ஏப்ரல், 2019 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஏப்ரல் 2019

பரிசுத்தவான்களும் பாவிகளும்

யோவான் ஸ்நானனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பாலைவனத்தில் வாழ்ந்து வந்த, எகிப்தைச் சேர்ந்த மேரி (கி.பி. 344-421). தன்னுடைய வாலிப வயதில் ஆண்களை மயக்கி தவறான இன்பம் அனுபவித்துவந்தாள். அவளுடைய கேவலமான வாழ்வின் உச்சக்கட்டத்தில் அவள் எருசலேமிற்குப் புனித பயணம் செய்பவர்களையும் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எருசலேம் சென்றாள். ஆனால், அங்கு அவள் தன்னுடைய பாவங்களைக் குறித்து குத்தப்பட்டவளாய் மன மாற்றம் பெற்றாள். அதன் பின்னர் மனந்திரும்பியவளாய் தனிமையில் பாலைவனங்களில் வாழ்ந்தாள். மேரியின் இத்தகைய முழு மாற்றம் தேவனுடைய கிருபையின் மகத்துவத்தையும், சிலுவையின் மீட்கும் வல்லமையையும் விளங்கச் செய்கின்றது.

இயேசுவின் சீடனான பேதுரு மூன்று முறை இயேசுவை மறுதலித்தான். இந்த மறுதலித்தலுக்கு சில மணி நேரத்திற்கு முன்புதான் பேதுரு இயேசுவுக்காகத் தான் மரிக்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தான். (லூக். 22:33) அவனுடைய தோல்வியைக் குறித்த உணர்வு அவனைக் கசக்கிப் பிழியும் அடியாக அமைந்தது (வச. 61-62) இயேசுவின் மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்னர் பேதுரு சில சீடர்களோடு சேர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது இயேசு அவர்களுக்குத் தரிசனமானார். இயேசுவை மறுதலித்த மூன்று முறைகளுக்குப் பதிலாக, (யோவா. 21:1-3) அவன் இயேசுவின் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்த மூன்று வாய்ப்புகளைக் கொடுக்கின்றார். அவன் ஒவ்வொரு முறை வெளிப்படுத்தியபோதும் இயேசு தன்னுடைய ஜனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பினைக் கொடுக்கின்றார் (வச. 15-17). இயேசுவினுடைய இந்த அதிசயிக்கச் செய்யும் கிருபைதான் பேதுருவை கிறிஸ்துவின் சபையைக் கட்டும் படி முக்கிய பங்காற்றக் செய்தது. அவரை கிறிஸ்துவுக்காக தன் வாழ்வையே கொடுக்கச் செய்தது.

நம்மில் ஒவ்வொருவருடைய வாழ்க்கைச் சரித்திரமும் வாழ்வின் தோல்விகளும், ஏமாற்றங்களும் நிறைந்ததாக ஜெபஙகளாக ஆரம்பிக்கலாம். ஆனால். தேவனுடைய கிருபை வேறு வகையான முடிவையே கொண்டு வரும். அவருடைய கிருபையால் அவர் நம்மை விடுவித்து நம் வாழ்வை மாற்றுகின்றார்.

வாழ்வின் சோதனைகளைப் புரிந்து கொள்ளல்

என்னுடைய நண்பனின் தந்தையுடைய மருத்துவ ஆய்வு அறிக்கை, அவருக்கு புற்று நோயிருப்பதாகத் தெரிவித்தது. ஆனாலும் கீமோ சிகிச்சையின் போது அவர் இயேசுவின் மீது விசுவாசம் வைத்தார். அத்தோடு குணமடைந்த நிலையையும் அடைந்தார். அவர் பதினெட்டு மாதங்கள் புற்று நோயிலிருந்து விடுதலை பெற்றவராக வாழ்ந்தார். ஆனால், அது திரும்பவும் வந்தது. முன்னிலைமையையும் விட மோசமாகத் தாக்கப்பட்டார். அப்போதும் அவரும் அவருடைய மனைவியும்  கரிசனையோடும், ஏன் என்ற கேள்வியோடும் சந்தித்தபோதும் தேவன் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிடவில்லை. ஏனெனில், முதல்முறை நோய் தாக்கிய போது தேவன் அவரை எவ்வாறு காத்துக் கொண்டார் எனக் கண்டு கொண்டனர்.

நாம் ஏன் சோதனைகளின் வழியே கடந்து செல்கின்றோம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதுவே யோபுவின் நிலையும் கூட, அவர் மிகவும் கொடுமையான விவரிக்க இயலாத துயரத்தையும், நஷ்டத்தையும் சந்தித்தார். ஆனாலும் அவருடைய அநேகக் கேள்விகளுக்கிடையே யோபு 12ல் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்துகின்றார். “இதோ, அவர் இடித்தால் கட்ட முடியாது. அவர் மனுஷரை அடைத்தால் விடுவிக்க முடியாது” (வச. 14) “அவரிடத்தில் பெலனும் ஞானமும் உண்டு (வச. 16) “அவர் ஜாதிகளை பெருகவும் அழியவும் பண்ணுகிறார்” (வச. 23). இந்த நீண்ட பட்டியலில் யோபு, தேவன் ஏன் வேதனையையும் துன்பங்களையும் அனுமதித்தார், அவருடைய நோக்கம் என்ன என்பதைக் குறித்து குறிப்பிடவேயில்லை. யோபுவிடம் அதற்கு பதிலும் இல்லை. ஆனாலும் இவை அனைத்தின் மத்தியிலும் அவன் தைரியமாகச் சொல்கின்றான். “தேவனிடத்தில் ஞானமும், வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும். அவருக்குத்தான் ஆலோசனையும், புத்தியும் உண்டு” (12:13).

தேவன் ஏன் சில போராட்டங்களை நம் வாழ்வில் அனுமதிக்கின்றாரென நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. என்னுடைய நண்பனின் பெற்றோரைப் போன்று நாமும் நம்முடைய நம்பிக்கையை அவர் மீது வைப்போம். தேவன் நம்மை நேசிக்கின்றார். மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கின்றது (வச. 10) அவர் நம்மை விசாரிக்கின்றவர் (1 பேது. 5:7) ஞானமும், வல்லமையும், புத்தியும் கொள்ளலும் அவருக்கேயுரியது.

தேவன் தரும் பணி ஓய்வுத் திட்டம்

பழங்காலப் பொருட்களைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த முனைவர். வார்விக் ராட்வெல் தன்னுடைய பணி ஓய்விற்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்து தேசத்தில், லிச்பீல்டிலுள்ள பேராலயத்தில் ஓர் அரிய காரியத்தைக் கண்டுபிடித்தார். கட்டடக் கலைஞர்கள் அந்த தேவாலயத்தின் தளத்தின் ஒரு பகுதியை மிகவும் கவனத்தோடு தோண்டியெடுத்து, அதில் நகரக்கூடிய ஒரு தளத்தை அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது அங்கு பிரதான தூதனான காபிரியேல் தூதனின் சிலையைக் கண்டெடுத்தனர். அது ஏறத்தாள 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டு கொண்டனர். எனவே முனைவர் ராட்வெல்வின் பணி ஓய்வுத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அவருடைய கண்டுபிடிப்பு ஒரு புதிய ஆர்வத்தோடு, ஒரு புதிய கோணத்தில் அவரைச் செயல்படவைத்தது.

மோசேயும் எண்பது வயதான போது ஓர் அனல்மூட்டும் கண்டுபிடிப்பிற்குள் இழுத்துக் கொள்ளப்பட்டான். அவனுடைய வாழ்வே மாறியது. எகிப்து ராஜகுமாரியின் வளர்ப்பு மகனாக இருந்தபோதும் அவன் தான் ஓர் எபிரெயரின் வழிவந்தவன் என்பதை மறக்கவேயில்லை. தன்னுடைய உறவினருக்கு இழைக்கப்பட்ட அநீதியைகக் கண்ட போது அவன் கொதித்தெழுந்தான் (யாத். 2:11-12) எபிரெயனை அடித்த ஓர் எகிப்தியனை மோசே கொன்று போட்டான் எனப் பார்வோன் கேள்வியுற்ற போது, மோசேயைக் கொன்று போட திட்டம் செய்தான். எனவே மோசே மீதியான் தேசத்திற்கு தப்பி சென்று அங்கு தங்கினான் (வச. 13-15).

நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அவன் எண்பது வயதான போது, தன்னுடைய மாமனாரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, “அங்கே கர்த்தருடைய தூதனானவர் முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜீவாலையிலே நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான். முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், வெந்து போகாமல் இருந்தது” (3:2). முட்செடியின் நடுவிலிருந்து தேவன் மோசேயைக் கூப்பிட்டார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்து வழிநடத்துமாறு அவனிடம் கூறினார் (வச. 3-25).

உன் வாழ்வின் இந்த வேளையில் தேவன் எத்தகைய நோக்கத்திற்காக உன்னை அழைக்கின்றார்? உன்னுடைய பாதையில் தேவன் என்ன புதிய திட்டத்தை வைத்திருக்கின்றார்?

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தோலுக்கு உள்ளே கிரியை

சிறுவயதில் நானும் என் சகோதரியும் அடிக்கடி மோதிக் கொண்டேயிருப்போம். அதில் ஒரு குறிப்பிட்ட தருணம் என் நினைவில் இன்னும் இருக்கிறது. நாங்கள் இருவரும் சத்தத்தை உயர்த்தி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தவேளையில், அவள் சொன்ன ஒரு காரியம் என்னால் மன்னிக்கவே முடியாத வகையில் இருந்தது. எங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பகைமையைக் கண்ட என் பாட்டி, “தேவன் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு சகோதரியைத் தான் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பரிவு காண்பிக்க பழக வேண்டும்” என்று ஒருவரையொருவர் நேசிக்க வேண்டிய எங்களது பொறுப்பை எங்களுக்கு எடுத்துச் சொன்னார். எங்களை அன்பினாலும் புரிதலினாலும் நிரப்பும்பொருட்டு தேவனிடத்தில் நாங்கள் ஜெபித்தபோது, ஒருவரையொருவர் நாங்கள் எந்தவிதத்தில் காயப்படுத்தினோம் என்பதையும் எப்படி மன்னிக்கவேண்டும் என்பதையும் தேவன் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.  
கோபத்தையும் கசப்பையும் உள்ளுக்குள் வைத்திருப்பது சாதாரணமாய் தெரியலாம். ஆனால் தேவனின் துணையோடு நம்முடைய எரிச்சலின் ஆவியை விட்டுவிட்டு, தேவன் கொடுக்கும் சமாதானத்தை நாம் உணரவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (எபேசியர் 4:31). இந்த மாம்சத்தின் உணர்வுகளுக்கு அடிமைப்படாமல், கிறிஸ்துவை மாதிரியாய் வைத்து, ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை செயல்படுத்துவோம் (வச. 32). நமக்கு மன்னிப்பது கடினமாய் தோன்றினால், அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு அருளும் கிருபையை நாம் சார்ந்துகொள்வோம். நாம் எத்தனை முறை விழுந்தாலும், அவர் கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை (புலம்பல் 3:22). தேவன் நம்முடைய இருதயங்களில் இருக்கும் கசப்பை நீக்குவதற்கு நமக்கு உதவிசெய்வார். அதினால் நாம் நம்பிக்கையோடு அவருடைய அன்பிற்கு உட்பட்டவர்களாய் நிலைத்திருப்போம்.  

மலைமுகடுகளின் பாதை

ஒரு கவிஞரும், ஆன்மீக எழுத்தாளருமான கிறிஸ்டினா ரோசெட்டி, தனக்கு எதுவும் எளிதில் வரவில்லை என்பதை உணர்ந்தார். அவள் தனது வாழ்நாள் முழுவதும் மனச்சோர்வு மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். அவளுடைய வாழ்க்கையில் மூன்று நிச்சயதார்த்தங்கள் நிறுத்தப்பட்ட துக்கத்தை தாங்கினார். இறுதியில் அவள் புற்றுநோயால் மரித்துப்போனாள்.  
தாவீது இஸ்ரவேலின் ராஜரீகத்தில் அமர்த்தப்பட்டபோது, அவன் ஒரு வெற்றிகரமான போர்வீரனாக அடையாளப்படுத்தப்பட்டான். ஆனால் அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் அவன் பாடுகளை சகிக்கவேண்டியிருந்தது. அவனுடைய ஆட்சியின் இறுதியில், அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாயிருந்த நபர்களோடு சேர்ந்து அவனுடைய சொந்த குமாரனே அவனுக்கு விரோதமாய் திரும்பினான் (2 சாமுவேல் 15:1-12). ஆகையினால் தாவீது ஆசாரியனாகிய அபியாத்தார், சாதோக் மற்றும் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியையும் எடுத்துக்கொண்டு எருசலேமை விட்டு ஓடினான் (வச. 14,24).  
அபியாத்தார் தேவனுக்கு பலிகளை செலுத்திய பின்பு, தாவீது ஆசாரியர்களைப் பார்த்து, “தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்” (வச. 25) என்று சொன்னான். அவனுடைய குழப்பத்தின் மத்தியிலும் தாவீது, “(தேவன்) உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்” (வச. 26). அவனால் தேவனை நம்ப முடியும் என்பதை அறிந்திருந்தான்.  
கிறிஸ்டினா ரோசெட்டி தேவனை நம்பினாள். அவளுடைய வாழ்க்கை நம்பிக்கையோடு நிறைவடைந்தது. நாம் கடந்து செல்லும் பாதையானது, மலைமுகடுகளாய் தென்படலாம். ஆனால் அங்கே நம்மை விரிந்த கைகளோடு வரவேற்கும் நம்முடைய பரமபிதா நமக்காய் காத்திருக்கிறார்.  

நீலக்கல் திருச்சபை மணிகள்

 நீலக்கல் பாறை என்பது ஆச்சரியமான ஒரு பாறை. அதை அடைக்கும்போது, அதில் சிதறும் சில நீலக்கற்கள் இசையொலி ஏற்படுத்தும். “மணியோசை” என்று பொருள்படும் மேன்க்ளோசோக் என்ற ஒரு வெல்ஷ் கிராமத்தில், பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த நீலக்கற்களை தேவாலய மணிகளாகப் பயன்படுத்தினர். இங்கிலாந்தின் பிரபலமான ஸ்டோன்ஹென்ச் என்ற நீலக்கற்பாறை மிச்சங்கள், இசையை ஏற்படுத்தும் விதமான அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க தோன்றுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள், ஸ்டோன்ஹென்சில் இடம்பெற்றுள்ள இந்த நீலக்கற்கள் அதிலிருந்து இருநூறு மைல் தொலைவில் அமைந்திருந்த இந்த மேன்க்ளோசோக் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.  
இசையை ஏற்படுத்தும் இந்த நீலக்கற்கள் என்பது தேவனுடைய படைப்பில் ஒரு ஆச்சரியமாய் திகழ்கிறது. இயேசு குருத்தோலை ஞாயிற்றில் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது சொன்ன காரியத்தை நினைவுபடுத்துகிறது. ஜனங்கள் இயேசுவைச் சுற்றிலும் கூச்சலிட, அவர்களை அதட்டும்படிக்கு மார்க்கத் தலைவர்கள் இயேசுவை கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 19:40) என்கிறார்.  
நீலக்கற்களினால் இசையெழுப்பக்கூடும் என்றால், கல்லுகளே சிருஷ்டிகரை கூப்பிடும் என்று இயேசு சொல்லுவதை கருத்தில்கொண்டால், நம்மை உண்டாக்கி மீட்டுக்கொண்ட நம்முடைய நேசருக்கு எவ்வளவாய் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்! அவர் நம் அனைத்து துதிகளுக்கும் பாத்திரர். அவருக்கு துதி செலுத்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்வாராக. அனைத்து சிருஷ்டியும் அவரை பணிகின்றன.