நிச்சய நம்பிக்கை
ஜப்பான் சீனாவை 1940ஐ ஒட்டிய காலக்கட்டத்தில் தாக்கியபோது, டாக்டர். வில்லியம் வாலஸ் மிஷனரி மருத்துவராக சீனாவின் வசூ பகுதியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது ஸ்டௌட் நினைவு மருத்துவமனையின் பொறுப்பாளராகப் பணி செய்த அவர், தனக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் படகுகளில் ஏற்றச்சொன்னார். காலாட்படையினரின் தாக்குதல்களைத் தவிர்க்க, அவர் ஆறுகளில் பயணம் செய்து மருத்துவப்பணிகளைத் தொடர்ந்தார்.
ஆபத்தான நேரங்களில், அவர் உயிரோடு இருந்தால், அவர் இரட்சகருக்காக செய்ய வேண்டிய வேலைகள் உண்டு என்பதை வாலஸுக்குப் பிடித்த வசனங்களில் ஒன்றான பிலிப்பியர் 1:21 அவருக்கு நினைவுபடுத்தியது. அவர் இறக்க நேர்ந்தால், கிறிஸ்துவுடனான நித்திய வாழ்வின் வாக்குத்தத்தம் அவருக்கு இருந்தது. 1951ஆம் ஆண்டு, பொய்யான குற்றச்சாட்டுகளுடன் சிறைபிடிக்கப்பட்டு, அவர் இறந்தபோது, இந்த வசனம் ஒரு விசேஷ அர்த்தத்தை வெளிப்படுத்தியது.
இயேசுவைப் பின்பற்றுபவர்களாக, நாமும் விரும்பக்கூடிய ஆழ்ந்த பக்தியை பவுலின் எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. சோதனைகளையும், தேவனுக்காக ஆபத்துக்களையும்கூட எதிர்கொள்ள அவை நமக்கு உதவுகின்றன. பரிசுத்த ஆவியாலும், நமக்கு அருமையானவர்களின் ஜெபங்களாலும் நாம் பெற்றுக்கொண்ட பக்தி அது (வச. 19). அது ஒரு வாக்குறுதியும்கூட. மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும், அவருடைய சேவைக்காக நம்மை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்கும்போது, நமக்கு நினைவுறுத்தப்படும் விஷயம் என்னவென்றால் - இங்கு நம்முடைய வேலையும், வாழ்க்கையும் முற்றுப்பெறும்போது, இயேசுவுடனான நித்திய வாழ்க்கை நமக்குக் காத்திருக்கிறது என்ற சந்தோஷம் நமக்கு உண்டு.
கிறிஸ்துவுடன் நடப்பதற்கு ஒப்புக்கொடுத்த இருதயங்களோடும், அவருடனான நித்திய வாழ்விற்கான உறுதிமொழியின் மீதுள்ள கண்களோடும், நமது கடினமான தருணங்களிலும், நமது நாட்களும், நமது செயல்களும் ஆண்டவரின் அன்பால் மற்றவர்களை ஆசீர்வதிப்பதாக.
அவர் பிரசன்னம்
பதற்றம் தோய்ந்த முகத்துடன் ஒரு மனிதன் தன் பதின்பருவ மகனுடன், ஆவி உலகைத் தொடர்புகொள்ளும் ஒரு மாந்திரீகன் முன்பாக அமர்ந்திருந்தார். “உங்கள் மகன் எவ்வளவு தூரம் பயணம் செய்யப்போகிறான்?” என்று கேட்டார். “பெரிய நகரத்துக்கு. அவன் திரும்பி வர ரொம்ப நாட்கள் ஆகும்” என்று அந்தத் தந்தை பதில் அளித்தார். தந்தையிடம் ஒரு தாயத்தைக் கொடுத்த அந்த மனிதன், “அவன் போகும் இடமெல்லாம் இது அவனைப் பாதுகாக்கும்” என்று கூறினார்.
நான்தான் அந்த பதின்பருவப் பையன். ஆனால் அந்த மந்திரிக்கும் மனிதரோ, அந்த தாயத்தோ எனக்கு எதுவும் செய்ய முடியவில்லை. நகரத்தில் இருக்கும்போது, நான் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டேன். அந்த தாயத்தைத் தூர எறிந்துவிட்டு, கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டேன். என் வாழ்க்கையில் கிறிஸ்து இருப்பது, எனக்கு தேவனின் பிரசன்னத்தை உறுதிசெய்தது.
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, என் சகோதரனை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, இப்போது கிறிஸ்தவ விசுவாசியாகிவிட்ட என் தந்தை, “முதலில் நாம் ஜெபம் செய்வோம். தேவப் பிரசன்னம், நீ போகும் வழி நெடுகிலும் உன்னோடு செல்லும்” என்றார். தேவனின் பிரசன்னமும், அவரது வல்லமையும் மட்டுமே எங்களுக்குப் பாதுகாப்பு என்பதை நாங்கள் கற்றுக்கொண்டிருந்தோம்.
மோசேயும் இதே போன்ற ஒரு போதனையைப் பெற்றார். ஆண்டவர் அவருக்கு ஒரு சவாலான வேலையைக் கொடுத்தார். எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து, தம் ஜனங்களை வெளிவரச் செய்து, தாம் வாக்குக்கொடுத்த கானான் தேசத்துக்கு அவர்களை அழைத்துச் செல்வதே அந்த வேலை (யாத்திராகமம் 3:10). ஆனால் தேவன் “நான் உன்னோடே இருப்பேன்” என்று உறுதி அளித்தார் (வச. 12).
நமது பயணமும் சவால்கள் நிறைந்தது. ஆனால் தேவப் பிரசன்னம் நம்மோடு இருக்கும் என்று நமக்கு உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இயேசு தமது சீஷர்களுக்குச் சொன்னதுபோல, “இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத். 28:20).
நம்மால் செய்ய முடிந்தது
படுக்கையிலேயே தன் நாட்களைக் கழிக்க நேர்ந்தபோதும், 92 வயதான மோரீ பூகார்ட், மிஷிகனில் உள்ள ஆதரவற்ற, வீடில்லாத மக்களுக்காக தொப்பிகள் பின்னினார். அவர் 15 ஆண்டுகளில் 8000த்துக்கும் அதிகமான தொப்பிகளைப் பின்னியதாகக் கூறப்பட்டது. தன்னுடைய சுகவீனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மற்றவர்களுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்னால் முடிந்த உதவியைச் செய்தார். அவ்வாறு உதவி செய்வது தனக்கு மகிழ்ச்சியைத் தந்ததாகவும், வாழ்க்கையில் தனக்கு ஒரு பிடிப்பைக் கொடுத்ததாகவும் கூறினார். “நான் என் ஆண்டவரிடம் போகும்வரை இதைச் செய்வேன்” என்று கூறிய அவர் பிப்ரவரி 2018ல் ஆண்டவரிடம் சென்றார். அவர் பின்னிய தொப்பிகளைப் பெற்ற மனிதர்களுக்கு அவரைப் பற்றியோ, ஒவ்வொரு தொப்பியையும் பின்ன அவர் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதோ தெரியப்போவதில்லை. ஆனால் அன்பினால் அவர் செய்த அந்த சிறிய உதவி இன்று உலகமெங்கும் பல பேரை ஊக்குவிக்கிறது.
நம்முடைய கஷ்டங்களைக் கருத்தில் கொள்ளாமல், நமக்கு மேலாக மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய அன்பான, கிருபை நிறைந்த இரட்சகர் இயேசு கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் செயல்படலாம் (பிலிப். 2:1-5). ராஜாதி ராஜா, மனுஷ சாயலான தேவன், உண்மையான தாழ்மையுடன் ஒரு அடிமையின் தன்மையைத் தரித்துக்கொண்டார் (வச. 6-7). அதிகபட்ச தியாகமாக, தன்னுடைய உயிரைக் கொடுத்து, நமக்குப் பதிலாக சிலுவையில் அறையுண்டார் (வச. 8). இயேசு நமக்காக - பிதாவாகிய தேவனின் மகிமைக்காக - எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தார் (வச. 9-11).
இயேசுவை விசுவாசிப்பவர்களாக, மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதும், மற்றவர்களுக்கு உதவுவதால் அவர்கள்மீதான கரிசனையை வெளிப்படுத்துவதும், நமக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு உரிமை. கொடுப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை என்று நினைத்தாலும், ஒரு பணியாளின் தாழ்மையைத் தரித்துக்கொள்ளலாம். மற்றவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நம்மால் முடிந்ததைச் செய்வதற்கு தருணங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
தந்தைகளும், மகன்களும்
என் தந்தை ஒரு நல்ல தகப்பனாக நடந்துகொண்டார். பெரும்பாலான விஷயங்களில் நானும் ஒரு கடமை உணர்ச்சி உள்ள மகனாக நடந்துகொண்டேன். ஆனால், என் தந்தையை ஒரு விஷயத்திற்காக நான் ஏங்கவைத்தேன்: எனக்காக. அவர் ஒரு அமைதியான மனிதர். நானும் அதேபோல் அமைதியாக இருப்பேன். நாங்கள் இருவரும் அருகருகே பல மணி நேரம் வேலை பார்ப்போம். ஆனால், ஒரு வார்த்தைகூட பேசியிருக்க மாட்டோம். என்னுடைய உள்ளான விருப்பங்களையும், கனவுகளையும், நம்பிக்கைகளையும், பயங்களையும் நான் ஒருபோதும் அவரிடம் சொன்னதில்லை; அவரும் கேட்டதில்லை.
சிறிது காலத்தில் என்னுடைய மவுனம் என்னை வாதித்தது உரைத்தது. ஒருவேளை என் முதல் மகன் பிறந்த சமயம் அதை நான் உணர்ந்திருக்கலாம். அல்லது ஒருவர் பின் ஒருவராக என் மகன்கள் வளர்ந்து வீட்டை விட்டுப் போனபோது உணர்ந்திருக்கலாம். இன்னும் ஒரு நல்ல மகனாக நான் இருந்திருக்க வேண்டும் என்று இப்போது யோசிக்கிறேன்.
எத்தனை விஷயங்களை என் தகப்பனிடம் சொல்லியிருக்கலாம் என்று இப்போது யோசிக்கிறேன். என்னென்ன விஷயங்கள் அவர் என்னிடம் சொல்லியிருக்கலாம் என்றும் யோசிக்கிறேன். அவருடைய அடக்க ஆராதனையில், என்னுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறி அவர் உடல் அருகில் நின்றுகொண்டிருந்தேன். “இப்போது கால தாமதமாகி விட்டது. அப்படித்தானே?” என்று என் மனைவி அமைதியாகக் கேட்டாள். “ஆம் அப்படித்தான்”
இவை அனைத்தையும் பரலோகத்தில் சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையில் நான் ஆறுதல் அடைகிறேன். ஏனென்றால் அங்கேதானே கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார் (வெளி. 21:4).
இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு மரணம் அன்பை முடிவுக்குக் கொண்டுவருவதில்லை. மாறாக, மனத்தாங்கல்கள் இல்லாத நித்திய வாழ்க்கைக்கான ஆரம்பம்தான் மரணம்; உறவுகள் சீர்படுத்தப்பட்டு அன்பு நித்தியமாக வளரும். அங்கே பிதாக்களுடைய இருதயம் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயம் அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திரும்பும் (மல்கியா 4:6).
என் செயலுக்காக வருந்துகிறேன்
காலின்ஸ் என்பவர் 2005ல் ஒரு அறிக்கையை வேண்டுமென்றே தவறாக திரித்து எழுதியதால், மெக்கீ என்பவர் நான்கு ஆண்டுகள் சிறைக்கு செல்லவேண்டியதாயிற்று. சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் காலின்ஸை “துன்புறுத்த வேண்டும்” என்று மெக்கீ சபதம் எடுத்தார். மெக்கீ மேல் எந்தத் தவறும் இல்லை என்று தீர்ப்பாகி சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் அனைத்தையும் இழந்துவிட்டார். இதற்கிடையில் காலின்ஸ் இதுபோல் தவறாகத் தயார் செய்த அறிக்கைகள் பற்றித் தெரிய வந்ததால், அவர் வேலை பறிக்கப்பட்டு, அவரும் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால் இருவருமே சிறையில் இருக்கும்போது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர்.
இரண்டு பேருமே நம்பிக்கை சார்ந்த ஒரே நிறுவனத்தில் வேலை செய்வது 2015ல் தெரியவந்தது. “நான் செய்த காரியத்துக்காக வருத்தப்படுகிறேன் என்று சொல்வதைத் தவிர என்னால் எந்தவிதமான விளக்கமும் அளிக்கமுடியாது,” என்று மெக்கீயிடம் சொன்னதாக காலின்ஸ் பின்னர் கூறினார். “அதைத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்று கூறிய மெக்கீ, காலின்ஸை மன்னித்தார். இருவருமே ஆண்டவரின் விலைமதிக்க முடியாத அன்பையும், “கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (கொலோசேயர் 3:13)என்று கற்றுத்தரும் தேவனின் மன்னிப்பையும் அனுபவித்ததால், சமரசம் செய்துகொள்ள முடிந்தது.
இப்போது அவர்கள் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள். “ஒருவரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால், உங்கள் இறுமாப்பைப் புறந்தள்ளிவிட்டு மன்னிப்பு கேளுங்கள் என்று உலகத்தாருக்குச் சொல்வதே எங்கள் இருவரின் கூட்டுக் குறிக்கோளாக இருக்கிறது” என்று காலின்ஸ் கூறினார். “யார் மீதாவது உங்களுக்கு வருத்தம், கோபம் இருந்தால், அந்த கசப்பான உணர்ச்சிகளை விட்டுத் தள்ளுங்கள்; ஏனென்றால் அது அவர்களைக் காயப்படுத்துவதாக நினைத்து நீங்கள் விஷம் குடிப்பது போன்றதாகும்.”
தேவன் தம்மை விசுவாசிப்பவர்களை அமைதியிலும், ஒருமைப்பாட்டிலும் வாழும்படி சொல்கிறார். நமக்கு “யார் மீதாவது மனஸ்தாபம்” இருக்குமென்றால், அதை நாம் தேவனிடம் சொல்லிவிடலாம். அவர் சமரசம் செய்வார் (வச. 13-15; பிலிப். 4:6-7)
பல் மருத்துவமனையில் வெளிப்பாடு
பிதாவின் இருதயத்தைக் குறித்த தீர்க்கமான ஒரு போதனையை பல் மருத்துவமனையில் நான் எதிர்பார்க்கவில்லை, ஆனாலும் கிடைத்தது. என் பத்து வயது மகனை அங்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவனுடைய பால் பல் ஒன்று விழுவதற்கு முன்பே, அதனடியில் புது பல் முளைக்க ஆரம்பித்திருந்த்து. பால் பல்லை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.
“அப்பா, இதற்கு வேறு வழியே இல்லையா? கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்க முடியாதா? இந்தப் பல்லை பிடுங்க வேண்டாம்பா,” என்று என் மகன் கண்ணீரோடு என்னிடம் கெஞ்சினான். எனக்கு அதிகக் கஷ்டமாக இருந்தாலும், “இல்லை, மகனே, அதை எடுத்தே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை” என்று கூறினேன். பல் மருத்துவர் மிகவும் கஷ்டப்பட்டு அந்தப் பல்லைப் பிடுங்கும்போது, அவன் வேதனையில் துடித்ததால், நானும் கண்ணீரோடு அவன் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்தேன். அவன் வலியை நீக்க என்னால் முடியாது. அவன் அருகில் இருப்பது மட்டுமே என்னால் முடிந்த காரியம்.
அந்தத் தருணத்தில் கெத்சமனே தோட்டத்தில் இயேசு பிதாவிடம் மன்றாடியது என் நினைவுக்கு வந்தது. தனக்குப் பிரியமான தன் குமாரன் துக்கத்தில் இருப்பது பிதாவை எவ்வளவு மனம் உடையச் செய்திருக்கும். ஆனாலும் அவருடைய ஜனங்களை மீட்க வேறு வழி இல்லை.
நம் வாழ்க்கையில், என் மகன் எதிர்கொண்டதுபோல, நாமும் சில வேளைகளில் தவிர்க்க முடியாத, வேதனையான தருணங்களை எதிர்கொள்கிறோம். ஆனால் பரிசுத்த ஆவியின் மூலமாக இயேசு நமக்காக இடைபடுவதால், எப்போதும், நம்முடைய இருண்ட வேளைகளிலும்கூட, நமது அன்பின் பரமபிதா நம்மோடு இருக்கிறார் (மத். 28:20).
ஞானத்தின் ஊற்றுக்கண்
ஒரு பெண் தன்னுடைய நாயை வைத்திருப்பதாக ஒரு மனிதன் அந்தப் பெண்ணுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். நாய் அந்த மனிதனுடையதாக இருக்கமுடியாது என்றும், அதை எங்கே வாங்கினாள் என்றும் அந்தப்பெண் நீதிபதியிடம் கூறினாள். நீதிமன்ற அறையில் நீதிபதி நாயை அவிழ்த்து விட்டபோது, அதன் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெளிவாகத் தெரிந்தது. தன் வாலை ஆட்டியபடி, நாய் அந்த மனிதனிடம் ஓடியது!
இதேபோன்ற ஒரு பிரச்சனையை, பண்டைய இஸ்ரவேலில் நீதிபதியாக இருந்த சாலொமோன் தீர்த்துவைக்க நேர்ந்தது. ஒரு ஆண் குழந்தைக்கு தான்தான் தாய் என்று இரண்டு பெண்கள் உரிமை கோரினார்கள். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட சாலொமோன், பிள்ளையை இரண்டாகப் பிளந்துகொடுக்க ஒரு பட்டயத்தைக் கொண்டுவரச் சொன்னார். உண்மையான தாய், தன் குழந்தை தனக்குக் கிடைக்காதபோதும், அவன் உயிரைக் காப்பாற்றும்படியாக, அவனை அடுத்த பெண்ணிடம் கொடுக்கும்படி கூறினாள். சாலொமோன் அந்தக் குழந்தையை அவளுக்கே கொடுத்தார்.
எது நியாமானது, எது ஒழுக்கமானது, எது சரி, எது தவறு என்று முடிவெடுக்க நமக்கு ஞானம் அவசியம். ஞானத்தின் அவசியத்தை நாம் முழுவதுமாக உணர்ந்தால், நாமும் சாலொமோனைப் போல, ஆண்டவரிடம் ஞானமுள்ள இருதயத்தைக் கேட்கலாம் (வச. 9). மற்றவர்கள் விருப்பங்களையும் கருத்தில்கொண்டு, நம்முடைய தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்திசெய்ய தேவன் நமக்கு உதவுவார். நம் வாழ்க்கையில் அவரை கனப்படுத்தும்படியாக, சில சமயங்களில் குறுகியகால பலன்களையும், நீண்டகால (சில சமயங்களில் நித்திய) பலன்களையும் ஒப்பிட்டுப் பார்க்கச்செய்வார்.
நம் ஆண்டவர் ஒரு நேர்த்தியான நீதிபதி மட்டுமல்ல, அதிக ஞானத்தைத்தர ஆர்வமாக இருக்கும் தனிப்பட்ட ஆலோசகருமாவார் (யாக். 1:5).
இப்போதும் ராஜாதான்
“கிறிஸ்தவர்களுக்கு அநேக வருடங்களில் இது ஒரு கொடிய நாள்” என்று ஒரு செய்திக்குறிப்பு கூறியது. ஏப்ரல் 2017ல் ஞாயிறு ஆராதனையில் ஈடுபட்டிருந்தவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. ஆராதனை நடைபெறும் இடத்தில் நடத்தப்படும் கொடூர இரத்தம் சிந்துதலையும், தாக்குதல்களையும் நம்மால் வகைப்படுத்தவும் முடியாது. ஆனால் இதுபோன்ற துன்பங்களை அனுபவித்தவர்களிடம் நாம் உதவி பெறமுடியும்.
ஆசாப் சங்கீதம் 74ஐ எழுதியபோது, எருசலேமின் பெரும்பான்மையான மக்கள் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள் அல்லது புகலிடம் தேடி பிற இடங்களில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தன் மன சஞ்சலத்தை வெளிப்படுத்திய அவர், இரக்கமற்ற அன்னியப் படைகளால் நாசப்படுத்தப்பட்ட தேவாலயத்தைப்பற்றி விவரித்தார். “உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள்,” என்று ஆசாப் குறிப்பிட்டார் (வச. 4). “உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, உமது நாமத்தின் வாசஸ்தலத்தைத் தரைமட்டும் இடித்து, அசுத்தப்படுத்தினார்கள்” (வச. 7).
அந்த மோசமான சூழலிலும் சங்கீதக்காரன் நிற்பதற்கு ஒரு இடத்தைக் கண்டுகொண்டான். நாமும் அதேபோல் செய்ய ஊக்குவிக்கப்படுகிறோம். “பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா” என்று கூறுகிறார் (வச. 12). இந்த உண்மையை உணர்ந்துகொண்டதால், அந்த்த் தருணத்தில் தேவனின் இரட்சிப்பு இல்லாததுபோல் தோன்றினாலும், ஆசாப்பால் கர்த்தரின் வல்லமையைத் துதிக்கமுடிந்தது. “உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்” என்று ஆசாப் ஜெபித்தார். “துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடாதிரும், சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும்” (வச. 20-21).
நியாயமும், கிருபையும் இல்லாததுபோல் தோன்றும்போது, தேவனின் அன்பும், வல்லமையும் கடுகளவும் குறைவதில்லை. ஆசாப்போடு “தேவன் என்னுடைய ராஜா” என்று நாமும் நம்பிக்கையோடு சொல்லலாம்.
உங்கள் நகரத்தைப் பாருங்கள்
“நாங்கள் பார்க்கும்விதமாக எங்கள் நம் நகரத்தைப் பாருங்கள்.” மிஷிகனின் டெட்ராய்ட் நகரில் செயல்படும் நகர வளர்ச்சிக் குழு தங்கள் நகரின் எதிர்காலம் குறித்த திட்டத்தை ஆரம்பிக்க இந்த வாசகத்தை உபயோகித்தது. ஆனால் இந்த பிரச்சாரத்தில் ஒரு முக்கியமான அம்சம் இல்லை என்பதை அந்த ஊர் மக்கள் உணர்ந்தபோது, அந்தத் திட்டம் திடீரென்று நிறுத்தப்பட்டது. ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர்கள் நகரின் ஜனத்தொகை மற்றும் பணியாளர்களில் பெரும்பான்மையானவர்கள். ஆனால் தாங்கள் பார்க்கும்விதமாக நகரைப் பார்க்கச் சொன்ன அந்தப் பிரச்சாரம் குறித்த விளம்பரங்களிலும், சுவரொட்டிகளிலும் தெரிந்த அநேக முகங்களில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இடம்பெறவே இல்லை.
இயேசுவின் நாட்டில் இருந்தவர்களுக்கும் எதிர்காலம் குறித்து ஒரு குறுகிய மனப்பான்மை இருந்தது. ஆபிரகாமின் சந்ததியினராக, அவர்கள் யூத மக்களைக்குறித்து மட்டும் அக்கறை கொண்டிருந்தார்கள். சமாரியர்கள், ரோமப் போர்ச்சேவகர்கள், அல்லது தங்களை ஒத்த குடும்பப்பின்னணி இல்லாதவர்கள், மதகுருக்கள் அல்லது ஆராதனையைப் பின்பற்றாதவர்கள் குறித்து இயேசு கொண்டிருந்த அக்கறையை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
டெட்ராய்ட், எருசலேம் மக்களின் குறுகிய மனப்பான்மை எனக்குப் புரிகிறது. யாருடைய வாழ்க்கை அனுபவங்கள் எனக்குப் புரிகிறதோ அவர்களை மட்டுமே நானும் பார்க்கிறேன். ஆனால் நம்முடைய வேறுபாடுகள் மத்தியில் நம்மில் ஒற்றுமையை எப்படி ஏற்படுத்துவது என்பதை ஆண்டவர் அறிந்திருக்கிறார். நாம் நினைப்பதைவிட நாம் ஒரேவிதமாக இருக்கிறோம்.
உலக மக்கள் அனைவருக்கும் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தர, ஆபிராம் என்று பேர்கொண்ட ஒரு பாலைவன நாடோடியை நம் ஆண்டவர் தெரிந்துகொண்டார் (ஆதியாகமம் 12:1-3). நமக்கு இதுவரை தெரியாத அல்லது நேசிக்காத அனைவரையும் இயேசு அறிந்திருக்கிறார், நேசிக்கிறார். நாம் ஒருவரை ஒருவரும், நமது நகரங்களையும், அவர் ராஜ்யத்தையும், அவர் பார்க்கும்விதமாக நாமும் பார்க்க உதவும் தேவனின் இரக்கத்தாலும், கிருபையாலும் நாம் வாழ்கிறோம்.