எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜுலி ஆக்கமன் லிங்க்கட்டுரைகள்

பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்

“நீ கேளிக்கைகளில் இருக்கும் போது நேரம் பறக்கிறது” இந்த எண்ணத்திற்கு எந்த அடிப்படை ஆதாரமுமில்லையெனிலும், அனுபவம் இதனை உண்மையெனக்காட்டுகிறது.

வாழ்க்கை இன்பமாக இருக்கும் போது, நேரம் மிக வேகமாக கடந்துவிடுகிறது. நான் விரும்பத்தக்க ஒரு பணியை செய்தாலோ, அல்லது நான் விரும்பும் ஒரு நபரோடு நான் இருந்தாலோ அதற்கு நேரம் ஒரு பொருட்டல்ல.

இந்த உண்மையைக் குறித்த என்னுடைய அனுபவம், வெளிப்படுத்தல் 4ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ள காட்சிக்கு ஒரு புதிய புரிந்து கொள்ளலைத் தருகிறது. முன்பு நான் தேவனுடைய சிங்காசனத்தின் அருகில் அமர்ந்திருக்கும் நான்கு ஜீவன்களும் ஓயாமல் சில வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது எத்தனை சலிப்படையச் செய்யும் வாழ்வு என நான் நினைத்ததுண்டு.

ஆனால், இப்பொழுது அவ்வாறு சிந்திப்பதில்லை. அவற்றின் அநேகக கண்களால் (வச. 8) அவை பார்க்கின்ற காட்சிகளை நான் நினைத்துப் பார்க்கின்றேன். தேவனுடைய சிங்காசனத்தினருகில், அவற்றின் நிலையிலிருந்து, அவை பார்க்கின்றவற்றை நான் கருத்தில் கொள்கின்றேன் (வச. 6) நான் நினைக்கின்றேன், தேவன் புவியில் தான்தோன்றித்தனமாக வாழ்கின்றவர்களிடையே எத்தனை ஞானமும்; அன்பும் கொண்டு உறவாடுகிறார் என்பதைக் கண்டு அவைகள் வியந்திருக்கின்றன எனவே இதைவிட மேலான என்ன பதிலைக் காட்ட முடியம்? என நினைக்கிறேன். “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று சொல்வதைவிட வேறென்ன சொல்வதற்கிருக்கிறது?

ஒரே வார்த்தையை மேலும் மேலும் கூற உனக்கு சலிப்பாயிருக்கிறதா? நீ நேசிக்கும் ஒருவரின் பிரசன்னத்தில் நீ இருக்கும் போது சலிப்பே ஏற்படாது. நீ எதற்காக உருவாக்கப்பட்டாயோ அதனை நிறைவேற்றும்போது நிச்சயமாக சலிப்பு இல்லை.

அந்த நான்கு ஜீவன்களைப் போன்று நாமும் தேவனை மகிமைப்படுத்தவே உருவாக்கப்பட்டோம். நாம் நம்முடைய கவனத்தை அவர் மீது வைத்து, அவரின் நோக்கத்தை நிறைவேற்றும் போது நம்முடைய வாழ்வு ஒருபோதும் சலிப்படையாது.

இந்தக் கட்டுரையை எழுதிய ஜூலி இப்பொழுது மோட்சத்தில் தேவனை ஆராதித்துக் கொண்டிருக்கின்றார்.

தேவன் நமது தேவைகளைச் சந்திக்கிறார்

எனது அலுவலக அறையின் ஜன்னலுக்கு வெளியே, அணில்கள் வர இருக்கும் குளிர்காலத்திற்காக கொட்டைகளைச் சேகரித்து பத்திரமான இடங்களில் அதே சமயம் மறுபடியும் எளிதாக எடுக்கக்கூடிய இடங்களில் வைப்பதற்காக பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடித்திரியும் காட்சி தெரியும். அவைகள் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடித்திரியும் பொழுது ஏற்படுத்தும் ஓசை எனக்கு மகிழ்ச்சியான பொழுது போக்காக இருக்கும். ஒரு கூட்ட மான்கள் எங்கள் வீட்டின் பின் முற்றத்தில் எந்த ஒரு சத்தமுமில்லாமல் அமைதியாக கடந்து செல்லும். ஆனால், ஒரு அணில், பெரிய படையே அழைத்தது போன்ற சத்தத்தை ஏற்படுத்தும்.

அந்த இரு பிராணிகளும் வேறு ஒரு பழக்கத்திலும் வேறுபட்டவைகளாக உள்ளன. மான்கள் குளிர் காலத்திற்காக எந்த விதமான ஆயத்தமும் செய்வது கிடையாது. பனிகாலம் வரும் பொழுது அவைகள் வழியில் என்ன கிடைக்கின்றனவோ அவற்றை உட்கொள்ளும். நமது வீடுகளில் வளரும் அலங்காரச் செடிகளைக் கூட உண்டுவிடும். ஆனால், அணில்கள் மான்களைப் போல இருந்தால் குளிர்காலத்தில் பசியினால் இறந்துவிடும். அவைகள் உயிர் வாழத் தேவையான உணவை அவைகளால் கண்டுபிடிக்க இயலாது.

மான்களும், அணில்களும், தேவன் நம்மீது கொண்டுள்ள கரிசனையைப் பற்றிக் கூறுகின்றன. நமது எதிர்காலத் தேவைகளைச் சந்திக்கத்தக்கதாக நாம் வேலை  செய்து சேமிக்க தேவன் கிருபை அளிக்கிறார். நமக்குத் தேவையான பொருளாதார வசதிகள் குறையும்பொழுது, தேவன் அவற்றை சந்திக்க வழி வகுக்கிறார். ஞானத்தை போதிக்கும் புத்தகமாகிய நீதிமொழிகள் தேவைகள் ஏற்படக் கூடிய பருவக்காலங்களை சந்திக்க திரளாக விளையக் கூடிய காலங்களை தேவன் கட்டளையிடுகிறார் (நீதி. 12:11). சங்கீதம் 23 கூறுவதுபோல ஆபத்துக்கள் நிறைந்த வழியாக செழிப்பான புல்லுள்ள வெளிகளுக்கு தேவன் நம்மை நடத்துகிறார்.

நமது தேவைகளைச் சந்திக்க தேவன் வைத்துள்ள மற்றுமொறு வழி, அதிகம் உள்ளவர்கள், தேவையில் உள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று தேவன் போதிக்கிறார் (உபா. 24:19) ஆகவே நமது தேவைகளைக் குறித்து வேதாகமம் இப்படியாகக் கூறுகிறது. நம்மால் முடிந்த நேரத்தில் வேலை செய்ய வேண்டும் சேர்த்து வைக்க வேண்டியதை சேர்த்து வைக்க வேண்டும். நமக்குள்ளதை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நமது தேவைகளைக் தேவன் நிச்சயமாகச் சந்திப்பார் என்று தேவன் மேல் நம்பிக்கையாக இருக்க வேண்டும்

விடுதலையைக் கொண்டாடுங்கள்

கடத்தப்பட்டு 13 நாட்கள் பிணைக் கைதியாக வைக்கப்பட்டு, பின் விடுதலையாக்கப்பட்ட ஓலாவ் விக்கு என்ற நியூஸிலாந்தைச் சேர்ந்த ஒளிப்படத் தொகுப்பாளர் மலர்ந்த முகத்துடனும், சிரிப்புடனும் “எனது கடந்த வாழ்நாள் முழுவதிலும் நான் உணர்ந்ததைவிட இப்பொழுது உண்மையிலேயே உயிருள்ளவனாக உணர்கிறேன்” என்று கூறினார்.

சுதந்திரமாக இருப்பதைவிட ஒரு பிடியிலிருந்து சுதந்திரம் பெறுவது, நம்மால் புரிந்துகொள்ள இயலாத இன்பக்களிப்பை நமக்கு கொடுக்கிறது.

அனுதினமும் சுதந்தரமான வாழ்க்கையை அனுபவிக்கும் நமக்கு ஓலாவ் விக்குவின் மகிழ்ச்சி, நாம் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதை எளிதாக மறந்து விடுகிறோம் என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. ஆவிக்கேற்ற வாழ்க்கையிலும் இது உண்மையானது. அநேக காலமாக கிறிஸ்தவர்களாக வாழ்பவர்கள், அவர்கள் ஒரு காலத்தில் பாவத்திற்கு அடிமையாக இருந்ததை மறந்து விடுகிறார்கள். நாம் நமது வாழ்க்கை முறையில் அதிக மன நிறைவு கொள்வதோடு நன்றி இல்லாதவர்களாகவும் இருந்துவிடக்கூடும். அப்படிப்பட்ட சமயங்களில் புதிதாக விசுவாசத்திற்குள் வந்த ஒருவர், அவருடைய வாழ்க்கையில் தேவன் அருளிய இரட்சிப்பின் மகிழ்ச்சியை உற்சாகத்துடன் நம்மிடம் பகிர்ந்து கொள்ளும்போது, நாமும் இப்படியாக ஒரு காலத்தில் பாவப் பிரமாணத்தினின்றும், மரணத்தினின்றும் விடுதலையாக்கப்பட்டபோது (ரோம. 8:2) நாம் பெற்ற மகிழ்ச்சியை தேவன் நமக்கு நினைப்பூட்டுவார்.

விடுதலை வாழ்க்கை உங்களை சோர்வடையச் செய்வதாக இருந்தால் அல்லது உங்களால் செய்ய இயலாத காரியத்தில் உங்கள் மனதை செலுத்துபவர்களாக இருந்தால், கீழ்க்கண்ட காரியங்களை சிந்தியுங்கள்: நீங்கள் இனி ஒரு பொழுதும் பாவத்திற்கு அடிமைகள் இல்லை, பரிசுத்த வாழ்க்கை வாழ விடுதலையாக்கப்பட்டு கிறிஸ்து இயேசுவோடு கூட நித்திய ஜீவனை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க உள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் (6:22).

கிறிஸ்துவுக்குள் நீங்கள் பெற்றுள்ள சுதந்திரத்தின்மூலமாக தேவனுக்கு அடிமையாக நீங்கள் செய்யக் கூடிய செயலுக்கு நன்றி கூறி, கிறிஸ்துவுக்குள் நீங்கள் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.

தேவனைக் காணும் விதம்

பொது இடங்களில், கேலிச்சித்திர ஓவிய கலைஞர்கள் சுமாரான விலையாவது கொடுத்து வாங்கக் கூடிய மக்களிடம் அவர்களுடைய உருவத்தை நகைச்சுவையான வடிவில் வரைந்து தருவார்கள். நம்முடைய தோற்றத்தின் ஏதாவது ஒரு அம்சத்தை சற்று மிகைப்படுத்தி, ஆனால் அதே சமயம் நாம் நம்மை அடையாளம் காணும் விதத்தில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்கள் நம்மை மகிழ்விக்கும். 

ஆனால் தேவனைக் குறித்த கேலிச்சித்திரங்கள் வேடிக்கைக்குரியதல்ல. ஏனெனில், அவருடைய ஏதாவது ஒரு பண்பை மிகைப்படுத்தி காட்டும்பொழுது திரிக்கப்பட்ட அக்கண்ணோட்டத்தை எளிதாக மக்கள் ஒதுக்கி விடுவார்கள். ஒரு கேலிச்சித்திரத்திற்கு நாம் எப்படி அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ அதேபோலவே, தேவனைக்குறித்து மிகைப்படுத்தப்பட்ட கண்ணோட்டத்திற்கும் நாம் முக்கியத்துவம் அளிப்பதில்லை. தேவனை கோபாக்கினை நிறைந்த இரக்கமற்ற நியாயதிபதியாகவே காணும் மக்கள், அவருடைய இரக்கங்களையே வலியுறுத்தும் ஒருவரால் எளிதாக கவரப்படுவார்கள். தேவனைக் கனிவான உள்ளம் கொண்ட தாத்தாவாக காணும் இவர்களோ, நீதியை சரிகட்டும் நியாயாதிபதியாகவும் தேவனைக் காண மறுத்துவிடுவார்கள். இன்னொரு பக்கம், தேவனை அன்பு நிறைந்த, ஜீவனுள்ள நபராகச் காணாமல், அறிவார்த்தமான கருத்தாகவோ, எண்ணமாகவோ காணும் சிலர் அவர்களை வசீகரிக்கக்கூடிய வேறு கருத்துகளினால் இழுக்கப்பட்டு இறுதியில் விலகிச்சென்று விடுவார்கள். தேவனை உற்ற நண்பராக கருதும் வேறு சிலர், தங்கள் விருப்பத்திற்கேற்ற நண்பர்களைக் கண்டடைந்தால், தேவனை அநேகமாய் மறந்து விட்டுவிடுவார்கள். 

தம்மை இரக்கமும் கிருபையும் நிறைந்தவராக மாத்திரமல்லாமல் நீதியை விசாரிக்கிறவராகவே தேவன் வெளிப்படுத்துகிறார் (யாத். 34:6-7). 

நாம் நம்முடைய விசுவாசத்தை செயல்படுத்த முனையும்பொழுது, தேவனை பிடித்தமான பண்புகளை மாத்திரமே உடையவராக சித்தரிப்பதை நாம் தவிர்த்துவிட வேண்டும்.

உன் கூந்தலை அவிழ்த்து விடு

இயேசு சிலுவையில் அறையப்படும் சில நாட்களுக்கு முன்பு விலையேறப்பெற்ற நறு மண தைலத்தை மரியாள் எனும் பெயர் கொண்ட ஒரு பெண் இயேசுவின் பாதத்தில் ஊற்றினாள். அதனோடுகூட நிற்காமல், அதைக்காட்டிலும் இன்னும் அதிக துணிச்சலான தொரு செயலையும் செய்தாள். அவள் தன் கூந்தலை அவிழ்த்து அதைக்கொண்டு இயேசுவின் பாதத்தை துடைத்தாள் (யோவா. 12:3). அத்தைலம் தன் வாழ்நாள் சேமிப்பாக கூட இருக்கலாம். ஆனால் மரியாள் அதை மாத்திரம் அவருக்கு காணிக்கையாக செலுத்த வில்லை, தன்னுடைய நற்பெயரையும் கூட அதோடு சேர்த்து அவர் பாதத்தில் காணிக்கையாக செலுத்தினாள். ஏனெனில், முதலாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கத்திய கலாச்சாரத்தில், பெண்கள் பொது இடத்தில் தங்கள் கூந்தலை ஒருபோதும் கட்டவிழ்க்க மாட்டார்கள். அதை பண்பற்ற இழிவான செயலாகவே கருதினர். ஆனால் உண்மையான ஆராதனை என்பது மற்றவர்கள் நம்மைக்குறித்து என்ன நினைப்பார்கள் என்று நினையாதிருப்பதே ஆகும் (2 சாமு. 6:21-22). இயேசுவை ஆராதித்து வணங்க, பிறர் தன்னை அடக்கமற்றவள், ஒழுக்கங்கெட்டவள் என்றும்கூட சொன்னால் பரவாயில்லை என்று மரியாள் முடிவு செய்திருந்தாள். 

மற்றவர்கள் நம்மைக்குறித்து நல்லவிதமாக நினைக்க வேண்டும் என்பதற்காக சபைக்கு செல்லும் பொழுது நேர்த்தியாக செல்ல வேண்டும் என்கிற நெருக்கடியை ஏற்படுத்துகிற எண்ணம் நம்மில் அநேகருக்குண்டு. சபைக்குச் செல்லும் பொழுது ஒரு முடி கூட கலைந்து இல்லாதபடி தலையை நன்றாக வாரி, சீவி செல்கிறோம். இதையே உருவகப்படுத்தி கூறுவோமானால், நம்முடைய கூந்தலை அவிழ்த்துவிட்டு, பொய்யான வெளிப்புறத் தோற்றத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் குறைபாடுகளை பயமின்றி வெளிக்காட்ட உதவும் சபையே ஒரு ஆரோக்கியமான சபை. நம்முடைய குற்றங்களை எல்லாம் மறைத்துக் கொண்டு பலசாலிகளாய் காண்பிக்க முற்படுவதைவிட நம்முடைய பெலவீனங்களை கூறி பெலன் பெறக்கூடிய இடமாகவே சபை இருக்க வேண்டும். 

ஆராதனை என்பது எக்குறையும் இல்லாததுபோல நடந்துகொள்ளும் ஒரு ஒழுங்குமுறை அன்று. மாறாக, தேவனோடும் மற்றவர்களோடும் எல்லாவிதத்திலும் உண்மையாக இருப்பதே ஆகும். ஒருவேளை நம்முடைய பெலவீனங்களை வெளிக்காட்டுவதென்பதே நம்முடைய மிகப்பெரிய பயமாயிருந்தால், நாம் செய்யும் மிகப்பெரிய பாவம் அதை மறைப்பதே ஆகும்.

ஏற்ற வேளையில்

“ஏற்ற வேளையில்” என்ற தலைப்பில் ஓர் புத்தகத்தை எழுதப்போகிறேன் என்று விளையாட்டாய் நான் கூறுவதுண்டு. என்னைப் பற்றி நன்கு அறிந்த சிலர் உடனே சிரித்து விடுவர். ஏனெனில் நான் அடிக்கடி காலதாமதமாய் வரும் பழக்கம் உடையவள். முயற்சி செய்யாதினால் அல்ல எனது உற்சாகத்தினாலும் நம்பிக்கையின் மிகுதியாலும் தான் கால தாமதம் ஏற்பட்டது என்று கூறுவேன். “இந்த முறை” நான் நிறைய காரியத்தை குறுகிய காலகட்டத்திற்குள் எளிதாய் செய்துமுடிப்பேன் என்று ஒரு தவறான நம்பிக்கையை நான் உறுதியாய் பற்றிக்கொண்டிருந்தேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை. சொன்னதை நான் செய்ததும் கிடையாது. இதனால் எப்போதும் போலவே காலதாமதமாய் முடித்த வேலைக்காக மன்னிப்பு கோருவேன்.

ஆனால் இதற்கு மாறாக தேவன் எப்போதும் சரியான நேரத்தில் காரியங்களைச் செய்கிறார். அவர் தாமதமாய் செயல்படுகின்றார் என்று நாம் எண்ணலாம், ஆனால் அவர் அப்படி செயல்படுபவர் அல்ல. வேதம் முழுவதிலும் அநேக மக்கள் தேவன் நிர்ணயித்த காலத்தை குறித்து பொறுமை இழந்துபோவதைக் காணலாம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவின் வரவிற்காக அநேக காலம் காத்திருந்த இஸ்ரவேலர்கள் நம்பிக்கை இழந்தனர். ஆனால் சிமியோனும், அன்னாளும் அப்படி செயல்படவில்லை. அவர்கள் இருவரும் தினந்தோறும் ஆலயத்தில் ஜெபித்து மேசியாவுக்காக காத்திருந்தனர். அவர்களுடைய விசுவாசத்திற்கு பலன் கிடைத்தது. மரியாளும், யோசேப்பும் குழந்தை இயேசுவை பிரதிஷ்டை பண்ண ஆலயத்திற்கு அழைத்து வந்த போது அவர்கள் கண்கள் மேசியாவைக் கண்டன.

அநேக நேரங்களில் நமது கால அட்டவணைக்குள் தேவன் பதில் அளிக்கவில்லை என்று நாம் சோர்ந்து போகின்றோம். ஆனால் கிறிஸ்துமஸ், “காலம் நிறைவேறினபோது... தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.., மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக..,” (கலா. 4:5-6) என்ற வசனம் தேவனுடைய இயல்பை நமக்கு விவரிக்கின்றது. தேவனுடைய நேரம் எப்பொழுதும் நேர்த்தியானது, அதற்காக காத்திருப்பதே பாக்கியமாகும்.

மகிழ்ச்சியைப் பரப்புதல்

ஜேனட் (Janet), ஆங்கில ஆசிரியராக வெளிநாட்டிலுள்ள ஒரு பள்ளியில் பணிபுரியும் படி சென்றாள். அங்கு உற்சாகமற்ற சோர்வான சூழ்நிலை காணப்பட்டது. அவரவர் அவர்களுடைய வேலையை செய்தார்கள், ஆனால் ஒருவரும் சந்தோஷமாக காணப்படவில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்யவோ, உற்சாகப்படுத்தவோ இல்லை. ஆனால், தேவன் தனக்கு செய்த எல்லாவற்றையும் நினைத்து, தான் செய்த எல்லாவற்றிலும் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள். அவள் எப்பொழுதும் புன்னகையோடேயிருந்தாள். அவள் தோழமை உணர்வோடு தானாகவே மற்றவருக்கு உதவி செய்தாள். அவள் பாடல்களையும், பாமாலைகளையும் முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள்.

ஜேனட் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளக் கொள்ள, கொஞ்சம் கொஞ்சமாக அப்பள்ளியின் சூழ்நிலை மாறியது. ஒவ்வொருவராக புன்னகைக்கவும், ஒருவருக்கொருவர் உதவவும் ஆரம்பித்தனர். அப்பொழுது பள்ளியை பார்வையிட வந்த நிர்வாகி, தலைமை ஆசிரியரை பார்த்து ஏன் அப்பள்ளி வித்தியாசமாக உள்ளது என்று கேட்டதற்கு, விசுவாசி அல்லாத அத்தலைமை ஆசிரியர், “இயேசு மகிழ்ச்சியை கொண்டு வருகிறார்” என்று பதிலளித்தார். ஜேனட் பொங்கி வழியும் கிறிஸ்துவின் சந்தோசத்தை கொண்டிருந்தாள், அதை தன்னை சுற்றி இருந்தவர்களின் மீதும் தெளித்தால்.

சாதாரண மேய்ப்பர்களிடம் ஒரு அசாதாரண பிறப்பை பற்றிய செய்தியை அறிவிக்க தேவன் ஒரு தேவதூதனை அனுப்பினார் என்று லூக்கா சுவிசேஷம் கூறுகிறது. புதிதாகப் பிறந்த அக்குழந்தை, “எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசத்தை உண்டாக்கும்” என்று வியப்பூட்டும் விதத்தில் அதிகாரப்பூர்வமாக அத்தூதன் அறிவித்தார் (லூக். 2:10). அது அப்படியே நிறைவேறிற்று.

நூற்றாண்டுகளைக் கடந்து அப்பொழுதிலிருந்து இச்செய்தி பரவி, இன்று நாம் கிறிஸ்துவின் மகிழ்ச்சியை உலகிற்கு பறைசாற்றும் தூதர்களாக இருக்கிறோம். நம்முன் வாசம் செய்யும் ஆவியானவரின் உதவியோடு இயேசுவைப் பின்பற்றி மற்றவர்களுக்கு சேவை செய்வதின் மூலம் அவருடைய மகிழ்ச்சியைத் தொடர்ந்து பரவ செய்வோம்.

காடுகள் விழித்தெழும்பினபொழுது

மிச்சிகனில் வாழும் மக்களுக்கு, இளவேனில் காலம் வரும் என்ற நம்பிக்கையினால் குளிர்ந்த பனி காலத்தைக் கடக்க இயலுகிறது. அவர்களது நம்பிக்கைக்கு மே மாதத்தில் பலன் கிடைக்கிறது. அப்பொழுது இயற்கையில் ஏற்படும் மாற்றம் ஆச்சரியப்படத்தக்காக உள்ளது. மே மாதம் 1ம் தேதியில் உயிரற்றதுபோல காணப்பட்ட கிளைகள் அம்மாதக் கடைசியில், இளவேனிற் காலத்தை வரவேற்பது போல, பசுமையான இலைகளுடன் காற்றில் அசைந்தாடுகின்றன. ஒவ்வொரு நாளும் அம்மரங்களில் ஏற்பட்ட மாற்றம், கண்ணால் காணக்கூடியதாக இல்லாவிட்டாலும், அந்த மாதக்கடைசியில் எனது முற்றத்திலிருந்த அனைத்து மரங்களும் பழுத்த சாம்பல் நிறத்திலிருந்து பசுமையான…

இனிய நினைப்பூட்டுதல்கள்

எகிப்திய அரசன் துத்தன்காமனின் கல்லறை 1922ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, அது மறுமை வாழ்க்கைக்கு தேவை என்று பண்டைய எகிப்தியர் கருதிய பொருட்களால் நிறைந்திருந்தது தங்கத்தாலான கோயில்கள், ஆபரணங்கள், தேன் நிறைந்த ஓர் பானை போன்ற பொருட்கள் காணப்பட்டன. 3200 ஆண்டுகளுக்குப்பின்னும் அத்தேன் சாப்பிடக்கூடிய நிலையில் இருந்தது.

இன்றைய காலத்தில் தேனை நாம் இனிப்புச் சுவையைக் கொடுக்கும் ஓர் பொருளாகவே கருதுகிறோம். ஆனால் பண்டைய காலத்தில் அது பலவிதங்களில் பயனளிப்பதாகக் காணப்பட்டது. மனிதன் உயிர்வாழத் தேவையான அனைத்து போஷாக்குகளும் நிறைந்த ஒரே உணவு இதுதான்…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார். 

 

தாகமும், நன்றியுள்ளமும்

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.