ஜூன், 2019 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஜூன் 2019

புதிய பார்வை தேவை

“வெறுமனே பச்சைபசேலென்று மங்கலாக ஒரு உருவத்தைப் பார்ப்பதைவிட மரத்தையும் அதன் ஒவ்வொரு இலைகளையும் பார்ப்பது அற்புதமாக இருக்கும்” என்று என் அப்பா சொன்னார். அது எவ்வளவு உண்மையென்பது எனக்குத் தெரியும். அப்போது எனக்கு பதினெட்டு வயது; புதிதாக கண்ணாடி அணிந்திருந்தேன், அது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ஒவ்வொன்றையும் ஒரு புதிய விதத்தில் பார்க்கமுடிந்தது; மங்கலாகக் தெரிந்தவை எல்லாம் தெளிவாக அழகாகத் தெரிந்தன!

கண்ணாடி அணியாமல் மரங்களைப் பார்ப்பதுபோலத்தான் சிலசமயங்களில் வேதாகமத்தின் சில புத்தகங்களை வாசிக்கும்போதும் உணர்கிறேன். அவற்றில் அறிந்துகொள்வதற்கு அதிகம் இல்லாததுபோலத் தோன்றுகிறது. ஆனால் சலிப்பூட்டுவதுபோலத் தெரிகிற வசனங்களில் உள்ள விபரங்களைக் கவனிக்கும்போது, ஆச்சரியமான விஷயங்கள் வெளிப்படுகின்றன.

யாத்திராகமப் புத்தகத்தை வாசிக்கும்போது இத்தகைய அனுபவத்தைப் பெற்றேன். இஸ்ரவேலர் மத்தியில் தாம் வாசஞ்செய்வதற்கு தற்காலிகமாக ஆசரிப்புக்கூடாரம் ஒன்றை தேவன் கட்டச்சொல்கிறார். அதன் கட்டுமான விவரங்களைச் சொல்லுகிறார். அதை வாசிக்கும்போது சற்று சலிப்புத் தட்டுகிறது. 25ம் அதிகாரத்தில் குத்துவிளக்கு குறித்த விவரங்களை தேவன் கொடுக்கிறார். அதை சற்று ஆராய்ந்து பார்த்தேன். அதன் தண்டு, கிளைகள், மொக்குகள், பழங்கள், பூக்கள் அனைத்தையும் ‘பசும்பொன்னினால்’ அடிப்புவேலையாய்ச் செய்யச் சொல்லுகிறார். வச 31. அதன் கிண்ணங்கள் “வாதுமை பூக்களை” போல இருக்கவேண்டுமாம். வச 34.

வாதுமை மரங்கள் அற்புதமானவை. அதே இயற்கை அழகு தம்முடைய ஆசரிப்புக்கூடாரத்திலும் காணப்பட தேவன் சொன்னார்!

“காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப் பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்” என்று பவுல் எழுதினார். ரோமர் 1:20. தேவனுடைய அழகைக் காண சிலசமயங்களில் சிருஷ்டிப்பையும், சலிப்புத்தட்டுகிற சில வசனங்களையும் புதிய பார்வையோடு பார்க்கவேண்டும்.

சுறாக்களும்கூட கடிக்காமல் இருக்கலாம்

விடுமுறை சயமத்தில் என் பிள்ளைகளை ஒரு நீர்வாழ் காட்சிசாலைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவர்கள் சந்தோஷமாக விளையாடினார்கள், எனக்கு சற்று
கவலையிலிருந்தது. அங்கு விசேஷமாகச் செய்யப்பட்டிருக்கும் தொட்டிகளில் உள்ள சிறிய சுறாக்களிடம் மக்கள் விளையாடலாம். அங்கிருந்த உதவியாளரிடம், அந்தச் சுறாக்கள் எப்போதாவது யாருடைய விரலையாவது கடித்திருக்கின்றனவா என்று கேட்டேன். சுறாக்களுக்கு சற்றுமுன்னரே இரையளித்திருப்பதாகவும், அதுவும் கூடுதலாக இரை கொடுத்திருப்பதாகவும் கூறினார். அவற்றிற்கு பசி இருக்காது என்பதால் கடிக்காது என்றார்.

சுறாக்களுடன் பழகுவது குறித்து நான் கற்றுக்கொண்டதை ஒரு நீதிமொழியும் நினைவூட்டுகிறது: “திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.” நீதி 27:7. பசியானது, அதாவது உள்ளுக்குள் வெறுமையாக இருப்பதுபோன்ற உணர்வானது, நாம் தீர்மானங்களைச் செய்யும்போது நம்முடைய பகுத்தறிவை மழுங்கச்செய்யலாம். அந்த வெறுமையைப் போக்க எதையும் செய்வதற்கு அது நம்மைச் சம்மதிக்கவைக்கிறது, ஏன் அடுத்தவருக்கு அது பாதிப்பையே உண்டாக்கினாலும் செய்யவைக்கிறது.

பசிகள் நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த தேவன் விரும்புவதில்லை. கிறிஸ்துவின் அன்பு நம்மில் நிறைந்திருக்க அவர் விரும்புகிறார், அப்போதுதான் நாம் செய்கிற ஒவ்வொன்றிற்கும் அவர் தருகிற சமாதானமும் உறுதியும் அடித்தளமாக இருக்கும். தேவன் நம்மேல் நிபந்தனையற்ற அன்பு செலுத்துகிறார் என்பதை எப்போதும் உணர்ந்திருக்கும்போது, நம்மில் நம்பிக்கை உண்டாகும். சாதனைகள், உடைமைகள், உறவுகள் போன்ற வாழ்க்கையின் “இனிமையான” விஷயங்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்க அது நம்மைப் பெலப்படுத்தும்.

இயேசுவோடான உறவு மட்டுமே நமக்கு மெய்யான நிம்மதியைக் கொடுக்கிறது. தேவன் நம்மேல் காட்டுகிற ஈடுஇணையற்ற அன்பை நாம் பற்றிக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் “தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்பட” முடியும். எபேசியர் 3:19.

வழிகளை மாற்றும் தேவன்

மற்றவர்களுக்கு ஊழியம்செய்ய தேவன் நமக்கு ஒரு வாசலைத் திறந்திக்கிறார் என்று உணர்ந்தாலும், அந்தச் சமயத்தில் 'வேண்டாம்," அல்லது 'இப்போது வேண்டாம்" என்று சொன்னால் எப்படி இருக்கும்? என்னுடைய ஊழியக்காலத்தின் ஆரம்பத்தில் இரண்டு வாய்ப்புகள் எனக்கு வந்தன் இரண்டுமே என்னுடைய திறமைகள், வரங்கள் மூலம் சபையின் தேவைகளைச் சந்திப்பதற்கேற்ற வாய்ப்புகள்தாம். ஆனால், கடைசியில் இரண்டு வாசல்களுமே அடைபட்டன. இந்த ஏமாற்றமான

அனுபவங்களுக்கு பிறகு, இன்னொரு பொறுப்பு தேடி வந்தது; அதற்கு நான் தேர்வுசெய்யப்பட்டேன். அந்த ஊழிய அழைப்புமூலம் வாழ்க்கையை மாற்றத்தக்க ஊழியங்களை பதின்மூன்று வருடங்கள் செய்ய முடிந்தது.

அப்போஸ்தலர் 16ல், பவுலையும் அவரோடு இருந்தவர்களையும் இரண்டுமுறை தேவன் தடைசெய்து, வேறுபக்கம் அனுப்புகிறார். முதலாவது அவர்கள், 'ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டார்கள்" (வச. 6). பிறகு அவர்கள், 'மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்" (வச. 7). தம்முடைய ஊழியத்திற்கும், ஊழியக்

காரர்களுக்கும் எது சரியாக இருக்கும் என்பது தேவனுக்குத் தெரியும், அது அவர்களுக்குத் தெரியாது. முந்தின திட்டங்களை தேவன் தடைசெய்ததால்தான், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் கேட்கமுடிந்தது, தேவனுடைய உறுதியான வழிநடத்துதலைப் பெறமுடிந்தது (வச. 9-10).

இது உண்மையிலேயே பெரிய இழப்புதான் என்கிற எண்ணம் முதலில் வந்ததுமே யாருக்குத்தான் வருத்தமாக இருக்காது? எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் போகும்போதும், செய்த வேலைக்கு போதுமான வருமானம் கிடைக்காதபோதும், வேறிடத்திற்கு மாறவேண்டும் என்கிற எண்ணம் தடைபடும்போதும் பெரிய வேதனையாக இருக்கும். இத்தகைய விஷயங்கள் அந்த நேரத்தில் நமக்கு அதிக மனப்பாரத்தைக் கொடுக்கலாம்;. ஆனால், அவை உண்மையிலேயே தேவன் மாற்றிவிட்ட பாதைகள் என்பதும், தாம் விரும்புகிற இடத்தில் நம்மை வைப்பதற்கு தேவன் கிருபையாகக் கையாண்ட வழிகள் என்பதும் பிறகுதான் தெரியவரும்; அப்போது நாம் தேவனுக்கு நன்றி கூறுவோம்.

கயிற்றை அவிழ்த்துவிடுங்கள்

மன்னிப்பதால் கிடைக்கிற சுகத்தை எல்லாரும் அறிந்துகொள்ள ஒரு கிறிஸ்தவ அமைப்பினர் முயன்று வருகிறார்கள். அந்த ஊழியத்தின் ஒரு பகுதியாக குறுநாடகம் ஒன்றை நடத்துவார்கள். அதில், தவறுசெய்த ஒருவரையும் அவரால் பாதிக்கப்பட்டவரையும் முதுகோடு முதுகாகச் சேர்த்துக் கட்டிவிடுவார்கள். அந்தக் கட்டிலிருந்து தப்பிக்கவேண்டுமானால் பாதிக்கப்பட்டவர்தான் கட்டை அவிழ்க்கவேண்டும். அவர் எவ்வளவுதான் முயன்றாலும் கட்டை அவிழ்க்க முடியாது; கட்டை அவிழ்க்காமல் தப்பிக்கவும் முடியாது.

தாங்கள் தவறுசெய்துவிட்டதாக ஒருவர் நம்மிடம் வந்து வருத்தம் தெரிவிக்கும்போது, அவரை மன்னிக்கவேண்டும். அப்போதுதான் நாம் அனுபவித்த வேதனை, கசப்பிலிருந்து நம்மையும் நம்மைப் பாடுபடுத்தியவரையும் விடுவித்துவிட முடியும். ஏசாவின் சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபு ஏமாற்றி வாங்கிவிட்டார், அதன்பிறகு இரு சகோதரர்களும் இருபது வருடங்கள் பிரிந்து வாழ்கிறார்கள். இந்தச் சம்பவத்தை ஆதியாகமத்தில் வாசிக்கலாம். பல வருடங்கள் கடந்த நிலையில், பிதாக்களுடைய தேசத்திற்குத் திரும்பிச்செல்லும்படி யாக்கோபிடம் தேவன் கூறுகிறார். ஆதி 31:3. யாக்கோபு உடனே கீழ்ப்படிந்தார்; ஆனால், அதற்கு முன்னரே ஏராளமான மிருக ஜீவன்களை வெகுமானமாக ஏசாவுக்கு அனுப்பிவைக்கிறார். ஆதி 32:13-15. சகோதரர்கள் இருவரும் சந்தித்த போது, ஏழுவிசை தன் சகோதரனை குனிந்து, வணங்குகிறார். ஆதி 33:3. ஏசா ஓடிச்சென்று, தன் சகோதரனைக் கட்டியணைக்கிறார்; மீண்டும் சேர்ந்ததை எண்ணி, இருவரும் அழுகிறார்கள் (வச. 4). தன் சகோதரனுக்கு விரோதமாக தான் செய்த பாவத்தின் பிடியிலிருந்து இப்போது யாக்கோபு விடுவிக்கப்பட்டார்.

மன்னிப்பு வழங்கமுடியாமல் சிறைபட்டிருக்கிறீர்களா? கோபத்தையும் பயத்தையும் அல்லது அவமானத்தையும் அகற்றமுடியாமல் தவிக்கிறீர்களா? நீங்கள் உதவிகேட்டால், தேவன் தம்முடைய குமாரன் மூலமாகவும் ஆவியானவர் மூலமாகவும் உங்களை விடுவிப்பார். எப்படிப்பட்ட கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும் கட்டை அவிழ்ப்பதற்கான செயல்முறையைத் துவங்குவதற்கு அவர் பெலன் தருவார்; அப்போது நீங்கள் விடுதலைபெறலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

மன்னிப்பின் வல்லமை

ஒரு நாசக்கார கும்பலால் கடத்தப்பட்ட பதினேழு மிஷனரிகளைப் பற்றி 2021ஆம் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. அவர்களுடைய மீட்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அந்தக் குழுவை (குழந்தைகள் உட்பட) கொலை செய்துவிடுவதாக அந்த கும்பல் மிரட்டியது. ஆனால் ஆச்சரியமான வகையில், பிணையக் கைதிகளாய் சிக்கியிருந்த அனைத்து மிஷனரிகளும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடத்தை வந்து சேர்ந்த மாத்திரத்தில், அவர்களை சிறைபிடித்தவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினர்: “அன்பின் மன்னிக்கும் சக்தியானது, வன்முறையின் வெறுப்பின் சக்தியைக் காட்டிலும் வலிமைவாய்ந்தது என்பதை இயேசு வார்த்தையின் மூலமாகவும் அவருடைய வாழ்க்கையின் மூலமாகவும் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார். எனவே, நாங்கள் உங்களை மனப்பூர்வமாய் மன்னிக்கிறோம்” என்பதே அந்த செய்தி.  
மன்னிப்பு சக்தி வாய்ந்தது என்பதை இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். அவர் “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்” (மத்தேயு 6:14) என்று கூறுகிறார். பின்பாக, எத்தனை முறை மன்னிக்கவேண்டும் என்னும் பேதுருவின் கேள்விக்கு இயேசு பதிலளிக்கும்போது, “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” (18:22) என்று இயேசு சொல்லுகிறார். மேலும் சிலுவையில், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) என்று தெய்வீக மன்னிப்பை இயேசு வெளிப்படுத்திக் காண்பித்தார்.  
இருதரப்பினரும் மனப்பூர்வமாய் காயமாற்றப்பட்டு, ஒப்புரவாகும்போதே மன்னிப்பானது முழுமையடைகிறது. நம்மை பாதிப்படையச் செய்த செயல்களை நினைவிலிருந்து அகற்றி, மற்றவர்களை காயப்படுத்தாமல் உறவுகளை எவ்விதம் பேணவேண்டும் என்பதைக் குறித்த பகுத்தறிவை பெறுவது என்பது தேவனுடைய அன்பையும் வல்லமையையும் பிரதிபலிக்கும் ஆதாரங்களாய் வாழக்;கையை மாற்றும். தேவநாம மகிமைக்காய், மற்றவர்களை மன்னிக்கும் வழிகளை ஆராய்வோம்.

படைப்பைக் கண்டறிதல்

யூரேசிய நாடான ஜார்ஜியாவில் உள்ள க்ருபேரா-வோரோன்ஜா என்ற குகையானது பூமியில் இதுவரை ஆராயப்பட்ட ஆழமான குகைகளில் ஒன்றாகும். ஆய்வாளர்கள் குழுவானது அதின் செங்குத்து குகைகளின் பயமுறுத்தும் ஆழத்தை 2,197 மீட்டர் வரை ஆய்வு செய்துள்ளது. அதாவது, பூமிக்குள் 7,208 அடி வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ இதே போன்று நானூறு குகைகள் நாட்டின் பிற பகுதிகளிலும், உலகம் முழுமையிலும் இருக்கின்றன. அவைகள் எல்லாவற்றிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, புதிய கண்டெடுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  
படைப்பின் ஆச்சரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் கண்டெடுக்கப்பட, நாம் வாழும் பூமியைக் குறித்த நம்முடைய புரிதலை வலுவாக்குவதோடு, தேவனுடைய கரத்தின் அற்புதமான கிரியைகளைக் கண்டு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது (ஆதியாகமம் 1:26-28). சங்கீதக்காரன் நம் அனைவரையும் தேவனின் மகத்துவத்தை “கெம்பீரமாய்ப் பாடி” சங்கீர்த்தனம் பண்ணுவதற்கு அழைப்பு விடுக்கிறார் (வச. 1). நாளை புவி தினத்தை கொண்டாடும் வேளையில், தேவனின் ஆச்சரியமான படைப்பைக் குறித்து தியானிப்போம். படைப்பின் ஆச்சரியங்கள் அனைத்தையும் நாம் கண்டுபிடித்துவிட்டோமோ இல்லையோ, அவைகள் அனைத்தையும் ஆதாரமாய் வைத்து அவருக்கு முன்பாக தலைவணங்கி ஆராதிப்போம் (வச. 6).  
அவர் தனது படைப்பின் பரந்த, பூகோள இடங்களை மட்டும் அறியவில்லை. நம் இருதயத்தின் ஆழத்தையும் அவர் அறிந்திருக்கிறார். ஜார்ஜியாவின் குகைகளைப் போலல்லாமல், வாழ்க்கையின் இருள் சூழ்ந்த ஆழமான பள்ளத்தாக்குகளை கடந்து செல்வோம். அதுபோன்ற தருணங்களில் தேவன் நம்முடைய பயணத்தை மென்மையாகவும் உறுதியாகவும் பராமரிக்கிறார் என்பதை அறிவோம். சங்கீதக்காரனுடைய வார்த்தைகளின் படி, “நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே” (வச. 7) என்பதை மறந்துவிடவேண்டாம்.  

ஆழமான சுகம்

2020ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று, பிரேசிலின் புகழ்பெற்ற “மீட்பராகிய கிறிஸ்து” என்னும் கிறிஸ்துவின் சிலையில் கிறிஸ்துவுக்கு மருத்துவர் ஆடை உடுத்தப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பல முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவ்வாறு சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த சித்தரிப்பானது, இயேசுவே நம்முடைய பரம வைத்தியர் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது (மாற்கு 2:17).  
இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் பல பிணியாளிகளுக்கு சுகம் கொடுத்திருக்கிறார். பர்திமேயு குருடன் (10:46-52); குஷ்டரோகி (லூக்கா 5:12-16); திமிர்வாதக்காரன் (மத்தேயு 9:1-8) என்று சில உதாரணங்களைக் கூறமுடியும். அவரைப் பின்பற்றி வருகிற மக்கள் மீதான அவருடைய கரிசனையை, அவர் அப்பங்களை பெருகச் செய்து அனைவரையும் போஷித்த சம்பவத்தின் மூலம் அறிந்துகொள்ளமுடியும் (யோவான் 6:1-13). அந்த அற்புதங்கள் அனைத்தும் இயேசுவின் பராக்கிரமத்தையும் ஜனங்கள் மீதான அவருடைய தெய்வீக அன்பையும் வெளிப்படுத்துகிறது.  
அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாய் அவருக்கு கிடைத்த சுகமாக்குகிற வல்லமையைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்திருக்கிறார். அது, நாம் பாவத்தினால் தேவனிடத்திலிருந்து முற்றிலுமாய் பிரிக்கப்பட்ட சூழ்நிலையின் மத்தியிலும் “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” என்பதே (ஏசாயா 53:5). இயேசு நம்முடைய அனைத்து சரீர சுகவீனங்களையும் சுகமாக்கவில்லையெனினும், தேவனோடு உறவுகொள்ளும் நம்முடைய தேவையை அவர் பூர்த்திசெய்கிறவராயிருக்கிறார்.