எங்கள் குடியிருப்புப் பகுதியில்,வீடுகளைச் சுற்றி, உயரமான காங்க்ரீட் சுவர்கள் காணப்படும். பல சுவர்களின்மேல் மின்சார முள்கம்பிகளும் இருக்கும். திருடர்கள் வருவதைத் தடுப்பதற்காக இவை போடப்பட்டுள்ளன.

எங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைபடும். இதனால் பல சமயங்களில் எங்கள் வீட்டின் முன்புறம் உள்ள அழைப்புமணி  வேலை செய்வதில்லை. இதுபோன்ற சமயங்களில், உயரமான சுற்றுச்சுவர் இருப்பதால் எங்களைப் பார்க்க வருபவர்கள் சுட்டெரிக்கும் வெயில் அல்லது கொட்டும் மழையில் வெளியில் நிற்க நேரிடும். அழைப்புமணி வேலை செய்தாலும்,வந்திருப்பவர் யார் என்பதைப் பொறுத்தே அவர்களை உள்ளே அழைப்போம். எங்கள் சுற்றுச்சுவர் திருடர்கள் வராமல் தடுத்தாலும், அவை மற்றவர்களிடம் பாகுபாடு காண்பிக்கும் சுவர்களாக மாறிவிடுகின்றன. பார்க்க வந்திருப்பவர் அத்துமீறி நுழைபவராக இல்லாதபோதும் அந்தச் சுவர்கள் ஒரு தடையாக இருக்கின்றன.

இயேசு கிணற்றருகில் சந்தித்த  சமாரியப் பெண்ணுக்கும் பாகுபாடு குறித்த குழப்பம் ஏற்பட்டது. யூதர்களும் சமாரியர்களும் சம்பந்தம் கலப்பதில்லை. எனவே இயேசு தண்ணீர் கேட்டபோது, ‘நீர் யூதனாயிருக்க,சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம்?” (யோவான் 4:9) என்றாள். அவள் இயேசுவிடம் பேசியபோது,அவளிடமும்,அவள் அயலாரிடமும் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு அனுபவத்தைப் பெற்றாள் (வச. 39-42). விரோதம், பாரபட்சம் போன்ற தடுப்புச் சுவர்களைத் தகர்க்கும் பாலமாக இயேசு செயல்பட்டார்.

வேற்றுமை உணர்வு நம்மிடம் இருப்பது உண்மை. நம் வாழ்வில் அதை அடையாளப்படுத்த வேண்டும். எந்த தேசத்தவர்,அவர் சமூக அந்தஸ்து, புகழ் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல், இயேசு காட்டியதுபோல நாமும் மக்களைச் சந்திக்கலாம். அவர் பாலங்களைக் கட்ட வந்தார்.