சூ சிறுமியாக இருந்தபோது, அவள் பெற்றோர் விவாகரத்து செய்தார்கள். அவள் யார் பாதுகாப்பில் இருப்பது என்பதில் சட்டச் சிக்கல்கள் எழுந்ததால், சில காலம் அவள் ஒரு சிறுவர் இல்லத்தில் தங்க நேர்ந்தது. வயதில் பெரிய சிறுவர்கள் அவளைக் கேலி செய்து, துன்புறுத்தியபோது, தனிமையாக, கைவிடப்பட்டதாக உணர்ந்தாள். அவள் தாய் அவளை மாதம் ஒரு முறை மட்டுமே வந்து பார்த்தாள். அவள் தந்தையை வெகு அரிதாகவே பார்த்தாள். ஆனால் அந்த இல்லத்தின் விதிகளின்படி அவள் அடிக்கடி வந்து தன் மகளைப் பார்க்கமுடியாது என்ற விவரமும், சூ கண்ணில் தென்படுகிறாளா என்று பார்க்க அவள் தாய் தினமும் மதில் சுவர் அருகே நின்ற விவரமும் பல வருடங்கள் கழித்துத்தான் அவள் தாய் சொல்லி சூ தெரிந்துகொண்டாள். “நீ நன்றாக இருக்கிறாயா என்று தெரிந்துகொள்ள வெளியே நிற்பேன். சில சமயம் நீ தோட்டத்தில் விளையாடுவதைப் பார்ப்பேன்,” என்று அவள் தாய் தெரிவித்தாள்.

சூ இதை என்னுடன் பகிர்ந்துகொண்டபோது, தேவனின் அன்பை எனக்கு அது புரியவைத்தது. நம்முடைய போராட்டங்கள் நடுவே சில சமயம் நாமும் தனிமையாக, கைவிடப்பட்டவர்களாக உணர்கிறோம். ஆனால் தேவன் எப்போதும் நம்மைக் கண்காணிக்கிறார் என்பது எவ்வளவு ஆறுதலான விஷயம் (சங். 33:18). நம்மால் அவரைப் பார்க்க முடியாது என்றாலும், அவர் நம் அருகே இருக்கிறார். நாம் எங்கே சென்றாலும், அன்பான பெற்றோரைப்போல அவரது கண்களும், இருதயமும் நம்மை கவனிக்கின்றன. ஆனால், சூவின் தாயைப்போல அல்லாமல், நமக்காக எந்த நேரமும் அவர் உதவ முடியும்.

தேவன் தம் பிள்ளைகளைத் தப்புவிப்பதையும், காப்பாற்றுவதையும், கனப்படுத்துவதையும் பற்றி சங்கீதம் 91 கூறுகிறது. அவர் ஒரு புகலிடத்திற்கும் மேலானவர். வாழ்கையின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நாம் பயணப்படும்போது. வல்லமையான தேவன் நம் வாழ்வில் செயல்படுகிறார், நம்மைக் கண்காணிக்கிறார் என்ற உண்மையில் நாம் ஆறுதல் அடையலாம். “(உனக்கு) மறு உத்தரவு அருளிச்செய்வேன்” என்று கூறுகிறார். “ஆபத்தில் உன்னோடிருந்து, உன்னைத் தப்புவிப்பேன்” (வச. 15).