வகை  |  odb

ஒரு புதிய சமுதாயம்

என்னுடைய சிநேகிதி கேரியின் ஐந்து வயது மகள் மைஜா. ஒரு புதிய முறையில் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அவளுக்கு வெவ்வேறு விதமான பொம்மைகளை ஒன்றாக வைத்து, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி விளையாடுவது மிகவும் விருப்பமான ஒன்று. அவளுடைய கற்பனை உலகத்தில் எல்லாம் ஒன்றுக்கொன்று சொந்தமானவை. அவர்களே அவளுடைய ஜனங்கள். அவர்கள் யாவரும் வெவ்வேறு வடிவம், நிறம் உருவத்திலிருந்தாலும் ஒன்றாயிருக்கும்போது தான் மகிழ்ச்சியாயிருப்பர் என நம்பினாள்.

அவளுடைய படைப்பாற்றல், தேவன் சபையில் விரும்பும் ஒன்றினை நினைவுபடுத்துகின்றது. பெந்தெகொஸ்தே என்ற நாளில் ‘‘வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவ பக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம் பண்ணினார்கள்” (அப். 2:5) என லூக்கா சொல்கின்றார். இந்த ஜனங்கள் வெவ்வேறு கலாச்சாரம், பாஷைக்காரராயிருந்த போதிலும், பரிசுத்த ஆவியானவர் வந்து அவர்களை ஒரு புதிய சமுதாயமாக்கினார். அன்றிலிருந்து சபை அவர்களை ஒரே சரீரமாக, இயேசுவின் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் இணைக்கின்றது.

இயேசு இவ்வுலகில் இருந்தபோது ஒன்றாக இணைந்த ஒரு கூட்ட மனிதர்களே, அவருடைய சீடர்களே, இந்தச் சமுதாயத்தின் தலைவர்கள். இயேசு அவர்களை இணைக்காதிருந்தால், அவர்கள் ஒன்றாக இணைந்திருக்கவே முடியாது. இப்பொழுது இன்னும் அதிகமானோர், கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் (2:41) கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக இணைந்தனர். ஒரு காலத்தில் பிரிந்திருந்த இந்த குழுவினர் இப்பொழுது பரிசுத்த ஆவியானவரால் இணைக்கப்பட்டனர். அவர்கள் ‘‘சகலத்தையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள்” (வச. 44). அவர்கள் தங்களுக்குரிய யாவற்றையும் பிறரோடு
பகிர்ந்துகொள்ளத் தயாராயிருந்தனர்.

பரிசுத்த ஆவியானவர் மக்கள் பிரிவுகளுக்கிடையே பாலமாக அமைந்து அவர்களை இணைக்கின்றார். நாம் எப்பொழுதும் மற்றவர்களோட இணைந்து எளிதாக அவர்களைப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் கிறிஸ்துவின் விசுவாசிகளாக நாம் இணைந்து கொள்கின்றோம்.

நடக்காவிட்டாலும்

வாழ்க்கையில் சில வேளைகளில் அடிவிழுகிறது. சில வேளைகளில் அற்புதங்கள் நிகழுகின்றன. பாபிலோனுக்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட மூன்று வாலிபர்கள், அத்தேசத்தின் பயப்படத்தக்க ராஜாவின் முன் நின்று தைரியமாக எந்த சூழ்நிலையிலும் அவர் நிறுத்திய பொற்சிலையை வணங்குவதில்லை என்று அறிவிக்கிறார்கள். அவர்கள் மூவரும் சேர்ந்து, ‘‘தேவன், எரிகிற அக்கினிச் சூளைக்கும் ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும் நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை. நீர் நிறுத்தின பொற்சிலையை பணிந்து கொள்வதுமில்லை” எனக் கூறினர் (தானி. 3:17-18).

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று வாலிபர்களையும் கட்டி எரிகிற அக்கினிச் சூளையிலே போட்டனர். ஆனால், தேவன் அற்புதமாக அவர்களை விடுவித்தார். அவர்களின் தலைமயிர் கருகாமலும் அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும் இருந்தன. (வச. 19-27). அவர்கள் சாகவும் தயாராயிருந்தனர். அவர்கள் தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கையில் தளரவில்லை. தேவன் எங்களை விடுவிக்காவிட்டாலும்... என்று உறுதியாயிருந்தனர்.

நாம் தேவனைப் பற்றிக்கொள்ள, அவர் விரும்புகிறார். ஒருவேளை நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரை தேவன் குணப்படுத்தாவிடினும், நம் வேலையை இழந்தாலும், நாம் துன்புறுத்தப்பட்டாலும் தேவனைப் பற்றிக் கொள்வோம். சில வேளைகளில் தேவன் இவ்வாழ்வின் துன்பங்களிலிருந்து நம்மை விடுவித்து விடலாம் அல்லது விடுவிக்காமற்போகலாம். ஆனால், ‘‘நாம் ஆராதிக்கும் தேவன் எல்லாம் செய்ய வல்லவர்” என்பதை உறுதியாகப் பற்றிக் கொள்வோம். விடுவிக்காவிட்டாலும் நம்முடைய ஒவ்வொரு சோதனையின் மத்தியிலும் தேவன் நம்மோடிருக்கிறார். நம்மை நேசிக்கிறார்.

நிரம்பி வழிதல்

‘‘இல்லை! இல்லை! இல்லை!” நான் கத்தினேன். அது ஒன்றும் உதவவில்லை. சிறிதளவும் உதவவில்லை. தண்ணீரை அடைப்பதற்கு நான் எடுத்த புத்திசாலித்தனமான தீர்வு வேலை செய்யவில்லை. நான் என்ன நினைத்தேனோ அதற்கு நேர் மாறாகவே நடந்தது. நான் அந்த கைப்பிடியை கீழே தள்ளிய போதே என் தவறைத் தெரிந்து கொண்டேன். தண்ணீர் நிரம்பி வழிய நான் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றேன்.

எத்தனை நேரம் நம் குழந்தைகள் பாலை ஊற்றும்போது தவறுதலாக எல்லா இடங்களிலும் பாலைக் கொட்டியிருக்கின்றனர். எத்தனை முறை இரண்டு லிட்டர் சோடா பாட்டில் பெட்டிக்குள் சுழன்று வெடித்து விபரீத விளைவுகளை ஏற்படத்தியிருக்கின்றது.

திரவங்களைக் கொட்டுதல் நல்ல காரியமல்ல. ஆனால் இதிலும் ஒரு விதிவிலக்கு உள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல் தேவனுடைய பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு நிரம்பி வழியும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும்படி சொல்கின்றார் (ரோம. 15:13). நாம் எப்பொழுதும் மகிழ்ச்சி, சமாதானம், மற்றும் நம்பிக்கையினால் நிரம்பி வழியும்படி நிரப்பப்பட விரும்புவோம். பரலோகத் தந்தையின் மீதுள்ள நம்பிக்கையாலும், ஞானத்தாலும் மிக அதிகமாக நிரப்பப்பட்டு நிரம்பி வழியும்படிச் செய்வோம். அதனை தேவன் நம் வாழ்வின் வெளிச்சமான அழகிய காலங்களில் அப்படிச் செய்வார். நம் வாழ்க்கையாகிய கோப்பை சிறிய அசைவிற்கும் நிரம்பி வழியும். எப்படியாயினும் நம் வாழ்வில் மேலோங்கி நிற்கும் நம்பிக்கை நிரம்பி வழிந்து நம்மைச் சுற்றியுள்ளவர்களை நனைக்கும்படி இருக்கட்டும்.

தேவனின் நன்மைகளுக்காகத் துதியுங்கள்

எங்களது வேத ஆராய்ச்சி குழுவிலுள்ள ஒருவர் ‘‘நாம் நம்முடைய சொந்த சங்கீதத்தை எழுதலாமே!” என்று கூறினார். ஆனால் எல்லாருக்கும் எழுதும் திறமையில்லையே என சிலர் எதிர்த்தனர். ஆனாலும் அவர்களுக்கு ஊக்கத்தையளிக்க அவர்களும் எழுதுவதற்கு இசைந்தனர். ஒவ்வொருவரும் தேவன் அவரவர் வாழ்வில் செய்த செயல்களை விவரித்துப் பாடலொன்றினை எழுதினோம். சோதனைகள், பாதுகாப்பு, அன்றன்று தேவைகளைப் பெறல், வேதனைகள், கண்ணீர் ஆகியவற்றிலிருந்து வேதனைகளைத் தாங்கிய செய்திகள் வந்து எங்கள் சங்கீதங்களாயின. சங்கீதம் 136 போன்று, ஒவ்வொரு சங்கீதமும் தேவனுடைய அன்பு என்றும் நிலைத்திருக்கும் என்ற உண்மையை வெளிப்படுத்தின.

நம் அனைவருக்குமே தேவனுடைய அன்பினை விளக்கக்கூடிய அனுபவங்கள் உண்டு. அவற்றை நாமும் எழுதவோ, பாடவோ அல்லது சொல்லவோ முடியும். சிலருக்கு அவர்களின் அனுபவம் ஒரு நாடகம் போன்றதாகவோ அல்லது சங்கீதம் 136ல் கூறியுள்ளபடி தேவன் தம்முடைய பிள்ளைகளை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்ததையும், தங்கள் பகைவர்களை மேற்கொண்டதையும் நினைத்துப் பார்ப்பதைப் போன்றிருக்கும் (வச. 10-15) மற்றவை தேவனுடைய மகத்துவமான படைப்புகளை விளக்குகின்றன. வானங்களை அவருடைய ஞானத்தினால் உண்டாக்கினார்... தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினார்... பெரிய சுடர்களை உண்டாக்கினார். பகலில் ஆளச் சூரியனைப் படைத்தார்.... இரவில் ஆளச் சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைத்தார் (வச. 5-9).

தேவன் யாரெனவும், அவர் என்னென்ன படைத்தார் என்பதையும் நினைக்கும் போது நாம் அவரைத் துதிக்கவும், அவருக்கு நன்றி செலுத்தவும் அவரை மகிமைப்படுத்தவும் ஆரம்பிப்போம். நாம் ‘‘ஒவ்வொருவரும் சங்கீதங்களாலும், கீர்த்தனைகளாலும், ஆவியில் வெளிப்படும்
ஞானப்பாட்டுகளினாலும்” (எபே. 5:19) தேவன் செய்த நன்மைகளையும் என்றும் நிலைத்திருக்கும் அவருடைய அன்பினையும் எண்ணி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வோம். தேவனுடைய அன்பினைக் குறித்த உன்னுடைய அனுபவத்தை, அவரைப் போற்றிப் பாடும் சங்கீதங்களாக மாற்றி, என்றும் நிலைத்திருக்கும் அவருடைய நன்மைகளை எண்ணி மகிழ்ந்திரு.

விடுதலையோடு பின்பற்றல்

நான் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற போது, விளையாட்டுத் துறையிலுள்ள ஒரு பயிற்சியாளர் நாங்கள் ஓட்டப்பந்தயத்திற்குச் செல்வதற்கு முன்பு ஓர் அறிவுரையைக் கூறினார். எப்பொழுதும் “முதலாக ஓட முயற்சிக்காதே. முன்னிருப்பவர்கள் எளிதில் ஆற்றலை இழந்து விடுவர்” அதற்குப் பதிலாக மிக வேகமாக ஓடும் நபருக்குப் பின்னாக மிக அருகில் ஓட வேண்டும். அவர்கள் தாங்கள் ஓடும் வேகத்தை நிதானித்துக் கொண்ட போது, நான் என்னுடைய மன, உடல் ரீதியாக முழு பெலத்தையும் சேமித்துக் கொண்டு ஓடினால் வெற்றியாக முடிக்க உதவியாயிருக்கும்.

வழி நடத்துதல் என்பது மிகவும் சோர்வடையச் செய்யும் செயல். ஆனால் பின்பற்றிச் செல்லல் என்பது எளிதாக இருக்கும். இதனைப் புரிந்து கொண்டதும் என்னுடைய ஓட்டத்தில் முன்னேற்றம் இருந்தது.  இதனை கிறிஸ்தவ சீடத்துவத்திலும் பயன்படுத்தலாம் என்பதைப் பல நாட்களுக்குப் பின் உணர்ந்தேன். இயேசுவின் மீது நம்பிக்கையாயிருப்பது என்பது மிகவும் கடினமானது என நினைக்கும்படித் தூண்டப்பட்டேன். ஒரு கிறிஸ்தவன் எப்படி இருக்க வேண்டும் என்று என்னுடைய சொந்த எதிர்பார்ப்புகளை நான் அடைய முயற்சித்தபோது, எளிதாக இயேசுவைப் பின்பற்றிச் செல்வதால் கிடைக்கும் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் இழந்துவிட்டேன் (யோவா. 8:32, 36).

நம்முடைய வாழ்வை நடத்த நாமே தீர்மானிக்கும் போது தேவன் நாம் உயரக் கூடிய ஒரு திட்டத்தைத் துவக்குவதில்லை. ஆனால் நாம் தேவனைத் தேடும் போது நாம் தேடுகின்ற இளைப்பாறுதலை அவர் தருகின்றார் (மத். 11:25-28) அநேக மதப்போதகர்கள் கடுமையான வேத ஆராய்ச்சியையும், விளக்கமான  சட்ட திட்டங்களையும் வலியுறுத்துவது போலில்லாமல், இயேசுவின் போதனைகள் மிக எளிதானவை. இயேசுவை தெரிந்து கொண்டால், பிதாவை அறிந்து கொள்ளலாம் (வச. 27) நாம் அவரைத் தேடினால் பாரமான சுமைகளை அவர் தூக்கிக் கொள்கின்றார் (வச. 28-30). நமது வாழ்வும் மாற்றமடையும்.

சாந்தமும் மனத்தாழ்மையுமுள்ள நம் இயேசுவைப் பின்பற்றினால் (வச. 29) அது நமக்கு சுமையாக இருப்பதில்லை. அதுவே நம்பிக்கையின் வழியும் சுகவாழ்வுமாகும். அவருடைய அன்பில் நாம் இளைப்பாறும் போது நாம் எத்தனை பெரிய விடுதலையை உணர்கின்றோம்.

தேவன் கிரியை செய்கின்றார்

‘‘சமீபத்தில் தேவன் உன்னில் கிரியை செய்ததை எப்படி கண்டு கொண்டாய்?” என்ற கேள்வியைச் சில நண்பர்களிடம் கேட்டேன். ஒரு நண்பன் பதிலளித்தான், ஒவ்வொரு நாள் காலையும் வேதத்தை வாசிக்கும்போது தேவன் கிரியை செய்வதைக் காண்கின்றேன்; ஒவ்வொரு புதிய நாளையும் நான் எதிர் நோக்க எனக்கு உதவி செய்வதில் காண்கின்றேன்; நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அவர் என்னோடிருக்கிறார் என்று நான் காண்கின்றேன்; நான் சவால்களைச் சந்திக்க அவர் எனக்கு உதவி செய்து மகிழ்ச்சியைத் தருகின்றார். எனக் கூறினான். அவனுடைய பதில் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. தேவனிடத்தில் அன்புகூருகின்றவர்களிடத்தில் தேவனுடைய வார்த்தைகளும் நமக்குள்ளே வாசம்பண்ணும் பரிசுத்த ஆவியானவரும் நம்மோடிருந்து நம்மில் கிரியை செய்கின்றார்.

தேவனைப் பின்பற்றுகிறவர்களுக்குள்ளே தேவனுடைய கிரியை அற்புதமாயிருக்கிறது. எபிரெயரை எழுதியவர் தன்னுடைய கடிதத்தின் முடிவில் ஆசீர்வாதம் கூறும் போது ‘‘இயேசு
கிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து... (எபி. 13:21) என முடிக்கின்றார். இந்த முடிவுரையில் எழுத்தாளர் தன்னுடைய கடிதத்தின் முக்கிய கருத்தினை மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றார். தேவன் நம்மைப் பின்பற்றுகின்ற தன்னுடைய ஜனங்களை பெலப்படுத்தி, தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியாக அவர்களில், அவர்கள் மூலமாகச் செயல்படுகின்றார்.

தேவன் நம்மில் கிரியை செய்கின்ற ஈவானது நம்மை அதிசயிக்கச் செய்கின்றது. நமக்கு விரோதமாகச் செயல்பட்ட ஒருவரை மன்னிக்கவும் கடினமான சிலரிடம் பொறுமையாயிருக்கவும் நம்மில் செயல்படுகின்றார். ‘‘சமாதானத்தின் தேவன்” (வச. 20) அவருடைய அன்பையும், சமாதானத்தையும் நம்மூலம் பெருகப்பண்ணுகிறார். சமீபத்தில் தேவன் உன்னில் எப்படி கிரியை செய்தார்?

தோன்றுவது போல் அல்ல

தொலைபேசியில் என்னுடைய மனைவி ‘‘கவனியுங்கள், இங்கு நமது பண்ணையில் ஒரு குரங்கு இருக்கிறது” என்றாள். அவள் தொலைபேசியைக் கையில் வைத்திருக்கும் போதே அதன் உறுமலை என்னால் கேட்க முடிந்தது. அது குரங்கின் சத்தம் தான். இது சாதாரணமாக நடக்கக்கூடியதல்ல. ஏனெனில் காட்டுக்குரங்குகள் நாங்களிருக்கும் இடத்திலிருந்து 2000 மைல்களுக்கப்பால் தான் உள்ளன.

பின்னர் என்னுடைய மாமனார் அதன் உண்மையை வெளிப்படுத்தினார். அது ஒரு கூண்டிலடைக்கப்பட்ட ஆந்தையின் குரல். குரங்கின் ஒலியைப் போன்ற தோற்றம். ஆனால் உண்மையல்ல.

யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் அரசாட்சியின் போது, அசீரியா ராஜாவாகிய சனகெரிப்பின் படைகள் எருசலேமின் அரண்களைச் சுற்றி முற்றிகையிட்டன. அசீரியர்கள் வெற்றி அவர்களுக்கேயென எண்ணினர். ஆனால் உண்மையில் வேறு விதமாய் நடந்தது. அசீரியர்களின் சேனைத் தலைவன் நயமான வார்த்தைகளைப் பேசி, தான் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுவதைப் போல நடித்தான். ஆனால் தேவனுடைய கரம் இஸ்ரவேல் ஜனங்களைப் பாதுகாத்தது.

‘‘இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்க வந்தேனோ?” என அசீரியரின் சேனைத் தலைவன் கேட்கின்றான் (2 இரா. 18:25). அவன் எருசலேமின் ஜனங்களை அடிபணியுமாறு, அவர்களை சம்மதிக்கச் செய்ய முயற்சிக்கின்றான். மேலும் அவன் ‘‘நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்” (வ.32) எனவும் கூறுகின்றான்.

இது ஒருவேளை தேவன் கூறுவது போன்று அவர்களுக்குத் தோன்றலாம். ஆனால் ஏசாயா தீர்க்கதரிசி இஸ்ரவேல் ஜனங்களிடம் தேவனுடைய உண்மையான வார்த்தைகளைச் சொல்கின்றார். அவன் (சனகெரிப்) இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின் மேல் அம்பு எய்வதுமில்லை; மேலும், ‘‘நான் இந்த நகரத்தை இரட்சிக்கும் படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன்” (19:32-34, 37:35) என்ற கர்த்தருடைய வார்த்தைகளை ஏசாயா சொன்னார். அன்று இராத்திரியில் ‘‘கர்த்தருடைய தூதன் அசீரியர்களைச் சங்கரித்தான் (வச. 35).

தேவனுடைய வல்லமையை மறுத்து நமக்கு நல்ல நளினமான போதனைகளைத் தருகின்ற மக்களை நாம் நாளுக்கு நாள் சந்திக்கின்றோம். அது தேவனுடைய வார்த்தையல்ல. தேவன் தம்முடைய வார்த்தையின் மூலம் நம்மிடம் பேசுவார். தேவன் நம்மை அவருடைய ஆவியினால் வழி நடத்துவார் அவரைப் பின்பற்றுபவர்கள் மீது அவருடைய கரம் இருக்கும். அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.

பரலோகத்தில் பொக்கிஷம்

நான் வளர்ந்த போது, நானும் என்னுடைய இரண்டு சகோதரிகளும் எங்களுடைய தாயாரின் கேதுரு மரத்தாலான அலமாரியின் மேல் வரிசையாக அமர்ந்து கொள்ள விரும்புவோம். அந்த அலமாரியினுள் என் தாயார் கம்பளி ஆடைகளையும், கை தையல், பின்னல் போன்ற என் பாட்டியின்
கைவேலைப்பாடுகள் நிறைந்த சில துணிகளையும் அங்கு வைத்திருந்தார்கள். என் தாயார் அந்தப் பொருட்களை மிகவும் விலையேறப் பெற்றதாகப் போற்றி, கேதுரு மணம் வீசும் அந்த மரப்பெட்டி பூச்சிகளிடமிருந்து அவற்றைக் காப்பாற்றி பத்திரமாக வைத்திருக்கும் என நம்பினார்.

இவ்வுலகப் பொருட்களெல்லாம் பூச்சிகளாலும் துருவினாலும் எளிதில் அழிக்கப்படலாம், திருடர் திருடலாம். மத்தேயு 6ல் அழிந்து போகக் கூடிய பொருட்களை அல்ல, என்றும் நிலைத்திருக்கும் பொருட்களையே சேர்த்து வைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. என்னுடைய தாயார் தனது 57வது வயதில் மரித்தபோது அவர்கள் இவ்வுலகில் அநேக பொருட்களைச் சேகரித்து வைக்கவில்லை. ஆனால் அவர்கள் பரலோகத்தில் சேமித்து வைத்திருந்ததை நான் நினைத்துப் பார்க்கின்றேன் (வச. 19-20).

அவர்கள் தேவனை நேசித்து அவருக்காகப் பணி செய்ததை நினைத்துப் பார்க்கின்றேன். தன்னுடைய குடும்பத்தை அன்போடு பராமரித்தார், ஞாயிறு பள்ளியில் குழந்தைகளுக்கு வேதத்தைக் கற்றுக் கொடுத்தார். கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணிடம் அன்போடு நடந்து கொண்டார், தன் குழந்தையையிழந்த ஓர் இளம் தாயினைத் தேற்றினார். அவர்களுக்காக ஜெபித்தார். தன்னுடைய பார்வையையிழந்த பின்னரும், ஒரு நகரும் நாற்காலியில் முடங்க நேரிட்ட போதும் மற்றவர்களுக்காக அன்போடு ஜெபிப்பதை விடவில்லை.

நம்முடைய உண்மையான பொக்கிஷம், நாம் சேர்த்துக் குவித்திருப்பதைக் கொண்டு அளவிடப்படுவதில்லை. ஆனால் நம்முடைய அன்பினையும் நேரத்தையும் நாம் எங்கு யாரிடம் செலவிடுகிறோம் என்பதைக் கொண்டே அளவிடப்படுகிறது. பிறருக்குப் பணி செய்து, இயேசுவைப் போல வாழ்ந்து என்ன பொக்கிஷங்களைப் பரலோகத்தில் சேர்த்து வைத்திருக்கின்றோம்?

நேரமெடுத்தல்

சமீபத்தில் அமெரிக்கா தேசத்திற்கு குடிபெயர்ந்த ரிமா என்ற சிரியாவைச் சேர்ந்த பெண்மணி, தன்னுடைய பயிற்சியாளரிடம் தனக்குத் தெரிந்த சிறிய ஆங்கிலம் மற்றும் சைகையின்மூலம் தான் வருத்தத்திலிருப்பதற்கான காரணத்தை விளக்கினாள். அவள் தான் செய்து வைத்திருந்த மாமிசம், பால்கட்டி, மற்றும் கீரைகள் அடங்கிய ரொட்டியை, ஒரு தட்டில் அழகாக அடுக்கி வைத்து எடுத்து வந்த போது, அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அருகிலுள்ள தேவாலயத்தின் ஜனங்கள் அநேகர் ரிமாவின் வீட்டிற்கு வருவதாயிருந்தது. எனினும் ஒரேயொரு மனிதன் அவள் வீட்டிற்கு வந்தார். அவரும் மிக வேகமாக உள்ளே வந்து, ஒரு பெட்டி நிறைய சாமான்களைக் கொடுத்து விட்டு அவசரமாக வெளியேறினார். அவர் வேகமாக ஒரு கடமையை முடித்தார். ஆனால் ரிமாவும், அவள் குடும்பத்தினரும் தனிமையில் சுற்றத்தாரின் அன்பிற்காகவும் அவர்கள் தங்களோடு நட்பினைப் பகிர்ந்து கொள்வார்களெனவும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஜனங்களுக்காக நேரத்தைச் செலவிட்டார் இயேசு. அவர் ஜனங்களோடு உணவருந்தினார். ஜனக்கூட்டத்திற்குக் கற்றுக் கொடுத்தார், போதனை செய்தார், தனி நபர்களோடு உறவாடினார். ஒரு மனிதனின் வீட்டிற்கு வருவதாகக் கூறினார். சகேயு வரி வசூலிப்பவன். அவன் ஒரு மரத்தின் மேலேறி இயேசுவைப் பார்க்க விரும்பினான். இயேசு அவனைப் பார்த்து ‘‘நீ சீக்கிரமாய் இறங்கி வா. இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்க வேண்டும்” (லூக். 19:1-9) என்று கூறினார். அன்றைக்கே சகேயுவின் வாழ்க்கை முற்றிலும் மாறியது.

நமக்குள்ள வேலைப் பளுவின் மத்தியில் நாம் பிறருக்கு நேரம் செலவிட முடியாதவர்களாகி விடுகின்றோம். ஆனால் நாம் அதற்கென சற்று நேரம் ஒதுக்கும்போது, பிறரோடு சிறிது நேரத்தைச் செலவிடும் பாக்கியத்தைப் பெறுவோம். இதன் மூலம் தேவன் அவர்களோடு செயல்பட ஆரம்பிப்பார்.