நான் ஒரு முறை இரவு உணவின் போது பில்லி கிரஹாமின் பக்கத்தில் உட்காரும் வாய்ப்பைப் பெற்றேன். அது மறக்கமுடியாத ஓர் அனுபவமாயிருந்தது. நானும் கனப்படுத்தப்பட்டேன். ஆனால், அவரோடு என்ன பேசுவது பொருத்தமாயிருக்கும் என சிந்தித்துச், சற்று பதட்டமாக உணர்ந்தேன். பல ஆண்டுகளான அவருடைய ஊழியப்பாதையில் எது மிகவும் விரும்பக்கூடியதாக இருந்தது என்ற ஒரு கேள்வியோடு என்னுடைய உரையாடலை ஆரம்பித்தால் சரியாக இருக்குமென எண்ணினேன். ஆனால், நான் அநாகரீகமாக அதற்குத் தகுந்த விடைகளையும் எடுத்துரைக்கலானேன். அது ஜனாதிபதியைச் சந்தித்ததா? அல்லது இராஜாக்களையும், ராணிகளையும் சந்தித்தக் கணங்களா? அல்லது உலகெங்கும் பல லட்சம் மக்களுக்குச் சுவிசேஷம் அறிவித்த நேரங்களா?

நான் என்னுடைய கருத்துக்களைக் கூறி முடிப்பதற்குள் மதிப்பிற்குரிய கிரஹாம் அவர்கள் என்னை நிறுத்திவிட்டார். ஒரு தயக்கமுமின்றி அவர், “அது நான் தேவனோடு கொண்டுள்ள ஐக்கியம்தான். அவருடைய பிரசன்னத்தை உணர்வதும், அவருடைய ஞானத்தைப் பெற்றுக் கொள்வதும் அவருடைய வழிகாட்டலைக் கண்டு கொண்டு அதன்படி நடந்துகொள்வதுமே என்னுடைய மிகப் பெரிய மகிழ்ச்சி” என்றார். இந்த பதில் என்னை ஒரு குற்றவாளியைப் போன்று எண்ணச் செய்தது, ஒரு சவாலைச் சந்திக்கவும் என்னைத் தூண்டியது. இவருடைய பதிலைப் போன்று என்னுடைய பதிலும் இருக்குமா என நான் குத்தப்பட்டேன். நானும் அவரைப் போன்று தேவனைச் சார்ந்து வாழ்வதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டேன்.

இதனை மனதில் கொண்டுதான் பவுலும் “ கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைகாக” தன்னுடைய மிகப்பெரிய சாதனைகளையெல்லாம் குப்பையென்று சொல்லுகின்றார் (பிலி. 3:8). நம் வாழ்விலும் இயேசுவும், இயேசுவோடுள்ள ஐக்கியமுமே பிரதானமானதாக இருப்பின் நம் வாழ்வும் எத்தனை விலையேறப் பெற்றதாக இருக்குமென நினைத்துப்பார்.