இரக்கமுள்ள ஒரு இருதயம்
ஒரு கூட்டமான கேளிக்கைப் பூங்காவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நாங்கள் ஏழு பேர் சென்றிருந்தோம். நாங்கள் அனைவரும் ஒரே வரிசையில் ஒன்றாக அமர ஆசைப்பட்டு ஒரு வரிசையில் நுழைந்த பொழுது, ஒரு பெண் எங்களுக்கிடையே புகுந்து அவ்வரிசையில் அமரச் சென்றாள். அப்பொழுது என் மனைவி நாங்கள் ஒரே வரிசையில் அமர விரும்புவதை தெரிவித்த பொழுது “அதெல்லாம் சரிப்படாது,” என பட்டென்று கூறிவிட்டு தன்னுடன் வந்திருந்த இரண்டு நபர்களுடன் அவ்வரிசைக்குள் விரைந்து நுழைந்தனர்.
ஆகவே, எங்களில் நான்கு பேர் முன் வரிசையிலும் மூன்று பேர் பின் வரிசையிலும் அமர்ந்தபொழுது, அப்பெண்ணோடு வந்திருந்த ஒருவர் உடல் ஊனமுற்றவர் என்பதை என் மனைவி கவனித்தாள். அப்பெண் தன் நண்பருக்கு வேண்டிய உதவியை செய்வதற்காகவே அவர்கள் ஒன்றாக அமரமுயன்றிருக்கின்றனர் என்பதை நாங்கள் உணர்ந்தபொழுது எங்கள் எரிச்சல் மறைந்து போயிற்று. “யோசித்துப் பார்த்தால், இப்படிப்பட்டதான நெரிசலான இடத்தை சமாளிப்பது அவர்களுக்கு எவ்வளவு கடினம்,” என என் மனைவி கூறினாள். அப்பெண்மணி எங்களிடம் கடுமையாகத் தான் பேசினாள், ஆனாலும் கோபத்தைக் காட்டுவதற்கு பதிலாக நாம் இரக்கத்தை காட்டலாமே.
எங்கு சென்றாலும், இரக்கத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களை நாம் காண நேரிடும். அப்பொழுது அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளின்படி “நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயையையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடியபொறுமையையும் தரித்துக்கொண்டு” (கொலே. 3:12), நம்மைச் சுற்றி கிருபையின் அன்பான தொடுதலை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் உதவிடுங்கள். மேலும் அவர் “ஒருவரையொருவர் தாங்கி.., ஒருவருக் கொருவர் மன்னியுங்கள்” என்றும் பரிந்துரைக்கின்றார் (வச. 13).
நாம் பிறர் மீது இரக்கத்தை வெளிக்காட்டும் பொழுது, கிருபையும் இரக்கமும் நிறைந்த இருதயத்தை நம்மீது ஊற்றிய தேவனை அவர்கள் காண உதவிடுவோம்.
திரைக்குப் பின்னால்!
என் மகள் தன்னுடைய கேள்விக்கு விரிவானதொரு பதிலை எதிர்பார்த்து அவளுடைய தோழிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினாள். அதை அவள் தோழி வாசித்துவிட்டாள் என்பதை குறுஞ்செய்தி சேவை மூலம் அறிந்துகொண்டு எதிர்பார்ப்போடு பதிலுக்காக காத்திருந்தாள். சில நிமிடம்தான் கடந்திருக்கும், ஆனால் அதற்குள் பொறுமையிழந்து அத்தாமதத்தை எண்ணி எரிச்சலோடு புலம்ப ஆரம்பித்தாள். கொஞ்ச நேரத்தில் எரிச்சல் கவலையாக மாறியது. இன்னும் பதில் வராததால் ஒருவேளை தங்களுக்கிடையில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ என எண்ண ஆரம்பித்தாள். ஆனால் ஒரு வழியாக பதில் வந்ததும், அவர்களுடைய நட்பில் எப்பிரச்சனையும் இல்லை என்பதை உணர்ந்து என் மகள் நிம்மதி பெருமூச்சுவிட்டாள். அவ்வளவு நேரம் அவளுடைய தோழி அக்கேள்விக்கு வேண்டிய பதிலை அனுப்புவதில்தான் நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தாள்.
பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியான தானியேலும் கூட ஓர் பதிலை எதிர்பார்த்து கவலையோடு காத்திருந்தான். ஒரு மகா பெரிய யுத்தத்தை குறித்து பயங்கரமான தரிசனத்தை கண்டதும் தேவனைத் தாழ்மையோடு நோக்கி, உபவாசித்து ஜெபத்தில் தரித்திருந்தான் (வச. 10:3,12). மூன்று வாரங்களாக ஒரு பதிலையும் அவன் பெறவில்லை (வச. 2,13). இறுதியாக ஒரு தேவதூதன் வந்து, “முதல் நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது,” என தானியேலுடைய ஜெபத்தை குறித்து உறுதியளித்தான் (வச. 12). அதாவது 21 நாட்களும் தானியேலுடைய ஜெபத்தின் சார்பில் அத்தேவதூதன் போராடிக்கொண்டிருந்தான். இதைக் குறித்து ஒன்றையும் தானியேல் அறியாதிருந்தபோதிலும், முதல் நாள் தான் ஏறெடுத்த ஜெபம் துவங்கி தேவதூதன் பதில் கொண்டு வந்த 21வது நாள் வரையிலும் ஒவ்வொரு நாளும் தேவன் கிரியை செய்து கொண்டுதான் இருந்தார்.
தேவன் நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார் என்கிற நிச்சயம், நாம் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் பொழுது, பதில் வரவில்லை என்றால் மிகுந்த கவலைக்குள்ளாவோம். ஆனால் நாம் அறியாதபொழுதும் தேவன் தாம் அன்புகூருகிறவர்களுக்காக கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதை தானியேலின் அனுபவம் நமக்கு நினைவூட்டுகிறது.
ஆம் என்பது இல்லை என்றாகும்பொழுது
புற்றுநோயால் போராடிக் கொண்டிருந்த என் தாய்க்கு உடனிருந்து பணிவிடை செய்யும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி தேவனுக்கு நான் நன்றி செலுத்தினேன். மருந்து மாத்திரைகள், உதவி செய்வதற்குப் பதிலாக மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதால் என் தாயார் அச்சிகிச்சையை கைவிட முடிவு செய்தார். “பரலோக வீட்டிற்கு செல்ல நான் தயாராகி விட்டேன் என்பதை தேவன் அறிவார். ஆகவே என்னுடைய கடைசி நாட்களை குடும்பத்தினரோடு சந்தோஷமாக கழிக்கவே விரும்புகிறேன்;` வேதனையோடு இருக்க விரும்ப வில்லை” என்று அவர் கூறினார்.
பரம வைத்தியராகிய நம்முடைய பரமபிதாவிடம் நம்பிக்கையோடு ஓர் அற்புதத்தை எதிர் பார்த்து மன்றாடினேன். ஆனால் என்னுடைய தாயாரின் ஜெபத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்தால், என்னுடைய ஜெபத்திற்கு மறுப்பு தெரிவிக்க நேரிடுமே. ஆகவே, கண்ணீரோடு, “தேவனே, உம்முடைய சித்தம் நிறைவேறுக,” என்று என்னை ஒப்புக்கொடுத்தேன்.
இதற்குப் பின்பு, வேதனையற்ற நித்தியத்திற்குள் என் தாயாரை இயேசு சீக்கிரத்தில் அழைத்துக் கொண்டார்.
இயேசு வருமளவும், விழுந்து போன இவ்வுலகில் நாம் பல உபத்திரவங்களை அனுபவிக்க நேரிடும் (ரோ. 8:22-25). நம்முடைய பாவசுபாவம், தெளிவற்ற கண்ணோட்டம், மற்றும் வலி வேதனைகளை குறித்த பயம் ஆகியவை நம்முடைய ஜெபிக்கும் திறனை நிலைகுலையச் செய்திடும். ஆனால், நல்லவேளை, “ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறார்” (வச. 27). வேறோருவருடைய ஜெபத்திற்கு சம்மதம் தெரிவிப்பதால் நமக்கு மனவேதனை அளிக்கக்கூடிய மறுப்பு தெரிவிக்க நேரிடும். ஆயினும் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று நமக்கு நினைவூட்டுகிறார் (வச. 28).
தேவனுடைய மகத்தான திட்டத்தில் நம்முடைய சிறிய பங்களிப்பை நாம் அளிக்க சித்தம் கொண்டால், “தேவன் நல்லவர். நான் அறிந்துகொள்ள வேண்டியது இதுவே. அப்படியிருக்க, அவர் என்ன செய்ய சித்தம்கொண்டாலும் எனக்கு மகிழ்ச்சியே,” என்னும் என் தாயாருடைய பொன்மொழியை நாம் எதிரொலிக்கலாம். அவருடைய மகிமைக்கென்று நம்முடைய எல்லா ஜெபங்களையும் தம்முடைய சித்தத்திற்குள்ளாக நமக்கு பதிலளிக்கிறார் என்கிற நிச்சயமுள்ளவர்களாய் தேவ கிருபையின் மேல் விசுவாசம் கொள்வோமாக.
மகத்தான அழைப்பு
ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.
ஏசாயா 55:1
சமீபத்தில், மின்னஞ்சலில் பல அழைப்பிதழ்களைப் பெற்றேன். ரியல் எஸ்டேட், ஆயுள் காப்பீடு, பணி ஓய்வு சம்பந்தப்பட்ட “இலவச” கருத்தரங்குகளில் பங்குபெறுமாறு சில அழைப்பிதழ்கள் இருந்தன. ஆனால் ஒரு அழைப்பிதழ் என் நீண்டகால நண்பர் சம்பந்தப்பட்டது. அவரை கவுரவிக்கும் விழாவிற்கான அழைப்பிதழ் அது. ஆகவே “கண்டிப்பாக நான் வருகிறேன்” என்று உடனடியாக அதற்கு பதில் அனுப்பினேன். அழைப்பு + ஆசை = சம்மதம்
வேதாகமத்தில் இருக்கும் மிகச்சிறந்த அழைப்புகளில் ஒன்றைத் தான் ஏசாயா 55:1ல் காண்கிறோம். மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்த மக்களிடம் தேவன் இவ்வாறு பேசுகின்றார். “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.” இது தேவனின் ஓர் ஒப்பற்ற அழைப்பு. உள்ளான மனிதனுக்கு தேவையான சத்துவத்தையும், நிறைவான ஆவிக்குரிய திருப்தியையும், நித்திய ஜீவனையும் இந்த அழைப்பின் மூலமாக நாம் பெற்றுக்கொள்கிறோம் (வச. 2-3). வேதாகமத்தின் கடைசி அதிகாரத்தில் இயேசுவினுடைய அழைப்பு மீண்டும் இடம் பெற்றிருப்பதை காணலாம்: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” (வெளி. 22:17).
நாம் இறந்த பின்புதான் நித்திய ஜீவன் ஆரம்பிக்கும் என்று நம்மில் பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜத்தில், நாம் இயேசு கிறிஸ்துவை நமது இரட்சகரும், ஆண்டவருமாக ஏற்றுக்கொண்ட அந்த நொடியிலேயே அது தொடங்கிவிடுகிறது.
அவருக்குள் நித்திய ஜீவனை கண்டடையும்படியாக நம்மை அழைக்கும் தேவனது அழைப்புதான், மகத்தான அழைப்பு! அழைப்பு + ஆசை = சம்மதம்
ஜீவனும் மரணமும்
மரணப்படுக்கையில் இருந்த என்னுடைய நண்பனின் சகோதரர் மரித்த காட்சியை என்னால் மறக்கமுடியாது. அவரது படுக்கையின் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்த சாதாரணமானவர்களை, அசாதாரணமான ஒருவர் சந்தித்தார். நாங்கள் மூவரும் அமைதியாக பேசிக்கொண்டிருந்தோம். திடீரென ரிச்சர்டின் (Richard) சுவாசிக்கும் நிலை கடினமானது. நாங்கள் அவர் அருகே சென்று அவரைப் பார்த்தபடி ஜெபித்துக் காத்துக்கொண்டிருந்தோம். அவரது கடைசி மூச்சை அவர் உள் வாங்கிய பொழுது, அது ஓர் பரிசுத்த தருணமாகவே காணப்பட்டது. நாற்பது வயதில் மரித்துக் கொண்டிருந்த ஓர் அற்புதமான மனிதனின் நிலையை எண்ணி கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த எங்களை தேவனுடைய பிரசன்னம் சூழ்ந்து கொண்டது.
தேவன் உண்மையுள்ளவர் என்பதனை, அநேக பரிசுத்தவான்கள் மரிக்கும் தருவாயிலும் உணர்ந்தனர். உதாரணத்திற்கு, யாக்கோபு மரிப்பதற்கு முன்னர் “நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்” (ஆதி. 49:29-33) என்று அவரது பிள்ளைகளிடம் கூறினார். யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பும் அவரது மரணத்தை குறித்து தன் சகோதரரிடம, “நான் மரணமடையப் போகிறேன்” என அறிவித்து, அவர்களது விசுவாசத்தில் நிலைத்து நிற்கும்படியாக அறிவுறுத்தினார். மரிக்கும் தருவாயிலும் அவர் சமாதானத்தோடிருந்தார். அவரது சகோதரர் தேவனையே சார்ந்து ஜீவிக்கவேண்டும் என்ற ஆவலுடன் இருந்தார் (50:24).
நாம் எப்போது நம்முடைய கடைசி மூச்சை இழப்போம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் தேவன் நம்மோடு இருப்பார் என்ற உறுதியுடன் இருக்க நமக்கு உதவி செய்யுமாறு அவரிடம் கேட்கலாம். தமது பிதாவின் வீட்டில் நமக்கு ஓர் ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுவேன் என்று வாக்களித்த இயேசுவின் வார்த்தையை நாம் நம்பி உறுதியுடன் ஜீவிக்கலாம்.
அக்கினி சோதனை
கடந்த குளிர்காலத்தில் கொலராடோவில் (Colorado) இருந்த ஒரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு சென்றிருந்த பொழுது, ஆஸ்பென் மரத்தை (காட்டரசுமரம்) பற்றி சில குறிப்பிடத்தக்க உண்மைகளை நான் கற்றுக்கொண்டேன். ஒரே ஒரு விதைக்கு, மெல்லிய தண்டுடைய ஆஸ்பென் மரத்தோப்பை உருவாக்கக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. அனைத்து வேர்களும் அந்த ஒருவிதையிலிருந்து கிளம்பும். இந்த வேர் அமைப்புகள் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நிலத்தடியில் மந்தமான நிலையில், எந்த ஒரு மரத்தையும் உற்பத்தி செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்க முடியும். வெள்ளம், நெருப்பு அல்லது பனிச்சரிவின் வரவினால் காட்டில் ஏற்படும் வெற்றிடத்திற்காக அவை காத்துக்கொண்டிருக்கும். ஓர் இயற்கைப் பேரழிவினால் நிலம் அகற்றப் பட்டவுடன், மரத்தின் வேர்கள் சூரியனின் வெப்பத்தை உணர ஆரம்பிக்கும். பிறகு அவ்வேர்கள் கன்றுகளை அனுப்பத் தொடங்கும், அவை மரங்களாக வளர ஆரம்பிக்கும்.
பேரழிவின் மூலம் ஆஸ்பென் மரங்களின் வாழ்வில் ஓர் புதிய வளர்ச்சி சாத்தியமானதை நாம் காணலாம். கஷ்டங்கள் மத்தியில் நமது விசுவாசமும் இப்படித்தான் வளர்கின்றது என்று யாக்கோபு கூறுகின்றார். “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (யாக். 1:2-4).
சோதனையைச் சந்திக்கும்போதும், அக்கினியில் நடக்கும்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பது கடினம் தான். ஆனால் இப்படிப்பட்டதான கஷ்டமான சூழ்நிலைகளை தேவன் பயன்படுத்தி, நம்மை முதிர்ந்த மற்றும் முழுமையான நிலைக்கு கொண்டு வருவார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். ஆஸ்பென் மரங்களைப்போல், சோதனைகளை சந்திக்கும் காலம், விசுவாசத்தில் நாம் வளரும் தருணமாக மாறலாம். பிரச்சனைகள் நம் இருதயத்தில் ஓர் வெற்றிடத்தை உண்டு பண்ணும்போது தேவனின் வெளிச்சம் நமக்குள் பிரவேசித்து நம்மை தொடும் தருணங்களாக மாறும்.
நல்ல கனியை கொடுப்பது
விமானத்தின் ஜன்னல் வழியாக நான் பார்த்த காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. வறண்டு கிடந்த இரண்டு மலைகளுக்கு நடுவே ஓர் குறுகிய நாடா போன்று வளர்ந்திருந்த கோதுமை வயல்களையும், பழத்தோட்டங்களையும் கண்டேன். பள்ளதாக்கின் நடுவே ஓர் நதி ஓடியது. ஜீவனைத் தரும் நதியில்லாமல் எந்த கனியும் அங்கு உண்டாகியிருக்க முடியாது.
நிறைவான அறுவடைக்கு எப்படி சுத்தமான தண்ணீர் ஆதாரமாக இருக்கிறதோ, அதைப் போலவே என்னுடைய வாழ்வில் வெளிப்படும் என் வார்த்தை, செயல், மற்றும் அணுகுமுறை என்னும் “கனி”யின் தரமானது என்னுடைய ஆவிக்குரிய போஷாக்கினால்தான் உண்டாகுகிறது. சங்கீதக்காரன் சங்கீதம் 1ல் “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்கிற மனிதன்... நீர்க் கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தருபவனாக இருப்பான்” என்று கூறுகிறான். “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” என்று ஆவியானவருடன் சேர்ந்து நடப்பவரை பற்றி பவுல் கலாத்தியர் 5ல் குறிப்பிட்டுள்ளார் (வச. 22-23).
சில நேரங்களில் நான் சூழ்நிலைகளைப் பார்க்கும் விதம் சரியில்லாமலிருக்கிறது அல்லது என் சொற்களிலும், செயல்களிலும் தொடர்ந்து அன்பற்ற தன்மையே வெளிப்படுகிறது. தேவனுடைய பிரசன்னத்திலும், அவருடைய வார்த்தையிலும் நேரத்தை செலவிட தவறியதால்தான், நான் நல்ல கனியைக் கொடுக்கவில்லை என்பதை அறிந்து கொண்டேன். ஆனால் எப்பொழுதெல்லாம் நான் தேவனைச் சார்ந்து, அவருக்குள் வேர் கொண்டு நிலைத்து நின்றேனோ, அப்பொழுதெல்லாம் நல்ல கனியை கொடுத்தேன். அப்பொழுது மற்றவர்களுடன் நான் பழகியபோது, பொறுமையும், இரக்கமும் என் குணாதிசயமாக வெளிப்பட்டது. மேலும் குறைகூறுவதை தவிர்த்து, நன்றியுள்ள நிலைப்பாட்டை தேர்ந்தெடுப்பது எளிதாக இருந்தது.
தம்மையே நம்மிடத்தில் வெளிப்படுத்தியிருக்கும் தேவனே நமது வலிமை, ஞானம், மகிழ்ச்சி, புரிதல் மற்றும் அமைதியின் ஊற்றாக இருக்கின்றார் (சங். 119:28, 98, 111, 144, 165). அவருக்கு நேராக நம்மை நடத்தும் வார்த்தைக்குள் நமது ஆத்துமாவைப் புதைத்துக்கொண்டால், ஆவியானவர் நம் வாழ்வில் செய்யும் வேலை தெளிவாக வெளிப்படும்.
பிம்பத்தைக் கையாளுதல்
வின்ஸ்டன் சர்ச்சிலின் (Winston Churchill) 80வது பிறந்தநாளைக் கொண்டாட, பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கிரஹாம் சதர்லேண்ட் (Graham Sutherland) என்ற பிரபலமான ஓவியரை அவரது உருவ படத்தை வரைவதற்கு நியமித்தது. “நீங்கள் எப்படி என்னை வரையப்போகிறீர்கள்? அழகிய தேவதூதன் போலவா அல்லது பயங்கரமான நாய் (Bulldog) போலவா?” என்று சர்ச்சில் அவரிடம் கேட்டதாக கூறப்படுகின்றது. அவரை குறித்த இந்த இரண்டு பிரபலமான கருத்துகளும் அவருக்கு பிடித்திருந்தது. எனினும், சதர்லேண்ட், தான் பார்த்தபடி வரையப்போவதாக கூறினார்.
சர்ச்சிலுக்கு தன் உருவப்படம் திருப்தியளிக்கவில்லை. சதர்லாந்தின் உருவப் படத்தில் நாற்காலியில் சரிந்த நிலையில் அமர்ந்திருந்து, தனக்கே உரித்தான முத்திரை கோபத்துடன் காணப்பட்டார் - அதுதான் நிஜமும்கூட, ஆனால் அது நன்றாயிருக்காதல்லவா? ஆதிகாரப்பூர்வமாக அப்படம் திறக்கப்பட்ட பின்பு, சர்ச்சில், அந்த ஓவியத்தை மறைத்து வைத்தார். பின்னர் அது இரகசியமாக அழிக்கப்பட்டது.
சர்ச்சில் போல், நம்மில் பலர் நமக்குள் நம்மை பற்றிய ஓர் பிம்பத்தை வரைந்துள்ளோம். அதைத்தான் பிறரும் காணவேண்டும் என்றும் விரும்புகிறோம். அது வெற்றி, தெய்வபக்தி, அழகு அல்லது வலிமை போன்ற காரியங்களை குறித்ததாக இருக்கலாம். நாம் நமது ‘அசிங்கமாக’ பக்கங்களை மறைக்க மிகவும் சிரத்தை எடுத்துக்கொள்வோம். ஒருவேளை நம்முடைய நிஜமான முகத்தை பிறர் கண்டால் நம்மை நேசிக்காமல் போய் விடுவார் என்ற பயத்தினால்தான் இவ்வாறு செய்கிறோம்.
பாபிலோன் இஸ்ரவேலரை சிறைபிடித்து சென்ற போது, அவர்கள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருப்பதை நாம் காண்கிறோம். அவர்களுடைய பாவத்தின் நிமித்தமாகத் தான் தேவன் அவர்களுடைய எதிரிகள் அவர்களை கைப்பற்ற அனுமதித்தார். ஆயினும் அவர்களை பயப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். ஒவ்வொருவரின் பெயர்களையுமறிந்த தேவன், அவர்களது அவமானகரமான சோதனைகளிலும் கூடவே இருந்தார் (ஏசா. 43:1-2). அவருடைய கரத்தில் அவர்கள் ‘விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவும்’ (வச. 4), பாதுகாக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர் (வச. 13). அவர்கள் பாவங்களினால் கறைப்பட்டிருந்தபோதிலும், தேவன் அவர்களை நேசித்தார்.
இந்த உண்மை நமக்குள் ஆழமாக வேரூன்றிவிட்டால், பிறர் ஒப்புதலுக்காகவும், அங்கீகாரத்திற்காகவும் நாம் ஏங்கித் தவிக்க மாட்டோம். நாம் யார் என்கிற உண்மையை தேவன் முற்றிலுமாக அறிந்தபொழுதும், நம்மை அளவற்ற அன்பினால் நேசிக்கிறார் (எபே. 3:18).
கிழக்கும் மேற்கும் சந்திக்கையில்
தென்கிழக்கு ஆசியாவில் இருந்த மாணவர்கள் வட அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு ஆசிரியரைச் சந்தித்த பொழுது, அந்த ஆசிரியர் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டார். சரியான விடையைத் தேர்வு செய்யும் தேர்வை அவரது மாணவர்களுக்கு நடத்தின பொழுது, அநேக கேள்விகளுக்கு எந்த பதிலையும் தேர்வு செய்யாததைக் கண்டு ஆச்சரியமுற்றார். திருத்திய தாள்களை தரும்பொழுது, அடுத்த முறை தேர்வு எழுதும் பொழுது, பதிலை எழுதாமல் இருப்பதை விட எதோ ஒரு பதிலை யூகித்து தேர்வு செய்யுமாறு அவர்களுக்கு அறிவுரை சொன்னார். ஒரு மாணவன் ஆச்சரியத்துடன் கையை உயர்த்தி, “தற்செயலாக சரியான பதிலை நான் பெற்று விட்டால், தெரியாததை தெரிந்ததுபோல் செய்ததாகிவிடுமல்லவா?” என்று கேட்டான். மாணவன் மற்றும் ஆசிரியரின் கண்ணோட்டமும், அணுகுமுறையும் வித்தியாசமாக இருக்கிறது.
புதிய ஏற்பாட்டின் துவக்க நாட்களில் கிறிஸ்துவை ஏற்றுகொண்ட யூதருக்கும், புறஜாதியாருக்கும் கிழக்கிற்கும் மேற்குக்கும் இடையே இருந்த வித்தியாசம் போல அவர்களது கண்ணோட்டமும் இருந்தது. கொஞ்சகாலத்தில் அவர்களுக்குள் பிரச்சனைகள் முளைத்தது, வழிபாட்டு நாட்கள் போன்ற விஷயத்தில் தொடங்கி எதை சாப்பிடவும், குடிக்கவும் வேண்டும் என்ற காரியத்தில் வந்து நின்றது. அதற்கு அப்போஸ்தலனாகிய பவுல் மற்றவருடைய இருதயத்தின் மெய்யான நிலையை அறிந்துகொள்ள ஒருவராலும் முடியாததால் அதை நியாயம் தீர்க்கவும் ஒருவருக்கும் அதிகாரம் கிடையாது என்ற முக்கியமான சத்தியத்தை மனதில் வைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
சக விசுவாசிகளுடன் இணக்கமாக இருக்கும் பொருட்டு தேவன் நமது மெய்யான நிலையை நமக்கு காண்பிக்கிறார். நாம் அனைவரும் அவரது ஆளுகைக்கு உட்பட்டு அவர் ஒருவருக்கு மாத்திரமே பதில் சொல்லும் பொறுப்பில் இருக்கின்றோம். ஆகவே அவரது வார்த்தையின்படியும், நமது மனசாட்சியின்படியும் நடக்குமாறு வலியுறுத்துகிறார். எனினும் அவர் ஒருவருக்குத் தான் நமது இருதயத்தின் நினைவுகளை நியாயம்தீர்க்கும் அதிகாரம், வேறொருவருக்குமல்ல (ரோம. 14:4-7).