ஒரு நீண்ட அல்லது குறுகிய பயணம் எதுவாக இருந்தாலும், அந்தக் குழுவில் பயணம் செய்யும் யாரேனும் “இன்னும் அந்த இடம் வரவில்லையா? “அல்லது” இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்?” போன்ற கேள்விகளைக் கேட்பது வழக்கம் தான். இத்தகைய கேள்விகள் குழந்தைகளின் உதட்டிலிருந்து வருவதை எல்லாருமே கேட்டிருப்போம். பெரியவர்களும் நம்முடைய இலக்கினை சீக்கிரம் அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில் கேள்விகளைக் கேட்கின்றனர். எல்லா வயதினரும், தாங்கள் சோர்வடையும் போது இத்தகைய கேள்விகளைக் கேட்க தூண்டப்படுவர், ஏனெனில், வாழ்க்கையில் சவால்கள் ஒருபோதும் ஓய்ந்து போவதில்லை.

இதேப்போன்ற நிலையில்தான் தாவீதும் இருந்தார் என்பதை சங்கீதம் 13ல் காண்கின்றோம். இதிலுள்ள இரு வசனங்களில் நான்கு முறை (வச. 1-2) தாவீது தான் மறக்கப்பட்டவனாகவும், கைவிடப்பட்டவனாகவும், தோற்;கப்பட்டவனாகவும், இவையெல்லாம் எவ்வளவு காலத்திற்கு? எனப் புலம்புகிறான். இரண்டாவது வசனத்தில் அவன் எதுவரைக்கும் என் எண்ணங்களோடு போராடிக் கொண்டிருப்பேன்? எனக் கேட்கின்றான். இவ்வாறு புலம்பலை கொண்ட சங்கீதங்கள் மறைமுகமாக, நம்முடைய கேள்விகளோடு தேவனை ஆராதிக்க வருமாறு அனுமதிக்கின்றன. இத்தகைய கவலையும், வேதனையும் நிறைந்த நீண்ட காலங்களில் நாம் பேசுவதற்கு தேவனைத் தவிர வேறு சிறந்த நபர் யார் இருக்க முடியும்? நம்முடைய வியாதியின் போராட்டங்களையும், துயரங்களையும், நாம் விரும்பும் மனிதர்களின் தன்னிஷ்டப் போக்கினையும், உறவினரிடையேயுள்ள கஷ்டங்களையும் நாம் தேவனிடம் கொண்டு வரலாம்.

நமக்குக் கேள்விகளிருந்தாலும் நாம் தேவனை ஆராதிப்பதை விட்டுவிடத் தேவையில்லை. சர்வவல்ல, பரலோக தேவன் நம்முடைய கவலை நிரம்பிய கேள்விகளை அவரிடம் கொண்டு வரும்படி அழைக்கின்றார். ஒருவேளை தாவீதைப் போன்று, சரியான வேளையில் நம்முடைய கேள்விகள் வேண்டுதல்களாகவும், நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், தேவனைப் போற்றும் துதிகளாகவும் மாறிவிடும் (வச. 3).