தேவன் தரும் பணி ஓய்வுத் திட்டம்
பழங்காலப் பொருட்களைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த முனைவர். வார்விக் ராட்வெல் தன்னுடைய பணி ஓய்விற்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்து தேசத்தில், லிச்பீல்டிலுள்ள பேராலயத்தில் ஓர் அரிய காரியத்தைக் கண்டுபிடித்தார். கட்டடக் கலைஞர்கள் அந்த தேவாலயத்தின் தளத்தின் ஒரு பகுதியை மிகவும் கவனத்தோடு தோண்டியெடுத்து, அதில் நகரக்கூடிய ஒரு தளத்தை அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது அங்கு பிரதான தூதனான காபிரியேல் தூதனின் சிலையைக் கண்டெடுத்தனர். அது ஏறத்தாள 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டு கொண்டனர். எனவே முனைவர் ராட்வெல்வின் பணி ஓய்வுத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அவருடைய கண்டுபிடிப்பு ஒரு புதிய ஆர்வத்தோடு, ஒரு புதிய கோணத்தில் அவரைச் செயல்படவைத்தது.
மோசேயும் எண்பது வயதான போது ஓர் அனல்மூட்டும் கண்டுபிடிப்பிற்குள் இழுத்துக் கொள்ளப்பட்டான். அவனுடைய வாழ்வே மாறியது. எகிப்து ராஜகுமாரியின் வளர்ப்பு மகனாக இருந்தபோதும் அவன் தான் ஓர் எபிரெயரின் வழிவந்தவன் என்பதை மறக்கவேயில்லை. தன்னுடைய உறவினருக்கு இழைக்கப்பட்ட அநீதியைகக் கண்ட போது அவன் கொதித்தெழுந்தான் (யாத். 2:11-12) எபிரெயனை அடித்த ஓர் எகிப்தியனை மோசே கொன்று போட்டான் எனப் பார்வோன் கேள்வியுற்ற போது, மோசேயைக் கொன்று போட திட்டம் செய்தான். எனவே மோசே மீதியான் தேசத்திற்கு தப்பி சென்று அங்கு தங்கினான் (வச. 13-15).
நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அவன் எண்பது வயதான போது, தன்னுடைய மாமனாரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, “அங்கே கர்த்தருடைய தூதனானவர் முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜீவாலையிலே நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான். முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், வெந்து போகாமல் இருந்தது” (3:2). முட்செடியின் நடுவிலிருந்து தேவன் மோசேயைக் கூப்பிட்டார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்து வழிநடத்துமாறு அவனிடம் கூறினார் (வச. 3-25).
உன் வாழ்வின் இந்த வேளையில் தேவன் எத்தகைய நோக்கத்திற்காக உன்னை அழைக்கின்றார்? உன்னுடைய பாதையில் தேவன் என்ன புதிய திட்டத்தை வைத்திருக்கின்றார்?
அழகினை ரசித்தல்
ஒரு கலங்கரை விளக்கின் வெளிச்சத்தைப் போன்று அந்தப் படம் என் கண்களைக் கவர்ந்தது. ஒரு பட்டணத்திலுள்ள பெரிய மருத்துவமனையின் நீண்ட வழியில் அது வைக்கப்பட்டிருந்தது. அழகிய வண்ணங்களால் சித்திரம் தீட்டப்பட்ட நவாஜோ என்ற அமெரிக்க பழங்குடியினரின் உருவங்கள் என்னைக் கவர்ந்து, அதன் அழகைக் கண்டு வியக்கும்படி செய்தது. “இதனைப் பாருங்கள்” என நான் என்னுடைய கணவன் டானை அழைத்தேன்.
அவர் எனக்குச் சற்று முன்பாக நடந்து சென்று கொண்டிருந்தார். நான் அங்கு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த மற்ற படங்களையெல்லாம் விட்டுவிட்டு, தயங்கினபடியே இந்த ஒன்றினையே உற்று நோக்கி, “அழகாயிருக்கிறது” என முணுமுணுத்தேன்.
நம் வாழ்விலுள்ள அநேக காரியங்கள் மிகவும் அழகாயிருக்கின்றன. அவை தரம் மிகுந்த ஓவியங்கள், இயற்கை காட்சிகள் மனதைக் கவரும் கைவினைப் பொருட்கள், என பலப்பல இதேப் போன்றே ஒரு குழந்தையின் சிரிப்பும், ஒரு நண்பனின் ஹலோ என்ற சொல்லும், ராபின் பறவையின் நீல நிற முட்டைகளும் கடல் சிப்பியின் வலிமையான விளிம்புகளும் போன்று இன்னும் அநேகம். நம் வாழ்வு நமக்குக் கொடுக்கின்ற சுமைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்படி, “ தேவன் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்கிறார்” (பிரச. 3:11) இந்த அழகில் நாம் தேவனுடைய நேர்த்தியான படைப்பின் ஒரு சிறிய பகுதியைக் காண முடிகிறது எனவும், வரப்போகிற அவருடைய மகிமையின் ராஜ்ஜியத்தின் ஒரு சிறிய காட்சியைக் காணமுடிகிறது எனவும் வேத வல்லுனர்கள் விளக்குகின்றனர்.
அவருடைய இராஜ்ஜியத்தின் நேர்த்தியான காட்சிகளை நம்மால் கற்பனை செய்துதான் பார்க்க முடியும் எனவே தான் நாம் அதின் ஒரு சிறு பகுதியைக் கண்டு ரசித்துப் பார்க்கும்படி தேவன் இவ்வுலகின் அழகினைக் காட்டுகின்றார் இவ்விதமாக தேவன், “உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கின்றார்” (வச. 11). சில நேரங்களில் நம் வாழ்வு மங்கிப்போய் பயனற்றுப் போனதைப் போன்று காணப்படும். ஆனால், தேவன் இரக்கமாக நம் வாழ்வின் அழகினை நாம் கண்டு ரசிக்கும்படியாகச் சில தருணங்களைத் தருகின்றார்.
நான் ரசித்த படத்தை உருவாக்கிய கலைஞன் ஜெரார்ட் கட்டிஸ் டிலானோ “தேவன் எனக்கு அழகினை உருவாக்கும் திறமையைக் கொடுத்துள்ளார். அதனையே நான் செய்யும்படியும் தேவன் விரும்புகின்றார்” எனக் கூறுகின்றார்.
இத்தகைய அழகினைப் பார்க்கும் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்? தேவனுடைய மகிமையை நாம் கண்டு அநுபவிக்கும் போது வரப்போகின்ற நித்தியத்தை நினைத்து தேவனைத் துதிப்போம்.
தேவன் பார்ப்பதென்ன?
அதிகாலை வேளையில் நான் வேகமாக எங்களது முன் அறையின் ஜன்னல் வழியே எங்கள் வீட்டின் பின்புறமிருக்கும் அவாந்தரவெளியைப் பார்த்தபடியே கடந்து சென்றேன். அடிக்கடி, நான் ஒரு பருந்தையே அல்லது ஓர் ஆந்தையையோ மரக் கிளைகளில் அமர்ந்திருக்கக் காண்பேன். அவை அந்தப் பகுதி முழுவதையும் கண்காணித்துக் கொண்டிருக்கும். ஒரு நாள் காலைப் பொழுதில், ஒரு மொட்டைத்தலை கழுகு உயர்ந்த கிளையொன்றில் அமர்ந்திருக்கக் கண்டு வியந்தேன். அது அந்தப் பகுதி ழுழுவதையும் தன்னுடைய எல்லைப்பகுதி என்ற எண்ணத்தோடு அதனைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. ஒருவேளை அது காலை உணவைத் தேடிக் கொண்டிருந்திருக்கலாம். அதனுடைய பார்வை ராஜபார்வையாயிருந்தது.
2 நாளாகமம் 16ல், ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி (தேவனுடைய தீர்க்கதரிசி) அரசனிடம், அவனுடைய செயல்களெல்லாம் ஒரு ராஜபார்வையால் கண்காணிக்கப்படுகின்றன என்கின்றார். அவன் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் “நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்து கொண்டு இருக்கிறீர் (வச. 7). மேலும், “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது” (வச. 9) என்றார். கர்த்தரைத் சார்ந்து கொள்ளாமல் மனிதரைச் சார்ந்து கொண்டபடியால் இது முதல் யுத்தங்கள் தொடர்ந்து வரும் என்றான்.
இந்த வார்த்தைகளை நாம் வாசிக்கும் போது, தேவன் நம்முடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டு இரையின் மேல் பாய்கின்ற ஒரு பறவையைப் போல, நம்முடைய ஆபத்து நேரத்தில் அவர் நம்மீது பாய்ந்து நம்மைக் கவ்விக்கொள்வார் எனத் தவறாக உணர்ந்துவிடாதிருங்கள். அனானியின் வார்த்தைகள் நம்மை உண்மைக்கு நேராகக் கொண்டு செல்கின்றன. தேவன் நம்மைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டேயிருக்கின்றார். நம்முடைய தேவையின் போது நாம் அவரைக் கூப்பிடும்படி அவர் காத்திருக்கின்றார் என்பதையே அனானி நமக்கு எடுத்துரைக்கின்றார்.
எங்களுடைய பின் வளாகத்தில் அமர்ந்திருந்த கழுகினைப் போல, கர்த்தருடைய கண்களும் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது. உனக்குள்ளும், எனக்குள்ளும் உண்மையிருக்கிறதா எனக் கண்டறிய அவை பார்த்துக் கொண்டேயிருக்கின்றன. எப்படி அவரால் நமக்கு நம்பிக்கையையும், உதவியையும் கொடுக்க முடியும்?
நேற்றைய தினத்தைப் போன்றல்ல
என்னுடைய பேரன் ஜேய் சிறுவனாயிருந்தபோது, அவனுடைய பெற்றோர் அவனுடைய பிறந்தநாளின்போது அவனுக்கு ஒரு புதிய டீ-சட்டையை வாங்கிக் கொடுத்தனர். அவன் அதனை உடனடியாக அணிந்து கொண்டு, பெருமையாக அந்த நாள் ழுழுவதும் இருந்தான்.
மறுநாள் காலை அவன் அந்த டீ-சட்டையோடு காட்சியளித்தபோது அவனுடைய தந்தை அவனிடம், “ஜேய், இந்த டீ-சட்டை உனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகின்றதா?” எனக் கேட்டார்.
“நேற்றைய தினத்தைப் போன்றில்லை” என்று பதிலளித்தான்.
பொருட்களைச் சேகரிப்பதும் இத்தகைய விளைவையே தரும். வாழ்வின் நல்ல பொருட்கள் கூட நாம் தேடுகின்ற ஆழ்ந்த, நிரந்தர மகிழ்ச்சியைத் தருவதில்லை. நம்மிடம் அநேகப் பொருட்களிருந்தாலும் நாம் இன்னும் திருப்தியோடும் மகிழ்ச்சியோடும் இருப்பதில்லை.
புதிய ஆடைகள், புதிய வாகனம், நவீன அலைபேசி, கைக்கடிகாரம். என பொருட்களைக் சேகரிப்பதால் உலகத்தில் மகிழ்ச்சியைப் பெறலாம். ஆனால், எந்தப் பொருளாலும் அது நேற்று தந்த மகிழ்ச்சியை இன்று தர இயலாது. ஏனெனில், நாம் தேவனுக்கென்று படைக்கப்பட்டவர்கள். எனவே எந்த உலகப் பொருளும் நம்மை நிரந்தர மகிழ்ச்சியைக் தராது. ஒரு நாள் இயேசுவும் தன்னுடைய உபவாசத்தை முடித்துக் கொண்டபோது பசியோடிருந்தார். சாத்தான் அவரிடம் வந்து அப்பங்களை உருவாக்கி தன்னுடைய பசியை ஆற்றிக்கொள்ளுமாறு சோதிக்கின்றான். இயேசு அவனிடம் உபாகமம் 8:3ல் சொல்லப்பட்டுள்ள, “மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்ற வார்த்தையினால் பதிலளித்தார் (மத். 4:4).
அப்பத்தினால் மட்டும் உயிர்வாழ முடியாது. ஏனெனில் நாம் ஆவிக்குரிய மக்கள் என்ற உண்மையை இயேசு வெளிப்படுத்துகின்றார். எனவே உலகப் பொருட்களால் மட்டும் நாம் உயிர் வாழ முடியாது.
மிகச் மிகச் சிறியோருக்கு சேவை செய்தல்
அந்த வீடியோ காட்சியில் ஒரு மனிதன் ஒரு கூட்டம் நிறைந்த ஒரு சாலையோரம் முழங்காலில் நின்றபடியே அருகிலுள்ள முட்புதரில் பற்றியெரிந்து கொண்டிருந்த நெருப்பினூடே கைகளைத்தட்டியும், கெஞ்சியும் ஏதோ ஒன்றினை வெளியே வரும்படி கேட்டுக் கொண்டிருந்தான். அது என்ன? ஒரு நாயாக இருக்குமோ? சில மணித்துளிகளில் முயலொன்று குதித்து வெளியே வந்தது. அந்த மனிதன், பயந்துகொண்டு வெளியே வந்த அந்த முயலை அள்ளி அணைத்தவாறு வேகமாகப் பாதுகாப்பான இடத்திற்கு விரைந்தார்.
எப்படி ஒரு சிறிய உயிரினத்தைக் காப்பாற்ற அவர் எடுத்த முயற்சி அந்த நாட்டின் மிகப்பெரிய செய்தியாக வெளிவந்தது? ஏதோ ஒன்று, இந்த சிறிய உயிரினத்தையும் அருமையாகக் கருதி இரக்கம் காட்டும்படிச் செய்தது. இத்தனை சிறிய உயிரினத்திற்கு இருதயத்தில் இத்தனை பெரிய இடம் கொடுப்பதென்பது எத்தனை பெரியது!
ஒரு மனுஷன் பெரிய விருந்து ஆயத்தம் பண்ணி விருப்பமுள்ள அனைவரையும் அழைத்ததைப் போன்று தேவனுடைய இராஜ்ஜியம் உள்ளது என்று இயேசு கூறினார். அந்த விருந்துக்கு மிகப் பெரிய முக்கியஸ்தர்களை மட்டுமல்ல, “ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக் கொண்டுவா” என்றார் (லூக். 14:21). நல்லவேளை, தேவன் பெலவீனரையும் சமுதாயத்தில் யாரும் கவனிக்காதவர்களையும் அழைத்து விருந்து சாலையை நிரப்பினார். இல்லையெனில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும். “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி உலகத்தின் இழிவானவைகளையும் அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார் (1 கொரி. 1:27-29).
என்னைப் போன்ற சிறிய மனிதனையும் இரட்சிக்கும்படி தேவன் எத்தனை பெரிய இருதயம் கொண்டுள்ளார்! இதற்குப் பிரதிபலனாக நான் எத்தனை பெரிய இருதயம் கொண்டிருக்க வேண்டும்? மிக எளிதாகச் சொல்ல முடியும், சமுதாயத்தில் மிகப் பெரியவர்களாகக் கருதப்படுகின்றவர்களை மனம் மகிழச் செய்வதன் மூலமாக அல்ல, சமுதாயம் மிகவும் அற்பமாகக் கருதும் நபர்களுக்குப் பணி செய்வதன் மூலமே, நான் பெரிய இருதயத்தைப் பெற முடியும்.
ஒளியைப் பார்த்தல்
லாஸ் ஏஞ்சல்ஸ் பட்டணத்தின் தெருக்களின் வழியே, ஒரு வீடற்ற மனிதன், போதைக்கு அடிமையாகி போராடிக் கொண்டிருந்தபோது, ஒரு “நள்ளிரவு சேவைமையத்” திற்குச் சென்று உதவி கேட்டான். இவ்வாறு பிரையனின் மீட்புக்கு நேரான நீண்டபயணம் துவங்கியது.
இந்த செயலின் போது, இசைமீது தனக்கிருந்த ஆவலை பிரையன் மீண்டும் கண்டு கொண்டான். தெருக்களில் வாழும் இசை மீட்டும் இசைக் கலைஞர்களின் குழுவில் சேர்ந்தான். அவர்கள் பிரையனிடம் ஹன்டல் என்பவர் எழுதிய ‘மேசியா’ என்ற பாடலைத் தனிப்பாடலாக பாடுமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்தப் பாடல் “இருளில் நடக்கிற ஜனங்கள்” என ஆரம்பமாகும். இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரத்தில் அவர்கள் ஓர் இருண்ட காலத்தைச் சந்தித்த போது, ஏசாயா தீர்க்கதரிசி இந்த வார்த்தைகளை எழுதினார். அவர், “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசா. 9:2) என்ற வார்த்தைகளை பாடினார். நியூயார்க் பட்டணத்திலுள்ள ஒரு பத்திரிக்கையிலே ஓர் இசைக் கலைஞனான பிரையனின் பாடலைக் குறித்து அந்தப் பாடலின் வரிகள் அவனுடைய சொந்த வாழ்க்கையிலிருந்தே எடுக்கப்பட்டவை போலிருந்தன” என விமர்சிக்கப்பட்டிருந்தது.
சுவிசேஷத்தை எழுதிய மத்தேயுவும் இதே பகுதியைக் குறிப்பிட்டுள்ளார். ஒருவரையொருவர் ஏமாற்றி வாழும் வாழ்வின் மத்தியிலிருந்து இயேசுவினால் அழைக்கப்பட்ட மத்தேயு, ஏசாயாவின் இந்த
தீர்க்கதரிசன வார்த்தைகள் இயேசுவின் மூலம் நிறைவேற்றப்பட்டதை விளக்குகின்றார். “யோர்தானின் அக்கரையிலிருந்த” ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகளை இயேசு “புறஜாதிகளின் கலிலேயாவுக்கு” இயேசு எப்படிக் கொண்டு வந்தார் என்று மத்தேயு விளக்குகின்றார் (மத். 4:13-15).
ராயனின் வரிவசூல் குண்டர்களில் ஒருவனான மத்தேயு (மத். 9:9), போதைக்கு அடிமையாகி தெருவில் திரிந்த பிரையன் அல்லது நம்மைப் போன்றவர்கள், ஒளிக்கும் இருளுக்குமுள்ள வித்தியாசத்தை நம் வாழ்வில் காட்ட ஒரு தருணம் கிடைக்குமென்று யார் நினைத்திருக்கக்கூடும்.
பெலத்தை இழந்தபின் மறுபடியும் பெலப்படுத்தும் வல்லமை
நான் எனது ஐம்பத்திநான்காம் வயதில் மில்வாக்கீ மாரத்;தான் ஓட்டத்தில் இரண்டு இலக்குகளோடு பங்கெடுத்தேன். ஒன்று அந்த ஓட்டத்தை முடிக்க வேண்டும் இரண்டாவது, அதனை ஐந்து மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும். ஒருவேளை நான் முதல் 13.1 மைல்கள் தூரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் போலவே இரண்டாம் பகுதியும் அமையுமாயின், நான் எடுத்துக்கொள்ளும் நேரம் மிகவும் வியப்பூட்டுவதாக இருக்கும். ஆனால், இந்த ஓட்டம் மிகவும் சோர்வடையச் செய்யும் ஒன்று இரண்டாம் பகுதியின் போது தேவையான பெலனைப் பெற்றுக் கொள்ளவே முடியவில்லை. நான் எல்லைக் கோட்டினை எட்டும் போது, என்னுடைய நிலையான ஓட்டம் தளர்ந்து, வேதனை மிகுந்த நடையாக மாறிவிடும்.
ஓடும் ஓட்டத்தில் மட்டும்தான் இரண்டாம் பகுதிக்கு பெலப்படுத்தும் ஆற்றல் தேவையா? இல்லை. அது வாழ்க்கையின் ஓட்டத்திற்கும் தான். சோர்வினால் தளர்ந்த மக்கள் தேவையான சகிப்புத் தன்மையைப் பெற்றுக்கொள்ளவும் பெலனற்று சோர்ந்த மக்களுக்கு ஆறுதலையும், ஊக்கத்தையும் கொடுக்கவும் தேவனுடைய உதவி தேவை. ஏசாயா 40:27-31ல் காணப்படுகின்ற அழகிய தீர்க்கதரிசன வார்த்தைகள் எக்காலத்திற்கும் பொருத்தமான வார்த்தைகள். அது வெறுப்படைந்து, வலுவிழந்த மக்களிடம் தேவன் அவர்களை விட்டு விடவுமில்லை, அவர்கள் மீது கரிசனையோடிருக்கிறாரெனக் கூறுகின்றது (வச. 27) நம்முடைய ஏக்கங்கள் தேவனுடைய பார்வையைவிட்டு தவறிவிடவில்லை. சோர்ந்து போகிறவர்களுக்கு அவர் பெலன் கொடுக்கின்றார், ஆறுதல் அளிக்கின்றார். தேவனுடைய எல்லையில்லாத வல்லமையும், ஆழ்ந்த அறிவும் நம்மைத் தேற்ற உறுதியளிக்கின்றன (வச. 28).
இரண்டாம் நிலைக்குத் தேவையான ஆற்றலைக் குறிக்கும் வசனங்கள் 29-31. இந்த வார்த்தைகள் நமக்குத் தரப்பட்டவை. நாம் நம் குடும்பத்தினரை கவனிக்கும் பொறுப்பிலுள்ளோமா? பொருளாதாரத் தேவையாலும், உடல்ரீதியானத் தேவையாலும் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கின்றோமா? உறவினர்களால் ஏற்பட்ட மன அழுத்தமா? ஆவிக்குரிய போராட்டங்களா? வேதவசனங்களை தியானம் செய்து, ஜெபத்தில் அவருடைய பதிலுக்காக காத்திருக்கின்றவர்களுக்கு அவருடைய பெலன் கொடுக்கப்படும்படி காத்திருக்கின்றது.
சுத்தமாக கழுவப்பட்டது
என்னால் நம்பமுடியவில்லை. என்னுடைய நீல நிற ஜெல் பேனா என்னுடைய டவலின் மடிப்புகளுக்குள் ஒளிந்து, துவைக்கும் எந்திரத்திற்குள் சென்று, உலர்ப்பானுக்குள் வந்த போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. அவலட்சணமான நீலக்கறைகள் எல்லாத் துணிகளிலும் காணப்பட்டன. என்னுடைய வெண்மையான டவல்கள் பாழாகிவிட்டன. அதிலுள்ள கடினமான கறைகளை நீக்க எந்தவொரு நிறநீக்கியாலும் முடியாது.
நான் வெறுப்படைந்தவனாய் அந்த டவல்களை பழைய துணிகளோடு சேர்த்தபோது, பழைய ஏற்பாட்டில் எரேமியா தீர்க்கதரிசி, பாவத்தின் கொடிய விளைவுகளைப் பற்றி விளக்கியுள்ளது. என் நினைவிற்கு வந்தது. தேவனைத் தள்ளி விட்டு, விக்கிரகங்களிடம் திரும்பிய போது, இஸ்ரவேல் ஜனங்கள், தங்களுக்கும் தேவனுக்குமுள்ள உறவின்மீது நீங்காதகறையை ஏற்படுத்திக் கொண்டனர் (எரே. 2:13). “நீ உன்னை உவர் மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தை உபயோகித்தாலும் உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்கும்” என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கின்றார் (வச. 22). தங்கள் பாவங்களால் ஏற்பட்ட கறையை நீக்க அவைகளால் கூடாமற்போயிற்று என்கின்றார்.
நம்முடைய பாவக் கறையை நீக்க நாம் எடுத்துக் கொள்ளும் சுய முயற்சிகள் யாவும் வீணானவை. ஆனால், நம்மால் முடியாததை இயேசு செய்து முடித்தார். அவருடைய சாவு மற்றும் உயித்தெழுதலின் வல்லமையால் அவர் நம்மை சுத்திகரிக்கின்றார். “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவா. 1:7).
இந்த உண்மையை நாம் நம்புவதற்கு கடினமாயிருந்தாலும், உறுதியாகப் பற்றிக்கொள். இயேசுவால் நீக்க முடியாத பாவக்கறை ஒன்றுமேயில்லை. இயேசுவிடம் வரும் எவரிடமுமுள்ள பாவக் கறைகளை கழுவி சுத்திகரிக்க அவர் ஆவலாயிருக்கின்றார் (வச. 9). கிறிஸ்துவின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நாம், ஒவ்வொரு நாளும் விடுதலையோடும், நம்பிக்கையோடும் வாழ முடியும்.
அது யார்?
ஒரு மனிதன் தன் வீட்டின் வெளியே ஒர் பாதுகாப்பு கேமராவைப் பொருத்திய பின்னர் அந்த அமைப்பு சரியாக இயங்குகின்றதா என்பதைச் சோதிப்பதற்காக அதன் படங்களைப் பார்வையிட்டார். அதில். ஓர் அகன்ற மார்புடைய கரிய உடையணிந்த ஓர் உருவம் அவருடைய முற்றத்தில் உலா வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் இன்னும் சற்று கூர்ந்து அந்த மனிதன் என்ன செய்கிறாரென கவனித்தார். அப்பொழுது அங்கு நடமாடிய மனிதன் அறிமுகமானவர் போலத் தெரிந்தார். கடைசியாக. அவருடைய விட்டின் பின்புறத்தில் எல்லைக்குள் நடமாடிய அந்த நபர் வேறு யாருமல்ல, தன்னுடைய உருவம் தான் அதில் பதிந்துள்ளது எனக் கண்டுகொண்டார்!
சில சந்தர்ப்பங்களில் நாம் நம்முடைய உடலைவிட்டு வெளியே வந்து நம்மைப் பார்க்கக் கூடுமானால், நம்மை எப்படிப்பட்டவராகப் பார்ப்போம்? தாவீதின் இருதயம் கடினப்பட்டது. வெளியேயிருந்து அவனைக் குறித்து அவனைப்பார்க்கும்படியாக அவனுக்கு ஒரு தேவை ஏற்பட்டது. தேவன் அவனைக் காணும் கண்ணோட்டத்தோடு, பத்சேபாளுடன் அவனுடையப் பங்கினை அவன் பார்த்தபோது, தேவன் அவனை விடுவிக்கும்படி நாத்தானை அனுப்புகின்றார் (2 சாமு. 12).
நாத்தான் தாவீதிடம் ஓர் ஐசுரியவான் தன் விருந்தாளியை உபசரிக்க, ஓர் ஏழை மனிதன் வளர்த்த ஒரேயொரு ஆட்டுக்குட்டியை எடுத்துக் கொண்ட கதையைக் கூறுகின்றான். ஐசுரியவானிடம் மந்தை, மந்தையாக ஆடுகளிருந்த போதிலும் அவன் அந்த ஏழையின் ஒற்றை ஆட்டைப் பிடித்து அடித்து சமைத்து விட்டான். இந்தக் கதையிலுள்ள ஐசுரியவான் தாவீது தான் என நாத்தான் குறிப்பிட்டபோது தான் தாவீது தான் உரியாவிற்கு இழைத்த கொடுமையை உணர்கின்றான். அதன் விளைவுகளை நாத்தான் தெரிவிக்கின்றான். அதில் முக்கியமானதென்னவெனில், அவர் தாவீதிடம், “கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்” (வச. 13) என்பதே.
தேவன் நம் வாழ்விலுள்ள பாவச் செயல்களை வெளிப்படுத்துவதன் நோக்கம், நம்மைத் தண்டிப்பதற்கு அல்ல நம்மைப் பாவத்திலிருந்து மீட்டு, நாம் காயப்படுத்தினவர்களோடு மனம் பொருந்தவே நமக்குதவுகின்றார். மனந்திரும்புதல் மூலம் தேவனோடுள்ள உறவை நாம் மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடிகிறது. தேவனோடு புதுப்பிக்கப்பட்ட உறவை ஏற்படுத்திக்கொள்ள மனந்திரும்புதல் வழிவகுக்கின்றது. தேவன் தரும் மன்னிப்பு, கிருபையின் வழியே அவருடன் நெருங்கிச் சேர முடிகிறது.