எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கெயிலா ஆச்சோவாகட்டுரைகள்

விவரிக்க முடியாத அன்பு

வியக்கும்படி செய்ய தீர்மானித்தனர். எங்கள் ஆலய அங்கத்தினர்கள், ஞாயிறு பாடசாலை வகுப்பறையை பலூன்களால் அலங்கரித்து, அங்கு ஒரு சிறிய மேசையை வைத்து, அதில் ஒரு கேக்கை வைத்திருந்தனர். என்னுடைய மகன் கதவைத் திறந்த போது அனைவரும் ஒன்று சேர்ந்து, “மகிழ்ச்சியான பிறந்த நாள்” என வாழ்த்தினர்.

பின்னர் நான் கேக்கை வெட்டிய போது என்னுடைய மகன் என் காதுகளில் மெதுவாக, “அம்மா, ஏன் இங்கிருக்கின்ற அனைவரும் என்னை நேசிக்கின்றார்கள்?” என்று கேட்டான். நானும் அதே கேள்வியையே கேட்கின்றேன்! அவர்களுக்கு எங்களைக் கடந்த ஆறுமாதங்களாகத்தான் தெரியும், ஆனால் அவர்கள் அநேக நாட்கள் பழகிய நண்பர்கள் போன்று எங்களிடம் நடந்து கொள்கின்றனர்.

இவர்கள் என்னுடைய மகன் மீது வைத்திருக்கும் அன்பு, தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் பிரதிபலிக்கின்றது.தேவன் ஏன் நம்மை இவ்வளவு நேசிக்கின்றார் என்பதை புரிந்து கொள்ளவே முடியாது. ஆனாலும் அவர் நம்மை நேசிக்கின்றார். அவருடைய அன்பு நமக்கு இலவசமாக கொடுக்கப்படுகின்றது. அவருடைய அன்பைப் பெற நாமொன்றும் செய்யவில்லை. இருப்பினும் அவர் விவரிக்க முடியாத அளவு அன்பு கூருகின்றார். வேதாகமத்தில் தேவன் அன்பாகவே இருக்கிறார் (1 யோவா. 4:8) எனக் காண்கின்றோம். அன்பு அவருடைய தன்மையின் ஒரு பகுதி.

தேவன் நம்மீது அன்பினைப் பொழிந்து கொண்டிருக்கின்றார். எனவே நாமும் அந்த அன்பினை பிறர்மீது காட்டுவோம். இயேசு தன்னுடைய சீடர்களிடம், “நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்… நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்” என்றார் (யோவா. 13:34-35).

எங்களுடைய ஆலயத்தின் ஜனங்கள் எங்களை நேசிக்கின்றார்கள், ஏனெனில், தேவனுடைய அன்பு அவர்களில் இருக்கின்றது. அவருடைய அன்பு அவர்கள் வழியாக செயல்பட்டு, அவர்களை தேவனுடைய சீடர்களாகக் காண்பிக்கின்றது. நம்மால் தேவனுடைய முழு அன்பையும் புரிந்துகொள்ள முடியாது, ஆனால், அவருடைய விவரிக்க முடியாத அன்பின் எடுத்துக்காட்டாக, பிறர்மீது அன்பைப் பொழிய முடியும்.

அன்பின் அழகு

“ஐராபே டப்பாஷியோ" என்பது மெக்ஸிகோவின் தொப்பி நடனம், அது காதலைக் கொண்டாடும் ஒரு நிகழ்வு. இந்த நடனத்தின் உச்சக்கட்டத்தில் அந்த மனிதன் தன்னுடைய அகன்ற தொப்பியை தரையில் வைப்பான். நடன முடிவில் அந்தப் பெண் அத்தொப்பியை எடுக்க, இருவரும் அத்தொப்பியின் பின்னால் மறைந்து தங்களுடைய காதல் முத்தத்தோடு நடனத்தை முடிப்பர்.

திருமணத்தில் உண்மையாயிருப்பதின் முக்கியத்துவத்தை இந்த நடனம் எனக்கு நினைவுபடுத்தியது. நீதிமொழிகள் 5ல், கெட்ட நடத்தையின் விளைவுகளைப் பற்றி கூறியபின், திருமணம் இருவருக்கிடையேயுள்ள உறவு என்பதை உறுதிப்படுத்துவதை வாசிக்கின்றோம். “உன் கிணற்றிலுள்ள தண்ண்ரையும் உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு (வச. 15). பத்து ஜோடிகளுக்கு மேலாக ஜராபே நடனமாடினாலும் ஒவ்வொருவரும் தன்னுடைய துணையின் மீதே கவனம் செலுத்துவர். நாமும் ஆழமான பிரிக்கமுடியாத அர்ப்பணத்தை நம்முடைய துணையிடம் கண்டு மகிழ்வோம் (வச. 18).

நம்முடைய காதலும் கவனிக்கப்படுகிறது. அந்த நடனக் கலைஞர்கள் தங்களுடைய துணையோடேயே மகிழ்கின்றனர். தங்களை ஒருவர் கவனிக்கின்றார் என்ற உணர்வுடனேயே நடனமாடுவார். இதேப் போன்று இந்த அதிகாரத்திலும், “மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப் பார்க்கிறார்" (வச. 21). தேவன் நம்முடைய திருமணத்தை பாதுகாக்க விரும்புகிறார். எனவே அவர் தொடர்ந்து கவனித்தக் கொண்டேயிருக்கிறார். நாம் ஒருவருக்கொருவர் உண்மையாயிருப்பதன் மூலம் அவரை பிரியப்படுத்துவோம்.

ஐராபேயிலுள்ள தாளத்தைப் போன்றே நம் வாழ்விலும் நாம் தாளத்தைப் பின் தொடரவேண்டியுள்ளது. நம்முடைய திருமண வாழ்வு அல்லது தனிவாழ்வு தாளத்தோடு இசைந்திருந்தால், அதாவது நாம் நம்முடைய படைப்பாளிக்கு உண்மையுள்ளவர்களாயிருந்தால், அவருடைய ஆசீர்வாதங்களையும், சந்தோஷங்களையும் பெற்றுக்கொள்வோம்.

மிக உயரமான இடம்

என்னுடைய கணவர் ஒரு நண்பனை ஆலயத்திற்கு அழைத்துவந்தார். ஆராதனை முடிந்தபோது அந்த நண்பர், “நான் பாடல்களை விரும்புகிறேன், அதன் சூழ்நிலையையும் எனக்குப் பிடித்திருக்கின்றது. ஆனால், ஒன்று மட்டும் புரியவில்லை. மரியாதையில் இத்தனை உயரமான இடத்தை ஏன் நீங்கள் இயேசுவுக்குக் கொடுக்கிறீர்கள்? எனக் கேட்டார். பின்னர் என் கணவர் அவரிடம், கிறிஸ்தவம் என்பது கிறிஸ்துவோடுள்ள உறவு. அவரில்லாமல் கிறிஸ்தவத்திற்கு அர்த்தமேயில்லை. இயேசு எங்கள் வாழ்வில் செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் நாங்கள் இங்கு ஒன்று கூடி அவரைப் போற்றுகின்றோம் என விளக்கினார்.

இயேசு யார்? அவர் நமக்கு என்ன  செய்துள்ளார்? இந்த கேள்;விகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல்  கொலோசெயர் முதலாம் அதிகாரத்தில் பதிலளித்துள்ளார். தேவனை யாரும் கண்டதில்லை. இயேசு, தேவனின் தற்சுரூபமாக வந்து அவரைப் பிரதிபலித்தார் (வச. 15). இயேசு, தேவக் குமாரன். நமக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கும்படி வந்தார். நம்மை பாவத்திலிருந்து விடுதலை செய்ய வந்தார். பாவம் நம்மை பரிசுத்த தேவனிடமிருந்து பிரித்துவிட்டது. எனவே பாவமில்லாத ஒருவர் தான் தேவ சமாதானத்தை கொடுக்க முடியும். அதுதான் இயேசுகிறிஸ்து (வச. 14,20) வேறு வகையாகச் சொல்வோமானால் நாம் தேவனிடமும், வாழ்வுக்குள்ளும் செல்லும் வழியை, வேறொருவராலும் செய்யமுடியாததை இயேசு நமக்காகத் திறந்து கொடுத்தார்
(யோவா. 17:2).

ஏன் இயேசு அத்தகைய உயர்வான இடத்தைப் பெற பாத்திரராயிருக்கிறார்? அவர் சாவை மேற்கொண்டார். அவருடைய அன்பினாலும், தியாகத்தாலும் நம்முடைய உள்ளத்தைக் கவர்ந்தார். அவரே நமக்கெல்லாமுமாயிருக்கின்றார்.

நாம் அவருக்கு மகிமையைச் செலுத்துகின்றோம், ஏனெனில் அவரே அதற்குத் தகுந்தவர். நாம் அவரை உயர்த்துகின்றோம், ஏனெனில், அதுவே அவருடைய இடம். நாம் நம் உள்ளத்தில் மிக உயர்ந்த இடத்தை இயேசுவுக்குக் கொடுப்போம்.

அமைதியான சாட்சி

நற்செய்தி பிரசங்கிப்பது தடை செய்யப்பட்டுள்ள, கட்டுப்பாடுகள் நிறைந்த நாட்டில் ஏமி வசிக்கிறாள். பிறந்த குழந்தைகளைப் பராமரிக்கும் செவிலியாக ஒரு பெரிய மருத்துவமனையில் பணிபுரிகிறாள். அவள் தன்னுடைய பணியை சிறப்பாகவும், அர்ப்பணிப்போடும் செய்வதால் அவள் தனித்துத் தெரிவாள். இதனால் பல பெண்கள் அவளைப்பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக, தனிமையில் அவளிடம் பல கேள்விகள் கேட்பார்கள். அப்போது ஏமி தன் இரட்சகரைப் பற்றி அவர்களுடன் பகிர்ந்துகொள்வாள்.

அவளுக்கிருக்கும் நல்ல பெயரைப் பார்த்து பொறாமை கொண்ட உடன் பணியாளர்கள், அவள் சில மருந்துகளைத் திருடியதாக குற்றம் சாட்டினார்கள். அவளது மேலதிகாரிகள் அந்தக் குற்றச்சாட்டுகளை நம்பவில்லை. இறுதியில் யார் திருடியது என்று கண்டுபிடித்தார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஏமியின் விசுவாசம் குறித்து அவளுடன் பணியாற்றும் செவிலியர்கள் அவளிடம் கேட்டார்கள். ஏமியின் அனுபவம், பேதுரு சொன்னதை எனக்கு நினைவுபடுத்தியது: “பிரியமானவர்களே, புறஜாதிகள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றின் நிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடத்தையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்” (1 பேது. 2:11-12).

தேவன் நம்மில் கிரியை செய்ய நாம் அனுமதிக்கும்போது, வீட்டில், பணித்தளத்தில் அல்லது பள்ளியில் நம் செயல்கள் மற்றவர்கள்மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் எப்படிப் பேசுகிறோம், எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை கவனிக்கும் மனிதர்கள் நம்மைச் சூழ்ந்திருக்கிறார்கள். நம்முடைய எண்ணங்களையும், செயல்களையும் தேவன் ஆட்கொள்ளும் விதமாக அவரை சார்ந்திருப்போமாக. அதன் விளைவாக விசுவாசம் இல்லாதவர்களை நாம் இயேசுவிடம் வழிநடத்தலாம்.

அநேக அழகிய காரியங்கள்

ஓவியரும், மிஷனரி ஊழியருமான லிலியஸ் ட்ராட்டர் இறப்பதற்கு முன், தன் ஜன்னல் வழியாக பரலோக ரதம் ஒன்றை தரிசனமாகக் கண்டாள். அவளது நண்பர் “அநேக அழகான காரியங்களைக் காண்கிறாயா?” என்று கேட்டதாகவும், “ஆம், அநேகம், அநேகமான அழகான காரியங்களைக் காண்கிறேன்” என்று லிலியஸ் பதில் சொன்னதாகவும், அவளது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

 

ட்ராட்டரின் வாழ்க்கையில் தேவனின் பங்கை அவளது கடைசி வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன. அவளது இறப்பில் மட்டுமல்லாது, அவளது வாழ்க்கை முழுவதும் கர்த்தர் பல அழகிய காரியங்களை அவளுக்கும், அவள் மூலமாகவும் வெளிப்படுத்தினார். ஒரு திறமை மிக்க ஓவியராக இருந்தாலும், கிறிஸ்துவை சேவிக்க, அல்ஜீரியாவில் மிஷனரியாகப் பணி செய்ய முடிவு செய்தாள். அவளது இந்த முடிவைக் குறித்து, அவளுக்கு ஓவியக்கலையைக் கற்றுக்கொடுத்த ஜான் ரஸ்கின் என்ற புகழ்பெற்ற ஓவியர் “திறமையை வீணடிக்கிறாள்” என்று கூறினார்.

 

இதேபோல், புதிய ஏற்பாட்டில், குஷ்டரோகியான சீமோன் வீட்டிற்கு வந்த ஒரு பெண் வெள்ளைக்கல் பரணியில் கொண்டுவந்த நளத தைலத்தை இயேசுவின் பாதத்தில் ஊற்றியபோது, அருகில் இருந்தவர்கள் அதை வீண் என்று நினைத்தார்கள். விலையுயர்ந்த அந்தத் தைலமானது, ஒரு ஆண்டிற்குக் கிடைக்கும் கூலிக்கு சமானமாக இருந்ததால், அதை எளியவர்களுக்குக் கொடுத்து உதவியிருக்கலாம் என்று அங்கிருந்த சிலர் நினைத்தார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் ஆழ்ந்த அர்ப்பணிப்பைப் பாராட்டிய இயேசு கிறிஸ்து “என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்” என்று கூறினார் (மாற்கு 14:6).

 

தினந்தோறும் கிறிஸ்துவின் ஒளி நம் வாழ்க்கையில் ஒளிவீசவும், அவரது அருமையை உலகுக்கு வெளிப்படுத்தவும் நாமும் முடிவெடுக்கலாம். சிலருக்கு அது ஒரு வீணான காரியமாகத் தோன்றலாம். ஆனால் நாம் சுயவிருப்பத்தோடு அவரை சேவிப்போமாக. அவருக்கு நாம் அநேக அழகிய காரியங்களைச் செய்திருக்கிறோம் என்று இயேசு கிறிஸ்து சொல்வாராக.

இடைவிடாமல் சேவைசெய்

இளைஞர்களிடம் தாலந்துகளை எப்படி உருவாக்குவது என்பதைக்குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த கல்வியியல் உளவியலாளர் பென்ஜமின் புளும் என்பவர், விளையாட்டு, ஓவியம், கல்வி என வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 120 பேரின் இளமைப் பருவத்தைக் குறித்து ஆராய்ந்தார். அனைவரிடமும் இருந்த ஒரு பொதுவானப் பண்பைக் கண்டறிந்தார். அனைவருமே தீவிரமான பயிற்சியை நீண்ட காலம் எடுத்துள்ளனர் என்பதைக் கண்டு கொண்டார்.

ஓவ்வொருவரும் தம் வாழ்வில் ஏதாவது ஒரு பகுதியில் வளர்ச்சியடைய வேண்டுமாயின், அதற்கு ஒழுங்கும், கிரமுமான பயிற்சி தேவை என புளும் தனது ஆராய்ச்சியின் முடிவைத் தெரிவித்தார். நாம் தேவனோடு செலவிடும் நேரத்திலும் ஓர் ஒழுக்கத்தைக் கையாளுவதன் மூலம் ஆவிக்குரிய ஒழுக்கத்திலிருப்பது, நாம் அவர் மீதுள்ள நம்பிக்கையில் வளர வழிவகுக்கும்.

தேவனோடு ஒழுங்கு முறையைக் கையாண்டதில் தானியேல் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். தானியேல் இளைஞனான போதிலும் கவனமாகவும், ஞானமாகவும் தீர்மானம் எடுக்க முடிந்தது (1:8). அவன் ஜெபம் செய்யவும் ஒழுங்கைக் கடைபிடித்தான். “தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினான்” (6:10).

அவன் அடிக்கடி தேவனைத் தேடிய போது, அவனுடைய விசுவாச வாழ்க்கையை அவனைச் சுற்றியிருந்தவர்கள். எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது. தரியு அரசன் தானியேலைக் குறித்து, “ஜீவனுள்ள தேவனுடைய தாசனே” (வச. 20) எனவும், இடைவிடாமல் தேவனை ஆராதிக்கிறவன் எனவும் இருமுறை குறிப்பிடுகின்றான் (வச. 16,20).

தானியேல் போன்று நமக்கும் தேவனுடைய உதவி மிகவும் தேவை. தேவன் நம்மில் கிரியை செய்கிறார், எனவே நாம் அவரோடு நேரத்தைச் செலவிட விரும்புகிறோம் என்பது எத்தனை இன்பமானது! (பிலி. 2:13) எனவே நாம் ஒவ்வொரு நாளும் அவருடைய பிரசன்னத்தில் வந்து அவரோடு நேரத்தைச் செலவிடும்போது, அவர்மீதுள்ள அன்பில் நிரம்பி வழியச் செய்வார், நமது ரட்சகரை புரிந்துகொள்வதிலும் அறிந்து கொள்வதிலும் வளர்வோம் (1:9-11).

இனிமையான இல்லம்

“நாம் ஏன் நம்முடைய வீட்டை விட்டு வேறிடத்திற்குச் செல்ல வேண்டும்?” என்று என்னுடைய மகன் கேட்டான். ஓர் ஐந்து வயது சிறுவனுக்கு வீடு என்பது என்ன என்பதை விளக்குவது சற்றுக் கடினம். நாங்கள் எங்கள் இருப்பிடத்தைத் தான் மாற்றுகின்றோம். எங்கள் வீட்டையல்ல. வீடு என்பது நமக்கு அன்பானவர்கள் இருக்கும் இடம். ஒரு நீண்ட பயணத்திற்குப் பின் நாம் திரும்பிவர ஏங்கும் ஓர் இடம் அல்லது ஒரு நாளின் கடின வேலைக்குப்பின் திரும்பி வர எண்ணும் இடம் தான் நம் வீடு.

இயேசு மரிப்பதற்கு முன்னதாக ஒரு மேல் வீட்டறையில் இருந்த போது தன்னுடைய சீடர்களிடம் “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக” என்றார் (யோவா. 14:1) இயேசுவின் சீடர்களுக்கு தங்களுடைய எதிர்காலம் என்னவாகும் என்பது தெரியவில்லை, ஏனெனில், இயேசு தான் மரிக்கப்போவதை அவர்களுக்கு முன்னறிவித்தார். ஆனால், இயேசு தன்னுடைய பிரசன்னம் எப்பொழுதும் அவர்களோடிருக்கும் எனவும், மீண்டும் அவரைக் காண்பார்களெனவும் உறுதியளித்திருந்தார். “என்னுடைய பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; … நான் ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன்” என்றார் (வச. 2) அவர் பரலோகத்தைக் குறிப்பிவதற்கு வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அவர் நாம் நன்கு பயன்படுத்தும், நன்கு புரிந்து கொள்ளக் கூடிய வீடு என்ற வார்த்தையையே பயன்படுத்தினார். அங்கு இயேசுவும் நாம் நேசிக்கும் நபர்களும் இருப்பார்.

சி.எஸ். லூயிஸ் “நம்முடைய தந்தை, நம்முடைய பயணத்தின் போது நம்மைச் சில மகிழ்ச்சியான தங்கும் விடுதிகள் மூலம் நம்மை பெலப்படுத்துகின்றார். ஆனால், நாம் அவற்றை நிரந்தரமாகத் தங்கும் இடமென நினைத்துவிடக் கூடாது” என எழுதுகின்றார். தேவன் நமக்குத் தரும் மகிழ்ச்சியான விடுதிகளுக்காக அவருக்கு நன்றி சொல்வோம். ஆனால், நம்முடைய நிலையான வீடு பரலோகத்திலிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்வோம். அங்கு “நாம் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம். (1 தெச. 4:17)

வரங்கள் அநேகம் நோக்கம் ஒன்றே

மெக்ஸிகோவிலுள்ள எனது சொந்த ஊரில் சோளம் என்ற மக்காச் சோளம்தான் பிரதானமான உணவு. சோளத்தில் அநேக வகைகள் உண்டு. மஞ்சள், பழுப்பு, சிவப்பு, கருப்பு மற்றும் புள்ளியிட்டவை என பல வகைகளைக் காணலாம். ஆனால், பட்டணங்களில் வசிப்பவர்கள் புள்ளியிட்ட சோளத்தை உண்பதில்லை. உணவகத்தைப் பற்றிய ஆராய்ச்சியாளர் ஆமடோரமிரஸ் என்பவர் ஒரே நிறமுடைய தானியம் தான் தரமானது என நம்பப்படுகிறது எனத் தெரிவித்தார். ஆனாலும், புள்ளியிட்ட தானியம் சுவைமிக்கதாகவும், நல்ல ரொட்டி தயாரிக்க உகந்ததாகவும் உள்ளது.

கிறிஸ்துவின் சபையும் ஒரே நிறத்தையுடைய சோளத்தைப் போலல்லாமல், புள்ளிகளுள்ள சோளத்தைப் போன்றேயுள்ளது. பவுல் அப்போஸ்தலன் ஒரு சரீரத்தை கிறிஸ்துவின் சபையோடு ஒப்பிட்டு விளக்குகின்றார். எவ்வாறெனின், நாமனைவரும் ஒரே சபையும் ஒரே தேவனும் கொண்டவர்களாயிருந்தும், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான வரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பவுல் சொல்வது போல, “ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. (1கொரி. 12:5-6). நாம் ஒருவருக்கொருவர் உதவுவதில் இருக்கின்ற வேறுபாடுகள், தேவனுடைய தயாளத்தையும், படைப்பின் ஆற்றலையும் காட்டுகின்றது.

நாம் நம்முடைய வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளும்போது, நாம் நம்முடைய நம்பிக்கையிலும் நோக்கத்திலும் ஒற்றுமையை காத்துக்கொள்ள முயற்சிக்கின்றோம். நமக்குள்ளே வேறுபட்ட திறமைகளும் வேறுபட்ட சூழலும் உண்டு. நாம் வேறுவேறு மொழிகளைப் பேசுகின்றோம். வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்தவர்களாகவும் இருக்கின்றோம். ஆனால், நம் அனைவருக்கும் ஒரே அற்புதமான தேவன் உண்டு. அவரே படைப்பின் கர்த்தர், வெவ்வேறு வகைகளைப் படைத்து மகிழ்பவர்.

ஒருவரோடொருவர் இணைந்து

பழங்காலத்தில் ஒரு பட்டணத்தின் சுற்றுச் சுவர் உடைக்கப்பட்டதாகக் காணப்படின், அது தோற்றுபோன மக்களையும், ஆபத்திற்கும் வெட்கத்திற்குமுள்ளாக்கப்பட்ட ஜனங்களையும் கொண்டுள்ளதாகக் கருதப்படும். எனவேதான் யூத ஜனங்கள் எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டுகின்றார்கள். எப்படி? ஒருவரோடொருவர் இணைந்து கட்டுகின்றார்கள். இது நெகேமியா 3 ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த 3ஆம் அதிகாரத்தை வாசிக்கும் போது முதலில் அது நமக்குச் சற்று ஆர்வமில்லாத பகுதியாகத் தோன்றும். யார், எந்த பகுதியை எடுத்துக் கட்டினான் எனத் தெரிவிக்கின்றது. ஆனால், சற்று ஆழந்து பார்ப்போமாகில், மக்கள் எவ்வாறு இணைந்து வேலை செய்தனர் என்பதைக் தெரிந்து கொள்வோம். ஆசாரியர்களும் பிரபுக்களோடு இணைந்து வேலை செய்கின்றனர். அருகிலுள்ள பட்டணங்களில் வாழ்பவர்களும் வந்து உதவுகின்றனர். மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்கு எதிரேயிருக்கிற பகுதியைப் பழுது பார்கின்றனர். சல்லூமின் குமாரத்திகளும் பிறரோடு இணைந்து வேலை செய்தனர் (3:11) தெக்கோவா ஊரார் இரண்டு பகுதிகளை பழுது பார்க்கின்றனர் (வச. 5,27).

இந்த பகுதியிலிருந்து இரண்டு காரியங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். ஓன்று அவர்களெல்லாரும் ஒரு பொதுவான நோக்கத்திற்காக இணைந்து வேலை செய்கிறார்கள். இரண்டாவதாக எவ்வளவு வேலை செய்தனர், மற்றவர்களைக் காட்டிலும் குறைவாகத்தான் வேலை செய்தனர் என்பதான பாகுபாடின்றி, அவர்கள் அனைவரும் இந்த வேலையில் பங்கு பெற்றதற்காகப் பாராட்டப்படுகின்றனர். செய்த வேலையின் அளவல்ல; பங்கெடுத்தலே போற்றத்தக்கது.

இன்றைய நாட்களில் நாம் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், உடைந்துபோன சமுதாயத்தையும் பார்க்கின்றோம். வாழ்வு மாற்றத்தைக் கொடுப்பதன் மூலம் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் கட்டும்படியாக இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தார். நாம் நம்முடைய அண்டை வீட்டாரின் வாழ்வை மாற்றும்படி, அவர்களுக்கு இயேசு தரும் புதிய வாழ்வையும், நம்பிக்கையையும் காட்டுவோம். நாம் அனைவரும் ஏதாவது ஒன்றைச் செய்யும்படி இடம் இருக்கிறது. எனவே நாம் ஒருவரோடொருவர் இணைந்து பெரிதோ, சிறிதோ நம்முடைய வேலையைச் செய்து, ஓர் அன்பான சமுதாயத்தை உருவாக்கும்படி, ஒவ்வொருவரும் இயேசுவைக் கண்டுகொள்ள உதவுவோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றல்

ஜூம் செயலி பிரேத்யேகமான தகவல்தொடர்பு கருவியாக மாறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு செயல்திட்டத்தைப் பற்றி விவாதிக்கக் காணொளி அழைப்பில் தன்னுடன் இணையுமாறு ஒரு தோழி என்னிடம் கேட்டாள். செய்வதறியாமல் நான் குழப்பமடைந்துள்ளேன் என்று மின்னஞ்சல்கள் வாயிலாக உணர்ந்துகொண்டாள். எனவே காணொளி அழைப்பை எவ்வாறு அமைப்பது என்பதைக் கண்டறிய எனக்கு உதவ ஒரு வாலிபரை அணுகும்படி அவள் பரிந்துரைத்தாள்.

அவளது ஆலோசனை, தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகளின் மதிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. இது ரூத் மற்றும் நகோமியின் கதையில் தெளிவாகும் ஒன்று. ரூத் ஒரு விசுவாசமான மருமகளென்று அடிக்கடி புகழப்படுகிறாள்.நகோமியுடன் பெத்லகேமுக்குத் திரும்பிச் செல்ல தன் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தாள் (ரூத் 1:16-17). அவர்கள் நகரை அடைந்தபோது நகோமியின் இளைய மருமகள், “நான் வயல்வெளிக்குப் போய்.. (நமக்காக) கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன்” (2:2) என்றாள். இவள் முதியவளுக்கு உதவினாள், அவள் இளையவளுக்கு போவாஸை திருமணம் செய்ய உதவினாள். நவோமி ரூத்துக்கு கொடுத்த ஆலோசனை, போவாஸை இறந்துபோன திருமண உறவுகளின் ஆஸ்தியை வாங்குவதற்கும், ரூத்தை”மனைவியாக” கொள்ளவும் செயல்படத் தூண்டியது (4:9-10).

இளைய தலைமுறையினருடன் தங்கள் அனுபவமிக்க ஞானத்தைப் பகிர்ந்துகொள்பவர்களின் அறிவுரைகளை நாம் நிச்சயமாக மதிக்கிறோம். ஆனால் ரூத் மற்றும் நகோமி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டனர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நம்மை விடச் சிறியவர்களிடமிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது. அன்பான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைமுறை உறவுகளை வளர்க்க முற்படுவோம். அது நம்மையும் மற்றவர்களையும் ஆசீர்வதித்து, நாம் அறிந்திராததை கற்றுக்கொள்ள உதவும்.

 

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜான் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜானும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம். 

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் “எதேச்சையான பயம்” என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, “இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று” (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: “பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” (வ. 20). “பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்” என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய ஆறுதலை நமக்களிக்கிறார்.