எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சிண்டி ஹெஸ் காஸ்பர்கட்டுரைகள்

கீழ்ப்படிதல் ஒரு தெரிந்தெடுப்பு

நெதர்லாந்தில் குளிர்காலம் அரிதாகவே நிறையப் பனியைக் கொண்டுவருகிறது, ஆனால் கால்வாய்கள் உறைந்து போகும் அளவுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். என் கணவர், டாம், அங்கு வளர்ந்து கொண்டிருந்தபோது, ​​அவரது பெற்றோருக்கு ஒரு குடும்ப சட்டம் இருந்தது: "குதிரையின் எடையைத் தாங்கும் அளவில் பனிக்கட்டி இல்லையென்றால், அதை விட்டு விலகி இருங்கள்". குதிரைகள் தங்கள் இருப்புக்கான தடயங்களை விட்டுச் செல்லும் என்பதால், டாம் மற்றும் அவரது நண்பர்கள் சாலையிலிருந்து கொஞ்சம் குதிரையின் சானத்தை எடுத்து அதை மெல்லிய பனிக்கட்டி மீது எறிந்து, குடும்பச் சட்டத்தை மீறி மேற்பரப்பில் மேலே ஏறிச் சென்றனர். அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை, அவர்கள் செயலை யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் கீழ்ப்படியவில்லை என்பதை அவர்கள் தங்கள் இதயங்களில் அறிந்திருந்தனர்.

கீழ்ப்படிதல் எப்போதும் இயல்பாக வருவதில்லை. கீழ்ப்படிவதா அல்லது வேண்டாமா என்ற விருப்பம், கடமை உணர்வு அல்லது தண்டனை பற்றிய பயத்திலிருந்தும் உருவாகலாம். ஆனால் நம்மீது அதிகாரம் உள்ளவர்களிடம் அன்பும் மரியாதையும் இருப்பதாலும் கீழ்ப்படிவதைத் தெரிவு செய்யலாம்.

யோவான் 14 இல், இயேசு தம் சீடர்களுக்கு அறைகூவல் விடுத்தார், "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்,. . . . என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான்” (வ. 23-24). கீழ்ப்படிவது எப்போதுமே எளிதான விருப்பம் அல்ல. ஆனால் நமக்குள் வாழும் ஆவியானவரின் வல்லமை, அவருக்குக் கீழ்ப்படிவதற்கான விருப்பத்தையும் திராணியையும் அளிக்கிறது (வ. 15-17). அவருடைய உதவியால், நம்மை மிகவும் நேசிப்பவரின் கட்டளைகளை நாம் தொடர்ந்து பின்பற்றலாம். இது தண்டனை பயத்தால் அல்ல, மாறாக அன்பினால்.

கிறிஸ்துவின் தன்மையை பிரதிபலித்தல்

மேஜையில் இரண்டு முகங்கள் தனித்து நின்றன. ஒன்று கசப்பான கோபத்தால் சுருங்கி, மற்றொன்று உணர்ச்சி வலியில் முறுக்கி இருந்தது. பழைய நண்பர்களின் சந்திப்பு இப்போது கோபத்தின் கூச்சலானது, ஒருத்தி தன் நம்பிக்கைகளுக்காக மற்றொருத்தியைத் திட்டினாள். முதல் பெண் உணவகத்தை விட்டு வெளியேறும் வரை தகராறு தொடர்ந்தது, இது மாற்றவளை அவமானத்தால் நிலைகுலைத்தது.

கருத்து வேறுபாட்டைச் சகித்துக்கொள்ள முடியாத காலத்தில் நாம் உண்மையில் வாழ்கிறோமா? இரண்டு பேர் ஒத்துப்போக முடியாது என்பதால் ஏதோவொன்று தீயது என்று அர்த்தம் இல்லை. கடுமையான அல்லது அடிபணியாத பேச்சு ஒருபோதும் ஏற்புடையதல்ல, மேலும் வலுவான நம்பிக்கைகள் கண்ணியத்தையும் இரக்கத்தையும் மிஞ்சக்கூடாது.

ரோமர்12, "ஒருவரையொருவர் கனம்பண்ணுகிறது" மற்றும் பிறருடன் "ஏகசிந்தையுள்ளவர்களாயிருப்பது" (வ.10, 16) எப்படி என்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கான அடையாளமான பண்பு, நாம் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பே என்று இயேசு சுட்டிக்காட்டினார் (யோவான் 13:35). பெருமையும் கோபமும் நம்மை எளிதில் தடம் புரளச் செய்யும் அதே வேளையில், நாம் பிறரிடம் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்பும் அன்பிற்கு நேர் மாறாகவும் இருக்கிறது.

நம் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கையில், பிறரைக் குறை கூறாமல் இருப்பது ஒரு சவால்தான், ஆனால் “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” (ரோமர் 12:18) என்ற வார்த்தைகள் கிறிஸ்துவின் தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய பொறுப்பை வேறு யார் மீதும் சுமத்த முடியாது முடியாது என்பதைக் காட்டுகிறது. அது அவருடைய நாமம் தரிக்கப்பட்ட நம் ஒவ்வொருவர் மீதும் உள்ளது.

இயேசுவை எதிர்பார்த்தல்

என் தோழன் செல்வா, தனது குளிர்சாதனப்பெட்டியைப் பழுதுபார்ப்பவரின்  வருகைக்காகக் காத்திருக்கையில், அந்த நிறுவனத்திலிருந்து குறுஞ்செய்தி ஒன்றைப் பெற்றார். அதில், “இயேசு வந்துகொண்டிருக்கிறார், சுமார் 11:35 மணிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றிருந்தது. பழுதுபார்ப்பவரின் பெயர் உண்மையில் ஜீசஸ் (இயேசு) என்பதைச் செல்வா விரைவில் கண்டுகொண்டார்.

ஆனால் தேவனுடைய குமாரனாகிய இயேசு எப்போது வருவார் என்று எதிர்பார்க்கலாம்? அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதனாக வந்து நம்முடைய பாவத்தின் தண்டனையை அனுபவித்தபோது, ​​அவர் திரும்பி வருவார் என்று கூறினார். ஆனால் அவர் திரும்பி வருவதற்கான  "அந்த நாளையும் அந்த நாழிகையையும்" பிதா மட்டுமே அறிவார் (மத்தேயு 24:36). நமது இரட்சகர் மீண்டும் பூமிக்கு வரும் தருணத்தை நாம் அறிந்திருந்தால், நமது அனுதின முன்னுரிமைகளில் எத்தகைய வித்தியாசம் ஏற்படும்? (யோவான் 14:1-3).

"நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்" (மத்தேயு 24:44) என்று தனது வருகைக்காக ஆயத்தப்படும்படி இயேசு எச்சரித்தார். "உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்" (வ. 42) என்று நமக்கு நினைப்பூட்டினார்.

கிறிஸ்து திரும்பும் நாளில், நம்மை எச்சரிப்பதற்கு நமது அலைபேசியில் தகவலைப் பெற மாட்டோம். எனவே, நம் மூலம் செயல்படும் ஆவியானவரின் வல்லமையின் மூலம், ஒவ்வொரு நாளும் நித்தியத்தின் கண்ணோட்டத்துடன் வாழ்ந்து, தேவனுக்கு ஊழியம் செய்வோம். அவருடைய அன்பு மற்றும் நம்பிக்கையின் செய்தியைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வோம்.

 

பாதங்களையும் பாத்திரங்களையும் கழுவுதல்

சார்லி மற்றும் ஜானின் ஐம்பதாவது திருமண ஆண்டு விழாவில், அவர்கள் தங்கள் மகன் ஜானுடன் ஒரு ஓட்டலில் காலை உணவை சாப்பிட்டனர். அன்று உணவகத்தில் ஒரு மேலாளர், சமையல்காரர் மற்றும் தொகுப்பாளினி, பணிப்பெண் மற்றும் பணம் சேகரிக்கும் ஒருவர் என்று வெகு குறைவான பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் காலை உணவை முடித்ததும், சார்லி தனது மனைவி மற்றும் மகனின் பக்கம் திரும்பி, “அடுத்த சில மணிநேரங்களில் உங்களுக்கு வேறு ஏதாவது முக்கியமான வேலை இருக்கிறதா?” என்று கேட்க, அவர்கள் இல்லை என்று பதிலளித்தனர்.

எனவே மேலாளரின் அனுமதியுடன், சார்லியும் ஜானும் உணவகத்தின் பின்புறத்தில் பாத்திரங்களைக் கழுவத் தொடங்கினர். ஜான், உணவுகள் சிதறிக்கிடந்த மேசைகளைத் துடைக்கத் தொடங்கினார். ஜானின் கூற்றுப்படி, அன்று நடந்தது உண்மையில் ஆச்சரியப்படும் காரியம் இல்லை. அவனுடைய பெற்றோர், இயேசு “ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்ய” வந்தார் (மாற்கு 10:45) என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுத்தே வளர்த்திருக்கிறார்கள்.

யோவான் 13ல், கிறிஸ்து தம் சீஷர்களுடன் கடைசியாகப் பகிர்ந்துகொண்ட உணவைப் பற்றி வாசிக்கிறோம். அன்றிரவு, அவர்களின் அழுக்கு கால்களைக் கழுவுவதன் மூலம் தாழ்மையின் ஊழியத்தைக் குறித்து இயேசு அவர்களுக்குக் கற்பித்தார் (வச. 14-15). பன்னிரண்டு பேர்களின் கால்களைக் கழுவும் கீழ்த்தரமான வேலையைச் செய்ய அவர் தயாராக இருந்தால், அவர்களும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் ஊழியம் செய்திருக்கக்கூடும். 

நாம் செய்ய வேண்டிய ஊழியங்களின் தன்மை வித்தியாசப்படலாம், ஆனால் அது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்பதை மறுக்கமுடியாது. ஒருவர் புகழைப்பெறுவதற்காய் இந்த சேவைப் பணியில் ஈடுபடுவதில்லை, மாறாக, மற்றவர்களுக்கு சேவை செய்வதின் மூலம் நம்முடைய தாழ்மையான, தியாக உருவான தேவனுக்கு மகிமையைச் செலுத்துகின்றனர்.

நிழலும் தேவனுடைய வெளிச்சமும்

எலைனுக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, அவளுக்கும் அவள் கணவனான சக்கும் அவள் இயேசுவை ஏற்றுக்கொண்டு வெகுகாலம் ஆகியிருக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் இருவரும் தங்கள் ஐம்பத்து நான்கு வருடங்களின் ஆழமான மற்றும் கடினமான பள்ளத்தாக்கில் ஒன்றாகப் பயணிக்கும்போது தேவன் அவர்களுடன் இருப்பார் என்ற சங்கீதம் 23இன் வாக்குறுதியை பொக்கிஷமாக கருதினர். பல தசாப்தங்களுக்கு முன்னரே இயேசுவில் நம்பிக்கை வைத்து, எலைன் இயேசுவைச் சந்திக்கத் தயாராக இருந்தாள் என்று அவர்கள் நம்பினர்.

தன்னுடைய மனைவி மரணத்தின் நினைவு நாளில், சக், இன்னும் “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே” நடக்கிறேன் (சங்கீதம் 23:4) என்று பகிர்ந்து கொண்டார். அவருடைய மனைவியின் பரலோக வாழ்க்கை ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆனால் “மரணத்தின் நிழல்” இன்னும் அவருடனும் எலைனை பெரிதும் நேசித்த மற்றவர்களுடனும் இருந்தது.

மரண இருளின் பள்ளத்தாக்கில் நாம் பயணிக்கும்போது, நம் ஒளியின் ஆதாரத்தை எங்கே காணலாம்? அப்போஸ்தலனாகிய யோவான், “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1 யோவான் 1:5). மேலும் யோவான் 8:12ல் இயேசு, “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” என்று சொல்லுகிறார்.

இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக, நாம் “அவருடைய முகத்தின் வெளிச்சத்தில்” நடப்போம் (சங்கீதம் 89:15). மரண பள்ளத்தாக்கின் வழியாக நாம் பயணிக்கும் போது கூட, நம்முடன் இருப்பேன் என்றும் நமக்கு ஒளியின் ஆதாரமாக நம் தேவன் நமக்கு வாக்களித்திருக்கிறார்.

மனதை தளரவிடாதே

என் அம்மா டோரதி நல்ல ஆரோக்கியத்துடன் எப்போது இருந்திருக்கிறார்கள் என்பதை என்னால் யோசிக்கமுடியவில்லை. பல ஆண்டுகளாக உடையக்கூடிய நீரிழிவு நோயாளியாக, அவரது இரத்த சர்க்கரை பெருமளவில் ஒழுங்கற்றதாக இருந்தது. சிக்கல்கள் உருவாகி, அவரது சேதமடைந்த சிறுநீரகங்களுக்கு நிரந்தர டயாலிசிஸ் தேவைப்பட்டது. நரம்பியல் மற்றும் எலும்பு முறிவு காரணமாக சக்கர நாற்காலி பயன்படுத்தப்பட்டது. அவர் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. 

ஆனால் அவரது சரீரம் சிகிச்சையை அனுமதிக்காததால், அவருடைய ஜெப வாழ்க்கை இன்னும் அதிகரிக்கத்துவங்கியது. தேவனின் அன்பை மற்றவர்கள் அறியவும் அனுபவிக்கவும் மணிக்கணக்காக ஜெபித்தார். வேதத்தின் விலைமதிப்பற்ற வார்த்தைகள் அவருக்கு இனிமையாக தெரிந்தது. அவரின் கண்பார்வை மங்குவதற்கு முன்பு, அவர் தன் சகோதரி மார்ஜோரிக்கு 2 கொரிந்தியர் 4-ல் உள்ள வார்த்தைகளை மேற்கோள்காட்டி ஒரு கடிதம் எழுதினாள்: “ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது” (2 கொரிந்தியர் 4:16). 

மனம் தளருவது எவ்வளவு இயல்பானது என்பதை பவுல் அறிந்திருந்தார். 2 கொரிந்தியர் 11இல், அவர் தன்னுடைய ஜீவியத்தை அபாயங்கள், வலிகள் மற்றும் பஞ்சம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாகவே வெளிப்படுத்துகிறார் (வச. 23-29). ஆனாலும் அவர் அந்த “தொல்லைகளை” தற்காலிகமானதாகவே கருதினார். நாம் எதைக் காண்கிறோமோ அதைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், நம்மால் பார்க்க முடியாத நித்தியமானவைகளைப் பற்றியும் சிந்திக்கும்படி அவர் நம்மை ஊக்குவித்தார் (4:17-18).

நமக்கு என்ன நடந்தாலும், நம் அன்பான பரமபிதா ஒவ்வொரு நாளும் நம் உள்ளான சுத்திகரிப்பை தொடர்ச்சியாய் செய்கிறார். அவர் நிச்சயமாய் நம்மோடிருக்கிறார். அவர் கொடுத்த ஜெபம் என்னும் வரத்தின் மூலம் அவர் நமக்கு மிக அருகாமையில் வந்திருக்கிறார். மேலும், அவர் நம்மைப் பலப்படுத்தி, நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருவதாக அவர் அளித்த வாக்குறுதிகள் மெய்யானவைகள்.

வாக்குறுதி நிறைவேறியது

நான் சிறுபிள்ளையாயிருந்தபோது ஒவ்வொரு கோடை விடுமுறையின்போதும் இருநூறு மைல்கள் தூரம் வரை பயணம் செய்து என்னுடைய தாத்தா பாட்டியிடம் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிப்பது வழக்கம். நான் நேசித்த என்னுடைய தாத்தா பாட்டியிடத்திலிருந்து எவ்வளவு ஞானத்தைக் கற்றுக்கொண்டேன் என்று நான் அப்போது அறியாதிருந்தேன். அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களும் தேவனோடு நடந்த அனுபவங்களையும் என்னுடைய சிறிய சிந்தையினால் கற்பனை செய்து பார்க்கமுடியாத ஞானத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுத்திருந்தது. அவர்களோடு தேவனுடைய உண்மைத்துவத்தை பற்றிப்பேசிக்கொண்டிருக்கும்போது, தேவன் தான் செய்த அனைத்து வாக்குத்தத்தங்களிலும் உண்மையுள்ளவர் என்னும் மனவுறுதி எனக்கு ஏற்பட்டது. 

தேவதூதன் இயேசுவின் தாயாகிய மரியாளை சந்தித்தபோது, அவள் இளம் வயதுடையவளாயிருந்தாள். காபிரியேல் தூதனால் கொண்டுவரப்பட்ட செய்தி நம்பமுடியாத ஆச்சரியமாய் தோன்றினாலும் அதை கிருபையோடு செயல்படுத்த அவள் முற்பட்டாள் (லூக்கா 1:38). ஒருவேளை கர்ப்பமாயிருக்கும் அவளுடைய வயதுசென்ற உறவினரான எலிசபெத்தை (அறுபது வயதிருக்கும் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்) பார்க்க சென்றிருந்தபோது, மரியாளுடைய வயிற்றில் கருவுற்றிருப்பது மேசியா என்னும் எலிசபெத்தின் ஆறுதலான வார்த்தைகள் அவளை தேற்றியிருக்கலாம் (வச. 39-45). 

என்னுடைய தாத்தா பாட்டியைப் போன்று நாமும் கிறிஸ்துவில் அதிகதிகமாய் வளர்ச்சியுறும்போது, தேவன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிற தேவன் என்பதை விசுவாசிக்க பழகிக்கொள்வோம். எலிசபெத்துக்கும் அவளுடைய கணவனான சகரியாவுக்கும் அவர் செய்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார் (வச. 57-58). அவர்களுக்கு பிறந்த பிள்ளையான யோவான் ஸ்நானகன், மனுஷீகத்தை எதிர்காலத்தை மாற்றக்கூடிய நபராய் நூற்றாண்டுகளுக்கு முன்னர் தீர்க்கதரிசனமாய் முன்னறிவிக்கப்பட்டவர். வாக்குப்பண்ணப்பட்ட உலக இரட்சராகிய மேசியா வருகிறார் (மத்தேயு 1:21-23).

அமைதிக்கான அறை

நீங்கள் அமெரிக்காவில் அமைதியான இடத்தைத் தேடுகிறவர்களென்றால், மினியாபோலிஸ், மினசோட்டாவில் நீங்கள் விரும்பும் அந்த அறை உள்ளது. இவ்வறையானது அனைத்து ஒலிகளிலும் 99.99 சதவீதத்தை உறிஞ்சிக்கொள்கிறது! ஆர்ஃபீல்ட் ஆய்வகங்களின் உலகப் புகழ்பெற்ற எதிரொலியற்ற அந்த அறை "பூமியின் அமைதியான இடம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த சத்தமில்லாத இடத்தை அனுபவிக்க விரும்புபவர்கள், கவனம் சிதறாத வண்ணம் உட்கார்ந்து கொள்ள வேண்டும். மேலும் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேல் யாரும் அந்த அறையில் இருக்க முடியாது.

 

இத்தகைய மௌனத்தை பெரும்பாலும் நாம் விரும்ப மாட்டோம். ஆயினும்கூட, இரைச்சலும் அவசரமும் நிறைந்த இந்த உலகில் சிறிது அமைதிக்காக நாம் அனைவரும் சில சமயங்களில் ஏங்குகிறோம். நாம் பார்க்கும் செய்திகளும், நாம் உள்வாங்கும் சமூக ஊடகங்களும் கூட, நம் கவனத்தை சிதறடிக்கும் ஒருவித ஆரவாரமான "இரைச்சலை" நமக்குள் கொண்டு வருகின்றன. எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டும் வார்த்தைகள் மற்றும் படங்கள் நம் மனதில் பதிந்து விடுகின்றன. அவற்றில் நாம் மூழ்கி விட்டால் தேவனின் சத்தத்தைக் கேட்க முடியாமல் போய்விடும்.

 

எலியா தீர்க்கதரிசி ஓரேப் பர்வதத்தில் தேவனைச் சந்திக்கச் சென்றபோது, பலத்த, சடுதியான காற்றிலோ, பூகம்பத்திலோ அல்லது நெருப்பிலோ அவரைக் காணவில்லை (1 இராஜாக்கள் 19:11-12). எலியா ஒரு "மெல்லிய சத்தத்தைக்" கேட்கும் வரை, அவர் முகத்தை மூடிக்கொண்டு, "சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரை" (வவ. 12-14) சந்திப்பதற்காக குகையை விட்டு வெளியேறினார்.

 

உங்கள் ஆவியும்கூட அமைதலுக்காக ஏங்கலாம், ஆனால் அதைக்காட்டிலும் தேவனின் சத்தத்தை கேட்கவே அது வாஞ்சிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் அமைதிக்கான ஒரு நேரத்தை ஒதுக்குங்கள். அப்பொழுது தேவனின் 'மெல்லிய சத்தத்தை' உங்களால் கேட்க முடியும் (வச. 12).

செய்ய அல்லது செய்யக்கூடாதவை

நான் சிறுவனாக இருந்தபோது, இரண்டாம் உலகப் போரில் செயலிழக்கச் செய்யப்பட்ட ஒரு பீரங்கி என் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவ்வாகனத்தின் மீது ஏறுவதிலுள்ள ஆபத்து குறித்துப் பல எச்சரிப்பு குறிகள் இருந்தன. ஆனால் எனது நண்பர்கள் இருவரும் உடனடியாக துடிப்போடு ஏறினர். எங்களில் சிலர் சற்று தயக்கம் காட்டினாலும், இறுதியில் நாங்களும் அவ்வாறே செய்தோம். ஒரு சிறுவன் பதிவிடப்பட்ட எச்சரிப்புகளைக் காட்டி மறுத்துவிட்டான். ஒரு பெரியவர் நெருங்கியதும், இன்னொருவன் வேகமாகக் கீழே குதித்தான். விதிகளைப் பின்பற்றுவதற்கான எங்கள் விருப்பத்தை விட விளையாடும் ஆசை அதிகமாக இருந்தது.

நம் அனைவருக்குள்ளும் குழந்தைத்தனமான முரட்டாட்ட சுபாவம் இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று கூறப்பட்டால் நமக்குப் பிடிக்காது. ஆயினும் எது சரியானது என்பதை அறிந்து அதைச் செய்யாவிடில் அது பாவம் (4:17) என்று யாக்கோபில் வாசிக்கிறோம். ரோமரில், அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது" (7:19-20).

இயேசுவின் விசுவாசிகளாக, நாம் பாவத்துடன் போராடுவது புதிராக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் நாம் சரியானதைச் செய்வதற்கு நம் சொந்த பலத்தை மட்டுமே சார்ந்திருக்கிறோம். ஒரு நாள், இந்த வாழ்க்கை முடிவடையும் போது, நாம் உண்மையிலேயே பாவத் தூண்டுதல்களுக்கு மரித்திருப்போம். எவ்வாறாயினும் அதுவரை, தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் பாவத்தின் மீதான வெற்றியை வென்றவரின் வல்லமையை நாம் நம்பலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

மனம் தளராதீர்கள்

இளைப்பு. சத்யா, தனது புதிய வேலையில் ஒன்பது மாதத்திற்குப்பின் இதை உணர்ந்தான். இயேசுவின் விசுவாசியாக,  தனது பணியைச் செய்யவும் சவால்களை எதிர்கொள்ளவும் தேவனின் நியமங்களையே பின்பற்றும்படி நாடினான். ஆனால், மனிதர்கள் சார்ந்த பிரச்சனைகள் நீடித்தன, நிர்வாகத்திலும் சிறிதளவே முன்னேற்றம் இருந்தது. தான் கையாலாகாதவனாக உணர்ந்தான்.

ஒருவேளை, சத்யாவைப் போல நீங்களும் சோர்ந்திருக்கலாம். உங்களுக்கு நல்லது எதுவெனத் தெரியும், ஆனாலும் அதைச் செய்வதற்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெலனற்றவர்களாக உணரலாம். மனம் தளராதீர்கள். அப்போஸ்தலன் பவுல் நம்மை இந்த வார்த்தைகளால் ஊக்குவிக்கிறார்: "நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்" (கலாத்தியர் 6:9) இங்கே, ஒரு விவசாயியின் உருவகத்தைப் பயன்படுத்துகிறார். அநேக விவசாயிகள் அறிந்துள்ளதுபோல, விதைப்பது கடினமான வேலை.

“ஆவிக்கென்று” (வ.8) விதைப்பதும் கடினமான வேலையே. ஆவியானவரின் நடத்துதலைப் பின்பற்றி, அவரை கனப்படுத்தும் வாழ்வை வாழ நாடுகின்ற இயேசுவின் விசுவாசிகள் களைத்து, மனம் தளரக்கூடும். ஆனால், நாம் அவரது வாக்கைப் பற்றிக்கொண்டால், அறுவடையும் வரும். நாம் ”நித்தியஜீவனை” அறுப்போம் (வ.8. பார்க்க: யோவான் 17:3) கிறிஸ்து திரும்பி வருகையில் தேவ ஆசீர்வாதமாக நாம் பெறப்போகும் மகா விளைச்சல்; இந்த வாழ்க்கையிலும் அவரை அறிவதன்மூலம் உண்டாகும் நம்பிக்கையும் சந்தோஷமும் நமக்குண்டு. நாம் ஏற்ற காலத்தில் அறுப்போம், இந்த காலநேரமானது பருவங்களாலோ காலசூழ்நிலைகளாலோ அல்லாமல் பூரணமான தேவனுடைய சித்தத்தின்படியே தீர்மானிக்கப்படுகிறது. அறுவடை வரும்வரை, தேவபெலத்தால் நாம் தொடர்ந்து விதைப்போம்.

 

இலகுவானதும், கடினமானதும்

மார்க் ஒரு உற்சாகமான இளம் போதகர். ஒரு காலை வேளையில், தனது மகன் ஓவனுடன் பந்து விளையாடுகையில், ஓவன் தடுமாறி விழுந்து மரித்தான். நிலைகுலைந்து போன மார்க், இன்றும் அதற்காக வேதனைப்படுகிறார். ஆனால், அந்த வலியினூடே மிகுந்த மனதுருக்கமுடைய போதகரா க மாறியுள்ளார். மார்க்கின் துயரத்தில் பங்கேற்ற நான், “தேவன் ஒருவனை ஆழமாக காயப்படுத்துமட்டும், அவன் அவரால் அபிரிதமாக ஆசிர்வதிக்கபடுது சந்தேகமே " என்று ஏ.டபல்யு.டோசர் குறிப்பிட்டிருந்த தனது புரிதலுக்கு, மார்க்கின் சோதனையும் ஒரு சான்றோ என்று வியக்கிறேன்.

ஆனால், அது உண்மையில் அவ்வளவு எளிதல்ல. இஸ்ரவேலர்களின் பயணத்தை கவனித்தால், தேவனின் அறிவதர்கரிய வழிமுறைகளில் சிலவற்றைக் கற்றுக்கொள்ளலாம். புதிதாய் தோன்றிய தேசத்திற்குத் தேவன், “ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி" (யாத்திராகமம் 13:17) எகிப்திலிருந்து எளிதான பாதையில் அழைத்து வந்தார். எனினும் சில வசனங்கள் தள்ளி, தேவன் மோசேயிடம் பார்வோன் தனது இராணுவத்தோடு இவர்களை பின்தொடரும்படிக்கு பாளயமிறங்க சொன்னார் (14:1-4). பார்வோன் இந்த பொறியில் வீழ்ந்தான். இஸ்ரவேலர்கள் மிகவும் பயந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள் (வ.10). “கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” (வ.14) என்று மோசே அவர்களைத் திடப்படுத்தினான்.

தேவன் தமது ஜனங்களை வளர்க்கவும், தமக்கு மகிமையுண்டாக்கவும்; கடினம் மற்றும் எளிதுமான இரண்டு பாதைகளையும் உபயோகிக்கிறார். தேவன், "நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன்" (வ.4) என்று வாக்குரைத்தார். இஸ்ரவேலர் அவ்வாறே செய்தனர். நாமும் அவ்வாறே செய்யலாம். எளிதோ, கடிதோ ஒவ்வொரு சோதனையினூடே தேவன் நமது விசுவாசத்தைக் கட்டுவிக்கிறார். வாழ்க்கையின் எளிதான காலத்தில், அவரில் இளைப்பாறுங்கள். வாழ்க்கையின் கடினமான நேரத்தில், அவர் உங்களைச் சுமக்கட்டும்.

தேவனோடு புதிய துவக்கம்

"உன் பாவமும் இயேசுவைச் சிலுவையில் அறைந்ததா?" டச்சு ஓவியர் ரெம்ப்ராண்ட் 1633 ஆம் ஆண்டு வரைந்த தலைசிறந்த படைப்பான "தி ரைசிங் ஆஃப் தி கிராஸ்" -இல் கேட்கும் கேள்வி இதுவே. அந்த ஓவியத்தின் மையத்தில்,  இயேசு சிலுவையில் உயர்த்தி பிடிக்கப்பட்டிருக்கிறார். நான்கு பேர் அவரை சிலுவையோடு தூங்குகிறார்கள். ஆனால் அதில் ஒருவர் இயேசுவைச் சுற்றி இருந்த வெளிச்சத்தில் நிற்கிறார். அவர் அணிந்திருந்த ஆடை வித்தியாசமாயிருந்தது; அவர் ரெம்ப்ராண்ட் வாழ்ந்த காலத்திலிருந்த ஆடையை அணிந்திருந்தார். ஓவியர் அடிக்கடி அணிந்த தொப்பியையும் அணிந்திருந்தார். அவரது முகத்தை உற்று நோக்கினால், ரெம்ப்ராண்ட் தன்னையும் அந்த ஓவியத்தில் இணைத்துள்ளார், அது "இயேசுவின் மரணத்திற்கு என் பாவங்களும் காரணம்" என்று சொல்லுவது போலிருந்தது.

ஆனால், அதில் தனித்து நிற்கும் இன்னொருவரும் இருக்கிறார். அவர் குதிரையில் இருக்கிறார், ஓவியத்திலிருந்து பார்வையாளர்களை நேரடியாகப் பார்க்கிறார். சிலர் இதை ரெம்ப்ராண்டின் இரண்டாவது சுய உருவப்படமாகப் பார்க்கிறார்கள், "நீங்கள் இன்னும் இங்கே வரவில்லையா?" என்று பார்வையாலே தன்னை கவனிக்கும் அனைவரையும் கேட்பது போல் உள்ளது.

பவுல் தன்னையே அங்குக் கண்டார். நாமும் நம்மைக் காணலாம், காரணம் இயேசு நமக்காகவும் பாடுபட்டு மரித்தார். ரோமர் 5:10 இல், பவுல் தன்னையும் நம்மையும் "தேவனுக்குச் சத்துருக்கள்" என்று குறிப்பிடுகிறார். ஆனால் நம்முடைய பாவங்கள் இயேசுவின் மரணத்திற்குக் காரணமாயினும், அவருடைய மரணம் நம்மைத் தேவனோடு ஒப்புரவாக்குகிறது: "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (வ.8).

பாவமன்னிப்பு தேவைப்படும் பாவிகளாக ரெம்ப்ராண்ட் மற்றும் பவுலுடன் நாமும் நிற்கிறோம். தேவனுடனான புதிய ஆரம்பம் என்ற நமது ஆழ்ந்த தேவையை அவருடைய சிலுவையின் மூலம் இயேசு நமக்குப் பூர்த்தி செய்கிறார். இதை நமக்காக நாமே ஒருபோதும் செய்திட முடியாது.