எனக்கும் என் கணவனுக்கும் இடையே அன்று காலை ஏற்பட்ட வாக்குவாதம் எனது மனதில் புயல்போல் மோதி அடித்துக் கொண்டிருந்தபொழுது, அன்றையத்தினமே நான் முடிக்க வேண்டிய ஒரு எழுத்து வேலையைக் குறித்த மன உளைச்சலும் என்னை ஆட்கொண்டது. எனது கணினியில் விட்டு விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்த சுட்டும் குறியையே (Cursor) நான் உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். எனது விரல்நுனிகள் கணினியில் விரல் கட்டைகளின் மீது (Keyboard) இருந்தன. அவள் தனக்குள்ளாக “கர்த்தாவே எனது கணவர் செய்ததும் தவறுதானே” என்று கூறிக்கொண்டாள்.

எனது கணினியின் திரை இருண்ட பொழுது, அதிலிருந்த எனது கடுகடுப்பான முகத்தின் பிம்பத்தைப் பார்த்தேன். நான் ஒத்துக்கொள்ளாத எனது தவறு, நான் செய்யவிருந்த வேலையை செய்யவிடாமல் தடுத்து மேலும் என் கணவனோடும், என் தேவனோடும் இருந்த உறவையும் பாதித்தது.

நான் எனது பெருமையை விட்டுவிட்டு, எனது கைபேசியை வேகமாக எடுத்து என் கணவனிடம் மன்னிப்புக் கேட்டேன். எனது கணவனும் அவருடைய தவறுக்கு மன்னிப்புக் கேட்ட பொழுது, எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்புரவினால் என் மனதில் உண்டான சமாதானத்தை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன். உடனே என் தேவனுக்கு நன்றி கூறி நான் எழுதி முடிக்க வேண்டிய கட்டுரையையும் விரைவில் எழுதி முடித்துவிட்டேன்.

இஸ்ரவேல் மக்களும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வில் உள்ள பாவத்தினால், மன வேதனையையும், தேவனோடு மறுபடியும் ஒப்புரவாகுதலினால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவித்தார்கள். எரிகோவிற்கு எதிராக அவர்கள் தொடுத்த யுத்தத்தின் முடிவில் எரிகோவிலிருந்த எந்த ஒரு சாபத்தீடான பொருளையும் எடுத்து ஐசுவரியத்தை சேர்க்கக் கூடாது என்று யோசுவா எச்சரித்தான். ஆனால், ஆகான் அங்கிருந்த விலையுயர்ந்த பொருட்கள் சிலவற்றை எடுத்து தனது கூடாரத்தின் கீழ் ஒளித்து வைத்தான் (7:1). அவனது பாவம் வெளிப்படுத்தப்பட்டு அவன் தண்டிக்கப்பட்ட பின்புதான் (4-12) இஸ்ரவேல் மக்கள் தேவனோடு ஒப்புரவாகி, அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியை அவர்களால் அனுபவிக்க முடிந்தது.

ஆகானைப்போல் நாமும் “நமது கூடாரத்திற்குள் பாவத்தை ஒளித்து வைப்பதினால்” நம்முடைய இருதயம் தேவனை விட்டு விலகுவதோடு நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மேலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாம் எப்பொழுதும் முக்கியமாகக் கருதுவதில்லை. இயேசுவே கர்த்தர் என்று அறிக்கை இட்டு, நாம் பாவிகள் என்பதை ஒத்துக்கொண்டு தேவனிடம் மன்னிப்புக்காக மன்றாடுவது, தேவனோடும், பிறரோடும் உண்மையான உறவைக் கட்டுவதற்கான சிறந்த ஆரம்பமாக உள்ளது. நமது அன்பான சிருஷ்டிகரும், நம்மை அன்றாடம் போஷிக்கிறவருமான தேவனிடம் நம்மை ஒப்புக்கொடுப்பதின்மூலமாக அவருக்கு ஊழியம் செய்வதோடு, அவரது பிரசன்னத்தையும் மகிழ்ச்சியோடு அனுபவிக்கலாம்.