புதிய ஏற்பாட்டில் 30 முறைக்கும் மேலாக பயன்படுத்தப்படும் “கிறிஸ்துவின் சரீரம்” என்னும் சொற்றொடர் ஒரு புதிர். அப்போஸ்தலனாகிய பவுல் அச்சொற்றொடரை சபையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார். இயேசு பரமேறிய பின்பு, அவருடைய பணியை தொடரும்படி குறைவுள்ள,  திறமையில்லாத ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஒப்புக்கொடுக்கிறார். அவர் சபைக்கு தலையாக தலைமை ஏற்றுக்கொண்டு, அவருடைய கைகளாக, கால்களாக,  காதுகளாக, கண்களாக, மற்றும் குரலாக ஒழுங்கற்ற சீஷர்களை, அதாவது உன்னையும், என்னையும் விட்டுச் சென்றுள்ளார்.

அநேக அவயங்கள் உள்ள ஒரு பெரிய சரீரத்திற்கு காணக்கூடாத தலையாக இருக்க தீர்மானித்த இயேசு,  நம்முடைய துயர நேரங்களில் நாம் பெலப்பட, ஒருவர் மற்றொருவருக்கு ஆறுதலாய் இருக்கும்படி நம்மையே சார்ந்திருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுலும் இதையே தான் தன் மனதிலே எண்ணியிருக்கக் கூடும் என்பதை “தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர். எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது (2 கொரி. 1:4, 5)” என்னும் வார்த்தைகளின் மூலம் அறிகிறோம். அப்போஸ்தலனாகிய பவுல் இதையே கொள்கையாகக் கொண்டு தன்னுடைய ஊழிய பாதையில், பஞ்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காணிக்கை சேகரித்தும், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உதவிகள் அனுப்பியும், விசுவாசிகள் கொடுக்கும் காணிக்கைகளை தேவனே கொடுக்கும் ஈவாக கருதி ஏற்றுக்கொன்டார்.

“கிறிஸ்துவின் சரீரம்” என்னும் சொற்றொடர், நாம் என்ன செய்வதற்காக அழைக்கப் பட்டிருக்கிறோம் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. முக்கியமாக தேவையில் இருப்போருக்கு உதவிடும்படியாக, நம்முடைய மாம்சத்திலே கிறிஸ்துவை வெளிப்படுத்தும்படியாய், அழைக்கப்பட்டிருக்கிறோம்.