வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு விடுமுறையின் போது தன்னுடைய நண்பர்களுடன் பிரான்ஸ் தேசத்தின் தெற்குப் பகுதியில், ஒரு குளிர்ந்த இரவில் அனல் அடுப்பினருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தார். அந்த நெருப்பினை உற்று நோக்கிய அந்த முன்னாள் பிரதம மந்திரி, பைன் மரத்துண்டுகள் எரியும்போது வெடித்து, ஸ்ஸ் என்ற ஓசையுடன் கொப்பளித்ததைக் கண்டார். உடனே அவர் தன்னுடைய கனத்த குரலில் “ஏன் இந்த மரத்துண்டுகள் கொப்பளிக்கின்றன எனத் தெரிந்து கொண்டேன். செலவழிக்கப்படுவதென்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டேன்”என்றார்.

நம்முடைய தவறான செயல்களால் வரும் துன்பங்களும், விரக்தியும், ஆபாயங்களும், துயரங்களும் நாம் செலவழிக்கப்படுவதைக் காட்டுகின்றன. சூழ்நிலைகள் மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் மெல்ல நம் இருதயத்தை விட்டு எடுத்துவிடும். தாவீது, தன்னுடைய பாவச் செயலால் தான் செலவழிக்கப்படுவதை உணர்ந்தபோது, “நான் அடக்கிவைத்தமட்டும் நித்தம் என கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்து போயிற்று… என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டு போயிற்று” (சங். 32:3-4) என எழுதினார்.

இத்தகைய துன்ப நேரங்களில் நாம் யாரிடம் உதவி கேட்போம்? யார் நமக்கு நம்பிக்கை தருவார்? ஊழிய பாரத்தினாலும், உடைக்கப்பட்ட உள்ளத்தாலும் நிறைந்த அநுபவங்களைக் கொண்ட பவுல், “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி போகிறதில்லை கலக்கமடைந்தும் மன முறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை;” என்றார் (2 கொரி. 4:8-9).

இது எப்படி சாத்தியமாகும்? நாம் இயேசுவைச் சார்ந்து வாழ்வோமாயின், நல் மேய்ப்பனாம் இயேசு கிறிஸ்து நம் ஆத்துமாவை மீட்டு (சங். 23:3) நம்முடைய பயணத்தில் அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டிய பெலனைத் தருவார். அவர் நம் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் நம்மோடு நடந்து வருகின்றார் (எபி. 13:5).