வகை  |  odb

வந்து பெற்றுக் கொள்ளுங்கள்

வந்து பெற்றுக் கொள்ளுங்கள்

வேதாகமம் பரிந்துரைக்கும் மருந்து

கிரெக், எலிசபெத் ஆகிய இருவரும் தங்களுடைய நான்கு பள்ளி செல்லும் குழந்தைகளோடு “நகைச்சுவை இரவு” என்று ஓர் இரவைச் செலவழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஓவ்வொரு குழந்தையும் தாங்கள் வாசித்த, கேள்விப்பட்ட அல்லது தாங்களே உருவாக்கிய நகைச்சுவைகளை இரவு உணவின் போது சொல்லும்படி கொண்டுவருவர். இந்த வழக்கம் மகிழ்ச்சியான நினைவுகளையும் வேடிக்கையையும் அனைவரோடும் பகிர்ந்துகொள்ள வழிவகுத்தது. அவர்களுக்கும், அவர்களுடைய குழந்தைகளுக்கும் சிரிப்பு ஆரோக்கியத்தை கொடுத்ததாகவும், கடினமான நாட்களில் ஆவியில் புத்துணர்ச்சி அளிக்க சிரிப்பு உதவியதாக கிரெக், எலிசபெத் ஆகிய இருவரும் உணர்ந்தனர்.

சாப்பாட்டு மேசையைச் சுற்றியமர்ந்து மகிழ்ச்சியாகப் பேசிக் கொள்வதின் நன்மையை சி.எஸ்.லூவிஸ் “ஒரு வீட்டிலுள்ளவர்கள் சாப்பாட்டு வேளையின் போது சிரித்து மகிழ்வதற்கு இணையாக எந்தவொன்றையும் சூரியன் இப்புவியில் கண்டதில்லை” எனக் குறிப்பிடுகின்றார்.

ஒரு மகிழ்ச்சியான உள்ளத்தைப் பெற்றுக்கொள்வதின் ஞானத்தைக் குறித்து நீதிமொழிகள் 17:22ல் மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப் பண்ணும்” என வாசிக்கின்றோம். இந்த நீதிமொழி சுகத்தையும், ஆரோக்கியத்தையும் உருவாக்குகிறது. நாம் நம்முடைய இருதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பிக்கொண்டால் அது மிகப் பெரிய பலனைத் தரக் கூடிய, விலை குறைந்த மருந்து என்கின்றார்.

நம்மனைவருக்கும் வேதாகமம் கூறுகின்ற இந்த மருந்து அவசியம். நாம் நம்முடைய உரையாடல்களில் மகிழ்ச்சியைக் கொண்டு வருவோமேயாயின் அது நம் உரையாடல்களில் வரும் விவாதங்களைத் தவிர்த்துவிடும். பள்ளியில் மன அழுத்தத்தைத் தரும் தேர்வுக்குப் பின்னரும், ஒரு நாளின் கடின வேலைக்குப் பின்னரும் சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளவும் இது உதவுகின்றது. குடும்ப நபர்களுக்கிடையேயும், நண்பர்களுக்கிடையேயும் சிரிப்பும், மகிழ்ச்சியும் ஏற்படும்போது. அந்த இடம் நாம் இங்கு நேசிக்கப்படுகின்றோம் என்று உணரக் கூடிய பாதுகாப்பான இடமாக மாறுகிறது.

உன்னுடைய வாழ்விலும் அதிக சிரிப்பை உருவாக்கிக் கொள்வதன் மூலம் உன்னுடைய ஆன்மாவிற்கு “நல்ல மருந்தைக்” கொடுக்க விரும்புகின்றாயா? ஒரு மகிழ்ச்சியான இருதயத்தை உருவாக்கிக் கொள்ளும்படி வேதாகமம் உன்னை ஊக்கப்படுத்துகின்றது என்பதை நினைவில் கொள்.

பரிசுத்தவான்களும் பாவிகளும்

யோவான் ஸ்நானனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பாலைவனத்தில் வாழ்ந்து வந்த, எகிப்தைச் சேர்ந்த மேரி (கி.பி. 344-421). தன்னுடைய வாலிப வயதில் ஆண்களை மயக்கி தவறான இன்பம் அனுபவித்துவந்தாள். அவளுடைய கேவலமான வாழ்வின் உச்சக்கட்டத்தில் அவள் எருசலேமிற்குப் புனித பயணம் செய்பவர்களையும் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எருசலேம் சென்றாள். ஆனால், அங்கு அவள் தன்னுடைய பாவங்களைக் குறித்து குத்தப்பட்டவளாய் மன மாற்றம் பெற்றாள். அதன் பின்னர் மனந்திரும்பியவளாய் தனிமையில் பாலைவனங்களில் வாழ்ந்தாள். மேரியின் இத்தகைய முழு மாற்றம் தேவனுடைய கிருபையின் மகத்துவத்தையும், சிலுவையின் மீட்கும் வல்லமையையும் விளங்கச் செய்கின்றது.

இயேசுவின் சீடனான பேதுரு மூன்று முறை இயேசுவை மறுதலித்தான். இந்த மறுதலித்தலுக்கு சில மணி நேரத்திற்கு முன்புதான் பேதுரு இயேசுவுக்காகத் தான் மரிக்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தான். (லூக். 22:33) அவனுடைய தோல்வியைக் குறித்த உணர்வு அவனைக் கசக்கிப் பிழியும் அடியாக அமைந்தது (வச. 61-62) இயேசுவின் மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்னர் பேதுரு சில சீடர்களோடு சேர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது இயேசு அவர்களுக்குத் தரிசனமானார். இயேசுவை மறுதலித்த மூன்று முறைகளுக்குப் பதிலாக, (யோவா. 21:1-3) அவன் இயேசுவின் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்த மூன்று வாய்ப்புகளைக் கொடுக்கின்றார். அவன் ஒவ்வொரு முறை வெளிப்படுத்தியபோதும் இயேசு தன்னுடைய ஜனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பினைக் கொடுக்கின்றார் (வச. 15-17). இயேசுவினுடைய இந்த அதிசயிக்கச் செய்யும் கிருபைதான் பேதுருவை கிறிஸ்துவின் சபையைக் கட்டும் படி முக்கிய பங்காற்றக் செய்தது. அவரை கிறிஸ்துவுக்காக தன் வாழ்வையே கொடுக்கச் செய்தது.

நம்மில் ஒவ்வொருவருடைய வாழ்க்கைச் சரித்திரமும் வாழ்வின் தோல்விகளும், ஏமாற்றங்களும் நிறைந்ததாக ஜெபஙகளாக ஆரம்பிக்கலாம். ஆனால். தேவனுடைய கிருபை வேறு வகையான முடிவையே கொண்டு வரும். அவருடைய கிருபையால் அவர் நம்மை விடுவித்து நம் வாழ்வை மாற்றுகின்றார்.

வாழ்வின் சோதனைகளைப் புரிந்து கொள்ளல்

என்னுடைய நண்பனின் தந்தையுடைய மருத்துவ ஆய்வு அறிக்கை, அவருக்கு புற்று நோயிருப்பதாகத் தெரிவித்தது. ஆனாலும் கீமோ சிகிச்சையின் போது அவர் இயேசுவின் மீது விசுவாசம் வைத்தார். அத்தோடு குணமடைந்த நிலையையும் அடைந்தார். அவர் பதினெட்டு மாதங்கள் புற்று நோயிலிருந்து விடுதலை பெற்றவராக வாழ்ந்தார். ஆனால், அது திரும்பவும் வந்தது. முன்னிலைமையையும் விட மோசமாகத் தாக்கப்பட்டார். அப்போதும் அவரும் அவருடைய மனைவியும்  கரிசனையோடும், ஏன் என்ற கேள்வியோடும் சந்தித்தபோதும் தேவன் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிடவில்லை. ஏனெனில், முதல்முறை நோய் தாக்கிய போது தேவன் அவரை எவ்வாறு காத்துக் கொண்டார் எனக் கண்டு கொண்டனர்.

நாம் ஏன் சோதனைகளின் வழியே கடந்து செல்கின்றோம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதுவே யோபுவின் நிலையும் கூட, அவர் மிகவும் கொடுமையான விவரிக்க இயலாத துயரத்தையும், நஷ்டத்தையும் சந்தித்தார். ஆனாலும் அவருடைய அநேகக் கேள்விகளுக்கிடையே யோபு 12ல் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்துகின்றார். “இதோ, அவர் இடித்தால் கட்ட முடியாது. அவர் மனுஷரை அடைத்தால் விடுவிக்க முடியாது” (வச. 14) “அவரிடத்தில் பெலனும் ஞானமும் உண்டு (வச. 16) “அவர் ஜாதிகளை பெருகவும் அழியவும் பண்ணுகிறார்” (வச. 23). இந்த நீண்ட பட்டியலில் யோபு, தேவன் ஏன் வேதனையையும் துன்பங்களையும் அனுமதித்தார், அவருடைய நோக்கம் என்ன என்பதைக் குறித்து குறிப்பிடவேயில்லை. யோபுவிடம் அதற்கு பதிலும் இல்லை. ஆனாலும் இவை அனைத்தின் மத்தியிலும் அவன் தைரியமாகச் சொல்கின்றான். “தேவனிடத்தில் ஞானமும், வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும். அவருக்குத்தான் ஆலோசனையும், புத்தியும் உண்டு” (12:13).

தேவன் ஏன் சில போராட்டங்களை நம் வாழ்வில் அனுமதிக்கின்றாரென நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. என்னுடைய நண்பனின் பெற்றோரைப் போன்று நாமும் நம்முடைய நம்பிக்கையை அவர் மீது வைப்போம். தேவன் நம்மை நேசிக்கின்றார். மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கின்றது (வச. 10) அவர் நம்மை விசாரிக்கின்றவர் (1 பேது. 5:7) ஞானமும், வல்லமையும், புத்தியும் கொள்ளலும் அவருக்கேயுரியது.