தேவன் நமது தேவைகளைச் சந்திக்கிறார்
எனது அலுவலக அறையின் ஜன்னலுக்கு வெளியே, அணில்கள் வர இருக்கும் குளிர்காலத்திற்காக கொட்டைகளைச் சேகரித்து பத்திரமான இடங்களில் அதே சமயம் மறுபடியும் எளிதாக எடுக்கக்கூடிய இடங்களில் வைப்பதற்காக பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடித்திரியும் காட்சி தெரியும். அவைகள் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடித்திரியும் பொழுது ஏற்படுத்தும் ஓசை எனக்கு மகிழ்ச்சியான பொழுது போக்காக இருக்கும். ஒரு கூட்ட மான்கள் எங்கள் வீட்டின் பின் முற்றத்தில் எந்த ஒரு சத்தமுமில்லாமல் அமைதியாக கடந்து செல்லும். ஆனால், ஒரு அணில், பெரிய படையே அழைத்தது போன்ற சத்தத்தை ஏற்படுத்தும்.
அந்த இரு பிராணிகளும் வேறு ஒரு பழக்கத்திலும் வேறுபட்டவைகளாக உள்ளன. மான்கள் குளிர் காலத்திற்காக எந்த விதமான ஆயத்தமும் செய்வது கிடையாது. பனிகாலம் வரும் பொழுது அவைகள் வழியில் என்ன கிடைக்கின்றனவோ அவற்றை உட்கொள்ளும். நமது வீடுகளில் வளரும் அலங்காரச் செடிகளைக் கூட உண்டுவிடும். ஆனால், அணில்கள் மான்களைப் போல இருந்தால் குளிர்காலத்தில் பசியினால் இறந்துவிடும். அவைகள் உயிர் வாழத் தேவையான உணவை அவைகளால் கண்டுபிடிக்க இயலாது.
மான்களும், அணில்களும், தேவன் நம்மீது கொண்டுள்ள கரிசனையைப் பற்றிக் கூறுகின்றன. நமது எதிர்காலத் தேவைகளைச் சந்திக்கத்தக்கதாக நாம் வேலை செய்து சேமிக்க தேவன் கிருபை அளிக்கிறார். நமக்குத் தேவையான பொருளாதார வசதிகள் குறையும்பொழுது, தேவன் அவற்றை சந்திக்க வழி வகுக்கிறார். ஞானத்தை போதிக்கும் புத்தகமாகிய நீதிமொழிகள் தேவைகள் ஏற்படக் கூடிய பருவக்காலங்களை சந்திக்க திரளாக விளையக் கூடிய காலங்களை தேவன் கட்டளையிடுகிறார் (நீதி. 12:11). சங்கீதம் 23 கூறுவதுபோல ஆபத்துக்கள் நிறைந்த வழியாக செழிப்பான புல்லுள்ள வெளிகளுக்கு தேவன் நம்மை நடத்துகிறார்.
நமது தேவைகளைச் சந்திக்க தேவன் வைத்துள்ள மற்றுமொறு வழி, அதிகம் உள்ளவர்கள், தேவையில் உள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று தேவன் போதிக்கிறார் (உபா. 24:19) ஆகவே நமது தேவைகளைக் குறித்து வேதாகமம் இப்படியாகக் கூறுகிறது. நம்மால் முடிந்த நேரத்தில் வேலை செய்ய வேண்டும் சேர்த்து வைக்க வேண்டியதை சேர்த்து வைக்க வேண்டும். நமக்குள்ளதை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நமது தேவைகளைக் தேவன் நிச்சயமாகச் சந்திப்பார் என்று தேவன் மேல் நம்பிக்கையாக இருக்க வேண்டும்
மிக மிக சிறந்தது.
எனது தாயாரின் பிறந்த நாளுக்கு மறுநாள் எனது பிறந்த நாளாகும். நான் வாலிப வயதிலிருந்த பொழுது எனது பொருளாதார நிலைமைக்கு ஏற்ப எனது தாயாருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய என்ன பரிசைக் கொடுக்கலாம் என்று அதிகமாக யோசித்தேன். எனது கையிலிருந்த பணத்தைப் போட்டு எனது தாயாருக்கு பரிசு ஒன்று வாங்கி அவர்களுக்கு கொடுக்கும் பொழுது, எனது தாயார் அதை மிகவும் நன்றியுடனும், பாராட்டுடனும் ஏற்றுக் கொள்வார்கள். மறுநாள் வரும் எனது பிறந்த நாளுக்கு எனது தாயார் ஒரு வெகுமதியை எனக்கு பரிசாக அளிப்பார்கள் அவர்களது பரிசு நான் அவர்களுக்கு அறித்த பரிசை விட நிச்சயமாக மிகச் சிறந்ததாக இருக்கும். நான் அவர்களுக்கு அளித்த பரிசின் மதிப்பை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படிச் செய்யவில்லை. ஆனால் என்னிடமுள்ள பணத்தைவிட அவர்கள் அதிகமாக பணம் வைத்திருந்த நிலைமைக்கு தகுந்தபடி தாராளமாக கொடுப்பார்கள்.
எனது தாயாருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற எனது விருப்பம், தேவனுக்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டும் என்று தாவீதின் விருப்பத்தை எனக்கு நினைப்பூட்டியது. அவன் வாழ்ந்து வந்த ஆடம்பரமான அரண்மனைக்கும், தேவன் அவரை வெளிப்படுத்தும் எளிமையான கூடாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு அவனை அதிகம் பாதித்தது. ஆகவே தேவனுக்கு ஓர் ஆலயம் கட்ட அதிகமாக விரும்பினான். தாவீதின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, மிகச் சிறந்த ஒரு பரிசை தேவன் தாவீதிற்கு அருளினார். தாவீதின் குமாரர்களின் ஒருவனாகிய சாலமோன் அவருக்கு ஆலயத்தை கட்டுவான் என்று கூறினதோடு, தேவன் தாவீதிற்கு ஒரு வீட்டை கட்டப்போவதாகவும், ஒரு இராஜ்ஜியத்தை அருளப்போவதாகவும் வாக்குப் பண்ணினார் (1 நாளா. 17:11). அந்த வாக்குத்தத்தம் சாலமோனில் ஆரம்பித்து இறுதியில் என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய (வச. 12) இராஜ்ஜியத்தையுடைய இயேசுவில் நிறைவேறியுள்ளது. தாவீது அழிந்து போகக்கூடிய அவனது ஆஸ்தியிலிருந்து தேவனுக்கு கொடுக்க விரும்பினான். ஆனால், தேவனோ என்றென்றும் அழியாமல் நிலைதிருக்கக்கூடிய ஒன்றை தாவீதிற்கு வாக்குப் பண்ணினார்.
தாவீதைப் போல நாமும் நமது நன்றி உணர்வினாலும், அன்பினாலும் தேவனுக்கு கொடுக்க வேண்டும் என்று எப்பொழுதும் உந்தப்படுவோம். தேவன் இயேசுவின் மூலமாக நமக்கு அருளிய அளவற்ற ஆசீர்வாதங்களை நாம் எப்பொழுதும் காணலாம்.
வனாந்திரத்தில் உயிர் பிழைத்தல்
1960களில் கிங்ஸ்டன் டிரையோ என்று அழைக்கப்பட்ட இசைக் குழுவினர் “டெசட் பீட் என்ற பாடலை இயற்றி வெளியிட்டனர். அந்தப் பாடலில், ஒரு பாலைவனத்தை மிகுந்த தாகத்துடன் கடக்கும் ஒரு மந்தை மேய்ப்பன் பாலைவனத்தில் ஓர் அடி குழாயைக் காண்கிறான். அதன் அருகில் சென்ற பொழுது அந்தக் குழாயின் அருகில் ஒரு குறிப்பும் ஒரு ஜாடியில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது. அந்தக் குறிப்பில், ஜாடியில் இருந்த தண்ணீரைப் பருகாமல் அதை அந்த அடிகுழாயிற்குள் ஊற்றி பின் குழாயை அடிக்க வேண்டும் என்று குறிக்கப்பட்டிருந்தது. மிகுந்த தாகத்துடன் இருந்த அந்த மந்தை மேய்ப்பன், அவனது தாகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்தக் குறிப்பில் கூறியிருந்தபடியே அந்த ஜாடியில் இருந்த தண்ணீரைக் குழாய்க்குள் ஊற்றி பின் குழாயை அடித்தான். அவனது விசுவாசத்திற்கான வெகுமதியாக, குழாயில் இருந்து குளிர்ந்தநீர் அதிகமாக வந்தது. அந்த நீரைக் தாகம் தீரக் குடித்து திருப்தி அடைந்தான். அவன் அந்தக் குறிப்பில் கூறப்பட்டதை விசுவாசித்து செயல்படாமல் இருந்திருந்தால் அந்த ஜாடியில் இருந்த சூடான நீர் மட்டும் தான் கிடைத்திருக்கும். அது அவன் தாகத்தை தீர்த்திருக்காது.
அந்தப்பாடலின் கருத்து, இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் பயணம் பண்ணினதை எனக்கு நினைப்பூட்டியது. தாகத்தால் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டபொழுது மோசே தேவனை நோக்கி முறையிட்டான். ஒரேபில் இருந்த கன்மலையை அவனது கோலால் அடிக்கும்படி தேவன் மோசேயிடம் கூறினார். மோசே தேவனுடைய வார்த்தைகளை விசுவாசித்து கீழ்ப்படிந்தான். கன்மலையிலிருந்து தண்ணீர் பீறிட்டு வந்தது.
ஆனால், இஸ்ரவேல் மக்கள் மோசேயின் விசுவாசத்தில் தொடர்ந்து நிலையாகப் பின்பற்றவில்லை. அது மிகவும் வருந்தத்தக்கதாகும். இறுதியில் கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால் அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்கு பிரயோஜனப் படவில்லை என்று எபிரெயர் 4:2ல் எழுதப்பட்டபடி ஆயிற்று.
சில சமயங்களில் வாழ்க்கை வறண்ட பாலைவனம் போலக் காணப்படும். ஆனால், தேவன் தமது கடினமான சூழ்நிலைகளில் கூட செயல்பட்டு, நமது ஆன்மீகத் தாகத்தை தீர்க்கிறார். தேவனுடைய வார்த்தைகளை விசுவாசத்துடன் நம்பினால், நமது அன்றாடக் தேவைகளுக்காக ஜீவ தண்ணீரையும், கிருபையையும் பெருக்கெடுத்து ஓடும் ஆறாக நாம் அனுபவிக்கலாம்.
மாறுவேடத்தில் இயேசு
எனது சிநேகிதிகளில் ஒருவர் சுகவீனத்தால் வீட்டைவிட்டு வெளியேற இயலாத, அவளது மாமியாரை வீ ட்டிலே வைத்து பராமரித்து வந்தாள். அவள், அவளது மாமியாரிடம், அவர்கள் அதிகமாக விரும்புவது என்ன என்று கேட்டாள். அவளது மாமியார் ‘’எனது கால்கள் கழுவப்பட வேண்டும்” என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். “ஒவ்வொரு முறையும் அவர்களது கால்களைக் கழுவும்படி கூறும்பொழுது அந்த வேலையை செய்ய மனமில்லாமல், அதைச் செய்வதை வெறுத்தேன். அவ்வேலையைச் செய்யும் பொழுதெல்லாம் எனக்குள்ளே இருந்த வெறுப்பு உணர்வை எனது மாமியார் அறிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று தேவனிடம் கேட்டேன் என்று அவளது உணர்வை எனது சிநேகிதி ஒத்துக் கொண்டாள்.
ஆனால், ஒரு நாள் அவளது முறுமுறுக்கும் தன்மை தீடீரென ஒரு நொடிப் பொழுதிலே மாறிவிட்டது. அவள் தண்ணீருள்ள பாத்திரத்தையும் துண்டையும் எடுத்துக் கொண்டு. அவளது மாமியாரின் பாதத்தண்டையால் அமர்ந்த பொழுது, என் மாமியாரை நோக்கிப் பார்த்தேன். உடனே நான் இயேசுவின் பாதங்களைக் கழுவுவதாக உணர்ந்தேன். இயேசுவே மாறுவேடத்தில் என் மாமியாராக இருப்பது போல் உணர்ந்தேன் என்று கூறினாள். அந்த நிகழ்ச்சிக்குப் பின், மாமியாரின் பாதங்களை கழுவுவது எனக்குத் கிடைத்த ஒரு சிலாக்கியம் என்று உணர்ந்தேன் என்று கூறினாள்.
மனதைத் தொடக்கூடிய இந்த காரியத்தைக் குறித்து நான் கேள்விப்பட்ட பொழுது, இயேசு கிறிஸ்து அவரது உலக வாழ்க்கையின் இறுதி நாட்களில் ஒலிவ மலைச் சரிவில் போதித்தது நினைவிற்கு வந்தது.
அவருடைய பிள்ளைகள் பசியாயிருப்பவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, வியாதியாயிருப்பவர்களை விசாரிக்கும்பொழுது “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று ராஜா தன்னுடைய குமாரர்களையும், குமாரத்திகளையும், அவரது இராஜியத்திற்குள் வரும்படி அழைப்பார். காவலில் இருக்கும் மக்களைப் போய்ப் பார்த்து வரும்பொழுது, வஸ்திரம் இல்லாதவர்களுக்கு வஸ்திரம் அளிக்கும் பொழுதும், நாம் இயேசுவிற்கு ஊழியம் செய்கிறோம்.
எனது சிநேகிதி புதியதாக யாரையாவது, சந்திக்கும்பொழுது, “நீங்கள் மாறுவேடத்தில் வந்துள்ள இயேசுவா? என்று தனக்குள்ளாக கேட்டுக் கொள்வது போலவே நீங்களும் அவளது எண்ணத்தை
எதிரொலிக்கலாம்.
சகோதரனுக்கு சகோதரன் இடையே
எனக்கும் என் இளைய சகோதரனுக்கும் ஒரு வயதிற்குள்ளாகத்தான் இடைவெளி இருந்தது. ஆனால், நாங்கள் வளரும் பொழுது இருவருக்கும் இடையே கடுமையான போட்டி (சண்டை) இருந்தபடியினால், எங்களது தகப்பனார் நிலையை நன்கு புரிந்துகொண்டார். ஆனால், எனது தயார் எங்களைப் பற்றி அவ்வளவாக புரிந்து கொள்ளவில்லை. ஏனென்றால் தகப்பனாருக்கு சகோதரர்கள் இருந்தார்கள், தாய்க்கு இல்லை.
உடன்பிறந்த சகோதரர்களுக்கிடையே போராட்டம் என்ற தலைப்பின் கீழே ஆதியாகமத்தில் உள்ள நிகழ்ச்சிகளோடு எங்களது கதை ஒத்துப்போவதாக இருந்தது. காயீன், ஆபேல் (ஆதி. 4). ஈசாக்கு, இஸ்மவேல் (ஆதி. 21:8-10 பென்யமீனைத் தவிர யோசேப்பும் அவனது மற்ற சகோதரர்களில் உறவு (ஆதி. 37). ஆனால், சகோதரனுக்கு சகோதரர் இடையே இருந்த கடுமையான பகைக்கு ஏசா, யாக்கோபு சிறந்த உதாரணம்.
ஏசாவின் இரட்டைச் சகோதரனான யாக்போபு, ஏசாவை இருமுறை ஏமாற்றி விட்டான். ஆகவே, ஏசா யாக்கோபைக் கொல்லத் தீர்மானித்தான் (ஆதி. 27:41) அநேக ஆண்டுகளுக்குப் பின் ஏசாவும், யாக்கோபும் சமரசமானார்கள் (ஆதி. 33). ஆனால், அவர்களுக்கு இடையே இருந்தபோட்டி மனப்பான்மை, அவர்களது பின் சந்ததியாரிடமும் பரவி ஏதோம், இஸ்ரவேல் என்ற இரு பகைமை நாடானார்கள். இஸ்ரவேல் மக்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் பிரவேசிக்க ஆயத்தமான பொழுது, ஏதோமியர் ஒரு சேனையோடு வந்து அவர்களுக்கு எதிர்த்து நின்றார்கள் (எண். 20:14-21). அநேக காலம் கழித்து, எருசலேம் குடிகள் அவர்களுக்கு எதிராக வந்த படைக்கு பயந்து ஓடினபொழுது ஏதோமியர் அவர்களைக் கொன்று குவித்தார்கள் (ஒபதி. 1:10-14).
வேதாகமம் நமது உடைந்துபோன நிலைமைகளைப் பற்றி மட்டும் கூறாமல், தேவனுடைய மீட்பின் செய்தியைப் பற்றியும் கூறுவது நமக்கு நம்பிக்கை அளிக்கிறது. நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன் (யோவா. 13:34) என்று இயேசு தமது சீடர்களிடம் கூறி, அனைத்தையும் மாற்றியமைத்துவிட்டார். அதன் மூலம் அவர் நமக்காக மரிப்பதின் அர்த்தத்தை நமக்கு விளக்கிக் காண்பித்துள்ளார்.
நானும் என் சகோதரனும் வளர்ந்த பின்பு, நாங்கள் ஒருவரையொருவர் அதிகம் நேசிப்பவர்களானோம். அதுதான் தேவனுடைய செயல். அவர் அருளும் மன்னிப்பை நாம் ஏற்றுக்கொள்ளும் பொழுது, அவரது கிருபை, சகோதரர்கள் மத்தியில் உள்ள பகைமையை சகோதர சிநேகமாக மாற்றிவிடும்.
வேறுவகையான அன்பு
அநேக ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பிக்கப்பட்ட ஒரு சபை எனக்கு மிகவும் பிடித்தமானது. ஏனெனில் அந்த சபை சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வெளிவந்த கைதிகள், மீண்டும் சமுதாயத்தில் நன்முறையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு உதவிகள் செய்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இப்பொழுது அந்த திருச்சபையில் அனைத்து பிரிவு மக்களும் பங்கெடுக்கின்றனர். அந்தத் திருச்சபை பரலோகத்திற்கு மாதிரியாக இருக்கிறது. ஏனென்றால் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்ட பாவிகளாக, இயேசு கிறிஸ்துவின் அன்பினால் இணைக்கப்பட்டவர்களாக, இருப்பதினால் தான் அச்சபையை அதிகமாக நேசிக்கிறேன்.
சில சமயங்களில் திருச்சபை என்பது மன்னிக்கப்பட்ட பாவிகள் கூடும் பாதுகாப்பான அடைக்கலம் போல இல்லாத பொழுதுபோக்குக் குழு கூடும் இடம் போல இருந்துவிடுமோ என்று எண்ணுகிறேன். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத்தரம் உடைய மக்கள் ஒரே குழுவாகக் கூடுவது இயற்கையான காரியமாகும். எப்படிப்பட்ட மக்களோடு அவர்கள் இலகுவாக இணைந்து செயல்பட முடியுமோ, அப்படிப்பட்ட மக்கள் மட்டும் இணைந்து கொள்வது இயற்கையானது. இப்படிச் செய்வதால் விடப்பட்ட மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக உணர்வார்கள். “நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள்” (யோவா. 15:12) என்று இயேசு கூறிய பொழுது, அப்படிப்பட்ட பிரிவினையை மனதில் எண்ணவில்லை. அவருடைய திருச்சபையில் உள்ள மக்கள் அனைவரும், தேவனுடைய அன்பை எல்லாரோடும் பகிர்ந்து கொள்பவர்களாக இருக்க வேண்டும்.
ஒதுக்கப்பட்ட மக்கள் மனம் பாதிப்படைந்தால், அன்பான அடைக்கலத்தையும், ஆறுதலையும், மன்னிப்பையும் இயேசுவில் பெற்றுக் கொள்ளலாம். இதைத்தான் அப்படிப்பட்ட மக்கள் திருச்சபையில் எதிர்பார்க்கிறார்கள். ஆகவே நாம் சந்திக்கும் அனைவரிடமும் இயேசுவின் அன்பை வெளிப்படுத்த வேண்டும். அதிலும் விசேஷமாக நம்முடைய தரத்திலே இல்லாமல் ஒதுக்கப்பட்டவர்களிடம் கிறிஸ்துவின் அன்பைக் காட்ட வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் மக்களை, நம்மூலமாக நேசிக்க இயேசு விரும்புகிறார். மக்கள் அனைவரையம் அன்பினால் இணைத்து ஆராதனை செய்வது எவ்வளவு மகிழ்ச்சியானது! அது பரலோகத்தின் ஒரு பகுதியை பூமியிலே மகிழ்ச்சியுடன் அனுபவிப்பது போன்றதாகும்.
உங்களது பாதுகாவலான இடம்
நானும், என் மகளும், எங்களுக்கு அருகில் வசிக்கும் எங்களது உறவினர்கள் அனைரும் சேர்ந்து ஒரு குடும்பக் கூடுகைக்குச் செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தோம். எனது மகள் அந்த கூடுகையைக் குறித்து சற்று பயந்ததால், “நான் எனது காரை ஓட்டிச்செல்லுகிறேன்”, அதில் போகலாம் என்று கூறினேன். “சரி ஆனால், என்னுடைய காரில் செல்லுவது வசதியாக இருக்கும். அதை உங்களால் ஓட்டிவர இயலுமா?” என்று கேட்டாள். எனது சிறிய காரைவிட அவளது பெரிய காரை பயன்படுத்த அவள் விரும்புகிறாள் என்று நான் எண்ணிக் கொண்டு, “என்னுடைய கார் மிகவும் நெருக்கமாக உள்ளதா?” என்று கேட்டேன். அதற்கு அவள் “அப்படி இல்லை, எனது கார்தான் எனக்கு பாதுகாப்பாக இருக்கும் அதில் இருக்கும் பொழுது நான் பாதுகாப்புடன் இருப்பதாக உணருகிறேன்” என்றாள்.
அவள் கூறியது என்னுடைய தனிப்பட்ட “பாதுகாவலான இடத்தைக்” குறித்து சிந்திக்கத் தூண்டியது. “கர்த்தரின் நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பான்” என்ற நீதிமொழிகள் 18:10 வசனத்தை நினைவு கூர்ந்தேன். பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஒரு நகரத்தின் சுற்றுச்சுவர்களும் காவற் கோபுரங்களும் வெளியே இருந்து வரக்கூடிய ஆபத்துக்களைக் குறித்து எச்சரிப்பதாகவும், உள்ளிருக்கும் மக்களை பாதுகாப்பதாகவும் இருந்தன. தேவனுடைய நாமம் அவருடைய குணாதிசயங்களையும், அவருடைய பரிபூரண தன்மைகளையும் குறிப்பதோடு, அவருடைய ஜனங்களுக்கு உண்மையான பாதுகாப்பை அளிப்பதாக நீதிமொழிகள் எமுதியவர் தன் கருத்தை நீதி 18:10ல் தெரிவித்திறுக்கிறார்.
ஆபத்தான நேரம் என்று எண்ணி பாதுகாவலுக்காக வாஞ்சிக்கும் பொழுது சில இடங்கள் நமக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. உதாரணமாக புயல் வீசும் பொழுது ஒரு பலமான கூரை நமது தலைக்கு மேல் இருப்பது, தேவையான பொழுது, மருத்துவ உதவி செய்யும் மருத்துவமனை இருப்பது, அன்புள்ளவர்களின் அன்புடன் கூடிய அரவணைப்பு ஆகியவைகளாகும்.
உங்ளது பாதுகாப்பான இடம் எது? எங்கு பாதுகாப்பைத் தேடினாலும், பெலனையும், பாதுகாவலையும் அளிக்கும் தேவபிரசன்னமே நமக்கு உண்மையான பாதுகாப்பான இடமாகும்.
அழகிற்கு முடிவே இல்லாத பொழுது
கிராண்ட் கேன்யன் என்ற உலகப் புகழ்பெற்ற மலைப் பள்ளத்தாக்கை பார்ப்பதை நான் அதிகம் விரும்புகிறேன். பள்ளத்தாக்கின் ஓரத்தில் நிற்கும் பொழுதெல்லாம், தேவனுடைய சிருஷ்டிப்பின் புதுமையைக் கண்டு ஆச்சரியத்தால் எனது மூச்சு நின்று போகும்.
கிராண்ட் கேன்யன் என்பது பூமியிலுள்ள மிக ஆழமான குழியாக இருந்தாலும், அது என்னை பரலோகத்தைக் குறித்து சிந்திக்க தூண்டுகிறது. 12 வயதுடைய ஒரு சிறுவன் “பரலோகம் சிலிப்பை உண்டாக்கும் இடமாக இருக்காதா? எந்த நேரமும் தேவனை துதித்துக் கொண்டே இருந்தால் நாம் சோர்வடைந்துவிடமாட்டோமா?” என்று உண்மையான இருதயத்துடன் என்னிடம் கேட்டான். பூமியிலுள்ள ஒரு அழமான பள்ளம் நம் மனதைத் தொடக்கூடிய அளவிற்கு மிக அழகாக இருப்பதால், அதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க செய்யுமானால், அழகிற்கே ஊற்று காரணமுமான, ஆச்சரியமான புத்தம் பதிய சிருஷ்டிகளின் சிருஷ்டி கர்த்தாவாகிய நமது அன்பின் தேவனை நாம் காணும்பொழுது ஏற்படும் மகிழ்ச்சியை நம்மால் கற்பனை செய்துதான் பார்க்க இயலும்.
தாவீது “கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன். அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும் படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” (சங். 27:4) என்று எழுதினபொழுது அவனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளான். நாம் விசுவாசத்துடன் தேடும்பொழுது இந்த உலகில் நம்மை நெருங்கி வரும் அவரது பிரசன்னத்தைப் போலவும், அவரை முகமுகமாகத் தரிசிப்பதை எதிர் நோக்கி இருப்பதைப் போலவும் அழகானவைகள் வேறு ஒன்றுமில்லை.
அந்த நாளில் அற்புதமான நமது கர்த்தரை துதித்துக்கொண்டே இருப்பதில் நாம் களைத்துப் போகவே மாட்டோம். ஏனென்றால் அளவிடப்படமுடியாத அவரது உன்னைத் தன்மையையும், அவரது கரத்தின் கிரியைகளின் ஆச்சரியத்தையம் அறிந்து கொள்வதற்கு முடிவே கிடையாது. அவருடைய பிரசன்னத்தில் செலவிடப்படும் ஒவ்வொரு மணித்துளியிலும் அவருடைய அன்பு அவருடைய அழகு ஆகியவைகள் ஆச்சரியப்படத்தக்க முறையில் வெளிப்படுத்தப்படுகின்றன.
நாம் வல்லமையைப் பெற்றுள்ளோம்
ஏதோ ஒரு பொருள் நொருங்குகிற பலமான சத்தத்தைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அந்த சத்தம் எதிலிருந்து வருகிறது என்று அறிந்து வேகமாக சமையலறைக்கு ஓடினேன். காலியாக இருந்த காப்பி போடும் கருவியின் சுவிட்ச்சை தெரியாமல் போட்டு வந்திருக்கிறேன். வேகமாக ஓடிப்போய் அக்கருவியை மின் இணைப்பிலிருந்து நீக்கிவிட்டு அதன் கைப்பிடியை பிடித்து துக்கினேன். அப்பாத்திரத்தை கீழேயுள்ள டைல் கற்களின் மீது வைக்க இயலுமா என்று பார்க்க அதின் அடிப்பாகத்தை என் விரல் நுனியினால் தொட்டேன் அதன் சூடான அடிப் பக்கம் என் விரல்களின் நுனியை சுட்டு எனது மெல்லிய தோலில் கொப்பளங்கள் ஏற்பட்டது.
எனது கணவர் எனது காயங்களுக்கு மருந்து போட்ட பொழுது என் தலையை அசைத்தேன். “அந்தப் பாத்திரத்தின் அடிப்பக்கம் சூடாக இருக்கும் என்பதை அறிந்திருந்தேன். ஆனால், ஏன் அதைத் தொட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினேன்.
அந்த தவற்றை நான் செய்ததின் விளைவைவிட அதிகமான பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பாவத்தைக் குறித்து நமது எதிர்வினை என்ன என்பது பற்றி, பவுல் வேதாகமத்தில் தெளிவாகக் குறிப்பிட்டது எனக்கு ஞாபகம் வந்தது.
“நான் செய்கிறது எனக்கே சம்மதி இல்லை. நான் விரும்புகிறதைச் செய்யாமல் நான் வெறுப்பதையே செய்கிறேன்” (ரோம. 7:15) என்று பவுல் தனது அவல நிலையை ஒப்புக் கொள்ளுகிறார். வேத வசனங்கள் எது சரி, எது தவறு என்று தெளிவாக தீர்மானிக்கிறது என்றும் (வச. 7) பாவத்திற்கு எதிராக மாம்சத்திற்கும், ஆவிக்கும் இடையே இடைவிடாத போராட்டம் தொடர்ந்து நடக்கிறதென்றும், பவுல் திட்டமாக கூறுகிறார் (வச. 15-23) அவர் அவருடைய பெலவீனத்தை அறிக்கை இட்டு தேவனுடைய உதவியினால், இப்பொழுதும், எப்பொழுதும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறார் (வச. 24-25).
நாம் நமது வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கும் பொழுது, அவர் அவருடைய பரிசுத்தாவியை நமக்கு அருளி, நன்மையான காரியங்களை தேர்ந்தெடுக்கக்கூடிய வல்லமையை நமக்குத் தருகிறார் (8:8-10). தேவனுடைய வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படியத்தக்கதாக நம்மை பெலப்படுத்தி அவர் வழி நடத்துகிறார். இதனால் தேவனை நேசிப்பவர்களுக்கு அவர் அருளும் பரிபூரண வாழ்க்கையை பெற்றுக்கொள்ள தடையாக உள்ள நமது பாவங்களிலிருந்து, அவர் நம்மை மீட்டுவிடுகிறார்.