Archives: ஜூன் 2017

தழைத்தோங்கும் தருணம்

எங்கள் பின் வாசல் பக்கம் உள்ள ரோஜாச் செடியை வெட்டிவிட வேண்டுமென கடந்த இளவேனிற் காலத்திலேயே தீர்மானித்தேன். நாங்கள் இந்த வீட்டில் வாழ்ந்த இம்மூன்று வருடங்களிலும், அச்செடி பூக்கள் பூக்கவே இல்லை. பூக்களற்ற அசிங்கமான அதன் கிளைகள் எல்லா திசைகளிலும் இப்பொழுது படர்ந்துள்ளது.

என் வாழ்க்கை மிகுந்த பரபரப்பாக செயல்பட ஆரம்பித்துவிட்டதால், என் தோட்டத்தைக் குறித்த திட்டங்கள் தாமதமாயிற்று. அதன் பின் சில வாரங்களில், அந்த ரோஜா செடி திடீரென பூத்து குலுங்கியது. அப்படியொரு காட்சியை நான் இதற்கு முன் கண்டதே இல்லை. நறுமணம் வீசும் நூற்றுக்கும் அதிகமான வெள்ளைப்பூக்கள் பின்வாசற் கதவில் படர்ந்து தொங்கிக் கொண்டிருந்தன. மேலும் அவை முற்றம் வரையிலும் கூட படர்ந்து அத்தரை பகுதியை அழகான இதழ்களால் மூடின.

எங்கள் ரோஜா செடியின் மறுமலர்ச்சி, இயேசு கூறிய அத்திமர உவமையை எனக்கு நினைவூட்டியது (லூ:13:6-9). அத்திமரம் காய்ப்பதற்கு மூன்றாண்டு கால அவகாசம் கொடுப்பது இஸ்ரவேல் தேசத்திலே வழக்கம். ஆனால், அவை மூன்று ஆண்டுகளில் காய்க்கவில்லை என்றால் அந்நிலத்தை வேறு விதத்தில் பிரயோஜனப்படுத்தும்படி அம்மரத்தை வெட்டிவிடுவார்கள். இயேசு கூறிய உவமையிலே, ஓர் தோட்டக்காரன் ஒரு மரத்திற்காக தன் எஜமானிடம் இன்னும் ஓர் ஆண்டுகால அவகாசம் கேட்பான். இந்த முழு உவமையின் பொருள் என்னவெனில், ‘தாங்கள் வாழ வேண்டிய விதத்திலே இஸ்ரவேலர் வாழவில்லை. ஆகையால் தேவனால் நீதியாய் அவர்களை நியாயந்தீர்க்க முடியும்.’ ஆனால் இரக்கமுள்ள தேவன், அவர்கள் மனந்திரும்பி மன்னிப்புபெற்று பூத்து குலுங்கும்படி அவர்களுக்கு இரக்கம் பாராட்டி, கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளார்.

நாம் அனைவரும் தழைத்தோங்க வேண்டுமென தேவன் விரும்புவதால், நம் அனைவருக்கும் கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளார். நாம் விசுவாசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாலும் சரி, இரட்சிக்கப்படாத உற்றார் உறவினர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தாலும் சரி, அவர் மிகுந்த இரக்கம் உள்ளவர் என்பது நம் அனைவருக்கும் நற்செய்தி அல்லவோ!

செயல்படும் விசுவாசம்

ஒரு நாள் என் தோழி காரை ஓட்டிக்கொண்டு மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றாள். அப்பொழுது சாலை ஓரத்திலே நடந்துகொண்டிருந்த ஒரு பெண்மணியை அவள் கண்டபோது, காரை நிறுத்தி அப்பெண்ணை காரில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என அவளுக்கு தோன்றியது. ஆகவே அப்பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டாள். பிறகு, அவளுடைய நிலைமையை கேட்டறிந்தபோது என் தோழிக்கு மிகுந்த துக்கமாயிற்று. ஏனென்றால் அப்பெண் பஸ்ஸில் பயணம் செய்ய தன்னிடம் பணம் இல்லாததால், பல மைல் தூரத்திலிருக்கும் தன்னுடைய வீட்டிற்கு இவ்வுஷ்ணமான வேளையிலும் நடந்து சென்றுகொண்டிருந்தாள். அதுமட்டுமின்றி காலையிலே வேலைக்கு வருவதற்கும் அதிகாலை 4 மணிக்கே வீட்டைவிட்டு பல மணிநேரம் நடந்தே வந்துள்ளாள்.

அப்பெண்ணை காரிலே அழைத்து சென்றதின் மூலம், கிறிஸ்தவர்களாகிய நாம், நம்முடைய விசுவாசத்தை கிரியைகளிலே காண்பிக்க வேண்டும் என்னும் யாக்கோபின் அறிவுரைகளை, என் தோழி இந்நவீன காலக்கட்டத்திலும் நடைமுறைப்படுத்தியுள்ளால். “விசுவாசம் கிரியை களில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்,” என யாக்கோபு கூறியுள்ளார் (2:17). சபையானது விதவைகளையும், திக்கற்ற பிள்ளைகளையும் காக்க வேண்டுமென்றார் (1:27). மேலும், வீண்வார்த்தைகளை சாராமல், அன்பின் கிரியைகளினாலே விசுவாசத்தை செயல் படுத்தி காட்டும்படி ஏவினார்.

நாம் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டுள்ளோம்; கிரியைகளினாலல்ல. ஆனால், தேவைகளோடு இருப்பவர்களை நேசித்து அவர்களுக்கு உதவி செய்யும்பொழுது, நம்முடைய விசுவாசத்திலே நாம் ஜீவிக்கவும் செயல்படவும் செய்கிறோம். இந்த வாழ்க்கைப் பயணத்திலே நாம் இணைந்து பயணிக்கும்போது, நம் கண்களை எப்பொழுதும் திறந்துவைத்து, காரில் அழைத்துச் சென்ற என் தோழியைப்போல, தேவையோடு இருப்பவர்களைக் கண்டு உதவிடுவோமாக.

முற்றுப்பெறாத பணிகள்

மிகச் சிறந்த கலைஞராகிய மைக்கெலேஞ்ச (Michelangelo) இறந்தபொழது, அநேக நிறைவு பெறாத பணிகளை விட்டுச்சென்றார். ஆயினும், அவற்றில் நான்கு சிற்பங்கள் நிறைவு செய்யும் நோக்கத்தில் செதுக்கப்படவில்லை. ‘த பியர்டட் ஸ்லேவ்’ (The Bearded Slave – தாடி வைத்த அடிமை), ‘த அட்லஸ் ஸ்லேவ்’ (The Atlas Slave – பூமியை தோளில் சுமக்கும் அடிமை), ‘த அவேக்கனிங் ஸ்லேவ்’ (The Awakening Slave – விழித்தெழ முயலும் அடிமை), மற்றும் ‘த யங் ஸ்லேவ்’ (The Young Slave – இளம் அடிமை) ஆகிய சிற்பங்கள் நிறைவுபெறாதது போல காட்சியளித்தாலும், அவை அப்படிதான் இருக்கவேண்டுமென மைக்கெலேஞ்ச எண்ணினார். ஏனெனில் என்றென்றும் அடிமைப்பட்டிருப்பவனின் உணர்வுகளை அவர் வெளிக்காட்ட விரும்பினார்.

சங்கிலிகளால் கட்டப்பட்டிருப்பது போன்ற உருவங்களை செதுக்குவதற்கு பதில், பளிங்கு கற்களில் வெளிவர முடியாதபடி பதிந்து மாட்டிக்கொண்டிருக்கும் உருவங்களை செதுக்கினார். அப்பாறைகளிளிருந்து உடல்கள் வெளிவர முயல்வது போலவும், ஆனால் முழுமையாக வர இயலாதது போலவும் அவை செதுக்கப்பட்டுள்ளது. தசைகளெல்லாம் வளைந்தும் நெளிந்தும் மடங்கியும் காணப்பட்டாலும் அவ்வுருவங்களால் தங்களைத் தாங்களே ஒருபோதும் விடுவித்துக் கொள்ள இயலாது.

அந்த ‘அடிமைச்’ சிற்பங்களை கண்டபோது, அவற்றின் மீது எனக்கு அனுதாபம் உண்டாயிற்று. ஏனெனில், பாவத்தோடு எனக்கிருக்கும் போராட்டத்திற்கும், அவர்களுடைய அவலநிலைக்கும் எவ்வித வித்தியாசமில்லை. அச்சிற்பங்களைப் போலவே என்னை நானே விடுவித்துக்கொள்ள முடியாதபடி மாட்டிக்கொண்டுள்ளேன். அதாவது, “என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவ பிரமாணத்திற்கு [நான்] சிறையா[கினேன்]” (ரோ. 7:23). நான் எவ்வளவுதான் முயற்சித்தாலும் என்னால் என்னை மாற்ற இயலவில்லை. ஆனாலும் தேவனுக்கு நன்றி செலுத்துவோமாக. ஏனெனில் நீங்களும் நானும் ஒருபோதும் முற்றுப்பெறாத கிரியை போல இருக்க மாட்டோம். நாம் பரலோகம் செல்லும் வரை முழுமையடையாவிட்டாலும் பரிசுத்த ஆவியானவரை வரவேற்போமாக. ஏனென்றால் அவர் நம்மை மாற்றுவார். நம்மில் நற்கிரியை தொடங்கின தேவன் தாமே அதை செய்து முடிப்பாரென அவரே வாக்குப்பண்ணியுள்ளார் (பிலி. 1:5).

ஐவிரல் ஜெபங்கள்!

நாம் தேவனோடு உரையாடுவதே ஜெபம். அது ஒரு சூத்திரம் அல்ல. ஆனாலும், சில சமயம் நமது ஜெபவேளைகளை புத்துணர்வூட்டும் பொருட்டு, ஒரு ‘முறைமையை’ கடைப் பிடிப்பது நன்று. அதாவது, தாவீதின் சங்கீதங்களைக் கொண்டும் ஜெபிக்கலாம் அல்லது வேறு வேதபகுதிகளைக் (பரமண்டல ஜெபம்) கொண்டும் ஜெபிக்கலாம். இல்லையெனில், ‘ஆராதனை, அறிக்கை, நன்றிசெலுத்துதல், விண்ணப்பித்தல்’ என்கிற வரிசை முறைமையிலும் கூட ஜெபிக்கலாம். சமீபத்தில், பிறருக்காக ஜெபிக்க உதவும் ‘ஐவிரல் ஜெபங்கள்’ என்கிற முறையைக் குறித்து அறிந்தேன்.

 ·        நீங்கள் கைகளைக் கூப்பும்பொழுது, உங்கள் பெருவிரல்தான் உங்களுக்கு மிக அருகில் உள்ளது. ஆகவே, முதலாவது உங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக, அதாவது உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக ஜெபியுங்கள் (பிலிப். 1:3–5).

·        இரண்டாவது, ஆள்காட்டி விரல். இது சுட்டிக்காட்ட பயன்படும். இப்பொழுது போதிப்பவர் களுக்காக ஜெபியுங்கள். அதாவது வேதாகம ஆசிரியர்கள், போதகர்கள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு போதிப்பவர்கள். (1 தெச. 5:25)

·        அடுத்த விரல் மற்ற விரல்களை விட பெரியது. அதிகாரத்தில் இருக்கிற தேசத் தலைவர்களுக்காகவும், உங்கள் வேலை ஸ்தலத்தில் இருக்கும் அதிகாரிகளுக்காகவும் ஜெபிக்க இவ்விரல் நினைவூட்டும் (1 தீமோ. 2:1-2)

·        நான்காம் விரல், பொதுவாக மற்ற விரல்களை விட பெலவீனமானது. ஆகவே, இப்பொழுது துயரத்தில் இருப்பவர்களுக்காகவும் துன்பப்படுகிறவர்களுக்காகவும் வேண்டுதல் செய்யவும். (யாக்:5:13-16)

·        கடைசியாக உங்கள் சுண்டுவிரல். தேவனுடைய மகத்துவத்தோடு நம்மை ஒப்பிட்டால் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை இவ்விரல் நமக்கு நினைவூட்டும். ஆகவே இப்பொழுது நம்முடைய தேவைகள் சந்திக்கப்பட ஜெபிக்கவும் (பிலி. 4:6,19)

 நீங்கள் எந்த முறைமையை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம், ஆனால், பிதாவோடு நீங்கள் உரையாடுங்கள். உங்கள் இருதயத்தில் உள்ளதை அவர் கேட்க விரும்புகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும். 

 

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?