Archives: ஆகஸ்ட் 2017

தேவனது பிரகாசிக்கும் அழகு!

ஆஸ்திரேலியா நாட்டின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பாலுள்ள லார்ட் ஹோவே தீவு வெண்மை நிறமணலும் தெளிந்த தண்ணீரும் உள்ள ஒரு சிறிய அழகிய இடம். அத்தீவின் அழகு என்னை மிகவும் கவர்ந்தது. இத்தீவில் மிகவும் சாதாரணமாக நீங்கள் கடல் ஆமைகளோடும் மீன்களோடும் பயமின்றி நீந்தலாம். உங்களருகே பெரிய எலும்பையுடைய மூன் இராஸே மீன்கள் தங்களது ஒளிரும் வண்ணங்களை வெளிப்படுத்தி விளம்பரப் பலகைகளை போலத் தோற்றமளிக்கும். அந்தக் கடலில் காயல் பகுதிகளில் பவளப்பாறைகளை நான் கண்டுபிடித்தேன். அங்கே சிவப்பு நிற க்ளவுன் மீன்களையும் மஞ்சள் கட்டங்கள் நிறைந்த வண்ணத்துப்பூச்சி மீன்களையும் என் கைகளால் தொட்டுப் பார்த்தேன். அவ்வாறான இயற்கை மேன்மையினால் உள்ளம் கிளர்ந்தெழுந்து தேவனை ஆராதிக்காமல் இருக்க முடியவில்லை.

எனது இவ்வித உணர்ச்சியின் எழுச்சிக்கு அப்போஸ்தலனாகிய பவுல் காரணம் கூறுகிறார். மிகவும் உன்னதமான படைப்புகள் தேவனுடைய சுபாவத்தை சற்று நமக்கு வெளிப்படுத்துகின்றன (ரோம. 1:20) லார்ட் ஹோவே தீவின் அற்புதங்கள் தேவனுடைய வல்லமையையும் அழகையும் வெளிப்படுத்தின.

தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் தேவனை தரிசித்தபோது, நீலரத்தினம் போல விளங்கும் ஒரு சிங்காசனத்தில் மகிமையான வண்ணங்களால் சூழப்பட்ட ஒருவர் அவருக்குக் காணப்பட்டார் (எசே. 1:25-28). அப்போஸ்தலனாகிய யோவான் இது போன்ற ஒரு காட்சியைக் கண்டார். மரகதம் போன்ற வானவில்லால் சூழப்பட்ட விலையேறப் பெற்ற கற்களைப் போல ஜொலிக்கும் தேவனை அவர் கண்டார் (வெளி. 4:2-3). தேவன் தம்மை வெளிப்படுத்தும்போது அவர் நல்லவராகவும் வல்லமை மிக்கவராகவும் மட்டுமல்ல, அழகானவராகவும் வெளிப்படுகிறார். ஒரு சிற்பமானது அதை செய்தவரை பிரதிபலிப்பதைப்போல, சிருஷ்டியானது தேவனின் இந்த அழகை எடுத்துரைக்கிறது.      

தேவனுக்குப் பதிலாக இயற்கையை பல இடங்களில் மனிதர் தொழுதுகொள்ளுகிறார்கள் (ரோம. 1:25). இது மிகவும் துக்ககரமானது! பூமியின் தெளிவான தண்ணீர்களும் மினுமினுக்கும் உயிரினங்களும் அவற்றுக்குப் பின்னாலுள்ள கடவுளை நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. இந்த உலகிலுள்ள எல்லாவற்றையும்விட அதிக வல்லமையுள்ளவர், அதிக அழகுள்ளவர் அவர் மட்டுமே!

சுத்தமாக்கப்பட்டோம்!

பாத்திரம் கழுவும் மெஷினை நான் திறந்தபோது என்ன நடந்ததென்றே தெரியவில்லை. பளபளக்கும் பாத்திரங்களைக் காண்பதற்குப் பதிலாக, சாக்பீஸ் பொடி போன்ற ஒன்றால் மூடப்பட்ட பாத்திரங்களையும் கோப்பைகளையும் நான் அங்கிருந்து அகற்றினேன். எங்கள் பகுதியிலுள்ள கடின நீர் இப்படி கேடு விளைவித்தோ அல்லது அந்த இயந்திரம் பழுதாகி விட்டதா என திகைத்தேன்.

அந்தக் கெட்டுப்போன பாத்திரம் கழுவும் இயந்திரத்தைப் போலல்லாது, தேவன் நமது அனைத்து அசுத்தங்களையும் சுத்திகரிக்கிறார். எசேக்கியேல் தேவனுடைய அன்பு மற்றும் மன்னிக்கும் செய்தியைப் பகிர்ந்து கொண்டபோது, தேவன் தமது மக்களைத் திரும்பவும் தம்மிடம் வரவழைப்பதை எசேக்கியேலின் புத்தகத்தில் காண்கிறோம். தங்களது ஐக்கியத்தை மற்ற தேவர்களோடும் பிற நாடுகளோடும் பிரகடனப்படுத்திய இஸ்ரவேலர் இப்படி தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தனர். என்றபோதிலும், அவர்களைத் தம்மிடம் வரவழைப்பதில் தேவன் கிருபையாய் இருந்தார். அவர், “உங்களுடைய எல்லா அசுத்தங்களையும்… எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி, உங்களைச் சுத்தமாக்குவேன்” (36:25) என வாக்குத்தத்தம் செய்தார். அவர்கள் உள்ளத்திலே அவர் தமது ஆவியானவரை வைத்தார் (வச. 27). அவர்களைப் பஞ்ச நாட்டிற்கல்ல, செழிப்பான தேசத்துக்கு அவர் கொண்டுவருவார் (வச. 30).

எசேக்கியேலின் காலத்தைப் போலவே, நாம் வழி தப்பிப் போயிருப்போமானால் நம்மைத் திரும்பவும் தம்மண்டைக்கு அவர் வரவேற்கிறார். அவரது வழிகளுக்கும் அவரது சித்தத்திற்கும் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, நமது பாவங்களிலிருந்து நம்மை அவர் கழுவி நம்மை மறுரூபப்படுத்துகிறார். நமக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவர் மூலம், ஒவ்வொரு நாளும் அவரைப் பின்பற்ற அவர் நமக்கு உதவி செய்கிறார்.

நிரம்பி வழியும் கனி!

இளவேனிற்காலம் மற்றும் கோடையில் எங்களது அண்டைவீட்டுக்காரரின் பின்புறத் தோட்டத்தில் பழங்கள் வளர்வதை நான் ஆர்வத்தோடு பாப்பதுண்டு. அங்கு பயிரிடப்பட்ட திராட்சையின் கொடிகள் எங்களிருவரது வீடுகளுக்கிடையிலான பொது வேலியில் படர்ந்து, திராட்சக்குலைகள் அதில் தொங்கும். நாங்கள் பறிக்கின்ற உயரத்தில், பெரிய செழுமையான பிளம் பழங்களும், ஆரஞ்சுகளும் கிளைகளில் கொத்தாக தொங்கும்.

நாங்கள் நிலத்தைக் கொத்தி, விதைத்து, களை எடுத்து தண்ணீர் பாய்ச்சாவிட்டாலும் எங்களது அண்டை வீட்டுக்காரர் விளைச்சலில் ஒரு பங்கை எங்கலோடு பகிர்ந்து கொள்ளுகின்றார். பயிரை வளர்க்கும் பொறுப்பை அவர்கள் எடுத்துக் கொண்டு அறுவடையில் ஒரு பாகத்தில் நாங்கள் களிக்க எங்களை அனுமதிக்கின்றனர்.

எங்களது வேலிக்கு அந்தப் புறத்திலுள்ள மரங்கள் மற்றும் செடிகளின் விளைச்சலானது, தேவன் என் வாழ்க்கையில் வைக்கும் இன்னொரு அறுவடையை நினைவுபடுத்துகிறது. அது எனக்கும் என் வாழ்க்கையில் தேவன் கொண்டுவரும் மக்களுக்கும் பயனளிக்கிறது. அது ஆவியின் கனி மற்றும் அறுவடை!

பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் வாழ்கின்ற வாழ்வில் பயன்களை சுதந்தரிக்கும்படி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். நமது இதயங்களில் தேவனுடைய உண்மையின் விதைகள் செழிப்பாக வளருகையில், அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம் இச்சையடக்கம் போன்றவற்றை வெளிப்படுவதில் நமது திராணியைப் பெருக்கும் ஆற்றலை ஆவியானவர் உருவாக்குகிறார் (கலா. 5:22-23).

நமது வாழ்வை இயேசுவானவருக்கு அர்ப்பணிக்கும்போது, இனி ஒருபோதும் நமது சுயம் சார்ந்த மாம்ச இச்சைகளால் நாம் கட்டுப்படுத்தப்படுவதில்லை (வச. 24). காலப்போக்கில் பரிசுத்த ஆவியானவர் நமது சிந்தனையையும், நமது நடவடிக்கைகளையும் நமது செயல்களையும் மாற்றுவார். கிறிஸ்துவில் நாம் வளர்ந்து முதிர்ச்சியடையும்போது, அவரது தாராளமான விளைச்சலின் பலனை நமது அண்டை அயலகத்தாரோடு பகிர்ந்துகொள்ளும் சந்தோஷத்தை நாம் பெற்றுக்கொள்ளுவோம்.

கவனத்தில் கொள்தல்!

ஜான் நியூட்டன் இவ்வாறு எழுதினார், “நான் வீட்டிற்கு போகும் வழியில் 50 காசை தொலைத்துவிட்ட ஒரு பிள்ளையை சந்திக்கிறேன். இன்னொரு 50 காசு நாணயத்தை அப்பிள்ளையிடம் கொடுப்பதன் மூலம் அதன் கண்ணீரை நான் துடைக்கக் கூடுமானால் நான் ஒரு நன்மை செய்துவிட்டதாக உணருகிறேன். பெரிய காரியங்களைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆயினும் இது போன்ற சிறிய காரியங்களை நான் அசட்டை செய்யக்கூடாது!”

இன்றைய உலகில் ஆறுதலைத் தேடி அலைவோர் எங்கும் உள்ளனர்: ஒரு பலசரக்குக் கடையின் காசாளர் தனது குடும்பப் பொருளாதார நெருக்கடியினிமித்தம் இரண்டாம் வேலையைச் செய்ய வேண்டியுள்ளது; சொந்த வீட்டிற்குத் திரும்ப வாஞ்சிக்கும் ஒரு அகதி; வாழ்வில் நம்பிக்கையை முற்றிலும் இழந்து கவலைப்படும் ஒரு கணவனற்ற தாய்; தான் பயனற்றவனாய் வாழ்கிறேனா என அஞ்சிடும் ஒரு தனிமையான முதியவர்.

ஆனால், நாம் செய்ய வேண்டியது என்ன? சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்” என்று தாவீது எழுதினார் (சங். 41:1) நாம் வாழ்வில் சந்திக்கின்றவர்களின் வறுமையை ஒழிக்க நம்மால் கூடாததென்றாலும், நாம் அவர்களைக் குறித்து கரிசனை கொள்ளலாம். “கவனம் செலுத்துங்கல்” நாம் மனிதர் மேல் அக்கறை கொள்வதை அவர்கள் அறிந்திடச் செய்யலாம். தேவையிலிருப்போரை சமாளிப்பது கடினமென்றாலும் அவர்களைப் பட்சமாகவும் மரியாதையாகவும் நாம் நடத்தலாம். அவர்களது வாழ்வின் கதைகளை ஆர்வத்தோடு கேட்கலாம். அவர்களுக்காக, அவர்களோடு சேர்ந்து நாம் ஜெபிக்கலாம். அதுவே எல்லாவற்றைக் காட்டிலும் மேலான உதவியானது, குணமாக்க வல்லது.

இயேசுவானவரின் அந்தப் புராதனமான முரண்பாடாய்த் தோன்றும் வார்த்தைகளை நினைவு கூருங்கள்: “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” (அப். 20:35) பிறரது தேவைகளைக் கவனத்தில் கொள்ளுவது பலனளிக்கவல்லது, ஏனென்றால் மற்றவர்களுக்காக நாம் செயல்படும்போது அது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. ஏழைகளின் மேல் சிந்தை கொள்ளுவோமாக!

தொடர்புடைய தலைப்புகள்

> odb

குடும்பம் மிகவும் முக்கியமானது

எங்கள் மாமாவின் இறுதி ஊர்வலத்திற்காகவும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தொண்ணூறு வயது பாட்டியையும் பார்ப்பதற்காய், வெவ்வேறு மாகாணங்களில் வசித்த நான், எனது அக்கா மற்றும் தம்பியுடன் சேர்ந்து விமானத்தின் மூலமாய் வந்தோம். அவர் பக்கவாதத்தால் முடங்கி, பேசும் திறனை இழந்துவிட்டார். அவர் வலது கையை மட்டுமே பயன்படுத்தினார். நாங்கள் அவர்களது படுக்கையைச் சுற்றி நின்றபோது, அவர் அந்தக் கையை நீட்டி எங்களின் ஒவ்வொரு கைகளையும் எடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அவர்களது இதயத்தின்மீது வைத்து, அவற்றைத் தட்டிக்கொடுத்தார். இந்த வார்த்தைகளற்ற சைகையால், உடைபட்டு பிரிந்திருக்கும் எங்களது உடன்பிறப்பு உறவைக் குறித்து அவர் எங்களோடு தொடர்புகொண்டார். “குடும்பம் மிகவும் முக்கியமானது.”

திருச்சபை என்னும் தேவனுடைய குடும்பத்தில் நாமும் உடைக்கப்பட்டவர்களாய் பிரிந்து நிற்கக்கூடும். கசப்பு நம்மை பிரிந்திருக்கச் செய்யும். எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், ஏசாவை அவனுடைய சகோதரனிடத்திலிருந்து பிரித்த கசப்பைக் குறித்து குறிப்பிடுகிறார் (எபிரெயர் 12:16). மேலும் சகோதர சகோதரிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தில் ஒருவரிலொருவர் ஐக்கியமாய் இருப்பதற்கு நமக்கு சவால் விடுகிறார். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும்... நாடுங்கள்” (வச. 14). அதாவது, தேவனுடைய குடும்பத்தில் அனைவரோடும் சமாதானமாய் வாழ்வதற்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிரயாசப்படுவோம் என்று வலியுறுத்துகிறார். அத்தகைய ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகிறது, அவ்வாறு வாழ்வதற்கு தூண்டுகிறது. 

குடும்பம் மிகவும் முக்கியமானது. அவற்றில் நமது பூமிக்குரிய குடும்பங்கள் மற்றும் தேவனுடைய விசுவாசக் குடும்பங்களும் இணைந்ததே. நாம் அன்போடும் ஐக்கியத்தோடும் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் ஏறெடுப்போமா? 

 

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

தேவனின் மென்மையான அன்பு

2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.

வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).