கிறிஸ்மஸ்ஸைக் குறித்தக் கேள்விகள்
நாள் காட்டியில் டிசம்பர் மாதத்திற்குத் திருப்புவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே, கிறிஸ்மஸ் மகிழ்ச்சி எங்கள் வடக்கு பட்டணத்தில் வெளிப்படத் துவங்கி விடும். ஒரு மருத்துவ அலுவலகத்திலுள்ள மரங்களும், செடிகளும் வண்ண விளக்குகளாலும், மின் விளக்குகளின் சரங்களாலும் வெவ்வேறு வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டன. இரவு நேரத்தில் அந்தப் பகுதியின் ஒளிமயம் அனைவரையும் பிரமிக்கச் செய்வதாயிருந்தது. மற்றொரு வர்த்தக நிறுவனம் தங்கள் கட்டடங்களை ஆடம்பரமாகப் பொதியப் பெற்ற கிறிஸ்மஸ் பரிசுபோல அலங்கரித்துள்ளது. எங்கு திரும்பினாலும் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் காண முடிந்தது. கிறிஸ்மஸ்கால விற்பனைகளும் துவங்கியிருந்தன.
சிலர் இத்தகைய ஆடம்பர வெளிப்படுத்துதலை விரும்புகின்றனர். வேறுசிலர் இதனை அதிருப்பியோடு பார்க்கின்றனர். ஆனால், மற்றவர்கள் கிறிஸ்மஸை எப்படிப் பார்க்கின்றனர். என்பது கேள்வியல்ல. நாம் ஒவ்வொருவரும் இந்த கொண்டாட்டத்தை எப்படி கருதுகிறோம் என்பதே நமது சிந்தனை.
இயேசுவின் பிறப்பிற்கு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், இயேசு தன்னடைய சீடர்களிடம், “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்டார் (மத். 16:13). அதற்கு அவர்கள், சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்க தரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறதார்கள் என்று பதிலளித்தனர். அப்பொழுது இயேசு, “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?” என்று தனிப்பட்ட கருத்தைக் கேட்கின்றார் (வச. 15). அதற்குக் பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான் (வச. 16).
இந்த ஆண்டும் அநேகர் இந்தக் குழந்தையாரென்ற உண்மையைத் தெரிந்து கொள்ளாமலே கிறிஸ்மஸைக் கொண்டாடலாம். நாம் மற்றவர்களோடு உரையாடும் போது அவர்களிடம் அக்கேள்வியைக் கேட்பதன் மூலம் அவர்களும் இயெசுவைத் தெரிந்துகொள்ள உதவுவோம். கிறிஸ்மஸ் என்பது மாட்டுத் தொழுவத்தில் பிறந்த ஒரு குழந்தையைப் பற்றி மகிழ்ச்சிதரும் கதையா? அல்லது நம்மைப் படைத்த படைப்பாளி தன்னுடைய படைப்புகளைப் பார்க்கும்படி நம்மில் ஒருவராக வந்துள்ளரா?
அது நீயாக இருப்பதால் நன்றி
கேன்சர் சிகிச்சை மையத்தில் என்னுடைய தாயாரோடு தங்கியிருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த போது, எங்களுக்கருகில் தங்கியிருந்து தன்னுடைய கணவன் பிராங்க்-ஐ கவனித்துக் கொண்டிருந்த லாரியின் தொடர்பு எனக்குக் கிடைத்தது. நான் அங்குள்ள போது அறையில் லாரியுடன் சம்பாஷித்து, சிரித்து, பெருமூச்செடுத்து, அழுது, ஜெபித்து என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வேன். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் தாங்கி, மகிழ்ந்து நாங்கள் நேசிக்கின்ற நபரையும் கவனித்துக் கொண்டோம்.
அங்கு தங்கியிருப்போர் தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கும் படி அழைத்துச் செல்லும் இலவச வாகனத்தை நான் விட்டு விட்ட போது, அன்று மாலை லாரி தன்னுடைய காரில் என்னை அந்த கடைக்கு அழைத்துச் சென்றாள். நன்றி கலந்த கண்ணீரோடு அவளுடைய உதவியை நான் ஏற்றுக் கொண்டேன். “நீயாக இருப்பதற்காக நன்றி” என்றேன். எனக்கு ஒரு சிநேகிதியாக எனக்குதவியதற்காக அல்ல, அவளுடைய உண்மையான குணாதிசயத்திற்காக அவளைப் பாராட்டினேன்.
சங்கீதம் 100, தேவன் செய்த காரியங்களுக்காக மட்டுமல்ல, தேவன் எப்படிப்பட்டவர் என்பதைப் பாராட்டி போற்றுகின்றது. பூமியிலுள்ள அனைவரையும் கர்த்தரை மகிழ்ச்சியோடு ஆராதனை செய்யும்படி சங்கீதக்காரன் அழைக்கின்றார் (வச. 1-2). “கர்த்தரே தேவனென்று அறியுங்கள்” (வச. 3) என்று உறுதியோடிருக்கச் சொல்கின்றார். நம்மைப் படைத்தவர் நம்மை அவருடைய பிரசன்னத்திற்குள் அழைக்கின்றார். “அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து அவரைத்துதித்து அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள் என்கிறார் (வச. 4). நம்முடைய நன்றியைத் தெரிவிப்பதற்கு அவரே தகுந்தவர், ஏனெனில் “கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும் அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.” (வச. 5).
இந்த உலகத்தைப் படைத்து அதைப் பாதுகாக்கின்ற இந்த தேவன், நம்மை மிகவும் நேசிக்கும் தேவன். நம்முடைய உண்மையான, மகிழ்ச்சி கலந்த நன்றியைச் செலுத்தத் தகுந்தவர் அவரே.
ஒரு பாதுகாப்பான இடம்
மேற்கு வெர்ஜீனியாவில், ஒரு காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் என்னுடைய சகோதரரும், நானும் வளர்ந்தோம். அது ஒரு வளமான நிலப்பகுதி. டார்சானைப் போன்று கொடி விட்டு கொடி தாண்டியும், சுவிஸ் குடும்பம் ராபின்சனைப் போன்று மரவீடுகளை அமைத்தும், கதைகளில் வாசிப்பதைப் போன்றும், படங்களில் காணும் காட்சிகளையும் கொண்ட ஓர் இடத்தில் நாங்கள் விளையாடினோம். வசிப்பிடங்களைக் கட்டுவதும் எதிரியின் தாக்குதலிலிருந்து நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம் என அதில் தங்கி விளையாடுவதும் எங்களுக்கு மிகவும் விருப்பமானவை. பல ஆண்டுகளுக்குப் பின்னர் என்னுடைய குழந்தைகளும் போர்வைகளாலும், கம்பளிகளாலும், தலையணைகளாலும் ஒரு வசிப்பிடத்தையமைத்து தங்களுடைய கற்பனையில், எதிரியிடமிருந்து “பாதுகாப்பாக ஓர் இடத்தை” ஏற்படுத்திக் கொண்டதாக எண்ணிக்கொள்வர். நாமும் பாதுகாப்பாக நம்பி ஒளிந்து கொள்ள ஓர் இடம் தேவை என்ற உள்ளுணர்வு ஒவ்வொருவரிடமும் உண்டு.
இஸ்ரவேலின் கவிஞரும் பாடகருமான தாவீது தனக்கு ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடிய போது அது தேவனிடம் மட்டுமேயுள்ளது என்பதைக் கண்டு கொண்டான். சங்கீதம் 46:1-3 வலியுறுத்துவது போல “தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும் ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்… ஆகையால் நாம் பயப்படோம்.” பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டுள்ள தாவீதின் வாழ்க்கையைப் பார்க்கும் போது, அவன் தொடர்ந்து அச்சுறுத்தலைச் சந்திக்கின்றான். ஆனாலும் இச்சங்கீதத்தின் வார்த்தைகள் தாவீது தேவன் மீது வைத்துள்ள அற்புதமான நம்பிக்கையைக் காட்டுகின்றது. எத்தகைய அச்சுறுத்தல் இருந்த போதும், அவன் தேவன் தரும் பாதுகாப்பைக் குறித்து உறுதியாயிருந்தான்.
இத்தகைய உறுதியை நாமும் பற்றிக்கொள்வோம். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று வாக்களித்துள்ள (எபி. 13:5) தேவனையே நம் அநுதின வாழ்வில் நாம் நம்பியுள்ளோம். நாம் ஒரு பயங்கரமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போதும், தேவன் நமக்குச் சமாதானத்தையும், உத்தரவாதத்தையும் இப்பொழுதும் எப்பொழுதும் நமக்களிக்கின்றார். அவரே நாம் பாதுகாப்பாகத் தங்குமிடம்.
தேவன் கேட்கின்றார்
தம் வாழ்வில் சவால்களையும், சுகவீனத்தையும் சந்திக்கின்ற குடும்ப நபர்கள், நண்பர்களுக்காக ஜெபிக்கும்படி அந்தக் குழுவிலுள்ள மற்ற அனைவரும் ஜெப விண்ணப்பங்களைக் கொடுக்க, தயான் மட்டும் கவனித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய குடும்ப நபர் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பல வருடங்களாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார். ஆனால். தயான் தன்னுடைய வேண்டுதலை வெளிப்படுத்தவில்லை. அவள் இதனைக் குறித்துச் சொன்னால், பிறரின் முகபாவனையையும், அவர்களின் கேள்விகளையும் ஆலோசனைகளையும் அவளால் சகித்துக் கொள்ள முடியாதென நினைத்தாள். எனவே அவள் இந்த வேண்டுதலை வெளியில் சொல்லாமலிருப்பதே மேல் என எண்ணினாள். தான் நேசிக்கும் இந்த நபர் இயேசுவின் விசுவாசியாயிருந்தும் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருப்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதில்லை என்றெண்ணினாள்.
தயான் இந்த ஜெப வேண்டுதலை இந்தக் குழுவிலுள்ள மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளாவிடினும், அவள் நம்பும் சில சிநேகிதிகளிடம் தன்னோடு ஜெபிக்கும்படி கேட்டுக் கொள்வாள். அவர்களோடு சேர்ந்து, தான் நேசிக்கும் இந்த நபரை குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்குமாறும், அவரும் கிறிஸ்து தரும் விடுதலையை அநுபவிக்க உதவுமாறும், தயானுக்குத் தேவையான பொறுமையையும் சமாதானத்தையம் தருமாறும் ஜெபிப்பாள். அவ்வாறு ஜெபிக்கும்போது அவள் ஆறுதலையும், தேவன் தரும் பெலனையும் பெற்றுக் கொண்டாள்.
நம்மில் அநேகர் உண்மையாகவும், தொடர்ந்தும் ஜெபித்துக் கொண்டிருக்கும் சில விண்ணப்பங்களுக்கு பதிலளிக்கப்படாமலிருக்கலாம். ஆனால், தேவன் நம்மீது கரிசனையுள்ளவர், அவர் நம்முடைய வேண்டுதல்களைக் கேட்கிறார் என்பதை உறுதியாக நம்புவோம். அவர் நம்மை இன்னும் அவரோடு நெருங்கி நடக்க விரும்புகின்றார். நாமும், நம்பிக்கையிலே சந்தோஷமாயும், உபத்திரவத்திலே பொறுமையாயும், ஜெபத்திலே உறுதியாயும் தரித்திருந்து (ரோம. 12:12) அவரையே சார்ந்து வாழ்வோம்.
நன்றியால் தேவனை கனப்படுத்துதல்
என்னுடைய கணவருக்கு புற்றுநோய் என்று வந்திருந்த மருத்துவ அறிக்கையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாலும், அந்த பெண் மருத்துவரின் முகத்தில் கவலைக்கான அறிகுறி இல்லை. புன்முறுவலோடு அவர் ஒரு யோசனை சொன்னார்: ஒவ்வொரு நாளையும் நன்றி சொல்லியபடி தொடங்குங்கள். “குறைந்தபட்சம் மூன்று விஷயங்களுக்காக,” என்றார். ஸ்தோத்திரம் சொல்வது தேவனின் நற்பண்புகளில் ஊக்கம் கிடைக்க உதவும் என்று தெரிந்ததால் டான் ஒத்துக்கொண்டார். இதனால் டான் ஒவ்வொரு நாளையும் துதிகளோடு தொடங்குகிறார். இரவு நல்ல தூக்கத்தைத் தந்ததற்காக நன்றி ஆண்டவரே. சுத்தமான படுக்கைக்காக. சூரிய வெளிச்சத்திற்காக. காலை உணவிற்காக. என் உதடுகளின் புன்முறுவலுக்காக நன்றி.
ஒவ்வொரு வார்த்தையும் மனப்பூர்வமானது. ஆனால் அது அற்பமாக தோன்றுமா? வாழ்வின் சின்னச் சின்ன விஷயங்களுக்காக நன்றி சொல்வது மகத்துவமான கர்த்தருக்கு முக்கியமா? தாவீதின் முதன்மை சங்கீதக்காரர் ஆசாப் சங்கீதம் 50ல் தெளிவான பதிலைத் தருகிறார். “உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும்” ஆண்டவர் கேட்கவில்லை (வச. 9). முன்பு இஸ்ரவேலரின் ஸ்தோத்திர பலிகளாக இருந்த இவற்றை விரும்பாமல், நம் இருதயத்தையும், நம் வாழ்க்கையையும் நன்றியோடு கொடுக்க விரும்புகிறார் (வச. 14, 23).
என் கணவர் அனுபவித்ததுபோல, மனப்பூர்வமான நன்றி, நாம் ஆவியில் உற்சாகமாக இருக்க உதவும். அப்போது “ஆபத்துக் காலத்தில்” நாம் கூப்பிடும்போது, அவர் நம்மை “விடுவிப்பார்” (வச. 15). அப்படியென்றால் ஆவியில், சரீரத்தில் டான் இரண்டு வருட சிகிச்சையில் சுகமாகி விடுவார் என்று அர்த்தமா? அல்லது அவர் வாழ்நாள் முழுவதும் சுகம் கிடைக்காதா? நமக்குத் தெரியாது. ஆனால் இப்போதைக்கு, தேவனின் அன்புக்காக, அவர் மீட்பராக, சுகம் அளிப்பவராக, நண்பராக இருப்பதற்காக தேவனுக்கு நன்றி சொல்வதில் டான் சந்தோஷமடைகிறார். “உங்களுக்கு நன்றி” என்ற அழகிய வார்த்தைகளைக் கேட்பதில் நண்பர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இத்தருணத்தின் ஆண்டவர்
சில மாதங்களுக்கு முன், மூன்று மணி நேர பயண தூரத்தில் இருக்கும் என் மகன் வீட்டில் ஒரு கட்டட வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். நினைத்ததை விட அந்த வேலை முடிய அதிக நாட்கள் ஆயிற்று. ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று மாலை முடித்துவிட வேண்டும் என்று ஜெபித்தேன். ஆனால், ஒவ்வொரு நாள் மாலையிலும், முடிவடையாத வேலைகள் இருந்தன.
ஏன் என்று யோசித்தேன். தாமதம் ஆவதற்கு ஏதேனும் காரணம் இருக்குமா என்று யோசித்தேன். அதற்கான விடை அடுத்த நாள் காலையில் கிடைத்தது. காலையில் வேலைக்கான உபகரணத்தை எடுக்கும்போது, என் தொலைபேசி ஒலித்தது. தெரியாத நபர் “உங்கள் மகள் ஒரு விபத்தில் அடிபட்டிருக்கிறாள். நீங்கள் உடனே வரவேண்டும்” என்றார்.
அவள் வீடு என் மகன் வீட்டுக்கு அருகிலேயே இருந்தது. அதனால் பதினான்கு நிமிடங்களில் அவள் அருகில் இருந்தேன். நான் என் வீட்டில் இருந்திருந்தால், வந்து சேர மூன்று மணி நேரம் ஆகியிருக்கும். நான் மருத்துவ ஊர்தியின் பின்னாலேயே சென்று, அறுவை சிகிச்சைக்கு முன் அவளுக்கு ஆறுதல் கூறினேன். ஆறுதலாக அவள் கையைப் பிடித்து அமர்ந்திருந்த வேளையில், அந்த கட்டட வேலை தாமதம் ஆகாதிருந்தால், என்னால் அவளோடு இருந்திருக்க முடியாது என்று உணர்ந்தேன்.
நம் தருணங்கள் தேவனுக்குச் சொந்தமானவை. எலிசாவின்மூலம் ஆண்டவர் உயிர்ப்பித்த சிறுவனின் தாயின் அனுபவமும் இதைப்போன்றதே (2 ராஜாக்கள் 4:18-37). பஞ்சத்தின் காரணமாக நாட்டை விட்டுச் சென்ற அவள், ராஜாவிடம் தன் நிலத்தைக் கேட்க, பல வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தாள். அதே நேரத்தில், தீர்க்கதரிசியின் பணியாள் கேயாசியோடு ராஜா பேசிக்கொண்டிருந்தார். “செத்துப் போனவனை (எலிசா) உயிர்ப்பித்தார் என்பதை அவன் ராஜாவுக்கு அறிவிக்கிறபோது,” எலிசா உயிர்ப்பித்த பிள்ளையின் தாய் உள்ளே வந்தாள் (8:5). அவள் வேண்டுதல் கேட்கப்பட்டது.
அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் எந்த சூழ்நிலையையும் நன்மைக்காக பயன்படுத்த கர்த்தர் வல்லவராக இருக்கிறார். கர்த்தர் இன்று நமக்கு முன்குறித்திருக்கும் வேலைகளுக்கு, அவரோடு நடக்க கிருபை செய்வாராக.
உறுதியான அடித்தளம்
சென்ற வருடம் கோடையின்போது நானும் என் கணவரும், பென்ஸில்வேனியாவின் கிராமப்புறத்தில் உள்ள, ஃப்ராங்க் லாய்ட் ரைய்ட் என்ற கட்டடக்கலை நிபுணர் கட்டிய, கொட்டும் அருவி என்று பொருள்படக்கூடிய ‘ஃபாலிங் வாட்டர்’ (Falling water) வீட்டைச் சுற்றிப்பார்த்தோம். அதுபோன்ற ஒரு வீட்டை நான் அதுவரை பார்த்ததில்லை. தரையில் இருந்து முளைத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு வீட்டை ரைட் கட்ட நினைத்து, அதில் வெற்றியும் பெற்றார். ஏற்கனவே இருந்த ஒரு நீர்வீழ்ச்சியைச் சுற்றி அந்த வீட்டைக் கட்டினார். கட்டட வடிவமைப்பு அருகில் இருந்த பாறை வடிவங்களை ஒத்திருந்தது. எங்களுக்கு வீட்டை சுற்றிக் காட்டிய பெண், அந்த வீடு எப்படி பாதுகாப்பாக இருக்கிறது என்று விளக்கினார். “வீட்டின் நடுப்பகுதி முழுவதும் கீழே உள்ள கற்பாறைகளை அஸ்திபாரமாகக் கொண்டுள்ளது” என்றாள்.
அவளது வார்த்தைகள், இயேசு தன் சீஷர்களுக்குச் சொன்ன வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்தியது. அவர் கற்றுக் கொடுப்பதே அவர்கள் வாழ்க்கைக்கான அடித்தளமாக இருக்கும் என்று இயேசு மலைப் பிரசங்கத்தில் அவர்களுக்குக் கூறினார். அவரது வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி நடந்தால், எந்த சூறாவளியையும் அவர்களால் தாங்கமுடியும் என்று கூறினார். கேட்டும் கீழ்ப்படியாமல் இருப்பவர்கள் மணலின்மேல் கட்டப்பட்ட வீட்டைப்போல் இருப்பார்கள் (மத். 7: 24-27). பின்னர் பவுலும் இதே சிந்தனைகளை வெளிப்படுத்தினார். கிறிஸ்துவே அடித்தளம் என்றும், நிலைத்து நிற்கக்கூடிய கிரியைகளால் நாம் அதன்மேல் கட்டவேண்டும் என்று எழுதினார் (1 கொரி. 3:11).
இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, கீழ்ப்படியும்போது, நம் வாழ்க்கையை உறுதியான கற்பாறையை அடித்தளமாகக் கொண்டு அமைக்கிறோம். நம் வாழ்க்கையும் ஃபாலிங்வாட்டரைப் போல கற்பாறையின்மேல் கட்டப்பட்டதால் நீடித்தும், அழகாகவும் அமையும்.
வைக்கோலை அடுக்குவது
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கோடை விடுமுறையில் கொலராடோவில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் வேலை செய்தேன். நவம்பர் முழுவதும் வைக்கோலை வெட்டி முடித்துவிட்டு, மாலையில் களைப்போடும், பசியோடும் ட்ராக்டர் வண்டியை அதை நிறுத்தும் இடத்திற்கு ஓட்டிவந்தேன். ஒரு வீரப்பிரதாப செயலாக நினைத்து, ட்ராக்டரை ஒடித்துத் திருப்பி, நிறுத்தியதில், ட்ராக்டர் சுழன்றது.
இதனால் அருகில் இருந்த 2000 லிட்டர் பெட்ரோல் இருந்த கலன் பெரிய சத்தத்துடன் கீழே விழுந்து, பெட்ரோல் முழுவதும் கீழே கொட்டியது.
பண்ணைக்கு சொந்தக்காரர் அருகில் நின்று அந்த இடத்தை முழுவதும் பார்த்தார்.
நான் ட்ராக்டரில் இருந்து இறங்கி, மன்னிப்புக் கேட்டேன். வேறு எதுவும் மனதில் தோன்றாததால் கோடை முழுவதும் ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறேன் என்று கூறினேன்.
உடைந்த கலனையும், கொட்டிய பெட்ரோலையும் பார்த்த அவர், திரும்பி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். “வா, நாம் போய் சாப்பிடலாம்” என்றார்.
தவறு செய்த இளைஞனைப் பற்றி இயேசு சொன்ன கதை எனக்கு நினைவுக்கு வந்தது. “தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்” என்று கதறினான். “உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்” என்று சொல்ல நினைத்திருந்தான். ஆனால் அதை அவன் சொல்லும் முன்பே அவன் தந்தை அவனை இடைமறித்தார். “வா, நாம் போய் சாப்பிடலாம்” என்பதே அவர் சொன்னதின் சாராம்சம் (லூக். 15:17-24).
தேவனின் பெருந்தன்மை இதேபோன்று வியக்க வைப்பதாகும்.
தேவன் இங்கே இருக்கிறார்
எங்கள் வீட்டில் “அழைக்கப்பட்டாரோ அழைக்கப்படவில்லையோ, தேவன் இங்கே இருக்கிறார்” என்ற வாசகப் பலகை உண்டு. “ஏற்றுக்கொள்கிறீர்களோ, ஏற்றுக்கொள்ளவில்லையோ தேவன் இங்கே இருக்கிறார்” என்பது அதன் புது வாசகமாக இருக்கலாம்.
எட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியில் (கி.மு. 755-715) வாழ்ந்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா இதை ஒத்த வார்த்தைகளை எபிரேய ஜனங்களுக்கு எழுதினார். அவர்கள் தேவனை மறந்துவிட்டதால் (ஓசியா 4;1), தேவனை “தொடர்ந்து” அறியும்படி அவர் இஸ்ரவேலர்களை ஊக்கப்படுத்தினார் (ஓசியா 6:3). தேவனின் பிரசன்னத்தை ஜனங்கள் மறந்ததால், அவர்கள் அவரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தனர் (6:12). அதன்பின் அவர்களுடைய சிந்தனைகளில் தேவனுக்கு இடமே இல்லாமல் போயிற்று (சங். 10:4).
நம்முடைய சந்தோஷத்திலும், நம்முடைய பாடுகளிலும் தேவன் நம் அருகே இருக்கிறார், நம்மில் கிரியை செய்கிறார் என்பதை “கர்த்தரை அறியுங்கள்” என்ற ஓசியாவின் எளிய ஆனால் ஆக்கபூர்வ வார்த்தைகள் நமக்கு நினைவுபடுத்துகின்றன.
தேவனை அங்கீகரிப்பது என்பது அலுவலகத்தில் பணி உயர்வு கிடைக்கும்போது தேவன் நமக்கு ஞானத்தைத் தந்து, நம் வேலையை குறித்த பண ஒதுக்கீட்டில், குறித்த நேரத்தில் முடிக்க உதவினார் என்று நினைப்பதாகும். நாம் விரும்பிய வீடு கிடைக்காதபோதும் தேவனை அங்கீகரிப்பது அந்த சூழ்நிலையை நமக்கு நன்மையானதாக மாற்றித் தருவார் என்று நம்புவதாகும்.
நாம் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காதபோதும், நம்முடைய ஏமாற்றத்திலும் தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அங்கீகரிப்பது, அவருடைய பிரசன்னத்தில் ஆறுதல் பெற உதவும். நாம் உணவை ரசித்து சாப்பிடும்போது, தேவனை அங்கீகரிப்பது, தேவன் நமக்கு சமைப்பதற்குத் தேவையான பொருள்களைக் கொடுத்ததோடு, சமைப்பதற்கு இடத்தையும் கொடுத்திருக்கிறார் என்று நினைவுகூர உதவும்.
தேவனை நாம் அங்கீகரிப்பது, நம் வாழ்க்கையில் சிறிய விஷயத்திலும், பெரிய விஷயத்திலும், வெற்றியிலும், துக்கத்திலும் தேவனின் பிரசன்னத்தை நினைவுகூருவதாகும்.