‘குரு’ என்ற வார்த்தையைக் கேட்கும் போது யாரை நினைத்துக் கொள்கின்றாய்? என்னைப் பொருத்தமட்டில் அது போதகர். ரிச். நான் என்மீதுள்ள நம்பிக்கையை இழந்தபோதும், அவர் என்னுடைய திறமைகளைக் கண்டுபிடித்து என்மீது நம்பிக்கை வைத்தார். அவர் தாழ்மையோடும், அன்போடும் பிறருக்குப் பணிசெய்து, தன்னை ஒரு மாதிரியாகக் காண்பித்தார். அதன் விளைவாக, நான் இப்பொழுது மற்ற மக்களுக்கு ஆலோசனை கொடுப்பதன் மூலம் உதவி செய்து தேவனுக்குப் பணி செய்கின்றேன்.

எலிசா ஒரு தலைவனாக வளர்வதில் தீர்க்கதரிசி எலியா ஒரு முக்கிய பங்காற்றியுள்ளார். எலிசா வயலில் உழுது கொண்டிருந்த போது, எலியா தீர்க்கதரிசி அவனை அழைக்கின்றார் (1 இரா. 19:16,19). தேவன் எலிசாவை எலியாவின் ஊழியத்தை அவனுக்குப்பின் தொடர்ந்து செய்யும்படி அபிஷேகம் பண்ணச் சொன்னார். அந்த இளம் தீர்க்கதரிசி தன்னுடைய குருவான எலியா நடப்பித்த வியத்தகு அற்புதங்களையும், அவன் தேவனுடைய வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்ப்படிவதையும் கவனிக்கின்றான். இவ்வாறு எலிசா தன் வாழ்நாள் முழுவதும் தேவ பணி செய்யும்படி அவனை உருவாக்க தேவன் எலியாவை பயன்படுத்தினார். எலிசா தேவ பணியை விட்டுவிடுவதற்கு அவனுக்கு மூன்று முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும், அவன் தனக்கு முன்னோடியான எலியாவிடம் பெற்றுக் கொண்ட பயிற்சியைப் புதுப்பித்துக் கொண்டு பணி செய்யவே தேர்ந்து கொண்டான். ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் மறுத்துவிட்டான். “நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும், உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன்” (2 இரா. 2:2,4,6) என்றான். எலிசா உண்மையாயிருந்ததன் விளைவாக தேவன் அவனை மிகவும் வித்தியாசமான வழிகளில் பயன்படுத்தினார்.

இயேசுவைப் பின்பற்றுவது என்பதின் அர்த்தமென்ன என்று நாம் விளங்கிக்கொள்ள நமக்குச் சில முன் மாதிரிகள் தேவை. நாம் ஆவியில் வளர்வதற்கு உதவியாக தேவ மனிதர்களையும், மனுஷிகளையும் தருவாராக. நாமும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் நம்முடைய வாழ்வைப் பிறருக்குப் பயன்படும்படி அர்ப்பணிப்போமாக.