ஊக்குவிப்பவர்களின் ஆசீர்வாதம்
ராஜாவின் பேச்சு என்று அர்த்தம் கொள்ளும் த கிங்ஸ் ஸ்பீச் (The King’s Speech) என்ற 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம், தன் சகோதரன் அரியணையைத் துறந்ததால் எதிர்பாராத விதமாக மன்னராகும் இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் VI ஐப் பற்றியது. இரண்டாம் உலகப்போர் வரக்கூடும் என்ற சூழ்நிலையில், பிரபலமாகி வந்த வானொலியில் பேச, நன்கு பேசக்கூடிய தலைவர் வேண்டும் என்று அரசு அதிகாரிகள் விரும்பினார்கள். ஆனால் ஜார்ஜ் VI மன்னருக்கு திக்குவாய் ஒரு பெரிய தடையாக இருந்தது.
ஜார்ஜ் மன்னரின் மனைவி எலிசபெத் அந்தத் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்த விதம் என்னை அதிகம் கவர்ந்தது. ஜார்ஜ் மன்னர் தனது திக்குவாய் பிரச்சனையை சமாளிக்க முயற்சி செய்யும்போது, எலிசபெத் தொடர்ந்து அவரை ஊக்கப்படுத்துகிறார். மன்னரது பிரச்சனையைத் தாண்டி, போரின்போது நல்ல முறையில் அவர் ஆட்சி செய்ய எலிசபெத்தின் மாறாத அர்ப்பணிப்பு பெரிதும் உதவியது.
கடினமான சூழ்நிலைகளில் நிலையான ஆதரவு அளித்து ஊக்குவித்தவர்களைப்பற்றி வேதாகமம் எடுத்துக்கூறுகிறது. இஸ்ரவேலின் யுத்தங்களின்போது, மோசேக்கு ஆரோன் மற்றும் ஊர் ஆகிய இருவரின் ஆதரவு கிடைத்தது (யாத்திராகமம் 17:8-16). எலிசபெத் கர்ப்பந்தரித்திருந்த தன் உறவினர் மரியாளை ஊக்கப்படுத்தினாள் (லூக். 1:42-45).
பவுல் மனந்திரும்பிய பிறகு, அவருக்கு பர்னபாவின் ஆதரவு தேவைப்பட்டது. பர்னபா என்ற பெயருக்கு “ஆறுதலின் மகன்” என்று பொருள். சீஷர்கள் பவுலைக்கண்டு பயந்தபோது, தனக்கிருந்த நற்பெயர் கெடும் வாய்ப்பு இருந்தாலும், பவுலுக்காக உத்தரவாதம் அளித்தார் (அப்போஸ்தலர் 9:27). கிறிஸ்தவ சபையினர் பவுலை ஏற்றுக்கொள்ள பர்னபாவின் உத்தரவாதம் தேவைப்பட்டது. பின்னர் பர்னபா பவுலின் பயணத்திலும், பிரசங்கத்திலும் உற்ற துணையாக இருந்தார் (அப்போஸ்தலர் 14). ஆபத்துகள் சூழ்ந்திருந்தாலும், அவர்கள் இருவரும் சேர்ந்து சுவிசேஷத்தை அறிவித்தனர்.
கிறிஸ்தவ விசுவாசிகள் இன்றும் “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்ய” அழைக்கப்படுகிறார்கள். பிறரை, குறிப்பாக கஷ்டமான சூழ்நிலையில் இருப்பவர்களை, ஊக்குவிக்க விருப்பம் கொண்டவர்களாக நாம் இருப்போமாக.
எதிர்பாராத வழிகள்
இங்கிலாந்தில் ஜெர்ஸி மிருகக்காட்சி சாலையில் உள்ள 20 அடி உயரம்கொண்ட கொரில்லா வேலித் தடுப்புக்குள், 1986ஆம் ஆண்டு ஐந்து வயது லெவன் மெரிட் விழுந்துவிட்டான். அவன் பெற்றோர்களும், பார்வையாளர்களும் உதவி வேண்டித் தவித்தபோது, ஜம்போ என்ற சில்வர்பேக் வகை ஆண் கொரில்லா அசைவற்றுக் கிடந்த சிறுவனுக்கும் மற்ற கொரில்லாக்களுக்கும் நடுவே பாதுகாப்பாக நின்றுகொண்டது. பின்பு சிறுவனின் முதுகை மெதுவாகத் தடவிக் கொடுத்தது. லெவன் அழ ஆரம்பித்தபோது, மிருகக்காட்சி சாலை ஊழியர்களும், மருத்துவ ஊர்தி ஓட்டுநரும் அவனைக் காப்பாற்றுவதற்கு வசதியாக, ஜம்போ மற்ற கொரில்லாக்களை தங்கள் தடுப்புப்பகுதிக்குள் போகச்செய்தது. முப்பது ஆண்டுகள் ஆனபிறகும், மென்மையான ஜம்போ ஒரு பாதுகாவலனாக தன்னை காத்துக்கொண்டதையும், எதிர்பாராத விதமாக நல்ல முறையில் நடந்துகொண்டதையும், இன்றும் லெவன் ஆச்சரியமாகப் பேசுகிறார். அந்த நிகழ்ச்சி கொரில்லாக்கள் குறித்த அவர் கண்ணோட்டத்தை மாற்றியது.
கர்த்தர் எப்படி நடந்துகொள்வார் என்ற எலியாவின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கர்த்தாதி கர்த்தர், கன்மலைகளை உடைக்கக்கூடிய பெருங்காற்று மூலமாகவும், பூமி அதிர்ச்சி மூலமாகவும், அக்கினி மூலமாகவும், தன்னைப்பற்றி எப்படி நினைக்கக்கூடாது என்பதை எலியாவுக்கு உணர்த்தினார். அதன்பின், அமர்ந்த மெல்லிய சத்தம் மூலம் கர்த்தர் தன் இருதயத்தையும், தன் பிரசன்னத்தையும் உணர்த்தினார் (I இராஜாக்கள் 19:11-12).
எலியா இதற்குமுன் கர்த்தரின் வல்லமையைப் பார்த்திருக்கிறார் (18:38-39). ஆனால் மகத்துவமான, பயத்தைத் தரக்கூடிய கடவுள்களையும் விட மேலானவராக அறியப்பட விரும்பும் கர்த்தரை அவர் முழுவதுமாக புரிந்துகொள்ளவில்லை (19:10, 14).
இறுதியில், அமர்ந்த மெல்லிய சத்தத்தின் அர்த்தம் வல்லமை நிறைந்த, மென்மையான இயேசுவில் வெளிப்பட்டது. இயேசு “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று சொன்னார். பின்பு அவர் சிலுவையில் அறையப்பட அமைதியாக தன்னை ஒப்புக்கொடுத்தார் – நம்மை நேசிக்கும் ஆண்டவரின் எதிர்பாராத, கருணை நிறைந்த செயலாகும்.
நம்பிக்கை எங்கே கிடைக்கும்
எலிசபெத் போதை மருந்துப் பழக்கத்துக்கு அடிமையாகி நீண்ட நாட்கள் அவஸ்தைப்பட்டாள். அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டபோது, அவள் மற்றவர்களுக்கு உதவ நினைத்தாள். சிறு குறிப்புகளை எழுதி, தன் பெயர் போடாமல், தன் ஊரில் வெவ்வேறு இடங்களில் வைத்துவிடுவாள். கார்களின் முன்புறம் சொருகி வைப்பதோடு, பூங்காக்களில் உள்ள கம்பங்களில் ஒட்டி வைப்பாள். முன்பு அவள் நம்பிக்கை தரும் வார்த்தைகளைத் தேடுவாள். அதனால் தன்னைப்போல் தேடும் மற்றவர்களுக்காக அவற்றை எழுதி வைக்கிறாள். அவள் எழுதிய குறிப்பு ஒன்று “அன்புடன், நம்பிக்கையை அனுப்புகிறேன்” என்ற வார்த்தைகளோடு முடிந்தது.
நம்பிக்கை, அன்பு – இதையே இயேசு தருகிறார். அவர் ஒவ்வொரு நாளும் தம் அன்பைத் தருவதோடு, நம்பிக்கையால் நம்மை பலப்படுத்துகிறார். அவரது அன்பு துளித்துளியாக அளந்து கொடுக்கப்படாமல், அவரது இருதயத்திலிருந்து பெருக்கெடுத்து நமது இருதயங்களில் ஊற்றப்படுகிறது. மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோமர் 5:5). நமது கஷ்டங்களின்மூலம் பொறுமையையும், நற்பண்புகளையும் நாம் பெற்றுக்கொள்ள அவர் விரும்புவதோடு, நமக்கு நம்பிக்கை மிகுந்த திருப்தியான வாழ்க்கையைத் தர விரும்புகிறார். நாம் அவரைவிட்டு தூரமாயிருந்தாலும், அவர் நம்மை நேசிக்கிறார் (வச. 6-8).
நீங்கள் நம்பிக்கை தரும் அடையாளங்களைத் தேடுகிறீர்களா? அவருடனான உறவில் வளர, நம்மை அழைப்பதன்மூலம், கர்த்தர் நமக்கு நம்பிக்கையையும், அன்பையும் தருகிறார். நிறைவான வாழ்க்கை வேண்டும் என்ற நம் நம்பிக்கை, நம்மை எப்போதும் கைவிடாத அவர் அன்பில் வேரூன்றி இருக்கிறது.
சரியான நேரம்
என் முதல் பிள்ளையை கல்லூரிக்கு அனுப்புவதற்காக நேற்று நான் விமான டிக்கெட் வாங்கினேன். விமானத்தைத் தேர்வு செய்வதற்குள் நான் சிந்திய கண்ணீரால் அதிகம் நனைந்தாலும், என் கணினியின் விசைப்பலகை (keyboard) வேலை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பதினெட்டு ஆண்டுகளாக அனுதின வாழ்க்கையை அவளோடு அனுபவித்ததை நினைக்கும்போது, அவள் என்னை விட்டு கல்லூரிக்குச் செல்வது அதிகக் கவலையைத் தருகிறது. ஆனாலும், அவள் பிரிவு கஷ்டமாக இருக்கும் என்கிற காரணத்துக்காக அவளுக்குக் கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளை இழக்கச் செய்யமாட்டேன். அவளது வாழ்வின் இந்தத் தருணத்தில், அவள் தன் பயணத்தைத் தொடங்கி, புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதும், இந்த தேசத்தின் மற்றொரு பகுதியை அறிந்துகொள்வதும் மிகச் சரியான விஷயமாகும்.
குழந்தை வளர்ப்பின் ஒரு பகுதி முடியும் இந்த சமயத்தில், இன்னொரு பகுதி தொடங்குகிறது. அதுவும் புதிய சவால்களும், புதிய சந்தோஷங்களும் நிறைந்ததாக இருக்கும். இஸ்ரவேலின் மூன்றாவது இராஜாவான சாலொமோன் “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” (பிரசங்கி 3:1) என்று கர்த்தர் ஒவ்வொன்றிற்கும் ஒரு காலத்தைக் குறித்திருப்பதைச் சொல்கிறார். நம் வாழ்வில் நேரிடும் சம்பவங்கள் – அவை நமக்கு சாதகமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், மனிதராகிய நமக்கு அவற்றின் மேல் எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் தன் மிகுந்த வல்லமையால், கர்த்தர் “சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாய்ச் செய்கிறார்” (வச. 11).
மனதுக்கு சஞ்சலமான சமயங்களில், அதிலிருந்து நன்மையைத் தருவார் என்று நாம் கர்த்தரை நம்பலாம். நமது வசதிகளும், நமது சந்தோஷங்களும் மாறி மாறி வரலாம். ஆனால் தேவன் செய்வது “என்றைக்கும் நிலைக்கும்” (வச. 14). சில பருவங்களை நாம் ரசிக்க முடியாமல் இருக்கலாம். சில, மிகுந்த வேதனை அளிப்பவையாக இருக்கலாம். ஆனாலும் அவற்றையும் தேவன் அழகுபெறச் செய்ய முடியும்.
அவர் உள்ளங்கைகளில் வரையப்பட்டிருக்கிறோம்
சார்ல்ஸ் ஸ்பர்ஜன் 1800ஆம் ஆண்டை ஒட்டிய காலக்கட்டத்தில் லண்டன் தேவாலயத்தில் “இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” என்ற ஆழ்ந்த பொருள் நிறைந்த ஏசாயா 49:16ஆம் வசனத்தைப் பிரசங்கிப்பதை அதிகம் விரும்பினார். “இந்த வசனத்தை நூற்றுக்கணக்கான தடவை பிரசங்கிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வசனம் ஒரு பொக்கிஷம் போன்றதாக இருப்பதால், நாம் இதை மீண்டும் மீண்டும் தியானிக்க முடியும்.
கர்த்தர் இஸ்ரவேலுக்கும், தம் ஜனத்திற்கும் கொடுத்த வாக்குத்தத்தம், மற்றும் பிதாவின் குமாரனாகிய கிறிஸ்து நமக்காக சிலுவையில் மரித்தது ஆகியவற்றிற்கு உள்ள அழகான தொடர்பை ஸ்பர்ஜன் சுட்டிக்காட்டுகிறார். “அவர் கைகளில் உள்ள காயங்கள் என்ன?... வரைவதற்கு, செதுக்குபவர் ஆணியையும், கத்தியையும் பயன்படுத்தினார். உண்மையிலேயே அவரது ஜனம், அவரது உள்ளங்கைகளில் வரையப்பட, அவர் சிலுவையில் அறையப்பட வேண்டும்”, என்று ஸ்பர்ஜன் குறிப்பிடுகிறார். தம் ஜனத்தை, தம் உள்ளங்கைகளில் வரைய தேவன் வாக்குக் கொடுத்தபடியால், நாம் நம் பாவத்தில் இருந்து விடுவிக்கப்படும்படியாக, இயேசு தன் கரங்களை சிலுவையில் நீட்டி, ஆணிகளைத் தன் கரங்களில் அடிக்கப்பெற்றார்.
ஆண்டவர் நம்மை மறந்துவிட்டார் என்று எப்போதாவது நாம் நினைக்க நேர்ந்தால், தேவன் நமக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் நம் நினைவுக்கு வர, நம் உள்ளங்கைகளைப் பார்த்தாலே போதும். நமக்காக அவர் தமது கைகளில், அழிக்கமுடியாத தழும்பைப் பெற்றுள்ளார். நம்மை அந்த அளவுக்கு அவர் நேசிக்கிறார்.
அன்பென்னும் மரபுரிமை
மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
மத்தேயு 5:16
என் கொள்ளுப்பாட்டியின் வேதாகமத்தை நான் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு பொக்கிஷம் எனக்குக் கிடைத்தது. ஒரு குழந்தையின் கையெழுத்தில் “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்” (மத். 5:3-4) என்ற வசனங்கள் எழுதப்பட்ட ஒரு சிறிய காகிதம் அந்த வேதாகமத்தில் இருந்து விழுந்தது. அந்த வசனங்களுக்குப் பக்கத்தில் தடுமாற்றத்துடன் எழுதப்பட்ட என் அம்மாவின் கையெழுத்து இருந்தது.
வசனங்களைப் படித்து, அவற்றை மனனம் செய்ய ஏதுவாக, தன் பேரப்பிள்ளைகளுக்கு வேதாகம வசனங்களை எழுதக் கற்றுக்கொடுப்பது என் கொள்ளுப்பாட்டியின் வழக்கமாக இருந்தது. அந்த காகிதத்தைப் பார்த்தவுடன், அதன் பின்னணி என் நினைவுக்கு வந்து, என் கண்களில் கண்ணீர் வந்தது. என் அம்மா சிறுமியாக இருந்தபோது, என் தாத்தா இறந்துவிட்டார். என் அம்மாவின் தந்தை இறந்த சில வாரங்களிலேயே அவரது தம்பியும் (என் மாமா) இறந்துபோனார். இந்த துயரமான சூழ்நிலையில் என் கொள்ளுப்பாட்டி, என் அம்மாவுக்கு இயேசு கிறிஸ்து மட்டுமே தரக்கூடிய சமாதானம் பற்றி எடுத்துக்கூறினார்.
“அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும், உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்,” (2 தீமோத்தேயு 1:5) என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார். விசுவாசம் என்பது பரம்பரையாய் வரும் சொத்து அல்ல. அது பகிரப்படுவது. தீமோத்தேயுவின் பாட்டியும், அம்மாவும் தங்கள் விசுவாசத்தை அவருடன் பகிர்ந்துகொண்டார்கள். அவரும் விசுவாசித்தார்.
இயேசுவில் நம்பிக்கை வைக்கும்படி நமக்கு நெருக்கமானவர்களை நாம் ஊக்குவிக்கும்போது, நாம் அன்பு என்னும் பரம்பரைசொத்தை அவர்களுக்குக் கொடுக்கிறோம். என் கொள்ளுப்பாட்டி தன் இரட்சகர் மீது வைத்திருந்த அன்பின் சாட்சியாக என் அம்மாவின் சிறு காகிதக் குறிப்பு இருந்தது. நமக்குப் பின் வருபவர்களுக்கு கிறிஸ்துவைப் பற்றிக் கூறுவது எத்தனை நன்மையானது.
ஜெபிக்க சரியான முறை
நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
மத்தேயு 6:6
ஜெப விண்ணப்பங்களை சிலர் குறிப்பேட்டில் எழுதிவைப்பார்கள். தினமும் உபயோகிப்பதால் அவை கிழிந்த நிலையில் இருக்கும். சிலர் ஒவ்வொரு ஜெபத்தையும், ஒவ்வொரு துதியையும் எழுதி, அந்தப் பட்டியலைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கும். மற்றவர்களோடு சேர்ந்து ஜெபிப்பவர்கள், மற்றும் தங்கள் கட்டில் அருகே தரைவிரிப்பு தேய்ந்துபோகும் அளவுக்கு முழங்கால்படியிட்டு ஜெபிப்பவர்களால் நான் அதிக ஊக்கம் பெறுகிறேன். நானும் அவர்களைப்போல ஜெபம் செய்ய பல ஆண்டுகள் முயன்றேன். ஒரு நிறைவான ஜெப வாழ்க்கையை விரும்பினேன். என்னைவிட நன்றாகப் பேசக்கூடியவர்களைப் போல நானும் பேச முயற்சி செய்தேன். ஜெபிப்பதற்கு சரியான முறையைத் தெரிந்துகொள்ள அதிக வாஞ்சையாக இருந்தேன். அதை ஒரு புதிராக நினைத்து, அதற்கு விடை காண முயற்சி செய்தேன்.
இறுதியில் நம் ஆண்டவர் நம்மைத் தாழ்த்தும் ஒரு ஜெபத்தையே விரும்புகிறார் என்று தெரிந்துகொண்டேன் (மத்தேயு 6:5). ஒரு நெருங்கிய உரையாடலுக்கு அவர் நம்மை அழைக்கிறார், அதைக் கேட்பதாக வாக்குக்கொடுக்கிறார். (வச. 6). மனனம் செய்த வார்த்தைகளோ, வாக்கியங்களோ, கற்பனை வளமுள்ள வார்த்தைகளோ அவருக்குத் தேவை இல்லை (வச. 7). ஜெபம் என்பது ஒரு வெகுமதி, அவரது மாட்சிமையை கனப்படுத்த ஒரு வாய்ப்பு (வச. 9-10), அவர் நமக்கு முன்குறித்திருப்பதில் நாம் காட்டும் நம்பிக்கை (வச. 11), அவர் அளிக்கும் மன்னிப்பு மற்றும் வழிகாட்டுதலில் நமக்கு இருக்கும் உறுதி (வச. 12-13)என்று கூறுகிறார்.
நம் வார்த்தைகளிலும், நம் எண்ணங்களிலும் இருக்கும் ஜெபங்களையும், நம் கன்னங்களில் கண்ணீராக வழியும் அமைதியான ஜெபங்களையும் கேட்பதாகவும், கரிசனை கொள்வதாகவும் கர்த்தர் நமக்கு உறுதி அளிக்கிறார். கர்த்தர் மீதும், அவர் அன்பின்மீதும் நாம் நம்பிக்கை வைக்கும்போது, அவரை மட்டுமே சார்ந்து இருக்கும் தாழ்மையான இருதயத்தை ஒப்புவித்து ஜெபிப்பதே சரியான ஜெபம் என்பதை புரிந்துகொள்வோம்.
உங்களுக்கு நல்லதா?
எனக்கு கசப்பான சாக்லெட் பிடிக்கும் என்பதால், ஒரு முறை “கசப்பான அடர் நிற சாக்லெட் நல்லதா” என்று இணையத்தில் தேடினேன். பல வகையான பதில்கள் கிடைத்தன – அவற்றில் சில நல்ல பதில்கள், சில மோசமான பதில்கள். எந்த விதமான உணவு பதார்த்தத்துக்கும் இது போல் நம்மால் இணையத்தில் தேடமுடியும். பால் உங்களுக்கு நல்லதா? காஃபீ உங்களுக்கு நல்லதா? சாதம் நல்லதா? இது போன்ற கேள்விகளுக்கு தலைசுற்றும் அளவுக்கு பதில்கள் குவிந்து கிடக்கின்றன. அதனால் இப்படித் தேடுவதே உங்களுக்கு நல்லதா என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது தலைவலியை வரவழைக்கக்கூடும்!
ஆனால் உங்களுக்கு 100 சதவீதம் நல்லதை எதையாவது தேடுகிறீர்கள் என்றால், நான் பரிசுத்த வேதாகமத்தை உங்களுக்குப் பரிந்துரை செய்வேன். தேவனுடன் நல்ல உறவை ஏற்படுத்த விரும்பும், கிறிஸ்துவைப் பின்பற்றும் மக்களுக்கு அது என்ன செய்ய முடியும் என்பதைப் பாருங்கள்.
நீங்கள் பரிசுத்தமாய் இருக்க உதவும் (சங். 119:9, 11).
உங்களை ஆசீர்வதிக்கும் (லூக். 11:28).
உங்களை ஞானமுள்ளவர்களாக மாற்றும் (மத். 7:24).
ஒளியையும், புரிந்துகொள்ளுதலையும் தரும் (சங். 119:130).
நீங்கள் ஆவியில் வளர உதவும் (I பேது. 2:2).
நம் ஆண்டவர் நல்லவர். “கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்” என்று சங்கீதம் 145:9 கூறுகிறது. அந்த தயவால், அவரை நேசிக்கும் அனைவரும் கர்த்தர்வுடன் உள்ள உறவை மேம்படுத்துவதற்கு உதவ, நமக்கு ஒரு வழிகாட்டியைக் கொடுத்துள்ளார். தேர்ந்தெடுக்க அநேக விஷயங்கள் இந்த உலகில் இருக்கும்போது, அவற்றில் சரியானதைத் தேர்ந்தெடுத்து நாம் வாழ முயற்சிக்கும்போது, நமக்கு எது நல்லது என்று வேதாகமத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதற்காக அவரைத் துதிப்போம். சங்கீதக்காரரோடு சேர்ந்து “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்” (சங். 119: 103) என்று நாமும் சொல்லுவோம்.
அதிகபட்ச திருப்தி
வேதாகமப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் நாங்கள் சிற்றுண்டி வினியோகித்தபோது, ஒரு சிறுவன் தனது சிற்றுண்டியை அவசரமாக விழுங்கினான். பின், தன் மேஜையில் அமர்ந்து சாப்பிட்ட சிறுவர்கள் மீதம் வைத்திருந்ததையும் சாப்பிட்டான். ஒரு கவரில் நான் பாப்கார்ன் கொடுத்த பிறகும் அவன் திருப்தி அடையவில்லை. அந்த நிகழ்ச்சியின் தலைவர்களாக, அந்தச் சிறுவன் ஏன் அவ்வளவு பசியாக இருக்கிறான் என்று சிறிது கவலைப்பட்டோம்.
நமது உணர்ச்சிகளைப் பொறுத்தவரை, நாமும் அந்தச் சிறுவனைப் போலவே இருக்கிறோம் என்று தோன்றியது. நமது ஏக்கங்களை திருப்திப்படுத்த என்ன வழி என்று யோசிக்கிறோம். ஆனால் எது நம்மை முழுவதுமாக திருப்திப்படுத்துகிறது என்பதை நாம் கண்டு பிடிப்பதேயில்லை.
“நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்” (ஏசாயா 55:1) என்று ஏசாயா தீர்க்கதரிசி நம்மை அழைக்கிறார். ஆனால் “நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்தி செய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்?” (வச. 2) என்றும் கேட்கிறார். சரீரப் பிரகாரமான பசியைப் பற்றி மட்டும் அவர் இங்கே குறிப்பிடவில்லை. தம் பிரசன்னம் கூட இருக்கும் என்று தேவன் கொடுத்த வாக்குறுதி மூலமாக, அவர் நம் ஆத்தும, உணர்வுப் பசிகளை தீர்க்கமுடியும். மூன்றாம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “நித்திய உடன்படிக்கை” கர்த்தர் தாவீதுக்கு 2 சாமுவேல் 7:8-16ல் கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்துகிறது. தாவீதின் பரம்பரையிலே, மக்களை கர்த்தரோடு இணைப்பதற்காக ஒரு இரட்சகர் தோன்றுவார். பின்னர் யோவான் 6:35, 7:37 ஆகிய வசனங்களில் ஏசாயா கொடுத்த அதே அழைப்பை இயேசுவும் கொடுக்கிறார். இதன்மூலம் ஏசாயாவும், மற்ற தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்த இரட்சகர் தானே என்று வெளிப்படுத்துகிறார்.
பசியாய் இருக்கிறீர்களா? அவரது சமூகத்தில் வந்து நிறைவாய்ப் பெற்றுக்கொள்ளும்படி தேவன் உங்களை அழைக்கிறார்.