மெக்சிகோ வளைகுடாவில் கெய்ட்லின் தன் நண்பர்களுடன் நீந்திக்கொண்டிருந்தபோது, ஒரு சுறா அவள் கால்களைக் கவ்வி, உடலை இழுத்தது. தன்னை விடுவித்துக்கொள்ள, கெய்ட்லின் சுறாவின் மூக்கில் ஓங்கிக் குத்தினாள். அந்த சுறா அவளை விடுவித்து, தோல்வியைச் சந்தித்து, நீந்திச்சென்றது. அந்த சுறா கடித்ததால் நூறு தையல்களுக்கு மேல் போடும் அளவிற்கு கெய்ட்லினுக்குக் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அதனால் கெய்ட்லினை தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.

இயேசு மரணத்தின் கூரை முறித்ததையும், தன்னைப் பின்பற்றுபவர்களை அச்சுறுத்தி, தோல்வியடையச் செய்ய மரணத்திற்கு இருந்த வல்லமையை முடிவுக்குக் கொண்டுவந்ததையும் இந்த நிகழ்ச்சி எனக்கு நினைவுபடுத்துகிறது. “அவர் (இயேசு) மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது” (அப்போஸ்தலர் 2:24) என்று பேதுரு கூறுகிறார்.

பேதுரு எருசலேமில் இருந்த ஒரு கூட்டத்தினரிடம் இந்த வார்த்தைகளைக் கூறினார். அவர்களில் பலர், இயேசுவைக் கண்டனம் செய்து, “சிலுவையில் அறையுங்கள்” என்று கூச்சலிட்டவர்களாக இருந்திருக்கலாம். அதன் விளைவாக ரோம போர்ச் சேவகர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவர் மரித்துவிட்டார் என்று அவர்கள் உறுதி செய்யும்வரை அவர் அந்த சிலுவையில் தொங்கினார். இயேசுவின் உடல் ஒரு கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிதா அவரை உயிரோடு எழுப்பும் வரை அவர் உடல் அந்தக் கல்லறையில் மூன்று நாட்கள் இருந்தது. அவர் உயிர்த்தெழுந்த பிறகு, பேதுருவும், மற்றவர்களும் அவரோடு பேசி, அவரோடு சாப்பிட்டு,  நாற்பது நாட்கள் கழித்து அவர் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதைப் பார்த்தார்கள் (அப்போஸ்தலர் 1:9).

சரீரப் பிரகாரமான பாடுகள், மன உளைச்சல்கள் மத்தியில், இந்த உலகத்தில் இயேசுவின் வாழ்க்கை முடிவடைந்தது. ஆனால் தேவனின் வல்லமை சாவின் கூரை முறித்தது. இதனால், மரணமோ, வேறு எந்த விதமான போராட்டமோ, அதன் பிடியில் நம்மை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது. விசுவாசிகள் அனைவரும், ஒரு நாள், நித்தியமான வாழ்வையும், முழுமையையும் தேவ பிரசன்னத்தில் அனுபவிப்பார்கள். இப்படிப்பட்ட எதிர்காலத்தைப்பற்றி யோசித்தால், இன்று நாம் விடுதலையைப் பெற்றுக்கொள்ள முடியும்.