எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சிண்டி ஹெஸ் காஸ்பர்கட்டுரைகள்

கிறிஸ்துவின் தன்மையை பிரதிபலித்தல்

மேஜையில் இரண்டு முகங்கள் தனித்து நின்றன. ஒன்று கசப்பான கோபத்தால் சுருங்கி, மற்றொன்று உணர்ச்சி வலியில் முறுக்கி இருந்தது. பழைய நண்பர்களின் சந்திப்பு இப்போது கோபத்தின் கூச்சலானது, ஒருத்தி தன் நம்பிக்கைகளுக்காக மற்றொருத்தியைத் திட்டினாள். முதல் பெண் உணவகத்தை விட்டு வெளியேறும் வரை தகராறு தொடர்ந்தது, இது மாற்றவளை அவமானத்தால் நிலைகுலைத்தது.

கருத்து வேறுபாட்டைச் சகித்துக்கொள்ள முடியாத காலத்தில் நாம் உண்மையில் வாழ்கிறோமா? இரண்டு பேர் ஒத்துப்போக முடியாது என்பதால் ஏதோவொன்று தீயது என்று அர்த்தம் இல்லை. கடுமையான அல்லது அடிபணியாத பேச்சு ஒருபோதும் ஏற்புடையதல்ல, மேலும் வலுவான நம்பிக்கைகள் கண்ணியத்தையும் இரக்கத்தையும் மிஞ்சக்கூடாது.

ரோமர்12, "ஒருவரையொருவர் கனம்பண்ணுகிறது" மற்றும் பிறருடன் "ஏகசிந்தையுள்ளவர்களாயிருப்பது" (வ.10, 16) எப்படி என்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கான அடையாளமான பண்பு, நாம் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பே என்று இயேசு சுட்டிக்காட்டினார் (யோவான் 13:35). பெருமையும் கோபமும் நம்மை எளிதில் தடம் புரளச் செய்யும் அதே வேளையில், நாம் பிறரிடம் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்பும் அன்பிற்கு நேர் மாறாகவும் இருக்கிறது.

நம் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கையில், பிறரைக் குறை கூறாமல் இருப்பது ஒரு சவால்தான், ஆனால் “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” (ரோமர் 12:18) என்ற வார்த்தைகள் கிறிஸ்துவின் தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய பொறுப்பை வேறு யார் மீதும் சுமத்த முடியாது முடியாது என்பதைக் காட்டுகிறது. அது அவருடைய நாமம் தரிக்கப்பட்ட நம் ஒவ்வொருவர் மீதும் உள்ளது.

இயேசுவை எதிர்பார்த்தல்

என் தோழன் செல்வா, தனது குளிர்சாதனப்பெட்டியைப் பழுதுபார்ப்பவரின்  வருகைக்காகக் காத்திருக்கையில், அந்த நிறுவனத்திலிருந்து குறுஞ்செய்தி ஒன்றைப் பெற்றார். அதில், “இயேசு வந்துகொண்டிருக்கிறார், சுமார் 11:35 மணிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றிருந்தது. பழுதுபார்ப்பவரின் பெயர் உண்மையில் ஜீசஸ் (இயேசு) என்பதைச் செல்வா விரைவில் கண்டுகொண்டார்.

ஆனால் தேவனுடைய குமாரனாகிய இயேசு எப்போது வருவார் என்று எதிர்பார்க்கலாம்? அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதனாக வந்து நம்முடைய பாவத்தின் தண்டனையை அனுபவித்தபோது, ​​அவர் திரும்பி வருவார் என்று கூறினார். ஆனால் அவர் திரும்பி வருவதற்கான  "அந்த நாளையும் அந்த நாழிகையையும்" பிதா மட்டுமே அறிவார் (மத்தேயு 24:36). நமது இரட்சகர் மீண்டும் பூமிக்கு வரும் தருணத்தை நாம் அறிந்திருந்தால், நமது அனுதின முன்னுரிமைகளில் எத்தகைய வித்தியாசம் ஏற்படும்? (யோவான் 14:1-3).

"நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்" (மத்தேயு 24:44) என்று தனது வருகைக்காக ஆயத்தப்படும்படி இயேசு எச்சரித்தார். "உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்" (வ. 42) என்று நமக்கு நினைப்பூட்டினார்.

கிறிஸ்து திரும்பும் நாளில், நம்மை எச்சரிப்பதற்கு நமது அலைபேசியில் தகவலைப் பெற மாட்டோம். எனவே, நம் மூலம் செயல்படும் ஆவியானவரின் வல்லமையின் மூலம், ஒவ்வொரு நாளும் நித்தியத்தின் கண்ணோட்டத்துடன் வாழ்ந்து, தேவனுக்கு ஊழியம் செய்வோம். அவருடைய அன்பு மற்றும் நம்பிக்கையின் செய்தியைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வோம்.

 

பாதங்களையும் பாத்திரங்களையும் கழுவுதல்

சார்லி மற்றும் ஜானின் ஐம்பதாவது திருமண ஆண்டு விழாவில், அவர்கள் தங்கள் மகன் ஜானுடன் ஒரு ஓட்டலில் காலை உணவை சாப்பிட்டனர். அன்று உணவகத்தில் ஒரு மேலாளர், சமையல்காரர் மற்றும் தொகுப்பாளினி, பணிப்பெண் மற்றும் பணம் சேகரிக்கும் ஒருவர் என்று வெகு குறைவான பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் காலை உணவை முடித்ததும், சார்லி தனது மனைவி மற்றும் மகனின் பக்கம் திரும்பி, “அடுத்த சில மணிநேரங்களில் உங்களுக்கு வேறு ஏதாவது முக்கியமான வேலை இருக்கிறதா?” என்று கேட்க, அவர்கள் இல்லை என்று பதிலளித்தனர்.

எனவே மேலாளரின் அனுமதியுடன், சார்லியும் ஜானும் உணவகத்தின் பின்புறத்தில் பாத்திரங்களைக் கழுவத் தொடங்கினர். ஜான், உணவுகள் சிதறிக்கிடந்த மேசைகளைத் துடைக்கத் தொடங்கினார். ஜானின் கூற்றுப்படி, அன்று நடந்தது உண்மையில் ஆச்சரியப்படும் காரியம் இல்லை. அவனுடைய பெற்றோர், இயேசு “ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்ய” வந்தார் (மாற்கு 10:45) என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுத்தே வளர்த்திருக்கிறார்கள்.

யோவான் 13ல், கிறிஸ்து தம் சீஷர்களுடன் கடைசியாகப் பகிர்ந்துகொண்ட உணவைப் பற்றி வாசிக்கிறோம். அன்றிரவு, அவர்களின் அழுக்கு கால்களைக் கழுவுவதன் மூலம் தாழ்மையின் ஊழியத்தைக் குறித்து இயேசு அவர்களுக்குக் கற்பித்தார் (வச. 14-15). பன்னிரண்டு பேர்களின் கால்களைக் கழுவும் கீழ்த்தரமான வேலையைச் செய்ய அவர் தயாராக இருந்தால், அவர்களும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் ஊழியம் செய்திருக்கக்கூடும். 

நாம் செய்ய வேண்டிய ஊழியங்களின் தன்மை வித்தியாசப்படலாம், ஆனால் அது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்பதை மறுக்கமுடியாது. ஒருவர் புகழைப்பெறுவதற்காய் இந்த சேவைப் பணியில் ஈடுபடுவதில்லை, மாறாக, மற்றவர்களுக்கு சேவை செய்வதின் மூலம் நம்முடைய தாழ்மையான, தியாக உருவான தேவனுக்கு மகிமையைச் செலுத்துகின்றனர்.

நிழலும் தேவனுடைய வெளிச்சமும்

எலைனுக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, அவளுக்கும் அவள் கணவனான சக்கும் அவள் இயேசுவை ஏற்றுக்கொண்டு வெகுகாலம் ஆகியிருக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் இருவரும் தங்கள் ஐம்பத்து நான்கு வருடங்களின் ஆழமான மற்றும் கடினமான பள்ளத்தாக்கில் ஒன்றாகப் பயணிக்கும்போது தேவன் அவர்களுடன் இருப்பார் என்ற சங்கீதம் 23இன் வாக்குறுதியை பொக்கிஷமாக கருதினர். பல தசாப்தங்களுக்கு முன்னரே இயேசுவில் நம்பிக்கை வைத்து, எலைன் இயேசுவைச் சந்திக்கத் தயாராக இருந்தாள் என்று அவர்கள் நம்பினர்.

தன்னுடைய மனைவி மரணத்தின் நினைவு நாளில், சக், இன்னும் “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே” நடக்கிறேன் (சங்கீதம் 23:4) என்று பகிர்ந்து கொண்டார். அவருடைய மனைவியின் பரலோக வாழ்க்கை ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆனால் “மரணத்தின் நிழல்” இன்னும் அவருடனும் எலைனை பெரிதும் நேசித்த மற்றவர்களுடனும் இருந்தது.

மரண இருளின் பள்ளத்தாக்கில் நாம் பயணிக்கும்போது, நம் ஒளியின் ஆதாரத்தை எங்கே காணலாம்? அப்போஸ்தலனாகிய யோவான், “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1 யோவான் 1:5). மேலும் யோவான் 8:12ல் இயேசு, “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” என்று சொல்லுகிறார்.

இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக, நாம் “அவருடைய முகத்தின் வெளிச்சத்தில்” நடப்போம் (சங்கீதம் 89:15). மரண பள்ளத்தாக்கின் வழியாக நாம் பயணிக்கும் போது கூட, நம்முடன் இருப்பேன் என்றும் நமக்கு ஒளியின் ஆதாரமாக நம் தேவன் நமக்கு வாக்களித்திருக்கிறார்.

மனதை தளரவிடாதே

என் அம்மா டோரதி நல்ல ஆரோக்கியத்துடன் எப்போது இருந்திருக்கிறார்கள் என்பதை என்னால் யோசிக்கமுடியவில்லை. பல ஆண்டுகளாக உடையக்கூடிய நீரிழிவு நோயாளியாக, அவரது இரத்த சர்க்கரை பெருமளவில் ஒழுங்கற்றதாக இருந்தது. சிக்கல்கள் உருவாகி, அவரது சேதமடைந்த சிறுநீரகங்களுக்கு நிரந்தர டயாலிசிஸ் தேவைப்பட்டது. நரம்பியல் மற்றும் எலும்பு முறிவு காரணமாக சக்கர நாற்காலி பயன்படுத்தப்பட்டது. அவர் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. 

ஆனால் அவரது சரீரம் சிகிச்சையை அனுமதிக்காததால், அவருடைய ஜெப வாழ்க்கை இன்னும் அதிகரிக்கத்துவங்கியது. தேவனின் அன்பை மற்றவர்கள் அறியவும் அனுபவிக்கவும் மணிக்கணக்காக ஜெபித்தார். வேதத்தின் விலைமதிப்பற்ற வார்த்தைகள் அவருக்கு இனிமையாக தெரிந்தது. அவரின் கண்பார்வை மங்குவதற்கு முன்பு, அவர் தன் சகோதரி மார்ஜோரிக்கு 2 கொரிந்தியர் 4-ல் உள்ள வார்த்தைகளை மேற்கோள்காட்டி ஒரு கடிதம் எழுதினாள்: “ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது” (2 கொரிந்தியர் 4:16). 

மனம் தளருவது எவ்வளவு இயல்பானது என்பதை பவுல் அறிந்திருந்தார். 2 கொரிந்தியர் 11இல், அவர் தன்னுடைய ஜீவியத்தை அபாயங்கள், வலிகள் மற்றும் பஞ்சம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாகவே வெளிப்படுத்துகிறார் (வச. 23-29). ஆனாலும் அவர் அந்த “தொல்லைகளை” தற்காலிகமானதாகவே கருதினார். நாம் எதைக் காண்கிறோமோ அதைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், நம்மால் பார்க்க முடியாத நித்தியமானவைகளைப் பற்றியும் சிந்திக்கும்படி அவர் நம்மை ஊக்குவித்தார் (4:17-18).

நமக்கு என்ன நடந்தாலும், நம் அன்பான பரமபிதா ஒவ்வொரு நாளும் நம் உள்ளான சுத்திகரிப்பை தொடர்ச்சியாய் செய்கிறார். அவர் நிச்சயமாய் நம்மோடிருக்கிறார். அவர் கொடுத்த ஜெபம் என்னும் வரத்தின் மூலம் அவர் நமக்கு மிக அருகாமையில் வந்திருக்கிறார். மேலும், அவர் நம்மைப் பலப்படுத்தி, நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருவதாக அவர் அளித்த வாக்குறுதிகள் மெய்யானவைகள்.

வாக்குறுதி நிறைவேறியது

நான் சிறுபிள்ளையாயிருந்தபோது ஒவ்வொரு கோடை விடுமுறையின்போதும் இருநூறு மைல்கள் தூரம் வரை பயணம் செய்து என்னுடைய தாத்தா பாட்டியிடம் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிப்பது வழக்கம். நான் நேசித்த என்னுடைய தாத்தா பாட்டியிடத்திலிருந்து எவ்வளவு ஞானத்தைக் கற்றுக்கொண்டேன் என்று நான் அப்போது அறியாதிருந்தேன். அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களும் தேவனோடு நடந்த அனுபவங்களையும் என்னுடைய சிறிய சிந்தையினால் கற்பனை செய்து பார்க்கமுடியாத ஞானத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுத்திருந்தது. அவர்களோடு தேவனுடைய உண்மைத்துவத்தை பற்றிப்பேசிக்கொண்டிருக்கும்போது, தேவன் தான் செய்த அனைத்து வாக்குத்தத்தங்களிலும் உண்மையுள்ளவர் என்னும் மனவுறுதி எனக்கு ஏற்பட்டது. 

தேவதூதன் இயேசுவின் தாயாகிய மரியாளை சந்தித்தபோது, அவள் இளம் வயதுடையவளாயிருந்தாள். காபிரியேல் தூதனால் கொண்டுவரப்பட்ட செய்தி நம்பமுடியாத ஆச்சரியமாய் தோன்றினாலும் அதை கிருபையோடு செயல்படுத்த அவள் முற்பட்டாள் (லூக்கா 1:38). ஒருவேளை கர்ப்பமாயிருக்கும் அவளுடைய வயதுசென்ற உறவினரான எலிசபெத்தை (அறுபது வயதிருக்கும் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்) பார்க்க சென்றிருந்தபோது, மரியாளுடைய வயிற்றில் கருவுற்றிருப்பது மேசியா என்னும் எலிசபெத்தின் ஆறுதலான வார்த்தைகள் அவளை தேற்றியிருக்கலாம் (வச. 39-45). 

என்னுடைய தாத்தா பாட்டியைப் போன்று நாமும் கிறிஸ்துவில் அதிகதிகமாய் வளர்ச்சியுறும்போது, தேவன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிற தேவன் என்பதை விசுவாசிக்க பழகிக்கொள்வோம். எலிசபெத்துக்கும் அவளுடைய கணவனான சகரியாவுக்கும் அவர் செய்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார் (வச. 57-58). அவர்களுக்கு பிறந்த பிள்ளையான யோவான் ஸ்நானகன், மனுஷீகத்தை எதிர்காலத்தை மாற்றக்கூடிய நபராய் நூற்றாண்டுகளுக்கு முன்னர் தீர்க்கதரிசனமாய் முன்னறிவிக்கப்பட்டவர். வாக்குப்பண்ணப்பட்ட உலக இரட்சராகிய மேசியா வருகிறார் (மத்தேயு 1:21-23).

அமைதிக்கான அறை

நீங்கள் அமெரிக்காவில் அமைதியான இடத்தைத் தேடுகிறவர்களென்றால், மினியாபோலிஸ், மினசோட்டாவில் நீங்கள் விரும்பும் அந்த அறை உள்ளது. இவ்வறையானது அனைத்து ஒலிகளிலும் 99.99 சதவீதத்தை உறிஞ்சிக்கொள்கிறது! ஆர்ஃபீல்ட் ஆய்வகங்களின் உலகப் புகழ்பெற்ற எதிரொலியற்ற அந்த அறை "பூமியின் அமைதியான இடம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த சத்தமில்லாத இடத்தை அனுபவிக்க விரும்புபவர்கள், கவனம் சிதறாத வண்ணம் உட்கார்ந்து கொள்ள வேண்டும். மேலும் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேல் யாரும் அந்த அறையில் இருக்க முடியாது.

 

இத்தகைய மௌனத்தை பெரும்பாலும் நாம் விரும்ப மாட்டோம். ஆயினும்கூட, இரைச்சலும் அவசரமும் நிறைந்த இந்த உலகில் சிறிது அமைதிக்காக நாம் அனைவரும் சில சமயங்களில் ஏங்குகிறோம். நாம் பார்க்கும் செய்திகளும், நாம் உள்வாங்கும் சமூக ஊடகங்களும் கூட, நம் கவனத்தை சிதறடிக்கும் ஒருவித ஆரவாரமான "இரைச்சலை" நமக்குள் கொண்டு வருகின்றன. எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டும் வார்த்தைகள் மற்றும் படங்கள் நம் மனதில் பதிந்து விடுகின்றன. அவற்றில் நாம் மூழ்கி விட்டால் தேவனின் சத்தத்தைக் கேட்க முடியாமல் போய்விடும்.

 

எலியா தீர்க்கதரிசி ஓரேப் பர்வதத்தில் தேவனைச் சந்திக்கச் சென்றபோது, பலத்த, சடுதியான காற்றிலோ, பூகம்பத்திலோ அல்லது நெருப்பிலோ அவரைக் காணவில்லை (1 இராஜாக்கள் 19:11-12). எலியா ஒரு "மெல்லிய சத்தத்தைக்" கேட்கும் வரை, அவர் முகத்தை மூடிக்கொண்டு, "சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரை" (வவ. 12-14) சந்திப்பதற்காக குகையை விட்டு வெளியேறினார்.

 

உங்கள் ஆவியும்கூட அமைதலுக்காக ஏங்கலாம், ஆனால் அதைக்காட்டிலும் தேவனின் சத்தத்தை கேட்கவே அது வாஞ்சிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் அமைதிக்கான ஒரு நேரத்தை ஒதுக்குங்கள். அப்பொழுது தேவனின் 'மெல்லிய சத்தத்தை' உங்களால் கேட்க முடியும் (வச. 12).

செய்ய அல்லது செய்யக்கூடாதவை

நான் சிறுவனாக இருந்தபோது, இரண்டாம் உலகப் போரில் செயலிழக்கச் செய்யப்பட்ட ஒரு பீரங்கி என் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவ்வாகனத்தின் மீது ஏறுவதிலுள்ள ஆபத்து குறித்துப் பல எச்சரிப்பு குறிகள் இருந்தன. ஆனால் எனது நண்பர்கள் இருவரும் உடனடியாக துடிப்போடு ஏறினர். எங்களில் சிலர் சற்று தயக்கம் காட்டினாலும், இறுதியில் நாங்களும் அவ்வாறே செய்தோம். ஒரு சிறுவன் பதிவிடப்பட்ட எச்சரிப்புகளைக் காட்டி மறுத்துவிட்டான். ஒரு பெரியவர் நெருங்கியதும், இன்னொருவன் வேகமாகக் கீழே குதித்தான். விதிகளைப் பின்பற்றுவதற்கான எங்கள் விருப்பத்தை விட விளையாடும் ஆசை அதிகமாக இருந்தது.

நம் அனைவருக்குள்ளும் குழந்தைத்தனமான முரட்டாட்ட சுபாவம் இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று கூறப்பட்டால் நமக்குப் பிடிக்காது. ஆயினும் எது சரியானது என்பதை அறிந்து அதைச் செய்யாவிடில் அது பாவம் (4:17) என்று யாக்கோபில் வாசிக்கிறோம். ரோமரில், அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது" (7:19-20).

இயேசுவின் விசுவாசிகளாக, நாம் பாவத்துடன் போராடுவது புதிராக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் நாம் சரியானதைச் செய்வதற்கு நம் சொந்த பலத்தை மட்டுமே சார்ந்திருக்கிறோம். ஒரு நாள், இந்த வாழ்க்கை முடிவடையும் போது, நாம் உண்மையிலேயே பாவத் தூண்டுதல்களுக்கு மரித்திருப்போம். எவ்வாறாயினும் அதுவரை, தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் பாவத்தின் மீதான வெற்றியை வென்றவரின் வல்லமையை நாம் நம்பலாம்.

தேவையை பார்த்தல்

என் அப்பாவின் கடைசி சில நாட்களில், ஒரு செவிலியர் அவருடைய அறைக்கு வந்து, அவருக்கு முகச்சவரம் செய்ய வேண்டுமா என்று கேட்டார். செவிலியர் மெதுவாக அவர் முகத்தைச் சவரம் செய்கையில், ​​“இவர் தலைமுறையைச் சேர்ந்த வயதானவர்கள் தினமும் சுத்தமாகச் சவரம் செய்ய விரும்புகிறார்கள்” என்று விளக்கினார். ஒருவருக்கு இரக்கம், கண்ணியம் மற்றும் மரியாதையைக் காட்ட வேண்டிய தேவையை உள்ளுணர்ந்து அந்த செவிலியர் செயலாற்றினார். அவர் அளித்த பரிவான கவனிப்பு என் இன்னொரு தோழியை எனக்கு நினைவூட்டியது, அவள் வயதான தாயின் நகங்களுக்கு இன்னும் நகப்பூச்சு பூசுகிறாள், ஏனென்றால் தான் அழகாயிருப்பது அந்த அம்மாவுக்கு முக்கியம்.

அப்போஸ்தலர் 9, தொற்காள் (தபீத்தாள் என்றும் அழைக்கப்படுபவர்) என்ற சீஷியை பற்றி நமக்குக் கூறுகிறது, அவர் ஏழைகளுக்கு கையால் செய்யப்பட்ட ஆடைகளை வழங்குவதன் மூலம் கருணை காட்டினார் (வ. 36,39). அவர் இறந்தபோது, ​​​​அவரது அறை நண்பர்களால் நிரம்பியது, அவர்கள் மற்றவர்களுக்கு உதவ விரும்பும் இந்த அன்பான பெண்ணைக் கண்ணீருடன் துக்கித்தனர்.

ஆனால் தொற்காளின் கதை அங்கு முடிவடையவில்லை. பேதுருவை அவள் உடல் கிடத்தப்பட்ட இடத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, ​​அவன் மண்டியிட்டு ஜெபம் செய்தான். தேவனின் வல்லமையால், "தபீத்தாளே, எழுந்திரு" (வ. 40) என்று கூறி அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். ஆச்சரியமாக, தொற்காள் கண்களைத் திறந்து காலூன்றி நின்றாள். அவள் உயிருடன் இருப்பதை அவளுடைய நண்பர்கள் உணர்ந்தபோது, ​​​​நகரம் முழுவதும் வார்த்தைகள் விரைவாகப் பரவின, மேலும் "அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்" (வ. 42).

தொற்காள் தன் வாழ்க்கையின் அடுத்த நாளை எப்படிக் கழித்தாள்? ஒருவேளை அவள் முன்பு இருந்ததைப் போலவே; மக்களின் தேவைகளைப் பார்த்து அவற்றை பூர்த்திசெய்திருப்பாள்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

உள்ளிருந்து மறுருபமகுதல்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இங்கிலாந்தில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில், மேற்கு லண்டனில் உள்ள இருபத்தி நான்கு மாடி கிரென்ஃபெல் டவர் கட்டிடத்தில் தீ பரவி எழுபது பேரின் உயிர்களைப் பலியாக்கியது. கட்டிடத்தின் புதுப்பித்தலின் பகுதியாக, வெளிப்புறத்தை மூட பயன்படுத்தப்பட்ட உறைப்பூச்சுதான் தீப்பிழம்புகள் மிக விரைவாகப் பரவுவதற்கான முதன்மைக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது. இந்த பொருள் வெளியில்தான் அலுமினியம், ஆனால் பற்றக்கூடிய நெகிழி அதின் நடுவில் கொண்டிருந்தது.

அத்தகைய ஆபத்தான பொருள் எவ்வாறு விற்கப்பட்டது, நிறுவப்பட்டது? இந்த தயாரிப்பு விற்பனையாளர்கள், இது தீ பாதுகாப்பு சோதனையில் தோல்வியடைந்ததை வெளியிடத் தவறினர். மேலும் வாங்குபவர்கள், பொருளின் மலிவான விலைக் குறியீட்டால், எச்சரிக்கை அறிகுறிகளைக் கவனிக்கத் தவறிவிட்டனர். பளபளப்பான உறை வெளிப்புறத்தில் நன்றாகத் தோற்றமளித்தது.

இயேசுவின் சில கடுமையான வார்த்தைகள் மத போதகர்களை நோக்கியே  வந்தது, அவர்கள் அழகாகத் தோன்றும் வெளிப்புறத்தில் அநீதியை மறைப்பதாகக் குற்றம் சாட்டினார். அவை " வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்", " புறம்பே அலங்காரமாய்" தோன்றும், ஆனால் உள்ளே மரித்தவர்களின் எலும்புகளினால் நிறைந்திருக்கும்  (மத்தேயு 23:27) என்றார். "நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும்" (வ. 23) பின்பற்றுவதற்குப் பதிலாக, அவர்கள் அலங்காரமாய்க் காணப்படுவதற்குக் கவனம் செலுத்தினர். "போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தை" சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தினர், ஆனால் உள்ளேயிருந்த "கொள்ளை, அநீதி" ஆகியவற்றை விட்டுவிட்டனர் (வ. 25).

நம்முடைய பாவத்தையும்,உள்ள முறிவையும் தேவனுக்கு முன்பாக நேர்மையாகக் கொண்டுவருவதை விட "அலங்காரமாய் தோன்றுவதில்” கவனம் செலுத்துவது எளிது. ஆனால் அழகாகத் தோற்றமளிக்கும் வெளிப்புறமானது, அநீதத்தின் இதயம் உண்டாக்கும் ஆபத்தை மாற்றாது. நம் அனைவரையும் உள்ளிருந்து மாற்றும்படி விட்டுக்கொடுக்க, தேவன் நம்மை அழைக்கிறார் (1 யோவான் 1:9).

கிளையாகிய இயேசு

சிவப்பாய் காட்சியளித்த மலைகளுக்கு மத்தியில் உயர்ந்து நிற்கிறது அழகிய ஹோலி கிராஸ் சிற்றாலயம். அதற்குள் நுழைந்தவுடன், சிலுவையில் இயேசுவின் வித்தியாசமான சிற்பம் உடனடியாக ஈர்த்தது. ஒரு பாரம்பரிய சிலுவைக்குப் பதிலாக, இயேசு ஒரு மரத்தின் கிளைகளில் இரண்டு தண்டுகளில் சிலுவையில் அறையப்பட்டதாகக் காட்டப்பட்டிருந்தது. கிடைமட்டமாகத்  துண்டிக்கப்பட்ட, காய்ந்த தண்டு, தேவனை நிராகரித்த பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குறிக்கிறது. மற்ற தண்டு மேல்நோக்கி வளர்ந்து கிளைகள்; யூதாவின் செழிப்பான கோத்திரத்தையும், தாவீது ராஜாவின் குடும்ப வம்சத்தையும் குறிக்கிறது.

குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கலை, இயேசுவைப் பற்றிய பழைய ஏற்பாட்டின் ஒரு முக்கியமான தீர்க்கதரிசனத்தைச் சுட்டிக்காட்டுகிறது. யூதாவின் கோத்திரம் சிறையிருப்பில் வாழ்ந்தாலும், எரேமியா தீர்க்கதரிசி தேவனிடமிருந்து ஒரு நம்பிக்கையூட்டும் செய்தியைக் கொடுத்தார்: "நான்.. சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்" (எரேமியா 33:14) "அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்” (வ. 15) என்று மீட்பரை குறித்தது. அவரை ஜனங்கள் அடையாளம் காண்பதற்கான ஓர் வழி, "தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்" (வ. 15) என்பதே. அதாவது, மீட்பர் தாவீது ராஜாவின் வழித்தோன்றலாக இருப்பார்.

இயேசுவின் வம்சாவளியின் விவரங்களில், தேவன் வாக்களித்த அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு உண்மையுள்ளவராக இருந்தார் என்ற முக்கியமான உண்மையை இச்சிற்பம் திறமையாக வெளிக்காட்டுகிறது. அதிலும், கடந்த காலத்தில் அவருடைய உண்மைத்தன்மையானது  எதிர்காலத்தில் நமக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் உண்மையுள்ளவராக இருப்பார் என்ற உறுதியளிக்கிறது என்பதற்கான நினைவூட்டல்.

பிரதிபலன்

1921 ஆம் ஆண்டில், கலைஞர் சாம் ரோடியா தனது வாட்ஸ் டவர்ஸ் கட்டுமானத்தைத் தொடங்கினார். முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸில் பதினேழு சிற்பங்கள் முப்பது மீட்டர் உயரம் எழுப்பப்பட்டன. இசைக்கலைஞர் ஜெர்ரி கார்சியா ரோடியாவின் தலைசிறந்த படைப்பை  நிராகரித்தார். ""நீங்கள் மரித்த பிறகும் இருக்கும் விஷயம் இது. அதுதான் இதன் பலன்" என்றார் கார்சியா. பிறகு, "ஆனால் இது எனக்கானதல்ல" என்றார்.

அதனால் அவருக்கு கிடைத்த பலன் என்ன? அவரது இசைக்குழு உறுப்பினர் பாப் வீா், இவ்விருவரின் கருத்தைச் சுருக்கமாகக் கூறினார்: “நித்தியத்தில், உங்களைப் பற்றி எதுவும் நினைவில் கொள்ளப்படாது. எனவே ஏன் வேடிக்கைகாக இருக்கக்கூடாது?"

ஒரு ஐசுவரியமான ஞானி  ஒருமுறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து "அதற்கான பலனை" கண்டுகொள்ள முயன்றான். அவர் , "வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றேன்" (பிரசங்கி 2:1) என்று எழுதினார். ஆனால் அவர், " மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை" (வச. 16) என்றும் குறிப்பிட்டார். அவர், "சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது" (வ. 17) என்று முடித்தார்.

இயேசுவின் வாழ்க்கையும் செய்தியும், அத்தகைய குறுகிய மனப்பான்மையான வாழ்க்கையைக் கடுமையாக எதிர்க்கிறது. இயேசு நமக்கு "பரிபூரண ஜீவனை " கொடுக்க வந்தார் (யோவான் 10:10) மேலும் இந்த வாழ்க்கையை நித்தியத்தின் கண்ணோட்டத்திலும் வாழக் கற்றுக் கொடுத்தார். "பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்.. பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்" (மத்தேயு 6:19-20) என்று அவர் கூறினார். பின்னர் அவர் அதைச் சுருக்கமாக: "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்" (வ. 33) என்றார்.

அதுதான் சூரியனுக்குக் கீழும், அதற்கு அப்பாலும் நீடிக்கும் பலன் .