நான் சிறுவயதில், ஒரு கிராமத்திலிருந்தபோது, கோழிக்குஞ்சுகள் என்னை மிகவும் கவர்ந்தன, எப்பொழுதாகில் நான் ஒரு கோழிக்குஞ்சைப் பிடிக்கும் போது, நான் சிறிது நேரத்திற்கு என் கரத்தில் வைத்திருந்துவிட்டு பின்னர் விட்டுவிடுவேன். நான் விட்டப்பின்னரும், நான் கையில் வைத்திருக்கின்றேன் என்ற நினைப்பில் அந்த கோழிக்குஞ்சு அப்படியே நிற்கும். அது சுதந்திரமாக ஓட முடியும், என்றாலும் அது பிடிபட்டிருப்பதாகவே நினைத்துக்கொள்ளும்.

நாம் நமது நம்பிக்கையை இயேசுவின் மீது வைக்கும் போது, அவர் கிருபையாக நம்மைப் பாவத்திலிருந்தும், சாத்தானின் பிடியிலிருந்தும் விடுவிக்கின்றார். ஆனால், நம்முடைய பாவப்பழக்கங்களிலிருந்தும், நடவடிக்கைகளிலிருந்தும் மாற்றிக்கொள்ள நேரமாகுமென்பதால், நாம் இன்னும் சாத்தானின் பிடியிலிருப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றான். ஆனால், தேவனுடைய ஆவியானவர் நம்மை விடுவித்துவிட்டார். அவர் நம்மை அடிமைப்படுத்துவதில்லை. ரோமாபுரியாருக்கு பவுல் சொல்வதென்னவெனின், “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமால் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே” (ரோம. 8:1-2).

நம்முடைய வேத வாசிப்பு, ஜெபம், பரிசுத்த ஆவியானவரின் வல்லமை ஆகியவற்றின் மூலம் தேவன் செயல்பட்டு நம்மை; சுத்திகரித்து அவருக்காக வாழ உதவுகின்றார். நாம் இன்னமும் விடுதலையாகவில்லை என்ற உணர்வை விட்டுவிட்டு, நாம் தேவனோடு நடக்கின்றோம் என்ற நம்பிக்கையோடிருக்க வேதாகமம் நம்மை ஊக்குவிக்கின்றது.

“ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:36) என்று இயேசு சொல்கின்றார். தேவனுக்குள் நாம் பெற்ற சுதந்திரம் நம்மை தேவனை நேசிக்கவும் அவருக்குச் சேவை செய்யவும் தூண்டுகிறது.