வகை  |  odb

மம்மா என்று அறியப்பட்டவர்

அவளுடைய பெயரும் நீண்டது அவளுடைய வாழ்நாட்களும் நீண்டவை. மேட்லின் ஹரியட் வோர்ஜாக்ஸன் வில்லியம்ஸ் 101 ஆண்டுகள் வரை வாழ்ந்தாள். அவள் இரண்டு கணவன்களோடு வாழ்ந்தாள். இருவருமே போதகர்கள். மேட்லின் என்னுடைய பாட்டி. நாங்கள் அவர்களை மம்மா என்றே அழைப்போம். என் உடன் பிறந்தோரும், நானும் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். அவர்களுடைய இரண்டாவது கணவன் அவரை விரட்டிவிடும்வரை நாங்கள் அவர்களுடைய வீட்டில் தான் வளர்ந்தோம். அதற்குப் பின்னரும் எங்கள் அருகில் சுமார் ஐம்பது மைல்களுக்கப்பால்தான் வாழ்ந்து வந்தார்கள். எங்களுடைய பாட்டி பாமாலைகளை நன்கு பாடுபவர், வேத வசனங்களைச் சொல்லுபவர், பியானோ வாசிப்பவர், தேவனுக்கு பயந்து நடக்கும் ஒரு பெண். நானும், என்

உடன்பிறந்தோரும் அவருடைய விசுவாசத்தால் கவரப்பட்டவர்கள்.

2 தீமோத்தேயு 1:3-7ல் காண்கின்ற படி தீமோத்தேயுவின் பாட்டியாகிய லோவிசாளும், அவனுடைய தாயாகிய ஐனிக்கேயாளும் தீமோத்தேயுவின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். அவர்களுடைய வாழ்வும் போதனைகளும், வேதாகமத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தன (வச. 5, 2 தீமோ. 3:14-16). அவர்களுடைய விசுவாசம் தீமோத்தேயுவின் இருதயத்திலும் மலர்ந்தது. வேதாகமத்தின் அடிப்படையில் அவர் வளர்க்கப்பட்டார். அதுவே அவன் தேவனோடு உள்ள உறவில் வளர அடித்தளமாக அமைந்தது. அது அவனை தேவனுக்கு ஊழியம் செய்யும்படி உருவாக்கியது (1:6-7).

இன்றைக்கும், தீமோத்தேயுவின் காலத்திலும் தேவன் உண்மையுள்ள ஆண்களையும், பெண்களையும் எதிர்கால சந்ததியினரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த பயன்படுத்துகின்றார். நம்முடைய ஜெபமும், வார்த்தைகளும், செயலும், சேவையும் நாம் வாழும்போதும் அதற்குப் பின்னரும் தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்படும். அதனால் தான், நானும் என் உடன்பிறப்புகளும் எங்களுடைய மம்மாவினால் கற்றுக்கொடுக்கப்பட்ட செயல்களை நடப்பித்துக் கொண்டிருக்கிறோம். என்னுடைய  ஜெபமெல்லாம், என்னுடைய மம்மாவின் பாரம்பரியம் எங்களோடு நின்று விடக்கூடாது என்பதே.

கடினமான இடங்களில் மகிழ்ச்சி

அவளால் எப்பொழுதெல்லாம் தொலைபேசியை எடுக்கமுடியவில்லையோ, அப்பொழுதெல்லாம் என்னுடைய சிநேகிதியின் ஒலிப்பதிவு செய்தி என்னை ஒரு செய்தியை பதிவு செய்யும்படி அழைக்கும். அந்த அழைப்பின் முடிவில் 'இது ஒரு சிறப்பான நாளாக அமையட்டும்' என முடிக்கும். நான் அந்த வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்க்கும்போது, நம்முடைய நாட்களைச் சிறப்பானதாக்கிக் கொள்ளும் வல்லமை நம்மிடமில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். உண்மையிலேயே சில சந்தர்ப்பங்கள் நம்மை அழிவுக்குள்ளாக்குவதாக இருக்கின்றன. ஆனால், சற்று ஆழமாகப் பார்க்கும்போது, நம்முடைய காரியங்கள் நன்றாகவோ மோசமானதாகவோ போனாலும், ஏதோவொரு விடுவிக்கும் வல்லமை நம்முடைய நாட்களை அழகானதாக்கி விடுகிறது என உணர்கின்றேன்.

ஆபகூக் இலகுவான சூழல்களை மட்டும் சந்திக்கவில்லை. அவர் ஒரு தீர்க்கதரிசியாகையால் தேவன் வரும்நாட்களில், ஜனங்கள் சார்ந்து வாழ்கின்ற விளைச்சலிலும், கால்நடைகளிலும் பலனில்லாமல் போகும் காலங்களைக் காட்டுகின்றார் (3:17). இக்காலங்களின் கொடுமையைத் தாங்குவதற்கு நம்பிக்கை மட்டுமே உதவமுடியும். ஒரு ஜனக்கூட்டமான இஸ்ரவேலர் கொடுமையான வறுமையை சந்திப்பர் என்பதைக் கேட்ட ஆபகூக்கின் இருதயம் வேதனையடைந்தது. உதடுகள் துடித்தன, கால்கள் பயத்தால் நடுங்கின (வச. 16).

இவையனைத்தும் இருந்தபோதும் ஆபகூக், 'நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்; என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்" (வச. 18) என்கின்றார். அவர் தேவன் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். கர்த்தர் தன்னை பெலப்படுத்தி, உயரமான ஸ்தலங்களில் தன்னை நடக்கப்பண்ணுவார் என நம்பிக்கையோடிருக்கின்றார் (வச. 9).

சில வேளைகளில் நாமும் ஆழ்ந்த வேதனைகளையும், கடின வேளைகளையும் கடக்க நேரிடும். ஆனால், எதை இழந்திருந்தாலும், எதை அடையாமற்போனாலும், ஆபகூக்கைப் போன்று நம்முடைய அன்பு தேவனில் களிகூருவோம். நமக்கு ஒன்றுமேயில்லாமல் போனாலும் அவர் நம்மைக் கைவிடுவதும் நம்மை விட்டு விலகுவதுமில்லை (எபி. 13:5). அவரே துயரப்படுகிறவர்களுக்கு நன்மையைத் தருபவர், அவரே நம்முடைய மகிழ்ச்சியின் காரணர்
(எபி. 61:3).

தைரியமாக நில்

ஜெர்மனியின் அநேக தேவாலயங்களின் தலைவர்கள் ஹிட்லருக்குச் சாதகமாக செயல்பட்ட போதும், வேத வல்லுநரும், போதகருமான மார்டின் நிமோலெர் என்பவர் நாசிக் கட்சியின் கொடுமைகளை எதிர்த்து நின்ற தைரியசாலிகளோடிருந்தார். நான் வாசித்ததில் 1970ல் மூத்த ஜெர்மானியர் ஒரு கூட்டமாக, ஒரு பெரிய விடுதியின் முன் நின்றுகொண்டிருக்க, ஓர் இளைஞன் அந்தக் குழுவின் சார்பாக பேசிக் கொண்டிருந்தார். ஒருவர், 'யார் அந்தக் குழுவினர்?" எனக் கேட்டபோது, 'ஜெர்மானிய போதகர்கள்" என பதில் வந்தது. 'அந்த இளைஞன் யார்?" என்று கேட்டபோது அது மார்டின் நிமோலெர், அவருக்கு வயது எண்பது என்றனர். ஆனால், அவர் இளமைத் துடிப்போடிருந்தார். ஏனெனில், அவரிடம் பயமில்லை.

நிமோலெருக்கு பயத்தை எதிர்த்து பெரிய, பயமற்ற மனிதனுக்கப்பாற்பட்ட வல்லமையிருந்தது. அது தேவனுடைய கிருபையே. உண்மையில் அவர் ஆரம்பத்தில் யூதருக்கு விரோதமான எண்ணங்களையே கொண்டிருந்தார். ஆனால், அவர் மனந்திரும்பியபோது தேவன் அவரை மீட்டுக் கொண்டார். அவர் உண்மைக்காக தைரியமாகப் பேசும்படிக்கு அவருக்கு தேவன் உதவினார்.

இஸ்ரவேலரும் பயத்தை மேற்கொண்டு தேவனை உண்மையாய் தொடரும்படி, அவர்களுக்கு மோசே ஊக்கமளிக்கின்றார். மோசேயும் அவர்களை விட்டு எடுபட்டு விடுவார் என அவர்கள் கேள்விப்பட்ட போது, அவர்கள் பயத்தால் பின் வாங்காதபடி அவர்களுக்கு மோசே, 'நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள். அவர்களுக்கு பயப்படவும் திகைக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தர் தாமே உன்னோடே கூட வருகிறார்" (உபா. 31:6) என தைரியப்படுத்துகின்றார். இஸ்ரவேலர் தங்கள்

எதிர்காலத்தைக் குறித்து பயப்படத் தேவையில்லை. ஏனெனில், தேவன் அவர்களோடிருக்கின்றார்.

எத்தகைய இருள் உன்னைச் சூழ்ந்துகொண்டாலும், எத்தனை பயங்கரம் உன்னைத் தாக்கினாலும் தேவன் உன்னோடிருக்கின்றார். தேவனுடைய கிருபையால் நீ பயத்தை மேற்கொள்வாய். ஏனெனில் 'தேவன் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" (வச. 6,8).

ஓர் அடையாளத்தைக் காட்டிலும் மேலானது

தன்னுடைய குழு ஒரு சரித்திரத்தை ஏற்படுத்தக்கூடிய அந்த கடைசி நேரத்தில், ஐயோவா பல்கலைக்கழகத்தின் மிகச்சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஜோர்டன் பொகனன் தடையில்லா ஓர் பந்து எறிதலை வேண்டுமென்றே தவறவிட்டு, தன் பள்ளியின் 25 வருட ரெக்கார்டை முறியடிப்பதை விட்டுவிட்டான். ஏன்? 1993 ஆம் ஆண்டு ஐயோவாவின் கிறிஸ்ட்ரீட் குழுவில் முப்பத்துநான்கு தடையில்லா பந்து எறிவுகளை தொடர்ந்து போட்டான்.. பின்னர் அவன் ஒரு கார் விபத்தில் மரித்துப் போனான். போகனன் ஸ்டீரிட்டை கௌரவித்து மகிழ்ந்தானேயன்றி, தன்னுடைய பள்ளிப் பதிவை முறியடிக்க விரும்பவில்லை.

போகனன் தன்னுடைய சொந்த முன்னேற்றத்தைவிட, சில விழிப்புணர்வை ஏற்படுத்தும் காரியங்களுக்கு அதிக கவனம் செலுத்தினான். இதே போன்ற மதிப்பீடுகளை இளம் வீரரான தாவீதின் வாழ்விலும் காணலாம். ஒரு குகையில் தன்னுடைய தரமற்ற படைகளோடு ஒளிந்திருந்த தாவீது, தன்னுடைய சொந்த ஊரான பெத்லகேமின் கிணற்று நீரைப் பருக ஏங்கினான். ஆனால், அந்தப் பகுதி பெலிஸ்தரின் கைவசமிருந்தது (2 சாமுவேல் 23:14-15).

தாவீதின் மூன்று யுத்த வீரர்கள் பெலிஸ்தரின் எல்லைக்குள் துணிந்து புகுந்து, அந்தக் கிணற்று நீரை மொண்டு தாவீதுக்குக் கொண்டு வந்தனர். ஆனால், தாவீதால் அந்த நீரைப் பருக முடியவில்லை. 'அவன் அதைக் குடிக்க மனதில்லாமல், அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப் போட்டான்" அவன், 'கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக" என்றான் (வச. 16-17).

தங்களுக்கு அகப்பட்டதையெல்லாம் கையகப்படுத்திக் கொள்வதையே பாராட்டும் இந்த உலகில் அன்பினாலும், தியாகத்தாலும் நிறைவேற்றப்படும் செயல்கள் எத்தனை வல்லமையுள்ளவை! அத்தகைய செயல்கள் ஓர் அடையாளத்தை ஏற்படுத்துவதைக் காட்டிலும் மேலானவை.

தொடர்ந்து போய்க் கொண்டிரு

பல வகையான ஜனங்கள் நிறைந்த இவ்வுலகில் வெவ்வேறு திறமைகளும், வெவ்வேறு தலைமைத்துவ பண்பும் கொண்ட அநேகரோடு தொடர்புகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் பட்டணத்திற்கு வெளியே ஒரு மேற்பார்வையாளரால் நடத்தப்படும் ஒரு செயல்திட்டம் சற்று மாறுபட்டது. எங்களுடைய வேலையைக் குறித்து கடுமையாக குற்றம்சாட்டியதோடு, ஒவ்வொரு வார இறுதியிலும் எங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இன்னும் அதிக வேலையைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தினார். இந்த குறுக்கீட்டால் நான் ஊக்கமிழந்தேன். பயம் என்னைத் தொற்றிக் கொண்டது. சில வேளைகளில் இதனை விட்டுவிடலாமா என்று கூட சிந்திக்கலானேன்.

இதேபோன்றுதான் மோசேயும் துன்பங்கள் சூழ்ந்த இருண்ட வேளையில், பார்வோனைச் சந்திக்காமல் போய்விட எண்ணியிருப்பான். தேவன் மேலும் எட்டு பேரழிவுகளை எகிப்தியர் மீது அனுப்பிய பின், பார்வோன் மோசேயிடம் 'என்னை விட்டு அப்பாலே பேர் நீ இனி என் முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய்" என வெடிக்கின்றான் (யாத். 10:28).

இந்த மாதிரி எச்சரிப்பு இருந்தபோதிலும் இஸ்ரவேலரை பார்வோனின் கையிலிருந்து மீட்பதற்கு தேவன் மோசேயை பயன்படுத்தினார். 'விசுவாசத்தினாலே மோசே... ராஜாவின் கோபத்துக்கு பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்" (எபி. 11:27). தேவன், தான் விடுவிப்பேன் என வாக்களித்ததை நிறைவேற்றுவார் என்று தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கையால் மோசே, பார்வோனை மேற்கொண்டான் (யாத். 3:17).

நம்முடைய வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் தேவன் நம்மோடிருந்து, பரிசுத்த ஆவியானவர் மூலம் நம்மை வழி நடத்துவார் என்ற அவருடைய வாக்குத்தத்தத்தை உறுதியாகப் பற்றிக்கொள்வோம். 'தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும், அன்பும், தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் (2 தீமோ. 1:7) நம்முடைய வாழ்வில் தேவன் காட்டும் வழியில் தொடர்ந்து செல்ல தேவையான தைரியத்தை பரிசுத்த ஆவியானவர் தந்து நம்மை வழிநடத்துவார்.

ஒப்பிட முடியாத வாழ்வு

ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில், நடுத்தர வயதினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களைப் போல நடித்தனர். இளைஞர்களின் வாழ்வை நன்கு புரிந்துகொள்வதற்காக அப்படிச் செய்தனர். இளைஞர்கள் தங்களுடைய சுயமதிப்பை அளப்பதில் சமுதாயத் தொடர்பு சாதனங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஒரு நபர், 'மாணவர்களின் சுயமதிப்பு, தொடர்பு சாதனங்களோடு இணைந்துள்ளது. தங்களுடைய ஒரு புகைப்படத்திற்கு எத்தனை 'விருப்பங்கள்" கொடுக்கப்பட்டுள்ளன என்பதையே அது சார்ந்துள்ளது" என்றார். மற்றவர்கள் தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதன் தேவை, இளைஞர்களை அதிக நேரம் வலைதளங்களில் தொடர்புகொள்ளத் தூண்டுகின்றது.

நாம் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஏக்கம் எப்பொழுதும் இளைஞர்களுக்குள் இருக்கின்றது. ஆதியாகமம் 29ல் லேயாள், தன்னுடைய கணவன் யாக்கோபின் அன்பினைப் பெற ஏங்குவதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இதன் வெளிப்பாட்டை தன்னுடைய முதல் மூன்று குமாரரின் பெயர்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். அத்தனையும் அவளுடைய தனிமையை வெளிக்காட்டுகின்றன (வச. 31-34). ஆனால், வருத்தத்திற்குரியது என்னவெனில், யாக்கோபு தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவள் எதிர்பார்த்த எண்ணம் நிறைவேறியதாகத் தெரியவில்லை.

லேயாளுக்கு நான்காவது மகன் பிறந்தபோது அவள் தன் கணவனிடமல்ல, தேவனிடம் திரும்பி, தன் மகனுக்கு யூதா என்று பெயரிடுகின்றாள். அதற்கு 'கர்த்தரைத் துதிப்பேன்" என அர்த்தம் (வச. 35). லேயாள் தனக்குரிய முக்கியத்துவம் தேவனிடம் இருக்கிறது என்பதைக் கண்டு கொண்டாள். அவள் தேவனுடைய இரட்சிப்பின் வரலாற்றில் இடம் பெறுகின்றாள். தாவீது அரசனின் முன்னோர்களின் பட்டியலில் யூதா இடம்பெறுகின்றார். பின்;னர் இயேசு கிறிஸ்துவும் தாவீதின் வம்சத்தில் தோன்றுகின்றார்.

நாமும் நம்முடைய முக்கியத்துவத்தைப் பெற பலவகைகளில், பல வழிகளில் முயற்சிக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே, நாம் தேவனுடைய பிள்ளைகள், இயேசு கிறிஸ்துவின் சந்ததியின், பரலோகத் தந்தையோடு நித்தியமாக வாழப் போகின்றவர்கள் என்ற அடையாளத்தைப் பெற முடியும். பவுல் எழுதுவது போல, 'என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்" என்று நாமும் சொல்வோமாக (பிலி. 3:8).

வீடற்றவராக வாழ தேர்ந்து கொள்ளல்

1989 ஆம் ஆண்டு முதல் கெய்த்வாசர்மேன் ஒவ்வொரு ஆண்டிலும் ஒருசில நாட்களை வீடற்ற நிலையில் கழிக்க தேர்ந்து கொள்வார். தனக்குள்ளே அன்பையும் மனதுருக்கத்தையும் வளர்த்துக்கொள்ள, இது உதவியாயிருக்கிறதெனக் கருதுகின்றார். 'நற்செயல்கள்" என்ற நிறுவனத்தின் இயக்குனரான கெய்த், 'தெருக்களில் வசிப்பவர்களோடு வாழும்போது என்னுடைய கண்ணோட்டத்தையும், புரிந்துகொள்வதையும் விரிவாக்கிக்கொள்ள முடிகிறது" என்கின்றார்.

தான் பணியாற்றும் நபர்களோடு ஒருவராக தன்னை இணைத்துக் கொள்ளும் கெய்த்தின் இந்த அணுகுமுறை, இயேசு நிறைவேற்றிய பணியின் ஒரு சிறிய பகுதியைப் போன்றுள்ளது. இந்த அகில உலகையும் படைத்த தேவன் தாமே, இந்த கொடிய உலகில் குழந்தையாகப் பிறந்து, மனிதனாக வாழ்ந்து, நாம் அனுபவிக்கின்ற துன்பங்களைத் தானும் அனுபவிக்கவும், மனிதனின் கரத்தாலே மரிக்கவும் தன்னை அர்ப்பணித்தார். இதன்மூலம் நமக்கும் தேவனுக்குமுள்ள உறவை மீண்டும் ஏற்படுத்தினார்.

எபிரெயரை எழுதியவர், 'பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கு...  அப்படியானார்" (2:14) எனக் குறிப்பிடுகின்றார். இயேசுவும் தேவதூதர்களைக் காட்டிலும் சிறியவராகத் தன்னைத் தாழ்த்தினார் (வச. 9). அவரே அவர்களை உருவாக்கியவராயிருந்தும் தன்னைத் தாழ்த்தினார். அவர் முடிவில்லாத வாழ்வுடையவராயிருந்தும் மனிதனாகப் பிறந்து, மரித்தார். அவர் சர்வ வல்லவராயிருந்தும் நமக்காகப் பாடுபட்டார். ஏன் அவர் இப்படிச் செய்ய வேண்டும்? ஏனெனில், நாம் சோதிக்கப்படும்போது நமக்கு உதவும் பொருட்டும் தேவனுக்கும் நமக்குமிடையே ஒப்புரவாகுதலை ஏற்படுத்தவும் தன்னை ஒப்புக்கொடுத்தார் (வச. 17-18).

இன்று நாம் அவருடைய அன்பை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அவர் நம்முடைய மனிதத் தன்மையைப் புரிந்து கொள்கின்றார். நாமும் நம்முடைய பாவங்களிலிருந்து விடுதலைப் பெற்று தூய்மையடைய ஒரு வழியைத் திறந்துள்ளார்.

தாமதத்தை எதிர் பார்

நான் ஏற்கனவே தாமதமாகவே வந்திருக்கின்றேன், என்னிடம் விளையாட்டு காட்டுகின்றாயா? என எனக்குள்ளே பேசிக் கொண்டேன். எனக்கெதிரேயிருந்த சாலை குறியீட்டு விளக்கு என்னுடைய எதிர்ப்பை சற்று மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்துகின்றது. 'தாமதத்தை எதிர்பார்" என்பதே அந்த அறிவுறுத்தல். அனைத்து வாகனங்களும் மெதுவாகச் செல்கின்றன.

நான் சிரித்துக் கொண்டேன். நான் எந்த காரியத்தையும் சரியான நேரத்தில் செய்யவேண்டுமென எதிர்பார்ப்பவன். நான் இப்பகுதியில் சாலைபோடும் பணி நடைபெறுமென எதிர்பார்க்கவில்லை.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும் நம்மில் சிலருடைய எதிர்காலத் திட்டங்கள் மெதுவாகச் செயல்படுகின்றன அல்லது வேறுபாதையில் நம் வாழ்வை செலுத்தும்படி திருப்பப்படுகின்றன. நான் இதனைக் குறித்து நினைக்கும் போது, என்னுடைய வாழ்விலும் அநேக நேரங்களில் சிறிய மற்றும் பெரிய காரியங்களில் திசை திருப்பப்படுவதையும், தாமதம் ஏற்படுவதையும் நினைவுகூர முடிகின்றது.

சாலொமோன் தன் வாழ்வில் 'தாமதத்தை எதிர்பார்" என்ற ஒரு செய்தியைச் சந்தித்ததேயில்லை. ஆனாலும் நீதிமொழிகள் 16ல் அவர் நம்முடைய திட்டங்களுக்கு எதிராக தேவனுடைய வழிநடத்துதல் அமைகிறது என்பதைத் தெரிவிக்கின்றார். வசனம் 1 கூறுகின்ற, 'மனதின் யோசனைகள் மனுஷனுடையது. நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்" என்ற கருத்து இந்த மொத்த செய்தியையும் உள்ளடக்குகின்றது. இதனையே வசனம் 9, 'மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும். அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்" என்று கூறுகின்றது. இதனை இன்னும் தெளிவாகக் கூறுவோமாயின், நடக்கவேண்டிய காரியங்களைக் குறித்து திட்டங்களை நாம் போடலாம். ஆனால் தேவன் வேறொரு பாதையின் வழியே நம்மை நடத்திச் செல்லலாம்.

இந்த ஆவிக்குரிய உண்மை வழியை நாம் எவ்வாறு தவறவிடுகின்றோம்? நான் என்னுடைய திட்டங்களைப் போடுகின்றேன். தேவனுடைய திட்டம் என்னவென்பதை கேட்கத் தவறிவிடுகின்றேன். என்னுடைய திட்டத்தில் தடைகள் வரும்போது நான் விரக்தியடைகின்றேன்.

நாம் கவலைப்படுவதற்குப் பதிலாக, சாலொமோன் கற்றுத் தருவதைப் போன்று அவரை நம்பி வாழக் கற்றுக்கொள்வோம். நாம் ஜெபத்தில் அவரைத் தேடும் போதும் அவருடைய வழிநடத்துதலுக்காகக் காத்திருக்கும் போதும், தேவன் படிப்படியாக நம்மை வழிநடத்தி, தொடர்ந்து அவருடைய பாதையில் நடத்திச் செல்வார்.

அகற்றப்பட்டது

1770 ஆம் ஆண்டு வரை ரொட்டித் துண்டுகளே காகிதத்திலுள்ள தவறான பென்சில் எழுத்துக்களை நீக்க பயன்படுத்தப்பட்டு வந்தன. பிரிட்டனைச் சேர்ந்த எட்வர்ட் நெய்ர்ன் என்பவர் ஒரு ரொட்டித்துண்டு என எண்ணி தவறுதலாக ரப்பர் மரப் பாலின் ஒரு துண்டினைக் கொண்டு காகிதத்திலுள்ள எழுத்தினை அழித்தபோது, அது காகிதத்திலுள்ள பென்சில் எழுத்துக்களை நன்றாக நீக்கியதோடு, சில ரப்பர் துணுக்குகளையே மீதமாக விட்டது. ரப்பர், பென்சில் கோடுகளை எளிதில் அகற்றக்கூடியதாக இருப்பதைக் கண்ட அவர், அதன் விளைவாக பென்சில் அழிப்பானைக் கண்டுபிடித்தார்.

நம்முடைய வாழ்விலும் மிக மோசமான தவறுகளையும் அகற்றமுடியும். அது தேவனாலேயே கூடும். அவரே வாழ்வின் அப்பம். அவரே தம்முடைய வாழ்வின் மூலம் நம்முடைய பாவக்கறைகளை நீக்கி சுத்தமாக்கினார். நம்முடைய பாவங்களை மீண்டும் நினைப்பதில்லையெனவும் வாக்களித்துள்ளார். 'நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப் போடுகிறேன். உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்" என ஏசாயா 43:25ல் சொல்கின்றார்.

இது தகுதியற்ற நமக்கு, கொடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சிலாக்கியம். அவர் நம்முடைய கடந்தகால பாவங்களை கார்மேகத்தைப் போல நம்மை விட்டு அகற்றிவிட்டார் என்பதை நம்புவதற்கு நமக்குக் கடினமாகத் தோன்றலாம். எல்லாவற்றையும் அறிந்திருக்கின்ற தேவன் என்னுடைய பாவங்களை எளிதில் மறந்து விடுவாரா என கேட்கத் தோன்றலாம்.

ஆனால், நாம் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது, இதுவே தேவன் நமக்குச் செய்யும் சிலாக்கியம். நம்முடைய பாவங்களை மன்னிக்கின்ற தேவன், இனி அவற்றை 'நினையாமலும் இருப்பேன்" என்கின்றார். நம்முடைய பரலோகத் தந்தை நம்மை பாவத்திலிருந்து விடுவித்து, நாம் அவரில் வளர உதவுகின்றார். நம்முடைய பழைய பாவ வாழ்வை எண்ணி நாம் சோர்ந்துபோகத் தேவையில்லை. நாம் தூய்மையாக்கப்பட்டவர்களாய், அவருக்கு இப்பொழுதும் எப்பொழுதும் பணிசெய்யலாம்.

பாவத்தின் விளைவுகளை நாம் சந்திக்கலாம். ஆனால் பாவத்தை தேவன் நம்மைவிட்டு அகற்றிவிட்டார். நாம் அவரிடம் திரும்பி, புதிய பரிசுத்த வாழ்வைப் பெற்றுக்கொள்ள அழைக்கின்றார். நம் பழைய பாவ வாழ்வு அகற்றப்பட அதைவிட சிறந்த வழி வேறெதுவுமில்லை.