எங்களுடைய காடுகளடர்ந்த கிராமத்தை இருள் சூழ்ந்தது. நிலாவும் மறைந்தது. வானத்தில் ஆங்காங்கே மின்னல் பளிச்சிட்டது. இடி முழக்கத்தோடு புயலும் மழையும் ஆரம்பித்தது. நான் சிறியவனாக இருந்தபடியால், விழித்துக் கொண்டு பல வகையான பயங்கர பிசாசுகள் என்னை நோக்கிப் பாய்ந்து வருவதைப் போன்று கற்பனை செய்து பயந்தேன். விடிந்த போது அந்தச் சப்தங்கள் எல்லாம் மறைந்துவிட்டன. சூரியன் உதித்தது, அமைதி திரும்பியது. பறவைகள் மகிழ்ச்சியோடு பாட ஆரம்பித்தன. இரவின் பயங்கர இருளுக்கும் பகல் வெளிச்சத்தின் மகிழ்ச்சிக்குமிடையேயுள்ள வேறுபாடு மிகவும் குறிப்பிடத்தக்கதாயிருந்தது.

சீனாய் மலையில் மின்னலையும், இடி முழக்கங்களையும் எக்காள சத்தத்தையும் கேட்டபோது இஸ்ரவேலர் பயந்து பின்வாங்கி மறைந்துகொள்ள முயற்சிக்கின்றனர் (யாத். 20:18-19) அவர்களுக்கு தேவனுடைய பிரசன்னமும், அவருடைய அன்பின் ஈவாகிய நியாயப்பிரமாணமும், பயங்கரமாகவும், கண்களால் காணக் கூடாதபடியும் இருந்தது. ஏனெனில், பாவ மனிதராகிய இஸ்ரவேலர் தேவன் எதிர்பார்த்த நீதியின்படி வாழவில்லை. அவர்களுடைய பாவம் அவர்களை இருளுக்கும் பயத்துக்கும் இழுத்துச் சென்றது (எபி. 12:18-21).

ஆனால், தேவன் ஒளியாயிருக்கிறார். அவரில் எவ்வளவேனும் இருளில்லை (1 யோவா. 1:5). எபிரெயர் 12ல் சீனாய் மலை என்பது தேவனுடைய பரிசுத்தத்தையும், நம்முடைய கீழ்படியாமையின் பழைய வாழ்வையும் குறிக்கின்றது. ஆனால், “சீனாய் மலையின் அழகு புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய” இயேசுவின் கிருபையையும் விசுவாசிகளுக்குத் தரப்படுகின்ற புதிய வாழ்வையும் குறிக்கும்.

இயேசுவைப் பின்பற்றுகின்ற ஒவ்வொருவரும் “இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்” (யோவா. 8:12) அவர் மூலமாக நம்முடைய பழைய வாழ்வின் இருளை அகற்றி, புதிய வாழ்வில், ஒளியில் மகிழ்ச்சியோடு நடந்து அவருடைய இராஜ்;ஜியத்தின் அழகில் மகிழ்ந்து கொண்டாடுவோம்.