Archives: அக்டோபர் 2018

இருளில் நம்பிக்கை

சண்டையிடும் மாகாணங்கள் காலம் (கி மு 475-246) என்று அறியப்பட்ட காலக்கட்டத்தில் கு யுவான் என்ற விவேகமான, நாட்டுப்பற்றுள்ள சீன அரசு அதிகாரி வாழ்ந்தார் என்ற மரபுக்கதை ஒன்று உண்டு. நாட்டை அழிக்கக்கூடிய ஒரு ஆபத்து நெருங்கி வருவதாக அவர் அரசருக்கு அநேக முறை எடுத்துகூற முயன்றும், அரசர் அவர் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் கு யுவான் நாடு கடத்தப்பட்டார். தான் எந்த எதிரி குறித்து எச்சரித்தாரோ அந்த எதிரியால் தன் அன்புக்குரிய நாடு அழிந்தது என்று அறிந்தபோது, தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

சில விஷயங்களில் கு யுவானின் வாழ்க்கை எரேமியாவின் வாழ்க்கையை ஒத்திருக்கிறது. அவரது எச்சரிக்கையை ஏளனம் செய்த அரசர்களை அவரும் சேவித்தார். அவர் நாடும் சூறையாடப்பட்டது. ஆனால் கு யுவான் நம்பிக்கை இழந்துபோனார், எரேமியாவோ உண்மையான நம்பிக்கை கொண்டார். ஏன் இந்த வித்தியாசம்?

உண்மையான நம்பிக்கை அளிக்கும் ஆண்டவரை எரேமியா அறிந்திருந்தார். “உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பி வருவார்கள்” என்று கடவுள் அந்த தீர்க்கதரிசிக்கு உறுதியளித்தார். கி மு 586ல் எருசலேம் அழிக்கப்பட்டாலும், அது பின்னர் மீண்டும் கட்டப்பட்டது (நெகேமியா 6:15 பார்க்க).

நம்பிக்கை இழக்கவைக்கும் சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரலாம். அது மோசமான தகவலைத் தரும் மருத்துவ ஆய்வு அறிக்கையாகவோ, பறிபோன வேலையாகவோ, சிதைந்துபோன குடும்பமாகவோ இருக்கலாம். ஆனால் வாழ்க்கை நம்மை கீழே தள்ளும்போதும், நாம் நிமிர்ந்து பார்க்கமுடியும் – ஏனென்றால் கடவுள் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்! நம்முடைய நாட்கள் அவர் கைகளில் இருக்கிறது. நம்மை அவர் இருதயத்திற்கு அருகில் வைத்திருக்கிறார்.

வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுதல்

வேதாகமத்தை வெவ்வேறு விதமாக விளக்கம் அளிப்பதால் ஏற்படும் முடிவில்லாத விவாதங்களில் பங்கேற்காமல் வெளியேறுவது எவ்வளவு கடினமானது என்று என் தந்தை கூறக்கேட்டிருக்கிறேன். அதே சமயம், இரண்டு தரப்பினரும் அவர்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது நன்றாக இருக்கும் என்றார்.

ஆனால் சமரசமடையாத வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பது சாத்தியமா? புதிய ஏற்பாட்டில், பவுல் ரோமருக்கு எழுதும் கடிதத்தில் இதற்கான பதிலைத் தருகிறார். சமூக, அரசியல், மத பிணக்கங்களில் சிக்கியிருந்த வாசகர்களுக்கு எழுதும்போது, எதிர் எதிர் நிலைமையில் உள்ளவர்கள்கூட எப்படி ஒரு பொதுவான தளத்தில் சேரலாம் என்று பரிந்துரை செய்கிறார் (14:5-6).

கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது குறித்து, நம்முடைய கருத்துக்களுக்காகவும், நம்முடைய வேறுபாடுகளில்  நாம் ஒருவரை ஒருவர் எப்படி நடத்துகிறோம் என்பதற்காகவும், நாம் கடவுளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார் (வச. 10).

நம்முடைய கருத்துக்களைவிட முக்கியமான விஷயங்கள் – நம்முடைய வேதாகம விளக்கங்களையும்விட – உண்டு என்பதை நாம் நினைவுகூர பிணக்கங்கள் உதவும். கிறிஸ்து நம்மை நேசித்ததைப்போல நாம் ஒருவரை ஒருவர் நேசித்தோமா, நம்முடைய எதிரிகளையும்கூட நேசித்தோமா என்று நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.

இப்போது யோசித்துப் பார்த்தால்,  இரண்டு தரப்பினரும், பரஸ்பர அன்பு மற்றும் மரியாதையோடு, அவர்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது நன்றாக இருக்கும் என்று என் தந்தை கூறியது நினைவுக்கு வருகிறது.

நன்றி மனப்பான்மையைப் பற்றிகொளல்

தீராத வலி, நடக்க முடியாமல் பட்ட கஷ்டம் ஆகியவற்றால், பல ஆண்டுகளாக நான் அடக்கி வைத்திருந்த சலிப்பும், விரக்தியும் வெளிவரத் தொடங்கின. என்னுடைய அதிருப்தியின் காரணமாக அதிகமாக அதிகாரம் செய்பவளாக, நன்றி இல்லாதவளாக மாறினேன். என்னுடைய கணவர் என்னை நன்றாக கவனித்துக்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினேன். அவர் வீட்டை சுத்தம் செய்தது சரியில்லை என்று குறை சொன்னேன். அவர் மிக அருமையாக சமைப்பார் என்றாலும், வித விதமாக சமைக்கவில்லை என்று புலம்பினேன். நான் அதிருப்தியாக இருப்பது அவரை அதிகமாக காயப்படுத்துகிறது என்று அவர் சொன்னபோது, நான் கோபம் கொண்டேன். நான் படும் அவஸ்தை அவருக்குப் புரியவில்லை. ஆனால் கடைசியில் கடவுள் என் தவறுகளை எனக்குப் புரியவைத்தார். நான் கடவுளிடமும், என் கணவரிடமும் மன்னிப்புக் கேட்டேன்.

வித்தியாசமான சூழலுக்காக ஏங்குவது, குறைசொல்லும் குணத்தை அல்லது, உறவுகளை சிதைக்கும் சுயநலத்தை நம்மில் ஏற்படுத்தும். இஸ்ரவேலர்களுக்கு இந்தத் தடுமாற்றம் பரிச்சயமான ஒன்று. அவர்கள் எப்போதும் திருப்தி அடையாமல், கடவுள் கொடுத்ததைக்குறித்து முறுமுறுத்தார்கள் (யாத்திராகமம் 17:1-3). கடவுள் “வானத்திலிருந்து அப்பம்” (16:4) வருஷிக்கப்பண்ணி, தம் ஜனங்களை போஷித்தாலும், அவர்கள் மற்ற உணவுகளுக்காக ஏங்க ஆரம்பித்தார்கள் (எண்ணாகமம் 11:4). கர்த்தரின் அன்பையும், பராமரிப்பையும் வெளிப்படுத்தும் அன்றாட அற்புதங்களைக் குறித்து சந்தோஷப்படாமல், இஸ்ரவேலர்கள் இன்னும் அதிகமாக, நல்லதாக, வித்தியாசமானதாக, தாங்கள் முன்னே சாப்பிட்டதுகூட (வச. 4-6) வேண்டும் என்றார்கள். தங்களுடைய விரக்தியை அவர்கள் மோசேயிடம் காண்பித்தார்கள் (வச. 10-14).

கர்த்தரின் நற்குணத்தையும், விசுவாசத்தையும் நம்புவது, நமக்கு நன்றி மனப்பான்மையைத் தரும். எண்ணற்ற வழிகளில் நம் மேல் அக்கறை காட்டி, நம்மை பாரமரிப்பதற்காக அவருக்கு நாம் இன்று நன்றி சொல்வோம்.

என் சித்தம் அல்ல, உம் சித்தம்

கமில், ஜோயெல் தம்பதியின் எட்டு வயது மகள் ரீமா ஒரு அரிய வகை இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்தபோது அவர்கள் உள்ளம் உடைந்துபோனார்கள். இந்த புற்றுநோயின் காரணமாக, ரீமாவுக்கு மூளைக்காய்ச்சல் வந்து, பின்னர் பக்கவாதம் வந்து, இறுதியில் கோமா என்ற ஆழ்மயக்க நிலைக்குச் சென்றாள். மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழு, அவள் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி, அவள் பிழைப்பதற்கான சாத்தியம் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவு என்று சொல்லி, ரீமாவின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார்கள்.

கமிலும், ஜோயெலும் ஒரு அற்புதத்திற்காக உபவாசம் இருந்து ஜெபம் செய்தார்கள். “முடிவு எதுவாக இருந்தாலும், நாம் கடவுள்மேல் நம்பிக்கை கொள்ளவேண்டும். மேலும் ‘என் சித்தமல்ல, உம் சித்தம்’ என்று இயேசுவைப்போல ஜெபிக்கவேண்டும்” என்று கமில் சொன்னார். “ஆனால் கடவுள் அவளை சுகப்படுத்த வேண்டும் என்றே நான் மிகவும் வாஞ்சிக்கிறேன்” என்று ஜோயெல் கூறினார். “ஆம்! நாம் கேட்போம். ஆனால் இயேசு செய்ததுபோல, நம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுப்பது மிகவும் கடினம் என்றாலும், அப்படிச் செய்வதே கடவுளை கனம்பண்ணுவதாகும்” என்று கமில் கூறினார்.

சிலுவையில் அறையப்படும் முன், “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்” (லூக்கா 22:42). “இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்” என்று ஜெபித்ததால், சிலுவையில் அறையப்பட வேண்டாம் என்றார்; ஆனால் பிதாவின்மேல் உள்ள அன்பின் காரணமாக, பிதாவின் சித்தத்துக்கு தன்னை ஒப்புவித்தார்.

நம்முடைய ஆசைகளை கடவுளிடம் ஒப்புவிப்பது எளிதல்ல. கஷ்டமான தருணங்களில், அவருடைய ஞானத்தை புரிந்துகொள்வதும் எளிதல்ல. கமில், ஜோயெல் தம்பதியின் ஜெபத்திற்கு மிகவும் விசேஷித்த வகையில் பதில் கிடைத்தது. ரீமா இன்று ஆரோக்கியமான 15 வயது பெண்ணாக இருக்கிறாள்.

கடவுள் நம்முடைய ஒவ்வொரு கஷ்டத்தையும் புரிந்துகொள்கிறார். அவருடைய வேண்டுதல் நமக்காக கேட்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு தேவையின்போதும், எப்படி கடவுள்மேல் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று நமக்குக் காண்பித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தலைமுறை தலைமுறையாய்

டெக்சாஸைச் சேர்ந்த இரண்டு பாட்டிமார்கள், எண்பத்தொரு வயதில் எண்பது நாட்களில் உலகம் முழுவதும் ஒரு சுற்றுப்பயணத்தை முடித்ததற்காக சமீபத்தில் ஊடகங்களில் பரபரப்பானார்கள். இருபத்தி மூன்று வருடங்களாக உலகை சுற்றிய இந்த சிறந்த நண்பர்கள் ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்தனர். அவர்கள் அண்டார்டிகாவில் தொடங்கி, அர்ஜென்டினாவில் டேங்கோ, எகிப்தில் ஒட்டகங்களில் சவாரி, வட துருவத்தில் சறுக்கி ஓடும் சவாரி என்று பல அனுபவங்களை மேற்கொண்டனர். ஜாம்பியா, இந்தியா, நேபாளம், பாலி, ஜப்பான், ரோம் உள்ளிட்ட பதினெட்டு நாடுகளுக்குச் சென்று ஆஸ்திரேலியாவில் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டனர். இருவரும் தங்கள் வயதைப் பொருட்படுத்தாமல், எதிர்கால சந்ததியினரை உலகப் பயணத்தை அனுபவிக்கத் தூண்டுவதாக நம்புவதாகக் கூறினார்கள்.

யாத்திராகமத்தில், வாழ்நாள் முழுவதும் வெவ்வேறு வகையான சாகசத்திற்காக தேவனால் சேர்த்துக்கொள்ளப்பட்ட இரண்டு ஆக்டோஜெனேரியன்களைப் பற்றி வாசிக்கிறோம். தேவன் மோசேயை பார்வோனிடம் சென்று, தேவனுடைய ஜனத்தை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கக் கட்டளை கொடுத்தாா். மோசேக்கு துணையாக தேவன் அவனுடைய சகோதரனாகிய ஆரோனை துணைக்கு அனுப்புகிறார். “அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது” (யாத்திராகமம் 7:7).

இந்தக் கோரிக்கை எந்த வயதிலும் பயமுறுத்துவதாக உணரலாம். ஆனால் தேவன் இந்தச் சகோதரர்களை இந்தப் பணிக்காகத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றினார்கள். “மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள்” (வச. 10). நானூறு ஆண்டுகளுக்கும் மேலான அடிமைத்தனத்திலிருந்து தேவன் தம் மக்களை விடுவித்ததைக் கண்ட பெருமையை மோசேயும் ஆரோனும் பெற்றனர். எந்த வயதிலும் அவர் நம்மைப் பயன்படுத்த முடியும் என்பதை இந்த மனிதர்கள் நிரூபிக்கின்றனர். நாம் இளைஞராக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி, அவர் எங்கு சென்றாலும் அவரைப் பின்பற்றுவோம். 

 

கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, மெதடிஸ்ட் பாடல் புத்தகத்தில் முதலாவதாக வைக்கப்பட்ட பாடல் சார்லஸ் வெஸ்லியால் எழுதப்பட்ட “ஓ ஆயிரம் நாவுகள் பாடுவதற்கு” என்ற பாடலே. “ஒருவருடைய மனந்திரும்புதலின் ஆண்டுவிழா” என்றே அப்பாடல் முதலாவது தலைப்பிடப்பட்டிருந்தது. இயேசுவின் மீதான அவரது நம்பிக்கையால் தூண்டப்பட்ட தீவிரமான புதுப்பித்தலை நினைவுகூரும் வகையில் இந்த பாடல் இயற்றப்பட்டது. மனந்திரும்பி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு தேவனுடைய குணாதிசங்களின் மகிமையைப் பறைசாற்றும் பதினெட்டு வரிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அத்தகைய நம்பிக்கை கொண்டாடத் தகுந்தது; பகிர்ந்து கொள்ளத்தக்கது. 2 தீமோத்தேயு 2ல், பவுல் தீமோத்தேயுவை தனது விசுவாசத்தில் உறுதியாக இருக்கவும், அதைப் பகிர்ந்து கொள்வதில் விடாமுயற்சியுடன் இருக்கவும் ஊக்குவிக்கிறார். மேலும், “இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்” (வச. 8-9) என்று குறிப்பிடுகிறார். அவருடைய தெரிவுகளை இரண்டாவதாக யூகிப்பதற்குப் பதிலாக, பவுல் தீமோத்தேயுவுக்கு “தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்” (வச. 8) என்று சுவிசேஷத்தை நினைப்பூட்டுகிறார். அவர் ஆளுகை செய்வதற்காக அல்ல, ஊழியம் செய்வதற்காகவே வந்தார்; நாம் சமாதானமாய் இருக்கும்பொருட்டு உலகத்தின் பாவங்களுக்காய் அவர் மரித்தார். மரணம் ஜெயங்கொள்ளவில்லை. இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

மேலும் அது நம்பிக்கை கொண்டவர்களை விடுதலையை பெறுவது போல், அதின் செய்தியும் கட்டுப்பட்டு இருக்கவில்லை. சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், கல்லறைகள் போன்று மரணம் தன் ஆளுகையை செயல்படுத்தும் இடங்களில் கூட, “தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை” (வச. 9) என்று பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் அனைவருக்கும் நம்பிக்கை துளிர்விடுகிறது. அந்த செய்தி கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி! 

 

ஜெபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது

“நான் ஐம்பது ஆண்டுகளாக உங்களுக்காக ஜெபம் செய்கிறேன்,” என்று வயதான பெண் ஒருவர் கூறினார். என் நண்பன் லூ அவருடைய கண்களை ஆழ்ந்த நன்றியுடன் பார்த்தான். அவன் ஒரு இளைஞனாய் தனது தந்தை வளர்ந்த பல்கேரிய கிராமத்திற்குச் சென்றிருந்தான். இயேசுவின் விசுவாசியான அந்தப் பெண், அவருடைய தாத்தா பாட்டியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். ஒரு கண்டத்திற்கு அப்பால் தொலைவில் லூவின் பிறப்பைக் கேள்விப்பட்ட உடனேயே அவள் லூவுக்காக ஜெபிக்க ஆரம்பித்தாள். இப்போது, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, அவர் ஒரு வணிகப் பயணமாக கிராமத்திற்குச் சென்றிருந்தான். அங்கு அவன் தனது நம்பிக்கையைப் பற்றி ஒரு குழுவிடம் பேசினான். ஏறக்குறைய முப்பது வயது வரை லூ இயேசுவின் விசுவாசியாக மாறவில்லை. இந்த வயதான தாயார் அவனை அணுகியபோது, அவன் இரட்சிக்கப்படுவதற்கு அவரது தொடர்ச்சியான ஜெபங்கள் அவன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அவன் ஆச்சரியப்பட்டான்.

பரலோகத்தின் இந்தப் பக்கத்தில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்களின் முழு விளைவை நாம் ஒருபோதும் அறிய மாட்டோம். ஆனால் வேதம் நமக்கு இந்த அறிவுரையை அளிக்கிறது: “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோசெயர் 4:2). கொலோசே என்ற சிறிய பட்டணத்தில் உள்ள விசுவாசிகளுக்கு பவுல் இந்த வார்த்தைகளை எழுதியபோது, அவர் எங்கு சென்றாலும் தேவன் தனது செய்திக்காக வாசலை திறந்தருளும்படிக்கு (வச. 4) ஜெபிக்கும்படியாய் கேட்கிறார்.

சில நேரங்களில் நாம் நினைக்கலாம், ஜெபம் என்ற ஆவிக்குரிய வரம் என்னிடம் இல்லை. ஆனால் வேதாகமத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவிக்குரிய வரங்களிலும் ஜெபம் இடம்பெறவில்லை. ஒருவேளை இதற்குக் காரணம், தேவன் கிரியை நடப்பிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் உண்மையாக ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.