குளிர்காலத்தில் நான் அடிக்கடி காலையில் விழித்து இந்த பூமி அதிகாலைப் பனியினால் (ளுழெற) மூடப்பட்டு அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்கின்றதைக் கண்டு வியப்பதுண்டு. வசந்தகால இடியோடு கூடிய புயலின் ஓசை இரவிலும் அதன் செயலைத் தெரிவிப்பது போலில்லாமல், பனி அமைதியாக இறங்குகின்றது.

ஆட்ரே ஆசாத் எழுதியுள்ள “குளிர்கால பனி” என்ற பாடலில், இயேசு இப்புவிக்கு சுழல்காற்றின் வல்லமையோடு வந்திருக்கலாம். ஆனால், அவர், என் ஜன்னலுக்கு வெளியே இரவில் மென்மையாக இறங்கியிருக்கும் பனியைப்போல அமைதியாக வந்தார் எனப் பாடியுள்ளார்.

இயேசுவின் வருகை அநேக அமைதியான ஆச்சரியங்களைக் கொண்டுவந்தது. அவர் ஓர் அரண்மனையில் பிறப்பதற்குப் பதிலாக எதிர்பாராத ஓரிடத்தில், பெத்லகேமின் புறப்பகுதியில் தாழ்மையாக வந்துதித்தார். அவர் அங்கிருந்த ஒரே படுக்கையான தீவனத் தொட்டியில் உறங்கினார் (லூக். 2:7). ராஜமரியாதையோடும், அரசு மரியாதையோடும் கவனிக்கப்பட வேண்டியவர் தாழ்மையான மேய்ப்பர்களால் வரவேற்கப்பட்டார் (வச. 15-16). செல்வந்தராய் இருக்க வேண்டியவர், ஆனால், இயேசுவின் பெற்றோர் அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க தேவாலயத்திற்கு எடுத்து வந்த போது, எளிய இரண்டு பறவைகளையே பலியாக அவர்களால் கொடுக்க முடிந்தது (வச. 24).

நாம் நினைக்க முடியாத வகையில் இயேசு இவ்வுலகினுள் வந்தார் என்பது ஏசாயா தீர்க்கதரிசியினால் முன்பே உரைக்கப்பட்டது. இரட்சகராகிய அவர் வரும்போது, “ அவர் கூக்குரலிடவுமாட்டார்; தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்” (ஏசா. 42:2). அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும் இருக்கிற தேவன் (வச. 3). அவர் மென்மையாக வந்து நம்மை அவர்பக்கம் இழுக்கும்படியாகவும், தேவன் தரும் சமாதானத்தை நமக்குத் தரும்படியாகவும் வந்தார். நாம் எதிர்பார்த்திராத வகையில் புல்லணையில் வந்துதித்த நமது இரட்சகரை நம்புகிற யாவருக்கும் அவர் தரும் சமாதானம் காத்திருக்கின்றது.