எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கெயிலா ஆச்சோவாகட்டுரைகள்

விவரிக்க முடியாத அன்பு

வியக்கும்படி செய்ய தீர்மானித்தனர். எங்கள் ஆலய அங்கத்தினர்கள், ஞாயிறு பாடசாலை வகுப்பறையை பலூன்களால் அலங்கரித்து, அங்கு ஒரு சிறிய மேசையை வைத்து, அதில் ஒரு கேக்கை வைத்திருந்தனர். என்னுடைய மகன் கதவைத் திறந்த போது அனைவரும் ஒன்று சேர்ந்து, “மகிழ்ச்சியான பிறந்த நாள்” என வாழ்த்தினர்.

பின்னர் நான் கேக்கை வெட்டிய போது என்னுடைய மகன் என் காதுகளில் மெதுவாக, “அம்மா, ஏன் இங்கிருக்கின்ற அனைவரும் என்னை நேசிக்கின்றார்கள்?” என்று கேட்டான். நானும் அதே கேள்வியையே கேட்கின்றேன்! அவர்களுக்கு எங்களைக் கடந்த ஆறுமாதங்களாகத்தான் தெரியும், ஆனால் அவர்கள் அநேக நாட்கள் பழகிய நண்பர்கள் போன்று எங்களிடம் நடந்து கொள்கின்றனர்.

இவர்கள் என்னுடைய மகன் மீது வைத்திருக்கும் அன்பு, தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் பிரதிபலிக்கின்றது.தேவன் ஏன் நம்மை இவ்வளவு நேசிக்கின்றார் என்பதை புரிந்து கொள்ளவே முடியாது. ஆனாலும் அவர் நம்மை நேசிக்கின்றார். அவருடைய அன்பு நமக்கு இலவசமாக கொடுக்கப்படுகின்றது. அவருடைய அன்பைப் பெற நாமொன்றும் செய்யவில்லை. இருப்பினும் அவர் விவரிக்க முடியாத அளவு அன்பு கூருகின்றார். வேதாகமத்தில் தேவன் அன்பாகவே இருக்கிறார் (1 யோவா. 4:8) எனக் காண்கின்றோம். அன்பு அவருடைய தன்மையின் ஒரு பகுதி.

தேவன் நம்மீது அன்பினைப் பொழிந்து கொண்டிருக்கின்றார். எனவே நாமும் அந்த அன்பினை பிறர்மீது காட்டுவோம். இயேசு தன்னுடைய சீடர்களிடம், “நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்… நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்” என்றார் (யோவா. 13:34-35).

எங்களுடைய ஆலயத்தின் ஜனங்கள் எங்களை நேசிக்கின்றார்கள், ஏனெனில், தேவனுடைய அன்பு அவர்களில் இருக்கின்றது. அவருடைய அன்பு அவர்கள் வழியாக செயல்பட்டு, அவர்களை தேவனுடைய சீடர்களாகக் காண்பிக்கின்றது. நம்மால் தேவனுடைய முழு அன்பையும் புரிந்துகொள்ள முடியாது, ஆனால், அவருடைய விவரிக்க முடியாத அன்பின் எடுத்துக்காட்டாக, பிறர்மீது அன்பைப் பொழிய முடியும்.

அன்பின் அழகு

“ஐராபே டப்பாஷியோ" என்பது மெக்ஸிகோவின் தொப்பி நடனம், அது காதலைக் கொண்டாடும் ஒரு நிகழ்வு. இந்த நடனத்தின் உச்சக்கட்டத்தில் அந்த மனிதன் தன்னுடைய அகன்ற தொப்பியை தரையில் வைப்பான். நடன முடிவில் அந்தப் பெண் அத்தொப்பியை எடுக்க, இருவரும் அத்தொப்பியின் பின்னால் மறைந்து தங்களுடைய காதல் முத்தத்தோடு நடனத்தை முடிப்பர்.

திருமணத்தில் உண்மையாயிருப்பதின் முக்கியத்துவத்தை இந்த நடனம் எனக்கு நினைவுபடுத்தியது. நீதிமொழிகள் 5ல், கெட்ட நடத்தையின் விளைவுகளைப் பற்றி கூறியபின், திருமணம் இருவருக்கிடையேயுள்ள உறவு என்பதை உறுதிப்படுத்துவதை வாசிக்கின்றோம். “உன் கிணற்றிலுள்ள தண்ண்ரையும் உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு (வச. 15). பத்து ஜோடிகளுக்கு மேலாக ஜராபே நடனமாடினாலும் ஒவ்வொருவரும் தன்னுடைய துணையின் மீதே கவனம் செலுத்துவர். நாமும் ஆழமான பிரிக்கமுடியாத அர்ப்பணத்தை நம்முடைய துணையிடம் கண்டு மகிழ்வோம் (வச. 18).

நம்முடைய காதலும் கவனிக்கப்படுகிறது. அந்த நடனக் கலைஞர்கள் தங்களுடைய துணையோடேயே மகிழ்கின்றனர். தங்களை ஒருவர் கவனிக்கின்றார் என்ற உணர்வுடனேயே நடனமாடுவார். இதேப் போன்று இந்த அதிகாரத்திலும், “மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப் பார்க்கிறார்" (வச. 21). தேவன் நம்முடைய திருமணத்தை பாதுகாக்க விரும்புகிறார். எனவே அவர் தொடர்ந்து கவனித்தக் கொண்டேயிருக்கிறார். நாம் ஒருவருக்கொருவர் உண்மையாயிருப்பதன் மூலம் அவரை பிரியப்படுத்துவோம்.

ஐராபேயிலுள்ள தாளத்தைப் போன்றே நம் வாழ்விலும் நாம் தாளத்தைப் பின் தொடரவேண்டியுள்ளது. நம்முடைய திருமண வாழ்வு அல்லது தனிவாழ்வு தாளத்தோடு இசைந்திருந்தால், அதாவது நாம் நம்முடைய படைப்பாளிக்கு உண்மையுள்ளவர்களாயிருந்தால், அவருடைய ஆசீர்வாதங்களையும், சந்தோஷங்களையும் பெற்றுக்கொள்வோம்.

மிக உயரமான இடம்

என்னுடைய கணவர் ஒரு நண்பனை ஆலயத்திற்கு அழைத்துவந்தார். ஆராதனை முடிந்தபோது அந்த நண்பர், “நான் பாடல்களை விரும்புகிறேன், அதன் சூழ்நிலையையும் எனக்குப் பிடித்திருக்கின்றது. ஆனால், ஒன்று மட்டும் புரியவில்லை. மரியாதையில் இத்தனை உயரமான இடத்தை ஏன் நீங்கள் இயேசுவுக்குக் கொடுக்கிறீர்கள்? எனக் கேட்டார். பின்னர் என் கணவர் அவரிடம், கிறிஸ்தவம் என்பது கிறிஸ்துவோடுள்ள உறவு. அவரில்லாமல் கிறிஸ்தவத்திற்கு அர்த்தமேயில்லை. இயேசு எங்கள் வாழ்வில் செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் நாங்கள் இங்கு ஒன்று கூடி அவரைப் போற்றுகின்றோம் என விளக்கினார்.

இயேசு யார்? அவர் நமக்கு என்ன  செய்துள்ளார்? இந்த கேள்;விகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல்  கொலோசெயர் முதலாம் அதிகாரத்தில் பதிலளித்துள்ளார். தேவனை யாரும் கண்டதில்லை. இயேசு, தேவனின் தற்சுரூபமாக வந்து அவரைப் பிரதிபலித்தார் (வச. 15). இயேசு, தேவக் குமாரன். நமக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கும்படி வந்தார். நம்மை பாவத்திலிருந்து விடுதலை செய்ய வந்தார். பாவம் நம்மை பரிசுத்த தேவனிடமிருந்து பிரித்துவிட்டது. எனவே பாவமில்லாத ஒருவர் தான் தேவ சமாதானத்தை கொடுக்க முடியும். அதுதான் இயேசுகிறிஸ்து (வச. 14,20) வேறு வகையாகச் சொல்வோமானால் நாம் தேவனிடமும், வாழ்வுக்குள்ளும் செல்லும் வழியை, வேறொருவராலும் செய்யமுடியாததை இயேசு நமக்காகத் திறந்து கொடுத்தார்
(யோவா. 17:2).

ஏன் இயேசு அத்தகைய உயர்வான இடத்தைப் பெற பாத்திரராயிருக்கிறார்? அவர் சாவை மேற்கொண்டார். அவருடைய அன்பினாலும், தியாகத்தாலும் நம்முடைய உள்ளத்தைக் கவர்ந்தார். அவரே நமக்கெல்லாமுமாயிருக்கின்றார்.

நாம் அவருக்கு மகிமையைச் செலுத்துகின்றோம், ஏனெனில் அவரே அதற்குத் தகுந்தவர். நாம் அவரை உயர்த்துகின்றோம், ஏனெனில், அதுவே அவருடைய இடம். நாம் நம் உள்ளத்தில் மிக உயர்ந்த இடத்தை இயேசுவுக்குக் கொடுப்போம்.

அமைதியான சாட்சி

நற்செய்தி பிரசங்கிப்பது தடை செய்யப்பட்டுள்ள, கட்டுப்பாடுகள் நிறைந்த நாட்டில் ஏமி வசிக்கிறாள். பிறந்த குழந்தைகளைப் பராமரிக்கும் செவிலியாக ஒரு பெரிய மருத்துவமனையில் பணிபுரிகிறாள். அவள் தன்னுடைய பணியை சிறப்பாகவும், அர்ப்பணிப்போடும் செய்வதால் அவள் தனித்துத் தெரிவாள். இதனால் பல பெண்கள் அவளைப்பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக, தனிமையில் அவளிடம் பல கேள்விகள் கேட்பார்கள். அப்போது ஏமி தன் இரட்சகரைப் பற்றி அவர்களுடன் பகிர்ந்துகொள்வாள்.

அவளுக்கிருக்கும் நல்ல பெயரைப் பார்த்து பொறாமை கொண்ட உடன் பணியாளர்கள், அவள் சில மருந்துகளைத் திருடியதாக குற்றம் சாட்டினார்கள். அவளது மேலதிகாரிகள் அந்தக் குற்றச்சாட்டுகளை நம்பவில்லை. இறுதியில் யார் திருடியது என்று கண்டுபிடித்தார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஏமியின் விசுவாசம் குறித்து அவளுடன் பணியாற்றும் செவிலியர்கள் அவளிடம் கேட்டார்கள். ஏமியின் அனுபவம், பேதுரு சொன்னதை எனக்கு நினைவுபடுத்தியது: “பிரியமானவர்களே, புறஜாதிகள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றின் நிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடத்தையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்” (1 பேது. 2:11-12).

தேவன் நம்மில் கிரியை செய்ய நாம் அனுமதிக்கும்போது, வீட்டில், பணித்தளத்தில் அல்லது பள்ளியில் நம் செயல்கள் மற்றவர்கள்மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் எப்படிப் பேசுகிறோம், எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை கவனிக்கும் மனிதர்கள் நம்மைச் சூழ்ந்திருக்கிறார்கள். நம்முடைய எண்ணங்களையும், செயல்களையும் தேவன் ஆட்கொள்ளும் விதமாக அவரை சார்ந்திருப்போமாக. அதன் விளைவாக விசுவாசம் இல்லாதவர்களை நாம் இயேசுவிடம் வழிநடத்தலாம்.

அநேக அழகிய காரியங்கள்

ஓவியரும், மிஷனரி ஊழியருமான லிலியஸ் ட்ராட்டர் இறப்பதற்கு முன், தன் ஜன்னல் வழியாக பரலோக ரதம் ஒன்றை தரிசனமாகக் கண்டாள். அவளது நண்பர் “அநேக அழகான காரியங்களைக் காண்கிறாயா?” என்று கேட்டதாகவும், “ஆம், அநேகம், அநேகமான அழகான காரியங்களைக் காண்கிறேன்” என்று லிலியஸ் பதில் சொன்னதாகவும், அவளது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

 

ட்ராட்டரின் வாழ்க்கையில் தேவனின் பங்கை அவளது கடைசி வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன. அவளது இறப்பில் மட்டுமல்லாது, அவளது வாழ்க்கை முழுவதும் கர்த்தர் பல அழகிய காரியங்களை அவளுக்கும், அவள் மூலமாகவும் வெளிப்படுத்தினார். ஒரு திறமை மிக்க ஓவியராக இருந்தாலும், கிறிஸ்துவை சேவிக்க, அல்ஜீரியாவில் மிஷனரியாகப் பணி செய்ய முடிவு செய்தாள். அவளது இந்த முடிவைக் குறித்து, அவளுக்கு ஓவியக்கலையைக் கற்றுக்கொடுத்த ஜான் ரஸ்கின் என்ற புகழ்பெற்ற ஓவியர் “திறமையை வீணடிக்கிறாள்” என்று கூறினார்.

 

இதேபோல், புதிய ஏற்பாட்டில், குஷ்டரோகியான சீமோன் வீட்டிற்கு வந்த ஒரு பெண் வெள்ளைக்கல் பரணியில் கொண்டுவந்த நளத தைலத்தை இயேசுவின் பாதத்தில் ஊற்றியபோது, அருகில் இருந்தவர்கள் அதை வீண் என்று நினைத்தார்கள். விலையுயர்ந்த அந்தத் தைலமானது, ஒரு ஆண்டிற்குக் கிடைக்கும் கூலிக்கு சமானமாக இருந்ததால், அதை எளியவர்களுக்குக் கொடுத்து உதவியிருக்கலாம் என்று அங்கிருந்த சிலர் நினைத்தார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் ஆழ்ந்த அர்ப்பணிப்பைப் பாராட்டிய இயேசு கிறிஸ்து “என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்” என்று கூறினார் (மாற்கு 14:6).

 

தினந்தோறும் கிறிஸ்துவின் ஒளி நம் வாழ்க்கையில் ஒளிவீசவும், அவரது அருமையை உலகுக்கு வெளிப்படுத்தவும் நாமும் முடிவெடுக்கலாம். சிலருக்கு அது ஒரு வீணான காரியமாகத் தோன்றலாம். ஆனால் நாம் சுயவிருப்பத்தோடு அவரை சேவிப்போமாக. அவருக்கு நாம் அநேக அழகிய காரியங்களைச் செய்திருக்கிறோம் என்று இயேசு கிறிஸ்து சொல்வாராக.

இடைவிடாமல் சேவைசெய்

இளைஞர்களிடம் தாலந்துகளை எப்படி உருவாக்குவது என்பதைக்குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த கல்வியியல் உளவியலாளர் பென்ஜமின் புளும் என்பவர், விளையாட்டு, ஓவியம், கல்வி என வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 120 பேரின் இளமைப் பருவத்தைக் குறித்து ஆராய்ந்தார். அனைவரிடமும் இருந்த ஒரு பொதுவானப் பண்பைக் கண்டறிந்தார். அனைவருமே தீவிரமான பயிற்சியை நீண்ட காலம் எடுத்துள்ளனர் என்பதைக் கண்டு கொண்டார்.

ஓவ்வொருவரும் தம் வாழ்வில் ஏதாவது ஒரு பகுதியில் வளர்ச்சியடைய வேண்டுமாயின், அதற்கு ஒழுங்கும், கிரமுமான பயிற்சி தேவை என புளும் தனது ஆராய்ச்சியின் முடிவைத் தெரிவித்தார். நாம் தேவனோடு செலவிடும் நேரத்திலும் ஓர் ஒழுக்கத்தைக் கையாளுவதன் மூலம் ஆவிக்குரிய ஒழுக்கத்திலிருப்பது, நாம் அவர் மீதுள்ள நம்பிக்கையில் வளர வழிவகுக்கும்.

தேவனோடு ஒழுங்கு முறையைக் கையாண்டதில் தானியேல் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். தானியேல் இளைஞனான போதிலும் கவனமாகவும், ஞானமாகவும் தீர்மானம் எடுக்க முடிந்தது (1:8). அவன் ஜெபம் செய்யவும் ஒழுங்கைக் கடைபிடித்தான். “தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினான்” (6:10).

அவன் அடிக்கடி தேவனைத் தேடிய போது, அவனுடைய விசுவாச வாழ்க்கையை அவனைச் சுற்றியிருந்தவர்கள். எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது. தரியு அரசன் தானியேலைக் குறித்து, “ஜீவனுள்ள தேவனுடைய தாசனே” (வச. 20) எனவும், இடைவிடாமல் தேவனை ஆராதிக்கிறவன் எனவும் இருமுறை குறிப்பிடுகின்றான் (வச. 16,20).

தானியேல் போன்று நமக்கும் தேவனுடைய உதவி மிகவும் தேவை. தேவன் நம்மில் கிரியை செய்கிறார், எனவே நாம் அவரோடு நேரத்தைச் செலவிட விரும்புகிறோம் என்பது எத்தனை இன்பமானது! (பிலி. 2:13) எனவே நாம் ஒவ்வொரு நாளும் அவருடைய பிரசன்னத்தில் வந்து அவரோடு நேரத்தைச் செலவிடும்போது, அவர்மீதுள்ள அன்பில் நிரம்பி வழியச் செய்வார், நமது ரட்சகரை புரிந்துகொள்வதிலும் அறிந்து கொள்வதிலும் வளர்வோம் (1:9-11).

இனிமையான இல்லம்

“நாம் ஏன் நம்முடைய வீட்டை விட்டு வேறிடத்திற்குச் செல்ல வேண்டும்?” என்று என்னுடைய மகன் கேட்டான். ஓர் ஐந்து வயது சிறுவனுக்கு வீடு என்பது என்ன என்பதை விளக்குவது சற்றுக் கடினம். நாங்கள் எங்கள் இருப்பிடத்தைத் தான் மாற்றுகின்றோம். எங்கள் வீட்டையல்ல. வீடு என்பது நமக்கு அன்பானவர்கள் இருக்கும் இடம். ஒரு நீண்ட பயணத்திற்குப் பின் நாம் திரும்பிவர ஏங்கும் ஓர் இடம் அல்லது ஒரு நாளின் கடின வேலைக்குப்பின் திரும்பி வர எண்ணும் இடம் தான் நம் வீடு.

இயேசு மரிப்பதற்கு முன்னதாக ஒரு மேல் வீட்டறையில் இருந்த போது தன்னுடைய சீடர்களிடம் “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக” என்றார் (யோவா. 14:1) இயேசுவின் சீடர்களுக்கு தங்களுடைய எதிர்காலம் என்னவாகும் என்பது தெரியவில்லை, ஏனெனில், இயேசு தான் மரிக்கப்போவதை அவர்களுக்கு முன்னறிவித்தார். ஆனால், இயேசு தன்னுடைய பிரசன்னம் எப்பொழுதும் அவர்களோடிருக்கும் எனவும், மீண்டும் அவரைக் காண்பார்களெனவும் உறுதியளித்திருந்தார். “என்னுடைய பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; … நான் ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன்” என்றார் (வச. 2) அவர் பரலோகத்தைக் குறிப்பிவதற்கு வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அவர் நாம் நன்கு பயன்படுத்தும், நன்கு புரிந்து கொள்ளக் கூடிய வீடு என்ற வார்த்தையையே பயன்படுத்தினார். அங்கு இயேசுவும் நாம் நேசிக்கும் நபர்களும் இருப்பார்.

சி.எஸ். லூயிஸ் “நம்முடைய தந்தை, நம்முடைய பயணத்தின் போது நம்மைச் சில மகிழ்ச்சியான தங்கும் விடுதிகள் மூலம் நம்மை பெலப்படுத்துகின்றார். ஆனால், நாம் அவற்றை நிரந்தரமாகத் தங்கும் இடமென நினைத்துவிடக் கூடாது” என எழுதுகின்றார். தேவன் நமக்குத் தரும் மகிழ்ச்சியான விடுதிகளுக்காக அவருக்கு நன்றி சொல்வோம். ஆனால், நம்முடைய நிலையான வீடு பரலோகத்திலிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்வோம். அங்கு “நாம் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம். (1 தெச. 4:17)

வரங்கள் அநேகம் நோக்கம் ஒன்றே

மெக்ஸிகோவிலுள்ள எனது சொந்த ஊரில் சோளம் என்ற மக்காச் சோளம்தான் பிரதானமான உணவு. சோளத்தில் அநேக வகைகள் உண்டு. மஞ்சள், பழுப்பு, சிவப்பு, கருப்பு மற்றும் புள்ளியிட்டவை என பல வகைகளைக் காணலாம். ஆனால், பட்டணங்களில் வசிப்பவர்கள் புள்ளியிட்ட சோளத்தை உண்பதில்லை. உணவகத்தைப் பற்றிய ஆராய்ச்சியாளர் ஆமடோரமிரஸ் என்பவர் ஒரே நிறமுடைய தானியம் தான் தரமானது என நம்பப்படுகிறது எனத் தெரிவித்தார். ஆனாலும், புள்ளியிட்ட தானியம் சுவைமிக்கதாகவும், நல்ல ரொட்டி தயாரிக்க உகந்ததாகவும் உள்ளது.

கிறிஸ்துவின் சபையும் ஒரே நிறத்தையுடைய சோளத்தைப் போலல்லாமல், புள்ளிகளுள்ள சோளத்தைப் போன்றேயுள்ளது. பவுல் அப்போஸ்தலன் ஒரு சரீரத்தை கிறிஸ்துவின் சபையோடு ஒப்பிட்டு விளக்குகின்றார். எவ்வாறெனின், நாமனைவரும் ஒரே சபையும் ஒரே தேவனும் கொண்டவர்களாயிருந்தும், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான வரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பவுல் சொல்வது போல, “ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. (1கொரி. 12:5-6). நாம் ஒருவருக்கொருவர் உதவுவதில் இருக்கின்ற வேறுபாடுகள், தேவனுடைய தயாளத்தையும், படைப்பின் ஆற்றலையும் காட்டுகின்றது.

நாம் நம்முடைய வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளும்போது, நாம் நம்முடைய நம்பிக்கையிலும் நோக்கத்திலும் ஒற்றுமையை காத்துக்கொள்ள முயற்சிக்கின்றோம். நமக்குள்ளே வேறுபட்ட திறமைகளும் வேறுபட்ட சூழலும் உண்டு. நாம் வேறுவேறு மொழிகளைப் பேசுகின்றோம். வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்தவர்களாகவும் இருக்கின்றோம். ஆனால், நம் அனைவருக்கும் ஒரே அற்புதமான தேவன் உண்டு. அவரே படைப்பின் கர்த்தர், வெவ்வேறு வகைகளைப் படைத்து மகிழ்பவர்.

ஒருவரோடொருவர் இணைந்து

பழங்காலத்தில் ஒரு பட்டணத்தின் சுற்றுச் சுவர் உடைக்கப்பட்டதாகக் காணப்படின், அது தோற்றுபோன மக்களையும், ஆபத்திற்கும் வெட்கத்திற்குமுள்ளாக்கப்பட்ட ஜனங்களையும் கொண்டுள்ளதாகக் கருதப்படும். எனவேதான் யூத ஜனங்கள் எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டுகின்றார்கள். எப்படி? ஒருவரோடொருவர் இணைந்து கட்டுகின்றார்கள். இது நெகேமியா 3 ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த 3ஆம் அதிகாரத்தை வாசிக்கும் போது முதலில் அது நமக்குச் சற்று ஆர்வமில்லாத பகுதியாகத் தோன்றும். யார், எந்த பகுதியை எடுத்துக் கட்டினான் எனத் தெரிவிக்கின்றது. ஆனால், சற்று ஆழந்து பார்ப்போமாகில், மக்கள் எவ்வாறு இணைந்து வேலை செய்தனர் என்பதைக் தெரிந்து கொள்வோம். ஆசாரியர்களும் பிரபுக்களோடு இணைந்து வேலை செய்கின்றனர். அருகிலுள்ள பட்டணங்களில் வாழ்பவர்களும் வந்து உதவுகின்றனர். மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்கு எதிரேயிருக்கிற பகுதியைப் பழுது பார்கின்றனர். சல்லூமின் குமாரத்திகளும் பிறரோடு இணைந்து வேலை செய்தனர் (3:11) தெக்கோவா ஊரார் இரண்டு பகுதிகளை பழுது பார்க்கின்றனர் (வச. 5,27).

இந்த பகுதியிலிருந்து இரண்டு காரியங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். ஓன்று அவர்களெல்லாரும் ஒரு பொதுவான நோக்கத்திற்காக இணைந்து வேலை செய்கிறார்கள். இரண்டாவதாக எவ்வளவு வேலை செய்தனர், மற்றவர்களைக் காட்டிலும் குறைவாகத்தான் வேலை செய்தனர் என்பதான பாகுபாடின்றி, அவர்கள் அனைவரும் இந்த வேலையில் பங்கு பெற்றதற்காகப் பாராட்டப்படுகின்றனர். செய்த வேலையின் அளவல்ல; பங்கெடுத்தலே போற்றத்தக்கது.

இன்றைய நாட்களில் நாம் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், உடைந்துபோன சமுதாயத்தையும் பார்க்கின்றோம். வாழ்வு மாற்றத்தைக் கொடுப்பதன் மூலம் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் கட்டும்படியாக இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தார். நாம் நம்முடைய அண்டை வீட்டாரின் வாழ்வை மாற்றும்படி, அவர்களுக்கு இயேசு தரும் புதிய வாழ்வையும், நம்பிக்கையையும் காட்டுவோம். நாம் அனைவரும் ஏதாவது ஒன்றைச் செய்யும்படி இடம் இருக்கிறது. எனவே நாம் ஒருவரோடொருவர் இணைந்து பெரிதோ, சிறிதோ நம்முடைய வேலையைச் செய்து, ஓர் அன்பான சமுதாயத்தை உருவாக்கும்படி, ஒவ்வொருவரும் இயேசுவைக் கண்டுகொள்ள உதவுவோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார். 

 

தாகமும், நன்றியுள்ளமும்

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.