வகை  |  odb

ஓவ்வொரு நொடிப் பொழுதும்

நான் அடாவைச் சந்தித்தபோது, அவள் தன்னுடைய மரித்துப்போன முழு குடும்பத்தையும், தன்னுடைய நண்பர்களையும் விட்டுவிட்டு ஒரு மருத்துவமனையில் தங்கியிருந்தாள். “முதுமை என்பதுதான் மிகவும் கடினமான பகுதி, நம்மைத் தனியே விட்டுவிட்டு ஒவ்வொருவராக வெளியேறுவதைப் பார்க்க வேண்டியுள்ளது” எனக் கூறினார். ஒரு நாள் நான் அடாவிடம் எது அவளுக்கு அதிக உற்சாகம் தருவதாக இருக்கின்றது?, எப்படி அவள் நேரத்தைச் செலவிடுகின்றாள் எனக் கேட்டேன். அவள் வேதாகமத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய பகுதியிலிருந்து (பிலி. 1:21) எனக்கு பதில் கொடுத்தாள். “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்” என்றாள். மேலும், “ நான் இங்கிருக்கும் போதும் எனக்கு வேலைகளிருக்கிறது, நான் நன்றாயிருக்கும் போது, இங்கிருக்கின்ற மக்களோடு இயேசுவைப் பற்றி பேசுவேன், என்னால் முடியாத நாட்களில் நான் அவர்களுக்காக ஜெபிப்பேன்” என்றாள்.

பவுல் சிறைச்சாலையிலிருக்கும் போதுதான் பிலிப்பியருக்கு எழுதுகின்றார். நடைமுறையிலுள்ளவற்றை அவர் ஏற்றுக்கொள்ளும் போது தான், அது அநேக கிறிஸ்தவர்கள் தாங்கள் துன்பங்களைச் சகிக்கும் போது, அவர்களும் புரிந்துகொள்ள ஏதுவாயிருக்கிறது. நம்மைப் பரலோகம் வரவேற்பதாகத் தோன்றினாலும், இந்த உலகில் நாம் செலவிட்ட நேரம் தேவனுக்கு முக்கியமானது.

பவுலைப் போன்று அடாவும் தன்னுடைய ஒவ்வொரு மூச்சையும், தேவனுக்குச் சேவை செய்யவும், அவரை மகிமைப்படுத்தவும் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களாக உணர்கின்றார். எனவே அடா தன் நாட்களை பிறரை நேசிப்பதிலும், தன்னுடைய இரட்சகரிடம் அவர்களை அறிமுகப்படுத்துவதிலும் செலவிடுகின்றாள்.

நம்முடைய இருண்ட நாட்களிலும், கிறிஸ்தவர்கள் நித்தியத்தில் தேவனோடு மகிழ்ச்சியில் வாழ்வோம் என்ற வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொள்ளலாம். இங்கு வாழும் போதும் நாம் அவரோடுள்ள உறவினை அநுபவிக்கின்றோம். அவர் நம்முடைய ஒவ்வொரு நொடிப் பொழுதையும் மணித்துளியையும் முக்கியமானதாக்கித் தருவார்.

குறைவுள்ள நியாயத்தீர்ப்பு

என்னுடைய கைப்பேசியைப் பார்த்துக்கொண்டேயிருக்கும் போதே, தெருவில் நடந்து செல்கின்ற எவரையும் சரியாகக்கணித்து விடுவேன். எப்படி இவர்கள் தங்களை மோதவருகின்ற வாகனத்தைக் குறித்துத் தெரியாமலிருக்க முடியும்? நான் என்னையே கேட்டுக் கொள்வேன். அவர்கள் தங்கள் பாதுகாப்பைக் குறித்து கவனம் கொள்வதில்லையா? ஒருநாள், ஓர் நடைப்பாதையின் நுழைவாயிலைக் கடக்கும் போது நான் ஒரு குறுஞ் செய்தியில் ஆழ்ந்திருந்தேன். அப்பொழுது எனது இடப்புறமாக வந்த ஒரு வாகனத்தைக் கவனிக்கத் தவறிவிட்டேன். ஆனால், அந்த ஓட்டுநர் என்னைக் கவனித்து, சரியான நேரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டார். அவருக்கு என் நன்றி. நான் என்னை நியாயப்படுத்தி, பிறரை குற்றப்படுத்தி பேசியது எனக்கே வந்துவிட்டது. நான் பிறரை நியாயந்தீர்த்தேன். அதே தவறை நான் செய்து அதே தீர்ப்புக்குள்ளானேன்.

என்னுடைய இந்த மாய்மாலமான எண்ணத்தைக் குறித்துத்தான் இயேசுவும் மலைப்பிரசங்கத்தில், “மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை பார்ப்பாய்” (மத். 7:5) என்றார். என் கண்ணில் ஒரு பெரிய கட்டை போன்ற ஒரு குருட்டு பகுதியிருக்கின்றது. அதன் வழியே நான் பிறரை என்னுடைய குறைவான நியாயத்தீர்ப்பின் மூலம் குற்றப்படுத்துகிறேன்.

“நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்” (7:2) எனவும் இயேசு கூறுகின்றார். நான் ஒரு காரின் முன்புறம் நடந்து சென்ற போது, விரைவாக நிறுத்திய அந்த ஓட்டுனரின் முகத்திலிருந்த வெறுப்படைந்த பார்வையை நினைத்துப் பார்த்தேன். தங்கள் அலைபேசியில் மூழ்சியிருக்கும் பிறர் மீது நான் செலுத்தும் வெறுப்படைந்த பார்வையை அது நினைவுபடுத்தியது.

நாம் ஒருவருமே நேர்மையானவர்களல்ல. ஆனால், நாம் சில வேளைகளில் அதை மறந்து, பிறரைத் தீர்ப்பிட அவசரப்படுகின்றோம். நம் அனைவருக்கும் தேவனுடைய கிருபை வேண்டும்.

குழப்பத்தின் மத்தியில் ஆசீர்வாதம்

“நான் இந்த குழப்பத்தினுள் வந்து விட்டேன். எனவே நான் இதைவிட்டு வெளியேறிவிடுகிறேன்” என நான் சில வேளைகளில் எண்ணுவதுண்டு. நான் கிருபையின் தேவன் மீது நம்பிக்கையாயிருந்தும், எனக்குத்தகுதியிருக்கும் போது மட்டுமே தேவனுடைய உதவி எனக்குக் கிட்டும் என சில வேளைகளில் நான் நினைக்கும்படி தூண்டப்படுகிறேன்.

தேவன் முதலாவதாக யாக்கோபைச் சந்தித்தவிதம் இதற்கு ஓர் அழகான எடுத்துக்காட்டு, இந்த எண்ணத்தை உண்மையற்றதாக்குகிறது.

 யாக்கோபு தன் வாழ்நாளில் பெரும்பகுதியை தன் வாழ்வை மாற்றுவதற்கு முயற்சிப்பதில் செலவிடுகின்றான். அவன் இரண்டாவது மகனாகப் பிறக்கின்றான். ஆனால், அந்த நாட்களில் தந்தையின் ஆசீர்வாதம் மூத்தவனுக்குத்தான் சேரும். மூத்தவன் தான்’ செழிப்பான வாழ்வைப் பெறுவான் என நம்பப்பட்டது.

எனவே யாக்கோபு தன்னுடைய தந்தையின் ஆசீர்வாதத்தை எப்படியாகிலும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துச் செயல்படுகின்றான். ஏமாற்றுவதன் மூலம் அதில் வெற்றியும் பெறுகின்றான். தன்னுடைய சகோதரனுக்குள்ள ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்கின்றான் (ஆதி. 27:19-29).

ஆனால், அதன் விளைவாக குடும்பம் பிரிக்கப்படுகிறது. யாக்கோபு கோபத்திலிருக்கும் தன்னுடைய சகோதரனிடமிருந்து தப்பி ஓடுகிறான் (வச. 41-43). இரவு வந்த போது (28:11) யாக்கோபு ஓர் ஆசீர்வாதமான வாழ்க்கையிலிருந்து தான் எத்தனை தூரத்திலிருக்கின்றான் என்பதை உணர்ந்திருப்பான்.

அங்கு தான் யாக்கோபு தான் செய்து வந்த எத்தனங்களையெல்லாம் தள்ளிவிட்டு தேவனைச் சந்திக்கின்றான். தேவன் அவனை ஆசீர்வதிக்க வேண்டுமாயின் தீவிரமான திட்டங்கள் தேவையில்லை என்பதை அவனுக்குத் காண்பிக்கின்றார். அவன் உலகப்பிரகாரமான செல்வங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு தேவனிடம் வந்துள்ளான். உலக செல்வங்களையெல்லாம் விட மேலான ஒரு நோக்கத்தை கண்டு கொண்டு (வச. 14) அவனை விட்டு என்றும் நீங்காத தேவனைப் பற்றிக் கொண்டான் (வச. 15).

இது யாக்கோபு தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்துக் கற்றுக்கொண்ட பாடம்.

இது நமக்கும் தான். நாம் எத்தனையோ மன வருத்தங்களைச் சுமந்து கொண்டிருக்கலாம். தேவன் நம்மை விட்டு தூர இருப்பதாக நினைக்கலாம். ஆனால், அவர் நம் அருகிலேயே இருக்கின்றார். அவர் நம்மை அருமையாக வழிநடத்தி, நம் குழப்பங்களிலிருந்து வெளியேற்றி அவருடைய ஆசீர்வாதத்திற்குள் கொண்டு வருகின்றார்.

நம்முடைய பாதுகாப்பான இடம்

என்னுடைய முதல் வேலையை நான் ஓர் உணவகத்தில் ஆரம்பித்தேன். ஒரு சனிக்கிழமை மாலையில் ஒரு மனிதன் எங்கள் உணவகம் அருகிலேயே நின்று கொண்டிருந்தான். பின்னர் நான் வேலையிலிருந்து வெளியே வருகின்ற நேரம் எது என்று அவன் என்னிடம் கேட்டான். அது எனக்கு சற்று பயமாக இருந்தது. நேரமாகிய போதும் அவன் பொரியல்களையும், ஒரு பானத்தையும் கட்டளையிட்டான். மேலாளராலும் அவனை வெளியேற்ற முடியவில்லை. நான் மிக அதிக தூரத்திலிருந்து வராவிடினும், என்னுடைய வீட்டிற்குச் செல்ல இரண்டு இருண்ட வாகன நிறுத்தும் இடங்களையும், ஒரு பரந்த மணல்வெளியையும் கடந்து செல்லவேண்டும். கடைசியாக நடு இரவு நேரத்தில் நான் அலுவலகத்திலுள்ள தொலைபேசியில் பேசச் சென்றேன்.

தொலைபேசியில் என்னோடு தொடர்பு கொண்ட என்னுடைய தந்தை, தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து ஐந்து நிமிடத்திற்குள் என்னை அழைத்துச் செல்ல வந்துவிட்டார்.

என்னுடைய தந்தை எப்படியாயினும் அந்த இரவில் வந்து உதவுவார் என்று எனக்கிருந்த உறுதி, சங்கீதம் 91ல் நாம் வாசிக்கின்ற உத்தரவாதத்தை நினைவுபடுத்தியது. நம் பரலோகத் தந்தை எப்போதும் நம்மோடிருக்கின்றார். நாம் குழப்பத்திலோ, பயத்திலோ அல்லது தேவையிலோ இருக்கும் போது நம்மை பாதுகாக்கின்றார். நம்மீது கரிசனையுள்ளவராயிருக்கின்றார். “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன்” (சங். 91:5) என்று கூறுகின்றார். அவர் நாம் பாதுகாப்பாக ஓடி ஒதுங்குகின்ற இடம் மட்டுமல்ல, அவர் நம்முடைய தங்கும் இடம் (வச. 1) நாம் அடைக்கலமாகத் தங்கிக்கொள்ளும் கன்மலையாயிருக்கின்றார் (வச. 2).

நம்முடைய பயம், அபாயம், அல்லது நிலையற்ற நேரங்களில், தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்பி அவரை நோக்கிக் கூப்பிடும் போது, அவர் நமக்கு மறு உத்தரவு அருளிச் செய்து, ஆபத்தில் நம்மோடிருந்து நம்மைத் தப்புவிக்கின்றவராயிருக்கிறார் (வச. 14-15). தேவன் நமக்குப் பாதுகாப்பான தங்குமிடமாயிருக்கிறார்.

விளம்பரப்படுத்தியது போல

ஒரு விடுமுறையின் போது என் கணவனும், நானும் ஜார்ஜியாவிலுள்ள சட்டஹீச்சி நதியில், தட்டையான படகில் பயணம் செய்ய பதிவு செய்தோம். அந்த பயணத்திற்கும், சூரிய வெளிச்சத்திற்கும் ஏற்ற உடைகளையணிந்து, ஓர் அகலமான தொப்பியையும் வைத்துக்கொண்டேன். விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்ததற்கு மாறாக, இந்த பயணத்தில் பாறைகளில் செங்குத்தாக விழுகின்ற நீரிலும் பயணம் செய்யவுள்ளோம் எனத் தெரிந்ததும் நான் மறுப்பு தெரிவிக்க ஆரம்பித்தேன். ஆனால் நல்ல வேளையாக, இத்தகைய பயணத்தில் அனுபவம் வாய்ந்த ஒரு தம்பதியினரோடு நாங்கள் பயணம் செய்தோம். அவர்கள் என்னுடைய கணவணுக்கு பயணித்தலின் அடிப்படையைக் கற்றுக் கொடுத்ததோடு, எங்களைப் பத்திரமாக கரை சேர்ப்பதாகவும் வாக்களித்தனர். எனக்குத் தரப்பட்ட உயிர்காப்பு உடைக்காகவும் (Life Jacket) நன்றி சொல்லிக் கொண்டேன். நாங்கள் அந்த நதியின் சகதியான கரையை அடையும் வரை நான் பதறிக்கொண்டு அந்தப் படகிலிருந்த பிளாஸ்டிக் கைப்பிடியை இறுகப் பற்றிக் கொண்டேன். நான் கரையில் கால் வைத்ததும் என்னுடைய உடையிலிருந்த நீரைப் பிழிந்து வெளியேற்றினேன். என்னுடை கணவனும் எனக்குதவினார். இந்த பிரயாணம் அவர்கள் விளம்பரத்தில் கொடுத்தது போல இல்லாமலிருந்தாலும் நாங்கள் நன்கு மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டோம்.

அந்த பிரயாணக் குறிப்பில், ஒரு முக்கியமான அம்சத்தைப் பற்றிய அறிவிப்பு விடுபட்டிருந்ததைப் போலில்லாமல், இயேசு தன் சீடர்களுக்கு வரப்பேகிற கடினமான பயணத்தைக் குறித்து வெளிப்படையாக எச்சரித்திருந்தார். இயேசு அவர்களிடம் துன்பப்படுத்தப்படுவீர்கள். சாவுக்கும் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள் எனவும், இயேசு மரிக்கப்போகின்றார், மீண்டும் உயிர்தெழுவார் எனவும் தெரிவித்திருந்தார். அவர் தம்மைக் குறித்து நம்பிக்கைக்குரிய வார்த்தைகளைக் கொடுத்ததோடு, தான் அவர்களை ஒருவரும் மேற்கொள்ள முடியாத வெற்றிக்கும், அழியாத நம்பிக்கைக்கும் நேராக வழிநடத்துவதாகவும் உறுதியளித்தார் (யோவா. 16:33).

நாம் இயேசுவைப் பின்பற்றும் போது வாழ்வு எளிதாக இருக்குமாயின், அது மிகச் சிறந்ததாயிருக்குமே. ஆனால், அவர் சீடர்களிடம், அவர்களுக்கு உபத்திரவம் உண்டு என்று தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால், தேவன் அவர்களோடு இருப்பதாக வாக்களித்துள்ளார். துன்பங்கள் ஒருபோதும் தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தை வரையறுக்கவோ, குறைக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது ஏனெனில், இயேசுவின் உயிர்தெழுதல் நம்மை அழியாத வெற்றிக்கு நேராக வழிநடத்திக் கொண்டிருக்கின்றது.

“நேசிக்கத்தகுந்தது!”

“நேசிக்கத் தகுந்தவள்!” என்ற வார்த்தைகளை, காலையில் எழுந்து தயாராகிக்கொண்டிருந்த என் மகளிடமிருந்து வந்தன. எனக்கொன்றும் புரியவில்லை. தன்னுடைய உறவினர் ஒருவரிடமிருந்து பெற்ற தன்னுடைய மேல் சட்டையைத் சுட்டிக் காட்டினாள். அந்தத்ச் சட்டையின் முன் பகுதியில் இந்த வார்த்தைகளிருந்தன. “நேசிக்கத்தகுந்தவள்” என்று நான் அவளைக் கட்டித் தழுவிக்கொண்டேன். அவளும் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டாள். “நீ நேசிக்கத்தகுந்தவள்” என நான் மீண்டும் கூறினேன். அவளுடைய சிரிப்பு இன்னும் அதிகரித்தது. அவள் நகர்ந்து சென்றபோது இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே சென்றாள்.

நான் மிகச் சிறந்த தந்தையல்ல ஆனால் அந்த நேரத்தில் நான் சரியான தந்தையாகச் செயல்பட்டேன். தற்செயலாய் நடந்த அந்த அழகிய உரையாடலின் போது, என்னுடைய நிபந்தனையற்ற அன்பைப் பெற்ற என் மகளின் பிரகாசமான முகத்தைக் கவனித்தேன். அது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு சித்திரம் போலிருந்தது. அவளுடைய சட்டையிலிருந்த வார்த்தைகளும், அவளுடைய தந்தை அவளைக் குறித்து எண்ணியிருப்பதும் பொருந்தியிருக்கிறது என்பதை அவள் அறிவாள்.

நாம் அளவற்ற அன்பினைக் கொண்டுள்ள ஒரு தந்தையால் நேசிக்கப்படுகிறோம் என்பதை நம்மில் எத்தனை பேர் நம் இருதயத்தில் உணர்ந்திருக்கின்றோம்? சிலவேளைகளில் இந்த உண்மையோடு நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். இஸ்ரவேலரும் அப்படியே உணர்ந்தனர். அவர்களுடைய சோதனைகளின் போது தேவன் அவர்களை நேசிக்கவில்லை என்று எண்ணினர். ஆகையால், எரேமியா 31:3ல் தீர்க்கதரிசி, தேவன் அவர்களுக்கு முன்பு கூறியிருந்ததை நினைவுபடுத்துகின்றார். “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்” என்று தேவன் விளம்பியுள்ளார். நாமும் இத்தகைய நிபந்தனையற்ற அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும் நம்முடைய காயங்கள், ஏமாற்றங்கள், தவறுகளினால் நாம் நேசிக்கப்பட முடியாதவர்கள் என்று நினைக்கிறோம். தேவனுடைய கரங்கள் ஒரு நேர்த்தியான தந்தையின் கரங்கள், அவருடைய அன்பிற்குள் இளைப்பாறும்படி நம்மை அழைக்கின்றன.

விமர்சனம் செய்வோரை அமைதிப்படுத்துதல்

வருடாந்திர சமுதாய நிகழ்வுகளை நடத்தும் ஒரு குழுவில் இணைந்து நான் வேலை செய்தேன். அந்த நிகழ்வுகள் வெற்றியாக முடியவேண்டும் என்பதற்காக பதினொரு மாதங்களாக அநேகக் காரியங்களைத் திட்டமிட்டோம். நாங்கள் நாளையும், இடத்தையும் தேர்ந்தெடுத்தோம். நுழைவுக் கட்டணத்தை நிர்ணயித்தோம். உணவு பரிமாறுவதிலிருந்து ஒலிபெருக்கி வல்லுனர்வரையும் அனைத்தையும் தேர்ந்தெடுத்தோம். அந்நாள் நெருங்குகையில் பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், அவர்களை வழிநடத்தவும் முயன்றோம். நிகழ்வுக்குப் பின்னர் கருத்துக்களைச் சேகரித்தோம். சிலர் பாராட்டினர். சிலவற்றைக் கேட்பதற்கே கடினமாயிருந்தது. அதில் பங்குபெற்றவர்களில் உற்சாகத்தையும் கண்டோம், குறைகளையும் கேட்டறிந்தோம். எதிர்மறையான கருத்துக்களைக் கேட்கும்போது ஊக்கமிழந்து இந்த வேலையையே விட்டுவிடலாமா என்று கூட எண்ணினோம்.

நெகேமியா ஒரு குழுவை ஏற்படுத்தி எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டியபோது அவரையும் விமர்சனம் செய்தனர். அவரையும் அவரோடு பணி செய்தவர்களையும் பரியாசம் செய்தனர். “ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும்” (நெகே. 4:3) எனப் பரியாசம் செய்தனர். அதற்கு நெகேமியாவின் பதில், என்னைப் பரியாசம் செய்பவர்களைக் கையாளுவதற்கு எனக்குதவியது. பரியாச வார்த்தைகளைக் கேட்டுச் சோர்வடையவோ அல்லது அவர்களுடைய வார்த்தைகளுக்கு மறுப்புத் தெரிவிக்கவோ முயற்சிக்காமல், நெகேமியா தேவனுடைய உதவியைக் கேட்கின்றான். பரியாச வார்த்தைகளுக்கு நேரடியாக பதிலுரைப்பதை விட்டுவிட்டு, தேவனிடம் தன் ஜனங்கள் அவமதிக்கப்படுவதைக் கேட்டு அவர்களைப் பாதுகாக்குமாறு வேண்டுகின்றார் (வச. 4) அவமதிப்புக்குள்ளான தன் ஜனங்களை தேவனுடைய பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டு, அவனும் அவனோடிருந்தவர்களும் தொடர்ந்து “முழுமனதோடு” அலங்க வேலையில் ஈடுபட்டனர் (வச. 6).

நம்முடைய வேலையை விமர்சிக்கும் வார்த்தைகளால் நாம் குழப்பமடையத் தேவையில்லை என்பதை நெகேமியாவிடமிருந்து கற்றுக் கொள்கின்றோம். நாம் நிந்திக்கப்படும்பொழுது அல்லது கேலி செய்யப்படும்போது, காயப்பட்டதாலோ அல்லது கோபத்தாலோ அவர்களுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக ஜெபத்தோடு தேவனிடம் சோர்ந்துபோகாதிருக்க பெலன் தருமாறு கேட்போமாகில் முழுமனதோடு நம் வேலையைத் தொடரமுடியும்.

பணிவான அன்பு

பெஞ்சமின் பிராங்க்ளின் வாலிபனாக இருந்தபோது, பன்னிரண்டு நற்குணங்கள் அடங்கிய ஒரு பட்டியலைத் தயாரித்தார். தன்னுடைய வாழ்க்கையில் அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டுமென அவர் விரும்பினார். இந்தப் பட்டியலைத் தன் நண்பனிடம் காண்பித்தபோது, அவன் அதனோடு பணிவையும் சேர்த்தான். பிராங்க்ளினுக்கு அது விருப்பமாயிருந்தது. அத்தோடு அவருடைய நண்பன் அந்தப் பட்டியலிலுள்ள ஒவ்வொரு நற்பண்பையும் அடைய சில வழிமுறைகளையும் கொடுத்து உதவினான். பிராங்க்ளினுடைய சிந்தனையில் பணிவிற்கு தனக்கு மாதிரியாக இயேசுவையே பின்பற்ற வேண்டும் எனத் தோன்றியது.

பணிவிற்கு முழுமையான எடுத்துக் காட்டாக இயேசு விளங்கினார். தேவனுடைய வார்த்தைகள் சொல்வது, “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்” (பிலி. 2:5-7)

இயேசு மிக உன்னதமான ஒரு பணிவைச் செயல்படுத்தினார். பிதாவோடு என்றும் இருப்பவராயிருந்தும் அன்பினால் சிலுவைமட்டும் தன்னைத் தாழ்த்தினார். தன்னுடைய சாவின் மூலம், தன்னை ஏற்றுக் கொள்ளுபவர் எவரையும் அவருடைய சமுகத்தின் மகிழ்ச்சிக்குள் கொண்டு செல்வதையே அவர் தேர்ந்து கொண்டார்.

தேவனுடைய பணியை நாம் பின்பற்றுபவர்களாயின், பிறருக்குச் சேவை செய்வதன் மூலம் நம் பரலோகத்தந்தைக்குப் பணிவிடை செய்கிறவர்களாவோம். பிறரின் தேவைகளில் நாம் அவர்களுக்கு உதவும்படி நம்மை அர்ப்பணிக்கும் பிரமிக்கதக்க அழகினை நாம் பற்றிக் கொள்ளும்படி இயேசுவின் இரக்கம் நமக்குதவுகிறது. “நான் முதலில்” என்றிருக்கின்ற இந்த உலகில் பணிவோடு வாழ்வது என்பது எளிதானதல்ல. ஆனால், நாம் நமது இரட்சகரின் அன்பினைச் சார்ந்து இருப்போமாகில், அவரைப் பின்பற்றத் தேவையான யாவற்றையும் அவர் நமக்குத் தருவார்.

பெயர் சொல்லி அழைத்தார்

மிக அதிகமாக பார்வையாளரின் கவனத்தை ஈர்க்கும் வார்த்தையென்னவெனின், அது அவர்களுடைய பெயரே என்பது விளம்பரதாரர்களின் முடிவு. எனவே இங்கிலாந்து தேசத்திலுள்ள ஒரு நிறுவனம், தனிப்பட்ட நபரின் பேரில் அவர்களுடைய நேரடி வர்த்தக சேவை மூலம் விளம்பரம் செய்யத் தொடங்கியுள்ளது.

நாம் நம்முடைய பெயரை டெலிவிஷனில் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியடைவோம். ஆனால், நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நம்மை அன்போடு அழைப்பதைப் போலல்லாமல், இங்கு பெயர்கள் அழைக்கப்படுகின்றன.

சிலுவையில் அறையப்பட்டு மரித்த இயேசுவின் உடலை வைத்திருந்த கல்லறையின் அருகில் மகதலேனா மரியாள் பெயரைச் சொல்லி இயேசு அழைத்தபோது (யோவா. 20:16) அவளுடைய கவனமெல்லாம் ஒரு கணம் நின்று போனது. அந்த ஒரே வார்த்தையில், தான் நேசித்துப் பின்பற்றிய போதகரை அடையாளம் கண்டுகொண்டாள். அவள் நம்ப முடியாத மகிழ்ச்சியோடு திரும்பிப்பார்க்கின்றாள். ஏற்கனவே தெரிந்திருந்த அனுபவத்தோடு அவளுடைய பெயரை அவர் சொன்னபோது,அவளுக்குச் சந்தேகமின்றி அவள் நன்கு அறிந்திருந்த இயேசு உயிரோடிருக்கிறார். மரித்தோரிடம் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

மரியாள் இயேசுவோடு ஓர் அரிதான, சிறப்பான நேரத்தைப் பகிர்ந்து கொண்டாலும் ஒவ்வொருவரும் தனித்தனியே தேவனால் நேசிக்கப்படுகின்றோம். இயேசு மரியாளிடம் தான் தன் தந்தையிடம் ஏறிப்போவதாகக் கூறுகின்றார் (வச. 17) மேலும் அவர் தன் சீடர்களிடம் நான் அவர்களைத் தனியே விட்டுவிடுவதில்லை (யோவா. 14:15-18) என்கின்றார். தேவன் தன்னுடைய பிள்ளைகளுக்குள்ளே வாசம்பண்ணும்படி பரிசுத்த ஆவியானவரை அவர்களுக்கு அனுப்புகின்றார் (அப். 2:1-13).

தேவனைப் பற்றிய உண்மை மாறுவதில்லை. அன்றும் இன்றும் தேவன் தான் நேசிக்கின்றவர்களை அறிந்திருக்கின்றார் (யோவா. 10:14-15) அவர் நம்மை பெயர் சொல்லி அழைப்பவர்.