எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

அலிசன் கீடாகட்டுரைகள்

தயவான செய்கைகள்

கருச்சிதைவு ஏற்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, வலேரி ஒரு சில பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்தாள். சில மைல்களுக்கு அப்பால் இருந்த அவளுடைய ஜெரால்ட் என்னும் கைவினையாளர் ஒருவர் அவள் விற்ற குழந்தை தொட்டிலை ஆர்வத்துடன் வாங்கினார். அதை வாங்கும்போது, வலேரியிடம் பேசிய அவரது மனைவியின் வாயிலாக, வலேரியின் பெரும் இழப்பைக் குறித்து அறிந்துகொண்டார். வீட்டிற்கு செல்லும் வழியில் அவளது நிலைமையைக் கேள்விப்பட்ட ஜெரால்ட், தொட்டிலைப் பயன்படுத்தி வலேரிக்கு ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்க முடிவு செய்தார். ஒரு வாரம் கழித்து, அவர் கண்ணீருடன் ஒரு அழகான பெஞ்சை அவளுக்கு பரிசளித்தார். “இங்கே நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், அதற்கான ஆதாரம் இங்கே இருக்கிறது" என்று வலேரி பெருமிதப்பட்டாள். 

வலேரியைப் போலவே, ரூத்தும் நகோமியும் பெரும் இழப்பை தங்களுடைய வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தது. நகோமியின் கணவரும் அவளுடைய இரண்டு குமாரர்களும் மரித்துபோய்விட்டனர். தற்போது அவளும் அவளுடைய மருமகளான ரூத்தும் ஆதரவற்று நிர்க்கதியாய் நிற்கின்றனர் (ரூத் 1:1-5). அங்கே தான் போவாஸ் வருகிறார். போவாஸின் நிலத்தில் சிந்தியிருக்கும் கதிர்களை பொறுக்குவதற்கு போன ரூத்தைக் குறித்து போவாஸ் கேள்விப்படுகிறார். அவள் யார் என்று அறிந்த பின்பு அவளுக்கு தயைபாராட்டுகிறார் (2:5-9). “எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயைகிடைத்தது” (வச. 10) என்று ரூத் ஆச்சரியத்துடன் கேட்கிறாள். அதற்கு போவாஸ்,  “உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், ... எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது” (வச. 11) என்று பதிலளிக்கிறான். 

போவாஸ் ரூத்தை மணந்துகொண்டு, நகோமியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறான் (வச. 4). அவர்களுடைய அந்த திருமணத்தின் மூலம், முற்பிதாவான தாவீது மற்றும் இயேசுகிறிஸ்து அவர்களின் வம்சாவளியில் தோன்றுகின்றனர். ஜெரால்டையும் போவாஸையும் தேவன் பயன்படுத்தி மற்றவர்களின் கண்ணீரை தேவன் துடைப்பார் என்றால், வேதனையில் உள்ளவர்களின் கண்ணீரை துடைக்க தேவன் நம் மூலமாகவும் கிரியை செய்ய முடியும்.

ஏமாற்றத்தை சமாளித்தல்

தங்களின் வாழ்நாள் சுற்றுப்பயணத்திற்கு பணம் திரட்டிய அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா உயர்நிலைப் பள்ளியின் படித்த முதியவர்கள் குழு, விமான நிலையத்திற்கு வந்தபிறகு தான் அவர்களில் பலர் ஒரு போலி நிறுவனத்திடமிருந்து டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர் என்பதை அறிந்துகொண்டனர். “இது மனதிற்கு வேதனையளிக்கிறது” என்று ஒரு பள்ளி நிர்வாகி கூறினார். இதினிமித்தம் அவர்கள் தங்கள் திட்டங்களை மாற்ற வேண்டியிருந்தாலும், அந்த சூழ்நிலையை அவர்கள் சாதகமாய் பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தனர். டிக்கெட்டுகளை அவர்களுக்கு நன்கொடையாக வழங்கிய அருகிலுள்ள சுற்றுலாத்தலங்களில் இரண்டு நாட்கள் அவர்கள் மகிழ்ந்திருந்தனர்.

தோல்வியுற்ற அல்லது மாற்றப்பட்ட திட்டங்களைக் கையாள்வது சற்று ஏமாற்றமாகவும், இருதயத்தை உடைக்கக்கூடியதாகவும் இருக்கும். குறிப்பாக நேரத்தையோ, பணத்தையோ அல்லது உணர்ச்சியையோ திட்டமிடுதலில் முதலீடு செய்தவர்களுக்கு இது அதிக வேதனையளிக்கக்கூடியது. தாவீது ராஜா தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று தன் மனதிலே நினைக்கிறான் (1 நாளாகமம் 28:2). ஆனால் தேவன் அவரிடம் “நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்... உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிராகாரங்களையும் கட்டக்கடவன்” (வச. 3,6) என்று சொல்கிறார். தாவீது விரக்தியடையவில்லை. இஸ்ரவேலின் ராஜாவாக தேவன் அவரை தேர்வுசெய்ததற்காய் தேவனை துதிக்கிறார். மேலும் ஆலயத்தை கட்டுவதற்கு தேவன் சாலொமோனுக்குத் திட்டங்களைக் கொடுத்தார் (வச. 11-13). தாவீது சாலெமோனைப் பார்த்து, “நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; தேவனாகிய கர்த்தர் ... உன்னோடே இருப்பார்” (வச. 20) என்று ஊக்கப்படுத்துகிறார். 

நம்முடைய திட்டங்கள் தோல்வியுறும்போது, அது எந்த பிரச்சனையாயிருந்தாலும் நம்முடைய தேவன் “உங்களை விசாரிக்கிறவரானபடியால்” (1 பேதுரு 5:7) நம்முடைய கவலைகளையெல்லாம் அவர் மீது வைத்துவிடுவோம். நம்முடைய கவலைகளை கிருபையோடு கையாளுவதற்கு அவர் நமக்கு உதவிசெய்வார்.

நம் தேர்ந்தெடுப்புகள் முக்கியம்

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஒரு நீச்சல் பயிற்றுவிப்பாளர், நெவார்க் விரிகுடாவில் கார் ஒன்று மூழ்குவதைக் கண்டார். அந்த கார் தண்ணீரில் மூழ்கும்போது அதின் ஓட்டுநர் “எனக்கு நீச்சல் தெரியாது” என்று அலறும் சத்தத்தைக் கேட்டார். கரையிலிருந்து ஒரு கூட்டம் பார்த்தபோது, அந்தோனி விளிம்பில் இருந்த பாறைகளுக்கு ஓடி, தனது செயற்கை காலை அகற்றி, அறுபத்தெட்டு வயது முதியவரைக் காப்பாற்றி, அவரைக் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். அந்தோனியின் துரிதமான முயற்சிக்கு நன்றி. அதின் மூலம் மற்றொரு நபர் காப்பாற்றப்பட்டார்.

நம்முடைய தேர்ந்தெடுப்புகள் முக்கியமானவைகள். யாக்கோபைப் பாருங்கள். அநேகருக்கு தகப்பனான யாக்கோபு தன்னுடைய பதினெழு வயது நிரம்பிய யோசேப்பை அதிகமாய் நேசித்தான் (ஆதியாகமம் 37:3). அதின் விளைவு? யோசேப்பின் சகோதரர்கள் அவனை நேசித்தனர் (வச. 4). அவர்களுக்கு சமயம் கிட்டியபோது அவனை அடிமைத்தனத்தில் விற்றுப்போட்டனர் (வச. 28). யோசேப்பின் சகோதரர்கள் அவனை வெறுத்து ஒதுக்கினாலும், தேவன் யோசேப்பை எகிப்துக்கு கொண்டுபோய், அங்கே அவனுடைய ஸ்தானத்தை உயர்த்தி, ஏழு ஆண்டுகள் பஞ்சத்தின்போது தன்னுடைய குடும்பத்தை பராமரிக்கும்படி செய்தார் (50:20). யோசேப்பு அந்த மேன்மையை அடைவதற்கு போத்திபாரின் மனைவியிடத்திலிருந்து ஓடுவதை தெரிந்துகொண்டான் (39:1-12). அதின் விளைவு சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டான் (39:20), ஆனால் பார்வோனை சந்திக்கிறான் (41அதி.). 

அந்தோனி மிகவும் நேர்த்தியாய் பயிற்சிபெற்ற ஒரு நபராய் இருந்திருக்கலாம், ஆனால் அவன் துரிதமாய் தீர்மானம் எடுக்கவேண்டியது அவசியமாயிருந்தது. நாமும் தேவனை நேசித்து அவருக்கு ஊழியம் செய்வோமாகில், அவர் வாழ்க்கையை ஸ்திரப்படுத்துகிற மற்றும் தேவனை மகிமைப்படுத்துகிற தீர்மானங்களை எடுக்க நமக்கு உதவிசெய்வார். இதுவரை அதை நாம் செய்யாமல் இருந்திருப்போமாகில், இயேசுவை நம்புவதின் மூலம் இனி அதை நாம் துவக்கலாம்.

சத்தமாய் சிரித்தல்

அமெரிக்க நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான ஜான் பிரான்யன், “நாம் சிரிப்பதைக் குறித்து யோசிக்கவில்லை; அது நம்முடைய எண்ணமே இல்லை. அது வாழ்க்கை முழுவதும் நமக்கு தேவைப்படும் என்பதை அறிந்த தேவனே அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் போராட்டங்களை சந்திக்கப்போகிறோம் என்பதையும் உபத்திரவங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். சிரிப்பு என்பது ஒரு வரம்” என்கிறார்.

தேவன் படைத்த சில உயிரினங்களை பார்த்த மாத்திரத்தில் நமக்கு சிரிப்பு வரலாம். அவற்றின் விநோதமான உருவ அமைப்பும், அவைகள் செய்யும் குறும்புத்தனமும் நம்முடைய சிரிப்பிற்கு காரணமாகலாம். கடலில் வாழும் பாலூட்டிகளையும், பறக்க முடியாத நீண்ட கால்கள் கொண்ட பறவைகளையும் தேவன் படைத்தார். தேவன் இயல்பில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நமக்கும் நகைச்சுவை உணர்வு இயல்பானது. 

வேதாகமத்தில் நகைப்பு என்னும் வார்த்தையை ஆபிரகாம் மற்றும் சாராள் சம்பவத்தில் தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். இந்த வயதான தம்பதியருக்கு தேவன், “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” (ஆதியாகமம் 15:4) என்று வாக்குப்பண்ணுகிறார். மேலும், “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு... உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” (வச. 5) என்றும் தேவன் சொன்னார். இறுதியில் தன்னுடைய தொன்னூறாம் வயதில் சாராள் பிள்ளை பெற்றபோது, ஆபிரகாம் “நகைப்பு” என்று அர்த்தம்கொள்ளும் ஈசாக்கு என்னும் பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறான். சாராளும் ஆச்சரியத்தில், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்” (21:6) என்று கூறுகிறாள். அந்த பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது குறித்து அவள் வியப்பாகிறாள். அவளுக்கு பிள்ளை பிறக்கும் என்று தேவன் முதலில் சொன்னபோது, சந்தேகத்தில் சிரித்த அவளுடைய சிரிப்பை (18:2) ஆச்சரியமான சிரிப்பாய் தேவன் மாற்றுகிறார். 

சிரிப்பு என்னும் வரத்திற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே!

தேவன் கேட்கிறார்

நடிகரும், தற்காப்புக் கலைஞருமான சக், தனது தாயாரின் நூறாவது பிறந்தநாளில், தனது மனமாற்றத்திற்கு அவர் எவ்வளவு உதவியாக இருந்தார் என்பதைப் பகிர்ந்துகொண்டு அவரது தாயைக் கௌரவித்தார். "அம்மா விடாமுயற்சி மற்றும் நம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு" என்று அவர் எழுதினார். மகா பஞ்சகாலத்தில், தன் மூன்று ஆண் குழந்தைகளைத் தானே பராமரித்தாள்; இரண்டு வாழ்க்கைத் துணைவர்கள், ஒரு மகன், ஒரு வளர்ப்பு மகன் மற்றும் பேரக்குழந்தைகளின் மரணங்களைச் சகித்தாள்; மற்றும் பல அறுவை சிகிச்சைகளை தாங்கினாள். "சிறிதோ, பெரிதோ [அவள்] என் வாழ்நாள் முழுவதும் எனக்காக ஜெபித்தாள்." என்றவர் மேலும், "திரைத்துறையில் என்னை அர்ப்பணிக்கையிலும், அவள் என் வெற்றி மற்றும் இரட்சிப்புக்காக வீட்டில் ஜெபித்தாள்." என்றும், " நான் எவ்வாறு இருக்கவேண்டுமோ, இருக்க கூடுமோ அவ்வாறே என்னைத் தேவன் மாற்றியதற்காக என் அம்மாவுக்கு நன்றி." என்று முடித்தார்.

சக்கின் தாயின் பிரார்த்தனைகள் அவருக்கு இரட்சிப்பையும், தேவனுக்குப் பயந்த மனைவியையும் கண்டறிய உதவியது. அவள் தன் மகனுக்காக ஊக்கமாக ஜெபித்தாள், தேவன் அவளுடைய ஜெபங்களைக் கேட்டார். எப்பொழுதும் நமது ஜெபங்களுக்கு நாம் விரும்பும் விதத்தில் பதில் கிடைப்பதில்லை, எனவே ஜெபத்தை மந்திரக்கோலாகப் பயன்படுத்த முடியாது. இருப்பினும் யாக்கோபு, "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.” (5:16) என்று நமக்கு உறுதியளிக்கிறார். இந்த அம்மாவை போலவே, நோயுற்றவர்களுக்காகவும், பிரச்சனையில் இருப்பவர்களுக்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் (வவ. 13-15). அவளைப் போலவே, நாம் ஜெபத்தின் மூலம் தேவனுடன் தொடர்பு கொள்ளும்போது, உற்சாகத்தையும் அமைதியையும், ஆவியானவர் செயல்படுகிறார் என்ற உறுதியையும் கண்டுகொள்கிறோம்.

உங்கள் வாழ்க்கையிலுள்ள யாருக்காவது ஒருவருக்கு இரட்சிப்பு அல்லது குணமடைதல் அல்லது உதவி தேவையா? விசுவாசத்துடன் உங்கள் ஜெபங்களைத் தேவனிடம் கொண்டுசெல்லுங்கள். அவர் கேட்கிறார்.

இயேசுவைக்குறித்து பேசுதல்

ஒரு நேர்காணலில், கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு இசைக்கலைஞர், இயேசுவைப் பற்றிப் பேசுவதை நிறுத்தும்படி அவர் வலியுறுத்தப்பட்ட நேரத்தை நினைவு கூர்ந்தார். ஏன்? அவர் தமது வேலையே இயேசுவைக் குறித்தது என்று சொல்வதை நிறுத்தினால், அவரது இசைக்குழு மிகவும் பிரபலமாகி, ஏழைகளுக்கு உணவளிக்க அதிகப் பணம் திரட்ட முடியும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதைப் பற்றி யோசித்த பிறகு, அவர் முடிவு செய்தார், "என் இசையின் மையப்புள்ளியே கிறிஸ்துவிலுள்ள என் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்வதாகும். எந்த வழியிலும் அமைதியாக இருக்கப் போவதில்லை. இயேசுவின் செய்தியைப் பகிர்ந்துகொள்வதே எனக்குள் எரியும் அழைப்பு" என்று அவர் கூறினார்.

இதைக்காட்டிலும் ஆபத்தான சூழ்நிலையில், அப்போஸ்தலர்கள் இதேபோன்ற அறிவுரையைப் பெற்றனர். சிறையில் அடைக்கப்பட்டு அற்புதமாக ஒரு தூதனால் விடுவிக்கப்பட்டவர்கள்,  கிறிஸ்துவுக்குள்ளான புதிய வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களிடம் தொடர்ந்து சொல்லுமாறு கூறப்பட்டனர் (அப்போஸ்தலர் 5:19-20). அப்போஸ்தலர்கள் தப்பியோடியதையும், அவர்கள் இன்னும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார்கள் என்பதையும் மதத் தலைவர்கள் அறிந்தபோது, “நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா” (வ. 28.) என்று கண்டித்தனர்.

அவர்களோ "மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது." (வ. 29) என்று பதிலளித்தனர். இதன் விளைவாக, தலைவர்கள் அப்போஸ்தலர்களை அடித்து, இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டனர் (வ. 40). அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய் தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள். (வ. 41-42). அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றத் தேவன் நமக்கு உதவுவாராக!

மின்னும் காரியங்களை எதிர்கொள்வது

1960களில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி தொடர் ஒன்றின் கதாநாயகனைப் பார்த்து, ஒருவர் தன்னுடைய மகனை அவனுடைய வாழ்க்கையை சுய வழிகளில் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கொடுப்பதாக சொல்லுகிறார். அதற்கு கதாநாயகன், இளைஞர்களை அவர்கள் போக்குக்கு விட்டுவிடக்கூடாது என்று பதிலளிக்கிறான். அவர்கள் தங்கள் கண்களுக்கு முன்பாக மின்னக்கூடிய முதல் காரியத்தையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் அதில் பிரச்சனை இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும் தருவாயில் காலம் கடந்துவிடும். தவறான தேர்ந்தெடுப்புகள் மின்னக்கூடிய பாக்கெட்டுகளில் பார்வையை அதிகம் கவரக்கூடிய வகையில் இருக்கும். அதைத் தெரிந்தெடுப்பவர்களை சரியான பொருட்களின் வெகுகால பயன்பாட்டை சொல்லி புரியவைப்பது கடினம். ஆகையால் சரியான பழக்கவழக்கங்களை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்து “சோதனையை மேற்கொள்ள செய்வது” மிகவும் முக்கியமானது என்று அவர் சொல்லி முடிக்கிறார். 

இந்த கதாநாயகனுடைய வார்த்தைகள் நீதிமொழிகளின் ஞானத்திற்கு ஒத்திருக்கிறது: “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (22:6). நம்மில் பலர் இந்த வசனத்தை தேவனுடைய வாக்குத்தத்தமாய் கருதலாம். ஆனால் அவைகள் நல்வழிப்படுத்தும் ஆலோசனைகள். நாமெல்லாரும் சுயமாய் தீர்மானம் எடுத்து இயேசுவை பின்பற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவனையும் வேதத்தையும் நேசிப்பதின் மூலம் அதற்கான அஸ்திபாரத்தைப் போடமுடியும். நம்முடைய பாதுகாப்பில் இருக்கும் சிறுபிள்ளைகள் நாளை வளரும்போது, இயேசுவை தன்னுடைய வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு, “மாறுபாடுள்ளவனுடைய வழியிலே” (வச. 5) நடவாமல், அவருடைய வழியிலே நடப்பர். 

கண்களுக்கு முன்பாக மின்னக்கூடிய காரியங்களுக்கு பரிசுத்த ஆவியானவர் நம்மை விலக்கி, உறுதியான சாட்சியாய் நிறுத்துகிறார். கிறிஸ்துவின் ஆவி நம்முடைய சோதனைகளை மேற்கொள்ளச் செய்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியான ஜீவியமாய் நம்முடைய ஜீவியத்தை மாற்றுகிறது. 

சிறிய கருணை

அமண்டா, ஒரு சுற்றித்திரியும் செவிலியராகப் பணிபுரிகிறார். அவர் பல மருத்துவமனைகளில் சுழற்சி முறையில் வேலை செய்யவேண்டியிருக்கும். அடிக்கடி தன்னுடைய பதினொரு வயது மகள் ரூபியை வேலைக்கு அழைத்து வருவாள். ரூபி விளையாட்டுத் தனமாய் அங்கேயிருக்கும் நோயாளிகளிடம், “உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் கொடுத்தால், நீங்கள் விரும்புவது எதுவாயிருக்கும்” என்று கேட்பது வழக்கம். அவர்களுடைய பதிலை தன்னுடைய நோட்டு புத்தகத்தில் பதிவுசெய்து வைப்பாள். ஆச்சரியம் என்னவென்றால், அவர்களின் விருப்பங்கள் சிக்கன், சாக்லேட், வெண்ணை, பழங்கள் போன்ற சிறிய விஷயங்களாகவே இருந்தன. அவர்களின் தேவையை குறித்துக்கொண்ட ரூபி, அவற்றை வாங்குவதற்கு பணம் சேகரிக்கத் துவங்கினாள். அவர்கள் எதிர்பார்த்த பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது, அவர்களை கட்டித் தழுவி, இது உங்களுக்கு ஆறுதலாயிருக்கிறதா என்று கேட்பாளாம்.  

ரூபியைப் போல இரக்கத்தையும் கருணையையும் காட்டும்போது, நம் தேவனைப் பிரதிபலிக்கிறோம். அவர் “கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்” (சங்கீதம் 145:8). ஆகையினால்தான் அப்போஸ்தலனாகிய பவுல், தேவஜனமாகிய நம்மை, “பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு,” (கொலோசெயர் 3:12) ஜீவிக்கும்படிக்கு வலியுறுத்துகிறார். தேவன் நமக்கு அதிக இரக்கம் காண்பித்துள்ளபடியினால், அவருடைய இரக்கத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நாம் இயல்பாகவே தூண்டப்படுகிறோம். நாம் அவ்வாறு செய்யும்போது அது நாளடைவில் நம்முடைய சுபாவமாகவே மாறுகிறது. 

மேலும் பவுல், “இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்” (கொலோசெயர் 3:14) என்று கூறுகிறார். அனைத்து ஆசீர்வாதங்களும் தேவனிடமிருந்து வந்தவை என்பதை நினைவில் வைத்து, “நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து” (வச. 17), அவரை ஸ்தோத்தரியுங்கள் என்றும் நினைப்பூட்டுகிறார். நாம் மற்றவர்களிடம் இரக்கத்தை செயல்படுத்தும்போது, நம்முடைய ஆவி உயிர்ப்பிக்கப்படுகிறது. 

ஒளிருவதற்கான வாய்ப்புகள்

இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மத்தேயு 5:16
பெருந்தொற்று வெகுவாய் பரவிய நாட்களில் டெல்லியில் வசித்த ஷீத்தல் என்ற பெண், உணவில்லாமல் வருமானமில்லாமல் சாலையோரங்களில் ஆதரவற்று கிடந்த மக்கள் மீது பரிவு கொண்டாள். அவர்களின் நிலைமையை அறிந்து 10 பேருக்கு உணவு சமைத்து, அதைக் கொண்டுபோய் கொடுத்தாள். இந்த செய்தி வெகுவாய் பரவியது. சில தன்னார்வு நிறுவனங்கள் அவளுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து, அதின் விளைவாய், “ப்ராஜெக்ட் அன்னபூர்னா” என்ற திட்டம் உருவானது. 10 பேருக்கு உணவளிக்கத் துவங்கிய ஒரு பெண்ணிலிருந்து துவங்கிய இந்த முயற்சி, 50 தன்னார்வ தொண்டர்களுடன் 60,000 தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் பெரிய திட்டமாய் உருவெடுத்தது.
கொரோனா பெருந்தொற்றானது சேவை மனப்பான்மை கொண்ட பல நபர்களை ஒருங்கிணைத்தது. கிறிஸ்துவின் ஒளியை பிரகாசிக்கும் பல வாய்ப்புகள் கிறிஸ்தவர்களுக்குக் கிடைத்தது. இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு... உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16) என்று போதிக்கிறார். அன்பு, தயவு, நல்வார்த்தைகள் மற்றும் செய்கைகள் மூலமாக (கலாத்தியர் 5:22-23), கிறிஸ்துவின் ஒளியை நாம் பிரகாசிக்கச் செய்யலாம். இயேசுவின் மூலமாய் நாம் பெற்றுக்கொண்ட ஒளியை அன்றாடம் நம் வாழ்க்கையில் பிரதிபலித்தால்,“பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி” (மத்தேயு 5:16) செய்யலாம்.
கிறிஸ்துவின் தேவையுள்ள உலகத்திற்கு அவர் நம்மை உப்பாகவும் ஒளியாகவும் வைத்துள்ளதால், இன்றும் என்றும் அவருடைய ஒளியை நம்மில் பிரகாசிக்க பிரயாசப்படுவோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

என்னால் உன்னை பார்க்கமுடிகிறது

கண்கண்ணாடி நிபுணர், மூன்று வயது ஆண்ட்ரியாஸ_க்கு முதல் கண்கண்ணாடியை போடுவதற்கு உதவினார். அதை அணிவித்த பின்பு, “கண்ணாடியில் பார்” என்றாள். ஆண்ட்ரியாஸ் அவளுடைய உருவத்தை கண்ணாடியில் பார்த்தாள். பின்பு அவள் மகிழ்ச்சியான முகத்துடன், தன் தந்தையிருந்த திசை நோக்கித் திரும்பினாள். பின்னர் ஆண்ட்ரியாஸின் தந்தை தனது மகனின் கன்னங்களில் வழிந்த கண்ணீரை மெதுவாக துடைத்து, “என்ன ஆச்சு?” என்று கேட்டார். ஆண்ட்ரியாஸ் தன் தந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொண்டாள். “என்னால் உங்களை பார்க்கமுடிகிறது.” அவள் சற்று பின்வாங்கி, தலையை சாய்த்து, தந்தையின் கண்களைப் பார்த்து, “என்னால் உங்களை பார்க்கமுடிகிறது” என்று சொன்னாள்.

நான் ஜெபத்தோடு வேதத்தை வாசிக்கும்போது, “அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமான” (கொலோசெயர் 1:15) ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நோக்குவதற்கு பரிசுத்த ஆவியானவர் நம் கண்களை திறந்தருளுவாராக. இருப்பினும், வேதத்தின் மூலம் நாம் அறிவில் வளரும்போது, ஆவியானவரால் நம் பார்வை தெளிவடைந்தாலும், நித்தியத்தின் இந்தப் பக்கத்தில் தேவனின் எல்லையற்ற அபரிமிதத்தின் ஒரு காட்சியை மட்டுமே நாம் இன்னும் காண முடியும். பூமியில் நம் காலம் முடிந்ததும் அல்லது இயேசுவின் வருகை வரும்போது, நாம் அவரைத் தெளிவாகக் காண்போம் (1 கொரிந்தியர் 13:12). 

கிறிஸ்துவை முகமுகமாய் நாம் சந்தித்து அவர் நம்மை அறிந்திருக்கிறதுபோல நாமும் அவரை அறியும் அந்த மகிழ்ச்சி நிறைந்த தருணத்தில் நமக்கு சிறப்பு கண்ணாடிகள் தேவையில்லை. நம்முடைய அன்பான மற்றும் உயிருள்ள இரட்சகரை நாம் உற்று நோக்கி, “இயேசுவே, என்னால் உம்மை பார்;க்க முடிகிறது” என்று சொல்லும் வரை, நாம் உறுதியாக நிற்க வேண்டிய விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகியவற்றால் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் கிரியை செய்வார். “இயேசுவே, என்னால் உம்மை பார்;க்க முடிகிறது!”

ஒளிந்திருக்கும் பிரம்மாண்டம்

“தி அட்லாண்டிக்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆர்தர் ப்ரூக்ஸ் அப்புத்தகத்தை எழுதும்போது தைவானில் அமைந்துள்ள தேசிய அரண்மனை அருங்காட்சியகத்திற்குச் சென்றதைக் குறித்துக் கூறுகிறார். இது உலகின் மிகப்பெரிய சீனக் கலைகளின் தொகுப்புகளில் ஒன்றாகும். அருங்காட்சியக வழிகாட்டி கேட்டார், “இன்னும் வரையப்படாத ஒரு ஓவியத்தை கற்பனை செய்யும்படிக்கு உங்களிடத்தில் கேட்டால், நீங்கள் என்ன கற்பனை செய்வீர்கள்?” அதற்கு நான், “ஒரு வெற்று கேன்வாஸ்,” என்று பதிலளித்தேன். ஆனால் அந்த வழிகாட்டி, “ அதை நாம் வேறுவிதத்திலும் பார்க்கக்கூடும். அதில் ஓவியம் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது, கலைஞர்களின் வேலை வெறுமனே அதை வெளிக்கொண்டுவருவதே” என்று சொன்னார். 

எபேசியர் 2:10 இல், கைவேலை என்ற வார்த்தை, சில சமயங்களில் “வேலைப்பாடு" அல்லது “தலைசிறந்த படைப்பு" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது கிரேக்க வார்த்தையான “பொய்மா” என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதிலிருந்து நாம் கவிதை என்று அர்த்தங்கொடுக்கும் “பொயட்ரி” என்ற ஆங்கில வார்த்தையை பெறுகிறோம். தேவன் நம்மை கலைப் படைப்புகளாகவும் வாழும் கவிதைகளாகவும் படைத்துள்ளார். நம்முடைய ஓவியங்கள் தெளிவில்லாமல் இருந்தது. “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (வச. 1). அந்த அருங்காட்சியக வழிகாட்டியின் வார்த்தைகளை சுருக்கமாகச் சொல்வதானால், “ஓவியம் ஏற்கனவே ஒளிந்திருக்கிறது, ஒரு தெய்வீகமான ஓவியனின் வேலை அதை உயிர்பெறச்செய்வதே” என்பதாகும். அவருடைய கலைப்படைப்புகளாகிய நம்மை “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய்… நம்மை உயிர்ப்பித்தார்” (வச. 4-5).

நாம் பாடுகள் மற்றும் உபத்திரவங்களின் மத்தியில் கடந்துசெல்லும்போது, நம்முடைய தெய்வீக ஓவியர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதில் திருப்திகொள்ளலாம்: “ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலிப்பியர் 2:13). உங்களில் இருக்கும் ஓவியத்தை வெளிக்கொண்டுவர தேவன் கிரியை நடப்பித்துக்கொண்டிருக்கிறார்.

அழகான வடிவமைப்பு

ஒரு சர்வதேச ஆராய்ச்சிக் குழு, உழவாரன் என்னும் ஒரு குறிப்பிட்ட பறவையின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் ஃபிளாப்பிங்-விங் ட்ரோனை உருவாக்கியுள்ளது. இந்த உழவாரன் குருவிகள் மணிக்கு தொண்ணூறு மைல்கள் வரை பறக்கவும், வட்டமடிக்கவும், மூழ்கவும், விரைவாக திரும்பவும், திடீரென்று நிறுத்தவும் முடியும். இருப்பினும், ஆர்னிதோப்டர் ட்ரோன் என்னும் பறக்கும் எந்திரம் இன்னும் பறவையை விட தாழ்வானது. பறவைகளுக்கு “பல தசைகள் உள்ளன, அவை நம்பமுடியாத வேகத்தில் பறக்கவும், இறக்கைகளை மடக்கவும், திருப்பவும், இறகு துளைகளைத் திறக்கவும் மற்றும் ஆற்றலைச் சேமிக்கவும் உதவுகின்றன” என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். அவரது ஆய்வின் முடிவில், “பறக்கும் உயிரின விமானத்தின் 10 சதவிகிதத்தை” மட்டுமே எங்களால் கண்டறிய முடிந்தது என்று அவர் ஒப்புக்கொள்கிறார். 

இந்த உலகத்தில் வாழும் உயிரினங்களுக்கு தேவன் அனைத்து சிறப்பியல்புகளையும் அருளியிருக்கிறார். அவற்றை தன்மைகளை ஆய்வுசெய்து அறிந்துகொள்வது நம்முடைய ஞானத்திற்கு பலம் சேர்க்கும். வாழ்க்கைக்கு தேவையான வாழ்வாதாரங்களை சேகரிக்கும் எறும்பு, தங்கள் வீட்டை கன்மலையில் தோண்டிவைக்கும் குழிமுசல்கள், கூட்டமாய் அணிவகுத்து வரும் வெட்டுக்கிளிகள் (நீதிமொழிகள் 30:25-27) ஆகியவைகள் நமக்கு விலைமதிப்பற்ற பாடங்களை கற்பிக்கிறது. 

தேவன் தன்னுடைய ஞானத்தினாலே பூமியை சிருஷ்டித்தார் என்று வேதம் சொல்லுகிறது (எரேமியா 10:12), அவருடைய அன்றாட சிருஷ்டிப்பின் இறுதியில் அவர் தன்னுடைய படைப்பை நல்லது” என்று கண்டார் (ஆதியாகமம் 1:4,10,12,18,21,25,31). “வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும்” (வச. 20) சிருஷ்டித்த அதே தேவன், அவற்றை புரிந்துகொள்வதற்கான ஞானத்தையும் நமக்கு அருளியிருக்கிறார். இன்று, அவருடைய இந்த அழகான இயற்கை படைப்பிலிருந்து நாம் கற்றுக்கொள்ள பிரயாசப்படுவோம்.