேப்பு தன் வாழ்க்கைப் பயணத்தில் மிகவும் நெருக்கடியான காலங்களில் கூட தேவனுக்கு உண்மையாய் இருந்து அவரையே சார்ந்திருந்தான். அவனது எஜமானின் மனைவியால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, அவன் செய்யாத செயலுக்காக சிறையில் அடைக்கப்பட்டு, அநியாயமாக தண்டிக்கப்பட்ட பொழுதும் அவன் தேவன்மீது நம்பிக்கையுடன் இருந்தான்.
அநேக ஆண்டுகளுக்குப்பின் அவனது சகோதரர்கள், அவர்களது தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்தினால் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்த பொழுது, அவர்களால் வேண்டாமென்று ஒதுக்கி தள்ளிவிடப்பட்ட அவர்களது இளைய சகோதரனே எகிப்துக்கு பிரதானி என்பதை அறிந்து மிகுந்த கலக்கமுற்றார்கள். “என்னை இவ்விடத்தில் வரும்படி, விற்றுப் போட்டதினால் நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம்; அது உங்களுக்கு விசனமாய் இருக்கவும் வேண்டாம்; ஜீவ ரட்சணை செய்யும்படிக்கு தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்…, ஆதலால் நீங்களல்ல, தேவனே என்னை இவ்விடத்திற்கு அனுப்பினார்” (45:5,8) என்று அவர்களிடம் யோசேப்பு கூறினான்.
யோசேப்பின் அன்பான வார்த்தைகள், என்னைக் குறித்து சிந்திக்க தோன்றியது. ஒருவேளை யோசேப்பின் இடத்தில் நான் இருந்திருந்தால், நான் பழிக்குப் பழி வாங்க எண்ணியிருப்பேனோ என்று யோசித்தேன். அல்லது தேவன் மேல் நான் எனது நம்பிக்கையை வைத்திருப்பதால் மன்னிப்பதற்கு பெருந்தன்மையுடையவனாய் இருந்திப்பேனோ என்று சிந்தித்தேன்.
விடுதலையைக் கொண்டாடுங்கள்
கடத்தப்பட்டு 13 நாட்கள் பிணைக் கைதியாக வைக்கப்பட்டு, பின் விடுதலையாக்கப்பட்ட ஓலாவ் விக்கு என்ற நியூஸிலாந்தைச் சேர்ந்த ஒளிப்படத் தொகுப்பாளர் மலர்ந்த முகத்துடனும், சிரிப்புடனும் “எனது கடந்த வாழ்நாள் முழுவதிலும் நான் உணர்ந்ததைவிட இப்பொழுது உண்மையிலேயே உயிருள்ளவனாக உணர்கிறேன்” என்று கூறினார்.
சுதந்திரமாக இருப்பதைவிட ஒரு பிடியிலிருந்து சுதந்திரம் பெறுவது, நம்மால் புரிந்துகொள்ள இயலாத இன்பக்களிப்பை நமக்கு கொடுக்கிறது.
அனுதினமும் சுதந்தரமான வாழ்க்கையை அனுபவிக்கும் நமக்கு ஓலாவ் விக்குவின் மகிழ்ச்சி, நாம் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதை எளிதாக மறந்து விடுகிறோம் என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. ஆவிக்கேற்ற வாழ்க்கையிலும் இது உண்மையானது. அநேக காலமாக கிறிஸ்தவர்களாக வாழ்பவர்கள், அவர்கள் ஒரு காலத்தில் பாவத்திற்கு அடிமையாக இருந்ததை மறந்து விடுகிறார்கள். நாம் நமது வாழ்க்கை முறையில் அதிக மன நிறைவு கொள்வதோடு நன்றி இல்லாதவர்களாகவும் இருந்துவிடக்கூடும். அப்படிப்பட்ட சமயங்களில் புதிதாக விசுவாசத்திற்குள் வந்த ஒருவர், அவருடைய வாழ்க்கையில் தேவன் அருளிய இரட்சிப்பின் மகிழ்ச்சியை உற்சாகத்துடன் நம்மிடம் பகிர்ந்து கொள்ளும்போது, நாமும் இப்படியாக ஒரு காலத்தில் பாவப் பிரமாணத்தினின்றும், மரணத்தினின்றும் விடுதலையாக்கப்பட்டபோது (ரோம. 8:2) நாம் பெற்ற மகிழ்ச்சியை தேவன் நமக்கு நினைப்பூட்டுவார்.
விடுதலை வாழ்க்கை உங்களை சோர்வடையச் செய்வதாக இருந்தால் அல்லது உங்களால் செய்ய இயலாத காரியத்தில் உங்கள் மனதை செலுத்துபவர்களாக இருந்தால், கீழ்க்கண்ட காரியங்களை சிந்தியுங்கள்: நீங்கள் இனி ஒரு பொழுதும் பாவத்திற்கு அடிமைகள் இல்லை, பரிசுத்த வாழ்க்கை வாழ விடுதலையாக்கப்பட்டு கிறிஸ்து இயேசுவோடு கூட நித்திய ஜீவனை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க உள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் (6:22).
கிறிஸ்துவுக்குள் நீங்கள் பெற்றுள்ள சுதந்திரத்தின்மூலமாக தேவனுக்கு அடிமையாக நீங்கள் செய்யக் கூடிய செயலுக்கு நன்றி கூறி, கிறிஸ்துவுக்குள் நீங்கள் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
பிரிவுகளை அழித்தல்
எனக்கும் என் கணவனுக்கும் இடையே அன்று காலை ஏற்பட்ட வாக்குவாதம் எனது மனதில் புயல்போல் மோதி அடித்துக் கொண்டிருந்தபொழுது, அன்றையத்தினமே நான் முடிக்க வேண்டிய ஒரு எழுத்து வேலையைக் குறித்த மன உளைச்சலும் என்னை ஆட்கொண்டது. எனது கணினியில் விட்டு விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்த சுட்டும் குறியையே (Cursor) நான் உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். எனது விரல்நுனிகள் கணினியில் விரல் கட்டைகளின் மீது (Keyboard) இருந்தன. அவள் தனக்குள்ளாக “கர்த்தாவே எனது கணவர் செய்ததும் தவறுதானே” என்று கூறிக்கொண்டாள்.
எனது கணினியின் திரை இருண்ட பொழுது, அதிலிருந்த எனது கடுகடுப்பான முகத்தின் பிம்பத்தைப் பார்த்தேன். நான் ஒத்துக்கொள்ளாத எனது தவறு, நான் செய்யவிருந்த வேலையை செய்யவிடாமல் தடுத்து மேலும் என் கணவனோடும், என் தேவனோடும் இருந்த உறவையும் பாதித்தது.
நான் எனது பெருமையை விட்டுவிட்டு, எனது கைபேசியை வேகமாக எடுத்து என் கணவனிடம் மன்னிப்புக் கேட்டேன். எனது கணவனும் அவருடைய தவறுக்கு மன்னிப்புக் கேட்ட பொழுது, எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்புரவினால் என் மனதில் உண்டான சமாதானத்தை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன். உடனே என் தேவனுக்கு நன்றி கூறி நான் எழுதி முடிக்க வேண்டிய கட்டுரையையும் விரைவில் எழுதி முடித்துவிட்டேன்.
இஸ்ரவேல் மக்களும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வில் உள்ள பாவத்தினால், மன வேதனையையும், தேவனோடு மறுபடியும் ஒப்புரவாகுதலினால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவித்தார்கள். எரிகோவிற்கு எதிராக அவர்கள் தொடுத்த யுத்தத்தின் முடிவில் எரிகோவிலிருந்த எந்த ஒரு சாபத்தீடான பொருளையும் எடுத்து ஐசுவரியத்தை சேர்க்கக் கூடாது என்று யோசுவா எச்சரித்தான். ஆனால், ஆகான் அங்கிருந்த விலையுயர்ந்த பொருட்கள் சிலவற்றை எடுத்து தனது கூடாரத்தின் கீழ் ஒளித்து வைத்தான் (7:1). அவனது பாவம் வெளிப்படுத்தப்பட்டு அவன் தண்டிக்கப்பட்ட பின்புதான் (4-12) இஸ்ரவேல் மக்கள் தேவனோடு ஒப்புரவாகி, அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியை அவர்களால் அனுபவிக்க முடிந்தது.
ஆகானைப்போல் நாமும் “நமது கூடாரத்திற்குள் பாவத்தை ஒளித்து வைப்பதினால்” நம்முடைய இருதயம் தேவனை விட்டு விலகுவதோடு நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மேலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாம் எப்பொழுதும் முக்கியமாகக் கருதுவதில்லை. இயேசுவே கர்த்தர் என்று அறிக்கை இட்டு, நாம் பாவிகள் என்பதை ஒத்துக்கொண்டு தேவனிடம் மன்னிப்புக்காக மன்றாடுவது, தேவனோடும், பிறரோடும் உண்மையான உறவைக் கட்டுவதற்கான சிறந்த ஆரம்பமாக உள்ளது. நமது அன்பான சிருஷ்டிகரும், நம்மை அன்றாடம் போஷிக்கிறவருமான தேவனிடம் நம்மை ஒப்புக்கொடுப்பதின்மூலமாக அவருக்கு ஊழியம் செய்வதோடு, அவரது பிரசன்னத்தையும் மகிழ்ச்சியோடு அனுபவிக்கலாம்.
குறுக்கு வழிகளில் செல்லுதல்
நான்சி, அவளது கரத்திலிருந்த தேனீர் கோப்பையிலிருந்து தேனீரை மெதுவாக குடித்துக் கொண்டே, அவளது சினேகிதியின் வீட்டிலிருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்து பெருமூச்சு விட்டாள். இளவேனிற் காலத்து மழையினாலும், இதமான சூரிய ஒளியினாலும், ஏற்கனவே அவளது சினேகிதியினால் நன்கு பராமரிக்கப்பட்டிருந்த பூ பாத்திகளில் லில்லி, ப்ளாக்ஸ், ஐரிஸ், பிரிம் ரோஸ் போன்ற பல வண்ணப் பூக்கள் பூத்து குலுங்கின.
“நான் எந்த ஒருவேலையும் செய்யாமல் அந்த அழகிய காட்சியை காண விரும்புகிறேன்”, என்று ஏக்கத்துடன் நான்சி தனக்குள் கூறிக்கொண்டாள்.
சில குறுக்கு வழிகள் நன்றாகவும், எளிதில் செயல்படக் கூடியதாகவும் இருக்கும். வேறு சில குறுக்கு வழிகள் நமது ஆவியை அவித்துப்போட்டு நம்முடைய வாழ்க்கையை அழித்து விடுகின்றன. நம்மை விட முற்றிலும் மாறுபட்ட தன்மையுள்ள மக்களோடு நாம் ஈடுபாடு கொள்ளும் பொழுது எந்தவிதமான இடர்பாடோ கஷ்டங்களோ இன்றி, புத்துணர்ச்சியுடன் அவருடன் பழக வேண்டுமென்று விரும்புகிறோம். உண்மையில் நமது வாழ்க்கையின் ஓட்டத்தில் ஏற்படக் கூடிய ஆபத்தான சூழ்நிலைகளையோ தோல்விகளையோ சந்திக்காமல் உன்னதமான வாழ்க்கை வாழ நாம் விரும்புகிறோம். நாம் தேவனை பிரியப்படுத்த விரும்புகிறோம். ஆனால், நமக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாத சூழ்நிலைகளில்தான் அவ்வாறு விரும்புகிறோம்.
நமது வாழ்க்கையை முற்றிலுமாக இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்க உறுதியான முடிவு எடுக்காமல் எந்த ஒரு குறுக்கு வழியிலும் அவரை அடையமுடியாது என்று இயேசு அவருடைய சீஷர்களுக்கு தெளிவாக கற்பித்தார்.
“கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்ஜியத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்று” (லூக். 9:62) ராஜ்ஜியத்தை பெற்றுக் கொள்வது சாத்தியம் என்று எண்ணின ஒரு சீஷனை இயேசு எச்சரித்தார். இயேசுவை பின்பற்றுவதற்கு நமது அடிப்படை நம்பிக்கைகளை முழுவதுமாக மாற்றுவது அவசியமாக உள்ளது.
இயேசுவில் நமது விசுவாசத்தை வைக்கும்பொழுதுதான் விசுவாசம் செயல்பட ஆரம்பிக்கிறது. “என் நிமித்தமாகவும், சுவிசேஷத்தின் நிமித்தமாகவும், வீட்டையாவது…விட்டவன் எவனும் இம்மையிலே துன்பங்களோடே கூட… அடைவதோடு மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான்” (மாற். 10:29-30) என்று கூறினார். இது எவ்வளவு சிறப்பானகாரியம் ஆனால் அவர் அவரது பரிசுத்தாவியை நமக்கு அருளியுள்ளார். ஆதனால் நமக்கு பரிபூரணமான, மகிழ்ச்சியான வாழ்க்கை நித்திய நித்தியமாகக் கிடைக்கிறது.
வீட்டை சுத்தம் பண்ணுதல்
சமீபத்தில் நான் வாடகைக்கு எடுத்திருந்த ஒரு வீட்டிற்கு எனது அறையை மாற்றினேன். என் அறையை மாற்றும் காரியம், நான் எதிர்பார்த்ததைவிட அதிக நாட்கள் எடுத்துக் கொண்டது. ஏனென்றால் எனது பழைய அறையிலிருந்த பழைய குப்பைகளை புதிய அறைக்கு மாற்ற எனக்கு விருப்பமில்லை. எனது புதிய அறையில் எந்தவிதத் தேவையற்ற பொருட்களும்மின்றி முற்றிலும் புதியவற்றையே வைக்க விரும்பினேன். நான் என் அறையிலிருந்த பொருட்களை, பிறருக்கு இலவசமாக கொடுக்கக்கூடியவை, மறு சுழற்சி செய்யக்கூடியவை என பிரிப்பதற்குப் பல மணிநேரம் செலவழித்தேன். வேண்டாத பொருட்களைப் பல பைகளில் சேகரித்து எனது அறை வாசலின் முன் வைத்து விட்டேன். இந்த செயல் என்னை மிகவும் சோர்வடையச் செய்தது. ஆனால், அவ்வேலைகள் முடிந்தபின், எனது புதிய அறை என் நாட்களை மிக மகிழ்ச்சியுடன் கழிக்கத்தக்கதாக மிக அழகான அறையாக மாறியது.
என் வீட்டைச் சுத்தம் செய்த இந்த செயல் 1 பேதுரு 2:1யை வாசித்த பொழுது அதைப்பற்றிய புதிய கண்ணோட்டத்தை எனக்குத் தந்தது. “சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிடுங்கள்’’ (1 பேது. 2:2) என்று நமது கவனத்தை ஈர்க்கத்தக்கதாக மேற்கூறப்பட்ட சுத்தப்படுத்துதல் என்ற நிகழ்ச்சி, கிறிஸ்துவுக்குள் அவர்கள் பெற்ற புதிய ஜீவனை குறித்து அவர்கள் அறிக்கை இட்ட உடன்தான் நிகழ்கிறது (1 பேது. 1:1-12). சகல துர்க்குணங்களையும் ஒழித்துவிட பேதுரு அவர்களுக்கு அறிவுறுத்துகிறார் (1 பேது. 1:13-2:3). கர்த்தரோடு நாம் இணைந்து வாழும் வாழ்க்கை குறைவுள்ளதாகவும் பிறர் மேலுள்ள நமது அன்பு கறைபடக்கூடியதாகவும் இருப்பதை உணர்ந்தால், நாம் நமது இரட்சிப்பைக் குறித்து கேள்வி கேட்கத் தேவை இல்லை. இரட்சிக்கப்படுவதற்காக நாம் நமது வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால், நாம் இரட்சிக்கப்பட்டதால்தான் நமது வாழ்க்கை மாறுகிறது (1:23).
கிறிஸ்துவுக்குள்ளாக நமது வாழ்க்கை உண்மையாகவே புதிதாக மாறி இருப்பதுபோலவே, நம்மில் ஏற்கனவே உள்ள துர்க்குணங்கள் ஒரே இரவில் நம்மிடமிருந்து மறைந்து போவதில்லை. ஆகவே, நமது அனுதின வாழ்க்கையில் பிறரை முழுமனதுடன் நேசிப்பதிலிருந்தும் (1:22) ஆன்மீக வாழ்க்கையில் வளர்ச்சி அடைவதிலிருந்தும் (2:2), நம்மைத் தடுக்கும் அனைத்து குணங்களையும், நாம் அன்றாடம் நீக்கி நம்மை சுத்திகரித்துக் கொண்டால் தான் சுத்தமான இருதயத்தை நாம் பெறமுடியும். சுத்தமாக்கப்பட்ட புதிய வாழ்வில் கிறிஸ்துவின் வல்லமையினாலும், அவருடைய ஜீவனாலும் புதிதாக்கப்பட்ட அற்புத நிகழ்ச்சியை நாம் அனுபவிக்கலாம்.
தழைத்தோங்கும் தருணம்
எங்கள் பின் வாசல் பக்கம் உள்ள ரோஜாச் செடியை வெட்டிவிட வேண்டுமென கடந்த இளவேனிற் காலத்திலேயே தீர்மானித்தேன். நாங்கள் இந்த வீட்டில் வாழ்ந்த இம்மூன்று வருடங்களிலும், அச்செடி பூக்கள் பூக்கவே இல்லை. பூக்களற்ற அசிங்கமான அதன் கிளைகள் எல்லா திசைகளிலும் இப்பொழுது படர்ந்துள்ளது.
என் வாழ்க்கை மிகுந்த பரபரப்பாக செயல்பட ஆரம்பித்துவிட்டதால், என் தோட்டத்தைக் குறித்த திட்டங்கள் தாமதமாயிற்று. அதன் பின் சில வாரங்களில், அந்த ரோஜா செடி திடீரென பூத்து குலுங்கியது. அப்படியொரு காட்சியை நான் இதற்கு முன் கண்டதே இல்லை. நறுமணம் வீசும் நூற்றுக்கும் அதிகமான வெள்ளைப்பூக்கள் பின்வாசற் கதவில் படர்ந்து தொங்கிக் கொண்டிருந்தன. மேலும் அவை முற்றம் வரையிலும் கூட படர்ந்து அத்தரை பகுதியை அழகான இதழ்களால் மூடின.
எங்கள் ரோஜா செடியின் மறுமலர்ச்சி, இயேசு கூறிய அத்திமர உவமையை எனக்கு நினைவூட்டியது (லூ:13:6-9). அத்திமரம் காய்ப்பதற்கு மூன்றாண்டு கால அவகாசம் கொடுப்பது இஸ்ரவேல் தேசத்திலே வழக்கம். ஆனால், அவை மூன்று ஆண்டுகளில் காய்க்கவில்லை என்றால் அந்நிலத்தை வேறு விதத்தில் பிரயோஜனப்படுத்தும்படி அம்மரத்தை வெட்டிவிடுவார்கள். இயேசு கூறிய உவமையிலே, ஓர் தோட்டக்காரன் ஒரு மரத்திற்காக தன் எஜமானிடம் இன்னும் ஓர் ஆண்டுகால அவகாசம் கேட்பான். இந்த முழு உவமையின் பொருள் என்னவெனில், ‘தாங்கள் வாழ வேண்டிய விதத்திலே இஸ்ரவேலர் வாழவில்லை. ஆகையால் தேவனால் நீதியாய் அவர்களை நியாயந்தீர்க்க முடியும்.’ ஆனால் இரக்கமுள்ள தேவன், அவர்கள் மனந்திரும்பி மன்னிப்புபெற்று பூத்து குலுங்கும்படி அவர்களுக்கு இரக்கம் பாராட்டி, கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளார்.
நாம் அனைவரும் தழைத்தோங்க வேண்டுமென தேவன் விரும்புவதால், நம் அனைவருக்கும் கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளார். நாம் விசுவாசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாலும் சரி, இரட்சிக்கப்படாத உற்றார் உறவினர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தாலும் சரி, அவர் மிகுந்த இரக்கம் உள்ளவர் என்பது நம் அனைவருக்கும் நற்செய்தி அல்லவோ!
செயல்படும் விசுவாசம்
ஒரு நாள் என் தோழி காரை ஓட்டிக்கொண்டு மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றாள். அப்பொழுது சாலை ஓரத்திலே நடந்துகொண்டிருந்த ஒரு பெண்மணியை அவள் கண்டபோது, காரை நிறுத்தி அப்பெண்ணை காரில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என அவளுக்கு தோன்றியது. ஆகவே அப்பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டாள். பிறகு, அவளுடைய நிலைமையை கேட்டறிந்தபோது என் தோழிக்கு மிகுந்த துக்கமாயிற்று. ஏனென்றால் அப்பெண் பஸ்ஸில் பயணம் செய்ய தன்னிடம் பணம் இல்லாததால், பல மைல் தூரத்திலிருக்கும் தன்னுடைய வீட்டிற்கு இவ்வுஷ்ணமான வேளையிலும் நடந்து சென்றுகொண்டிருந்தாள். அதுமட்டுமின்றி காலையிலே வேலைக்கு வருவதற்கும் அதிகாலை 4 மணிக்கே வீட்டைவிட்டு பல மணிநேரம் நடந்தே வந்துள்ளாள்.
அப்பெண்ணை காரிலே அழைத்து சென்றதின் மூலம், கிறிஸ்தவர்களாகிய நாம், நம்முடைய விசுவாசத்தை கிரியைகளிலே காண்பிக்க வேண்டும் என்னும் யாக்கோபின் அறிவுரைகளை, என் தோழி இந்நவீன காலக்கட்டத்திலும் நடைமுறைப்படுத்தியுள்ளால். “விசுவாசம் கிரியை களில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்,” என யாக்கோபு கூறியுள்ளார் (2:17). சபையானது விதவைகளையும், திக்கற்ற பிள்ளைகளையும் காக்க வேண்டுமென்றார் (1:27). மேலும், வீண்வார்த்தைகளை சாராமல், அன்பின் கிரியைகளினாலே விசுவாசத்தை செயல் படுத்தி காட்டும்படி ஏவினார்.
நாம் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டுள்ளோம்; கிரியைகளினாலல்ல. ஆனால், தேவைகளோடு இருப்பவர்களை நேசித்து அவர்களுக்கு உதவி செய்யும்பொழுது, நம்முடைய விசுவாசத்திலே நாம் ஜீவிக்கவும் செயல்படவும் செய்கிறோம். இந்த வாழ்க்கைப் பயணத்திலே நாம் இணைந்து பயணிக்கும்போது, நம் கண்களை எப்பொழுதும் திறந்துவைத்து, காரில் அழைத்துச் சென்ற என் தோழியைப்போல, தேவையோடு இருப்பவர்களைக் கண்டு உதவிடுவோமாக.
முற்றுப்பெறாத பணிகள்
மிகச் சிறந்த கலைஞராகிய மைக்கெலேஞ்ச (Michelangelo) இறந்தபொழது, அநேக நிறைவு பெறாத பணிகளை விட்டுச்சென்றார். ஆயினும், அவற்றில் நான்கு சிற்பங்கள் நிறைவு செய்யும் நோக்கத்தில் செதுக்கப்படவில்லை. ‘த பியர்டட் ஸ்லேவ்’ (The Bearded Slave – தாடி வைத்த அடிமை), ‘த அட்லஸ் ஸ்லேவ்’ (The Atlas Slave – பூமியை தோளில் சுமக்கும் அடிமை), ‘த அவேக்கனிங் ஸ்லேவ்’ (The Awakening Slave – விழித்தெழ முயலும் அடிமை), மற்றும் ‘த யங் ஸ்லேவ்’ (The Young Slave – இளம் அடிமை) ஆகிய சிற்பங்கள் நிறைவுபெறாதது போல காட்சியளித்தாலும், அவை அப்படிதான் இருக்கவேண்டுமென மைக்கெலேஞ்ச எண்ணினார். ஏனெனில் என்றென்றும் அடிமைப்பட்டிருப்பவனின் உணர்வுகளை அவர் வெளிக்காட்ட விரும்பினார்.
சங்கிலிகளால் கட்டப்பட்டிருப்பது போன்ற உருவங்களை செதுக்குவதற்கு பதில், பளிங்கு கற்களில் வெளிவர முடியாதபடி பதிந்து மாட்டிக்கொண்டிருக்கும் உருவங்களை செதுக்கினார். அப்பாறைகளிளிருந்து உடல்கள் வெளிவர முயல்வது போலவும், ஆனால் முழுமையாக வர இயலாதது போலவும் அவை செதுக்கப்பட்டுள்ளது. தசைகளெல்லாம் வளைந்தும் நெளிந்தும் மடங்கியும் காணப்பட்டாலும் அவ்வுருவங்களால் தங்களைத் தாங்களே ஒருபோதும் விடுவித்துக் கொள்ள இயலாது.
அந்த ‘அடிமைச்’ சிற்பங்களை கண்டபோது, அவற்றின் மீது எனக்கு அனுதாபம் உண்டாயிற்று. ஏனெனில், பாவத்தோடு எனக்கிருக்கும் போராட்டத்திற்கும், அவர்களுடைய அவலநிலைக்கும் எவ்வித வித்தியாசமில்லை. அச்சிற்பங்களைப் போலவே என்னை நானே விடுவித்துக்கொள்ள முடியாதபடி மாட்டிக்கொண்டுள்ளேன். அதாவது, “என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவ பிரமாணத்திற்கு [நான்] சிறையா[கினேன்]” (ரோ. 7:23). நான் எவ்வளவுதான் முயற்சித்தாலும் என்னால் என்னை மாற்ற இயலவில்லை. ஆனாலும் தேவனுக்கு நன்றி செலுத்துவோமாக. ஏனெனில் நீங்களும் நானும் ஒருபோதும் முற்றுப்பெறாத கிரியை போல இருக்க மாட்டோம். நாம் பரலோகம் செல்லும் வரை முழுமையடையாவிட்டாலும் பரிசுத்த ஆவியானவரை வரவேற்போமாக. ஏனென்றால் அவர் நம்மை மாற்றுவார். நம்மில் நற்கிரியை தொடங்கின தேவன் தாமே அதை செய்து முடிப்பாரென அவரே வாக்குப்பண்ணியுள்ளார் (பிலி. 1:5).
ஐவிரல் ஜெபங்கள்!
நாம் தேவனோடு உரையாடுவதே ஜெபம். அது ஒரு சூத்திரம் அல்ல. ஆனாலும், சில சமயம் நமது ஜெபவேளைகளை புத்துணர்வூட்டும் பொருட்டு, ஒரு ‘முறைமையை’ கடைப் பிடிப்பது நன்று. அதாவது, தாவீதின் சங்கீதங்களைக் கொண்டும் ஜெபிக்கலாம் அல்லது வேறு வேதபகுதிகளைக் (பரமண்டல ஜெபம்) கொண்டும் ஜெபிக்கலாம். இல்லையெனில், ‘ஆராதனை, அறிக்கை, நன்றிசெலுத்துதல், விண்ணப்பித்தல்’ என்கிற வரிசை முறைமையிலும் கூட ஜெபிக்கலாம். சமீபத்தில், பிறருக்காக ஜெபிக்க உதவும் ‘ஐவிரல் ஜெபங்கள்’ என்கிற முறையைக் குறித்து அறிந்தேன்.
· நீங்கள் கைகளைக் கூப்பும்பொழுது, உங்கள் பெருவிரல்தான் உங்களுக்கு மிக அருகில் உள்ளது. ஆகவே, முதலாவது உங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக, அதாவது உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக ஜெபியுங்கள் (பிலிப். 1:3–5).
· இரண்டாவது, ஆள்காட்டி விரல். இது சுட்டிக்காட்ட பயன்படும். இப்பொழுது போதிப்பவர் களுக்காக ஜெபியுங்கள். அதாவது வேதாகம ஆசிரியர்கள், போதகர்கள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு போதிப்பவர்கள். (1 தெச. 5:25)
· அடுத்த விரல் மற்ற விரல்களை விட பெரியது. அதிகாரத்தில் இருக்கிற தேசத் தலைவர்களுக்காகவும், உங்கள் வேலை ஸ்தலத்தில் இருக்கும் அதிகாரிகளுக்காகவும் ஜெபிக்க இவ்விரல் நினைவூட்டும் (1 தீமோ. 2:1-2)
· நான்காம் விரல், பொதுவாக மற்ற விரல்களை விட பெலவீனமானது. ஆகவே, இப்பொழுது துயரத்தில் இருப்பவர்களுக்காகவும் துன்பப்படுகிறவர்களுக்காகவும் வேண்டுதல் செய்யவும். (யாக்:5:13-16)
· கடைசியாக உங்கள் சுண்டுவிரல். தேவனுடைய மகத்துவத்தோடு நம்மை ஒப்பிட்டால் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை இவ்விரல் நமக்கு நினைவூட்டும். ஆகவே இப்பொழுது நம்முடைய தேவைகள் சந்திக்கப்பட ஜெபிக்கவும் (பிலி. 4:6,19)
நீங்கள் எந்த முறைமையை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம், ஆனால், பிதாவோடு நீங்கள் உரையாடுங்கள். உங்கள் இருதயத்தில் உள்ளதை அவர் கேட்க விரும்புகிறார்.