இயேசு போதித்த பரிபூரணமான குறிக்கோள்களும் பரிபூரண கிருபையும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக தோன்றலாம்.

ஆனால் தேவன் எதிர்பார்க்கும் பூரண நிலையை இயேசு ஒருபோதும் குறைத்துக்கொள்ளவே இல்லை. “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” (மத். 5:48) என, மிகுந்த ஆஸ்தியுடைய வாலிபனுக்கு இயேசு பதில் கூறினார். மேலும் நியாயப்பிரமாண வல்லுநர் ஒருவர் நியாயப்பிரமாணத்திலே பிரதான கட்டளை எது என்று கேட்டதற்கு, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக (22:37). இந்த கற்பனைகளையும் ஒருவனும் முழுமையாய் நிறைவேற்றினதில்லை.

ஆனாலும் அதே இயேசு நமக்கு பரிபூரண கிருபையை கனிவாக அளித்துள்ளார். ஒரு விபச்சாரியை மன்னித்தார், சிலுவையில் தொங்கின திருடனை மன்னித்தார், தன்னை மறுதலித்த சீஷனை மன்னித்தார் மேலும் கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்துவதிலே கீர்த்தி பெற்ற சவுலையும் மன்னித்தார். அனைத்தையும் உள்ளடக்கிய பரிபூரணமான கிருபை இயேசுவை சிலுவையில் அறைந்தவர்களுக்கும் தன் கரம் நீட்டுகிறது: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார் (லூக். 23:34). இயேசு கடைசியாகப் பேசின வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

பல வருடங்களாக இயேசுவின் பூரணமான கற்பனைகளை எண்ணும்பொழுது, என்னைத் தகுதியற்றவனாகவே உணர்ந்தேன். அப்பொழுது அவருடைய கிருபையை குறித்துக் கருதவேயில்லை. ஆனால் இந்த இரட்டைச் செய்தியை புரிந்து கொண்ட பிறகு, இக்கிருபையின் சத்தியம் இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகள் முழுவதும், பெருங்காற்று போல சீறி பாய்ந்து செல்வதை கண்டுகொண்டேன்.

நம்பிக்கை இழந்தவர்கள், தேவையுள்ளவர்கள், நொறுங்குண்டவர்கள், சுயபெலத்தினால் காரியங்களை நிறைவேற்ற முடியாதவர்கள் என இவர்கள் அனைவருக்கும் கிருபை உண்டு. நம் அனைவருக்கும் கிருபை உண்டு.