Archives: ஆகஸ்ட் 2018

உதவிக்கோர் அழைப்பு

2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட மின் தூக்கி (LIFT) விபத்தில் ஐந்து பேர் மரணமடைந்தனர், ஐம்பத்தொன்று பேர் காயமடைந்தனர். நியூயார்க் பட்டணத்தில் ஒரு பிரச்சாரத்தைக் குறித்து விளம்பரம் பண்ணப்பட்டது. ஏதோவொரு மோசமான விளைவு ஏற்படும் போது, மக்கள் எவ்வாறு அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தனர். ஏதோவொரு தவறு ஏற்படும் போது மக்கள் தங்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் போதுதான் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. மிகச் சிறந்த செயல் என்னவெனில் “தெரிவி, அமைதியாகக் காத்திரு” என்பதே அதிகாரிகளின் ஆலோசனை. மக்களை காயத்திலிருந்தும், அவர்களின் இக்கட்டிலிருந்தும் உடனடியாக விடுவிக்க, நியூயார்க் நகர கட்டட அதிகாரிகள் அர்ப்பணிப்போடு செயல்படுவர்.

அப்போஸ்தலர் புத்தகத்தில் பேதுரு, நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதைப் பற்றி பிரசங்கம் செய்கின்றார். இப்புத்தகத்தை எழுதிய லூக்கா சில முக்கியமான நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றார். அதில் இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் தங்களுக்குத் தெரியாத பாஷைகளில் பேசுவதைக் குறிப்பிடுகின்றார் (அப். 2:1-2) பேதுரு எழுந்து தன்னுடைய யூத சகோதர, சகோதரிகளுக்கு அதனை விளக்குகின்றார். அவர்கள் காண்பது முந்நாளில் உரைக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேறல் என்பதை விளக்குகின்றார் (யோவேல் 2:28-32) பரிசுத்த ஆவி ஊற்றப்படுவதையும், இரட்சிப்பின் நாளையும் சுட்டிக் காண்பிக்கின்றார். பாவத்திலிருந்தும், அதன் விளைவுகளிலிருந்தும் தங்களை விடுவிக்குமாறு இயேசுவை நோக்கிக் கூப்பிட்டபோது, பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதம் ஊற்றப்பட்டதை அவர்கள் கண்ணாரக் கண்டார்கள். அப்பொழுது பேதுரு கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவர்களுக்கும் அவரை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் இந்த இரட்சிப்பு கொடுக்கப்படும் என விளக்குகின்றார் (அப். 2:21) இவ்வாறு நாம் தேவனண்டை கிட்டிச் சேர்வது நாம் சட்டங்களைக் கைக்கொண்டதால் கிடைத்ததல்ல, இயேசுவை ஆண்டவர், மேசியா என ஏற்றுக் கொண்டதாலேயே கிடைத்தது.

நாம் பாவத்தில் சிக்குண்டிருந்தால் நம்மால் நம்மை விடுவித்துக் கொள்ள முடியாது. நாம் விடுதலை பெற ஒரே நம்பிக்கையென்னவெனில், இயேசுவே நமது தேவனும் மேசியாவுமானவர் என ஏற்றுக் கொள்வதேயாகும்.

கற்பாறையின் மேல் கட்டப்பட்ட வீடு

பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற தன்னுடைய வீட்டின் முன்னறை இறங்கிக் கொண்டிருக்கின்றது, சுவரில் வெடிப்புகள் தோன்றியுள்ளன, அவ்வறையின் ஜன்னல் திறக்க முடியாததாகிவிட்டது என என்னுடைய நண்பன் கூறினான். இந்த அறை அஸ்திபாரமிடாமல் சேர்க்கப்பட்ட அறையென பின்னர் தெரிந்துகொண்டோம். இந்த கீழ்த்தரமான வேலையை சரி செய்வதற்கு, கட்டுமானர் பல மாதங்கள் வேலை செய்து ஒரு புதிய அஸ்திபாரத்தைப் போட்டார்.

அவர்கள் அந்த வேலையை முடித்த பின்னர், நான் அதைப் பார்வையிட்ட போது சுவரிலிருந்த வெடிப்பு மறைந்து, ஜன்னல் திறக்கக்கூடியதாக இருந்தது. மற்றபடி எந்த ஒரு மாறுபாட்டையும் நான் அதில் காண முடியவில்லை. ஆனால், ஓர் உறுதியான அஸ்திபாரம் போடப்பட்டுள்ளது என்பதை உணர முடிந்தது.

இந்த உண்மை நம் வாழ்க்கைக்கும் பொருத்தமானது.

இயேசு தன்னுடைய உபதேசத்திற்குச் செவி கொடுக்காததின் விளைவை விளக்க, ஒரு புத்திசாலியும் ஒரு முட்டாளும் ஆகிய இரு கட்டுமானர்களைப் பற்றிய உவமையைச் சொல்கின்றார் (லூக். 6:46-49). இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதை அப்படியே விட்டு விடுகிறவர்களைப் போலல்லாமல், இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவி கொடுத்துக் கீழ்ப்படிகிறவன் கற்பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டின மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான். புயல் காற்று வீசிய பொதும் அந்த வீட்டை அசைக்கக் கூடாமற் போயிற்று. அப்படியே அவர்களுடைய விசுவாசமும் எந்நிலையிலும் அசைக்கப்படுவதில்லை.

இயேசுவின் வார்த்தைகளை கவனித்து, கீழ்படிந்தால் மெய்யான சமாதானத்தைப் பெற்றுக் கொள்வோம். அவர் நம் வாழ்விற்கு ஓர் உறுதியான அஸ்திபாரமாயிருக்கிறார். வேத வசனங்களை வாசிப்பதன் மூலமும், ஜெபத்தின் வழியாகவும், பிற கிறிஸ்தவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதன் மூலமாயும் அவர் மீதுள்ள நமது அன்பை உறுதிப்படுத்துவோம். பெருவெள்ளம் போல நீரோட்டம் நம் வீட்டின் மீது மோதினாலும், நாம் காட்டிக் கொடுக்கப்படுவதாலோ, வேதனையாலோ அல்லது ஏமாற்றத்தாலோ எதுவாயினும் நம்முடைய உறுதியான அஸ்திபாரத்தை அசைக்க முடியாது என்ற நம்பிக்கையோடிருப்போம். நமது இரட்சகர் நமக்குத் தேவையான ஆதரவைத் தருவார்.

நீ என்னை நேசிக்கிறாயா?

நான் வாலிபனாக இருந்தபோது, என் தாயார் என்னை அதிகாரப்படுத்துவதை முற்றிலும் எதிர்ப்பவனாகக் காணப்பட்டேன். நான் பெரியவனாகும் முன்பே என் தந்தை மரித்துப் போனார். எனவே என் தாயார், கொந்தளிக்கும் அலைகளின் ஊடே வாழ்க்கைப் படகை செலுத்தும் பொறுப்பை முழுவதுமாக ஏற்க வேண்டியதாயிற்று.

நான் நினைவுபடுத்திப் பார்க்கும் போது, என் தாயார் என்னை எந்த பொழுதுபோக்கிற்கும் அனுமதித்ததேயில்லை, என்னை நேசித்ததுமில்லையென்றே கருதுவேன். ஏனெனில், நான் எதைக் கேட்டாலும் அவளுடைய பதில் இல்லை என்றேயிருக்கும். அவர்கள் என்னை அதிகம் நேசித்தபடியால், எனக்கு நல்லதல்லவெனக் கருதியவற்றைத்தான் தடுத்திருக்கிறார்களென இப்பொழுது எனக்குப் புரிகிறது.

பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு போன இஸ்ரவேலர், தேவன் அவர்களை எவ்வளவு நேசிக்கிறாரென கேள்வி கேட்கின்றனர். அவர்கள் தொடர்ந்து தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்தபடியால், அவர்களைத் திருத்தும்படி, அவர்களைத் தேவன் சிறைப்படுத்தினார். இப்பொழுது தேவன் அவர்களிடம் மல்கியா தீர்க்கதரிசியை அனுப்புகின்றார். அவர் மூலம் தேவன் தரும் முதல் வார்த்தையே, “நான் உங்களைச் சிநேகித்தேன்” என்பது தேவன் தங்களை எப்படிச் சிநேகித்தார் என இஸ்ரவேலர் சந்தேகத்தோடு கேட்கின்றனர். “உண்மையாகவா?” என்கின்றனர். மல்கியாவைக் கொண்டு தேவன் தன்னுடைய அன்பை விளங்கச் செய்கின்றார். தேவன் இஸ்ரவேலரை, ஏதோமியரைக் காட்டிலும் தேர்ந்து கொண்டார் எனச் சொல்கின்றார்.

நாம் அனைவருமே வாழ்வில் கஷ்டமான காலங்களைக் கடந்து செல்வோம். அப்படிப்பட்ட காலங்களில் நமக்கும் தேவன் நம்மை நேசிக்கின்றாரா என கேட்கத் தோன்றும். வேறுபட்ட வகைகளில் தேவன் தன்னுடைய மாறாத அன்பை நமக்குக் காட்டியதை நினைத்துப் பர்ப்போம். அவருடைய நன்மைகளை நாம் நினைக்க மறந்த போதும், அவர் நம்மை நேசிக்கின்ற தந்தையாகவேயுள்ளார்.

நம்பிக்கையோடிருக்கக் கற்றுக்கொள்ளல்

நான் வாலிபனாக இருந்த போது, என்னுடைய தாயார் நான் விசுவாசத்தில் வளர வேண்டுமென என்னை ஊக்கப்படுத்துவார்கள். “தேவனை நம்பு, அவர் உன்னைக் கவனித்துக் கொள்வார்” என என்னுடைய தாயார் சொல்வதுண்டு. “அது அத்தனை எளிதானதல்ல, அம்மா!” என நான் கத்துவேன். “முயற்சி செய்பவர்களுக்குத்தான் தேவன் உதவுவார்” என்பேன்.

ஆனால், “முயற்சி செய்பவர்களுக்குத்தான் தேவன் உதவுவார்” என்று வேதாகமத்தில் எங்குமே காணப்படவில்லை. நம்முடைய அனுதின தேவைகளுக்கும் தேவனையே சார்ந்து வாழும்படி தேவனுடைய வார்த்தைகள் சொல்கின்றன. “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களல்லவா? (மத். 6:26-27) என இயேசு சொல்கின்றார்.

நாம் அநுபவிக்கின்ற யாவும், நம் வாழ்க்கையில் சம்பாதிப்பதற்குத் தேவையான பெலனும், நம்முடைய முயற்சிகள் யாவும் நம்மை நேசித்து, நம்முடைய தகுதிக்கும் மேலாக நம்மை கனப்படுத்துகின்ற நம்முடைய பரலோகத் தந்தையின் கொடைகளாகும்.

என்னுடைய தாயார் தங்களுடைய வாழ்வின் இறுதியையடைந்த போது ‘அல்சைமர்’ என்ற நோயால் தாக்கப்பட்டு தன்னுடைய நியாபகச்சக்தியையும், சிந்திக்கிற திறனையும் இழந்தார்கள். ஆனால் தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கைமட்டும் குறையவில்லை. அவர்கள் எங்கள் வீட்டிலிருந்த நாட்களில், தேவன் அவர்களுடைய தேவைகளையெல்லாம் எதிர்பாராத விதமாகச் சந்தித்ததையும், அதனால் அவள் வாழ்க்கையில் கொண்டிருந்த நம்பிக்கை சரியானதே என்பதைக் காணும் சந்தர்ப்பம் பெற்றேன். கவலைப்படுவதற்குப் பதிலாக அவர் தன்னை தேவனுடைய பாதுகாப்பில் வைத்துவிட்டார். தேவன் அவர்களுக்கு உண்மையுள்ளவராகவே இருந்தார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?

 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).