வகை  |  odb

பெயரில் என்ன இருக்கிறது?

“கிப்” ஹார்டின் என்ற மெதடிஸ்ட் சபைப் போதகர், பிரபல பிரசங்கியார் ஜான் வெஸ்லியைப் போல் தன் மகன் வரவேண்டும் என்ற ஆசையில், அவரது ஆண் குழந்தைக்கு ஜான் வெஸ்லி என்று பெயர் வைத்தார். ஆனால், அதே பெயர் கொண்ட பிரசங்கியார் போல் அல்லாமல், ஜான் வெஸ்லி ஹார்டின் ஒரு மாறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்தார். நாற்பத்தி இரண்டு மனிதர்களைக் கொன்றதாகக் கூறிய அவன் 1800 ஆண்டு காலக் கட்டத்தில், அமெரிக்காவின் மேற்குப் பகுதியின் துப்பாக்கிச் சண்டைக்காரனாக, பொல்லாத துஷ்டனாக இருந்தான்.

 

தற்போது உள்ள கலாசாரத்தைப்போல வேதாகமத்திலும் பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆண்டவருடைய குமாரனின் பிறப்பை முன்னறிவித்த தேவதூதன், மரியாளின் குழந்தைக்கு “அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத்தேயு 1:21) என்று யோசேப்பிடம் கூறுகிறார். இயேசுவின் பெயருக்கு அர்த்தமான “யெகோவா இரட்சிப்பார்”, பாவத்திலிருந்து இரட்சிப்பதற்கான அவரது குறிக்கோளை உறுதிப்படுத்தியது.

 

ஹார்டினைப் போல் இல்லாமல், இயேசு, முழுவதுமாக தன் பெயருக்கேற்ப வாழ்ந்தார். அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக, மீட்பு என்ற அவரது குறிக்கோளை நிறைவேற்றினார். “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது” (யோவா. 20:31) என்று கூறியதன்மூலம், வாழ்வளிக்கும் கிறிஸ்துவின் பெயரை யோவான் உறுதிப்படுத்துகிறார். அப்போஸ்தலர் நடபடிகள் “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்போஸ்தலர் 4:12) என்று கூறி நம் அனைவரையும் அவரை விசுவாசிக்கும்படி அழைக்கிறது.

 

இணையில்லாத இயேசுவின் நாமத்தை விசுவாசத்தோடே தேடும் அனைவரும், அவர் தரும் மன்னிப்பையும், நம்பிக்கையையும் அனுபவிக்க முடியும். நீங்கள் அவர் நாமத்தைத் தேடினீர்களா?

வை--ஃபை இருக்கிறதா?

ஊழியத்திற்காக இளைஞர்களுடன் ஒரு பயணத்துக்குத் தயார் செய்து கொண்டிருந்தபோது, “அங்கே வை—ஃபை (Wi-Fi)இருக்குமா” என்ற கேள்வியை அநேக முறை என்னிடம் கேட்டார்கள். இருக்கும் என்று அவர்களுக்கு நான் உறுதி அளித்தேன். ஒரு நாள் இரவு வை—ஃபை இணைப்பு இல்லாதபோது, அந்த இளைஞர்கள் அதிகமாகப் புலம்பினார்கள்.
 
நம்மில் பலர் நம் கையில் நம் ஸ்மார்ட் ஃபோன் (smart phone)இல்லாதபோது, எதையோ இழந்துவிட்டதைப் போல பரிதவிக்கிறோம். அவை நம் கையில் இருக்கும்போது, நம் கண்கள் அதன் திரையை விட்டு விலகுவதில்லை.
 
எல்லாவற்றையும்போல, இணையமும், அதன் மூலம் நாம் பெற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்களும் நமது கவனத்தை திசை திருப்புவதாக இருக்கலாம் அல்லது நமக்கு ஆசீர்வாதமாக இருக்கலாம். இந்த இரண்டில் எது என்பது, அதிலிருந்து பெறும் தகவல்களை நாம் எப்படி உபயோகிக்கிறோம் என்பதைப் பொறுத்தது. நீதிமொழிகளில் “புத்திமானுடைய மனம் அறிவைத் தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்” (15:14) என்று வாசிக்கிறோம்.
 
வேதாகம ஞான போதனைகளை நம் வாழ்க்கைக்கு நாம் பயன்படுத்தும்போது, நம்மை நாமே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ள முடியும்.சமூக இணையதளங்களையும், அதன்மூலம் நாம் இணைந்திருக்கும் குழுக்களின் செய்திகளையும் தினமும் கட்டாயம் பார்க்கிறோமா? எந்த விதமான விஷயங்களில் நாம் ஆர்வம் செலுத்துகிறோம் என்பதை அது சுட்டிக் காட்டுகிறதா? நாம் இணையத்தில் படிக்கும், பார்க்கும் விஷயங்கள் விவேகமான வாழ்க்கை வாழ நம்மை ஊக்குவிக்கிறதா (வச. 16-21); அல்லது – புறங்கூறுதல், அவதூறான விஷயங்கள், உலகப்பிரகாரமான செல்வங்கள், தவறான பாலியல் சிந்தனைகள் – போன்ற மதியீனமான காரியங்களைத் தேடுகிறோமா?
 
பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, “உண்மையுள்ள, ஒழுக்கமுள்ள, நீதியுள்ள, கற்புள்ள, அன்புள்ள, நற்கீர்த்தியுள்ள” (பிலிப்பியர் 4:8) விஷயங்களால் நம் சிந்தனைகளை நிரப்ப முடியும். கர்த்தர் தரும் ஞானத்தால், அவரைக் கனப்படுத்தக்கூடிய நல்ல விஷயங்களை நாம் தேர்ந்தெடுக்க முடியும்.

நம் பெயர் அவருக்குத் தெரியும்

நியூயார்க் நகரில் உள்ள செப்டம்பர் 11 நினைவுச் சின்னத்திற்கு ஒருமுறை சென்றிருந்தபோது, அங்கே இருக்கும் இரட்டை பிரதிபலிப்புக் குளங்களில் ஒன்றை ஒளிப்படம் எடுத்தேன். உலக வர்த்தக மையத் தாக்குதலில் உயிரிழந்த சுமார் 3,000 மக்களின் பெயர்கள், இந்த குளங்களைச் சுற்றி உள்ள வெண்கலத் தகடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. பின்பு அந்தப் படங்களை கவனமாகப் பார்த்தபோது, ஒரு பெயரின்மேல் ஒரு பெண்ணின் கை இருப்பதைப் பார்த்தேன். தங்களுக்கு அருமையானவர்கள் பெயரின்மேல் கை வைத்து, நினைவுகூருவதற்காக அநேகர் அந்த இடத்திற்கு வருகிறார்கள்.
 
கர்த்தரை விட்டு அவரின் ஜனம் பின்வாங்கியபோதும், இயேசு கிறுஸ்துவின்மாறாத அன்பையும், அவர்கள்மீது அவர் வைத்திருக்கும் கரிசனையையும் ஏசாயா அவர்களுக்கு நினைவுபடுத்தினார். பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன் (ஏசாயா 43:1) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
சங்கீதம் 23ல், “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்....என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (வச. 4,6) என்று தாவீது கூறுகிறார்.
 
கர்த்தர் நம்மை ஒருபோதும் மறப்பதில்லை. நாம் எங்கிருந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும், அவருக்கு நம் பெயர் தெரியும்; அவரது மாறாத அன்பினால், நம்மை அவரது கரத்தின் பிடியில் வைத்துள்ளார். 

உறுதியாய் நிற்பது எப்படி?

பனிக்காலத்தின் கடுங்குளிர் நாள் அது. கதகதப்பான என் வாகனத்தில் இருந்து, ஒரு கதகதப்பான கட்டடத்துக்குள் எப்படிச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அடுத்த நிமிடம், என் முழங்கால்கள் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டு, பாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கமாக நகர்ந்துதரையில் விழுந்தேன். எலும்பு முறிவு எதுவும் இல்லை என்றாலும், அதிக வலியை உணர்ந்தேன். நேரம் ஆக ஆக வலி அதிகரித்தது. நான் முற்றிலும் குணம்பெற பல வாரங்கள் ஆனது.
 
இதுவரை கீழே விழுந்ததில்லை என்று யாராலும் சொல்லமுடியாது. யாரோ அல்லது ஏதோ ஒன்று  நாம் கீழே விழாமல் பார்த்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? சரீரப் பிரகாரமாக, நாம் விழாமல் இருக்க எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும், நம் வாழ்க்கையில் கிறிஸ்துவை கனப்படுத்த நாம் எடுக்கும் முயற்சியில் நமக்கு உதவ தயாராகக் காத்திருப்பதோடு, நமது மறுமை வாழ்வில் அவரது பிரசன்னத்தில் சந்தோஷமாக நிற்க தயார்படுத்தவும் ஒருவர் இருக்கிறார்.
 
நம்மை திசைதிருப்பும், குழப்பும், சிக்கவைக்கும் பல சபலங்களை (தவறான போதனைகளையும்கூட) நாம் தினமும் எதிர்கொள்ளுகிறோம். ஆனால் இந்த உலகத்தில் நாம் நம் வழிகளில் உறுதியாக இருப்பதற்கு நம் சொந்த முயற்சிகள் மட்டும் காரணம் கிடையாது. நாம் கோபமாகப் பேசக்கூடிய சந்தர்ப்பங்களில் அமைதி காக்கவும், ஏமாற்றக்கூடிய சந்தர்ப்பங்களில் நேர்மையாக நடக்கவும், வெறுப்புக்குப் பதிலாக அன்பைத் தேர்ந்தெடுக்கவும், தவறுக்குப் பதிலாக உண்மையைத் தேர்ந்தெடுக்கவும் கர்த்தரின் வல்லமையே நம்மைத் தாங்குகிறது என்பது எவ்வளவு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது (யூதா 1:24). கிறிஸ்து மீண்டும் வரும்போது, கர்த்தரின்அங்கீகரிப்பைப் பெற்று அவர்முன் நாம் நிற்கும்போது, அவரது நிலையான கிருபைக்காக நாம் இப்போது ஏறெடுக்கும் ஸ்தோத்திரம், நித்திய காலமாக எதிரொலிக்கும் (வச. 25).
 

அவர்கள் கிறிஸ்துவைப்போல் வாசனை கொண்டிருந்தார்கள்

வீட்டிலிருந்து அதிக தூரத்திலிருந்த நகரத்திற்குப் பேருந்தில் வந்திருந்த பாப் இறங்கினார். கசகசப்பாக இருந்தது. நாள் முழுவதும் பிரயாணம் செய்ததில் மிகவும் களைப்பாக உணர்ந்தார். அதிர்ஷ்டவசமாக அவரது நண்பர்களின் நண்பர்கள் அந்த இடத்தில் வசித்தனர். அவர்கள் அவரை வரவேற்றபோது, அவர் மரியாதையுடன் நடத்தப்படுவதை உணர்ந்ததோடு, தன் வீட்டில் இருப்பதுபோல், சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் உணர்ந்தார்.
 
பின்னர், பழக்கப்படாத ஒரு இடத்தில் எப்படி தன்னால் அமைதியாக உணர முடிந்தது என்று யோசிக்கும்போது, அதற்கான விடை அவருக்கு 2 கொரிந்தியரில் கிடைத்தது. கர்த்தரைப் பின்பற்றுபவர்கள் “கிறிஸ்துவுக்காக நற்கந்தமாய்” இருப்பதாக பவுல் விவரிக்கிறார். “அதேதான்” என்று பாப் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். அவரை உபசரித்தவர்கள் கிறிஸ்துவைப் போல் “வாசனை கொண்டிருந்தார்கள்”.
 
கர்த்தர் தம் மக்களை கிறிஸ்துவில் “வெற்றி சிறக்கப்பண்ணி” அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துவதாக பவுல் கூறும்போது, பழங்கால வழக்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். வெற்றி பெற்ற படையினர் தெருக்கள் வழியாக நடந்து செல்லும்போது, தூபவர்க்கம் கொளுத்துவார்கள். அந்த வாசனை, அந்தப் படையின் ஆதரவாளர்களுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதேபோல், தேவனின் மக்கள், விசுவாசிகள் மத்தியில் மகிழ்ச்சி தரும் வாசனையை எடுத்துச் செல்வதாக, பவுல் கூறுகிறார். அது நாமாக உருவாக்குவது அல்ல. கர்த்தரைப் பற்றி நாம் எடுத்துச்சொல்லும்போது, நம்மை வழிநடத்துகையில் அவர் அதை உருவாக்குகிறார்.
 
பாப் எனது தந்தை. அந்த தொலைதூரப் பயணத்தை அவர் மேற்கொண்டு, நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்றுவரை அவர் அதை மறக்கவில்லை. கிறிஸ்துவைப்போல் வாசனை கொண்டிருந்த மக்களைப் பற்றி அவர் இன்றும் பேசுகிறார்.

தேவனிடம் உண்மையாய் இருத்தல்

நான் என் தலையைத் தாழ்த்தி, கண்களை மூடி, விரல்களைக் கோர்த்து, ஜெபிக்க ஆரம்பிக்கிறேன். “அன்பின் ஆண்டவரே, உமது பிள்ளையாக இன்று உம்மிடத்தில் வருகிறேன். உமது வல்லமை, உமது நன்மை ஆகியவற்றை ஏற்று, அறிக்கையிடுகிறேன்....” திடீரென்று என் கண்கள் தானாக, வேகமாகத் திறக்கின்றன. நாளை வகுப்பில் கொடுக்கவேண்டிய வரலாற்றுப் பயிற்சியை என் மகன் இன்னும் முடிக்கவில்லை என்ற நினைவு வருகிறது. வகுப்புகள் முடிந்தபிறகு, அவனுக்கு கூடைப்பந்தாட்ட பயிற்சி இருப்பது நினைவு வருகிறது. நடு இரவு வரை கண் விழித்து தன் பள்ளிக்கான பயிற்சிகளை அவன் செய்வதாகக் கற்பனை செய்கிறேன். இதனால் அவன் அதிகக் களைப்பாகி, காய்ச்சலில் படுத்து விடுவான் என்று கவலைப்படுகிறேன்.
 
ஜெபத்தின்போது ஏற்படும் கவனச் சிதறல்கள் பற்றி, சி. எஸ். லூயிஸ், த ஸ்க்ரூடேப் லெட்டர்ஸ் (The Screwtape Letters)என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். நமது மனம் அலைபாயும்போது, மன உறுதியை பயன்படுத்தி, நமது நினைவுகளை மீண்டும் ஜெபத்தை நோக்கி ஒருமுகப்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார். ஆனாலும், இந்தக் கவனச்சிதறலை ஏற்றுக்கொண்டு, “நமது கவனச்சிதறலை நமது பிரச்சனையாக தேவனிடம் ஒப்படைத்து, அதையே நமது ஜெபத்தின் மையக் கருத்தாக மாற்றுமாறு” லூயிஸ் ஆலோசனை தருகிறார்.
 
தீராத கவலை அல்லது பாவகரமான சிந்தனை நம் ஜெபத்திற்குத் தடையாக இருக்கும்போது, கார்தருடானாஉரையாடலில், அதையே பிரதான கருத்தாக எடுத்துக்கொள்ளலாம். நாம் தேவனிடம்பேசும்போது, நமது கவலைகள், பயங்கள், போராட்டங்கள் பற்றி நாம் வெளிப்படையாகப் பேசுவதையே அவர் விரும்புகிறார். நாம் சொல்லும் எதைக் குறித்தும் அவர் ஆச்சரியப்படுவதில்லை. நமது நெருங்கிய நண்பர் நாம் பேசுவதை எப்படி கவனமாகக் கேட்பாரோ அதேபோல் நம்மேல் ஈடுபாடு கொண்டவராக கர்த்தர் இருக்கிறார். அதனால்தான் நம் கவலைகளை அவரிடத்தில் ஒப்புவிக்க ஊக்குவிக்கப்படுகிறோம் – ஏனென்றால் அவர் நம்மை விசாரிக்கிறவர் (1 பேதுரு 5:7).

மாறாத அன்பு

நான் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, பல்கலைக்கழக டென்னிஸ் அணியில் விளையாடினேன். என் பதின்பருவத்தில், என் திறமையை மேம்படுத்துவதற்காக, எங்கள் வீட்டிலிருந்து சற்றுத் தள்ளியிருந்த காங்க்ரீட் தரை கொண்ட அரங்கில் பல மணி நேரம் பயிற்சி செய்தேன்.
 
கடைசியாக அந்த ஊருக்கு நான் சென்றபோது, நான் விளையாடிய நாட்களை நினைவுகூரவும், அங்கே விளையாடுபவர்களைப் பார்க்கவும் நினைத்து, நான் பயிற்சி செய்த அரங்கிற்குச் சென்றேன். ஆனால் எனக்குப் பரிச்சயமான அந்த பழைய அரங்கம் அங்கே இல்லை. காலி மைதானமாக இருந்த அந்த இடத்தில், காற்றில் அவ்வப்போது தலையசைத்த ஒன்றிரண்டு களைச்செடிகள் மட்டுமே தென்பட்டன.
 
நான் அங்கு சென்ற அந்த மதியப்பொழுது, நமது குறுகிய வாழ்வை நினைவுபடுத்தும் ஒரு சம்பவமாகவே எனக்கு இன்றுவரை இருக்கிறது. என் இளவயதின் ஆற்றலை செலவழித்த இடங்களில் ஒன்று,இன்று இல்லவே இல்லை. அந்த அனுபவம் “மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது. கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேல் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது” (சங்கீதம் 103:15-17), என்று வயதுசென்ற தாவீது கூறிய உண்மையை எனக்கு உணர்த்தியது.
 
நமக்கு வயதாகும். நம்மைச் சுற்றியிருக்கும் உலகம் மாறும். ஆனால் தேவனின்அன்பு ஒருபோதும் மாறுவதில்லை. அவரைத் தேடுபவர்களை அவர் பாதுகாக்கிறார் என்று எப்போதும் நம்பிக்கை கொள்ளலாம்.
 

சுய பெலத்தால்

ஆண் அழகர் போட்டியில் பங்கேற்பவர்கள், மிகக் கடுமையான பயிற்சிகளைச் செய்வார்கள். முதல் சில மாதங்களுக்கு உடல் அளவையும், வலிமையையும் அதிகரிக்க முக்கியத்துவம் கொடுப்பார்கள். போட்டி நெருங்கும் சமயத்தில், தசைகளை மறைக்கும் கொழுப்பைக் கரைப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். போட்டிக்கு சில நாட்கள் முன்பு, தசை நன்கு தெரியவேண்டும் என்பதற்காக, எப்போதும் குடிப்பதைவிட குறைவான அளவு தண்ணீர் குடிப்பார்கள். ஊட்டச்சத்து உணவுகள் சாப்பிடுவதைக் குறைப்பதால், பார்ப்பதற்கு வலிமையாகத் தெரிந்தாலும், போட்டி தினத்தன்றுதான் மிக பலவீனமாக இருப்பார்கள்.
 
இதற்கு எதிர்மறையான விஷயத்தை 2 நாளாகமம் 20ல் வாசிக்கிறோம் – கர்த்தரின் வலிமையை அனுபவிப்பதற்காக, பலவீனத்தை ஏற்றுக்கொள்வது. “உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் வருகிறார்கள்,” என்று மக்கள் யோசபாத் அரசனிடம் கூறினார்கள். எனவே தனக்கும், தன் ஜனங்களுக்கும் உணவை ஒறுத்து, “யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்” (வச. 3). பின்பு தேவனின் உதவியை நாடினார்கள். இறுதியில் தன் படையை தயார்படுத்தியபோது, கர்த்தரைத் துதித்துப்பாடும் பாடகர்களை படைக்கு முன்பாக நிறுத்தினான் (வச. 21). அவர்கள் பாட ஆரம்பித்தபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்தவர்களை ஒருவருக்கு விரோதமாய் ஒருவரை கர்த்தர் எழுப்பினதால், அவர்கள் தோல்வியடைந்தார்கள் (வச. 22).
 
யோசபாத்தின் முடிவு கர்த்தர்பேரில் இருந்த திடமான விசுவாசத்தைக் காட்டுகிறது. தன்னுடைய சுய வலிமை மீதும் தன் படை வலிமை மீதும் சாராமல், கர்த்தரைச் சார்ந்திருப்பதைத் தெரிந்துகொண்டான். நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நாமே கஷ்டப்பட்டு நம் சுய பெலத்தால் சரிசெய்ய முயற்சிக்காமல், நாம் கர்த்தரிடம் ஒப்புவித்து, அவரை நம் பெலனாக ஏற்றுக்கொள்வோம்.

பாலங்களைக் கட்டுதல்

எங்கள் குடியிருப்புப் பகுதியில்,வீடுகளைச் சுற்றி, உயரமான காங்க்ரீட் சுவர்கள் காணப்படும். பல சுவர்களின்மேல் மின்சார முள்கம்பிகளும் இருக்கும். திருடர்கள் வருவதைத் தடுப்பதற்காக இவை போடப்பட்டுள்ளன.
 
எங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைபடும். இதனால் பல சமயங்களில் எங்கள் வீட்டின் முன்புறம் உள்ள அழைப்புமணி  வேலை செய்வதில்லை. இதுபோன்ற சமயங்களில், உயரமான சுற்றுச்சுவர் இருப்பதால் எங்களைப் பார்க்க வருபவர்கள் சுட்டெரிக்கும் வெயில் அல்லது கொட்டும் மழையில் வெளியில் நிற்க நேரிடும். அழைப்புமணி வேலை செய்தாலும்,வந்திருப்பவர் யார் என்பதைப் பொறுத்தே அவர்களை உள்ளே அழைப்போம். எங்கள் சுற்றுச்சுவர் திருடர்கள் வராமல் தடுத்தாலும், அவை மற்றவர்களிடம் பாகுபாடு காண்பிக்கும் சுவர்களாக மாறிவிடுகின்றன. பார்க்க வந்திருப்பவர் அத்துமீறி நுழைபவராக இல்லாதபோதும் அந்தச் சுவர்கள் ஒரு தடையாக இருக்கின்றன.
 
இயேசு கிணற்றருகில் சந்தித்த  சமாரியப் பெண்ணுக்கும் பாகுபாடு குறித்த குழப்பம் ஏற்பட்டது. யூதர்களும் சமாரியர்களும் சம்பந்தம் கலப்பதில்லை. எனவே இயேசு தண்ணீர் கேட்டபோது, 'நீர் யூதனாயிருக்க,சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம்?" (யோவான் 4:9) என்றாள். அவள் இயேசுவிடம் பேசியபோது,அவளிடமும்,அவள் அயலாரிடமும் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு அனுபவத்தைப் பெற்றாள் (வச. 39-42). விரோதம், பாரபட்சம் போன்ற தடுப்புச் சுவர்களைத் தகர்க்கும் பாலமாக இயேசு செயல்பட்டார்.
 
வேற்றுமை உணர்வு நம்மிடம் இருப்பது உண்மை. நம் வாழ்வில் அதை அடையாளப்படுத்த வேண்டும். எந்த தேசத்தவர்,அவர் சமூக அந்தஸ்து, புகழ் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல், இயேசு காட்டியதுபோல நாமும் மக்களைச் சந்திக்கலாம். அவர் பாலங்களைக் கட்ட வந்தார்.