வகை  |  odb

மாபெரும் அன்பு

சமீபத்தில் நாங்கள் எங்கள் 22 மாத பேரப்பிள்ளை இரவில் எங்களோடிருக்க முதன் முறையாக, அவளுடைய மூத்த சகோதரர்களில்லாமல் அவளை மட்டும் அழைத்துச் சென்றோம். அவள்மேல் அளவில்லாத அன்பையும் கரிசனையையும் பொழிந்தோம். அவள் செய்ய விரும்பின எல்லாவற்றையும் செய்வது சந்தோஷமாயிருந்தது.  அடுத்தநாள் அவளை அவள் வீட்டில் விட்டுவிட்டு ‘குட்பை’ எல்லாம் சொல்லிவிட்டு வாசலுக்கு வந்தோம். ஆனால், மோரியா ஒரு வார்த்தையும் பேசாமல் தன் பையை எடுத்துக்கொண்டடு எங்களைப் பின்தொடர்ந்தாள்.

சட்டையில்லாமல் வெறும் ஜட்டியுடன் இரண்டு கால்களிலும் வேறுவேறு செருப்புகளை மாட்டிக்கொண்டு தாத்தா பாட்டி பின்னால் புறப்பட்ட இந்தக்காட்சி என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. அதை நினைக்கும்பொழுதெல்லாம் சிரித்துக் கொள்வேன். தனக்காக மாத்திரம் தாத்தா பாட்டி செலவிட்ட அந்த நேரத்தை நினைத்து, எங்களோடு வர ஆசைப்பட்டாள்.

இன்னும் சரியாகப் பேசமுடியாவிட்டாலும், எங்கள் பேத்தி தான் நேசிக்கப்படுவதையும் மதிக்கப்படுவதையும் உணர்ந்துகொண்டாள். நாங்கள் மோரியாவினிடத்தில் காட்டிய அன்பு, தேவன் அவருடைய பிள்ளைகளிடத்தில் வைத்திருக்கும் அன்பிற்கோர் எடுத்துக்காட்டாகும். “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே, பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்! (1 யோவா. 3:1).

நாம் இயேசுவை நம்முடைய இட்சகராக விசுவாசிக்கும்பொழுது, அவர் நமக்காக மரித்து நம்மேல் பாராட்டின அளவற்ற அன்பை அறிந்துகொள்ள முடிகிறது (வச. 16). நாம் பேசுவதிலும், செய்வதிலும் அவரைப் பிரியப்படுத்துவதே நமது வாஞ்சையாக மாறுகிறது (வச. 6). நாம் அவரை நேசிக்கவும், அவரோடு நேரம் செலவிடவும் ஆசைப்படுகிறோம்.

பெருகும் உதாரத்துவம்

பீஸ்ஸா ஆர்டர் கொடுத்தவர்களின் வீடுகளுக்கு ‘டோர் டெலிவரி’ செய்யும் வேலையை டேவி செய்துவந்தாள். அடுத்த டெலிவரி ஒரு வீடாயிருக்கும் என்று நினைத்தவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அது வீடல்ல ஒரு தேவாலயம். டேவி குழப்பத்தோடு அந்த பெப்பரோனி பிஸ்ஸாவை எடுத்துக் கொண்டு தேவாலயத்தினுள் நுழைந்தபொழுது போதகர் அவளைச் சந்தித்தார்.

‘வாழ்க்கை உனக்கு எளிதாக இல்லையென்று சொல்லலாம் அல்லவா?’ என்று கேட்டார். அதற்கு டேவி ‘அப்படித்தான் ஐயா’ என்றாள். போதகர் சபையினர் கொடுத்த காணிக்கையாகிய 750 டாலரை இரண்டு தட்டுகளில் கொண்டுவந்து அவளுக்கு ஒரு அன்பளிப்பாகக் கொடுத்தார். அவளுக்குத் தெரியாமல் பிஸ்ஸா கடையினரிடம், மிகுந்த பண நெருக்கடியிலுள்ள ஒருவரிடம் பிஸ்ஸா கொடுத்தனுப்பக் கேட்டிருந்தார். டேவி மலைத்துப் போனாள். சில கடன்களை இப்பொழுது அவளால் அடைக்க முடியும்.

எருசலேமிலிருந்த ஆதி கிறிஸ்தவர்கள் பணக்கஷ்டத்தில் இருந்தபொழுது, ஒரு சபை அவர்களுக்கு உடனடியாக உதவியது. அவர்களே தரித்திரத்திலிருந்தும், கொடுப்பதை ஒரு சிலாக்கியம் என்று எண்ணி, தியாகமாகக் கொடுத்தார்கள் (2 கொரி 8:1-4). கொரிந்தியரும் நாமும் அவ்வாறே மனமுவந்து கொடுப்பதற்காக அவர்களை முன்மாதிரியாகப் பவுல் சுட்டிக் காட்டினார். நாம் நம் அபரிவிதமான செல்வத்திலிருந்து தேவையிலுள்ளவர்களுக்குக் கொடுக்கும் போது, தமது ஐஸ்வரியத்திலிருந்து நம்முடைய ஆவிக்குரிய தரித்திரத்தைப் போக்கக் கொடுத்த இயேசுவைப் பிரதிபலிக்கிறோம் (வச. 9).

டேவி அன்றைய தினம் சந்தித்த வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் தேவாலயத்தின் அன்பையும், உதாரத்துவத்தையும் பற்றி கூறினாள். மேலும் அதை முன்மாதிரியாக கொண்டு அன்று தனக்குக் கிடைத்த அன்பளிப்பை தேவையுள்ளவர்களோடு பகிர்ந்து கொண்டாள். தயாளம் பெருகியது. கிறிஸ்து மகிமைப்பட்டார்.

மிகச்சிறந்த பரிசு எது

சமீபத்தில் என் கணவர் தனது முக்கியமானதொரு பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்தப் பிறந்தநாளின் எண் பூஜ்யத்தில் முடிந்தது. அதுவே புதியதொரு பத்தாண்டுகளைக் கடக்கப்போகிறார் என்றும், அதற்கு நான் கொடுக்கும் பரிசு அவரைக் கனம் பண்ணுவதாக இருக்க வேண்டும் என்றும் தீவிரமாக சிந்தித்தேன். இதை ஏற்ற விதத்தில் கொண்டாடுவது எப்படி என்று பலவிதமான சிந்தனைகளைக் பற்றி என் பிள்ளைகளிடம் ஆலோசித்தேன். புதிதாக துவங்க இருக்கும் புத்தாண்டு காலத்திற்கான முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அந்த கொண்டாட்டம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். கொடுக்கும் பரிசு, அவர் எங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு இன்றியமையாமவர் என்பதைப் பிரதிபலிக்க வேண்டுமென்று விரும்பினேன். எங்கள் பரிசு அவருடைய வாழ்க்கையில்  இந்த முக்கிய பிறந்த நாளுக்கு ஏற்றதாக இருக்கவேண்டுமென்று விரும்பினேன்.

முக்கியமான பிறந்தநாளை விட மிகப்பெரிய பரிசொன்றை தேவனுக்குக் கொடுக்க சாலமோன் ராஜா விரும்பினார். தான் கட்டும் ஆலயம் தேவனுடைய பிரசன்னத்திற்கு உகந்ததாக இருக்க விரும்பினார். தேவாலய கட்டுமானப் பொருட்களுக்காகத் தீரு ராஜாவுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் “எங்கள் தேவன் மற்ற எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர்” ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரிதாயிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் (2 நாளா. 2:5). மனிதரின் கைகளினால் கட்டப்படும் ஆலயம், வானங்களும் கொள்ளாத தேவனின் நற்பண்புகளுக்கு ஒருநாளும் ஈடாகாது என்று அறிந்தும், அவர் மேலுள்ள அன்பினாலும், அவரை ஆராதிக்க அவர்மேல் கொண்ட விருப்பத்தினாலும் கட்டினான்.

நம்முடைய தேவன் மெய்யாகவே, எல்லாத் தேவர்களையும்விட பெரியவர். அவர் நம் வாழ்க்கையில் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறபடியால், நம் இருதயங்கள் அன்பினால், தூண்டப்பட்டு, அதன் மதிப்பை பொருட்படுத்த விலையுயர்ந்த காணிக்கைகளை செலுத்துகிறோம். சாலமோனுக்குத் தன் காணிக்கை தேவனுடைய தகுதிக்கு ஈடாகாது என்று அறிந்தும், சந்தோஷமாகத் தன் காணிக்கைகளைச் செலுத்தினான். நாமும் அப்படியே செய்யலாம்.

நல்ல உலகம்

1968 ஆம் வருடத்தில் நிலவை சுற்றி வரும்பொழுது, அப்பொல்லோ 8ன் விண்வெளி வீரர், பில் அன்டர்ஸ், மிக அருகாமையில் தெரிந்த நிலவின் தோற்றத்தை விவரிக்கும் போது, அது ஒரு அறிகுறியை காட்டும் தொடுவானம் என்றும்...விறைப்பானதும், மோசமானதும், பார்வைக்கு விரும்பப்படாத இடமாகத் தோன்றியது என்றும் கூறினார். அதன் பின் விண்வெளி வீரர்கள் மாறிமாறி ஆதி 1:1-10 வசனங்களை பூமியில் காத்திருந்தவர்களுக்கு வாசித்தனர். பின்பு கமான்டர் ஃபிராங் போர்மன் “தேவன் அது நல்லதென்று கண்டார்” என்ற 10ஆம் வசனத்தை வாசித்தபின் “நல்ல உலகத்தில் வாழும் உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக” என்று பெருமூச்சுடன் ஒலிபரப்பை முடித்தார்.

வேதாகமத்தின் முதல் அதிகாரம் இரண்டு உண்மைகளை வலியுறுத்துகிறது:

சிருஷ்டிப்பு தேவனுடைய கை வண்ணம். “பின்பு தேவன் சொன்னார்” என்ற சொற்றொடர் ஒரு தாளம்போல இந்த அதிகாரம் முழுவதிலும் தொனிக்கிறது. நாம் வாழும் இந்த மகிமையான உலகம் முற்றிலும் அவருடைய படைப்பே! ஆதியாகமம் 1ஆம் அதிகாரத்திற்குப்பின் வரும் வேதாகமம் முழுவதிலும், இந்த செய்தியையே உறுதிப்படுத்துவதைக் காண்கிறோம். ஒவ்வொரு சரித்திரத்தின் பின்னணியிலும் இருப்பது தேவனே.

சிருஷ்டி நல்லது. இனிய மணியோசைபோல் இந்த அதிகாரம் முழுவதிலும் தொடர்ந்து கேட்கும் ஒரு வசனம் “தேவன் அது நல்லதென்று கண்டார்” என்பதே. தேவன் சிருஷ்டித்த நாளிலிருந்தே சிருஷ்டி பல மாற்றங்களை அடைந்துள்ளது. பூமி கெடுக்கப்படுமுன் எப்படி இருக்க வேண்டுமென்று தேவன் விரும்பினாரோ, அதையே ஆதியாகமம் 1ஆம் அதிகாரம் விவரிக்கிறது. நாம் இன்றைய உலகில் அனுபவிக்கும் இயற்கை அது தேவன் சிருஷ்டித்த ஆதியிலிருந்த பூமியின் மங்கிய எதிரொலியே.

அப்போல்லோ 8 விண்வெளி வீரர்கள், பூமியை வானத்தில் தனியே பிரகாசிக்கும் வர்ணத்தில் தொங்குகிற பந்துபோலக் கண்டார்கள். அது மிக அழகாகவும் அதே சமயத்தில் உடையக்கூடியதாகவும் தோன்றியது. இது ஆதியாகமம் 1 ஆம் அதிகாரத்தின் காட்சியே!

ஆறுதலின் கரம்

“நோயாளி எதிர்த்து முரண்டு பிடிக்கிறார்” என்று நர்ஸின் குறிப்பு கூறியது.

ஒரு சிக்கலான திறந்த இருதய அறுவைசிகிச்சைக்குப்பின் தான் கண் விழித்தபோது, ஒரு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டிருந்தது  அவளுக்குத் தெரியாது. நான் குழம்பிபோயிருந்தேன்.. என் தொண்டைவழியாக ஒரு குழாய் உள்ளே செலுத்தப்பட்டிருந்தது; என் முழு உடம்பும் பயங்கரமாக நடுங்கிக் கொண்டிருந்தது. நான் சுவாசிக்க ஆக்ஸிஜன் செல்லும் குழாயை நான் பிடுங்கிப்போடாதபடி என் கைகளை வாரினால் கட்டியிருந்தார்கள். அது பயங்கரமும் வேதனையானதுமான ஒரு அனுபவம். அந்த நேரத்தில் என் படுக்கையின் வலதுபக்கத்திலிருந்து நர்ஸின் உதவியாள், கீழே தொங்கிக்கொண்டிருந்த என் கையைப்பிடித்துத் தாங்கினாள். எதிர்பாராத அந்த தொடுதலை வெகு மென்மையானதாக உணர்ந்தேன். நான் சற்று மன நிம்மதி அடைந்தேன். அதனால் என் உடம்பு நடுங்குவது நின்றுவிட்டது.

பிற நோயாளிகளைத் தொடும்போது அவர்கள் அமைதலடைந்த அனுபவத்தால், அந்த நர்ஸின் உதவியாள் இவனையும் ஆறுதலின் கரம் அமைதிப்படுத்துமென அறிந்திருந்தாள். தேவன் தம் பிள்ளைகள் பாடுபடும்பொழுது, அவர்களை எப்படி ஆறுதல் படுத்துகிறார் என்பதற்கு இது ஓர் அருமையான எடுத்துக்காட்டாகும்.

நோயாளிகளைப் பராமரிப்பவர்களுக்கு ஆறுதல்படுத்துவது என்பது ஓர் வலிமைமிக்க மறக்க இயலாத ஒரு முக்கியமான வல்லமையுள்ள ஆயுதம். பவுல் 2 கொரிந்தியர் 1:3-4ல், கர்த்தருடைய ஆயுதப்பெட்டியிலுள்ள முக்கிய ஆயுதம் இந்த ஆறுதல் என்கிறார். அதுமட்டுமல்ல, தேவன் நம்மை ஆறுதல்படுத்திய விதத்தை நினைத்து, இதே சூந்நிலையிலிருக்கும் மற்றவர்களை ஆறுதல்படுத்தி தேவனுடைய ஆறுதலைப் பரப்பச் சொல்லுகிறார். நம்மை ஆறுதல்படுத்தியது, நம்மைப் போன்ற மற்றவர்களை ஆறுதல்படுத்தவே (வச. 7). இது தேவனின் மகத்தான அன்பின் ஒரு அடையாளம். எளிய செயல்களின் மூலம் நாம் இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

ஒரு நல்ல முடிவு

அந்த அறை இருட்டாக்கப்பட்டது. நாங்கள் அப்பொல்லோ 13 திரைப்படத்தைப் பார்க்க ஆயத்தமானோம். என் சிநேகிதன் மெதுவாக என் காதுக்குள் “ஐயோ பாவம், எல்லாரும் மரித்துப்போனார்கள்” என்றான். 1970ல் நடந்த விண்வெளி பயணத்தைப் பற்றிய படத்தைக் கலக்கத்துடன், எப்பொழுது மரிப்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன். படம் முடியும் தருவாயில்தான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். நான் அந்த விண்வெளி பயணத்தின் உண்மையான முடிவை அறியாததினால் ஏமாற்றப்பட்டேன். அந்த மூன்று விண்வெளி வீரர்களும் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் உயிரோடு வீட்டிற்குத் திரும்பினர்.

நம் வாழ்க்கையின் முடிவை – நாம் உயிரோடு பரமவீட்டிற்குப் போவதை, கிறிஸ்துவுக்குள் அறிந்திருக்கிறோம். அதாவது வெளிப்படுத்தல் புத்தகம் சொல்வது போல, நாம் நம்முடைய பரம பிதாவோடு என்றென்றும் வாழுவோம். சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்ற தேவன் “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” சிருஷ்டிப்பார் (வெளி. 21:1,5). தேவன் தமது பிள்ளைகளை பயமும்,  இராக்காலமில்லா புதிய நகரிற்கு அழைத்து செல்வார். நமக்கு இந்தக் கதையின் முடிவு தெரிந்தபடியால் நமக்கு நம்பிக்கையுண்டு.

இது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது? நமக்கு அன்பானவர்கள் மரிக்கும், அல்லது நாமே மரிக்கும் துன்பமான நேரங்களில் பரலோக நம்பிக்கை நம் துன்பத்தை மாற்றிவிடும். மரிக்கும் எண்ணம் நம்மை பின்னுக்கு தள்ளினாலும், நித்திய ஜீவனைக்குறித்த வாக்குத்தத்தத்தை நாம் பெற்று அனுபவிக்கலாம். தேவனுடைய வெளிச்சத்தில் என்றென்றைக்கும் வாழப்போகும் சாபமில்லாத நகரத்தை வாஞ்சிக்கிறோம் (22:5).

பேசும்முன் யோசி

தன் மனைவி பிரபலமான ஹோட்டலுக்குப் போகும் வழியை சரிவரக் கண்காணிக்காததால் அங்கு போக இயலாததால் செங் மன அமைதியை இழந்தான். அவர்கள் குடும்பமாக ஜப்பானைச் சுற்றிப் பார்த்து விடுமுறையைக் கழித்து, வீடுதிரும்புமுன் கடைசியாக அந்தப் பிரபல ஹோட்டலில் திருப்தியாக உணவு உண்ண திட்டமிட்டிருந்தனர். இப்பொழுது கால தாமதத்தால் உணவருந்தாமல் விமான நிலையத்திற்குச் செல்லவேண்டியதாயிற்று. ஏமாற்றமடைந்த செங் , கவனமாகத் திட்டமிடாததற்காகத் தன் மனைவியைக் குறைகூறினான்.

பின்பு செங் தன் மனைவியைக் குறைகூறியதற்காக வருத்தப்பட்டான். தான் மிகக் கடினமாக நடந்து கொண்டதாகவும், தானே அந்தப் பாதையை கண்காணித்திருக்கலாம் என்றும் உணர்ந்தான். அதற்கு முன்னைய ஏழு நாட்களுக்கும் மிக சிறந்த முறையில் திட்டமிட்டதற்காக மனைவிக்கு நன்றி கூட சொல்லவில்லை.

நம்மில் அநேகர், செங் போலவே இருக்கிறோம். சோதிக்கப்படும்போது கோபத்தால் பொங்கி கட்டுப்பாடின்றி வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறோம். சங்கீதக்காரனைப் போல நாமும் “கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்” (சங். 141:3) என்று எவ்வளவாக ஜெபம் செய்ய வேண்டும்.

நாம் அதை எவ்வாறு செயல்படுத்த முடியும்? இதோ ஒரு ஆலோசனை, பேசும்முன் யோசி. உங்களுடைய வார்த்தைகள் நல்ல வார்த்தைகளா? பயன் தரும் வார்த்தைகளா? அன்பும் கிருபையுமுள்ள வார்த்தைகளா? (எபே. 4:29-32).

வாய்க்கு காவல் வைப்பதென்பது என்னவென்றால், எரிச்சலடையும்பொழுது வாயை மூடிக்கொண்டு சரியான வார்த்தைகளை, சரியான தொனியில் பேச அல்லது பேசாமலிருக்க ஜெபித்து தேவனின் உதவியை நாட வேண்டும். வார்த்தைகளைக் கட்டுப்படுத்துவதென்பது வாழ்க்கை முழுவதும் தொடரும் ஓர் பணி. நல்லவேளை, “தேவன் நம்மில் கிரியை செய்து தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலி. 2:13).

இரண்டாம் தருணங்கள்

தான் எடுத்த சில தவறான தீர்மானங்களினால், கிட்டா, அயல் நாடொன்றில், ஆறு வருடங்களை சிறையில் கழிக்க நேரிட்டது. அவள் விடுதலையானபோது அவளுக்கு போவதற்கு ஓரிடமும் இல்லை. அவள் தன் வாழ்க்கை முடிந்ததென்று நினைத்தாள். அவள் குடும்பத்தினர் அவள் தன் சொந்த தேசத்திற்கு வருவதற்கு டிக்கெட் எடுக்கத் தேவையான பணத்தை சேகரித்து அனுப்பினர். அதுவரை ஒரு அன்புள்ள தம்பதியர் அவளுக்கு தங்க இடமும் உணவும் கொடுத்து உதவியதால் அவர்களின் அன்பினால் தொடப்பட்டாள். ஆகவே அவர்கள், அவளை நேசித்து அவள் வாழ்வதற்கு அவளுக்கு இரண்டாம் தருணம் கொடுக்க விரும்பும் ஆண்டவரைக்குறித்த நற்செய்தியை சொன்னபோது, கவனமாகக் கேட்டாள்.

கிட்டா வேதாகமத்திலுள்ள விதவை நாகோமியை எனக்கு நினைவுபடுத்தினாள். அந்நிய தேசத்தில் தன் கணவனையும் இரண்டு மகன்களையும் இழந்து, தன் வாழ்க்கை முடிந்ததென்று நினைத்தாள் (ரூத். 1). ஆனால், தேவன் நகோமியை மறக்கவில்லை… தன் மருமகள் ரூத்தின் அன்பினாலும், போவாஸ் எனும் தேவனுக்குப் பயந்த மனிதனின் தயவினாலும் நகோமி தேவனுடைய அன்பைக் கண்டு இரண்டாம் தருணமொன்றைப் பெற்றுக்கொண்டாள் (4:13-17).

அதே தேவன் இன்றும் நம்மேல் கரிசனையுள்ளவராகவே இருக்கிறார். மற்றவர்கள் நம்மேல் அன்புகாட்டும்பொழுதெல்லாம், நாம் தேவனுடைய பிரசன்னத்தை உணர்கிறோம். நமக்கு அதிகம் அறிமுகமில்லாதவர்கள் உதவும்போது தேவனுடைய கிருபையை அறிகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் நமக்கு ஒரு புது ஆரம்பத்ததைத்தர விரும்புகிறார். நாமும் நகோமியைப்போல் நமது அனுதின வாழ்க்கையில் தேவனுடைய கரத்தைக் கண்டு, அவருடைய அன்புக்கு முடிவே கிடையாது என்று அறிந்துகொள்ள வேண்டும்.

நமது ஜெபமும் தேவனுடைய வேளையும்

சில வேளைகளில் நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்க தேவன் காலம் தாழ்த்துகிறார். அதை விளங்கிக்கொள்வது நமக்கு எப்பொழுதுமே எளிதல்ல.

அதுவே ஆசாரியனாகிய சகரியாவுக்கு ஏற்பட்டிருந்த சூழ்நிலையாகும். எருசலேம் தேவாலயத்து பலிபீடத்தினருகில் ஒருநாள் காபிரியேல் எனும் தூதன் சகரியாவிற்குக் காட்சி அளித்தார். காபிரியேல் சகரியாவை நோக்கி, “சகரியாவே பயப்படாதே; உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப்பெறுவாள் அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக” என்றான் (லூக். 1:13).

ஆனால், சகரியா ஒரு குழந்தைக்காக தேவனிடத்தில் விண்ணப்பம் செய்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்பொழுதோ, எலிசபெத்து பின்ளைபெறுகிற வயதைத் தாண்டிவிட்டாள். அதனால் சகரியா காபிரியேலின் செய்தியை நம்பமுடியாமல் குழம்பினான், கலங்கினான். ஆனாலும் தேவன் அவன் விண்ணப்பத்திற்குப் பதிலளித்தார்.

தேவனுடைய நினைவாற்றல் பரிபூரணமானது. தேவன் பல ஆண்டுகள் கடந்து மட்டுமல்ல, நமது ஆயுசு நாட்கருதி பல தலைமுறைகள் கடந்தாலும் நமது விண்ணப்பத்தை நினைவுகூர வல்லவர். அவர் நம் வேண்டுதலை நிறைவேற்ற காலம் தாழ்த்தினாலும் ஒருபோதும் அதை மறப்பதேயில்லை. சில வேளைகளில் அவருடைய பதில் ‘இல்லை’ என்றிருக்கலாம் அல்லது ‘காத்திரு’ என்றிருக்கலாம். ஆனால், எந்த பதிலும் அன்பின் அடிப்படையிலேயே இருக்கும். அவருடைய வழிகள் நமக்கு விளங்காமலிருக்கலாம்; ஆனால், அது நன்மைக்கேதுவானது என்று நாம் அதை நம்பலாம்.

சகரியா இதைக் அறிந்திருந்தான். அவர் ஒரு மகனைத்தான் கேட்டான். ஆனால் தேவன் அவன் கேட்டதற்கும் மேலானதைக் கொடுத்தார். அவனுடைய மகன் யோவான் வளர்ந்து மேசியாவின் வருகையை அறிவிக்கும் தீர்க்கதரிசியானான். சகரியாவின் அனுபவம் ஒரு முக்கிய சத்தியத்தை வலியுறுத்தி  நம்மை ஜெபம் பண்ண உற்சாகப்படுத்துகிறது.

தேவனுடைய வேளை அநேகமாக நம்முடைய வேளையாயிராது; என்றாலும் அதற்குக் காத்திருப்பது நல்லது.