Archives: செப்டம்பர் 2018

புதிரை விடுவித்தல்

ஒரு நாள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு நான் திரும்பி வந்தபோது, வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகில் ஒரு ஜோடி உயர் குதிகால் காலணிகள் கிடப்பதைப் பார்த்தேன். அது யாருடையதாக இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. என் மகள் லிசா தன் குழந்தைகளை அழைத்துச் செல்ல வரும்போது அவளிடம் கொடுக்க நினைத்து வாகனக்கூடத்தில் அதை எடுத்து வைத்தேன். ஆனால் லிசாவிடம் கேட்டபோது அது அவளுடையது அல்ல என்று கூறினாள். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அது தங்களுடையது அல்ல என்று கூறினார்கள். அதனால் எடுத்த இடத்திலேயே அதை வைத்துவிட்டேன். அடுத்த நாள் அந்த காலணியைக் காணவில்லை. அது ஒரு புதிராக இருந்தது.

 

பவுல் அப்போஸ்தலர் தன் கடிதங்களில் ஒரு புதிர் அல்லது இரகசியத்தைப் பற்றி எழுதினார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆனால் அவர் குறிப்பிட்ட புதிர் ‘யார் குற்றவாளி’ என்பது போன்ற புதிரைக் காட்டிலும் மேலானது. உதாரணத்திற்கு எபேசியர் 3ல், “முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படாத” (வச. 5)  இரகசியத்தைப் பற்றிக் கூறுகிறார். முன்பு கர்த்தர் தம்மை இஸ்ரவேல் மூலமாக வெளிப்படுத்தினார், ஆனால் இப்போது இஸ்ரவேலர் அல்லாத புறஜாதிகளும், “அவர்களுடனே வாரிசாக” இருக்கும்படி இயேசு கிறிஸ்து மூலமாக வெளிப்படுத்துகிறார் என்பதே அந்த இரகசியம்.

 

இது எதைத் தெரிவிக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்: இயேசுவை இரட்சகர் என்று நம்பும் அனைவரும் சேர்ந்து அவரை நேசிக்கவும், சேவிக்கவும் முடியும். நாம் அனைவரும் சரிசமமாக அவரை “தைரியம் மற்றும் திட நம்பிக்கையோடே தேவனிடத்தில்” அணுக முடியும் (வச. 12). சபையின் ஐக்கியம் மூலமாக, கர்த்தரின் ஞானம் மற்றும் தயையை உலகம் தெரிந்துகொள்ளும்.

நமது இரட்சிப்புக்காக தேவனைத் துதிப்போம். பலதரப்பட்ட பின்னணி கொண்ட அனைவரும் இயேசுகிறிஸ்துவில் ஒன்றாக இணையும்போது, ஐக்கியத்தின் புதிர் நமக்குப் புரியும்.

சிதறியவற்றை சேகரித்தல்

டான்சானியத் தலைநகர் டோடோமாவில் தரிசாகக் கிடக்கும் ஒரு நிலத்தை என் சிநேகிதி ரூத் பண்படுத்த விரும்பினாள். அங்குள்ள விதவைகளின் தேவைகளை உணர்ந்த ரூத், அவர்கள் நலனுக்காக அந்த தரிசு நிலத்தை சீர்ப்படுத்தி விவசாயம் செய்யவும், கோழி வளர்க்கவும் கூடிய இடமாக மாற்ற நினைக்கிறார். பிறர் தேவை அறிந்து அவர்களுக்கு உதவவேண்டும் என்ற அவளது தொலைநோக்குப் பார்வைக்குக் காரணம் அவள் தேவன்மீது வைத்திருக்கும் அன்பு. மேலும் அவள் பெயர்கொண்ட வேதாகமத்தின் ரூத் அவளுக்கு ஒரு தூண்டுகோல்.

 

எளியவர்களும், அயல் தேசத்தாரும் வயல்களின் ஓரத்தில் சிந்திய கதிர்களை சேகரித்துக்கொள்ள கர்த்தரின் சட்டம் அனுமதித்தது. (லேவியராகமம் 19:9-10). வேதாகம ரூத் ஒரு அயல்தேசத்தாள். எனவே அவள் தனக்கும், தன் மாமியாருக்கும் சாப்பிட சேகரிக்கும்படியாக வயலில் அனுமதிக்கப்பட்டாள். நெருங்கிய உறவினரான போவாஸின் வயலில் அவள் சிதறிய கதிர்களைப் பொறுக்கியதால் அவளுக்கும், நகோமிக்கும் வீடும், பாதுகாப்பும் கிடைத்தது. அன்றைய தினத்தின் வேலையாக, வயல் ஓரங்களில் உள்ள சிதறிய கதிர்களை சேகரிப்பதற்கு, ரூத் தன் முயற்சி மற்றும் புத்திகூர்மையை உபயோகித்தாள். கர்த்தர் அவளை ஆசீர்வதித்தார்.

 

என் தோழி ரூத்தின் ஆர்வமும், வேதாகம ரூத்தின் அர்ப்பணிப்பும், கர்த்தர் எளிய, ஒடுக்கப்பட்ட மக்களை எப்படிக் காக்கிறார் என்பதை உணர்த்தி, அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்த என்னைத் தூண்டுகின்றன. சமூகத்தில் உள்ளவர்களுக்கு உதவவும், அது ஜீவனுள்ள நம் தேவனுக்கு நன்றிசெலுத்தும் விதமாக அமையவும், அவர்கள் எனக்குத் தூண்டுதலாக அமைகிறார்கள். கர்த்தரின் கருணையை நாம் மற்றவர்களுக்குக் காண்பிப்பதன்மூலம் நாம் எவ்வாறு தேவனை சேவிக்கமுடியும்?

முதலில் கர்த்தரிடம் கேட்பது

திருமணமான புதிதில், என் மனைவியின் விருப்பங்களைப் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டேன். இரவில் வீட்டில் அமைதியாக சாப்பிடுவதை விரும்புவாளா அல்லது ஒரு ஆடம்பர உணவகத்தில் சாப்பிட விரும்புவாளா? என் நண்பர்களோடு நேரம் செலவழிப்பதை ஒத்துக்கொள்வாளா அல்லது வார இறுதி நாட்களில் அவளுடன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாளா? ஒருமுறை, நான் ஊகித்து முடிவெடுப்பதற்குப் பதிலாக, “உன் விருப்பம் என்ன?” என்று அவளிடம் கேட்டேன்.

 

“எனக்கு எதுவானாலும் சம்மதமே,” என்று புன்முறுவலோடு பதில் சொன்னாள். “என்னிடம் கேட்டதே மகிழ்ச்சி,” என்றாள்.

 

சில சமயங்களில், தேவன் நான் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை சரியாகத் தெரிந்துகொள்ள தீவிர ஆர்வம் காட்டினேன். எந்த வேலையில் சேர்வது என்று முடிவெடுப்பதை உதாரணமாக கூறலாம். வழிநடத்துதலுக்காக ஜெபிப்பதும், வேதாகமத்தை வாசிப்பதும் தெளிவான பதிலை வெளிப்படுத்தவில்லை. ஆனால் தெளிவாக இருந்த ஒரு பதில் என்னவென்றால்: நான் கர்த்தரை நம்பி, அவரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருந்து, என் வழியை கர்த்தருக்கு ஒப்புவிப்பதே (சங். 37:3-5).

 

கர்த்தரின் வழிகளை நமது வழிகளுக்கு முன்பாக முதன்மைப்படுத்தும்போது, நம் விருப்பத்தைத் தேர்வு செய்யும் சுதந்தரத்தை அவர் நமக்குத் தருகிறார் என்பதை அப்போது புரிந்துகொண்டேன். அதாவது தவறாக, ஆண்டவருக்கு விருப்பமில்லாத நமது தேர்வுகளை விட்டுவிடவேண்டும். நெறியற்ற, தேவ பக்தியற்ற, அவருடன் நமக்கு இருக்கும் உறவை பாதிக்கக்கூடிய ஒன்றாக அது இருக்கலாம். மீதியுள்ள தேர்வுகள் கர்த்தரைப் பிரியப்படுத்தும் என்றால், அவற்றையே நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நமது அன்பின் பிதா நம் இருதயத்தின் வேண்டுதல்களைத் தர விரும்புகிறார். அது அவரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருக்கும் இருதயமாய் இருக்க வேண்டும்
(வச. 4).

நாம் சோர்வடையும்போது

சரியான காரியத்தைச் செய்ய முயல்வது சில சமயங்களில் சோர்வை ஏற்படுத்துகிறது. நல்லெண்ணத்தோடு நான் செய்யும் செயல்களும், பேசும் வார்த்தைகளும் யாருக்காவது பிரயோஜனமாயிருக்கிறதா என்று சில சமயங்களில் நாம் யோசிக்கலாம். ஒரு நண்பரை உற்சாகப்படுத்த, அதிகம் யோசித்து, ஜெபத்துடன் அனுப்பிய மின்னஞ்சலுக்கு கோபமாக பதில் வந்தபோது நானும் அப்படிதான் யோசித்தேன். அவரது பதில் எனக்கு கோபத்தையும், மன வருத்தத்தையும் தந்தது. எப்படி அவரால் என்னைத் தவறாக புரிந்துகொள்ள முடிந்தது?

 

நானும் அவருக்கு கோபமாக பதில் அனுப்பும் முன் சற்று யோசித்தேன். இயேசு உங்களை நேசிக்கிறார் என்று நாம் ஒருவருக்குக் கூறும்போது அதன் பலனை (குறிப்பாக நாம் விரும்பும் பலனை) நம்மால் எப்போதும் பார்க்க முடியாது என்பதை நினைவுகூர்ந்தேன். கர்த்தரை நோக்கி ஈர்க்கும் எண்ணத்தில் நாம் பிறருக்கு நல்லது செய்யும்போது, அவர்கள் நம்மை வெறுத்து ஒதுக்கலாம். ஒருவர் சரியான காரியத்தைச் செய்யத் தூண்டுவதற்கு நாம் எடுக்கும் முயற்சியை அவர்கள் பொருட்படுத்தாமல் இருக்கலாம்.

 

கரிசனையோடு நாம் எடுக்கும் முயற்சிகளை, பிறர் ஏற்காததால் நாம் சோர்ந்துபோகும்போது, கலாத்தியர் 6 நாம் படிப்பதற்கு ஏற்ற பகுதியாகும். நம் உள்நோக்கத்தை ஆராயும்படி பவுல் கூறுகிறார் – நாம் பேசுவதையும், சொல்வதையும் ‘சோதித்துப் பார்க்கச்’ சொல்கிறார் (வச. 1-4). அப்படி நாம் செய்தபிறகு, விடாமல் முயற்சி செய்ய ஊக்கப்படுத்துகிறார். “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும் நன்மை செய்யக்கடவோம்” (வச. 9-10).

 

நாம் தொடர்ந்து தேவனுக்காக ஜீவிக்கவேண்டும் என்பதை அவர் விரும்புகிறார். இதுவே “நன்மை செய்வது” – அதாவது பிறருக்காக ஜெபிப்பதும், அவர்களுக்கு ஆண்டவரைக் குறித்து எடுத்துச் சொல்வதுமாகும். அதற்கான பலனை அவர் பார்த்துக்கொள்வார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவின் பேரன்பு

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் திரைப்படத்தில் ஜிம் கேவிசெல் இயேசுவாக நடிக்கும் முன், இயக்குனர் மெல்கிப்சன் இந்த பாத்திரம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் திரையுலகில் அவரது தொழிலை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இருப்பினும் கேவிசெல் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், "அது கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார். 

படப்பிடிப்பின் போது, கேவிசெல் மின்னலால் தாக்கப்பட்டார், சுமார் இருபது கிலோ எடை குறைந்தார், மற்றும் கசையடி காட்சியின் போது தற்செயலாக சாட்டையால் அடிபட்டார். பின்னர், “மக்கள் என்னைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் மூலம் மனமாற்றம் உண்டாகும்" என்றார். அந்த படம் கேவிசெல் மற்றும் படக்குழுவிலிருந்த மற்றவர்களை ஆழமாக பாதித்தது, மேலும் அதைப் பார்த்த லட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியது என்பதை தேவன் மட்டுமே அறிவார். 

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் என்பது, குருத்தோலை ஞாயிறு அன்று அவரது வெற்றி பவனியில் துவங்கி, அவர் அனுபவித்த துரோகம், கேலி, கசையடி, சிலுவையில் அறையப்படுதல் உள்ளிட்ட இயேசுவின் மிகப்பெரிய பாடுகளின் நேரத்தைக் குறிக்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் இச்சம்பவங்கள் காணப்படுகின்றன. 

ஏசாயா 53 இல், அவருடைய பாடுகளும் அதன் விளைவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (வ.5). நாமெல்லாரும் "ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்" (வ.6). ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த காரணத்தால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். அவருடைய பாடுகள் நாம் அவருடன் இருப்பதற்கான வழியை உண்டாக்கியது. 

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர். 

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார். 

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம். 

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் ‘மாண்டடம்’ அதாவது “கட்டளை” என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: “நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.” (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.