ஆன் ஃப்ராங்க் என்ற சிறுபெண், இரண்டாம் உலகப்போரின்போது அவள் குடும்பத்தினர் எப்படி பல வருடங்கள் ஒளிந்து வாழ்ந்தார்கள் என்பது குறித்து எழுதிய நாள்குறிப்பின்மூலம் அதிக பிரபலமடைந்தவள். பின்னர் அவள் ஜெர்மானிய நாசிக்களின், மரணத்தை எதிர்நோக்கும் முகாமில் சிறைவைக்கப்பட்டாள். அப்போது அவளுடன் இருந்தவர்கள் அவள் எப்போதும் தங்கள்மேல் மனதுருக்கம் கொண்டவளாக இருந்தாள் என்று கூறினார்கள். “அவளை அறிந்தவர்களுக்கு அவள் அருகாமை ஆசீர்வாதமாக இருந்தது. இதனால் கென்னெத் பேய்லி என்ற அறிஞர், அவளுக்கு ஒருபோதும் “மனதுருக்க சோர்வு” ஏற்படவில்லை என்று குறிப்பிடுகிறார்.

சின்னாபின்னமாகியுள்ள உலகில் வாழ்வதால் ஏற்படும் விளைவுகளில் மனதுருக்க சோர்வும் ஒன்று. மனிதர்கள் படும் அளவுக்கடங்காத பாடுகளும், கஷ்டங்களும், அதிக நல்லெண்ணம் கொண்டவர்களின் உணர்ச்சிகளையும் மரத்துப்போக வைத்துவிடும். ஆனால் கிறிஸ்துவை மனதுருக்க சோர்வு ஒருபோதும் ஆட்கொள்ளவில்லை. “இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார். அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி(னார்)” என்று மத்தேயு 9:35-36 கூறுகிறது. 

உலகப்பிரகாரமான தேவைகள் மட்டுமல்லாமல், ஆத்துமாவும் நொறுங்குண்டதால் நம் உலகம் அதிக பாதிப்படைந்துள்ளது. இந்தத் தேவைகளை சந்திக்க இந்த உலகத்திற்கு வந்த இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களையும் இந்தப்பணியில் ஈடுபடச்சொல்கிறார் (வச. 37-38). தனிமை, பாவம், சுகவீனம் ஆகியவற்றால் மனிதர்கள் படும் கஷ்டம் மற்றும் தேவைகளை சந்திக்க பணியாட்களை எழுப்புமாறு அவர் பிதாவிடம் ஜெபித்தார். அவருடைய இருதயத்தைப் பிரதிபலிக்கும், மற்றவர்கள்மேல் கரிசனைகொள்ளும் ஒரு இருதயத்தை பிதா நமக்குத் தந்தருள்வாராக. அவருடைய ஆவியின் வல்லமையால் துன்பத்தில் இருப்பவர்களுக்கு அவருடைய மனதுருக்கத்தின் கரிசனையை நம்மால் வெளிப்படுத்தமுடியும்.