Archives: ஏப்ரல் 2019

பரிசுத்தவான்களும் பாவிகளும்

யோவான் ஸ்நானனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பாலைவனத்தில் வாழ்ந்து வந்த, எகிப்தைச் சேர்ந்த மேரி (கி.பி. 344-421). தன்னுடைய வாலிப வயதில் ஆண்களை மயக்கி தவறான இன்பம் அனுபவித்துவந்தாள். அவளுடைய கேவலமான வாழ்வின் உச்சக்கட்டத்தில் அவள் எருசலேமிற்குப் புனித பயணம் செய்பவர்களையும் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எருசலேம் சென்றாள். ஆனால், அங்கு அவள் தன்னுடைய பாவங்களைக் குறித்து குத்தப்பட்டவளாய் மன மாற்றம் பெற்றாள். அதன் பின்னர் மனந்திரும்பியவளாய் தனிமையில் பாலைவனங்களில் வாழ்ந்தாள். மேரியின் இத்தகைய முழு மாற்றம் தேவனுடைய கிருபையின் மகத்துவத்தையும், சிலுவையின் மீட்கும் வல்லமையையும் விளங்கச் செய்கின்றது.

இயேசுவின் சீடனான பேதுரு மூன்று முறை இயேசுவை மறுதலித்தான். இந்த மறுதலித்தலுக்கு சில மணி நேரத்திற்கு முன்புதான் பேதுரு இயேசுவுக்காகத் தான் மரிக்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தான். (லூக். 22:33) அவனுடைய தோல்வியைக் குறித்த உணர்வு அவனைக் கசக்கிப் பிழியும் அடியாக அமைந்தது (வச. 61-62) இயேசுவின் மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்னர் பேதுரு சில சீடர்களோடு சேர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது இயேசு அவர்களுக்குத் தரிசனமானார். இயேசுவை மறுதலித்த மூன்று முறைகளுக்குப் பதிலாக, (யோவா. 21:1-3) அவன் இயேசுவின் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்த மூன்று வாய்ப்புகளைக் கொடுக்கின்றார். அவன் ஒவ்வொரு முறை வெளிப்படுத்தியபோதும் இயேசு தன்னுடைய ஜனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பினைக் கொடுக்கின்றார் (வச. 15-17). இயேசுவினுடைய இந்த அதிசயிக்கச் செய்யும் கிருபைதான் பேதுருவை கிறிஸ்துவின் சபையைக் கட்டும் படி முக்கிய பங்காற்றக் செய்தது. அவரை கிறிஸ்துவுக்காக தன் வாழ்வையே கொடுக்கச் செய்தது.

நம்மில் ஒவ்வொருவருடைய வாழ்க்கைச் சரித்திரமும் வாழ்வின் தோல்விகளும், ஏமாற்றங்களும் நிறைந்ததாக ஜெபஙகளாக ஆரம்பிக்கலாம். ஆனால். தேவனுடைய கிருபை வேறு வகையான முடிவையே கொண்டு வரும். அவருடைய கிருபையால் அவர் நம்மை விடுவித்து நம் வாழ்வை மாற்றுகின்றார்.

வாழ்வின் சோதனைகளைப் புரிந்து கொள்ளல்

என்னுடைய நண்பனின் தந்தையுடைய மருத்துவ ஆய்வு அறிக்கை, அவருக்கு புற்று நோயிருப்பதாகத் தெரிவித்தது. ஆனாலும் கீமோ சிகிச்சையின் போது அவர் இயேசுவின் மீது விசுவாசம் வைத்தார். அத்தோடு குணமடைந்த நிலையையும் அடைந்தார். அவர் பதினெட்டு மாதங்கள் புற்று நோயிலிருந்து விடுதலை பெற்றவராக வாழ்ந்தார். ஆனால், அது திரும்பவும் வந்தது. முன்னிலைமையையும் விட மோசமாகத் தாக்கப்பட்டார். அப்போதும் அவரும் அவருடைய மனைவியும்  கரிசனையோடும், ஏன் என்ற கேள்வியோடும் சந்தித்தபோதும் தேவன் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிடவில்லை. ஏனெனில், முதல்முறை நோய் தாக்கிய போது தேவன் அவரை எவ்வாறு காத்துக் கொண்டார் எனக் கண்டு கொண்டனர்.

நாம் ஏன் சோதனைகளின் வழியே கடந்து செல்கின்றோம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதுவே யோபுவின் நிலையும் கூட, அவர் மிகவும் கொடுமையான விவரிக்க இயலாத துயரத்தையும், நஷ்டத்தையும் சந்தித்தார். ஆனாலும் அவருடைய அநேகக் கேள்விகளுக்கிடையே யோபு 12ல் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்துகின்றார். “இதோ, அவர் இடித்தால் கட்ட முடியாது. அவர் மனுஷரை அடைத்தால் விடுவிக்க முடியாது” (வச. 14) “அவரிடத்தில் பெலனும் ஞானமும் உண்டு (வச. 16) “அவர் ஜாதிகளை பெருகவும் அழியவும் பண்ணுகிறார்” (வச. 23). இந்த நீண்ட பட்டியலில் யோபு, தேவன் ஏன் வேதனையையும் துன்பங்களையும் அனுமதித்தார், அவருடைய நோக்கம் என்ன என்பதைக் குறித்து குறிப்பிடவேயில்லை. யோபுவிடம் அதற்கு பதிலும் இல்லை. ஆனாலும் இவை அனைத்தின் மத்தியிலும் அவன் தைரியமாகச் சொல்கின்றான். “தேவனிடத்தில் ஞானமும், வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும். அவருக்குத்தான் ஆலோசனையும், புத்தியும் உண்டு” (12:13).

தேவன் ஏன் சில போராட்டங்களை நம் வாழ்வில் அனுமதிக்கின்றாரென நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. என்னுடைய நண்பனின் பெற்றோரைப் போன்று நாமும் நம்முடைய நம்பிக்கையை அவர் மீது வைப்போம். தேவன் நம்மை நேசிக்கின்றார். மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கின்றது (வச. 10) அவர் நம்மை விசாரிக்கின்றவர் (1 பேது. 5:7) ஞானமும், வல்லமையும், புத்தியும் கொள்ளலும் அவருக்கேயுரியது.

தேவன் தரும் பணி ஓய்வுத் திட்டம்

பழங்காலப் பொருட்களைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த முனைவர். வார்விக் ராட்வெல் தன்னுடைய பணி ஓய்விற்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்து தேசத்தில், லிச்பீல்டிலுள்ள பேராலயத்தில் ஓர் அரிய காரியத்தைக் கண்டுபிடித்தார். கட்டடக் கலைஞர்கள் அந்த தேவாலயத்தின் தளத்தின் ஒரு பகுதியை மிகவும் கவனத்தோடு தோண்டியெடுத்து, அதில் நகரக்கூடிய ஒரு தளத்தை அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது அங்கு பிரதான தூதனான காபிரியேல் தூதனின் சிலையைக் கண்டெடுத்தனர். அது ஏறத்தாள 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டு கொண்டனர். எனவே முனைவர் ராட்வெல்வின் பணி ஓய்வுத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அவருடைய கண்டுபிடிப்பு ஒரு புதிய ஆர்வத்தோடு, ஒரு புதிய கோணத்தில் அவரைச் செயல்படவைத்தது.

மோசேயும் எண்பது வயதான போது ஓர் அனல்மூட்டும் கண்டுபிடிப்பிற்குள் இழுத்துக் கொள்ளப்பட்டான். அவனுடைய வாழ்வே மாறியது. எகிப்து ராஜகுமாரியின் வளர்ப்பு மகனாக இருந்தபோதும் அவன் தான் ஓர் எபிரெயரின் வழிவந்தவன் என்பதை மறக்கவேயில்லை. தன்னுடைய உறவினருக்கு இழைக்கப்பட்ட அநீதியைகக் கண்ட போது அவன் கொதித்தெழுந்தான் (யாத். 2:11-12) எபிரெயனை அடித்த ஓர் எகிப்தியனை மோசே கொன்று போட்டான் எனப் பார்வோன் கேள்வியுற்ற போது, மோசேயைக் கொன்று போட திட்டம் செய்தான். எனவே மோசே மீதியான் தேசத்திற்கு தப்பி சென்று அங்கு தங்கினான் (வச. 13-15).

நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அவன் எண்பது வயதான போது, தன்னுடைய மாமனாரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, “அங்கே கர்த்தருடைய தூதனானவர் முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜீவாலையிலே நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான். முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், வெந்து போகாமல் இருந்தது” (3:2). முட்செடியின் நடுவிலிருந்து தேவன் மோசேயைக் கூப்பிட்டார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்து வழிநடத்துமாறு அவனிடம் கூறினார் (வச. 3-25).

உன் வாழ்வின் இந்த வேளையில் தேவன் எத்தகைய நோக்கத்திற்காக உன்னை அழைக்கின்றார்? உன்னுடைய பாதையில் தேவன் என்ன புதிய திட்டத்தை வைத்திருக்கின்றார்?

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பாரபட்சமும் தேவசிநேகமும்

“நான் எதிர்பார்த்தது நீ இல்லை. நான் உன்னை வெறுக்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் அப்படியில்லை.” அந்த இளைஞனின் வார்த்தைகள் கடுமையாகத் தெரிந்தது. ஆனால் அவை உண்மையில் கருணை காட்டுவதற்கான முயற்சியாக இருந்தது. நான் அவர் வசிக்கும் நாட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய அந்த தேசம் பல தசாப்தங்களுக்கு முன்னர் என்னுடைய தேசத்தோடு யுத்தம் செய்தது. நாங்கள் ஒன்றாக வகுப்பில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டோம். அவர் தொலைவில் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவரை ஏதாகிலும் புண்படுத்திவிட்டேனா என்று நான் கேட்டபோது, அவர், “இல்லை . . . . அதுதான் விஷயம். என் தாத்தா அந்தப் போரில் கொல்லப்பட்டார், அதற்காக நான் உங்கள் மக்களையும் உங்கள் நாட்டையும் வெறுத்தேன். ஆனால் இப்போது நமக்குள் எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது!” என்று பதிலளித்தார். 
பாரபட்சம் என்னும் உணர்வு மனித இனத்தைப் போலவே மிகவும் பழமையானது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு, இயேசு நாசரேத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாத்தான்வேல் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அவனுடைய பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று சொல்கிறார். நாத்தான்வேல் இயேசுவைப் போலவே கலிலேயா பகுதியில் வாழ்ந்தவர். தேவனுடைய மேசியா வேறொரு இடத்திலிருந்து வருவார் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். மற்ற கலிலேயர்களும் நாசரேத்தை இழிவாகப் பார்த்தனர். ஏனென்றால் அது ஒரு சிறிய அடையாளமில்லாத ஊராக இருந்தது.  
இது மிகவும் தெளிவாக உள்ளது. நாத்தான்வேலின் பதில், இயேசு அவனை நேசிப்பதற்கு தடையாக இருக்கவில்லை. மேலும் அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவின் சீஷனாக மாறுகிறான். நாத்தான்வேல் பின்பாக, “நீர் தேவனுடைய குமாரன்” (வச. 49) என்று இயேசுவின் மகத்துவத்தை சாட்சியிடுகிறான். தேவனுடைய மறுரூபமாக்கும் அன்பிற்கு எதிராக நிற்கக்கூடிய எந்த பாரபட்சமும் இல்லை. 

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.