எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

அலிசன் கீடாகட்டுரைகள்

இணைந்து இயேசுவை சந்தித்தல்

நான் என்னுடைய வாழ்க்கையின் கடினமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சூழ்நிலையின் ஊடாய் கடந்துசென்றபோது, திருச்சபைக்குப் போவதை நிறுத்தக்கொள்வது எளிதாயிருந்திருக்கும் (சில வேளைகளில் “நான் ஏன் கவலைப்படவேண்டும்” என்று யோசித்ததுண்டு). ஆனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருச்சபைக்கு செல்வது எனக்கு அவசியமாய் தோன்றியது. 

பல வருடங்களாக என்னுடைய நிலைமை மாறாமல் அப்படியே இருந்தபோதிலும், மற்ற விசுவாசிகளுடன் இணைந்து ஆராதனை செய்வது, ஜெபக்கூட்டங்கள், வேதபாட கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கேற்பதின் மூலம் நான் ஊக்கம்பெற்றேன். பல வேளைகளில் ஆறுதலான வார்த்தைகள் கேட்கவும், என்னுடைய குமுறலை அவர்கள் கேட்கவும், அவர்களின் அரவணைப்பை அவ்வப்போது பெறவும் இது வழிவகுத்தது. 

எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்” (எபிரெயர் 10:25) என்கிறார். நாம் கடினமான வாழ்க்கை அனுபவங்களுக்குள் கடந்துசெல்லும் வேளைகளில் நமக்கு மற்றவர்களின் ஆதரவும், அவர்களுக்கு நம்முடைய ஆதரவும் அவசியப்படும் என்பதை ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார். ஆகையால், “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்” என்றும் “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர்” (23-24) தாங்கும்படியாகவும் ஆசிரியர் நமக்கு அறிவுறுத்துகிறார். இதுவே ஆரோக்கியமான ஓர் ஊக்கமாகும். ஆகையினால் தான் தேவன் நமக்கு அவ்வப்போது சபையோடு ஐக்கியங்களை ஏற்படுத்தித் தருகிறார். யாரேனும் ஒருவருக்கு உங்களுடைய ஊக்கம் தேவைப்படலாம், மற்றவர்களின் ஊக்கமான வார்த்தைகள் உங்களுக்கு ஆச்சரியமானதாய் இருக்கும். 

கிறிஸ்துவின் பேரன்பு

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் திரைப்படத்தில் ஜிம் கேவிசெல் இயேசுவாக நடிக்கும் முன், இயக்குனர் மெல்கிப்சன் இந்த பாத்திரம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் திரையுலகில் அவரது தொழிலை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இருப்பினும் கேவிசெல் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், "அது கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

படப்பிடிப்பின் போது, ​​கேவிசெல் மின்னலால் தாக்கப்பட்டார், சுமார் இருபது கிலோ எடை குறைந்தார், மற்றும் கசையடி காட்சியின் போது தற்செயலாக சாட்டையால் அடிபட்டார். பின்னர், “மக்கள் என்னைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் மூலம் மனமாற்றம் உண்டாகும்" என்றார். அந்த படம் கேவிசெல் மற்றும் படக்குழுவிலிருந்த மற்றவர்களை ஆழமாக பாதித்தது, மேலும் அதைப் பார்த்த லட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியது என்பதை தேவன் மட்டுமே அறிவார்.

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் என்பது, குருத்தோலை ஞாயிறு அன்று அவரது வெற்றி பவனியில் துவங்கி, அவர் அனுபவித்த துரோகம், கேலி, கசையடி, சிலுவையில் அறையப்படுதல் உள்ளிட்ட இயேசுவின் மிகப்பெரிய பாடுகளின் நேரத்தைக் குறிக்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் இச்சம்பவங்கள் காணப்படுகின்றன.

ஏசாயா 53 இல், அவருடைய பாடுகளும் அதன் விளைவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (வ.5). நாமெல்லாரும் "ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்" (வ.6). ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த காரணத்தால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். அவருடைய பாடுகள் நாம் அவருடன் இருப்பதற்கான வழியை உண்டாக்கியது.

ஜெபத்திற்கான அழைப்பு

ஆபிரகாம் லிங்கன் தன் சிநேகிதரிடம், “நான் சில வேளைகளில் யாரிடத்திலும் செல்லமுடியாது என்று எண்ணும் இக்கட்டான தருணங்களில் முழங்காலில் நிற்ப்பதற்கு உந்தப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னாராம். அமெரிக்க உள்நாட்டுப் போரின் கொடூரமான காலகட்டங்களில், ஜனாதிபதி லிங்கன் உருக்கமான ஜெபத்தில் நேரத்தை செலவழித்தது மட்டுமல்லாமல், தன்னுடைய நாட்டு மக்களையும் தன்னோடு சேர்ந்து ஜெபிக்குமாறு அறைக்கூவல் விடுத்திருக்கிறார். 1861 இல், “மனத்தாழ்மை, ஜெபம், மற்றும் உபவாசத்தின் நாள்” என்று ஒன்றை அறிவித்தார். 1863இல் அதை மீண்டும் செயல்படுத்தி, “தேவனுடைய பெரிதான வல்லமையை சார்ந்திருப்பது தேசம் மற்றும் மக்களின் கடமை. நம்முடைய மனந்திரும்புதல் தேவனுடைய இரக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற விசுவாசத்தோடும் மனத்தாழ்மையோடும் தங்கள் பாவங்களை தேவனிடத்தில் அறிக்கையிடுதல் அவசியம்” என்று அறிவித்தார். 

இஸ்ரவேலர்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தில் எழுபது ஆண்டுகள் கழித்த பின்னர், கோரேசு மன்னன் இஸ்ரவேலர்களை எருசலேமுக்கு திரும்பிப் போகும்படிக்கு கட்டளைப் பிறப்பித்தான். அவர்களும் எருசலேம் திரும்பினர். பாபிலோனிய ராஜாவுக்கு பானபாத்திரக் காரனாய் இருந்த நெகேமியா (நெகேமியா 1:6), மீண்டு திரும்பிய இஸ்ரவேலர்கள் “மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்” (வச.3) என்பதை அறிந்தமாத்திரத்தில், நெகேமியா “உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி” (வச. 4) தேவனை நோக்கி கெஞ்சினான். அவன் தன் தேசத்திற்காய் தேவனிடத்தில் மன்றாடினான் (வச. 5-11). பின்னர், அவனுடைய தேசத்து ஜனங்களையும் தன்னோடு சேர்த்துக்கொள்ள அழைப்பு விடுக்கிறான் (9:1-37). 

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ரோமானியப் பேரரசின் நாட்களில், அப்போஸ்தலர் பவுலும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்காக ஜெபிக்கும்படி திருச்சபை விசுவாசிகளுக்கு வலியுறுத்துகிறார் (1 தீமோத்தேயு 2:1-2). மற்றவர்களுடைய ஜீவியத்தைப் பாதிக்கும் காரணிகளுக்காக நாம் ஜெபிக்கும்போது, தேவன் அந்த ஜெபத்திற்கு பதில்கொடுக்கிறார்.

சோதனைகளை மேற்கொள்ளுதல்

ஆனி, வறுமையிலும் வேதனையிலும் வளர்ந்தார். அவளுடைய இரண்டு உடன்பிறப்புகள் குழந்தை பருவத்திலேயே இறந்துவிட்டனர். ஐந்து வயதில், ஒரு கண் நோய் அவளை ஓரளவு பார்வையற்றதாகவும், படிக்கவோ எழுதவோ முடியாமல் ஆக்கினது. ஆனிக்கு எட்டு வயதாக இருந்தபோது, அவரது தாயார் காசநோயால் இறந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, அவளை துஷ்பிரயோகம் செய்த அவளது தகப்பனார், மூன்று குழந்தைகளை ஆதரவற்றவர்களாய் விட்டுவிட்டார். இளைய பிள்ளை வேறு உறவினர்களுடன் தங்கிக்கொள்வதற்கு அனுப்பப்பட்டது. ஆனியும் அவளது சகோதரரும் அரசு நடத்தும் அனாதை இல்லத்திற்குச் சென்றனர். சில மாதங்களுக்குப் பிறகு, ஜிம்மியும் இறந்துவிட்டான்.

பதினான்கு வயதில், ஆனியின் சூழ்நிலைகள் பிரகாசமாகின. அவள் பார்வையற்றோருக்கான பள்ளிக்கு அனுப்பப்பட்டாள். அங்கு அவள் பார்வையை மேம்படுத்த அறுவை சிகிச்சை செய்துகொண்டு படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டாள். அவள் அந்த இடத்தில் வாழ்வதற்கு சிரமப்பட்டாலும், அவள் கல்வியில் சிறந்து விளங்கி, வாலிடிக்டோரியனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஹெலன் கெல்லரின் ஆசிரியை மற்றும் தோழியான ஆனி சல்லிவன் என இன்று நாம் அவளை நன்கு அறிவோம். முயற்சி, பொறுமை மற்றும் அன்பின் மூலம், ஆனி பார்வையற்ற மற்றும் காது கேளாத ஹெலனுக்கு பேசவும், பார்வையற்றோருக்கான பிரெய்லி படிக்கவும், கல்லூரியில் பட்டம் பெறவும் கற்றுக் கொடுத்தார்.

யோசேப்பும் தன் வாழ்க்கையில் பல சோதனைகளை கடக்க வேண்டியிருந்தது. பதினேழாவது வயதில், அவர் மீது பொறாமைப்பட்ட சகோதரர்களால் அடிமையாக விற்கப்பட்டார். பின்னர் செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார் (ஆதியாகமம் 37:39-41). ஆயினும் எகிப்து தேசத்தையும் அவனது சொந்த குடும்பத்தாரையும் பஞ்சத்திலிருந்து காப்பாற்ற தேவன் அவனைப் பயன்படுத்தினார் (50:20).

நாம் அனைவரும் சோதனைகளையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறோம். ஆனால் யோசேப்பு மற்றும் ஆனி ஆகியோருக்கு மற்றவர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த தேவன் உதவியது போல, நமக்கும் உதவிசெய்து நம்மை பயன்படுத்த அவரால் கூடும். உதவிக்காகவும் வழிகாட்டுதலுக்காகவும் அவரை சார்ந்துகொள்வோம். அவர் நம்மை பார்க்கிறார், கேட்கிறார்.

விலையேறப்பெற்ற விளைவு

மூன்று வருடங்களாக, ஒவ்வொரு பள்ளி நாளிலும், கொலீன் என்று அழைக்கப்படும் ஒரு ஆசிரியை, ஒவ்வொரு மதியவேளையிலும் பள்ளிப் பேருந்தில் இருந்து பிள்ளைகள் வெளியேறும் போது, வித்தியாசமான உடைகள் அல்லது முகமூடிகளை அணிவித்து அவர்களை வரவேற்கிறார். பேருந்து ஓட்டுநர் உட்பட பேருந்தில் உள்ள அனைவரின் நாளையும் இது பிரகாசமாக்குகிறது. அந்த பேருந்தின் ஓட்டுநர், “பேருந்தில் பயணிக்கும் குழந்தைகளுக்கு அது மகிழ்ச்சியைத் தருகிறது. அது ஆச்சரியமான ஒரு செய்கை. எனக்கு அது பிடித்திருக்கிறது” என்று சொல்லுகிறார். பிள்ளைகளும் அதை ஆமோதிக்கின்றனர். 

கொலீன் குழந்தைகளை பராமரிக்கத் தொடங்கியபோது இதுவும் தொடங்கியது. பெற்றோரைப் பிரிந்து புதிய பள்ளிக்குச் செல்வது எவ்வளவு கடினம் என்பதை அறிந்த அவர், குழந்தைகளை வித்தியாசமான உடையில் வாழ்த்தத் தொடங்கினார். மூன்று நாட்கள் அவ்வாறு செய்தபின்பு, பிள்ளைகளும் அதை விரும்ப ஆரம்பித்தனர். எனவே கொலின் அதைத் தொடர்ந்துசெய்தார். இது சிக்கனக் கடைகளில் நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்வதுபோல “விலைமதிப்பற்ற விளைவையும் மகிழ்ச்சியையும்" கொண்டு வந்தது என்று ஒரு நிருபர் விவரிக்கிறார். 

மிகவும் ஞானமான ஆலோசனையை உள்ளடக்கிய புத்தகத்தின் ஆசிரியரான சாலமோன் தன் மகனுக்கு ஓர் தாய் ஆலோசனை கொடுப்பதுபோல ஒரே வரியில் “மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்” (நீதிமொழிகள் 17:22) என்று சொல்லுகிறார். மனமகிழ்ச்சி என்னும் தாய் தன்னுடைய அனைத்து குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியை தருவதின் மூலம் நொருங்குண்ட ஆவிகளை அவள் தடுக்க விரும்பினாள். 

உண்மையான மற்றும் நிலையான மகிழ்ச்சியின் ஆதாரம், தேவன் நமக்கு தந்தருளிய பரிசுத்த ஆவியானவரே (லூக்கா 10:21; கலாத்தியர் 5:22). சோதனைகளை எதிர்கொள்வதற்கான நம்பிக்கையையும் பலத்தையும் வழங்கும் மகிழ்ச்சியை மற்றவர்களுக்கு நாம் கொடுக்க பிரயாசப்படும்போது, பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். 

தோட்டத்தில்

என் அப்பா, கடவுளுடைய இயற்கையான படைப்புகளில் முகாமிடுதல், மீன்பிடித்தல் மற்றும் மலை ஏறுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை விரும்பினார். அவர் தனது தோட்டத்தையும் அதை செப்பனிடுவதிலும் அதிக மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அது பெரிய வேலையாக தெரிந்தது. அவர் கத்தரித்தல், மண்வெட்டி, விதைகள் அல்லது பூக்களை நடுதல், களைகளை இழுத்தல், புல்வெளியை வெட்டுதல் மற்றும் முற்றத்திலும் தோட்டத்திலும் தண்ணீர் பாய்ச்சுதல் ஆகியவற்றில் பல மணி நேரங்களை செலவுசெய்தார். அதன் பலம் மிகவும் நேர்த்தியாயிருந்தது: ஒரு நிலப்பரப்பு புல்வெளி, சுவையான தக்காளி மற்றும் அழகான ரோஜாக்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர் ரோஜாக்களை தரையில் நெருக்கமாக கத்தரித்து செப்பனிடுவார். அவைகள் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் வளர்ந்து அவற்றின் நறுமணத்தையும் அழகையும் பரப்புகின்றது. 

ஆதியாகமத்தில், ஆதாமும் ஏவாளும் வாழ்ந்து, செழித்து, தேவனோடு நடந்த ஏதேன் தோட்டத்தைப் பற்றி வாசிக்கிறோம். அங்கு தேவன் “பார்வைக்கு இன்பமும் உணவுக்கு ஏற்றதுமான மரங்களை அனைத்து வகையான மரங்களையும் தரையில் இருந்து வளரச்செய்தார்” (ஆதியாகமம் 2:9). சரியான தோட்டத்தில் அழகான, இனிமையான மணம் கொண்ட பூக்களும் அடங்கும் என்று நான் கற்பனை செய்கிறேன். ஒருவேளை முட்களில்லாத ரோஜாக்கள் கூட அங்ஙனம் வளர்ந்திருக்கக்கூடும். 

ஆதாமும் ஏவாளும் தேவனை எதிர்த்து பாவம் செய்த பிறகு, அவர்கள் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டு, அவரவர் தோட்டங்களை அவர்களே பராமரிக்கும் படி கட்டளையிடப்பட்டது. அதாவது, நிலத்தை உழுது, முட்களோடு போராடி, பல சவால்களை எதிர்கொண்டு பராமரிப்பதாகும் (3:17-19, 23-24). ஆனாலும் தேவன் அவர்களுக்கு தொடர்ந்து தேவைகளை சந்தித்தார் (வச. 21). அவர் வசமாய் நம்மை ஈர்க்கும் அவருடைய இயற்கையின் அழகை மனிதனின் பார்வையினின்று விலக்கவில்லை (ரோமர் 1:20). தோட்டத்திலுள்ள பூக்கள், நம்பிக்கை மற்றும் ஆறுதலின் அடையாளமாய் திகழும் தேவனின் தொடர்ச்சியான அன்பையும், புதுப்பிக்கப்பட்ட படைப்பைப் பற்றிய வாக்குறுதியையும் நமக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கின்றன. 

தயவான செய்கைகள்

கருச்சிதைவு ஏற்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, வலேரி ஒரு சில பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்தாள். சில மைல்களுக்கு அப்பால் இருந்த அவளுடைய ஜெரால்ட் என்னும் கைவினையாளர் ஒருவர் அவள் விற்ற குழந்தை தொட்டிலை ஆர்வத்துடன் வாங்கினார். அதை வாங்கும்போது, வலேரியிடம் பேசிய அவரது மனைவியின் வாயிலாக, வலேரியின் பெரும் இழப்பைக் குறித்து அறிந்துகொண்டார். வீட்டிற்கு செல்லும் வழியில் அவளது நிலைமையைக் கேள்விப்பட்ட ஜெரால்ட், தொட்டிலைப் பயன்படுத்தி வலேரிக்கு ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்க முடிவு செய்தார். ஒரு வாரம் கழித்து, அவர் கண்ணீருடன் ஒரு அழகான பெஞ்சை அவளுக்கு பரிசளித்தார். “இங்கே நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், அதற்கான ஆதாரம் இங்கே இருக்கிறது" என்று வலேரி பெருமிதப்பட்டாள். 

வலேரியைப் போலவே, ரூத்தும் நகோமியும் பெரும் இழப்பை தங்களுடைய வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தது. நகோமியின் கணவரும் அவளுடைய இரண்டு குமாரர்களும் மரித்துபோய்விட்டனர். தற்போது அவளும் அவளுடைய மருமகளான ரூத்தும் ஆதரவற்று நிர்க்கதியாய் நிற்கின்றனர் (ரூத் 1:1-5). அங்கே தான் போவாஸ் வருகிறார். போவாஸின் நிலத்தில் சிந்தியிருக்கும் கதிர்களை பொறுக்குவதற்கு போன ரூத்தைக் குறித்து போவாஸ் கேள்விப்படுகிறார். அவள் யார் என்று அறிந்த பின்பு அவளுக்கு தயைபாராட்டுகிறார் (2:5-9). “எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயைகிடைத்தது” (வச. 10) என்று ரூத் ஆச்சரியத்துடன் கேட்கிறாள். அதற்கு போவாஸ்,  “உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், ... எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது” (வச. 11) என்று பதிலளிக்கிறான். 

போவாஸ் ரூத்தை மணந்துகொண்டு, நகோமியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறான் (வச. 4). அவர்களுடைய அந்த திருமணத்தின் மூலம், முற்பிதாவான தாவீது மற்றும் இயேசுகிறிஸ்து அவர்களின் வம்சாவளியில் தோன்றுகின்றனர். ஜெரால்டையும் போவாஸையும் தேவன் பயன்படுத்தி மற்றவர்களின் கண்ணீரை தேவன் துடைப்பார் என்றால், வேதனையில் உள்ளவர்களின் கண்ணீரை துடைக்க தேவன் நம் மூலமாகவும் கிரியை செய்ய முடியும்.

ஏமாற்றத்தை சமாளித்தல்

தங்களின் வாழ்நாள் சுற்றுப்பயணத்திற்கு பணம் திரட்டிய அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா உயர்நிலைப் பள்ளியின் படித்த முதியவர்கள் குழு, விமான நிலையத்திற்கு வந்தபிறகு தான் அவர்களில் பலர் ஒரு போலி நிறுவனத்திடமிருந்து டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர் என்பதை அறிந்துகொண்டனர். “இது மனதிற்கு வேதனையளிக்கிறது” என்று ஒரு பள்ளி நிர்வாகி கூறினார். இதினிமித்தம் அவர்கள் தங்கள் திட்டங்களை மாற்ற வேண்டியிருந்தாலும், அந்த சூழ்நிலையை அவர்கள் சாதகமாய் பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தனர். டிக்கெட்டுகளை அவர்களுக்கு நன்கொடையாக வழங்கிய அருகிலுள்ள சுற்றுலாத்தலங்களில் இரண்டு நாட்கள் அவர்கள் மகிழ்ந்திருந்தனர்.

தோல்வியுற்ற அல்லது மாற்றப்பட்ட திட்டங்களைக் கையாள்வது சற்று ஏமாற்றமாகவும், இருதயத்தை உடைக்கக்கூடியதாகவும் இருக்கும். குறிப்பாக நேரத்தையோ, பணத்தையோ அல்லது உணர்ச்சியையோ திட்டமிடுதலில் முதலீடு செய்தவர்களுக்கு இது அதிக வேதனையளிக்கக்கூடியது. தாவீது ராஜா தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று தன் மனதிலே நினைக்கிறான் (1 நாளாகமம் 28:2). ஆனால் தேவன் அவரிடம் “நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்... உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிராகாரங்களையும் கட்டக்கடவன்” (வச. 3,6) என்று சொல்கிறார். தாவீது விரக்தியடையவில்லை. இஸ்ரவேலின் ராஜாவாக தேவன் அவரை தேர்வுசெய்ததற்காய் தேவனை துதிக்கிறார். மேலும் ஆலயத்தை கட்டுவதற்கு தேவன் சாலொமோனுக்குத் திட்டங்களைக் கொடுத்தார் (வச. 11-13). தாவீது சாலெமோனைப் பார்த்து, “நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; தேவனாகிய கர்த்தர் ... உன்னோடே இருப்பார்” (வச. 20) என்று ஊக்கப்படுத்துகிறார். 

நம்முடைய திட்டங்கள் தோல்வியுறும்போது, அது எந்த பிரச்சனையாயிருந்தாலும் நம்முடைய தேவன் “உங்களை விசாரிக்கிறவரானபடியால்” (1 பேதுரு 5:7) நம்முடைய கவலைகளையெல்லாம் அவர் மீது வைத்துவிடுவோம். நம்முடைய கவலைகளை கிருபையோடு கையாளுவதற்கு அவர் நமக்கு உதவிசெய்வார்.

நம் தேர்ந்தெடுப்புகள் முக்கியம்

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஒரு நீச்சல் பயிற்றுவிப்பாளர், நெவார்க் விரிகுடாவில் கார் ஒன்று மூழ்குவதைக் கண்டார். அந்த கார் தண்ணீரில் மூழ்கும்போது அதின் ஓட்டுநர் “எனக்கு நீச்சல் தெரியாது” என்று அலறும் சத்தத்தைக் கேட்டார். கரையிலிருந்து ஒரு கூட்டம் பார்த்தபோது, அந்தோனி விளிம்பில் இருந்த பாறைகளுக்கு ஓடி, தனது செயற்கை காலை அகற்றி, அறுபத்தெட்டு வயது முதியவரைக் காப்பாற்றி, அவரைக் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். அந்தோனியின் துரிதமான முயற்சிக்கு நன்றி. அதின் மூலம் மற்றொரு நபர் காப்பாற்றப்பட்டார்.

நம்முடைய தேர்ந்தெடுப்புகள் முக்கியமானவைகள். யாக்கோபைப் பாருங்கள். அநேகருக்கு தகப்பனான யாக்கோபு தன்னுடைய பதினெழு வயது நிரம்பிய யோசேப்பை அதிகமாய் நேசித்தான் (ஆதியாகமம் 37:3). அதின் விளைவு? யோசேப்பின் சகோதரர்கள் அவனை நேசித்தனர் (வச. 4). அவர்களுக்கு சமயம் கிட்டியபோது அவனை அடிமைத்தனத்தில் விற்றுப்போட்டனர் (வச. 28). யோசேப்பின் சகோதரர்கள் அவனை வெறுத்து ஒதுக்கினாலும், தேவன் யோசேப்பை எகிப்துக்கு கொண்டுபோய், அங்கே அவனுடைய ஸ்தானத்தை உயர்த்தி, ஏழு ஆண்டுகள் பஞ்சத்தின்போது தன்னுடைய குடும்பத்தை பராமரிக்கும்படி செய்தார் (50:20). யோசேப்பு அந்த மேன்மையை அடைவதற்கு போத்திபாரின் மனைவியிடத்திலிருந்து ஓடுவதை தெரிந்துகொண்டான் (39:1-12). அதின் விளைவு சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டான் (39:20), ஆனால் பார்வோனை சந்திக்கிறான் (41அதி.). 

அந்தோனி மிகவும் நேர்த்தியாய் பயிற்சிபெற்ற ஒரு நபராய் இருந்திருக்கலாம், ஆனால் அவன் துரிதமாய் தீர்மானம் எடுக்கவேண்டியது அவசியமாயிருந்தது. நாமும் தேவனை நேசித்து அவருக்கு ஊழியம் செய்வோமாகில், அவர் வாழ்க்கையை ஸ்திரப்படுத்துகிற மற்றும் தேவனை மகிமைப்படுத்துகிற தீர்மானங்களை எடுக்க நமக்கு உதவிசெய்வார். இதுவரை அதை நாம் செய்யாமல் இருந்திருப்போமாகில், இயேசுவை நம்புவதின் மூலம் இனி அதை நாம் துவக்கலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).

 

இயேசு – மெய்யான சமாதானக் காரணர்

1862, டிசம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. எதிர் துருப்புக்கள் ஓர் ஆற்றின் எதிர்பக்கங்களில் எழுநூறு மீட்டர் இடைவெளியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பகுதியில் சிப்பாய்கள் தங்கள் வயலின்களையும் ஹார்மோனியங்களையும் எடுத்துக்கொண்டு “யாங்கி டூடுல்” என்ற இசையை வாசிக்கத் துவங்கினர். பதிலுக்கு, மறுபக்கத்தில் இருந்த வீரர்கள் “டிக்ஸி” என்று ஓர் பாடல் இசையை  வாசித்தனர். அப்படி மாறி மாறி வாசிக்கையில், இறுதியில் இருதரப்பினரும் இணைந்து “ஹோம், ஸ்வீட் ஹோம்” என்ற இசையை வாசித்தனர். ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருந்த இரண்டு தேசத்து இராணுவ வீரர்களும் இரவில் இசையைப் பகிர்ந்து, கற்பனைசெய்ய முடியாத அளவு சமாதானத்தை பிரதிபலித்தனர். இருப்பினும் அந்த மெல்லிசைப் போர்நிறுத்தம் குறுகிய காலமே நீடித்தது. மறுநாள் காலை, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, தங்கள் துப்பாக்கிகளை கையில் எடுத்தனர். அந்த போரில் 24,645 வீரர்கள் உயிரிழந்தனர்.

அமைதியை உருவாக்குவதற்கான நமது மனித முயற்சிகள் தவிர்க்க முடியாமல் பெலனற்றுபோகிறது. பகைமைகள் ஓர் இடத்தில் அணைந்து, வேறொரு இடத்தில் நெருப்பை பற்றவைக்கிறது. ஓர் குடும்பப் பிரச்சனை திடீரென்று முடிவுக்கு வரும், சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் சூடுபிடிக்கும். நமக்கு நம்பிக்கையான சமாதானக் காரணர் தேவன் மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (16:33) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவில் நாம் இளைப்பாறக்கூடும். அவருடைய சமாதானப் பணியில் நாமும் இணைந்துகொள்ளும்போது, மெய்யான சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். 

இவ்வுலகத்தின் உபத்திரவ பாதையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்று இயேசு கூறுகிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்று இயேசு சொல்லுகிறார். நம்முடைய முயற்சிகள் பல சமயங்களில் பயனற்றவையாக இருந்தாலும், நம் அன்பான தேவன் (வச. 27) இந்த உடைந்த உலகில் நமக்கு சமாதானத்தை அருளுகிறார். 

 

கிறிஸ்துவின் சமூகம்

“வீட்டையும், என் மனைவி, மகன் மற்றும் மகளையும் மறந்துவிடுவதே வெற்றிக்கான ஒரே வழி என்று எனக்குத் தெரியும்; ஆனால் என்னால் அதை செய்ய முடியாது என்று கண்டுபிடித்தேன்; அவை என் இதயம் மற்றும் ஆன்மாவில் பிணைக்கப்பட்டுள்ளன” என்று ஜோர்டன் கூறினார். அவர் ஓர் தொலைதூரப் பகுதியில் தனியாக, ஓர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். அங்கு போட்டியாளர்கள் முடிந்தவரை குறைந்தபட்ச பொருட்களுடன் சமவெளியில் உயிர்வாழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கிருக்கக்கூடிய பயங்கரமான கரடிகள், உறைபனி, காயங்கள் மற்றும் பசி ஆகியவைகளை அவரால் சமாளிக்க முடிந்திருந்தும், தன் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்கும் தனிமையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. அந்த ஆட்டத்தை கைவிட அவைகள் அவரை கட்டாயப்படுத்தியது. 

வனாந்தரத்தில் உயிர்வாழ தேவையான அனைத்து காரியங்களும் நம்மிடம் இருந்தாலும், நம்முடைய சமூகத்தினின்று நாம் பிரிந்திருப்பது நம்மை தோல்விக்கு நேராய் நடத்தக்கூடும். பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்... ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்” (4:9-10) என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவை கனப்படுத்தும் சமூகம், குழப்பம் ஏற்படுத்தினாலும்கூட, அவைகள் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த உலகத்தின் சோதனைகளை நாம் சொந்தமாகச் சமாளிக்க முயற்சித்தால் அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. “ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்” (வச. 8) அவனுடைய பிரயாசம் விருதாவாயிருக்கிறது. சமூகத்தில் இல்லாமல் தனித்திருந்தால் நாம் அபாயத்தை சந்திக்கக்கூடும் (வச. 11-12). “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வச. 12). அன்பான, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சமூகத்தின் பரிசு, ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், சவாலான சூழ்நிலைகளிலும் செழிக்க நமக்கு பலத்தையும் அளிக்கிறது. நமக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியப்படுகிறது.