Archives: ஆகஸ்ட் 2018

உதவிக்கோர் அழைப்பு

2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட மின் தூக்கி (LIFT) விபத்தில் ஐந்து பேர் மரணமடைந்தனர், ஐம்பத்தொன்று பேர் காயமடைந்தனர். நியூயார்க் பட்டணத்தில் ஒரு பிரச்சாரத்தைக் குறித்து விளம்பரம் பண்ணப்பட்டது. ஏதோவொரு மோசமான விளைவு ஏற்படும் போது, மக்கள் எவ்வாறு அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தனர். ஏதோவொரு தவறு ஏற்படும் போது மக்கள் தங்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் போதுதான் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. மிகச் சிறந்த செயல் என்னவெனில் “தெரிவி, அமைதியாகக் காத்திரு” என்பதே அதிகாரிகளின் ஆலோசனை. மக்களை காயத்திலிருந்தும், அவர்களின் இக்கட்டிலிருந்தும் உடனடியாக விடுவிக்க, நியூயார்க் நகர கட்டட அதிகாரிகள் அர்ப்பணிப்போடு செயல்படுவர்.

அப்போஸ்தலர் புத்தகத்தில் பேதுரு, நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதைப் பற்றி பிரசங்கம் செய்கின்றார். இப்புத்தகத்தை எழுதிய லூக்கா சில முக்கியமான நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றார். அதில் இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் தங்களுக்குத் தெரியாத பாஷைகளில் பேசுவதைக் குறிப்பிடுகின்றார் (அப். 2:1-2) பேதுரு எழுந்து தன்னுடைய யூத சகோதர, சகோதரிகளுக்கு அதனை விளக்குகின்றார். அவர்கள் காண்பது முந்நாளில் உரைக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேறல் என்பதை விளக்குகின்றார் (யோவேல் 2:28-32) பரிசுத்த ஆவி ஊற்றப்படுவதையும், இரட்சிப்பின் நாளையும் சுட்டிக் காண்பிக்கின்றார். பாவத்திலிருந்தும், அதன் விளைவுகளிலிருந்தும் தங்களை விடுவிக்குமாறு இயேசுவை நோக்கிக் கூப்பிட்டபோது, பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதம் ஊற்றப்பட்டதை அவர்கள் கண்ணாரக் கண்டார்கள். அப்பொழுது பேதுரு கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவர்களுக்கும் அவரை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் இந்த இரட்சிப்பு கொடுக்கப்படும் என விளக்குகின்றார் (அப். 2:21) இவ்வாறு நாம் தேவனண்டை கிட்டிச் சேர்வது நாம் சட்டங்களைக் கைக்கொண்டதால் கிடைத்ததல்ல, இயேசுவை ஆண்டவர், மேசியா என ஏற்றுக் கொண்டதாலேயே கிடைத்தது.

நாம் பாவத்தில் சிக்குண்டிருந்தால் நம்மால் நம்மை விடுவித்துக் கொள்ள முடியாது. நாம் விடுதலை பெற ஒரே நம்பிக்கையென்னவெனில், இயேசுவே நமது தேவனும் மேசியாவுமானவர் என ஏற்றுக் கொள்வதேயாகும்.

கற்பாறையின் மேல் கட்டப்பட்ட வீடு

பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற தன்னுடைய வீட்டின் முன்னறை இறங்கிக் கொண்டிருக்கின்றது, சுவரில் வெடிப்புகள் தோன்றியுள்ளன, அவ்வறையின் ஜன்னல் திறக்க முடியாததாகிவிட்டது என என்னுடைய நண்பன் கூறினான். இந்த அறை அஸ்திபாரமிடாமல் சேர்க்கப்பட்ட அறையென பின்னர் தெரிந்துகொண்டோம். இந்த கீழ்த்தரமான வேலையை சரி செய்வதற்கு, கட்டுமானர் பல மாதங்கள் வேலை செய்து ஒரு புதிய அஸ்திபாரத்தைப் போட்டார்.

அவர்கள் அந்த வேலையை முடித்த பின்னர், நான் அதைப் பார்வையிட்ட போது சுவரிலிருந்த வெடிப்பு மறைந்து, ஜன்னல் திறக்கக்கூடியதாக இருந்தது. மற்றபடி எந்த ஒரு மாறுபாட்டையும் நான் அதில் காண முடியவில்லை. ஆனால், ஓர் உறுதியான அஸ்திபாரம் போடப்பட்டுள்ளது என்பதை உணர முடிந்தது.

இந்த உண்மை நம் வாழ்க்கைக்கும் பொருத்தமானது.

இயேசு தன்னுடைய உபதேசத்திற்குச் செவி கொடுக்காததின் விளைவை விளக்க, ஒரு புத்திசாலியும் ஒரு முட்டாளும் ஆகிய இரு கட்டுமானர்களைப் பற்றிய உவமையைச் சொல்கின்றார் (லூக். 6:46-49). இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதை அப்படியே விட்டு விடுகிறவர்களைப் போலல்லாமல், இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவி கொடுத்துக் கீழ்ப்படிகிறவன் கற்பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டின மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான். புயல் காற்று வீசிய பொதும் அந்த வீட்டை அசைக்கக் கூடாமற் போயிற்று. அப்படியே அவர்களுடைய விசுவாசமும் எந்நிலையிலும் அசைக்கப்படுவதில்லை.

இயேசுவின் வார்த்தைகளை கவனித்து, கீழ்படிந்தால் மெய்யான சமாதானத்தைப் பெற்றுக் கொள்வோம். அவர் நம் வாழ்விற்கு ஓர் உறுதியான அஸ்திபாரமாயிருக்கிறார். வேத வசனங்களை வாசிப்பதன் மூலமும், ஜெபத்தின் வழியாகவும், பிற கிறிஸ்தவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதன் மூலமாயும் அவர் மீதுள்ள நமது அன்பை உறுதிப்படுத்துவோம். பெருவெள்ளம் போல நீரோட்டம் நம் வீட்டின் மீது மோதினாலும், நாம் காட்டிக் கொடுக்கப்படுவதாலோ, வேதனையாலோ அல்லது ஏமாற்றத்தாலோ எதுவாயினும் நம்முடைய உறுதியான அஸ்திபாரத்தை அசைக்க முடியாது என்ற நம்பிக்கையோடிருப்போம். நமது இரட்சகர் நமக்குத் தேவையான ஆதரவைத் தருவார்.

நீ என்னை நேசிக்கிறாயா?

நான் வாலிபனாக இருந்தபோது, என் தாயார் என்னை அதிகாரப்படுத்துவதை முற்றிலும் எதிர்ப்பவனாகக் காணப்பட்டேன். நான் பெரியவனாகும் முன்பே என் தந்தை மரித்துப் போனார். எனவே என் தாயார், கொந்தளிக்கும் அலைகளின் ஊடே வாழ்க்கைப் படகை செலுத்தும் பொறுப்பை முழுவதுமாக ஏற்க வேண்டியதாயிற்று.

நான் நினைவுபடுத்திப் பார்க்கும் போது, என் தாயார் என்னை எந்த பொழுதுபோக்கிற்கும் அனுமதித்ததேயில்லை, என்னை நேசித்ததுமில்லையென்றே கருதுவேன். ஏனெனில், நான் எதைக் கேட்டாலும் அவளுடைய பதில் இல்லை என்றேயிருக்கும். அவர்கள் என்னை அதிகம் நேசித்தபடியால், எனக்கு நல்லதல்லவெனக் கருதியவற்றைத்தான் தடுத்திருக்கிறார்களென இப்பொழுது எனக்குப் புரிகிறது.

பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு போன இஸ்ரவேலர், தேவன் அவர்களை எவ்வளவு நேசிக்கிறாரென கேள்வி கேட்கின்றனர். அவர்கள் தொடர்ந்து தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்தபடியால், அவர்களைத் திருத்தும்படி, அவர்களைத் தேவன் சிறைப்படுத்தினார். இப்பொழுது தேவன் அவர்களிடம் மல்கியா தீர்க்கதரிசியை அனுப்புகின்றார். அவர் மூலம் தேவன் தரும் முதல் வார்த்தையே, “நான் உங்களைச் சிநேகித்தேன்” என்பது தேவன் தங்களை எப்படிச் சிநேகித்தார் என இஸ்ரவேலர் சந்தேகத்தோடு கேட்கின்றனர். “உண்மையாகவா?” என்கின்றனர். மல்கியாவைக் கொண்டு தேவன் தன்னுடைய அன்பை விளங்கச் செய்கின்றார். தேவன் இஸ்ரவேலரை, ஏதோமியரைக் காட்டிலும் தேர்ந்து கொண்டார் எனச் சொல்கின்றார்.

நாம் அனைவருமே வாழ்வில் கஷ்டமான காலங்களைக் கடந்து செல்வோம். அப்படிப்பட்ட காலங்களில் நமக்கும் தேவன் நம்மை நேசிக்கின்றாரா என கேட்கத் தோன்றும். வேறுபட்ட வகைகளில் தேவன் தன்னுடைய மாறாத அன்பை நமக்குக் காட்டியதை நினைத்துப் பர்ப்போம். அவருடைய நன்மைகளை நாம் நினைக்க மறந்த போதும், அவர் நம்மை நேசிக்கின்ற தந்தையாகவேயுள்ளார்.

நம்பிக்கையோடிருக்கக் கற்றுக்கொள்ளல்

நான் வாலிபனாக இருந்த போது, என்னுடைய தாயார் நான் விசுவாசத்தில் வளர வேண்டுமென என்னை ஊக்கப்படுத்துவார்கள். “தேவனை நம்பு, அவர் உன்னைக் கவனித்துக் கொள்வார்” என என்னுடைய தாயார் சொல்வதுண்டு. “அது அத்தனை எளிதானதல்ல, அம்மா!” என நான் கத்துவேன். “முயற்சி செய்பவர்களுக்குத்தான் தேவன் உதவுவார்” என்பேன்.

ஆனால், “முயற்சி செய்பவர்களுக்குத்தான் தேவன் உதவுவார்” என்று வேதாகமத்தில் எங்குமே காணப்படவில்லை. நம்முடைய அனுதின தேவைகளுக்கும் தேவனையே சார்ந்து வாழும்படி தேவனுடைய வார்த்தைகள் சொல்கின்றன. “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களல்லவா? (மத். 6:26-27) என இயேசு சொல்கின்றார்.

நாம் அநுபவிக்கின்ற யாவும், நம் வாழ்க்கையில் சம்பாதிப்பதற்குத் தேவையான பெலனும், நம்முடைய முயற்சிகள் யாவும் நம்மை நேசித்து, நம்முடைய தகுதிக்கும் மேலாக நம்மை கனப்படுத்துகின்ற நம்முடைய பரலோகத் தந்தையின் கொடைகளாகும்.

என்னுடைய தாயார் தங்களுடைய வாழ்வின் இறுதியையடைந்த போது ‘அல்சைமர்’ என்ற நோயால் தாக்கப்பட்டு தன்னுடைய நியாபகச்சக்தியையும், சிந்திக்கிற திறனையும் இழந்தார்கள். ஆனால் தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கைமட்டும் குறையவில்லை. அவர்கள் எங்கள் வீட்டிலிருந்த நாட்களில், தேவன் அவர்களுடைய தேவைகளையெல்லாம் எதிர்பாராத விதமாகச் சந்தித்ததையும், அதனால் அவள் வாழ்க்கையில் கொண்டிருந்த நம்பிக்கை சரியானதே என்பதைக் காணும் சந்தர்ப்பம் பெற்றேன். கவலைப்படுவதற்குப் பதிலாக அவர் தன்னை தேவனுடைய பாதுகாப்பில் வைத்துவிட்டார். தேவன் அவர்களுக்கு உண்மையுள்ளவராகவே இருந்தார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றல்

ஜூம் செயலி பிரேத்யேகமான தகவல்தொடர்பு கருவியாக மாறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு செயல்திட்டத்தைப் பற்றி விவாதிக்கக் காணொளி அழைப்பில் தன்னுடன் இணையுமாறு ஒரு தோழி என்னிடம் கேட்டாள். செய்வதறியாமல் நான் குழப்பமடைந்துள்ளேன் என்று மின்னஞ்சல்கள் வாயிலாக உணர்ந்துகொண்டாள். எனவே காணொளி அழைப்பை எவ்வாறு அமைப்பது என்பதைக் கண்டறிய எனக்கு உதவ ஒரு வாலிபரை அணுகும்படி அவள் பரிந்துரைத்தாள்.

அவளது ஆலோசனை, தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகளின் மதிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. இது ரூத் மற்றும் நகோமியின் கதையில் தெளிவாகும் ஒன்று. ரூத் ஒரு விசுவாசமான மருமகளென்று அடிக்கடி புகழப்படுகிறாள்.நகோமியுடன் பெத்லகேமுக்குத் திரும்பிச் செல்ல தன் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தாள் (ரூத் 1:16-17). அவர்கள் நகரை அடைந்தபோது நகோமியின் இளைய மருமகள், “நான் வயல்வெளிக்குப் போய்.. (நமக்காக) கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன்” (2:2) என்றாள். இவள் முதியவளுக்கு உதவினாள், அவள் இளையவளுக்கு போவாஸை திருமணம் செய்ய உதவினாள். நவோமி ரூத்துக்கு கொடுத்த ஆலோசனை, போவாஸை இறந்துபோன திருமண உறவுகளின் ஆஸ்தியை வாங்குவதற்கும், ரூத்தை”மனைவியாக” கொள்ளவும் செயல்படத் தூண்டியது (4:9-10).

இளைய தலைமுறையினருடன் தங்கள் அனுபவமிக்க ஞானத்தைப் பகிர்ந்துகொள்பவர்களின் அறிவுரைகளை நாம் நிச்சயமாக மதிக்கிறோம். ஆனால் ரூத் மற்றும் நகோமி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டனர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நம்மை விடச் சிறியவர்களிடமிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது. அன்பான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைமுறை உறவுகளை வளர்க்க முற்படுவோம். அது நம்மையும் மற்றவர்களையும் ஆசீர்வதித்து, நாம் அறிந்திராததை கற்றுக்கொள்ள உதவும்.

 

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜான் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜானும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம். 

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் “எதேச்சையான பயம்” என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, “இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று” (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: “பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” (வ. 20). “பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்” என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய ஆறுதலை நமக்களிக்கிறார்.