வகை  |  odb

விடாமுயற்சியோடு சமாதானத்தைத் தேடல்

தொடர்ந்து வலியினால் போராடிக் கொண்டிருக்கும்போதும், ஒரு சிறிய அசைவு கூட எதிரியின் கடுமையான தாக்குதல் போன்று வேதனையைத் தரும் போதும், நான் தொடர்ந்து தேவன் மீதுள்ள நம்பிக்கையை விடவில்லை. பிரச்சனை ஒன்று, என்னை வலதுபுறம் குத்துகிறது, பிரச்சனை இரண்டு என்னைப் பின்னாலிருந்து தள்ளுகிறது. பிரச்சனை மூன்று என் மூக்கை; குத்துகிறது. இப்படியே எனது பெலன் குன்றிய போது, எங்காகிலும் ஓடி ஒளிந்து கொள்வதே மேலாகத் தோன்றியது. ஆனாலும் என்னுடைய சூழலை மாற்றுவதோ அல்லது என் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதோ, இவையெதுவுமே என்னை வலியிலிருந்து தப்புவிக்கக் கூடாதிருந்தமையால் மெதுவாக தேவனைச் சார்ந்து வாழக் கற்றுக் கொண்டேன்.

எனக்கு ஊக்கமும், ஆறுதலும், தைரியமும் தேவைப்பட்டபோது, நான் ஜெபத்தோடு சங்கீதங்களை வாசிக்க ஆரம்பித்தேன். சங்கீதக்காரன் உண்மையாய்த் தன்னுடைய நிலைமையை தேவனிடம் சமர்ப்பிக்கின்றார். தாவீது ராஜா, தன்னுடைய மகன் அப்சலோம் தன்னைக் கொன்று விட்டு
ராஜ்ஜிய பாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தபோது, அவனிடமிருந்து ஓடி வந்தபோது பாடிய சங்கீதம் எனக்கு மிகவும் விருப்பமானது. தாவீது தன்னுடைய வேதனை நிறைந்த சூழலைப்பற்றி புலம்பியிருந்தாலும் (சங். 3:1-2) அவர் தேவனை நம்பி, அவருடைய பாதுகாப்பை நம்பி வந்து, தன்னுடைய ஜெபத்திற்கு பதிலளிக்குமாறு கேட்கின்றார். (வச. 3-4) தனக்கு என்ன நடக்குமோ என்று பயந்து அல்லது வருந்தி அவர் தன் நித்திரையை இழக்கவில்லை. ஏனெனில் அவர், தேவன் தன்னைப் பாதுகாத்து வழி நடத்துவார் என நம்பினார் (வச. 5-8).

உடல், மனரீதியான வேதனைகள் எதிரியைப் போன்று நம்மைத் தாக்கலாம். நாம் சோர்ந்து போய், இந்தப் போராட்டத்தின் முடிவு என்னவாகும் என்று தெரியாமல் கைவிட்டு விடவும் அல்லது அங்கிருந்து தப்பி விடவும் எண்ணலாம். ஆனால் தாவீதைப் போன்று தேவன் நம்மைத் தூக்கி விடுவார், அவருடைய மாறாத அன்பிற்குள்ளும், பிரசன்னத்திற்குள்ளும் நம்மை இளைப்பாறச் செய்வார் என்று தேவனை நம்பக் கற்றுக் கொள்வோம்.

தொலைதூரத்திலுள்ள தேசம்

எமி கார்மைக்கேல் அம்மையார் (1867-1951) இந்தியாவில் அனாதைப் பெண் குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களுக்கு புதிய வாழ்வையளித்தது யாவருக்கும் தெரிந்திருக்கும். இந்த கடின வேலையின் மத்தியில் ‘‘தரிசன நேரம்” என்று அவர் அழைக்கும் காரியத்திற்கும் நேரம் ஒதுக்கியிருந்தார். அவர் எழுதிய ‘‘கோல்ட் பை மூன்லைட்” என்ற புத்தகத்தில் ‘‘ஒரு நெரிசல் மிக்க நாளில் அந்த தொலை தூர தேசத்தை ஒரு துளியளவு தான் பார்க்க முடிந்தது. நாங்கள் இன்னமும் சாலையிலேயே அடைபட்டு நின்று கொண்டிருக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தேவனுக்கு விரோதமாக கலகம் செய்த அவருடைய ஜனங்கள் மீண்டும் தேவனிடம் திரும்புவதைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி சொல்கின்றார், ‘‘உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்” (ஏசா. 33:17). தற்கால சூழ்நிலையிலிருந்து நம் கண்களை உயர்த்தி இந்த தூர தேசத்தைக் கண்டு, நித்திய வாழ்வைப் பற்றிய நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வோம். கடினமான வேளைகளில் நம்முடைய வாழ்வை அவருடைய கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்படியாக நம்மை பெலப்படுத்தி நமக்கு நம்பிக்கையைத் தருகின்றார். ‘‘கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்” (வச. 22)

ஒவ்வொரு நாளையும் நாம் ஊக்கமிழந்தவர்களாகப் பார்க்கப் போகின்றோமா? அல்லது நம்முடைய கண்களை உயர்த்தி இந்த ‘‘தூர தேசத்தையும்” நம்முடைய மகிமை பொருந்திய கர்த்தரையும்” (வச. 21) நோக்கிப் பார்க்கப் போகின்றோமா?

எமி கார்மைக்கேல் அம்மையார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் செலவிட்டு, மிகவும் தேவையுள்ள இளம்பெண்களுக்கு உதவினார். இதனை எப்படி செய்ய முடிந்தது? ஒவ்வொரு நாளும் தன் கண்களை இயேசுவின் மீது வைத்து, தன்னுடைய வாழ்வை இயேசுவின் பாதுகாப்பில் வைத்தார். நாமும் அவ்வாறு செய்ய முடியும்.

திரும்பி வர முடியாத எல்லை

இது ஒரு நதியைக் கடப்பது போன்று எளிதானதல்ல. சட்டப்படி, எந்த ஒரு ரோம இராணுவ அதிகாரியும் ஓர் ஆயுதமணிந்த படையினரை ரோம சாம்ராஜ்ஜியத்திற்குள் வழி நடத்திச் செல்ல முடியாது. கி.மு. 49ல் ஜூலியஸ் சீசர் அவருடைய பதின்மூன்றாம் இராணுவப்படையை ரூபிக்கான் நதியைத் தாண்டி இத்தாலிக்குள் வழி நடத்தினார். இது ஒரு தேச துரோகச் செயல். சீசரின் அந்த முடிவின் விளைவு மாற்ற முடியாததொன்றாகி விட்டது. இதன் விளைவாக பல ஆண்டுகள் உள்நாட்டு யுத்தம் நடந்தது. பின் ரோம இராணுவ பிரதான அதிகாரி சக்ரவர்த்தியானார். இன்று வரை ‘‘ரூபிக்கானை கடத்தல்” என்ற சொற்றொடர் மீண்டும் திரும்பி வர முடியாத எல்லையைக் குறிப்பிட பயன்படும் ஓர் உருவகமாயுள்ளது.

சில வேளைகளில் நாம் பிறரிடம் பேசும் சில வார்த்தைகளால் நம் உறவின் ரூபிக்கானைத் தாண்டி விடுகிறோம்.  பேசிய வார்த்தைகள் மீண்டும் வாங்கிக் கொள்ள முடியாதவை. அந்த வார்த்தைகள் நம் உதட்டிலிருந்து வெளி வந்ததும் ஓர் உதவியைச் செய்யலாம். ஆறுதலைக் கொடுக்கலாம் அல்லது சீசர் ரோம சாம்ராஜ்ஜியத்திற்குள் படையுடன் சென்றதைப் போன்று மாற்ற முடியாத பாதிப்பை ஏற்படுத்தலாம். யாக்கோபு வார்த்தைகளைக் குறித்து மற்றொரு விளக்கத்தைத் தருகின்றார். ‘‘நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைபடுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்தி விடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது (யாக். 3:6).

நாம் யாரிடமாகிலும் ரூபிக்கான் எல்லையைத் தாண்டி விட்டோம் என நினைப்போமேயாகில் அவர்களுடைய மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தேவனிடமும் மன்னிப்பைப்
பெற்றுக்கொள்ள வேண்டும். (மத். 5;:23-24 ; 1 யோவான் 1:9). இதையும் விட சிறந்ததென்னவெனின் தேவனுடைய ஆவியானவரைச் சார்ந்து வாழ்தல். பவுலின் சவால்களைக் கேட்போமாகில், ‘‘அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவுசொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” (கொலோ. 4:6) நம்முடைய வார்த்தைகள் தேவனைக் கனப்படுத்துவதாகவும் மற்றவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதாயும் அமைய வேண்டும்.

தேவனுடைய வழி நடத்தலுக்கு நம்முடைய பதில்

2015 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதத்தில் என்னுடைய வீட்டிலிருந்து இரண்டு மணி நேர பயணத் தொலைவிலுள்ள ஒரு பல்கலைகழகத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தேன். என்னுடைய பட்டமளிப்பு முடிந்து மீண்டும் நான் வீட்டிற்கு வர இயலாததென உணர்ந்தேன். என் சிந்தனைகள் வட்டமிட்டன. எப்படி வீட்டை விட்டுச் செல்வது? என்னுடைய குடும்பம்? என்னுடைய தேவாலயம்? ஒரு வேளை தேவன் என்னை வேறொரு மாநிலம் அல்லது தேசத்திற்கு அழைத்தால் என்னவாகும்? என என் சிந்தனையில் ஓடியது.

மோசேயிடம் தேவன் ‘‘நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா” என்று சொன்னபோது மோசே பயந்தான் (யாத். 3:10). நானும் மிகவும் பயந்தேன். நான் என்னுடைய வசதி எல்லையை விட்டுச் செல்ல விரும்பவில்லை. ஆனால் மோசே கீழ்ப்படிந்து தேவனைப் பின்பற்றினான். ஆனாலும் அதற்கு முன் தேவனை வினாவவும், வேறொருவரை தனக்குப் பதிலாக அனுப்பும்படியும் கேட்டபின் தான், தேவனுக்குக் கீழ்ப்படிந்தான் (வச. 11-13; 4:13).

மோசேயின் எடுத்துக்காட்டிலிருந்து, நமக்கொரு தெளிவான அழைப்பு இருக்கும் பொழுது நாம் எதைச் செய்யக் கூடாதென்பதைக் கற்றுக்கொள்கிறோம். ஆனால் நாம் சீடர்களைப் போல இருக்க முயற்சிப்போம். இயேசு அவர்களை அழைத்த போது, அவர்கள் யாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள் (மத். 4:20-22; லூக். 5:28). பயம் வருவது இயல்புதான். ஆனால் தேவத் திட்டத்தை நம்பலாம்.

வீட்டை விட்டு அதிகத் தொலைவில் செல்வதென்பது கடினமாகத்தானிருந்தது. ஆனால் நான் தொடர்ந்து தேவனைத் தேட ஆரம்பித்தபோது, அவர் எனக்கு கதவுகளைத் திறந்தார். அது, நான் தேவன் குறித்த இடத்தில்தான் இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தியது.

வசதி எல்லையிலிருந்து நம்மை வெளியேற்றி, வழி நடத்தப்படும்போது நாம் மோசேயைப் போன்று தயக்கத்தோடு செல்லலாம் அல்லது சீடர்களைப் போன்று மனப்பூர்வமாகச் செல்லலாம். சில வேளைகளில் நம்முடைய வசதி வாழ்க்கையை விட்டு சில நூறு மைல்கள் அல்லது ஆயிரம் மைல்கள் கூட செல்ல நேரலாம். அது எத்தனை கடினமானதாயினும் தேவனைப் பின்பற்றுவது மதிப்பு மிக்கது.

தேவனின் கைரேகை

லீகன் ஸ்டீவன்ஸ் தன்னுடைய சகோதரன் நிக்கோடு சேர்ந்து மலையேறுவதில் ஆர்வமுள்ளவள். அவர்கள் இருவரும் மலையேறுவதில் அனுபவமிக்கவர்கள். வட அமெரிக்காவிலுள்ள மிக்கின்லெ என்ற மிக உயரமான மலையுச்சியை அடைந்தவர்கள். ஜனவரி 2008ல் கொலொரடோ மலையில் ஏற்பட்ட ஒரு பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் நிக் காயமடைந்தான், இருபது வயது நிரம்பிய லீகன் மரித்துப் போனாள். பின் நாட்களில் நிக், தன் சகோதரி லீகனின் பையொன்றிலிருந்து பயணக் குறிப்பொன்றைக் கண்டெடுத்தான். அதின் உள்ளடக்கத்தை வாசித்தபோது அவன் மிகவும் ஆறுதலையடைந்தான். அது முழுவதும் தியானங்கள், ஜெபங்கள், தேவனை மகிமைப்படுத்தல் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. அதில் ‘‘நான் தேவனுடைய கரத்தால் செய்யப்பட்ட ஒரு கலை. ஆனால் தேவன் அதை இன்னமும் முடிக்கவில்லை. இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கின்றார்.... நான் என்மீது தேவனின் விரல் ரேகைகளைப் பதியப் பெற்றிருக்கிறேன்.  என்னைப் போல மற்றொருவர் ஒருபோதும் இருக்க முடியாது... என்னுடைய இந்த வாழ்வில் எனக்கொரு வேலையுள்ளது. அதனை வேறொருவர் நிறைவேற்ற முடியாது” என எழுதியிருந்தார்.

லீகன் இந்த உலகில் உடல் ரீதியாக இல்லையெனினும் அவள் விட்டுச் சென்ற பாரம்பரியம், அவளுடைய பயணக் குறிப்புகள் மற்றும் சவால்கள் யாவும் இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன.

நாம் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்டுள்ளோம். (ஆதி. 1:26) ஒவ்வொருவரும் ‘‘தேவனுடைய கரத்தினால் செய்யப்பட்ட கலை”. பவுல் அப்போஸ்தலன் கூறுவது போல. ‘‘நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார் (எபே. 2:10).

தேவன் நம்மை அவர் குறித்த நேரத்தில் அவருடைய சொந்த வழியில் பிறருக்கு உதவும்படி பயன்படுத்துகின்றார். எனவே நாம் அவரை மகிமைப்படுத்துவோம்.

வாக்குத்தத்தங்களில் உறுதியாய் நிற்றல்

என்னுடைய சிநேகிதியின் சகோதரன் அவளிடம் (அவர்கள் இருவரும் குழந்தைகளாயிருந்த போது) ஒரு குடையினால் அவளைத் தாங்க முடியும் எனவும், அவள் நம்பினால் செய்து பார்க்கலாம் எனவும் உறுதியளித்தான். அவளும் நம்பிக்கையோடு ஒரு கிடங்கின் கூரையிலிருந்து குடையைப் பிடித்து கொண்டு குதித்து, கீழே தரையில் மோதி சிறிய தலைக் காயத்தை ஏற்படுத்திக் கொண்டாள்.

தேவன் நமக்கு வாக்களித்ததை நிறைவேற்றுவார். ஆனால் நாம் ஒரு வாக்குத்தத்தத்தை தேவன் நிறைவேற்றும்படி கேட்கும்போது, நாம் தேவனுடைய உண்மையான வார்த்தையில்தான் நிற்கின்றோமா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தேவன் வாக்களித்ததைத் தருவார் என்ற உறுதியைப் பெற முடியும். நம்பிக்கை மட்டும் தனித்திருந்தால் வல்லமையற்றது. ஆனால் அது தேவனுடைய தெளிவான உறுதியான வாக்கின் மீது நிற்கும்போது மட்டுமே அதைச் செயல்படுத்த முடியும்.

இங்கே ஒரு நிகழ்வைப் பார்ப்போம். ‘‘நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார்” (யோவா. 15:7-8). இவை, தேவன் நாம் உச்சரிக்கும் எந்த ஜெபத்திற்கும் பதிலளிப்பார் என்பதாகக் கூறும் வார்த்தைகளல்ல.  மாறாக, பவுல் அப்போஸ்தலன் ‘‘ஆவியின் கனிகள்” (கலா. 5:22-23) என்று குறிப்பிடும் கனிகளை நம் வாழ்வில் தந்து நீதியாய் வாழ நாம் கொண்டுள்ள ஏக்கங்களை அவர் நிறைவேற்றுவார் எனக் கூறும் ஒரு வாக்குத்தத்தமாகும். நாம் பரிசுத்தப்படும்படி தாகத்தோடும், பசியோடும் தேவனிடம் கேட்கும்போது, தேவன் அதனை நிறைவேற்றத் தொடங்குவார். இந்த பரிசுத்தமாகுதல் ஒரு நாளில் நடைபெறும் காரியமல்ல. அதற்கு நேரமதிகமாகும். நம் உடல் வளர்ச்சியைப் போன்று ஆவியின் வளர்ச்சியும் படிப்படியாகத்தான் நடைபெறும். எனவே சோர்ந்துபோக வேண்டாம். தேவன் உன்னைப் பரிசுத்தப்படுத்தும்படி தொடர்ந்து கேள். அவருடைய வேளையில் அவருக்கு சித்தமான இடத்தில் அது உனக்காக நிறைவேற்றப்படும். தேவன் நிறைவேற்றாத காரியங்களை நமக்கு வாக்களிப்பதில்லை.

நெருக்கமாய் இருத்தல்

என்னுடைய மகளை பள்ளியில் விட்டுவிட்டு நீண்ட தூரம் நடந்து என் வீட்டிற்கு வரும் நேரத்தை, வேதாகமத்திலிருந்து சில வசனங்களை மனப்பாடம் செய்து கொள்ளப் பயன்படுத்திக் கொண்டேன். அந்தச் சில நிமிடங்களை தேவனுடைய வார்த்தைகளை என் மனதில் நினைத்துப் பார்க்க பயன்படுத்திக் கொள்ளும்போது அந்த வசனங்கள் என் மனதிற்குள் மீண்டும் இரவு நேரங்களில் வருவதுண்டு. அவை எனக்கு மிகுந்த ஆறுதலையும், ஞானத்தையும் தருவதாக அமைந்தன.

வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர் பிரவேசிக்குமுன், மோசே அவர்களை ஆயத்தப்படுத்துகின்றார். அவர்கள் தேவனுடைய கட்டளைகளையும் நியாயங்களையும் பற்றிக் கொள்ளுமாறு வற்புறுத்துகின்றார் (உபா. 6:1-2) அவர்கள் செழித்திருக்கும்படி இந்த வார்த்தைகள் அவர்களுடைய இருதயத்தில் இருக்க வேண்டும். அவைகளைக் குறித்து அவர்களின் பிள்ளைகளோடும் பேசி (வச. 6-7) போதிக்க வேண்டும். அவைகளை கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாகவும் வைக்க வேண்டும். (வச. 8) அவர்கள் தேவனுடைய போதனைகளை மறக்காமல் அதன்படி வாழ்ந்து தேவனை கனம் பண்ணி அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும்படி கூறுகின்றார்.

நீ இன்று தேவனுடைய வார்த்தைகளை எவ்வாறு வைத்திருக்கின்றாய்? ஒரு யோசனை என்னவெனில், வேதத்திலிருந்து ஒரு வசனத்தை எழுதி வைத்துக் கொண்டு, ஒவ்வொரு முறையும் கைகளைக் கழுவும்போதும் அல்லது உணவருந்தும் போதும் அந்த வசனத்தை வாசித்து அதை உன் மனதிற்குள் பதித்து வை. அல்லது படுக்கைக்குச் செல்லுமுன் வேதாகமத்திலிருந்து ஒரு சிறிய பகுதியை படிப்பதை அந்த நாளின் கடைசி செயலாக வைத்துக் கொள். இவ்வாறு வேத வசனங்களை நம் இருதயத்தில் வைத்துக்கொள்ள அநேக வழிகளுள்ளன.

ஆரம்பத்திற்கு முன்பு

‘‘தேவனுக்கு துவக்கமும் இல்லை முடிவும் இல்லை. அவர் எப்பொழுதும் இருக்கிறாரெனின் நம்மைப் படைப்பதற்கு முன் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவருடைய நேரத்தை எவ்வாறு செலவிட்டார்?” தேவனுடைய நித்திய வாழ்வைப் பற்றி விளக்கும் போது, ஒரு முன் யோசனையுள்ள ஞாயிறு பள்ளி மாணவன் இக்கேள்விகளைக் கேட்டான். நான் அவனிடம், இது சற்று விளங்கிக்
கொள்ளமுடியாத கருத்து என பதிலளித்தேன். ஆனால், சமீபத்தில் இக்கேள்விக்கான விடையை வேதாகமத்திலிருந்து கற்றுக் கொண்டேன்.

யோவான் 17ல் இயேசு பிதாவிடம் ஜெபிக்கும்போது ‘‘பிதாவே, உலகதோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தீர்” (வச. 24) எனக் குறிப்பிடுகிறார். இதில் இயேசு நமக்குப் பிதாவை வெளிப்படுத்துகின்றார். அவர் இவ்வுலகை படைத்து, அதை அரசாட்சி செய்யுமுன்னரே தேவன் தன் குமாரனை ஆவியில் நேசித்த ஒரு தந்தையாயிருந்தார். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது தேவன் தம்முடைய ஆவியை ஒரு புறாவைப் போல அனுப்புகின்றார். மேலும் ‘‘இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” (மத். 3:17) என்றும் சொல்கின்றார். தேவனின் அடிப்படைப் பண்பு இந்த வாழ்வு தரும் அன்பில் வெளிப்படுகின்றது.

தேவனைப் பற்றிய இந்த உண்மை நமக்கு எத்தனை அன்பையும், ஊக்கத்தையும் தருவதாகவுள்ளது. திருத்துவத்திலுள்ள பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் இம்மூவரும் ஒருவரிலொருவர் செலுத்தும் அன்பு தான் நாம் தேவனின் தன்மையைப் புரிந்து கொள்ளக்கூடிய முக்கிய கருத்தாகும். காலத்தின் துவக்கத்திற்கு முன்பாக பிதாவாகிய தேவன் என்ன செய்து கொண்டிருந்தார்? தன்னுடைய குமாரனை பரிசுத்த ஆவியின் மூலம் அன்பு செய்தார். தேவன் அன்பாகவேயிருக்கிறார்” (1 யோவா. 4:8). இந்தக் காட்சி நாம் இதனைப் புரிந்து கொள்ள உதவியாயிருக்கிறது.

நமது கண்ணோட்டத்தில் சிறிய மாற்றம்

முப்பது ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரிய குளிரை என்னுடைய பட்டணம் அனுபவித்தது. முடிவில்லாத பனியை மணிக்கணக்காக தோண்டியெடுத்ததால் என் தசைகளெல்லாம் வலியெடுக்க ஆரம்பித்தன. பயனளிக்காத முயற்சியால் சோர்வடைந்து என்னுடைய பூட்ஸ்சுகளை உதறிவிட்டு வீட்டினுள்ளே சென்ற போது, நெருப்பின் வெப்பத்தாலும், அதனைச் சுற்றியிருந்த என் குழந்தைகளாலும் வாழ்த்தப் பெற்றேன். வீட்டிலிருந்தபடியே ஜன்னல் வழியே பார்த்தபோது, அந்த குளிர்காலத்தினை நான் பார்த்த கோணம் முற்றிலும் மாறிப்போனது. இன்னமும் அதிக வேலையிருக்கிறது என்று காண்பதை விட்டுவிட்டு, நான் அந்தப் பனி, மரக்கிளைகளிலும், நிலப்பரப்பின் மீதும் வெண்மையாய் பரம்பியிருப்பதைப் பார்த்து மகிழ ஆரம்பித்தேன்.

சங்கீதம் 73ல் ஆசாபின் வார்த்தைகளை வாசிக்கும்போது, இதைப் போன்று, இன்னும் அதிக வருத்தத்தைத் தரக்கூடிய காலத்தைக் காண்கின்றோம். ஆரம்பத்தில் அவர், இவ்வுலகில் தவறிழைப்பவர்கள் செழித்திருப்பதைக் கண்டு புலம்புகிறார். பெருங்கூட்ட மக்களிடமிருந்து மாறுபட்டு, பிறருடைய நலனுக்காக வாழ்வதால் பயனென்ன என சந்தேகிக்கின்றார் (வச.13). ஆனால் அவர் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் நுழையும்போது, அவருடைய கண்ணோட்டம் மாறுகிறது (வச. 16-17). தேவன் இவ்வுலகையும் அதன் பிரச்சனைகளையும் திறம்படக் கையாளுவார் என்பதை நினைக்கின்றார். எனவே நாம் எப்பொழுதும் தேவனோடு இருப்பதே நல்லது என்கின்றார் (வச.28).

இவ்வுலகத்திலுள்ள தீராத பிரச்சனைகளை நாம் காணும்போது நாம் உறைந்துவிடுகிறோம். நாம் தேவனுடைய ஸ்தலத்தினுள் ஜெபத்தின் மூலம் பிரவேசித்து, நம்முடைய வாழ்வையும், நம்முடைய கண்ணோட்டத்தையும் மாற்றுகின்ற அவருடைய உண்மையைக் கண்டுபிடிப்போம். அது நம்மை பெலப்படுத்தும். அவருடைய நியாயத்தீர்ப்புகள் எப்பொழுதும் நம்முடையவற்றைக் காட்டிலும் மேலானவை. நம்முடைய சூழ்நிலைகள் மாறப் போவதில்லை. ஆனால், நம்முடைய கண்ணோட்டத்தை நாம் மாற்றிக் கொள்வோம்.