அக்டோபர், 2016 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: அக்டோபர் 2016

அது ஒருக்காலும் தீர்ந்து போவதில்லை

பணியிலிருந்து ஓய்வு பெற இருந்த எனது சிநேகிதியிடம், ஓய்வுபெற்ற பின் அவளது வாழ்க்கையில், அவள் பயப்படும் காரியம் என்ன என்று நான் கேட்டபொழுது, “நான் ஓய்வு பெற்றபின், கையில் பணம் தீர்ந்து போகாமல் இருக்கவேண்டும் என்பது குறித்து கவனமாக இருப்பேன்” என்று கூறினாள். அடுத்த நாள் நான் எனது நிதி ஆலோசகரிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது, பணம் தீர்ந்து போகாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து எனக்கு ஆலோசனை கொடுத்தார். நமது எதிர்கால வாழ்க்கைக்கு போதுமான நிதி இருக்க வேண்டும் என்ற பாதுகாப்பான சூழ்நிலையைப் பற்றி அறிந்துகொள்ள நாம் அனைவருமே விரும்புகிறோம்.

பாதுகாப்பான உலக வாழ்க்கைக்காக எந்தவிதப் பொருளாதாரத் திட்டமும் உறுதி அளிக்காது. ஆனால், இந்த உலக வாழ்க்கைக்கும் இதற்கு பின்னால் உள்ள வாழ்க்கைக்கும் நித்திய நித்தியமாய் நமக்கு உறுதி அளிக்கும் திட்டம் ஒன்று உள்ளது. “அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்” (1 பேதுரு 1:4) என்று அப்போஸ்தலர் பேதுரு அதை விளக்குகிறார்.

நம்முடைய பாவங்களை மன்னிக்க இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கும்பொழுது, தேவனுடைய வல்லமையினால் நித்திய சுதந்திரம் நமக்குக் கிடைக்கிறது. அந்த சுதந்திரத்தினால் நாம் நித்திய காலமாய் வாழ்வோம். நமது தேவைகள் சந்திக்கப்படாத நிலைமை நமக்கு ஒருக்காலும் ஏற்படாது.

ஓய்வு பெறுவதற்கான திட்டத்தை நம்மால் தீட்டுவதற்கு முடிந்தால், அது நல்லது தான். ஆனால், ஒருக்காலும் தீர்ந்து போகாத நித்திய சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வது அதைவிட மிக முக்கியமானதாகும். அது இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினால் மட்டுமே நமக்கு கிடைக்கும்.

செவிகொடுக்கும் தேவன்

ஜலதோஷத்தாலும், ஒவ்வாமையினாலும் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு சத்தங்கள் எதையும் தெளிவாகக் கேட்க முடியாமல், நீருக்குள் மூழ்கி இருந்ததுபோல உணர்ந்தேன். அநேக வாரங்களுக்கு சத்தத்தை தெளிவாக கேட்க இயலாமல் கஷ்டப்பட்டேன். அவ்வாறு நான் கஷ்டப்பட்ட பொழுதுதான் சாதாரண நாட்களில் தெளிவாகக் கேட்ககூடிய தன்மையை ஒரு பொருட்டாக எண்ணாமல் இருந்ததை உணர்ந்தேன்.

சிறுவனான சாமுவேல் ஆலயத்தில் தூங்கிக்கொண்டிருந்தபொழுது, அவனது பெயரைச் சொல்லி கூப்பிட்ட சத்தம் கேட்டபொழுது, அரைகுறை தூக்கத்திலிருந்து எழுந்தான் (1 சாமு. 3:4). மூன்று முறை அவன் பிரதான ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாக வந்து நின்றான். மூன்றாவது முறைதான், தேவன் சாமுவேலைக் கூப்பிடுகிறார் என்பதை ஏலி உணர்ந்தான். அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாக இருந்தது (வச. 1). இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கும் பழக்கமில்லாதிருந்தார்கள். ஆனால், தேவனுடைய சத்தத்திற்கு எவ்வாறு மாறுத்தரம் கூறவேண்டுமென்று ஏலி சாமுவேலுக்குப் போதித்தான் (வச. 9).

சாமுவேலின் காலத்தில் இருந்ததை விட இந்தக் காலங்களில் தேவன் அதிகமாக பேசுகிறார். “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்” (எபி. 1:1–2) என்று எபிரெயருக்கு எழுதின நிரூபம் கூறுகிறது. அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் கிறிஸ்து நமக்கு கற்பித்தவைகளில் வாழ, நம்மை வழிநடத்துகிற, பரிசுத்தாவியானவர் பெந்தெகொஸ்தே நாளன்று அருளப்பட்டதைப்பற்றி வாசிக்கின்றோம். ஆனால் அவருடைய சத்தத்தைக் கேட்கவும், அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய ஜலதோஷத்தின் பொழுது நான் தண்ணீருக்கு அடியில் உள்ளவளைப் போல, எதையும் தெளிவாக கேட்க முடியாமல் இருந்தேனோ, அது போலவே நாம் இருக்கிறோம். கர்த்தருடைய வழிநடத்துதல் இதுதான் என்று நாம் எண்ணும் காரியங்களை வேதாகமத்தின் உதவியின் மூலமாகவும், மூத்த விசுவாசிகளின் மூலமாகவும் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும். தேவனுக்கு பிரியமான பிள்ளைகளாக இருப்பதால் நாம் அவருடைய சத்தத்தைக் கேட்கிறோம். நமக்கு ஜீவனை கொடுப்பதைப்பற்றி நம்மோடு கூடப்பேச தேவன் அதிகம் விரும்புகிறார்.

ஜெபிக்கும் நோயாளி

நான் வாழ்ந்து வந்த நகரில் வசித்து வந்த ஆலன் நானிங்கா என்ற நபர் இறந்தபொழுது, அவரைப்பற்றி வெளியான இரங்கல் செய்தி மூலம், எனது ஊரில் வாழ்ந்து வந்த அனைத்துக் கிறிஸ்தவர்களைவிட அவர் “மிகவும் அர்ப்பணிப்புடன் கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்ந்தவர்” என்ற செய்தி எல்லாராலும் அறியப்பட்டது. அந்த இரங்கல் செய்தியில் அவரது குடும்பம், அவர் செய்து வந்த வேலை ஆகியவற்றைப் பற்றிக் கூறினபின், அவருடைய உடல்நிலை 10 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டிருந்ததையும் விளக்கினது. அவர் மருத்துவமனையில் இருந்தபொழுது, அங்கிருந்த உள்நோயாளிகள் மத்தியில் அர்ப்பணிப்புடன் செய்து வந்த ஜெப ஊழியத்தின் நிமித்தமாக “ஜெபிக்கும் நோயாளி” என்ற சிறப்புப் பட்டத்தை பெற்றார் என்ற விளக்கத்துடன் அந்த இரங்கல் செய்தி முடிவடைந்திருந்தது. அவரது நோயின் வேதனைகள் மத்தியிலும் அவரைச் சுற்றியிருந்த தேவையுள்ள மக்களுக்காக ஜெபித்து வந்த ஒரு மனிதனை இங்கு பார்க்கிறோம்.

இயேசுவை, யூதாஸ் காட்டிக்கொடுப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக “நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்” (யோவா. 17:11) என்று இயேசு அவருடைய சீஷர்களுக்காக ஜெபித்தார். அவருக்கு நேரிடப்போவதை அவர் நன்கு அறிந்திருந்தும், அவர் தன்னைக் குறித்து சிந்திக்காமல், அவரைப் பின்பற்றின சீஷர்களைப்பற்றி அவரது கவனத்தை செலுத்தினார்.

நமது சுகவீனம், துன்பமான நேரங்கள் மத்தியில் பிறருடைய ஜெப உதவிக்காக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அந்த ஜெபங்கள் நம்மை ஊக்கப்படுத்த நமக்கு மிகவும் உதவியாக உள்ளன. ஆனால், நாமும் நம்முடைய கர்த்தரைப்போல நம்மைச் சுற்றியுள்ள, உதவி தேவைப்படும் மக்களுக்காக, தேவனை நோக்கி நமது கண்களை ஏறெடுத்து ஜெபிப்போமாக.

எண்ணுவதற்கு கற்றுக்கொள்ளுதல்

எனது மகன், 1 முதல் 10 வரை எண்ணுவதற்கு கற்றுக்கொண்டிருக்கிறான். அவனது பொம்மைகள், அவன் பார்க்கும் மரங்கள் அனைத்தையும் எண்ணுவான். அவனது பள்ளிக்குச் செல்லும் வழியில் எனது கவனத்திற்கு உட்படாத காட்டுப்பூக்கள் அல்லது எனது பாதத்திலுள்ள விரல்கள் ஆகியவற்றைக் கூட அவன் எண்ணுவான்.

இப்படியாக என் மகன் எண்ணுவதின் மூலம், நான் மறுபடியும் எண்ணுவதற்கு எனக்குப் போதிக்கிறான். நான் செய்து முடிக்காத காரியங்கள் அல்லது என்னிடம் இல்லாத பொருட்களைப் பற்றிய காரியங்களில் என் முழு கவனத்தையும் செலுத்துவதால், என்னைச் சுற்றியுள்ள அனைத்து நன்மையான காரியங்களையும் கவனிக்கத் தவறிவிடுகிறேன். இந்த ஆண்டில் எனக்குக் கிடைத்த புதிய சிநேகிதர்கள், பதில் கிடைத்த ஜெபங்கள், எனது நல்ல சிநேகிதருடன் நான் சிரித்து மகிழ்ந்த நேரங்கள் அனைத்தையும் மறந்து விட்டேன்.

ஒவ்வொரு நாளும் தேவன் அருளும் ஆசீர்வாதங்களை எண்ணுவதற்கு எனது பத்து விரல்கள் போதாது. “என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லிமுடியாது. நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்” (சங். 40:5). இரட்சிப்பு, ஒப்புரவாதல், நித்திய ஜீவன் போன்ற ஆசீர்வாதங்களை நம்மால் எப்படி எண்ணுவதற்கு இயலும்?

நம்மீது தேவன் கொண்டுள்ள விலைமதிப்பற்ற எண்ணங்கள், அவர் நமக்குச் செய்த ஆசீர்வாதமான காரியங்கள் ஒவ்வொன்றாக எண்ணி நாமும் தாவீதோடு சேர்ந்து, “தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்” (சங். 139:17–18) என்று தேவனை போற்றித் துதிப்போம்.

எண்ணுவதற்கு மறுபடியும் கற்றுக்கொள்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தோலுக்கு உள்ளே கிரியை

சிறுவயதில் நானும் என் சகோதரியும் அடிக்கடி மோதிக் கொண்டேயிருப்போம். அதில் ஒரு குறிப்பிட்ட தருணம் என் நினைவில் இன்னும் இருக்கிறது. நாங்கள் இருவரும் சத்தத்தை உயர்த்தி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தவேளையில், அவள் சொன்ன ஒரு காரியம் என்னால் மன்னிக்கவே முடியாத வகையில் இருந்தது. எங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பகைமையைக் கண்ட என் பாட்டி, “தேவன் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு சகோதரியைத் தான் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பரிவு காண்பிக்க பழக வேண்டும்” என்று ஒருவரையொருவர் நேசிக்க வேண்டிய எங்களது பொறுப்பை எங்களுக்கு எடுத்துச் சொன்னார். எங்களை அன்பினாலும் புரிதலினாலும் நிரப்பும்பொருட்டு தேவனிடத்தில் நாங்கள் ஜெபித்தபோது, ஒருவரையொருவர் நாங்கள் எந்தவிதத்தில் காயப்படுத்தினோம் என்பதையும் எப்படி மன்னிக்கவேண்டும் என்பதையும் தேவன் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.  
கோபத்தையும் கசப்பையும் உள்ளுக்குள் வைத்திருப்பது சாதாரணமாய் தெரியலாம். ஆனால் தேவனின் துணையோடு நம்முடைய எரிச்சலின் ஆவியை விட்டுவிட்டு, தேவன் கொடுக்கும் சமாதானத்தை நாம் உணரவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (எபேசியர் 4:31). இந்த மாம்சத்தின் உணர்வுகளுக்கு அடிமைப்படாமல், கிறிஸ்துவை மாதிரியாய் வைத்து, ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை செயல்படுத்துவோம் (வச. 32). நமக்கு மன்னிப்பது கடினமாய் தோன்றினால், அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு அருளும் கிருபையை நாம் சார்ந்துகொள்வோம். நாம் எத்தனை முறை விழுந்தாலும், அவர் கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை (புலம்பல் 3:22). தேவன் நம்முடைய இருதயங்களில் இருக்கும் கசப்பை நீக்குவதற்கு நமக்கு உதவிசெய்வார். அதினால் நாம் நம்பிக்கையோடு அவருடைய அன்பிற்கு உட்பட்டவர்களாய் நிலைத்திருப்போம்.  

மலைமுகடுகளின் பாதை

ஒரு கவிஞரும், ஆன்மீக எழுத்தாளருமான கிறிஸ்டினா ரோசெட்டி, தனக்கு எதுவும் எளிதில் வரவில்லை என்பதை உணர்ந்தார். அவள் தனது வாழ்நாள் முழுவதும் மனச்சோர்வு மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். அவளுடைய வாழ்க்கையில் மூன்று நிச்சயதார்த்தங்கள் நிறுத்தப்பட்ட துக்கத்தை தாங்கினார். இறுதியில் அவள் புற்றுநோயால் மரித்துப்போனாள்.  
தாவீது இஸ்ரவேலின் ராஜரீகத்தில் அமர்த்தப்பட்டபோது, அவன் ஒரு வெற்றிகரமான போர்வீரனாக அடையாளப்படுத்தப்பட்டான். ஆனால் அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் அவன் பாடுகளை சகிக்கவேண்டியிருந்தது. அவனுடைய ஆட்சியின் இறுதியில், அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாயிருந்த நபர்களோடு சேர்ந்து அவனுடைய சொந்த குமாரனே அவனுக்கு விரோதமாய் திரும்பினான் (2 சாமுவேல் 15:1-12). ஆகையினால் தாவீது ஆசாரியனாகிய அபியாத்தார், சாதோக் மற்றும் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியையும் எடுத்துக்கொண்டு எருசலேமை விட்டு ஓடினான் (வச. 14,24).  
அபியாத்தார் தேவனுக்கு பலிகளை செலுத்திய பின்பு, தாவீது ஆசாரியர்களைப் பார்த்து, “தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்” (வச. 25) என்று சொன்னான். அவனுடைய குழப்பத்தின் மத்தியிலும் தாவீது, “(தேவன்) உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்” (வச. 26). அவனால் தேவனை நம்ப முடியும் என்பதை அறிந்திருந்தான்.  
கிறிஸ்டினா ரோசெட்டி தேவனை நம்பினாள். அவளுடைய வாழ்க்கை நம்பிக்கையோடு நிறைவடைந்தது. நாம் கடந்து செல்லும் பாதையானது, மலைமுகடுகளாய் தென்படலாம். ஆனால் அங்கே நம்மை விரிந்த கைகளோடு வரவேற்கும் நம்முடைய பரமபிதா நமக்காய் காத்திருக்கிறார்.  

நீலக்கல் திருச்சபை மணிகள்

 நீலக்கல் பாறை என்பது ஆச்சரியமான ஒரு பாறை. அதை அடைக்கும்போது, அதில் சிதறும் சில நீலக்கற்கள் இசையொலி ஏற்படுத்தும். “மணியோசை” என்று பொருள்படும் மேன்க்ளோசோக் என்ற ஒரு வெல்ஷ் கிராமத்தில், பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த நீலக்கற்களை தேவாலய மணிகளாகப் பயன்படுத்தினர். இங்கிலாந்தின் பிரபலமான ஸ்டோன்ஹென்ச் என்ற நீலக்கற்பாறை மிச்சங்கள், இசையை ஏற்படுத்தும் விதமான அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க தோன்றுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள், ஸ்டோன்ஹென்சில் இடம்பெற்றுள்ள இந்த நீலக்கற்கள் அதிலிருந்து இருநூறு மைல் தொலைவில் அமைந்திருந்த இந்த மேன்க்ளோசோக் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.  
இசையை ஏற்படுத்தும் இந்த நீலக்கற்கள் என்பது தேவனுடைய படைப்பில் ஒரு ஆச்சரியமாய் திகழ்கிறது. இயேசு குருத்தோலை ஞாயிற்றில் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது சொன்ன காரியத்தை நினைவுபடுத்துகிறது. ஜனங்கள் இயேசுவைச் சுற்றிலும் கூச்சலிட, அவர்களை அதட்டும்படிக்கு மார்க்கத் தலைவர்கள் இயேசுவை கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 19:40) என்கிறார்.  
நீலக்கற்களினால் இசையெழுப்பக்கூடும் என்றால், கல்லுகளே சிருஷ்டிகரை கூப்பிடும் என்று இயேசு சொல்லுவதை கருத்தில்கொண்டால், நம்மை உண்டாக்கி மீட்டுக்கொண்ட நம்முடைய நேசருக்கு எவ்வளவாய் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்! அவர் நம் அனைத்து துதிகளுக்கும் பாத்திரர். அவருக்கு துதி செலுத்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்வாராக. அனைத்து சிருஷ்டியும் அவரை பணிகின்றன.