ஹார்வி என்ற சூறாவளிப்புயல் 2017ல் வந்தபோது, பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளம்  கிழக்கு டெக்சஸைச் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, பலர் வெள்ளத்தில் இருந்து வெளியேற முடியாமல், தங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. அந்த மாகாணத்திலிருந்தும், நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் பலரும் தனிப்பட்ட முறையில் தங்கள் படகுகளில் வந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்ற உதவினர். இவர்களை மக்கள் “டெக்சஸ் கப்பற்படை” என்று அழைத்தனர்.

தைரியம் மற்றும் தயாள குணம் கொண்ட இந்த ஆண்கள் மற்றும் பெண்களின் செயல்கள், நீதிமொழிகள் 3:27 ல், முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவும்படி நாம் அறிவுறுத்தப்படுவதை நினைவுக்குக் கொண்டுவருகிறது. தங்கள் படகுகளைக் கொண்டுவந்து மற்றவர்களுக்கு உதவ அவர்களுக்கு செயல்திறன் இருந்தது. அதை  அவர்கள் பயன்படுத்தினார்கள். தங்களிடம் இருந்த சாதனங்களையும், செயல்திறன்களையும் மற்றவர்களின் நலனுக்காக உபயோகிக்கும் மனோபாவத்தை அவர்கள் செயல்கள் வெளிப்படுத்துகின்றன.

சில சமயங்களில் நாம் செய்ய வேண்டிய வேலைகளை செய்வதற்கு நமக்கு போதிய சாமர்த்தியம் இல்லை என்று நாம் நினைக்கலாம். மற்றவர்களுக்கு உதவ நமக்கு திறமை, சாமர்த்தியம், அனுபவம், அல்லது நேரம் இல்லை என்று நினைத்து நாம் பயப்படுகிறோம். இதுபோன்ற சமயங்களில் நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொண்டு, மற்றவர்களுக்கு எந்த வகையில் நாம் உதவ முடியும் என்று கவனிக்கத் தவறுகிறோம். டெக்சஸ் கப்பற்படையினால் வெள்ளம் அதிகரிப்பதைத் தடுக்க முடியவில்லை. அரசு உதவி செய்யவேண்டும் என்று சட்டம் இயற்ற முடியவில்லை. ஆனால் சக மனிதர்களைக் காப்பாற்ற, தங்களிடம் இருந்த ஒன்றை உபயோகித்தனர் – அவை படகுகள்! மேலான இடத்திற்கு மக்களை அழைத்துச் செல்ல நம்மிடம் இருக்கும் “படகுகளை” – அது எதுவாக இருந்தாலும் – உபயோகிப்போமாக..