1984 ஆம் ஆண்டு, பாடகர் பாப் டைலனிடம் “இன்னும் சமாதானத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா?” என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார்.

“சமாதானம் என்பதே கிடையாது,” என்று டைலன் பதில் கூறினார். அவர் பதில் சர்ச்சைக்குள்ளானாலும், எளிதில் கிடைக்காத அரிய விஷயமாகவே சமாதானம் இருக்கிறது.

கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன், பெரும்பாலான தீர்க்கதரிசிகள் சமாதானத்தை முன் அறிவித்தார்கள். ஆனால் தேவனின் தீர்க்கதரிசி அவர்களில் ஒருவராக இருக்கவில்லை. “என் வாக்குக்குச் செவி கொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்” (எரேமியா 7:23) என்று இறைவன் கூறியதை எரேமியா ஜனங்களுக்கு நினைவுபடுத்தினார். கள்ளத் தீர்க்கதரிசிகள் “சமாதானம், சமாதானம்” (8:11) என்று கூறினார்கள். ஆனால் எரேமியா பேரழிவை முன் அறிவித்தார். எருசலேம் கிமு 586ல் வீழ்ந்துபோனது.

சமாதானம் என்பது அரிய விஷயம். ஆனால் பயங்கரமான தீர்க்கதரிசனங்களைக் கொண்ட எரேமியாவின் புத்தகத்தில், நம்மை இடைவிடாமல் நேசிக்கும் ஆண்டவரைப் பற்றி அறிந்துகொள்கிறோம். “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்” என்று ஆண்டவர் கீழ்ப்படியாத தம் ஜனங்களிடம் கூறினார். “மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன்” (31:3-4).

ஆண்டவர், அன்பு மற்றும் சமாதானத்தின் தேவன். அவரை நாம் மீறும்போது முரண்பாடுகள் ஏற்படுகின்றன. பாவம் உலகின் சமாதானத்தை அற்றுப்போகப்பண்ணி, நம் ஒவ்வொருவருடைய உள்ளான மனச் சமாதானத்தையும் குலைத்துப்போடுகிறது. தேவனோடு நம்மை ஒப்புரவாக்கி, நமக்கு மன சமாதானத்தைத் தரும்படியாக இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். “நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோமர் 5:1) என்று பவுல் எழுதுகிறார். இதுவரை எழுதப்பட்டவற்றில், பவுலின் வார்த்தைகளே அதிக நம்பிக்கை தரும் வார்த்தைகள்.

நாம் போர் நிறைந்த பகுதியில் வாழ்ந்தாலும், போர் என்ற வார்த்தைகூட காதில் விழாத அமைதியான சூழலில் வாழ்ந்தாலும், அவரில் சமாதானம் பெற கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.