நான் சிறுபிள்ளையாயிருந்தபோது ஒவ்வொரு கோடை விடுமுறையின்போதும் இருநூறு மைல்கள் தூரம் வரை பயணம் செய்து என்னுடைய தாத்தா பாட்டியிடம் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிப்பது வழக்கம். நான் நேசித்த என்னுடைய தாத்தா பாட்டியிடத்திலிருந்து எவ்வளவு ஞானத்தைக் கற்றுக்கொண்டேன் என்று நான் அப்போது அறியாதிருந்தேன். அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களும் தேவனோடு நடந்த அனுபவங்களையும் என்னுடைய சிறிய சிந்தையினால் கற்பனை செய்து பார்க்கமுடியாத ஞானத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுத்திருந்தது. அவர்களோடு தேவனுடைய உண்மைத்துவத்தை பற்றிப்பேசிக்கொண்டிருக்கும்போது, தேவன் தான் செய்த அனைத்து வாக்குத்தத்தங்களிலும் உண்மையுள்ளவர் என்னும் மனவுறுதி எனக்கு ஏற்பட்டது. 

தேவதூதன் இயேசுவின் தாயாகிய மரியாளை சந்தித்தபோது, அவள் இளம் வயதுடையவளாயிருந்தாள். காபிரியேல் தூதனால் கொண்டுவரப்பட்ட செய்தி நம்பமுடியாத ஆச்சரியமாய் தோன்றினாலும் அதை கிருபையோடு செயல்படுத்த அவள் முற்பட்டாள் (லூக்கா 1:38). ஒருவேளை கர்ப்பமாயிருக்கும் அவளுடைய வயதுசென்ற உறவினரான எலிசபெத்தை (அறுபது வயதிருக்கும் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்) பார்க்க சென்றிருந்தபோது, மரியாளுடைய வயிற்றில் கருவுற்றிருப்பது மேசியா என்னும் எலிசபெத்தின் ஆறுதலான வார்த்தைகள் அவளை தேற்றியிருக்கலாம் (வச. 39-45). 

என்னுடைய தாத்தா பாட்டியைப் போன்று நாமும் கிறிஸ்துவில் அதிகதிகமாய் வளர்ச்சியுறும்போது, தேவன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிற தேவன் என்பதை விசுவாசிக்க பழகிக்கொள்வோம். எலிசபெத்துக்கும் அவளுடைய கணவனான சகரியாவுக்கும் அவர் செய்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார் (வச. 57-58). அவர்களுக்கு பிறந்த பிள்ளையான யோவான் ஸ்நானகன், மனுஷீகத்தை எதிர்காலத்தை மாற்றக்கூடிய நபராய் நூற்றாண்டுகளுக்கு முன்னர் தீர்க்கதரிசனமாய் முன்னறிவிக்கப்பட்டவர். வாக்குப்பண்ணப்பட்ட உலக இரட்சராகிய மேசியா வருகிறார் (மத்தேயு 1:21-23).