எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பிலிப் யான்சிகட்டுரைகள்

பயப்படாதிருங்கள்

எப்பொழுது ஒரு தேவதூதன் தோன்றினாலும் அவன் கூறும் முதல் வார்த்தை, “பயப்படாதிருங்கள்” என்பதாக வேதாகமத்தில் காண்கின்றோம். இது நமக்கு ஆச்சரியத்தைக் தருகிறது. இயற்கைக்கு அப்பாற்பட்டது புவியைத் தொடும் போது, அதைத் காணும் மாந்தர் பயத்தால் முகங்குப்புற விழுகின்றனர். ஆனால், தேவன் தன்னைக் காண்பிக்கும் போது பயப்படத்தக்க ரூபத்தில் இருப்பதில்லையென லூக்கா கூறுகின்றார். இயேசு கிறிஸ்து பிறந்த போது, விலங்குகளின் மத்தியிலிருந்தார், தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டார். நாம் பயப்படாமலிருக்கும்படி தேவன் இத்தகைய அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தார். ஒரு புதிதாகப் பிறந்த குழந்தையைவிட பயப்படாமலிருக்கத்தக்கது எது?

புவியிலிருக்கும் போது இயேசு தேவனாகவும், மனிதனாகவும் வாழ்ந்தார். அவர் அற்புதங்களைச் செய்தார். பாவங்களை மன்னித்தார். ஆனால், தேவன் பிரகாசமான மேகஸ்தம்பம் அல்லது அக்கினி ஸ்தம்பத்தின் மூலம் வெளிப்படுவதற்கு, யூதர்கள் பழக்கப்பட்டிருந்ததால் அவர்களால் மனிதனான இயேசுவின் மூலம் தேவனைப் பார்க்க முடியவில்லை, குழப்பமடைந்தனர். பெத்லகேமில் பிறந்த ஒரு குழந்தை, ஒரு தச்சனின் மகன், நாசரேத்தூரிலுள்ள ஒரு மனிதன் எப்படி தேவனிடமிருந்து வந்த மேசியாவாக இருக்க முடியும் எனக் கேட்டனர்.

ஏன் தேவன் மனித வடிவில் வந்தார்? பன்னிரண்டு வயது நிரம்பிய இயேசு தேவாலயத்தில் போதகர்களுடன் விவாதித்தக் காட்சி ஒரு சாட்சியாகவுள்ளது. “அவர் பேசக் கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும், அவர் சொன்ன மாறுத்தரங்களையும் குறித்துப் பிரமித்தார்கள்” என லூக்கா குறிப்பிடுகின்றார் (2:47) முதல் முறையாக சாதாரண ஜனங்கள் தேவனோடு உரையாடுவதைக் காண்கின்றார்கள்.

இயேசு அவருடைய பெற்றோர், போதகர், ஏழை விதவை என்று யாவரோடும் பேசுகின்றார். அவர் முதலில் “பயப்படாதிருங்கள்” என்று சொல்லிக் கொள்ளவில்லை. இயேசுவின் மூலம் தேவன் நம்மருகில் வந்துள்ளார்.

கர்த்தர் பேசுகின்றார்

யோபு புத்தகத்தில் வருகின்ற ஒவ்வொரு உரையாடலும், இவ்வுலகில் ஏன் வேதனைகள் வருகின்றன என்பதைக் குறித்தேயிருப்பதைக் காணலாம். ஆனால், இந்த உரையாடல்கள் எவ்விதத்திலும் யோபுவிற்கு உதவவில்லை. யோபு இருந்தது சந்தேக நெருக்கடியிலல்ல, அது உறவின் நெருக்கடி. அவனால், தேவன் மீது நம்பிக்கையாயிருக்க முடியுமா? எல்லாவற்றிற்கும் மேலாக யோபுவின் தேவை ஒன்றே, தேவன் அவனுக்கு தரிசனமாகி, அவனுடைய இந்த பரிதாப நிலைக்கு காரணமென்ன என்பதை விளக்குமாறு கேட்கின்றான். தேவனை முகமுகமாய் சந்திக்க விரும்பினான்.

இறுதியாக யோபுவின் வேண்டுதல் கேட்கப்பட்டது. யோபுவின் நண்பன் எலிகூ, தேவன் யோபுவைச் சந்திக்க அவனுக்கு எந்தத் தகுதியுமில்லை என விளக்கமளித்த போது, அதற்கு மாறாக தேவன் யோபுவிற்கு தரிசனமாகிறார் (யோ. 38:1).

தேவன் கேட்பவற்றிற்குப் பதிலளிக்க யோபுவோ, அவனுடைய நண்பர்களோ, வேறு எவருமே தயாராக இல்லை. யோபு தேவனிடம் கேட்கும்படி ஒரு பெரிய பட்டியல் நிறைய கேள்விகளை வைத்திருந்தான். ஆனால் யோபு அல்ல தேவனே கேள்விகளைக் கேட்கின்றார். “இப்போதும் புருஷனைப் போல், இடைக்கட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன், நீ எனக்கு உத்தரவு சொல்லு” (வச. 3) என ஆரம்பிக்கின்றார். யோபுவின் வேதனைகளையும், பிரச்சனைகளையும் குறித்த உரையாடலைக் கொண்டிருந்த முப்பத்தைந்து அதிகாரங்களையும் தள்ளிவிட்ட, கர்த்தர் அற்புதமான இவ்வுலகைக் குறித்த ஒரு கெம்பீரமான கவிதைக்குள் வழிநடத்துகின்றார்.

அனைத்தையும் படைத்த தேவனுக்கும் குறுகிப்போன யோபுவைப் போன்ற மனிதனுக்குமுள்ள மிகப்பெரிய வேறுபாட்டை, தேவனுடைய வார்த்தைகள் வரையறுக்கின்றன. என்னுடைய கேள்விகளுக்கு விடையளிக்க யாரேனும் உளரோ? என்ற யோபுவின் மிகப் பெரிய கேள்விக்கு தெள்ளத் தெளிவான பதிலை தேவனுடைய பிரசன்னம் தருகிறது. யோபுவே பதிலளிக்கின்றான், “நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன்” என்கின்றான் (42:3)

மவுனத்தை கலைத்தல்

பழைய ஏற்பாட்டின் முடிவில் தேவன் தன்னை மறைத்துக் கொண்டதுபோல் தோன்றுகிறது. நான்கு நூற்றாண்டுகளாய் யூதர்கள் ஆச்சரியத்தோடு காத்திருந்தனர். தேவனோ அவர்கள் ஜெபத்தைக் கேளாதவராய், கரிசனையற்றவராய், செயல்படாதவராய் இருப்பதுபோலத் தோன்றியது. மேசியா வருவாரென்ற ஒரே ஒரு பண்டைய வாக்குத்தத்தம் மட்டுமே நம்பிக்கையளித்தது. அந்த வாக்குக்குத்தத்தத்தின் மேலேயே யூதர்கள் அக்கரை வைத்திருந்தனர். திடீரென்று ஆச்சரியமானதொன்று நடந்தது, ஒரு பாலகன் பிறந்ததாக அறிவிக்கப்பட்டது.

அந்த செய்தியைக் கேட்டவர்களின் உற்சாகத்தை லூக்காவில் வாசிக்கிறோம். இயேசுவின் பிறப்பைச் சுற்றி நிகழ்ந்தவையெல்லாம் ஒரு சந்தோஷத்தால் நிறைந்த இசை நிகழ்ச்சி போலிருக்கிறது. பலவித கதாபாத்திரங்கள் மேடையில் தோன்றுகின்றனர். ஒரு வயதான வெள்ளைத்தலை மாமா (லூக். 1:5-25), பிரமிப்படைந்த ஒரு கன்னிகை (லூக். 1:26-38), வயதான தீர்க்கதரிசி அன்னாள் (2:36), மரியாள் பாடிய அருமையான கீதம் (லூக். 1:46-55), தாயின் வயிற்றிற்குள்ளிருந்து துள்ளின இயேசுவின் உறவுப் பாலகன் (லூக். 1:41).

லூக்கா கவனமாக மேசியாவைப்பற்றிய பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களோடு நேரடித் தொடர்பு ஏற்படுத்துகிறார். காபிரியேல் தூதன் யோவான் ஸ்நானனை கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ண அனுப்பப்பட்ட எலியா என்றான் (லூக். 1:17). நிச்சயமாகவே ஏதோ ஒன்று பூமி என்னும் கிரகத்தில் உருவாகிக்கொண்டிருந்தது. ரோமப் பேரரசில் அவர்களாய் தோற்கடிக்கப்பட்ட யூதேயாவின் இருண்ட மூலையிலிருந்த கிராமவாசிகளிடமிருந்து எதோ  ஒரு நன்மையான காரியம் வெடித்து வெளிப்பட்டது.

நல்ல உலகம்

1968 ஆம் வருடத்தில் நிலவை சுற்றி வரும்பொழுது, அப்பொல்லோ 8ன் விண்வெளி வீரர், பில் அன்டர்ஸ், மிக அருகாமையில் தெரிந்த நிலவின் தோற்றத்தை விவரிக்கும் போது, அது ஒரு அறிகுறியை காட்டும் தொடுவானம் என்றும்...விறைப்பானதும், மோசமானதும், பார்வைக்கு விரும்பப்படாத இடமாகத் தோன்றியது என்றும் கூறினார். அதன் பின் விண்வெளி வீரர்கள் மாறிமாறி ஆதி 1:1-10 வசனங்களை பூமியில் காத்திருந்தவர்களுக்கு வாசித்தனர். பின்பு கமான்டர் ஃபிராங் போர்மன் “தேவன் அது நல்லதென்று கண்டார்” என்ற 10ஆம் வசனத்தை வாசித்தபின் “நல்ல உலகத்தில் வாழும் உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக” என்று பெருமூச்சுடன் ஒலிபரப்பை முடித்தார்.

வேதாகமத்தின் முதல் அதிகாரம் இரண்டு உண்மைகளை வலியுறுத்துகிறது:

சிருஷ்டிப்பு தேவனுடைய கை வண்ணம். “பின்பு தேவன் சொன்னார்” என்ற சொற்றொடர் ஒரு தாளம்போல இந்த அதிகாரம் முழுவதிலும் தொனிக்கிறது. நாம் வாழும் இந்த மகிமையான உலகம் முற்றிலும் அவருடைய படைப்பே! ஆதியாகமம் 1ஆம் அதிகாரத்திற்குப்பின் வரும் வேதாகமம் முழுவதிலும், இந்த செய்தியையே உறுதிப்படுத்துவதைக் காண்கிறோம். ஒவ்வொரு சரித்திரத்தின் பின்னணியிலும் இருப்பது தேவனே.

சிருஷ்டி நல்லது. இனிய மணியோசைபோல் இந்த அதிகாரம் முழுவதிலும் தொடர்ந்து கேட்கும் ஒரு வசனம் “தேவன் அது நல்லதென்று கண்டார்” என்பதே. தேவன் சிருஷ்டித்த நாளிலிருந்தே சிருஷ்டி பல மாற்றங்களை அடைந்துள்ளது. பூமி கெடுக்கப்படுமுன் எப்படி இருக்க வேண்டுமென்று தேவன் விரும்பினாரோ, அதையே ஆதியாகமம் 1ஆம் அதிகாரம் விவரிக்கிறது. நாம் இன்றைய உலகில் அனுபவிக்கும் இயற்கை அது தேவன் சிருஷ்டித்த ஆதியிலிருந்த பூமியின் மங்கிய எதிரொலியே.

அப்போல்லோ 8 விண்வெளி வீரர்கள், பூமியை வானத்தில் தனியே பிரகாசிக்கும் வர்ணத்தில் தொங்குகிற பந்துபோலக் கண்டார்கள். அது மிக அழகாகவும் அதே சமயத்தில் உடையக்கூடியதாகவும் தோன்றியது. இது ஆதியாகமம் 1 ஆம் அதிகாரத்தின் காட்சியே!

சமுதாயத்தைக் கட்டுதல்

நீங்கள் இணைந்து வாழ விரும்பாத ஒரு நபரோடு சேர்ந்து வாழ வேண்டிய சூழ்நிலைதான் “சமுதாயம்” என்று ஹென்ரி நவ்வென் கூறுகிறார். பொதுவாக நாம் நமக்குப் பிடித்தமான மக்கள் மத்தியில்தான் வாழ விரும்புகிறோம். அது சமுதாயமல்ல; அது ஒரு பொழுதுபோக்கு குழுவாக இருக்கலாம். அல்லது பிறருடன் சேர விரும்பாத சுயநலக் குழுவாக இருக்கலாம். ஒரு பொழுதுபோக்குக் குழுவை யார் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சமுதாயத்தை உருவாக்க சிறந்த பண்பும், ஒருவரோடொருவர் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும் தன்மையும், கடின உழைப்பும் தேவையாக உள்ளன.

சரித்திரத்திலேயே பலதரப்பட்ட மக்களை முதன் முதலாக ஒன்றாக இணைத்த நிறுவனம் கிறிஸ்தவ திருச்சபையாகும். ஆதித்திருச்சபையில் யூதர்களும், புறஜாதிகளும், ஆண்களும், பெண்களும்; அடிமைகளும், சுயாதீனர்களும் ஒரே சமமான நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இதைக் குறித்துப் பவுல் “தேவனுக்குள்ளே ஆதி காலமுதல் மறைந்திருந்த இரகசியம்” என்று வெகு தெளிவாக விளக்கியுள்ளார். திருச்சபையில் பலதரப்பட்ட மக்களை ஒன்று சேர்த்து ஒரு கிறிஸ்தவ சமுதாயத்தை உருவாக்குவதின் மூலம், உலகத்தையும் உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களையும், அதிகாரங்களையும் ஈர்க்கத்தக்கதான சந்தர்ப்பம் கிடைக்கிறது என்று பவுல் கூறியுள்ளார் (எபே. 3:9-10).

வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் இன்றயத் திருச்சபை இச்செயலை செய்ய தவறிவிட்டது. ஆனாலும், நான் செல்லும் பல இடங்களில் திருச்சபையானது பல தலைமுறைகளை ஒன்றாக இணைக்கும் இடமாக உள்ளது. குழந்தைகளைக் கரங்களில் ஏந்தியுள்ள தாய்மார்கள், வேண்டாத நேரங்களில் புழுப்போல நெளிந்து கொண்டும் சிரித்துக் கொண்டும் இருக்கும் சிறார்கள், எல்லா நேரங்களிலும் பொறுப்போடு நடக்கக்கூடிய பெரியவர்கள், போதகரது பிரசங்கம் நீண்டதாகவும், சலிப்பூட்டுவதாகவும் இருந்தால் உறக்கத்தில் ஆழ்ந்துபோகும் மக்கள் என்ற பலதரப்பட்ட மக்களை உள்ளடக்கியதுதான் திருச்சபை.

தேவன் நமக்கு அருளுகிற சமுதாய அனுபவத்தை நாம் பெற விரும்பினால், “நம்முடைய தரத்திற்கு ஒத்துவராத மக்களையும்”, நமது திருச்சபையிலே அங்கத்தினர்களாக சேர்த்துக்கொள்ளும் மனமுடையவர்களாக இருக்க வேண்டும்.

பரிபூரண கிருபை

இயேசு போதித்த பரிபூரணமான குறிக்கோள்களும் பரிபூரண கிருபையும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக தோன்றலாம்.

ஆனால் தேவன் எதிர்பார்க்கும் பூரண நிலையை இயேசு ஒருபோதும் குறைத்துக்கொள்ளவே இல்லை. “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” (மத். 5:48) என, மிகுந்த ஆஸ்தியுடைய வாலிபனுக்கு இயேசு பதில் கூறினார். மேலும் நியாயப்பிரமாண வல்லுநர் ஒருவர் நியாயப்பிரமாணத்திலே பிரதான கட்டளை எது என்று கேட்டதற்கு, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக (22:37). இந்த கற்பனைகளையும் ஒருவனும் முழுமையாய் நிறைவேற்றினதில்லை.

ஆனாலும் அதே இயேசு நமக்கு பரிபூரண கிருபையை கனிவாக அளித்துள்ளார். ஒரு விபச்சாரியை மன்னித்தார், சிலுவையில் தொங்கின திருடனை மன்னித்தார், தன்னை மறுதலித்த சீஷனை மன்னித்தார் மேலும் கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்துவதிலே கீர்த்தி பெற்ற சவுலையும் மன்னித்தார். அனைத்தையும் உள்ளடக்கிய பரிபூரணமான கிருபை இயேசுவை சிலுவையில் அறைந்தவர்களுக்கும் தன் கரம் நீட்டுகிறது: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார் (லூக். 23:34). இயேசு கடைசியாகப் பேசின வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

பல வருடங்களாக இயேசுவின் பூரணமான கற்பனைகளை எண்ணும்பொழுது, என்னைத் தகுதியற்றவனாகவே உணர்ந்தேன். அப்பொழுது அவருடைய கிருபையை குறித்துக் கருதவேயில்லை. ஆனால் இந்த இரட்டைச் செய்தியை புரிந்து கொண்ட பிறகு, இக்கிருபையின் சத்தியம் இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகள் முழுவதும், பெருங்காற்று போல சீறி பாய்ந்து செல்வதை கண்டுகொண்டேன்.

நம்பிக்கை இழந்தவர்கள், தேவையுள்ளவர்கள், நொறுங்குண்டவர்கள், சுயபெலத்தினால் காரியங்களை நிறைவேற்ற முடியாதவர்கள் என இவர்கள் அனைவருக்கும் கிருபை உண்டு. நம் அனைவருக்கும் கிருபை உண்டு.

தேவனுடைய முகம்

இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
2 கொரிந்தியர் 4:6

ஒரு எழுத்தாளராக என்னுடைய படைப்புகள் பெரும்பாலும் வலியின் வேதனையை சுற்றியே இருந்துள்ளன. பல நாட்களாகியும் ஆறாத புண்ணை நகத்தால் சுரண்ட நினைப்பது போல, மறுபடியும் மறுபடியும் நான் அதே கேள்விகளுக்கு திரும்புவேன். என்னுடைய புத்தகங்களை படிக்கும் வாசகர்கள் அவர்களுடைய கடுந்துயரமான கதையை பகிர்ந்து கொள்ளும்பொழுது, அவர்களுடைய முகங்கள் என் சந்தேகங்களுக்கு உருவம் கொடுத்துவிடும். வாலிபர் மத்தியில் ஊழியம் செய்யும் போதகர், எய்ட்ஸ் (AIDS) நோயினால் பாதிக்கப்பட்டவருடைய இரத்தத்தை சரியாக பரிசோதிக்காமல் தன் மனைவிக்கும், குழந்தைக்கும் செலுத்தியதால் மரணத்தை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் என்னை தொலைபேசியில் அழைத்து, “இனி ஒரு ‘அன்பான தேவனைக்’ குறித்து என் வாலிபர் குழுவிடம் நான் எப்படி பேச முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

இப்படிப் பட்டதான ‘ஏன்’ என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிகூட செய்யக்கூடாது என்பதை நான் கற்றுக்கொண்டேன். மாசுள்ள அந்த இரத்தம் எதற்காக அப்போதகரின் மனைவிக்கு செலுத்தப்பட வேண்டும்? ஏன் ஒரு சுழற்காற்று ஒரு ஊரை தாக்கிவிட்டு இன்னொரு ஊரை தாக்காமல் செல்கிறது? ஏன் சரீர சுகத்திற்காக ஏறெடுக்கப்படும் எல்லா ஜெபங்களுக்கும் பதில் கிடைப்பதில்லை?

இப்படி அநேக கேள்விகள் இருப்பினும், “தேவனுக்கு நம்மீது அக்கறை உண்டா?” என்ற கேள்வி மாத்திரம் இனி ஒருபோதும் என்னை குடைவதில்லை. ஏனென்றால் வலியின் வேதனைகளினால் இப்பூமி குமுறும்பொழுது தேவனுடைய மன வேதனையை அவருடைய முகத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம். ஆம், தேவன் நமக்கு காட்டிய அவருடைய முகம், இயேசுவினுடைய முகமே.

தேவனுடைய குமாரனாகிய இயேசு நமக்காக மரணத்தை ருசித்ததினால் வலி, வேதனைகள், துன்பங்கள் மற்றும் மரணமும் நித்தியத்திற்கும் இறுதியாக அழிக்கப் பட்டதினால், “தேவனுக்கு நம்மீது அக்கறை உண்டா?” என்கிற கேள்விக்கு பதில் கிடைத்தாயிற்று. “இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்” (2 கொரி. 4:6).

நான் ஒரு பொருட்டா?

சிறப்பு அங்காடியில் (Super Market) பொருட்களை வாங்கிவிட்டு பணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தபொழுது, நொறுக்குத் தீனியைப் பார்த்துக் கொண்டிருந்த மொட்டைத் தலையுடன் மூக்குத்தி அணிந்த சில இளைஞர்களை கவனித்தேன். மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் வாலிபன் ஒருவன் இறைச்சித் துண்டு, கீரை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு வாங்குவதையும், வயதான பெண்மணி ஸ்டராபெரி மற்றும் ‘பீச்’ பழங்களை (Peaches) வாங்குவதையும் பார்த்து கொண்டிருந்தேன். இவர்களை எல்லாம் தேவன் அறிந்திருக்கிறாரா? இவர்களுடைய பெயர்கள் அவருக்குத் தெரியுமா?  உண்மையிலேயே இவர்கள் எல்லோரும் அவருக்கு முக்கியமானவர்களா? என்றெல்லாம் என் மனதில் கேள்விகள் எழுந்தது.

எல்லாவற்றையும் படைத்தவர் தான் மனிதனையும் படைத்தார். நாம் ஒவ்வொருவரும் அவருடைய தனிப்பட்ட அன்பையும், கவனத்தையும் பெற்றுக் கொள்ளப் பாத்திரவான்களாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். மனிதனாகப் பிறந்து தேவன் தம்முடைய அற்புதமான அன்பை இஸ்ரேல் மலைகளின் மத்தியில் வாசம் செய்து வெளிப்படுத்தினார். பின்னர் முற்றிலுமாக அதை சிலுவையில் நமக்கு காண்பித்தார்.

இயேசு பூமிக்கு ஓர் சாதாரண ஊழியக்காரரைப் போல் வந்தார். எந்த ஒரு சூழ்நிலையில் இருக்கும் எளிய மனிதனையும் அவர் கனப்படுத்தினார். அவரது பலத்த கரம் சிறுமைப்பட்ட எளியவரையும் அணைத்துக் கொண்டது. அவரது கரத்தில் ஒவ்வொருவருடைய பெயர்களும் எழுதப்பட்டிருக்கிறது. அதை அவர் தம் தழும்புகளினாலும், காயங்களினாலும், எழுதியுள்ளார். அப்படிபட்ட விலை செலுத்தி தேவன் நம்மில் அன்பு கூர்ந்தார்.

யோபு மற்றும் பிரசங்கி புத்தகங்களில் எழுதப்பட்டது போல நான் சுய-பரிதாபத்தால் வாடும் பொழுதும், தனிமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் பொழுதும் நான் சுவிஷேச புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ள இயேசுவைப்பற்றிய செய்திகளை படித்து தியானிப்பேன். பிரசங்கி புத்தகத்தில் சொன்னது போல “சூரியனுக்குக் கீழே” (பிர. 1:3) வசிக்கும் மனிதனின் வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்ற முடிவிற்கு வந்தால், தேவன் பூமிக்கு வந்த முக்கியமான நோக்கத்தையே நான் அறியவில்லை என்பதைக் காண்பிக்கின்றது. நான் முக்கியத்துவம் பெற்றவனா? நான் விசேஷித்தவனா? என்ற கேள்விகளுக்கு ஒரே பதில் உண்டு. இயேசுதான் அதற்கு பதில்.

ஒருவருக்கொருவர் உதவுதல்

புதிய ஏற்பாட்டில் 30 முறைக்கும் மேலாக பயன்படுத்தப்படும் “கிறிஸ்துவின் சரீரம்” என்னும் சொற்றொடர் ஒரு புதிர். அப்போஸ்தலனாகிய பவுல் அச்சொற்றொடரை சபையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார். இயேசு பரமேறிய பின்பு, அவருடைய பணியை தொடரும்படி குறைவுள்ள,  திறமையில்லாத ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஒப்புக்கொடுக்கிறார். அவர் சபைக்கு தலையாக தலைமை ஏற்றுக்கொண்டு, அவருடைய கைகளாக, கால்களாக,  காதுகளாக, கண்களாக, மற்றும் குரலாக ஒழுங்கற்ற சீஷர்களை, அதாவது உன்னையும், என்னையும் விட்டுச் சென்றுள்ளார்.

அநேக அவயங்கள் உள்ள ஒரு பெரிய சரீரத்திற்கு காணக்கூடாத தலையாக இருக்க தீர்மானித்த இயேசு, …

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றல்

ஜூம் செயலி பிரேத்யேகமான தகவல்தொடர்பு கருவியாக மாறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு செயல்திட்டத்தைப் பற்றி விவாதிக்கக் காணொளி அழைப்பில் தன்னுடன் இணையுமாறு ஒரு தோழி என்னிடம் கேட்டாள். செய்வதறியாமல் நான் குழப்பமடைந்துள்ளேன் என்று மின்னஞ்சல்கள் வாயிலாக உணர்ந்துகொண்டாள். எனவே காணொளி அழைப்பை எவ்வாறு அமைப்பது என்பதைக் கண்டறிய எனக்கு உதவ ஒரு வாலிபரை அணுகும்படி அவள் பரிந்துரைத்தாள்.

அவளது ஆலோசனை, தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகளின் மதிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. இது ரூத் மற்றும் நகோமியின் கதையில் தெளிவாகும் ஒன்று. ரூத் ஒரு விசுவாசமான மருமகளென்று அடிக்கடி புகழப்படுகிறாள்.நகோமியுடன் பெத்லகேமுக்குத் திரும்பிச் செல்ல தன் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தாள் (ரூத் 1:16-17). அவர்கள் நகரை அடைந்தபோது நகோமியின் இளைய மருமகள், “நான் வயல்வெளிக்குப் போய்.. (நமக்காக) கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன்” (2:2) என்றாள். இவள் முதியவளுக்கு உதவினாள், அவள் இளையவளுக்கு போவாஸை திருமணம் செய்ய உதவினாள். நவோமி ரூத்துக்கு கொடுத்த ஆலோசனை, போவாஸை இறந்துபோன திருமண உறவுகளின் ஆஸ்தியை வாங்குவதற்கும், ரூத்தை”மனைவியாக” கொள்ளவும் செயல்படத் தூண்டியது (4:9-10).

இளைய தலைமுறையினருடன் தங்கள் அனுபவமிக்க ஞானத்தைப் பகிர்ந்துகொள்பவர்களின் அறிவுரைகளை நாம் நிச்சயமாக மதிக்கிறோம். ஆனால் ரூத் மற்றும் நகோமி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டனர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நம்மை விடச் சிறியவர்களிடமிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது. அன்பான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைமுறை உறவுகளை வளர்க்க முற்படுவோம். அது நம்மையும் மற்றவர்களையும் ஆசீர்வதித்து, நாம் அறிந்திராததை கற்றுக்கொள்ள உதவும்.

 

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜான் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜானும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம். 

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் “எதேச்சையான பயம்” என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, “இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று” (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: “பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” (வ. 20). “பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்” என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய ஆறுதலை நமக்களிக்கிறார்.