ரம்பமும் ஒரு ஜெபமும்
என்னுடைய அத்தை க்லேடிஸ் துணிச்சல் மிக்க பெண். அவர் துணிச்சலை நான் மதித்தாலும், சில சமயங்களில் அது எனக்கு கவலையைத்தரும். என் கவலைக்குக் காரணம், “நேற்று நான் ஒரு வாதுமை மரத்தை வெட்டினேன்” என்று அவர் அனுப்பிய மின்னஞ்சல்.
ரம்பத்தைக் கையாளும் என் உறவினருக்கு 76 வயது! அவர் வாகனம் நிறுத்தும் இடத்திற்குப் பின்புறம் அந்த மரம் வளர்ந்திருந்தது. காங்க்ரீட் தரையில் அந்த மரத்தின் வேர்கள் வெடிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலையில் அவர் அதை வெட்டத் தீர்மானித்தார். ஆனால் “இதுபோன்ற வேலைகளைச் செய்யும்முன் நான் ஜெபிப்பேன்” என்று அவர் எங்களிடம் கூறினார்.
இஸ்ரவேலரின் சிறையிருப்பின்போது, பெர்சிய ராஜாவுக்கு பானபாத்திரக்காரனாக நெகேமியா பணி செய்கையில், எருசலேமுக்குத் திரும்பிய ஜனங்களைப்பற்றி அவர் கேள்விப்பட்டார். சில பணிகள் செய்யப்பட வேண்டியிருந்தது. “எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது” (நெகேமியா 1:3). அலங்கங்கள் இடிபட்டதால், எதிரிகள் எளிதில் தாக்கக்கூடிய நிலை இருந்தது. நெகேமியா தன் ஜனங்கள்மீது கரிசனை கொண்டவராக இருந்தார். அந்தப் பணிகளில் தன்னை ஈடுபடுத்த விரும்பினார். ஆனால் ஒரு புதிய அரசர் எருசலேமின் கட்டிடப் பணிகளை நிறுத்தும்படி கடிதம் எழுதியதால் (எஸ்றா 4), நெகேமியா முதலில் ஜெபித்தார். நெகேமியா தன் ஜனங்களுக்காக ஜெபம் செய்தார் (நெகேமியா 1: 5-10). பின்னர் ராஜாவிடம் விடுப்புக்காக அனுமதி கேட்கும் முன் கடவுளின் உதவியை நாடி ஜெபம் செய்தார் (வச. 11).
ஜெபம்தான் உங்கள் பதிற்செயலா? வாழ்வில் எந்த ஒரு காரியத்தையும், சோதனையையும் எதிர்கொள்ள ஜெபமே சிறந்தது.
அச்சுறுத்தும் காரியங்கள், அழகான காரியங்கள்
பயம் நம்மை உறைய வைத்துவிடக்கூடும். கடந்த காலத்தில் நம்மைக் காயப்படுத்தியவை, மீண்டும் நம்மைக் காயப்படுத்தக்கூடியவை என்று, பயப்படுவதற்கான எல்லாக் காரணங்களும் நமக்குத் தெரியும். இதனால் சில சமயங்களில் நாம் பின்னே போகவும் முடியாமல், முன்னே செல்லவும் பயந்து தவிக்கிறோம். என்னால் இதைச் செய்ய முடியாது. மீண்டும் காயப்படுவதை சமாளிக்கும் அளவுக்கு எனக்கு சாமர்த்தியம் இல்லை, பெலன் இல்லை, தைரியம் இல்லை.
எழுத்தாளர் ஃப்ரெட்ரிக் ப்யுக்னர் கடவுளின் கிருபையை விவரிக்கும் விதம் என்னை அதிகம் கவர்ந்தது. “இதுதான் உலகம். இங்கு அச்சுறுத்தும் காரியங்களும் நடக்கும். அழகான காரியங்களும் நடக்கும். பயப்படாதே. நான் உன்னோடு இருக்கிறேன்” என்று கூறும் மெல்லிய சத்தத்தைப் போன்றது கடவுளின் கிருபை என்று கூறுகிறார்.
அச்சுறுத்தும் காரியங்கள் நடக்கும். நம் உலகில், காயப்படுத்துபவர்கள், சிலரை மிக மோசமாக காயப்படுத்துகிறார்கள். சங்கீதக்காரன் தாவீதைப் போல, நாமும், தீங்கு நம்மைச் சூழ்ந்ததையும் “பட்சிக்கிற சிங்கங்களைப்” (சங்கீதம் 57:4) போல் நம்மைப் பிறர் காயப்படுத்தியதையும் சுமக்கிறோம். எனவே நாம் துக்கித்துக் கதறுகிறோம் (வச. 1-2)
ஆனால் கடவுள் நம்மோடு இருப்பதால், அழகான காரியங்களும் நடக்கக்கூடும். நமது காயங்களையும், பயங்களையும் சுமந்துகொண்டு நாம் அவரிடம் செல்லும்போது, நம்மைக் காயப்படுத்தக்கூடிய திறனைவிட (வச. 1-3) அதிகமான அன்பால் நாம் சுமக்கப்படுவதை உணர்வோம். அந்த அன்பு வானபரியந்தம் எட்டக்கூடிய அன்பு (வச. 10). பேரிடர் நம்மைச் சூழ்ந்துகொள்ளும்போதும், நம் இருதயம் சமாதானத்தைக் கண்டுகொள்ளத்தக்க உறுதியான புகலிடமாக அவர் அன்பு அமையும் (வச. 1,7). அவரது விசுவாசத்தைப் பற்றிய பாடலோடு ஒரு புதிய நாளைப் பார்க்கும்படி, புதிதாக்கப்பட்ட தைரியத்தோடு நாம் ஒருநாள் விழிப்போம் (வச. 8-10).
அவரை முதலில் நம்புங்கள்
“அப்பா, என்னை விட்டுராதீங்க!” “விட மாட்டேன். இது சத்தியம். நல்லா பிடிச்சிருக்கேன்.”
நான் தண்ணீரைப் பார்த்து அதிகம் பயப்படும் சிறுவனாக இருந்தேன். ஆனால் என் தந்தை நான் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். நீச்சல் குளத்தில் என் தலைக்கு மேல் தண்ணீர் இருக்கும் அதிக ஆழமான பகுதிக்கு என்னை அழைத்துச் செல்வார். அங்கு அவர் மட்டுமே எனக்குத் துணை. அதன்பின் எனக்கு அமைதியாக ஆசுவாசப்படவும், மிதக்கவும் கற்றுக்கொடுப்பார்.
அது நீச்சல் பயிற்சி மட்டுமல்ல. அது நம்பிக்கைக்கான படிப்பினை. என் தந்தை என்னை நேசிக்கிறார், அதனால் எனக்கு எந்த ஆபத்தும் வர விடமாட்டார் என்று தெரிந்தாலும், நான் பயப்படவும் செய்தேன். எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் உறுதி அளிக்கும்வரை அவர் கழுத்தை இறுகப் பற்றிக்கொள்வேன். இறுதியில் அவரது பொறுமைக்கும், இரக்கத்திற்கும் பலன் கிடைத்தது. நான் நீந்த ஆரம்பித்தேன். ஆனால் நான் முதலில் அவரை நம்ப வேண்டியிருந்தது
ஏதாவது கஷ்டம் “என் தலைக்கு மேல்” இருப்பதைப் போன்ற உணர்வு வரும்போது, அந்தத் தருணங்களை நினைத்துக்கொள்வேன். தம் ஜனத்திற்கு கடவுள் அளித்த உறுதியை நினைவில்கொள்ள அவை எனக்கு உதவுகின்றன: “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்” (ஏசாயா 46:4).
கடவுளின் கரம் நம்மைத் தாங்குவதை எல்லா சமயங்களிலும் உணரமுடியாமல் இருக்கலாம். ஆனால் அவர் நம்மை விட்டு விலகுவதில்லை என்று வாக்குக்கொடுத்திருக்கிறார் (எபிரேயர் 13:5). அவரது பராமரிப்பில், வாக்குறுதிகளில் நாம் நிலைத்திருக்கும்போது, அவரது விசுவாசத்தில் நம்பிக்கைகொள்ள உதவுகிறார். நமது கவலைகளுக்கு மேலாக நம்மைத் தூக்கி, அவரில் நாம் சமாதானத்தைக் கண்டுகொள்ள உதவுகிறார்.
விலங்குகளைக் கேளுங்கள்
காப்பாற்றப்பட்ட ஒரு மொட்டைத் தலைக் கழுகை மிக அருகில் பார்த்தபோது, எங்கள் பேரப்பிள்ளைகள் அதிகக் குதூகலமடைந்தார்கள். அதை தொட்டுப்பார்க்கவும் அவர்களுக்கு அனுமதி கிடைத்தது. மிருகக் காட்சி சாலையின் தன்னார்வலர் கரத்தில் அமர்ந்திருந்த வலிமையான அந்தக் கழுகின் இறக்கை ஆறரை அடி நீளம் கொண்டது என்று தெரிந்தபோது அதிக ஆச்சரியம் அடைந்தேன். ஆனாலும் அதன் எலும்புகள் திண்ணமாக இல்லாத காரணத்தால் அதன் எடை வெறும் மூன்றரை கிலோ மட்டுமே.
கீழ் நோக்கிப் பாய்ந்து தன் கூர்நகங்களில் இரையைப் பிடிக்க ஏதுவாக ஒரு ஏரியின் மேல் பறந்து கொண்டிருந்த ஒரு கழுகை முன்பு பார்த்ததை இந்தக் கழுகு எனக்கு நினைவுபடுத்தியது. முன்பு ஒரு முறை ஒரு குளத்தின் கரையில் அசையாமல் நின்று கொண்டிருந்த நீல நாரையைப் பார்த்ததை மனக் கண் முன் கொண்டுவந்தேன். அது தன்னுடைய நீண்ட அலகை தண்ணீருக்குள் அமிழ்த்தி இரையைப் பிடிக்கத் தயாராக நின்றது. நமது எண்ணங்களை நம்மை சிருஷ்டித்தவரை நோக்கித் திருப்ப இந்த இரண்டு பறவைகளைப் போல ஏறத்தாழ 10,000 வகைப் பறவைகள் உள்ளன.
யோபின் புத்தகத்தில், அவரது கஷ்டங்களுக்கான காரணங்களைப் பற்றி அவர் நண்பர்கள் விவாதிக்கும்போது, “சர்வ வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?” (11:5-9) என்று கேட்கின்றனர். அதற்கு யோபு, “இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள். அவைகள் உனக்கு அறிவிக்கும்” (யோபு 12:7) என்று பதில் கூறுகிறார். கடவுள் தம் சிருஷ்டிப்புகளை உருவாக்கி, பராமரித்து, ஆளுகை செய்வதை விலங்குகள் பறைசாற்றுகின்றன: “சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது” (வச. 10).
நமது சூழ்நிலைகள் புரியாதபோதும். கடவுள் பறவைகளைப் பராமரிப்பதால், உங்களையும், என்னையும் நேசிக்கிறார், பராமரிக்கிறார் என்று உறுதிகொள்ளலாம். உங்களைச் சுற்றிப்பார்த்து, அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
நம்முடைய பாரத்தைச் சுமந்தார்
தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிற்கான பயன்பாட்டு கட்டணங்கள் சில சமயங்களில் ஆச்சரியப்படும் அளவிற்கு மிக அதிகமாக இருக்கும். ஆனால் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த கியரன் ஹீலிக்கு வந்த தண்ணீர் கட்டணம் இதயத்துடிப்பே நின்றுவிடும்படி இருந்தது. அவர் 1,000 கோடி டாலர் செலுத்த வேண்டும் என்று அவருக்கு வந்த செய்தி கூறியது! அந்த அளவிற்கு தண்ணீரை முந்திய மாதத்தில் பயன்படுத்தவில்லை என்பதை ஹீலி அறிந்ததால், கட்டணத்தைத் தவணை முறையில் கட்டலாமா என்று விளையாட்டாகக் கேட்டார்.
1,000 கோடி டாலர் கடன் என்பது தாங்க முடியாத பாரம். ஆனால் நம் பாவங்களினால் நாம் சுமக்கவேண்டிய உண்மையான, அளவுக்கதிகமான பாரங்களோடு ஒப்பிடும்போது அது மிகவும் சாதாரணமானது. நமது பாவத்தின் பாரங்களையும், அவற்றின் பின் விளைவுகளையும் நாமே சுமக்க முயற்சிக்கும்போது, அது நமக்கு சோர்வை ஏற்படுத்தி, நம்மை குற்ற உணர்வாலும், அவமானத்தாலும் நிறைக்கிறது. நம்மால் அந்த பாரத்தை சுமக்க முடியாது என்பதே உண்மை.
நாமே அந்த பாரங்களை சுமக்க வேண்டியதில்லை. பேதுரு விசுவாசிகளுக்கு நினைவுபடுத்தியதுபோல, கடவுளின் குமாரனாகிய குற்றமில்லாத இயேசு மட்டுமே நமது பாவங்களின் பாரங்களையும் அதன் பின் விளைவுகளையும் சுமக்க முடியும் (1 பேதுரு 2:24). இயேசு சிலுவையில் மரித்தபோது, நமது தவறுகளை தன்மீது ஏற்றுக்கொண்டு, நமக்கு மன்னிப்பை அருளினார். அவர் நமது பாரங்களை சுமந்ததினால், நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனைகளைப் பெறவேண்டியதில்லை.
“முன்னோர்களால் பாரம்பரியமாய் அனுசரித்து வந்த வீணான நடத்தையில்” (1:18), பயத்தோடும், குற்ற உணர்வோடும் வாழ்வதைத் தவிர்த்து, அன்பும், சுதந்திரமும் கொண்ட புது வாழ்வை நாம் வாழ முடியும் (வச. 22-23).
பாதுகாப்பாக இயேசுவின் கரங்களில்
வெளியே வானம் இருண்டு, வானிலை அச்சுறுத்தியது. எனது அலைபேசியில் வந்த எச்சரிப்பு செய்தி திடீரென்று வெள்ளம் வரலாம் என்று அறிவித்தது. வழக்கத்தை விட அதிகமான வாகனங்கள் எங்கள் வீட்டருகில் நிறுத்தப்பட்டிருந்தன. பள்ளிப் பேருந்து அந்த இடத்தில் பிள்ளைகளை இறக்கி விடுவதால், தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் காத்திருந்தனர். பேருந்து வருவதற்குள் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. ஒரு பெண் தன் காரில் இருந்து இறங்கி, பின்புறமிருந்து ஒரு குடையை எடுத்தார். தன் சிறு பிள்ளையை அழைத்துக்கொண்டு, அவள் காரில் ஏறும்வரை, மழையில் நனையாதபடி குடையைப் பிடித்து வந்தாள். ஒரு நல்ல தாயாக, தன் பிள்ளையை பாதுகாப்புடன் நடத்திய அந்த அழகிய தருணம், நமது பரம தந்தையின் அக்கறையை எனக்கு நினைவுபடுத்தியது.
ஏசாயா தீர்க்கதரிசி கீழ்ப்படியாமைக்குரிய தண்டனையையும், கடவுளின் ஜனங்களுக்கு அதன் பின்னான பிரகாசமான நாட்களையும் முன் அறிவித்தார் (ஏசாயா 40:1-8). பர்வதத்தில் இருந்து வரும் பரலோக அறிவிப்பு கடவுளின் வல்லமையான பிரசன்னத்தையும், அக்கறையையும் இஸ்ரவேலர்களுக்கு உறுதிப்படுத்தியது. கடவுளின் அதிகாரம் அப்போது இருந்ததுபோல இப்போதும் இருப்பதால், கவலைப்படுபவர்கள் பயப்படாமல் இருக்கலாம் (வச. 9-10). மேய்ப்பர்கள் அளிக்கும் பாதுகாப்பைப் போன்ற கடவுளின் பாதுகாப்பு குறித்த செய்தியும் அந்த அறிவிப்பில் இருந்தது (வச. 11): ஆட்டுக்குட்டிகள் மேய்ப்பரின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கும். கறவலாடுகள் மெதுவாக நடத்தப்படும்.
கடினமான சூழ்நிலைகள் கொண்ட உலகில், பாதுகாப்பு, அக்கறை குறித்த இதுபோன்ற வர்ணனைகள், நாம் தன்னம்பிக்கையுடன் கடவுளை நோக்கிப்பார்க்க உதவுகின்றன. கர்த்தரை முழுமையாக நம்புபவர்கள், அவரில் பாதுகாப்பையும், புது பெலனையும் பெற்றுக்கொள்வார்கள் (வச. 31).
இயேசுவின் வாழ்க்கை சம்பவங்கள்
சிறுமியாக இருந்தபோது, எங்கள் ஊரின் சிறிய நூலகத்துக்குச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் வளர் இளம் பருவத்தினருக்கான புத்தகங்கள் இருந்த பகுதியைப் பார்த்தபோது, அதில் இருந்த ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்கமுடியும் என்று நினைத்தேன். என்னுடைய ஆர்வத்தில், நூலகத்தில் புதிய புத்தகங்கள் வாங்கிச் சேர்க்கும் வழக்கம் இருப்பதை மறந்துவிட்டேன். நான் அதிக முயற்சி செய்தாலும், மிக அதிகமான புத்தகங்கள் இருந்ததால் என்னால் எல்லாவற்றையும் படிக்க முடியவில்லை.
அதிகமான புத்தக அலமாரிகளில், புதிய புத்தகங்கள் சேர்க்கப்படுகின்றன. யோவான் அப்போஸ்தலர் இத்தனை புத்தகங்களைப் பார்த்து ஆச்சரியப்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அவர் எழுதிய யோவான்; 1, 2 & 3 யோவான்; மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் ஆகிய புத்தகங்கள் தோல் சுருள்களில் எழுதப்பட்டன.
இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியங்களை (1 யோவான் 1:1-4) அருகில் இருந்து பார்த்ததை கிறிஸ்தவர்களுக்குத் தெரிவிக்க, ஆவியானவரால் ஏவப்பட்டு, யோவான் அந்த புத்தகங்களை எழுதினார். ஆனால் இயேசுவின் ஊழியங்களின், அவர் போதனைகளின் ஒரு சிறு பகுதியே யோவானின் புத்தகங்களில் உள்ளன. இயேசு செய்த அனைத்தையும் எழுதினால் “எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று” (யோவான் 21:25) யோவான் கூறினார்.
யோவான் சொன்னது இன்றைக்கும் பொருந்தும். அநேக புத்தகங்கள் இயேசுவைப்பற்றி எழுதப்பட்டிருந்தாலும், இயேசுவின் அன்பையும், கிருபையையும் குறித்த ஒவ்வொரு சம்பவத்தையும் இந்த உலகத்தின் நூலகங்களில் அடக்கமுடியாது. மற்றவர்களோடு பகிர்வதற்கு நமது சொந்த அனுபவங்களும் உண்டு என்பதாலும், அவற்றை நாம் சதாகாலமும் பறைசாற்ற முடியும் என்பதாலும் நாம் சந்தோஷப்படலாம் (சங்கீதம் 89:1).
பாடலோடு தன்னைச் சுடும் கழுவை எதிர்கொள்ளுல்
போதைப் பொருட்கள் கடத்தலில் சிக்கிய இரண்டுபேர், மரண தண்டனை பெற்று, பத்து ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். அவர்கள் சிறையில் இருந்தபோது, இயேசுவின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் அன்பைப் பற்றி தெரிந்துகொண்டனர். கடவுள் தங்கள்மீது அன்பாய் இருக்கிறார் என்று தெரிந்தபோது, அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அவர்கள் தண்டனையை நிறைவேற்ற, துப்பாக்கி ஏந்திய காவலர்களுக்கு முன் அவர்கள் நிறுத்தப்பட்டபோது, அவர்கள் பரமண்டல ஜெபத்தை ஏறெடுத்து, “கிருபை, கிருபை” (Amazing Grace) என்ற பாடலைப் பாடினார்கள். கடவுள் மேல் அவர்கள் வைத்த நம்பிக்கை காரணமாக, ஆவியானவரின் வல்லமை மூலம், அசாத்திய தைரியத்துடன் மரணத்தை எதிர்கொண்டனர்.
தங்கள் இரட்சகர் இயேசுவின் உதாரணத்தை அவர்கள் பின்பற்றினார்கள். தன் மரணம் நெருங்குவதை அறிந்த இயேசு, மாலையில் சிறிது நேரம் தன் நண்பர்களோடு சேர்ந்து பாடிக்கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்திலும் அவர் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் என்ன பாடினார் என்பது அதிலும் விசேஷமான காரியம். அன்றைய இரவில், இயேசுவும் அவர் நண்பர்களும் பஸ்கா உணவை சாப்பிட்டார்கள். பொதுவாக பஸ்கா உணவு சாப்பிட்டதும், துதி என்ற பொருள்படும் ஹாலல் (Hallel) என்ற 113 முதல் 118 வரையான சங்கீதங்களைப் பாடுவார்கள். அன்று இரவு, மரணம் நெருங்கி இருப்பதை அறிந்த இயேசு, தன்னை சுற்றிக்கொண்ட “மரணக் கட்டுகள்” பற்றிப் பாடினார் (சங்கீதம் 116:3). ஆனாலும், கடவுளின் கிருபையைத் துதித்து (117:2), அவர் இரட்சிப்புக்கு நன்றி செலுத்தினார் (118:14). இந்த சங்கீதங்கள் சிலுவையில் அறையப்படும் முன், இயேசுவுக்கு அதிக ஆறுதலைத் தந்தன.
மரணத்துக்கு ஒப்புவிக்கப்படுவதற்கு இயேசு தவறு எதுவும் செய்யவில்லை. ஆனாலும், கடவுள்மேல் அவர் வைத்திருந்த அதிக நம்பிக்கையின் காரணமாக, மரணத்தை எதிர்கொள்ளும்போதும், கடவுளின் அன்பைக் குறித்துப் பாடினார். எந்த விதமான சோதனைகளை நாம் சந்தித்தாலும், இயேசுவால், கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம்.
வார்த்தைகளுக்கும் அதிகமாக
ஒரு அர்ப்பணிப்பு விழாவில், பிராந்திய ஆப்பிரிக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட வேதாகமத்தின் பிரதி ஒன்று அந்தப் பகுதியின் தலைவருக்கு அளிக்கப்பட்டது. அந்த மொழிபெயர்ப்பு முயற்சியை பாராட்டும் விதமாக, அந்தத் தலைவர் வேதாகமத்தை வானத்திற்கு நேராக உயர்த்தி, “ஆண்டவர் எங்கள் மொழியை புரிந்து கொள்கிறார்! இப்போது எங்கள் தாய் மொழியிலேயே நாங்கள் வேதாகமத்தை வாசிக்கமுடியும்” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
நமது மொழி எதுவாக இருந்தாலும், நம் பரம பிதா அதை புரிந்துகொள்கிறார். ஆனால் பல வேளைகளில் நமது இருதயத்தின் ஆழத்தில் உள்ள ஏக்கங்களை அவரிடம் வெளிப்படுத்த முடிவதில்லை. நாம் என்ன மன நிலையில் இருந்தாலும், ஜெபிக்கும்படி பவுல் நம்மை ஊக்குவிக்கிறார். இந்த உலகத்தின் வேதனைகள் மற்றும் நமது துன்பங்கள் பற்றி “சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்து பிரசவ வேதனைப்படுகிறது” (ரோமர் 8:22) என்கிறார். அதை பரிசுத்த ஆவியானவர் நமக்காக இடைபடுவதோடு ஒப்பிடுகிறார். “ஆவியானவர் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (வச. 26) என்று கூறுகிறார்.
கடவுளின் பரிசுத்த ஆவியானவர் நம்மை முற்றிலும் அறிவார். நமது வாஞ்சைகள், நமது இருதயத்தின் நினைவுகள், நம் மனதில் இருக்கும் வெளிப்படுத்தாத வார்த்தைகள் ஆகிய அனைத்தையும் அவர் அறிவார். நாம் கடவுளோடு பேச அவர் உதவுகிறார். குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக நாம் மாறும்படி, பரிசுத்த ஆவியானவர் நம்மை ஏவுகிறார் (வச. 29).
நமது பரம பிதா நம் மொழியை புரிந்துகொள்கிறார். அவரது வார்த்தையாகிய வேதாகமம் மூலம் நம்மோடு பேசுகிறார். நாம் சிரத்தை இல்லாமலோ, சிறியதாகவோ ஜெபம் செய்யும்போது, பரிசுத்த ஆவியானவர் நம் மூலமாக பிதாவோடு பேசி, நமக்கு உதவுகிறார். ஜெபத்தின்மூலம் நாம் அவரோடு பேச அவர் வாஞ்சையாய் இருக்கிறார்.