வகை  |  odb

மிகப்பெரிய மீட்புப் பணி

1952 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் நாள் ஒரு மிகப்பெரிய, வலிமையான புயல், எஸ்.எஸ். பென்டல்டன் என்ற எண்ணெய் கப்பலை இரண்டு துண்டாக உடைத்தது. மசாசுசெட் கடற்கரையிலிருந்து சுமார் பத்து மைல்களுக்கப்பால் இந்த நிகழ்வு ஏற்பட்டது. நாற்பதிற்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையான காற்றினாலும், கொடூரமான அலைகளாலும் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் அகப்பட்டுக் கொண்டனர்.

சாத்தம் என்ற இடத்திலுள்ள கடலோர காவற்படையினருக்கு இந்த செய்தி கிடைத்தபோது, மசாசுசெட்டிலிருந்து படகு சவாரியில் திறமைவாய்ந்த பெர்னி வெப்பர் மூன்று பேரை அழைத்துக் கொண்டு, ஓர் உயிர்காக்கும் படகில், தப்பிக்கமுடியாத சூழலில் அகப்பட்டு திகைத்து நின்ற கப்பல் பயணிகளை, முடியாத ஒரு நிலையிலிருந்து காப்பாற்றி கரை சேர்த்தார். இவர்களுடைய இந்த தைரியமான முயற்சி அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடலோரக் காவற்படையினரின் சரித்திரத்தில் மிகப்பெரிய மீட்பு செயலாகக் கருதப்பட்டது. அதுவே அந்த ஆண்டு 2016ல் திரைப்படத்துறையினரின் முக்கிய தலையங்கமாகக் கருதப்பட்டது.

லூக்கா 19:10ல் இயேசு தன்னுடைய மீட்புப் பணியை வெளிப்படுத்துகின்றார். 'இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்" என்றார். சிலுவையும், உயிர்த்தெழுதலுமே அந்த மீட்பின் பிரதான வெளிப்பாடாக இருந்தது. இயேசு தாமே நம்முடைய பாவங்களை ஏற்றுக் கொண்டு, அவரை விசுவாசிப்பவர்களைப் பிதாவிடம் சேர்க்கவே இவ்வுலகிற்கு வந்தார். 2000 வருடங்களாக தேவன் தருகின்ற இந்த விலையேறப்பெற்ற மீட்பின் வாழ்வை இப்பொழுதும், பிற்பாடு நாம் அவரோடு நித்தியமாக வாழப்போகின்ற வாழ்வையும் ஏற்றுக் கொண்டு, அரவணைத்து வருகின்றனர், மீட்கப்பட்டவர்கள்!

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம் பரிசுத்த ஆவியானவரின் உதவியால் நமது இரட்சகரின் மிகப்பெரிய மீட்புப் பணியில் இணைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். உன் வாழ்வில் நீ சந்திக்கின்ற யாருக்கு அவருடைய மீட்பின் அன்பு தேவையாயிருக்கின்றது?

அந்நியரை உபசரித்தல்

ஐரோப்பா கண்டத்திலேயே மிகவும் ஏழ்மையான நாடான மால்டோவாவிற்கு என்னுடைய சிநேகிதி சென்றிருந்தபோது, அங்குள்ள கிறிஸ்தவர்கள் அவர்களுக்குக் கொடுத்த மலர்ந்த வரவேற்பில் அகமகிழ்ந்து போனாள். ஒருமுறை அவள் சில துணிகளையும், வீட்டிற்குத் தேவையான சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு அங்குள்ள ஆலயத்தின் உறுப்பினரான ஓர் ஏழைத் தம்பதியினரைக் காண அவர்கள் இல்லத்திற்குச் சென்றபோது, அங்கு அவர்கள் அநேகக் குழந்தைகளைத் தத்தெடுத்து, பராமரித்து வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். அந்தத் தம்பதியினர் என்னுடைய சிநேகிதியை இன்முகத்தோடு வரவேற்று, டீ வழங்கினர். அத்தோடு சில தின்பண்டங்களையும் கொடுத்தனர். மேலும் தர்பூசணி, மேலும் சில பழவகைகள், காய்கனிகளை அவளுக்குக் கொடுத்து வழியனுப்பிவைத்தனர். அவர்களுடைய உபசரணையைப் பார்த்து வியந்துபோனாள்.

தேவன் தம் ஜனங்களாகிய இஸ்ரவேலரிடம் அந்நியரை உபசரிக்கும்படி சொன்னதை இந்த விசுவாசிகள் செயலில் காட்டுகின்றனர். தேவன் அவர்களிடம், 'நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிளெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்பு கூர்ந்து, உன் முழு இருதயத்;தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து... (உபா. 10:12) என்பதாகக் கூறியுள்ளதை இஸ்ரவேலர் எவ்வாறு செயலில் காட்ட வேண்டும்? இன்னும் சில வசனங்களுக்கப்பால் இதற்கான பதில் வருகிறது. 'நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக" (வச. 19). அந்நியரை வரவேற்கும் போது அவர்கள் தேவனுக்குப் பணிசெய்து, அவரைக் கனம் பண்ணுகின்றனர். அந்நியரிடம் அன்பையும், கரிசனையையும் காண்பிப்பதால் தேவன் மீதுள்ள நம்பிக்கையை அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றனர்.

மால்டோவர்களிடமிருந்தும், இஸ்ரவேலிடமிருந்தும் நம்முடைய சூழ்நிலைகள் வேறுபட்டு காணப்படலாம். ஆனால் பிறரை உபசரிப்பதன் மூலம் தேவன் மீதுள்ள அன்பினைக் காட்ட முடியும். நம்முடைய வீட்டைப் பிறருக்குத் திறந்து கொடுப்பதன் மூலமாகவும், நம் எதிரே வருபவர்களிடம் புன்னகையோடு வாழ்த்து தெரிவிப்பதன் மூலமாகவும், தேவனுடைய அன்பைக் காட்டலாம். ஒருவரையொருவர் காயப்படுத்தும், தனிமைப்படுத்தும் இவ்வுலகில் தேவனுடைய கரிசனையையும், உபசரணையையும் காட்டுவோம்.

மென்மையானது ஆனால் வல்லமையுள்ளது

நெதர்லாந்து தேசத்தினுள் பகைவர்களின் குடியேற்றம் அதிகரித்தபோது, ஆனி பிராங்கும் அவள் குடும்பமும் தப்பித்துக்கொள்ள நினைத்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, அவர்கள் ஒரு இரகசிய இடத்தில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தனர். அவர்கள்.

கண்டுபிடிக்கப்பட்ட போது, பொதுப் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். ஆனியின் பிரசித்திப்பெற்ற கையேட்டில் எழுதியிருந்தது, 'நீண்ட நாட்களுக்குப் பின் எல்லா ஆயுதங்களையும் விட கூரிய ஆயுதமாகச் செயல்பட்டது சாந்தமும், அமைதலுமான ஆவியே" என்பது.

நிஜ வாழ்வில் சாந்தத்தையும், அமைதியையும் செயல்படுத்துவது என்பது சிக்கலான காரியமாகத் தோன்றலாம்.

ஏசாயா 40ல் தேவனுடைய மென்மையான மற்றும் வல்லமையான குணாதிசயத்தைக் காண்கின்றோம். வசனம் 11ல், 'மேய்ப்பனைப் போல தமது மந்தையை மேய்ப்பார்.

ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்"  எனவும் 'இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்" (வச. 10) எனவும் காண்கின்றோம். அவர் முழுவதும் வல்லமையுள்ளவராகவும், பாதுகாக்கவேண்டிய இடத்தில் மென்மையானவராகவும் திகழ்கின்றார்.

தேவாலயத்தில் காசுக்காரருடைய பலகைகளையும் கவிழ்த்து, விற்கிறவர்களையும், கொள்கிறவர்களையும் துரத்திவிட சவுக்கை பயன்படுத்தியபோது அதிகாரமும், வல்லமையும் உடையவராகவும், சிறுபிள்ளைகளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டபோது மென்மையானவராகவும் செயல்பட்டார். அவர் அதிகாரமுடைய வார்த்தைகளால் பரிசேயரைக் கண்டிக்கின்றார் (மத். 23). இயேசுவின் கனிவான, இரக்கமுள்ள கண்கள் ஒரு பெண்ணை மன்னிக்கின்றது (யோவா. 8:1-11).

நாமும் வல்லமையோடு உறுதியாக பலவீனருக்காக நிற்கவும், நீதியை நிலைநிறுத்த சவால்களை ஏற்கவும் வேண்டிய சந்தர்ப்பங்கள் வரும். 'உங்களுடைய சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக (பிலி. 4:5). நாம் தேவனுக்குப் பணி செய்யும் போது, நம்முடைய மிகப்பெரிய பெலன் தேவையுள்ளவர்களிடம் காட்டப்படும் மென்மையான இருதயத்தால் விளங்கும்.

சத்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ளல்

அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கல்லூரியின் முதல்வர் தன் மாணவர்களை, அன்று மாலை நடைபெறும் 'வல்லமை இறங்கும்" நிகழ்வில் தன்னோடு கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மாணவர்கள் சம்மதம் தெரிவித்தனர். ஆயினும் ஆர்வமில்லாதவர்களாக தங்கள் அலைபேசிகளைத் தள்ளி வைத்துவிட்டு, சிற்றாலயத்தினுள் நுழைந்தனர். முதலாம் மணி வேளையில் இசையும், ஜெபமும் இணைந்த ஆராதனையில் அமைதியாக அமர்ந்திருந்தனர். அதில் கலந்துகொண்ட ஒரு மாணவன் தன்னுடைய அனுபவத்தைக் குறித்து, 'அனைத்து பிற ஓலிகளையும் நிறுத்திவிட்ட ஓரிடத்தில் அமைதியாக இருக்கக் கிடைத்த ஓர் அற்புதமான வாய்ப்பு" எனத் தெரிவித்தார்.

சிலவேளைகளில் அதிகப்படியான ஓசைகளை தவிர்ப்பது என்பது கடினமாகக் தோன்றும். வெளியுலகிலிருந்தும் உள் உலகிலிருந்தும் வரும் ஒலி நம் காதுகளை செவிடாக்குவது போலவுள்ளது. ஆனால், நாம் நம்மைச் சுற்றியுள்ள ஓலியை நிறுத்திவிட்டால் தேவனைக் காணத் தேவையான அமைதியைப் பெறலாம். இதனையே சங்கீதக்காரனும் சங்கீதம் 46:10ல் கூறுகின்றார். 1 இராஜாக்கள் 19ல் தீர்க்கதரிசி எலியா தேவனைக் காணும்படித் தேடுகின்றார். பலத்த பெருங்காற்றில் தேவனைக் காணவில்லை, பூமி அதிர்ச்சியிலும் காணவில்லை, அக்கினியிலும் காணவில்லை (வச. 9-13). அதன் பின் தோன்றிய தேவனின் மெல்லிய சத்தத்தைக் கேட்டான்
(வச. 12).

அதிகப்படியான ஓசையை விழாக்காலங்களில் கட்டாயமாக நாம் கேட்கக்கூடும். குடும்ப நபர்கள், நண்பர்கள் ஒன்று சேரும் போது, அது உற்சாகமான உரையாடல்களும் அதிக உணவும், வேடிக்கைச் சிரிப்பும் தங்கள் அன்பினை வெளிப்படுத்தும் நேரமாக அமையும். ஆனால் நாம் அமைதியாக நம்முடைய இருதயத்தை தேவனுக்குத் திறந்தால் அந்த வேளை இன்னும் இனிமையானதாக இருக்கும். எலியாவைப் போன்ற அமைதியான நேரத்தில் நாமும் தேவனைச் சந்திக்கலாம். அமர்ந்து கவனிப்போமாகில் தேவனுடைய மெல்லிய குரலைக் கேட்கலாம்.

நம்முடைய முதலீட்டின் பிரதிபலன்

1995 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பங்கு சந்தையின் முதலீட்டாளர்கள் மிக அதிகமான பலனைப் பெற்றனர். சராசரியாக 37:6 சதவீத அபார பலனைத் தந்தது. 2008 ஆம் ஆண்டில் முதலீட்டாளர்கள் அதே அளவு இழப்பைச் சந்தித்தனர். அதாவது 37.0 சதவீதம் இழப்பு. இவற்றிற்கிடையேயுள்ள வருடங்களில் மாறுபட்ட பலன் கிடைத்தது. சந்தையில் பணத்தோடுள்ளவர்கள் சிலவேளைகளில் அதிசயிக்கும் வண்ணமும், சிலவேளை பயப்படும் வகையிலும் இருந்தது.

தங்களுடைய வாழ்வை இயேசுவுக்காக முதலீடு செய்பவர்களுக்கு நம்பமுடியாத அளவு பிரதிபலன் கிடைக்குமென, இயேசு தம் சீடர்களுக்கு உறுதியளித்துள்ளார். அவர்கள், 'எல்லாவற்றையும் விட்டு உம்மைப் பின்பற்றினோமே" (வச. 28) என்று சொல்லத் தொடங்கினர். தங்கள் வீட்டையும், வேலையையும் அந்தஸ்தையும், குடும்பத்தையும் விட்டுத் தங்கள் வாழ்வை இயேசுவுக்காக முதலீடு செய்தனர் (வச.28). செல்வந்தனான ஒருவன் உலக ஆஸ்தியின் மீதுள்ள பற்றுதலை விட்டுவிட மனதில்லாதிருந்ததைக் கண்டபோது, தங்களுடைய முதலீடும் பலனற்றதாகிவிடுமோ என எண்ணத் தொடங்கினர். இயேசு அவர்களை நோக்கி, யாராகிலும் இயேசுவுக்காக தியாகம் செய்ய தயாராக இருந்தால் அவன், 'இம்மையிலே துன்பங்களோடே கூட நூறத்தனையாக வீடுகளையும் சகோதர சகோதரிகளையும்... மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான்" (வச. 30) என்று சொன்னார். இந்த பிரதிபலன் எந்த பங்குச் சந்தையாலும் கொடுக்கக்கூடாத மிகப் பெரிய பலனாகும்.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் நம்முடைய முதலீட்டின் வட்டி விகிதத்தைக் குறித்துக் கவலைகொள்ள வேண்டாம். தேவன் எதனோடும் ஒப்பிடமுடியாத உறுதியைத் தருகின்றார். பணத்தைக் கொண்டு மிக அதிகமான பொருளாதார லாபத்தைப் பெற நாம் முயற்சிக்கின்றோம். ஆனால், தேவன் நமக்குத் திருப்பித்தருவதோ டாலர் மதிப்புகளால் அளவிட முடியாதவை. அவரை அறிந்து கொள்வதால் வரும் மகிழ்ச்சி இப்பொழுதும், எப்பொழுதும் நிலையானது. அதனை நாம் பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியும்.

நீ தேர்ந்தெடுக்கப்படாதபோது

என்னுடைய நண்பனின் முகநூல் பதிவு, அவன் தன்னுடைய செயல் திட்டத்தை முடித்துவிட்டதைத் தெரிவித்தது. அநேகர் அவனுக்குப் பாராட்டுகள் தெரிவித்திருந்தனர். ஆனால், அவனுடைய இந்த பதிப்பு என் இருதயத்தை நெருடியது. அந்த செயல்திட்டம் என்னுடையது. ஏன் நான் அதனை நழுவவிட்டேனெனப் புரியவில்லை.

யோசேப்பின் நிலையும் இப்படித்தான் இருந்தது. தேவன் அவனை கவனிக்கத் தவறிவிட்டார். அது அவனுக்கு நன்றாகத் தெரியும். யூதாஸின் இடத்தைப் பிடிக்க ஓடிய இருவரில் ஒருவன் தான் யோசேப்பு. சீடர்கள் ஜெபித்தனர். "எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே... இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்து கொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும்" (அப். 1:24-25). ஆனால், தேவன் மற்றவனாகிய மத்தியாவைத் தெரிந்து கொண்டார். 'சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது. தேவன் தமது சித்தத்தைக் கூட்டத்தினருக்கு அறிவித்தார் (வச. 26).

எல்லா சீடர்களும் மத்தியாவிற்குப் பாராட்டு தெரிவித்தனர். நான் யோசேப்பைக் குறித்து ஆச்சரியப்பட்டேன். அவர், தான் நிராகரிக்கப்பட்டதை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்? கைவிடப்பட்டதாக எண்ணி அவர் அதிர்ந்து போனாரா? சுய அனுதாபத்தால் துவண்டு போனாரா? சீடர்களை விட்டுத் தன்னைப் பிரித்துக் கொண்டாரா? அல்லது தேவன் மீதுள்ள விசுவாசத்தில் சோர்ந்துபோகாமல் மற்றவர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியோடு தேவ பணியில் ஆதரவாக இருந்தாரா?

இதில் எது சிறந்ததென எனக்குத் தெரியும். நானாக இருந்திருந்தால் இதில் எதைச் செய்திருப்பேனெனவும் எனக்குத் தெரியும். எத்தனை சங்கடமான சூழ்நிலை! உங்களுக்கு நான் தேவையில்லை. நல்லது நானில்லாமல் நீங்கள் எப்படிச் செய்கிறீர்களெனப் பார்ப்போம். இந்த முடிவு ஒரு வேளை நல்லதாகத் தோன்றலாம். ஆனால், அது தன்னலமான முடிவு.

இதற்குப் பின்னர் வேதாகமத்தில் யோசேப்பைக் குறித்து எங்குமே குறிப்பிடப்படவில்லை. அதனால், அவர் எவ்வாறு செயல்பட்டாரெனத் தெரியவில்லை. நாம் தேர்ந்தெடுக்கப்படாமாலிருக்கும் போதும் நாம் எவ்வாறு செயல்படுகிறோமென்பதே மிக முக்கியமானது. நமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் நாம் எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுகிறோமென்பதைவிட எவ்வாறு மகிழ்ச்சியொடு பணி செய்கிறோமென்பதையே இயேசுவின் இராஜ்ஜியம் எதிர்பார்க்கிறது என்பதை நினைவில் கொள்வோம்.

சரியான நேரத்தில் நம்மோடிருப்பவர்

அவள் அந்த அலமாரியின் மேலடுக்கினையே நோக்கிக் கொண்டிருந்தாள். அங்குதான் கண்ணாடி ஜாடிகளில் பழக்கூழ் தயாரிப்புகள் வைக்கப்பட்டிருந்தன. நான் அவளருகில், அந்தப் பகுதியில் நின்று அலமாரியின் மேல் பகுதியைப் பார்த்தேன். எதை வாங்கலாமென யோசித்துக் கொண்டிருந்தேன். நான் நிற்பதை அவள் அறியாமல் தன் யோசனையிலேயே மூழ்கியிருந்தாள். எனக்கு மேலடுக்கிலிருந்து பொருட்களையெடுப்பதில் எந்த சிரமமும் இல்லை. ஏனெனில் நான் நல்ல உயரமான மனிதன். ஆனால், அவளோ மிகவும் குறைந்த உயரம். நான் அவளிடம் பேசி உதவ முன்வந்தேன். அதிர்ச்சியடைந்தவளாய், "நீங்கள் இங்கு நிற்பதை நான் கவனிக்கவில்லை. தயவுகூர்ந்து உதவுங்கள்" என்றாள்.

இயேசுவின் சீடரும் இத்தகைய ஒரு சூழலில் தான் இருந்தனர். பசியோடிருக்கும் ஒரு கூட்டத்தினர், தனிமையான இடம், நேரமும் கடந்து கொண்டிருந்தது. மிகவும் பிந்திய மாலைப்பொழுது, சீடர்கள் இயேசுவிடம், “ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்கு போஜன பதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிட வேண்டும்" என்கின்றனர் (மத். 14:15). ஆனால், இயேசு அவர்களிடம், 'நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள்" என்றார். அப்பொழுது அவர்கள், 'இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களுமேயல்லாமல் வேறொன்றும் இல்லை" என்றார்கள் (வச. 17). சீடர்கள் பார்த்ததெல்லாம் தங்களுடைய இயலாமையையே. ஆனால், அவர்களுக்கருகில் நிற்பவர் இயேசு. வெறுமனே அப்பங்களை பெருகச் செய்பவராக மட்டுமல்ல, அவரே நம் வாழ்வின் அப்பமாக நிற்கின்றார்.

நம்முடைய சவால்களை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் மூழ்கி நம்முடைய குறுகிய கண்ணோட்டத்தோடு நாம் நம்மோடிருக்கின்ற உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சார்ந்துகொள்ள நாம் தவறிவிடுகின்றோம். தனித்த மலைப் பிரதேசத்திலிருந்து மளிகைக் கடை வரை எந்த இடமாயினும் தேவன் நம்மோடிருக்கின்றார். தேவன் நம்முடைய தேவையின் போது அவ்விடத்திலிருக்கின்றார். நம் துன்பத்தின் மத்தியில் தவறாது வந்திருந்து உதவும் தேவனவர்.

வேதனையில் ஒர் நோக்கமுண்டோ?

தன்னுடைய சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன, இனி வாழ்நாள் முழுவதும் டயலிஸிஸ் செய்துகொள்ள வேண்டுமென தெரிந்து கொண்டபோது ஸ்யூ ஃபென், அந்த சிகிச்சையைத் தொடர விரும்பவில்லை. பணி ஓய்வுபெற்று, தனியாக, ஆனால், நீண்ட நாட்களாக இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தில் வாழும் அவர், தன்னுடைய வாழ்நாளை நீடித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், நண்பர்களின் விடாப்பிடியான முயற்சியால் டயலிஸிஸ் செய்ய சம்மதித்ததோடு, தேவன் அவளுக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையையும் பெற்றுக் கொண்டாள்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தான் செல்லும் ஆலயத்தில் பெலவீனப்படுத்தும் ஒரு வியாதியோடு போராடிக் கொண்டிருந்த ஒரு சிநேகிதியைச் சந்தித்த போது ஸ்யூ தன்னுடைய அனுபவத்திற்கு ஒரு பயன் வந்ததைக் கண்டாள். அந்தப் பெண்ணும் தனிமையில், தன்னை உண்மையாய் புரிந்துகொள்ளக் கூடியவர்கள் யாருமின்றி தவித்தாள். ஸ்யூ அவளுடைய உடல், மனரீதியானத் தேவைகளை புரிந்து கொண்டதோடு, அவளுக்குத் தனிப்பட்ட முறையில் உதவவும் முன்வந்தாள். ஸ்யூ தான் சென்ற பாதையின் அனுபவம், அந்தப் பெண்ணோடு அவளுடைய பாதையில் துணையாகச் செல்ல உதவியது. வேறெந்த நபராலும் கொடுக்கமுடியாத ஆறுதலை அவளால் கொடுக்க முடிந்தது. 'தேவன் என்னை எப்படி பயன்படுத்த முடியுமென்பதைத் தெரிந்து கொண்டேன்" என்று கூறினாள்.

நாம் ஏன் கடினமான பாதையில் வழிநடத்தப் படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். ஆனால், தேவன் நம்முடைய துன்பங்களை வேறுவகையில் பயன்படுத்துகின்றார். நம்முடைய சோதனையின் மத்தியில் அவரின் ஆறுதலையும் அன்பையும் தேடி அவரிடம் திரும்புவோமாயின், நாம் பிறருக்கு உதவியாயிருக்கும்படி நம்மை பெலப்படுத்துவார். பவுலும் தன்னுடைய சோதனைகளின் வழியே தேவனுடைய திட்டத்தைத் தெரிந்து கொண்டார். அது அவருக்கு தேவனிடமிருந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்ளவும், பிறருக்கு ஆசீர்வாதமாக அதை பயன்படுத்தவும் வாய்ப்பளித்தது (2 கொரி. 1:4). நமக்கு வரும் துன்பங்களையும், வேதனைகளையும் நாம் தடுத்துவிட முடியாது. ஆனால், துன்பத்தின் வழியே தேவனுடைய வல்லமையைப் பெற்று, அதனை நன்மையான பணிக்கு பயன்படுத்துவோமாக.

பொக்கிஷத்தைத் தேடிப்பார்த்தல்

புதையுண்ட பொக்கிஷம் - இது கேட்பதற்கு ஏதோ குழந்தைகளின் கதைப்புத்தகத்தில் வருவது போல தோன்றுகிறது. ஆனால், வினோத குணம் படைத்த, கோடீஸ்வரரான ஃபாரஸ்ட் ஃபென் இரண்டு மில்லியன் டாலர் மதிப்புடைய நகைகளும், தங்கமும் நிரம்பப்பெற்ற பெட்டகமொன்றை பாறைகள் நிறைந்த மலைப்பகுதியில் போட்டுவிட்டதாகக் கூறுகின்றார். அநேகர் அதனைத் தேடிச் சென்றனர். இந்த மறைந்த செல்வத்தைத் தேடிச் சென்ற நான்கு பேர் தங்கள் உயிரையும் இழந்தனர்.

நீதிமொழிகளை எழுதியவர் நம்மை நின்று சற்று யோசிக்குமாறு சொல்கின்றார். இத்தகையத் தேடலுக்கு உகந்ததுதானா இந்த பொக்கிஷம்? நீதிமொழிகள் 4ல் ஒரு தந்தை தன் மகனுக்கு, அவன் நன்றாய் வாழ்வதற்குத் தேவையானவற்றைக் குறித்து எழுதுகின்றார். எல்லாவற்றையும் காட்டிலும் ஞானமே தேடிக் கண்டடைய உகந்ததென குறிப்பிடுகின்றார் (வச. 7). ஞானத்தின் வழியில் ஒருவன் நடந்தால், அவன் நடைகளுக்கு இடுக்கண் வருவதில்லை, அவைகளில் ஓடினாலும் இடறமாட்டார்கள், அது அவன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்
(வச. 8-12) என்கின்றார்.

பல நூறு ஆண்டுகளுக்குப் பின் இயேசுவின் சீடனான யாக்கோபு ஞானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றார். 'பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும், சாந்தமும் இணக்கமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும் மாயமற்றதாயுமிருக்கிறது (யாக். 3:17). நாம் ஞானத்தைத் தேடும்போது எல்லா நன்மைகளும் நம் வாழ்வில் செழித்தோங்குமெனக் குறிப்பிடுகின்றார்.

ஞானத்தைத் தேடுவது என்பது எல்லா ஞானத்திலும், அறிவிற்கும் காரணரான தேவனைத் தேடுவதற்குச் சமம். இவ்வுலகில் புதைந்துள்ள அனைத்து பொக்கிஷங்களையும் விட பரத்திலிருந்து வருகின்ற ஞானமே விலையேறப் பெற்றது.