ஆன் வோஸ்கேம்ப் எழுதிய “ஓராயிரம் கொடைகள்” என்ற புத்தகத்தில் வாசகர்களை தங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் தேவன் அவர்களுக்குத் தந்துள்ள நன்மைகளை எண்ணிப் பார்க்குமாறு ஊக்கப்படுத்துவார். அதில் அவள் அநுதினமும் தேவன் அவளுக்குத் தாராளமாகத் தருகின்ற சிறியதும், பெரியதும் – பாத்திரம் கழுவும் தொட்டியில் தோன்றும் வண்ணமிகு நீர்க்குமிழிமுதல் தன்னைப் போன்ற பாவிகளுக்குத் (நமக்கும்!) தரப்பட்ட ஒப்பிடமுடியாத இரட்சிப்புவரையுள்ள வௌ;வேறு கொடைகளைக் குறிப்பிடுகின்றாள். நம் வாழ்வில் மிகவும் கஷ்டம் நிறைந்த நேரத்தில் தேவனைக் காண்பதற்குத் தேவையான திறவுகோல் நன்றியோடுள்ள உள்ளமேயென அவள் குறிப்பிடுகின்றாள்.

நாம் நன்கறிந்த யோபுவின் வாழ்வில் துன்பங்கள் நிறைந்த நேரம் அது. அவனுடைய இழப்புகள் துயரமிகுந்ததாகவும் ஏராளமாகவும் இருந்தன. தனக்கிருந்த எல்லா கால்நடைகளையும், வேலைக்காரரையும் இழந்து நிற்கும் போது, ஒரே நேரத்தில் அவனுடைய பத்து பிள்ளைகளும் மரித்துப்போனார்களென அறிகிறான். யோபுவினுடைய ஆழ்ந்த துயரம் அவனுடைய செயலில் தெரிகிறது. அவன் தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்துக் கொண்டான் (1:20) அந்த வேதனை நேரத்திலும் அவன் கூறிய வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்தது. அவன் நன்றியுணர்வை வெளிப்படுத்தினான். அவன் இழந்த யாவற்றையும் தேவன் தனக்குத் தந்தார் என தெரிவிக்கின்றான் (வச. 21) ஒன்றும் செய்ய இயலாத அத்தகைய துயரத்தின் மத்தியில் இவ்வாறன்றி, அவன் வேறே எப்படி தேவனை ஆராதிக்க முடியும்?

இழப்பின் காலத்தில் ஏற்படும் வேதனையின் அளவு, நம்முடைய அனுதின நன்றியறிதலால் ஒருபோதும் குறைக்கப்படுவதில்லை. யோபு புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, யோபு கேள்விகளைக் கேட்டுக் கொண்டே துயரத்தினூடே கடந்து சென்றான். நம் வாழ்வின் இருண்ட நேரங்களில் சர்வ வல்ல தேவனுக்கு முன்பாக முழங்கால் படியிட்டு, ஒவ்வொரு சிறிய காரியங்களிலும் தேவன் நமக்குச் செய்த நன்மைகளையெண்ணி, அவரை துதித்துப் போற்ற நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வோம்.