வகை  |  odb

பிறரோடு ஒப்பிடாதே

'ஒரு நாள் நான் எல்லாவற்றையும் குறித்து முகநூலில் பதிவிடப் போகிறேன் - நல்லவைகளை மட்டுமல்ல!" என என்னுடைய சிநேகிதி ஸ்யூ தன்னுடைய கணவனோடு உணவுவேளையில் பேசிக்கொண்டிருக்கையில் தெரிவித்தாள். இதனைக் கேட்ட நான் சத்தமாக சிரித்ததோடு, சிந்திக்கவும் ஆரம்பித்தேன். சமூக ஊடகங்கள் நல்லவைதான். நாம் பலமைல்களுக்கப்பாலுள்ள நண்பர்களோடு பல ஆண்டுகள் கழித்து தொடர்பு கொள்ளவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் உதவுகின்றன. ஆனால், நாம் அவற்றை கவனத்தோடு பயன்படுத்தாவிடில், வாழ்வைப் பற்றிய ஒரு மாயையை உருவாக்கிவிடும். ஒருவர் தம் வாழ்விலுள்ள மிகச் சிறந்த காரியங்களையே முகநூலில் பதிப்பதால், இதனைக் காணும் நாம் அவர்கள் வாழ்வில் பிரச்சனைகளேயில்லை எனவும், நம்முடைய வாழ்வு மட்டும் எங்கோ தவறுதலாகப் போய்க்கொண்டிருக்கிறது எனவும் நினைக்கும்படிச் செய்கின்றது.

நம்முடைய வாழ்வைப் பிறருடைய வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பது மகிழ்ச்சியைக் குலைக்கும் ஒரு செயல். இயேசுவின் சீடர்களும் ஒருவரோடொருவர் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தபோது (லூக். 9:46;22:24), இயேசு உடனே அதனைத் தடுத்தார். இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் பேதுருவிடம், கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் பொருட்டு அவர் எவ்வளவாய் பாடுபட வேண்டுமென தெரிவித்தார். உடனே அவன் யோவான் பக்கமாய் திரும்பி, 'ஆண்டவரே, இவன் காரியம் என்ன?" என்று கேட்டான். அதற்கு இயேசு 'நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா" என்றார் (யோவா. 21:21-22).

தேவையற்ற ஒப்பிட்டுப் பார்த்தலை பேதுரு தவிர்க்கும்படி, இயேசு வழிகாட்டுகின்றார். நம்முடைய இருதயமும், தேவன் மீதும் அவர் நமக்குச் செய்துள்ளவற்றின் மீதும் மட்டும் திருப்பப்படுமாயின் தன்னலமான எண்ணங்கள் தானாக விலகிவிடும், நாம் இயேசுவைப் பின்பற்ற விரும்புவோம். போட்டிகளின் அழுத்தத்தாலும் பளுவினாலும் நாம் இழுக்கப்படுவதற்குப் பதிலாக, அவர் நமக்கு அவருடைய அன்பு பிரசன்னத்தையும் சமாதானத்தையும் தருவார். தேவன் தரும் சமாதானத்திற்கு ஒப்பானது எதுவுமில்லை.

பெரிய செய்தி!

எங்களுடைய உள்ளுர் செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி குறுகியதாயிருந்தாலும் இருதயத்திற்கு இதமாய் இருந்தது. விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு, உறுதியான குடும்ப பிணைப்பை ஏற்படுத்தும்படி நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், சிறைச்சாலையில் வாழும் ஒரு குழுவினருக்கு ஓர் அரிய வாய்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் குடும்பத்தினரை வெளிப்படையாகச் சந்திக்கலாம் என்பதே அந்த வாய்ப்பு. சிலர் தங்கள் குழந்தைகளை பல ஆண்டுகளாகப் பார்த்ததேயில்லை. ஒரு கண்ணாடித் தகட்டின் வழியே பேசிக்கொள்வதற்குப் பதிலாக அவர்கள் தாங்கள் நேசிக்கும் நபரைத் தொட்டு பிடித்துக் கொள்ளலாம். அந்த குடும்பங்கள் நெருக்கமாக வந்த போது, அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவர்களுடைய உள்காயங்கள் ஆற ஆரம்பித்தன.

அநேக வாசகர்களுக்கு இது வெறும் கதையாக இருந்திருக்கலாம். ஆனால், அந்த குடும்பங்களுக்கு, அது ஒரு வாழ்வை மாற்றும் நிகழ்வு. சிலருக்கு அது மன்னிப்பதற்கும் மனம் பொருந்தலுக்கும் ஆரம்பமாயிருந்தது.

தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்ததும், நம்மோடு ஒப்புரவை ஏற்படுத்திக் கொண்டதும் அவருடைய குமாரன் மூலமாகவே நடைபெற்றது. இது கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட, மேம்பட்ட ஓர் உண்மை. அந்த செய்தித் தாளில் வெளியான மனம் பொருந்துதலின் செய்தி, இயேசுவின் தியாகத்தின் மூலம் இவ்வுலகிற்கு மட்டுமல்ல, உனக்கும் எனக்கும் கொடுத்துள்ள ஒப்புரவாகுதலின் மிகப் பெரிய செய்தியை நமக்கு நினைப்பூட்டுகின்றது.

நாம் நடப்பித்த ஏதோ ஒரு பாவச் செயலின் குற்ற உணர்வினால், நாம் மேற்கொள்ளப்பட்டவர்களாயிருக்கும் நேரத்தில் நாம் பற்றிக்கொள்ள வேண்டிய செய்தி அது தேவனுடைய அளவற்ற இரக்கம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையே அந்த செய்தி. நம்முடைய மீறுதல்களினிமித்தம் இயேசு மரித்தார். எனவே நாம் நம்முடைய பாவங்கள் கழுவப்பட்டவர்களாகத் தந்தையிடம் வருவோம். இயேசு நம்மை, 'உறைந்த மழையிலும் வெண்மையாய்" (சங். 51:7) நம்மைக் கழுவுகின்றார். நாம் தேவனுடைய இரக்கத்தைப் பெற தகுதியற்றவர்களென நினைக்கும் நேரங்களில் நாம் சார்ந்திருக்கக் கூடிய ஒரே காரியத்தை நாம் பற்றிக் கொள்வோம். அது தேவனுடைய கிருபையும், மாறாத மிகுந்த இரக்கமுமே (வச. 1).

பாலகர் வாயினால்

பத்து வயது நிரம்பிய வயோலா ஒரு மரக் கொப்பை மைக்ரோபோன் போல பாவித்து, ஒரு போதகரைப் போன்று பிரசங்கம் செய்து கொண்டிருந்ததை கவனித்த மிச்சேல், கிராம ஊழியத்தின் போது வயோலாவிற்கு பிரசங்கம் செய்ய ஒரு வாய்ப்பளிக்கத் தீர்மானித்தாள். வயோலாவும் அதற்குச் சம்மதித்தாள். மிச்சேல், தெற்கு சூடானில் ஊழியம் செய்யும் ஒரு மிஷனரி. 'அந்தக் கூட்டம் அதிக மகிழ்ச்சியினால் நிரப்பப்பட்டது... கைவிடப்பட்ட ஒரு சிறு பெண் அந்தக் கூட்டத்தினருக்கு முன்பாக ராஜாதி ராஜாவின் மகளாக அதிகாரத்தோடு நிற்கின்றாள். தேவனுடைய இராஜ்யத்தின் உண்மையை வல்லமையாக, அவர்களோடு பகிர்ந்து கொள்கின்றாள். பாதி கூட்டத்தினர் இயேசுவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள முன் வந்தனர்" என்று மிச்சேல் தன்னுடைய 'அன்பிற்கு ஒரு முகமுண்டு" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளாள். அந்தக் கூட்டத்தினர். அன்று ஒரு குழந்தையின் வாயினால் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை. இந்த நிகழ்வு என்னுடைய மனதில் சங்கீதம் 8ல் காணப்படுகின்ற 'குழந்தைகள், பாலகர் வாயினால்" என்ற சொற்றொடரை நினைவிற்குக் கொண்டு வந்தது. தாவீது 'உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள், பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்" என எழுதுகின்றார் (8:2). இதனையே இயேசு மத்தேயு 21:16ல் குறிப்பிடுகின்றார். தேவாலயத்தில் ஆர்ப்பரிக்கின்ற பிள்ளைகளை பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் கண்டு கோபமடைந்தபோது இயேசு இந்த வசனத்தை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றார். அந்த தலைவர்களுக்கு குழந்தைகள் இடறுதலாகக் காணப்பட்டனர். ஆனால், இயேசு அவர்களுக்கு வேத வாக்கியத்தைச் சுட்டிக் காண்பித்து, தேவன் குழந்தைகளின் துதியைப் பெரிதாகக் கருதுவதாகக் கூறுகின்றார். அந்தத் தலைவர்கள் செய்வதற்கு மறுத்த ஒன்றை குழந்தைகள் நிறைவேற்றினர். தாங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மேசியாவை குழந்தைகள் மகிமைப்படுத்தினர்.

வயோலாவும் தேவாலயத்தில் இருந்த குழந்தைகளும் காண்பித்தது போல, தேவன் ஒரு சிறு குழந்தையைக் கூட தனக்கு மகிமையுண்டாக பயன்படுத்த முடியும். குழந்தைகளின் உள்ளத்திலிருந்து மனமார்ந்த துதி வெள்ளம் போல வந்தது.

தவறான தகவல்களைச் செயல்படுத்தாதே

சமீபத்தில் நான் நியூயார்க் பட்டணத்திற்குச் சென்றிருந்தபோது, என் மனைவியும் நானும் ஒரு பனிபொழிவின் சாயங்காலத்தில், தைரியமாக அதனூடே செல்ல விரும்பினோம். எனவே நாங்கள் எங்கள் விடுதியிலிருந்து கியூபன் சிற்றுண்டியகம் வரையிலும் மூன்று மைல் பயணத்திற்கு ஒரு வாடகை கார் ஒன்றினை எடுத்தோம். வாடகைக் கார் சேவை பதிவில் விளக்கங்களைப் பார்த்த போது, நான் அதிர்ச்சியடைந்தேன். ஒரு சிறிய தொலைவு பயணத்திற்கு 1547.26 டாலர்கள் என குறிப்பிட்டிருந்தனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, மேலும் பார்த்த போது தான், நான் தவறுதலாக எங்கள் வீட்டிற்கு திரும்புவதற்கு எனப் பதித்திருந்ததைக் கவனித்தேன். அது பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள இடம்!

நீ தவறான செய்தியின் மீது செயல்பட்டுக் கொண்டிருந்தால் அதன் முடிவு எப்பொழுதும் அழிவுக்கு நேராகத்தானிருக்கும். எனவேதான் நீதிமொழிகள், 'உன் இருதயத்தை புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக" என வலியுறுத்துகின்றது (நீதி. 23:12). அறிவிலிகளிடமும், தங்களுக்கு அதிகம் தெரியுமென நடிப்பவர்களிடமும், தேவனுக்கு தங்கள் முதுகைக் காட்டுபவர்களிடமும் ஆலோசனையைத் தேடுவாயானால், நிச்சயமாகப் பிரச்சனைகளையே சந்திக்க நேரிடும். 'மூடன்... உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை பண்ணுவான்" (வச. 9) அவர்கள் நம்மை வழிவிலகிப்போகப் பண்ணுவார்கள், உதவமாட்டார்கள், தவறாக வழிகாட்டுவார்கள், இன்னும் அழிவுக்குள்ளாக்கும் ஆலோசனைகளையே தருவர்.

ஆனால், உன் செவியை 'அறிவின் வார்த்தைகளுக்குச் சாய்ப்பாயாக" (வச. 12) நம்முடைய இருதயத்தை தேவனுடைய விடுதலை தரும் ஆலோசனைகளுக்கும் தெளிந்த நம்பிக்கையின் வார்த்தைகளுக்கும் திறபப்பாயாக. தேவனுடைய ஆழமான வழியைக் கண்டுபிடித்தவர்களுக்கு செவி கொடுப்போமாகில் அவர்கள் நம்மை தேவ ஞானத்தைப் பெறவும், அதனைப் பின்பற்றவும் உதவுவர். தேவ ஞானம் ஒரு போதும் நம்மை பாதை தவற விடாது. ஆனால், அது நம்மை ஜீவனுக்கு நேராகச் செல்ல ஊக்கப்படுத்தி, முடிவுபரியந்தம் வழிநடத்தும்.

ஃபீக்காவின் உற்சாகம்

எங்கள் பட்டணத்தில், என் வீட்டினருகிலுள்ள காப்பியகத்தின் பெயர் 'பீக்கா" இது ஸ்வீடன் வார்த்தை. இதற்கு குடும்பத்தினரோடும் உடன் பணிபுரிபவர்களோடும் அல்லது நண்பர்களோடும் உடன் பணிபுரிபவர்களோடும் அல்லது நண்பர்களோடும் ஒர் இடைவெளியில் காப்பியும், சிற்றுண்டியும் எடுத்துக் கொள்ளலாம் என அர்த்தம், நான் ஸ்வீடன் நாட்டினன் அல்ல. ஆனாலும் ஃபீக்காவின் உற்சாகம், நாம் இயேசுவைப் பற்றி நேசிக்கும் ஒரு காரியத்தை எனக்கு விளக்கியது. இயேசுவும் பிறரோடு உணவருந்தவும்,  இளைப்பாறவும் ஓர் இடைவெளியை எடுத்துக் கொண்டார்.

இயேசுவும் பிறரோடு சேர்ந்து உணவருந்தியதும் தற்செயலாய் நடைபெற்றவையல்லவென வேத வல்லுனர்கள் சொல்கின்றனர். வேதவல்லுனர் மாற்கு கிளான்வில் அவற்றை, பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டுள்ள இஸ்ரவேலரின் விருந்தினையும் பண்டிகையும் போன்ற ஒரு 'மகிழ்ச்சியான இரண்டாம் விருந்து" என அழைக்கின்றார். 'முழு உலகிற்கும் மகிழ்ச்சி, கொண்டாட்டம் மற்றும் நீதியின் மையமாக" இஸ்ரவேலரை தேவன் வைத்திருந்ததைப் போன்று இயேசுவும் விருந்தின் மையமாகத் திகழ்ந்தார்.

5000 பேரை போஷித்தது முதல் கடைசி ராப்போஜனம் மற்றும் உயிர்த்தெழுந்த பின்னர் இரண்டு சீடர்களோடு உணவருந்தியது வரையில் (லூக். 24:30) இயேசுவின் போஜன ஊழியம், நம்மையும் நம்முடைய தொடர் போராட்டங்களிலிருந்து விடுபட்டு சிறிது நின்று அவரோடு சில நேரம் செலவிட அழைக்கின்றது. அந்த இரண்டு சீடர்களும் இயேசுவோடு உணவருந்தும் மட்டும் இயேசுவை உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாக கண்டுபிடிக்க முடியவில்லை. 'அவர்களோடு அவர் பந்தியிருக்கையில் அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு அவரை அறிந்தார்கள்" 9வச. 30-31) அவரே உயிர்த்தெழுந்த கிறிஸ்து எனக் கண்டுகொண்டனர்.

சமீபத்தில் என்னுடைய நண்பனோடு அந்த ஃபீக்காவில் அமர்ந்திருந்து சூடான சாக்லேட் பானமும், சுருள்களும் சாப்பிட்டபோது, நாங்கள் இயேசுவைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அவரே நம் வாழ்வில் ஜீவ அப்பம் நாமும் அவரோடு போஜனபந்தியில் நேரம் செலவிட்டு அவரைக் குறித்து இன்னும் தெரிந்து கொள்வோம்.

முற்றிலும் பிரம்மிக்கச் செய்கிறது

என்னுடைய வாழ்வில் அடிக்கடி பரபரப்பையும், வெறித்தனத்தையும் உணருகின்றேன். நான் ஒரு வேலையிலிருந்து மற்றொன்றிற்கு வேகமாக மாறுகிறேன், அவசரமாக அலைபேசி அழைப்புகளில் பேசுவதும், போகின்ற வழியிலேயே. அன்று முடிக்கப்படவேண்டிய வேலைகளின் நீண்டபட்டியலை சரிபார்ப்பதுமாக இருப்பேன். மிகவும் சோர்வடைந்த நிலையில் ஒரு ஞாயிறு, எங்கள் வீட்டின் பின்புறம் அமைந்துள்ள ஊஞ்சல் படுக்கையில் சாய்ந்தேன். என்னுடைய கைப்பேசி வீட்டிலிருந்தது, என்னுடைய குழந்தைகளும் கணவரும் வீட்டிலிருந்தனர். நான் ஒருசில நிமிடங்கள் மட்டுமே உட்கார்ந்து விட்டு செல்லலாம் என்று அங்கு வந்தேன். ஆனால், அங்கிருந்த தடையில்லாத அமைதி, நான் அங்கு கண்ட காட்சிகளை மேலும் மேலும் பார்க்கத் தூண்டியது. என்னுடைய ஊஞ்சல் படுக்கையின் அசைவினால் ஏற்பட்ட மெல்லிய சத்தத்தையும், அருகிலுள்ள லாவண்டர் மலர்களைச் சுற்றிக் கொண்டிருந்த தேனீக்களின் ரீங்காரத்தையும், எனக்கு மேலே பறந்த பறவைகளின் இறக்கையொலியையும் என்னால் கேட்க முடிந்தது. பிரகாசமான நீல வானில், காற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேகங்களையும் கண்டு வியந்தேன்.

தேவன் படைத்த அனைத்தையும் பார்த்தபோது என் கண்கள் கண்ணீரால் நிரம்பிற்று. என் கண்களின் வழியேயும், செவியின் வழியேயும் இத்தனை அதிசயமான காரியங்களைப் பார்க்கவும், கேட்கவும் நான் அதிக நேரத்தைக் கொடுத்தபோது, நன்றி நிறைந்த உள்ளத்தோடு, தேவனுடைய படைப்பின் வல்லமையை வியந்து, ஆராதிக்க ஆரம்பித்தேன். சங்கீதம் 104ஐ எழுதியவரும், தேவனுடைய கரத்தின் கிரியைகளைக் கண்டு வியந்து, தன்னைத் தாழ்த்தி, 'உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது" என்கின்றார் (வச. 13).

ஓர் அவசரமான வாழ்வின் நடுவில், ஓர் அமைதியான நேரம் தேவனுடைய வல்லமையுள்ள படைப்பாற்றலை நம்முடைய நினைவில் கொண்டு வருகிறது. அவருடைய வல்லமையான படைப்பும், அவருடைய மென்மையும் நம்மைச் சூழ்ந்திருக்கின்றது. அவரே உயர்ந்த பர்வதங்களையும் பறவைகள் தங்கும் மரக்கிளைகளையும் படைத்தார். 'அவைகளையெல்லாம் ஞானமாய் படைத்தீர்" (வச. 24).

தேவனுடைய சித்தத்தின்படி வாழல்

எர்னஸ்ட் ஹெம்மிங்வேயிடம் ஒருமுறை ஆறு வார்த்தைகளில் ஒரு கதையை எழுதுமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர், ''விற்பனைக்கு உள்ளன- குழந்தையின் ஷூ_க்கள், இதுவரை அணியப்படாதவை" என எழுதினார். ஹெம்மிங்வேயின் கதை மிகவும் வலிமை வாய்ந்தது, ஏனெனில் அது நம்மை, அதற்கான விளக்கங்களை நிரப்பும்படி சிந்திக்கச் செய்கின்றது. சுகமாய் வாழும் ஒரு குழந்தையால் அந்த ஷூ _க்களை பயன்படுத்த முடியவில்லையா? அல்லது அங்கு ஒரு கொடுரூரமான இழப்பா? ஏதோ ஓரிடத்தில் தேவனுடைய ஆழ்ந்த அன்பும் ஆறுதலும் தேவைப்படுகின்றதா?

மிகச் சிறந்த கதைகள் நம் கற்பனையில் தூண்டப்படுகின்றன. இதுவரை பேசப்படாத மிகப் பெரிய கதை நம்முடைய சிந்தனையில் உருவாகிறது. தேவனுடைய கதையிலும் ஒரு மத்திய கருத்து உள்ளது. தேவன் யாவையும் படைத்தார். நாம் (மனித குலம்) பாவத்தில் விழுந்தோம். இயேசு இவ்வுலகிற்கு வந்தார், மரித்தார், நம்மை பாவத்திலிருந்து விடுவிக்க, அவர் உயிர்த்தெழுந்தார், மீண்டும் நாம் அவருடைய வருகையையும் அனைத்தையும் மீட்டு புதுப்பிக்கும் நாளையும் எதிர்பார்த்திருக்கின்றோம்.

முன்பு என்ன நடந்ததென்பதையும், இனிமேல் என்ன நடக்குமென்பதையும் தெரிந்து கொண்ட நாம், இப்பொழுது எப்படி வாழவேண்டும்? இயெசு தன்னுடைய படைப்புகள் அனைத்தையும் பொல்லாங்கனின் பிடியிலிருந்து மீட்டு புதிதாக்கும் போது, 'அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்" (ரோம. 13:12) இதன் மூலம், தேவ பெலத்தால் நாம் பாவத்தை விட்டுத் திரும்பி, அவரையும் மற்றவர்களையும் அன்புகூரத் தெரிந்து கொள்வோம் (வச. 8-10).

நாம் இயேசுவோடு சேர்ந்து என்னென்ன வழிகளில் பாவத்திற்கு எதிர்த்து நிற்கலாமென்பது, நமக்கிருக்கின்ற கொடைகளையும், என்ன தேவைகள் நமக்கிருக்கின்றன என்பதைச் சார்ந்ததேயாம். நாம் நம்முடைய கற்பனையை பயன்படுத்தி நம்மைச் சுற்றிலும் பார்ப்போம். நாம் காயமுற்றவர்களையும், அழுகின்றவர்களையும் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு தேவனுடைய நீதியையும் அன்பையும், ஆறுதலையும் தேவனுடைய வழிநடத்தலின்படி கொடுப்போம்.

அவர் நமது கரத்தைப் பிடித்திருக்கின்றார்

ஓர் அழகிய, துடுக்கான சிறுபெண், ஒரு ஞாயிறன்று, ஆலயத்தில் தனியாகப் படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தாள். இரண்டு வயதிற்கு மிகாத அச்சிறுமி, ஒவ்வொருபடியாக இறங்கி, ஆலயத்தின் கீழ் தளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள். கீழ் தளத்திற்குச் செல்லவேண்டுமென்பதே அவளுடைய தீர்மானம் அதை நிறைவேற்றியும் விட்டாள். நான் இக்குழந்தையின் தைரியமான செயலை நினைத்துப் பார்த்து, எனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டேன். இக்குழந்தை பயப்படவேயில்லை, ஏனெனில், அக்குழந்தையின் தாயின் கண்கள் அக்குழந்தையை கவனித்துக் கொண்டேயிருக்கின்றன என்பதும் அத்தாயின் கரங்கள் எப்பொழுதும் உதவும்படி ஆயத்தமாயிருக்கின்றன என்பதும் அக்குழந்தைக்குத் தெரியும். இந்தக் காட்சி, நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய பிள்ளைகள் இந்த நிலையற்ற உலகினை கடந்து செல்வதற்கு உதவும்படி எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறாரென்பதை எனக்கு நினைவுபடுத்தியது.

இன்றைய வேதாகமப் பகுதி இருவகையான குறிப்புகளைத் தருகிறது. ஆதிமனிதரை பயப்படவும், சோர்ந்து போகவும் வேண்டாமெனக் கூறும் தேவன் அவர்களிடம், 'என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்" (ஏசாயா 41:10) என்கின்றார். அநேக ஆர்வமும், பயமும் உள்ள குழந்தைகள், தங்கள் பெற்றோருடைய பெலத்தால் நிலைப்படுத்தப்படுகின்றனர். இங்கு தேவனுடைய வல்லமை செயல்படுவதைக் காண்கின்றோம். இரண்டாவதாக தேவன் தன்னுடைய பிள்ளைகளுக்கு பாதுகாப்பையளிக்கின்றார். 'உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையைப் பிடித்து பயப்படாதே" (வச. 13) என்கின்றார். வாழ்வின் சூழ்நிலைகளும், நேரமும் மாறலாம். ஆனால், தேவன் மாறாதவர். நாம் கலங்கத் தேவையில்லை (வச. 10). ஏனெனில், தேவனுடைய வாக்குகள் நமக்கு உறுதியைத் தருகின்றது. நம்முடைய அவலநிலையில் தேவன் நமக்குத் தேவையான வார்த்தைகளைத் தருகின்றார். 'பயப்படாதே" (வச. 10,13) என்கின்றார்.

ஜீவ பலி

என்னுடைய பெரிய அத்தை விளம்பரம் செய்கின்ற ஒரு நல்ல வேலையிலிருந்தார்கள். தன்னுடைய வேலையினிமித்தம் சிக்காகோவிற்கும் நியூயார்க்கிற்குமிடையே அடிக்கடி பிரயாணம் செய்வார்கள். ஆனால், தன்னுடைய பெற்றோரின் மீதிருந்த அன்பினால், தன்னுடைய சிறப்பான எதிர்காலத்திற்கு வழிவகுக்கக் கூடிய இந்த வேலையை விட்டுவிட எண்ணினார்கள். அவளுடைய பெற்றோர் மினிசோட்டா என்ற இடத்திலிருந்தபடியால் அங்கு அவர்களை கவனிக்க வேண்டியிருந்தது. அவளுடைய இரு சகோதரரும் இளம் வயதிலேயே சோகமாக மரித்ததால் இவர் மட்டுமே அவளுடைய பெற்றோரைக் கவனிக்க வேண்டியிருந்தது. அவரைப் பொருத்தவரை தன் பெற்றோருக்குப் பணி செய்வதையே தன் விசுவாசத்தின் வெளிப்பாடாக கருதினாள்.

ரோமாபுரியிலுள்ள சபைகளுக்கு பவுல் எழுதும் போது விசுவாசிகள் தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுக்கும்படி வேண்டிக்கொள்கின்றார் (ரோம. 12:1). கிறிஸ்துவின் அன்போடு கூடிய தியாகத்தை அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஒருவருக்கொருவர் கொடுக்கும்படி விரும்புகின்றார். உங்களில் ஒருவனும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ண வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கின்றார் (வச. 3). அவர்களுக்குள்ளே வாக்குவாதங்களும் பிரிவினைகளும் வராதபடிக்கு பெருமையானவற்றை விட்டு விடவும் ஆலோசனைக் கூறுகின்றார். 'அநேகராகிய நாம் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்" (வச. 5) எனவே நாம் ஒருவருக்கொருவர் மாயமற்ற அன்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென விரும்புகின்றார்.

ஒவ்வொரு நாளும், நாம் பிறருக்குப் பணிசெய்யும்படி அநேக வாய்ப்புகள் கிடைக்கின்றன. நாம் ஏதோவொரு வரிசையில் நமக்குப் பிந்தி நிற்பவரை நமக்கு முன்னே செல்ல வழிவிடலாம் அல்லது எனது அத்தையைப் போன்று சுகவீனமான ஒருவனைக் கவனிக்கலாம், அல்லது நம்முடைய அநுபவங்களிலிருந்து மற்றவருக்கு ஆலோசனைகளைத் தந்து வழிகாட்டலாம். நம்மை இவ்வாறு ஜீவபலியாக ஒப்புக் கொடுக்கும் போது, நாம் தேவனைக் கனப்படுத்துகின்றோம்.