எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லாரன்ஸ் டார்மனிகட்டுரைகள்

நட்பின் அடையாளம்

கானாவில் நான் சிறுவனாக வளர்ந்த போது, என்னுடைய தந்தையின் கரத்தைப் பற்றிக் கொண்டு மக்கள் கூட்டம் நிரம்பிய இடங்களில் நடந்து செல்வதில் மகிழ்ச்சியடைந்துள்ளேன் அவர் என் தந்தையும், நண்பனுமாயிருந்தார். எங்களுடைய கலாச்சாரத்தில் கரம் கோர்த்து நடப்பதென்பது நட்பின் அடையாளம். அவ்வாறு நடக்கும் போது வெவ்வேறு வகையான காரியங்களைக் குறித்து நாங்கள் பேசிக் கொள்வோம். நான் தனிமையை உணரும் போதெல்லாம் என் தந்தையோடு பேசுவது எனக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும். நாங்கள் ஒருவரோடொருவர் நட்பாயிருப்பதை மிகவும் உயர்ந்ததாகக் கருதினேன்.

இயேசுவும் தன்னைப் பின்பற்றியவர்களை நண்பர்களென அழைத்தார். அவர்களுக்கு தன் நட்பின் அடையாளத்தைக் காட்டினார். “பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்” (யோவா. 10:9) என்றார். தன் சிநேகிதனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கின்ற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (வச. 13) என்றார். அவருடைய ராஜ்ஜியத்தின் காரியங்களை அவர்களுக்குத் தெரிவிக்கின்றார் (வச. 15). பிதாவினிடத்தில் கேள்விப்பட்ட யாவற்றையும் உங்களுக்குத் தெரிவித்தேன் என்றார் (வச. 15). அவருடைய ஊழியத்திலும் பங்கு கொள்ளும்படி அவர்களுக்கு வாய்ப்பளிக்கின்றார் (வச. 16).

நம்முடைய வாழ்க்கையில் துணையாக இயேசு நம்மோடு நடந்து வருகின்றார். நம்முடைய மனவேதனைகளையும் விருப்பங்களையும் அவர் கவனித்துக் கேட்கின்றார். நம்முடைய தனிமையான வேளையிலும் உள்ளம் சோர்ந்த நிலையிலும் ஒரு நண்பனாக இயேசு நமக்குத் துணை நிற்கின்றார்.

நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருந்து அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோமாயின், இயேசுவோடுள்ள நம்முடைய உறவு நிலைத்திற்கும் (வச. 10,17). நாம் அவருடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படிவோமாயின் மிகுந்த, நிலையான கனிகளைக் கொடுப்போம் (வச. 16).

மிகுந்த ஜனக்கூட்டம் நிறைந்த தெருக்களின் வழியேயும், ஆபத்து நிறைந்த சாலைகளின் வழியேயும் இந்த குழப்பம் நிறைந்த உலகில் செல்லும் போதும் தேவன் நம்மோடு கூட நடந்து வருவதை உணரலாம். அதுவே அவர் நம்முடைய நண்பன் என்பதற்கு அடையாளம்.

ஒளியில் நடத்தல்

எங்களுடைய காடுகளடர்ந்த கிராமத்தை இருள் சூழ்ந்தது. நிலாவும் மறைந்தது. வானத்தில் ஆங்காங்கே மின்னல் பளிச்சிட்டது. இடி முழக்கத்தோடு புயலும் மழையும் ஆரம்பித்தது. நான் சிறியவனாக இருந்தபடியால், விழித்துக் கொண்டு பல வகையான பயங்கர பிசாசுகள் என்னை நோக்கிப் பாய்ந்து வருவதைப் போன்று கற்பனை செய்து பயந்தேன். விடிந்த போது அந்தச் சப்தங்கள் எல்லாம் மறைந்துவிட்டன. சூரியன் உதித்தது, அமைதி திரும்பியது. பறவைகள் மகிழ்ச்சியோடு பாட ஆரம்பித்தன. இரவின் பயங்கர இருளுக்கும் பகல் வெளிச்சத்தின் மகிழ்ச்சிக்குமிடையேயுள்ள வேறுபாடு மிகவும் குறிப்பிடத்தக்கதாயிருந்தது.

சீனாய் மலையில் மின்னலையும், இடி முழக்கங்களையும் எக்காள சத்தத்தையும் கேட்டபோது இஸ்ரவேலர் பயந்து பின்வாங்கி மறைந்துகொள்ள முயற்சிக்கின்றனர் (யாத். 20:18-19) அவர்களுக்கு தேவனுடைய பிரசன்னமும், அவருடைய அன்பின் ஈவாகிய நியாயப்பிரமாணமும், பயங்கரமாகவும், கண்களால் காணக் கூடாதபடியும் இருந்தது. ஏனெனில், பாவ மனிதராகிய இஸ்ரவேலர் தேவன் எதிர்பார்த்த நீதியின்படி வாழவில்லை. அவர்களுடைய பாவம் அவர்களை இருளுக்கும் பயத்துக்கும் இழுத்துச் சென்றது (எபி. 12:18-21).

ஆனால், தேவன் ஒளியாயிருக்கிறார். அவரில் எவ்வளவேனும் இருளில்லை (1 யோவா. 1:5). எபிரெயர் 12ல் சீனாய் மலை என்பது தேவனுடைய பரிசுத்தத்தையும், நம்முடைய கீழ்படியாமையின் பழைய வாழ்வையும் குறிக்கின்றது. ஆனால், “சீனாய் மலையின் அழகு புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய" இயேசுவின் கிருபையையும் விசுவாசிகளுக்குத் தரப்படுகின்ற புதிய வாழ்வையும் குறிக்கும்.

இயேசுவைப் பின்பற்றுகின்ற ஒவ்வொருவரும் “இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்" (யோவா. 8:12) அவர் மூலமாக நம்முடைய பழைய வாழ்வின் இருளை அகற்றி, புதிய வாழ்வில், ஒளியில் மகிழ்ச்சியோடு நடந்து அவருடைய இராஜ்;ஜியத்தின் அழகில் மகிழ்ந்து கொண்டாடுவோம்.

கண்ணாடிகளும், கேட்பவர்களும்

உகாண்டா தேசத்தில், கம்பாலாவிலுள்ள ஒரு விடுதியிலிருந்து நான் வெளியே வந்த போது, என்னை ஒரு கருத்தரங்கிற்கு அழைத்துச் செல்ல வந்திருந்தவளின் முகத்தில் ஒரு வேடிக்கைக் கலந்த சிரிப்பைக் கவனித்தேன். “சிரிக்கும் படி என்ன உள்ளது” எனக் கேட்டேன். அவள் சிரித்துக் கொண்டே, “உன்னுடைய தலைமுடியைச் சீவினாயா?” எனக் கேட்டாள். அப்பொழுது நான் என்னைக் குறித்துச் சிரித்துக் கொண்டேன். ஏனெனில், உண்மையிலேயே நான் தலைச்சீவ மறந்துவிட்டேன். நான் விடுதியிலுள்ள கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். பின் எப்படி தலைச்சீவ மறந்து இப்படி வந்தேன்?

வேதாகமத்தைக் கற்றுக் கொள்வதை இன்னும் பயனுள்ளதாக்கிக் கொள்ள யாக்கோபு நடைமுறை செயலோடு ஒப்பிட்டு ஒரு புதிய கோணத்தைத் தருகின்றார். நாம் தலைசீவியுள்ளோமா, முகம் கழுவியுள்ளோமா, சட்டையின் பொத்தானகளைச் சரியாக இணைத்துள்ளோமா என சரி செய்து கொள்ள கண்ணாடியைப் பார்க்கின்றோம். நம்முடைய குணம், நடத்தை, எண்ணம், மற்றும் செயல்பாடுகள் சரியாகவுள்ளனவா என ஆராய்ந்து அறிந்துகொள்ள வேதாகமம பயன்படுகின்றது (யாக். 1:23-24) நம்முடைய வாழ்வை தேவன் வெளிப்படுத்தியுள்ளபடி அமைத்துக்கொள்ள வேதாகமம் உதவுகிறது. நம்முடைய நாவையடக்கவும் (வச. 26) திக்கற்ற பிள்ளைகளையும், விதவைகளையும் விசாரிக்கவும், (வச. 27) தேவனுடைய ஆவியானவர் நமக்குள்ளேயிருந்து நம்மை எச்சரிப்பவற்றிற்குச் செவிகொடுக்கவும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் நம்மைக் காத்துக் கொள்ளவும் (வச. 27) உதவுகிறது.

நாம் ”சுயாதீனப் பிரமாணமாகிய பூரணப் பிரமாணத்தைக் கவனமாக உற்றுப் பார்த்து நம் வாழ்வில் நடைமுறைப் படுத்துவோமேயாகில், நம் செய்கையில் பாக்கியவானாயிருப்போம் (வச. 25) வேதப்புத்தகமாகிய கண்ணாடியைப் பார்த்து “ ஆத்துமாவை இரட்சிக் வல்லமையுள்ளதாயிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்வோம்” (வச. 21).

தனிமையான கிறிஸ்மஸ்

கானாவின் வட பகுதியிலுள்ள சகோகு என்ற இடத்திலிருக்கும் என்னுடைய தாத்தாவின் வீட்டில் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடியபோது நான் தனிமையையுணர்ந்தேன். அப்போது எனக்கு பதினைந்து வயது. என்னுடைய பெற்றோரும், உடன் பிறந்தோரும் ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தனர். முந்திய வருடங்களில் நான் அவர்களோடும், என்னுடைய கிராமத்தின் நண்பர்களோடும் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடிய போது, அது மிக அதிகமாகவும் நினைவு கூறத்தக்கதாகவுமிருக்கும். ஆனால், இந்த கிறிஸ்து பிறப்பு பண்டிகை அமைதியாகவும், தனிமையிலும் இருந்தது. கிறிஸ்மஸ் அன்று காலை நான் எனது தரைப் படுக்கையில் படுத்திருந்தபோது ஒரு பாடல் என் நினைவுக்கு வந்தது. வருடம் முடிந்து விட்டது, கிறிஸ்து பிறப்பு வந்து விட்டது. தேவக் குமாரன் பிறந்து விட்டார், அனைவருக்கும் சமாதானமும் மகிழ்ச்சியும்… என்பதான அப்பாடலை நான் முணுமுணுத்து எனக்குள்ளாகவே திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருந்தேன்.

என்னுடைய பாட்டியம்மா என்னிடம், “அது என்ன பாடல்?” எனக் கேட்டார். என்னுடைய பாட்டி, தாத்தாவிற்கு கிறிஸ்து பிறப்பு பற்றியும், கிறிஸ்துவைப் பற்றியும் தெரியவில்லை. எனவே நான் கிறிஸ்துவைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை அவர்களோடு பகிர்ந்து கொண்டேன். அந்தக் கணமே என்னுடைய தனிமை மறைந்து ஒரு பிரகாசத்தை உணர்ந்தேன்.

வயல் வெளிகளில் தனிமையில் தன் ஆடுகளுடன் அவ்வவ்போது சில கொடிய விலங்கினங்களை மட்டும் சந்தித்துக் கொண்டிருந்த மேய்ப்பனான தாவீதும் தனிமையை உணர்ந்தான். அந்த ஒரு நேர மட்டுமல்ல, பிற்கால வாழ்விலும் அவன், “நான் தனித்தவனும், சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்” (சங். 25:16) என்கின்றான். ஆனால், தாவீது தனிமையை உணர்ந்த போதிலும், கைவிடப்பட்டவனாக தன்னைக் கருதவில்லை. அதனால் அவன், “நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும், உம்மை நம்பியிருக்கிறேன். நான் உமக்குக் காத்திருக்கின்றேன்” (வச. 20-21) எனப் பாடுகின்றான்.

அவ்வப்போது நாமும் தனிமையை எதிர் கொள்கிறோம். இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பை நீ எங்கிருந்து கொண்டாடினாலும், தனிமையிலோ அல்லது கூட்டத்தோடோ, நீ கிறிஸ்து தரும் சந்தோஷத்தோடு கொண்டாடு.

அவர் பிரசன்னம்

பதற்றம் தோய்ந்த முகத்துடன் ஒரு மனிதன் தன் பதின்பருவ மகனுடன், ஆவி உலகைத் தொடர்புகொள்ளும் ஒரு மாந்திரீகன் முன்பாக அமர்ந்திருந்தார். “உங்கள் மகன் எவ்வளவு தூரம் பயணம் செய்யப்போகிறான்?” என்று கேட்டார். “பெரிய நகரத்துக்கு. அவன் திரும்பி வர ரொம்ப நாட்கள் ஆகும்” என்று அந்தத் தந்தை பதில் அளித்தார். தந்தையிடம் ஒரு தாயத்தைக் கொடுத்த அந்த மனிதன், “அவன் போகும் இடமெல்லாம் இது அவனைப் பாதுகாக்கும்” என்று கூறினார்.

நான்தான் அந்த பதின்பருவப் பையன். ஆனால் அந்த மந்திரிக்கும் மனிதரோ, அந்த தாயத்தோ எனக்கு எதுவும் செய்ய முடியவில்லை. நகரத்தில் இருக்கும்போது, நான் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டேன். அந்த தாயத்தைத் தூர எறிந்துவிட்டு, கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டேன். என் வாழ்க்கையில் கிறிஸ்து இருப்பது, எனக்கு தேவனின் பிரசன்னத்தை உறுதிசெய்தது.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, என் சகோதரனை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, இப்போது கிறிஸ்தவ விசுவாசியாகிவிட்ட என் தந்தை, “முதலில் நாம் ஜெபம் செய்வோம். தேவப் பிரசன்னம், நீ போகும் வழி நெடுகிலும் உன்னோடு செல்லும்” என்றார். தேவனின் பிரசன்னமும், அவரது வல்லமையும் மட்டுமே எங்களுக்குப் பாதுகாப்பு என்பதை நாங்கள் கற்றுக்கொண்டிருந்தோம்.

மோசேயும் இதே போன்ற ஒரு போதனையைப் பெற்றார். ஆண்டவர் அவருக்கு ஒரு சவாலான வேலையைக் கொடுத்தார். எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து, தம் ஜனங்களை வெளிவரச் செய்து, தாம் வாக்குக்கொடுத்த கானான் தேசத்துக்கு அவர்களை அழைத்துச் செல்வதே அந்த வேலை (யாத்திராகமம் 3:10). ஆனால் தேவன் “நான் உன்னோடே இருப்பேன்” என்று உறுதி அளித்தார் (வச. 12).

நமது பயணமும் சவால்கள் நிறைந்தது. ஆனால் தேவப் பிரசன்னம் நம்மோடு இருக்கும் என்று நமக்கு உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இயேசு தமது சீஷர்களுக்குச் சொன்னதுபோல, “இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத். 28:20).

வார்த்தைகளுக்கும் அதிகமாக

ஒரு அர்ப்பணிப்பு விழாவில், பிராந்திய ஆப்பிரிக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட வேதாகமத்தின் பிரதி ஒன்று அந்தப் பகுதியின் தலைவருக்கு அளிக்கப்பட்டது. அந்த மொழிபெயர்ப்பு முயற்சியை பாராட்டும் விதமாக, அந்தத் தலைவர் வேதாகமத்தை வானத்திற்கு நேராக உயர்த்தி, “ஆண்டவர் எங்கள் மொழியை புரிந்து கொள்கிறார்! இப்போது எங்கள் தாய் மொழியிலேயே நாங்கள் வேதாகமத்தை வாசிக்கமுடியும்” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

நமது மொழி எதுவாக இருந்தாலும், நம் பரம பிதா அதை புரிந்துகொள்கிறார். ஆனால் பல வேளைகளில் நமது இருதயத்தின் ஆழத்தில் உள்ள ஏக்கங்களை அவரிடம் வெளிப்படுத்த முடிவதில்லை. நாம் என்ன மன நிலையில் இருந்தாலும், ஜெபிக்கும்படி பவுல் நம்மை ஊக்குவிக்கிறார். இந்த உலகத்தின் வேதனைகள் மற்றும் நமது துன்பங்கள் பற்றி “சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்து பிரசவ வேதனைப்படுகிறது” (ரோமர் 8:22) என்கிறார். அதை பரிசுத்த ஆவியானவர் நமக்காக இடைபடுவதோடு ஒப்பிடுகிறார். “ஆவியானவர் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (வச. 26) என்று கூறுகிறார்.

கடவுளின் பரிசுத்த ஆவியானவர் நம்மை முற்றிலும் அறிவார். நமது வாஞ்சைகள், நமது இருதயத்தின் நினைவுகள், நம் மனதில் இருக்கும் வெளிப்படுத்தாத வார்த்தைகள் ஆகிய அனைத்தையும் அவர் அறிவார். நாம் கடவுளோடு பேச அவர் உதவுகிறார். குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக நாம் மாறும்படி, பரிசுத்த ஆவியானவர் நம்மை ஏவுகிறார் (வச. 29).

நமது பரம பிதா நம் மொழியை புரிந்துகொள்கிறார். அவரது வார்த்தையாகிய வேதாகமம் மூலம் நம்மோடு பேசுகிறார். நாம் சிரத்தை இல்லாமலோ, சிறியதாகவோ ஜெபம் செய்யும்போது, பரிசுத்த ஆவியானவர் நம் மூலமாக பிதாவோடு பேசி, நமக்கு உதவுகிறார். ஜெபத்தின்மூலம் நாம் அவரோடு பேச அவர் வாஞ்சையாய் இருக்கிறார்.

பாலங்களைக் கட்டுதல்

எங்கள் குடியிருப்புப் பகுதியில்,வீடுகளைச் சுற்றி, உயரமான காங்க்ரீட் சுவர்கள் காணப்படும். பல சுவர்களின்மேல் மின்சார முள்கம்பிகளும் இருக்கும். திருடர்கள் வருவதைத் தடுப்பதற்காக இவை போடப்பட்டுள்ளன.
 
எங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைபடும். இதனால் பல சமயங்களில் எங்கள் வீட்டின் முன்புறம் உள்ள அழைப்புமணி  வேலை செய்வதில்லை. இதுபோன்ற சமயங்களில், உயரமான சுற்றுச்சுவர் இருப்பதால் எங்களைப் பார்க்க வருபவர்கள் சுட்டெரிக்கும் வெயில் அல்லது கொட்டும் மழையில் வெளியில் நிற்க நேரிடும். அழைப்புமணி வேலை செய்தாலும்,வந்திருப்பவர் யார் என்பதைப் பொறுத்தே அவர்களை உள்ளே அழைப்போம். எங்கள் சுற்றுச்சுவர் திருடர்கள் வராமல் தடுத்தாலும், அவை மற்றவர்களிடம் பாகுபாடு காண்பிக்கும் சுவர்களாக மாறிவிடுகின்றன. பார்க்க வந்திருப்பவர் அத்துமீறி நுழைபவராக இல்லாதபோதும் அந்தச் சுவர்கள் ஒரு தடையாக இருக்கின்றன.
 
இயேசு கிணற்றருகில் சந்தித்த  சமாரியப் பெண்ணுக்கும் பாகுபாடு குறித்த குழப்பம் ஏற்பட்டது. யூதர்களும் சமாரியர்களும் சம்பந்தம் கலப்பதில்லை. எனவே இயேசு தண்ணீர் கேட்டபோது, 'நீர் யூதனாயிருக்க,சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம்?" (யோவான் 4:9) என்றாள். அவள் இயேசுவிடம் பேசியபோது,அவளிடமும்,அவள் அயலாரிடமும் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு அனுபவத்தைப் பெற்றாள் (வச. 39-42). விரோதம், பாரபட்சம் போன்ற தடுப்புச் சுவர்களைத் தகர்க்கும் பாலமாக இயேசு செயல்பட்டார்.
 
வேற்றுமை உணர்வு நம்மிடம் இருப்பது உண்மை. நம் வாழ்வில் அதை அடையாளப்படுத்த வேண்டும். எந்த தேசத்தவர்,அவர் சமூக அந்தஸ்து, புகழ் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல், இயேசு காட்டியதுபோல நாமும் மக்களைச் சந்திக்கலாம். அவர் பாலங்களைக் கட்ட வந்தார்.
 

அவர் நம்மை அறிவார்

என்னுடைய கிராமத்தை அடைய நான் இரவில் 100 மைல்கள் காரை ஓட்டி, பிரயாணம் செய்வதை தேவன் அறிவாரா? நான் இருந்த நிலையை நான் சொல்கின்றேன், என்னுடைய உடல் வெப்பநிலை ஏறிக்கொண்டிருக்கிறது. என் தலைவலிக்கின்றது. நான், “தேவனே நீர் என்னோடிருக்கிறீர் என்பதை நானறிவேன். ஆனால், நான் வேதனையிலிருக்கிறேன்” என ஜெபித்தேன்.

ஒரு சிறிய கிராமத்தினருகிலுள்ள சாலையோரம் என் காரை நிறுத்தினேன். மிகவும் சோர்ந்து பெலமிழந்து காணப்பட்டேன். பத்து நிமிடங்கள் கழித்து, ஒரு குரல் கேட்டது. “உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?” தன்னுடைய தோழர்களோடு, அந்த இடத்திலுள்ள ஒரு மனிதன் வந்திருந்தான். அவர்கள் வந்தது எனக்கு நன்மையாயிருந்தது. அவர்கள் தங்களுடைய கிராமத்தின் பெயரை
“நா மின் யாலா” எனக் கூறினர். “ராஜா என்னைப் பற்றி அறிவார்” என்பதே அதன் பொருள். நான் வியந்தேன். நான் அநேக முறை இந்த சமுதாயத்தினரைக் கடந்து சென்றிருக்கின்றேன். ஒரு முறையும் நின்றதில்லை. ஆனால், இந்த முறை தேவன் அந்தப் பெயரை பயன்படுத்தி, நான் தனிமையில், வேதனையோடு சாலையோரத்தில் நின்றபோது, அந்த ராஜா என்னோடிருந்தார். அந்த மனிதர் என்னை ஊக்கப்படுத்தி, கட்டாயப்படுத்தி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

நாம் எங்கு சென்றாலும், அனுதின வேலையிலிருந்தாலும், நாம் செல்லும் வெவ்வேறு இடங்களையும், சூழ்நிலைகளையும், நாம் எப்படியிருந்தாலும் அதை தேவன் அறிவார் (வச். 139:1-4; 7-12). தேவன் நம்மைக் கைவிடுவதுமில்லை, மறப்பதுமில்லை அல்லது தேவன் அவசரவேலையின் காரணமாக நம்மை நிராகரிப்பதுமில்லை. நாம் துன்பத்திலிருக்கும் போதும் கடினமான சூழலில் அகப்படும் போதும், அது இருளானாலும், இரவானாலும் (வச. 11-12) நாம் அவருடைய பிரசன்னத்தை விட்டு மறைக்கப்படுவதில்லை. இந்த உண்மை நமக்கு நம்பிக்கையையும் உறுதியையும் தருகிறது. நம்மை பிரமிக்கத்தக்க அதிசயமாக உருவாக்கின தேவன், நம் வாழ்நாள் முழுவதும் வழிநடத்துவார் (வச. 14).

விடுதலை செய்யப்பட்டாய்

நான் சிறுவயதில், ஒரு கிராமத்திலிருந்தபோது, கோழிக்குஞ்சுகள் என்னை மிகவும் கவர்ந்தன, எப்பொழுதாகில் நான் ஒரு கோழிக்குஞ்சைப் பிடிக்கும் போது, நான் சிறிது நேரத்திற்கு என் கரத்தில் வைத்திருந்துவிட்டு பின்னர் விட்டுவிடுவேன். நான் விட்டப்பின்னரும், நான் கையில் வைத்திருக்கின்றேன் என்ற நினைப்பில் அந்த கோழிக்குஞ்சு அப்படியே நிற்கும். அது சுதந்திரமாக ஓட முடியும், என்றாலும் அது பிடிபட்டிருப்பதாகவே நினைத்துக்கொள்ளும்.

நாம் நமது நம்பிக்கையை இயேசுவின் மீது வைக்கும் போது, அவர் கிருபையாக நம்மைப் பாவத்திலிருந்தும், சாத்தானின் பிடியிலிருந்தும் விடுவிக்கின்றார். ஆனால், நம்முடைய பாவப்பழக்கங்களிலிருந்தும், நடவடிக்கைகளிலிருந்தும் மாற்றிக்கொள்ள நேரமாகுமென்பதால், நாம் இன்னும் சாத்தானின் பிடியிலிருப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றான். ஆனால், தேவனுடைய ஆவியானவர் நம்மை விடுவித்துவிட்டார். அவர் நம்மை அடிமைப்படுத்துவதில்லை. ரோமாபுரியாருக்கு பவுல் சொல்வதென்னவெனின், “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமால் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே” (ரோம. 8:1-2).

நம்முடைய வேத வாசிப்பு, ஜெபம், பரிசுத்த ஆவியானவரின் வல்லமை ஆகியவற்றின் மூலம் தேவன் செயல்பட்டு நம்மை; சுத்திகரித்து அவருக்காக வாழ உதவுகின்றார். நாம் இன்னமும் விடுதலையாகவில்லை என்ற உணர்வை விட்டுவிட்டு, நாம் தேவனோடு நடக்கின்றோம் என்ற நம்பிக்கையோடிருக்க வேதாகமம் நம்மை ஊக்குவிக்கின்றது.

“ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:36) என்று இயேசு சொல்கின்றார். தேவனுக்குள் நாம் பெற்ற சுதந்திரம் நம்மை தேவனை நேசிக்கவும் அவருக்குச் சேவை செய்யவும் தூண்டுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை.

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார்.

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது? 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார்.

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம்.

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26). 

 

ஒன்றுபட்டு வாழ்வோம்

எனது அமெரிக்கத் தோழி கேரல், 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா வந்தாள். அவள் வருவதற்கு முன்னர், இதன் பல்வேறு கலாச்சாரங்கள், உணவு வகைகள் மற்றும் மொழிகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். இருப்பினும், அவள் பெங்களூருவில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒரு அன்பான சமூகத்தை உருவாக்குவதைக் கண்டு வியந்தாள். தேவன் எப்படி ஜனங்களை ஒன்றிணைத்தார் என்பதை கேரல் பார்த்தாள்.

ஒரு சமூகமாக ஒற்றுமையாக வாழ்வது என்றால் என்ன என்பதை ஆதி விசுவாசிகள் புரிந்துகொண்டனர். லூக்கா, "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்" (வ.42) என்றெழுதினார். அவர்கள் வெவ்வேறு ஊர்கள், நகரங்கள் மற்றும் பின்னணியிலிருந்து வந்தவர்கள், எனினும் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அவர்களின் சமூகத்தை அழகாக்கிய சில விஷயங்களில் ஒன்று அவர்களின் அன்றாட நடவடிக்கைகளாகும். அவர்கள் அப்போஸ்தலரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், ஒருவரோடொருவர் நேரத்தைச் செலவிடுவதற்கும், கர்த்தரின் பந்தியை அனுசரிப்பதற்கும், ஒன்றாக ஜெபிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்திருந்தனர் (வ.42). அவர்கள் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்துகொண்டு, "மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி" எப்போதும் தேவனைத் துதித்தனர் (வ.44-46). இதன் விளைவாக, தேவன் ஒவ்வொரு நாளும் புதிய மக்களை அவர்களின் சமூகத்தில் சேர்த்தார் (வ.47).

இயேசுவின் ஆதி சீடர்கள், ஒரு சமூகத்தின் மாதிரியை நமக்கு வழங்குகிறார்கள். வறுமை, துன்புறுத்தல் மற்றும் மரணத்தின் மத்தியிலும் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு சமூகம் என்றால் என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். சபை ஆராதனைகள் அல்லது ஐக்கிய கூட்டங்களின் போது மட்டுமல்ல, நாம் ஏக கருத்துடையவர்களாய் இருக்கும்போது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் கிறிஸ்துவின் மூலம் ஒன்றுபடுவதற்கு நாமும் அழைக்கப்படுகிறோம். ஏனென்றால், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நமது ஒற்றுமையை நாம் உலகிற்கு சாட்சியிடுகையில், தேவன் நம் அன்பின் சமூகத்தில் புதியவர்களைக் கொண்டுவருவார்.