எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எஸ்டெரா பிரோஸ்க்கா எஸ்கோபார்கட்டுரைகள்

உற்சாகமாய் கொடுக்கிறவர்

மூன்றாம் நூற்றாண்டில் பிறந்த நிக்கோலஸ் என்பவர், அவர் மரித்த பல நூற்றாண்டுகள் கழித்து சாண்ட கிளாஸ் (கிறிஸ்மஸ் தாத்தா) என்று அழைக்கப்படுவார் என்பது அவருக்கு தெரியாது. அவர் தேவனை நேசித்து, மக்கள் மீது அக்கறைக்கொண்டு, தன்னுடையவைகள் எல்லாவற்றையும் உற்சாகமாய் மற்றவர்களுக்கு கொடுப்பதிலும் நற்கிரியை செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு சாதாரண மனிதர். அவரைக் குறித்து சொல்லப்பட்ட ஒரு கதையில், பணத் தேவையிலிருந்த ஒரு குடும்பத்திற்கு, இரவில் அவர்களின் வீட்டு ஜன்னல் வழியே ஒரு தங்கம் நிறைந்த பையை இவர் தூக்கி வீச, அது அவர்களின் வீட்டிலிருந்த காலணிக்குள் போய் விழுந்தது என்று கூறப்படுகிறது. 

நிக்கோலஸ்க்கு நீண்ட காலத்திற்கு முன்பு வாழ்ந்த பவுல் அப்போஸ்தலர் கொரிந்திய திருச்சபை விசுவாசிகளை உற்சாகமாய் கொடுக்கும்படிக்கு வலியுறுத்துகிறார். எருசலேமிலிருந்த மக்களின் பெரிய பொருளாதார தேவையைக் குறித்து கூறி, அவர்களை தாராளமாய் கொடுக்கும்படிக்கு உற்சாகப்படுத்துகிறார். தங்கள் ஆஸ்திகளையும் பொருளையும் கொடுப்பவர்களுக்கு வரும் ஆசீர்வாதங்களைக் குறித்து பவுல் கூறுகிறார். “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” (2 கொரி. 9:6)) என்று அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார். உற்சாகமாய் கொடுப்பதினால், அவர்கள் ஒவ்வொருநாளும் சம்பூரணமுள்ளவர்களாய் மாறி (வச. 11), தேவனை கனப்படுத்துகிறார்கள்.  

தகப்பனே, இந்த கிறிஸ்மஸ் நாட்களில் மட்டுமல்லாது, ஆண்டு முழுவதும் அனைவருக்கும் உற்சாகமாய் கொடுக்கிறவர்களாய் மாற எங்களுக்கு உதவிசெய்வீரா? விவரிக்கமுடியாத ஆச்சரியமான உம்முடைய குமாரனாகிய இயேசு என்னும் பரிசை எங்களுக்கு அருளியதற்காக உமக்கு நன்றி (வச. 15). 

துணிச்சலான முடிவு

ஜான் ஹார்ப்பரும் தனது ஆறு வயது மகளும் டைட்டானிக் கப்பலில் அடி எடுத்து வைக்கும் போது என்ன நிகழப்போகிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஹார்ப்பர் இயேசுவில் அன்புகூருவதிலும், மற்றவர்களுக்கு அவர் அன்பை அறிவிப்பதிலும் ஆர்வமாயிருந்தார். கப்பல் பனிப்பாறையை மோதியவுடன் தனது மகளை ஒரு உயிர்காப்பு படகின் மீது ஏற்றி விட்டு தம்மால் முடிந்தவறை மற்றவர்களை காப்பாற்ற சென்றார். மிதவைச்சட்டையை (லைப் ஜாக்கெட்) மற்றவர்களுக்கு கொடுக்கும் போது "பெண்களையும், குழந்தைகளையும், இரட்சிக்க படாதவர்களையும் படகில் ஏற்றுங்கள் " என்று கூச்சலிட்டுக் கொண்டே சென்றார். ஹார்ப்பர் தம் கடைசி மூச்சு வரை இயேசுவை பற்றி பகிர்ந்து தம் மூச்சை விட்டார்.

இதே  போல் இரண்டாயிரம் வருடத்திற்கு முன் ஒருவர் நாம் நித்தியமாய் வாழும்படி தம் ஜீவனை ஒப்புக்கொடுத்தார். இது அவர் ஒரு நாளில் எடுத்த முடிவல்ல. அவர் நம் பாவங்களுக்கு பரிகாரமாக மரிப்பது அவரது லட்சியமாக இருந்தது. யூத தலைவர்களிடம் அவர் பேசும்போது "ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்" (வச. 10:11,15,17,18) என்று பலமுறை கூறினார். இவைகளை அவர் சொன்னது மாத்திரம் அல்லாமல் அதன்படி வாழ்ந்து சிலுவையில் கொடூரமான மரணத்தை ஏற்றுக் கொண்டார். பரிசேயருக்கும், ஜான் ஹர்பெர்க்கும், நமக்கும் "ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்" (வ.10) என்றார்.

ஊக்கப்படுத்தும் நாள்

பேரழிவுகள் நிகழும்போது முதல் பதிலளிக்கிறவர்கள் முன்னணியில் இருக்கும்போது அர்பணிப்பையும் தைரியத்தையும் காட்டுகின்றனர். 2001 ம் ஆண்டு நியூ யார்க் நகரத்தின் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட போது ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயப்பட்டனர், நானூறுக்கும் மேலான அவசர தொழிலாளர்களும் உயிரிழந்தனர். இப்படி முன்னணியில் இருந்தவர்களை கௌரவிக்கும் விதமாக அமெரிக்க அரசாங்கம் செப்டெம்பர் 12ம் தேதியை தேசிய ஊக்குவிக்கும் நாளாக நியமித்தது.

ஒரு அரசாங்கம் தேசிய ஊக்க தினத்தை அறிவித்தது தனித்துவமானதாகத் தோன்றலாம், அப்போஸ்தலனாகிய பவுல், ஒரு சபையின் வளர்ச்சிக்கும் இது தேவை என்பதை உணர்ந்தார். அவர் மக்கெதோனியாவில் ஒரு பட்டணமான தெசலோனிக்காவில் இருக்கும் இளம் சபையாருக்கு, “திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்” என்று பரிந்துரைத்தார். (1 தெச. 5:14). அவர்கள் துன்புறுத்தத்திலிருந்தாலும் “உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள்” (வச. 15) என்று விசுவாசிகளை ஊக்குவித்தார். மனிதர்களாக அவர்கள் விரக்தி, சுயநலம் மற்றும் மோதல்களுக்கு ஆளாக நேரிடும் என்று அவர் அறிந்திருந்தார். தேவனுடைய உதவியும் பலமும் இல்லாவிட்டால் அவர்கள் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்த முடியாது என்றும் அவர் அறிந்திருந்தார்.

இன்று விஷயங்கள் வேறுபட்டவை அல்ல. நாம் எல்லோருக்கும் ஊக்கம் தேவை மற்றும் நம்மை சுற்றியிருப்பவர்களையும் நாம் ஊக்கப்படுத்த வேண்டும். ஆனாலும் நாம் நம்முடைய சுயபலத்தால் அதைச் செய்ய முடியாது. அதனால் தான் பவுல் “உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்” (வச. 24) என்று உறுதியளித்து ஊக்கப்படுத்துகிறார். தேவனுடைய உதவியால் நாம் அனுதினமும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோம்.

தேவையுள்ளோரைத் தொடு

அன்னை தெரெசா, சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார் என்ற செய்தி நம்மை ஆச்சரியப் படுத்துவதாக இல்லை, ஏனெனில், அனைவரின் எதிர்பார்ப்பின் படி, “பசியாயிருப்போர், ஆடையில்லாதிருந்தோர், வீடற்றவர், குருடர், குஷ்டரோகிகள், சமுதாயத்தால் ஒதுக்கப் பட்டோர், அன்பு கூர முடியாதவர், சமுதாயத்தினரால் கவனிக்கப் படாதவர், இவர்களின் பெயரால்” அவர் இந்த விருதைப் பெற்றார். இத்தகையோருக்குப் பணிசெய்வதற்காகவே தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டார்.

சூழ் நிலைகள் எவ்வாறு இருப்பினும், தள்ளப்பட்டவர்களை அன்பு செய்வதும், பாதுகாப்பதும் எப்படி என்பதை இயேசு காட்டினார். நோயுற்றோரைக் காட்டிலும் ஓய்வு நாள் சட்டத்தை அதிகமாக மதித்த மதத் தலைவர்களைப் போன்று அல்லாமல், இயேசு வேறுபட்டு செயல் பட்டார் (லூக்.13:14). இயேசு தேவாலயத்திலே ஒரு பெலவீனமான பெண்ணைப் பார்த்த போது, அவள் மீதுள்ள இரக்கத்தினால், மனதுருகினார். அவளுடைய சரீர குறைபாட்டையும் தாண்டி, தேவனுடைய அழகிய படைப்பு கட்டப்பட்டிருப்பதைக் கண்டார். அவர் அவளைத் தன்னிடம் அழைத்தார்,  விடுதலையாக்கப் பட்டாய் என்று கூறி, “அவள் மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப் படுத்தினாள்” (வ.13). அவளைத் தொட்டதினால், அது ஓய்வு நாளாக இருந்ததால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்தான். ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிற (லூக்.6:5) இயேசு, இரக்கத்தோடு, பதினெட்டு ஆண்டுகள், வசதியற்ற நிலையிலும், அவமானத்திற்கும் உள்ளான அவளைச் சுகப்படுத்தும்படி தெரிந்து கொண்டார்.

 நாம் எத்தனை முறை நம்முடைய இரக்கத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் தவறி இருக்கிறோம் என்று  நினைத்துப் பார்த்தேன். மற்றவர்களின் தகுதிக்கு நாம் ஏற்றவர்கள் அல்ல என்பதால், நாம் தள்ளப் பட்டோமா? சக மனிதர்களைக் காட்டிலும் சட்டங்களை உயர்வாக மதிக்கும், உயர்தர மதத் தலைவர்களைப் போலல்லாமல்,  நாம் இயேசுவை மாதிரியாகப் பின்பற்றுவோம், பிறரை இரக்கத்தோடும், அன்போடும், மதிப்போடும் பார்ப்போம்.

நித்திய கண்கள்

நித்திய கண்களை என்னுடைய குழந்தைகளுக்கும் என்னுடைய பேரக் குழந்தைகளுக்கும் தாரும் என்பதாக என்னுடைய சிநேகிதி மரியா ஜெபித்தாள். அவளுடைய குடும்பம் ஒரு கொந்தளிப்புக்குள் கிடந்து தத்தளித்தது, கடைசியில் தன்னுடைய மகளை இழந்தாள்.  இந்த பயங்கரமான இழப்பினால் வருத்தத்தில் இக்குடும்பம் இருக்கும் போது, மரியா  அக்குடும்பத்தினரை குறுகிய பார்வைக்குள் இழுத்துச் சென்றாள், இவ்வுலகின் வேதனையால் அவர்கள் ஆட்கொள்ளப்பட்டனர். நம்முடைய பார்வை தூரத்திற்குச் செல்லும் போது தான், நம்முடைய அன்பின் தேவன் தரும் நம்பிக்கையால் நிரப்பப் படுவோம்.

அப்போஸ்தலனாகிய பவுலும் அவனோடு ஊழியம் செய்தவர்களும் எதிர்ப்பாளர்களாலும், அவர்களின் பெயரைக் கெடுக்க எண்ணிய விசுவாசிகளாலும் அநேக துன்பங்களைச் சகித்தனர். ஆனாலும், அவர்கள் தங்கள் கண்களை நித்தியத்திற்கு நேராக வைத்திருந்தனர். பவுல், “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இந்த இலேசான உபத்திரவம்……… ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ  நித்தியமானவைகள்” (2 கொரி.4:17-18) என தைரியமாகச் சொல்கின்றார்.

அவர்கள் தேவனுடைய வேலையைச் செய்தாலும், உண்மையில் அவர்கள் “எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டனர்”, “கலக்கமடைந்தனர்”, “துன்பப்படுத்தப்பட்டனர்”, “கீழே தள்ளப்பட்டனர்” (வ.8-9). தேவன் அவர்களை, இத்தனை துன்பங்களில் இருந்து விடுவித்திருக்கக் கூடாதா? ஆனால், அவர்கள் ஏமாற்றம் அடைந்து, சோர்ந்துபோகவில்லை. பவுல் தன்னுடைய நம்பிக்கையை, சீக்கிரத்தில் நீங்கும் இந்த உபத்திரத்தையும் தாண்டி “நித்திய மகிமையின்” (வ.17) மீது வைத்திருந்தார். தேவனுடைய வல்லமை அவருக்குள் கிரியை செய்ததை பவுல் உணர்ந்திருந்தார். “கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக் கொண்டு எழுப்புவார்” (வ.14) என்ற உறுதியைப் பெற்றிருந்தார்.

நம்மைச் சுற்றியுள்ள உலகம் நிலையற்றதாக காணப்பட்டாலும், நாம் நம்முடைய கண்களை, அழிவில்லாத நித்திய கன்மலையாகிய  தேவனுக்கு நேராகத் திருப்புவோம்.

சமாதானம் என்கின்ற ஈவு

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ், தன்னுடைய மரணத்திற்கு முன்பு தன்னுடைய மகனிடம், “நான் இயேசுவை விசுவாசிக்கின்றேன், அவரே என் இரட்சகர், ஆகையால் மரணத்தைக் குறித்த பயம் எனக்கில்லை” என்றார். இந்த மிகச் சிறந்த நம்பிக்கை தரும் வார்த்தைகள், உறுதியான, ஆழ்ந்த விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றன. இயேசுவை அறிந்து கொண்டதால் கிடைக்கப் பெற்ற தேவனுடைய ஈவாகிய சமாதானத்தை, அவள் தன்னுடைய மரணத்தருவாயிலும் அநுபவித்தாள்.

முதலாம் நூற்றாண்டில், எருசலேமில் வாழ்ந்த சிமியோனும் ஆழ்ந்த சமாதானத்தை இயேசுவின் மூலம் பெற்றுக் கொண்டான். பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் சிமியோன் தேவாலயத்திற்கு வருகின்றான். அங்கு மேரியும், யோசேப்பும், நியாயப் பிரமாணத்தை நிறைவேற்ற, விருத்த சேதனம் செய்யும்படி, இயேசு பாலகனை தேவாலயத்திற்கு கொண்டு வருகின்றனர். வேதாகமத்தில் சிமியோனைப் பற்றி வேறெங்கும் குறிப்பிடவில்லையெனினும், லூக்கா அவனைக் குறித்து கூறியிருப்பதிலிருந்து, அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று கூறமுடியும். அவன் நீதிமான், தேவபக்தி நிறைந்தவன், மேசியாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்தவன், “அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்” (லூக். 2:25). ஆயினும் அவன், இயேசுவைக் காணும் வரையிலும், சமாதானத்தை (ஷலோம்) முழுமையாகப் பெற்றுக் கொள்ளவில்லை.

இயேசுவைத் தன் கரங்களில் ஏந்தியவனாக, சிமியோன் தேவனைப் போற்றி பாடுகின்றான், தன்னுடைய முழுதிருப்தியையும் வெளிப்படுத்துகின்றான், “ஆண்டவரே, உமது வார்த்தையின் படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போக விடுகிறீர்; ….தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” (வ.29-32) என்று பாடுகின்றான். அவன் தேவ சமாதானத்தைப் பெற்றுக் கொண்டான் ஏனெனில், இவ்வுலகிற்கு நம்பிக்கைப் பிறந்ததை அவனால் ணமுடிந்தது.

நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைக் கொண்டாடும் நாம், தேவன் தரும் ஈவாகிய சமாதானத்தில் மகிழ்ந்து களிகூருவோம்.

நம்முடைய தந்தை பாடுகின்றார்

மற்றவர்களுக்குப் பாடல்கள் பாடுவதன் மூலம் அவர்களை ஊக்கப்படுத்துவது பீட்டருக்கு மிகவும் விருப்பமானது. ஒரு நாள் அவனுக்குப் பிடித்தமான உணவுவிடுதியில் மதிய உணவு சாப்பிட்டோம், அப்பொழுது அவன் உணவு பரிமாறுபவர் மிகவும் களைப்பாக இருப்பதைக் கண்டான், அவளிடம் சில கேள்விகளைக் கேட்டான், பின்னர் அவளை உற்சாகப் படுத்தும்படி பிரசித்திப் பெற்ற பாடல் ஒன்றைப் பாடினான். “நல்லது, அன்புள்ள நண்பா, நீ எனக்கு இந்த நாளை மகிழ்ச்சியாக மாற்றினாய், மிக்க நன்றி” என்று அவள் ஒரு சிரிப்புடன் கூறிக் கொண்டே, எங்களது உணவு தேவையைக் குறித்துக் கொண்டாள்.

செப்பனியா புத்தகத்தை திறந்தோமானால், அங்கு தேவன் பாடுவதை விரும்புகிறார் என்பதாகக் காண்கின்றோம். இங்கு தீர்க்கதரிசி தன்னுடைய வார்த்தைகளினால் ஒரு அழகிய காட்சியை காண்பிக்கின்றார், அவர் தேவனை ஒரு இசைஞராகவும், அவர் தன்னுடைய பிள்ளைகளோடு சேர்ந்து பாட விரும்புகின்றார் எனவும் வர்ணிக்கின்றார். மேலும், “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (3:17) .என்கின்றார். அவருடைய இரக்கத்தினால் மாற்றம் பெற்றவர்களோடு எப்பொழுதும் தேவனாகிய கர்த்தருடைய பிரசன்னம் இருக்கும் என்று தேவன் வாக்களிக்கின்றார், மேலும், அதோடு நின்றுவிடவில்லை, அவர் தன்னுடைய பிள்ளைகளை, “நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு” (வ.14) என்கின்றார்.

ஒரு நாள், நாம் தேவனோடு கூட இருப்போம் என்பதை கற்பனை செய்து பார்க்க முடிகின்றது, அப்பொழுது, இரட்சகராகிய இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தவர்கள் யாவரும் அவரோடு இருப்பார்கள். நம்முடைய பரலோக பிதா, நம்மோடு சேர்ந்து பாடும் பாடல்களைக் கேட்பதற்கும், அவருடைய அன்பினையும், அவர் நம்மை அங்கிகரித்து, ஏற்றுக் கொண்டதையும் அநுபவிப்பது எத்தனை அற்புதமாக இருக்கும்.

பழி வாங்குவதற்குப் பதிலாக…

1956 ஆம் ஆண்டு, ஜிம் எலியெட்டும் மற்றும் நான்கு மிஷ்னரிகளும் வரானி என்ற பழங்குடியினரால் கொல்லப்பட்ட போது, அதற்குப் பின்பு என்ன நடந்தது என்பதை யாருமே எதிர் பார்க்கவில்லை. ஜிம்மின் மனைவி எலிசபெத், அவர்களின் இளம்வயது மகள், மற்றொரு மிஷ்னரியின் சகோதரி ஆகியோர் மனப்பூர்வமாக, தங்களுக்கு அருமையானவர்களைக் கொன்ற அதே மக்களோடு வசிக்கும் படி தேர்ந்து கொண்டனர். அவர்கள் அநேக வருடங்களை, வரானி சமுதாயத்தினரோடு செலவிட்டனர். அவர்களுடைய மொழியைக் கற்றுக் கொண்டனர், வேதகமத்தை அவர்களின் மொழியிலேயே எழுதினர். இந்த மூன்று பெண்களும் காட்டிய மன்னிப்பையும், இரக்கத்தையும் கண்ட வரானி இன மக்கள், தேவன் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பைப் புரிந்து கொண்டனர், அநேகர் இயேசுவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர்.

ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள் (ரோமர் 12:17) என்ற வேத வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக, எலிசபெத்தும் அவளுடைய சிநேகிதியும் நம்பமுடியாத காரியத்தைச் செய்தனர். தேவன் தங்களுடைய வாழ்வில் கொடுத்துள்ள மாற்றத்தை, அவர்கள்  தங்கள் செயலில் காட்ட வேண்டுமென, அப்போஸ்தலனாகிய பவுல், ரோமாபுரியிலுள்ள சபை மக்களை ஊக்கப்படுத்துகின்றார். பவுல் மனதில் சிந்திப்பது என்ன? அவர்களுக்குள், இயற்கையாகத் தோன்றும் பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு, இதையெல்லாம் தாண்டிய காரியங்களைச் செய்யச் சொல்கின்றார், தங்களுடைய எதிரிகளின் தேவைகளைச் சந்திக்கச் சொல்கின்றார், அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுக்கச் சொல்கின்றார்.

ஏன் இவற்றைச் செய்ய வேண்டும்? பவுல், பழைய ஏற்பாட்டிலுள்ள ஒரு பழமொழியைச் சுட்டிக் காட்டுகின்றார். “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரம்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.”(ரோமர் 12:20. நீதி.25:21-22) மேலும், விசுவாசிகள் அவர்களிடம் காட்டும் அன்பின் மூலம், தங்கள் எதிரிகளையும் ஆதாயப்படுத்திக் கொள்ள முடியும், அவர்களின் இருதயத்தில் மனம் திரும்புதலின் நெருப்பைக் கொளுத்திவிடவும் முடியும் என்கின்றார், இந்த அப்போஸ்தலன்.

ஏதாவது நம்பிக்கையுள்ளதா?

எட்வர்ட் பேசன்(1783-1827) மிகவும் கடினமான வாழ்க்கை வாழ்ந்தார். அவருடைய இளைய சகோதரனின் மரணம், அவரை மிகவும் ஆழமாகப் பாதித்தது. அவர், இருமுறை கோளாறினால் பாதிக்கப்பட்டார். அதனால், பல நாட்கள் தொடர்ந்து வரும் ஒற்றைத் தலை வலியினால் அவதியுற்றார். இதுவும் போதாதென்று, அவர் ஒரு குதிரையிலிருந்து தவறி விழுந்ததால், ஒரு கையை அசைக்க முடியாதபடி பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டார். மேலும், காச நோயினால் பாதிக்கப்பட்டு, சாவின் விளிம்பு வரை சென்றார்! ஆனாலும் அவர் விரக்தியோ, நம்பிக்கையின்மையோ கொள்ளவில்லை. அவருடைய நண்பர்கள், எட்வர்ட் மரிக்கும் வரை, அளவில்லாத மகிழ்ச்சியோடிருந்தார், என்றனர். அது எப்படி முடிந்தது?

ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளுக்கு, அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய கடிதத்தில், அவருடைய சூழ்நிலைகள் எவ்வாறிருந்த போதும், தேவனுடைய உண்மையான அன்பின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். அவர் தைரியமாகக் கேட்கிறார், “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோம. 8:31) தேவன் தம்முடைய சொந்த குமாரனாகிய இயேசுவையே நம்மை மீட்பதற்காகத் தந்தாரெனில், நாம் இந்த வாழ்வை நன்கு முடிப்பதற்குத் தேவையான அனைத்தையும் தருவது நிச்சயமல்லவா? பவுல் தன்னுடைய வாழ்வில் சந்தித்த ஏழு கடினமான சூழல்களைக் கூறுகின்றார். அவையாவன, உபத்திரவம், வியாகுலம், துன்பம், பசி,  நிர்வாணம், நாசமோசம், பட்டயம் என்பன (வச. 36). இந்த கெட்ட காரியங்களெல்லாம் நடைபெறாதபடி, இயேசுவின் அன்பு தடுத்துவிடும், என்பதாக அவர் கூறவில்லை. மாறாக, “இவை எல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே” என்கிறார் (வச. 37).

நிலையில்லாத இவ்வுலகில், நாம் தேவனை முழுமையாக நம்பி வாழலாம். ஒன்றும், “நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” (வச. 39).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

வனாந்தரமான இடங்கள்

நான் ஒரு இளம் விசுவாசியாக இருந்தபோது, நான் இயேசுவை சந்திக்கும் இடமாக “மலையுச்சி” அனுபவங்களை நினைத்தேன். ஆனால் அந்த உயரங்கள், நீடிக்கவில்லை அல்லது வளர்ச்சிக்கு வழிவகுக்கவில்லை. வனாந்தரங்களில் தான் நாம் தேவனைச் சந்திக்கிறோம், வளர்கிறோம் என்கிறார் ஆசிரியர் லீனா அபுஜம்ரா. த்ரூ தி டெஸெர்ட் என்ற தனது வேத ஆராய்ச்சியில், “நம் வாழ்வில் உள்ள வனாந்தரங்களைப் பயன்படுத்தி நம்மைப் பலப்படுத்துவதே தேவனின் நோக்கம்” என்று எழுதுகிறார். “தேவனின் நன்மை உங்கள் வேதனையின் மத்தியில் பெறப்பட வேண்டும், வேதனை இன்றி அதனை நிரூபிக்க இயலாது” என மேலும் எழுதுகிறார்.

துக்கம், இழப்பு மற்றும் வலி போன்ற கடினமான இடங்களில்தான் நாம் நம் நம்பிக்கையில் வளரவும், அவருடன் நெருங்கவும் தேவன் உதவுகிறார். லீனா கற்றுக்கொண்டது போல், “தேவனின் திட்டத்தில் வனாந்தரம் அசட்டை செய்யப்பட்ட பகுதியல்ல, மாறாக நாம் வளரும் செயல்முறையில் ஒருங்கிணைந்த பகுதியாகும்.”

தேவன் பல பழைய ஏற்பாட்டின் முற்பிதாக்களை வனாந்தரத்திற்கு அழைத்துச் சென்றார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய அனைவருக்கும் வனாந்தர அனுபவங்கள் இருந்தன. வனாந்தரத்தில்தான் தேவன் மோசேயின் இருதயத்தை ஆயத்தப்படுத்தி, அடிமைத்தனத்திலிருந்து தம் ஜனங்களை வெளியே வழிநடத்த அவரை அழைத்தார் (யாத்திராகமம் 3:1-2, 9-10). வனாந்தரத்தில்தான் தேவன் தனது உதவியுடனும் வழிகாட்டுதலுடனும் நாற்பது ஆண்டுகளாக [இஸ்ரவேலர்] நடந்துவருகிறதை அறிவார் (உபாகமம் 2:7).

தேவன் மோசேயுடனும் இஸ்ரவேலருடனும் வனாந்தரத்தில் ஒவ்வொரு அடியிலும் இருந்தார், அவர் உங்களுடனும் என்னுடனும் இருக்கிறார். வனாந்தரத்தில் தேவனைச் சார்ந்திருக்கக் கற்றுக்கொள்கிறோம். அங்கே அவர் நம்மைச் சந்திக்கிறார்; அங்கே நாம் வளர்கிறோம்.

 

என்ன ஆச்சரியமான சிநேகிதன்!

எனக்கு விருப்பமான பக்கத்துவீட்டுக்காரர்களுடன் என் அம்மாவும் நட்பு போட்டியாளர்களாக வளர்ந்தனர். இருவரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் போட்டியிட்டனர். அவர்கள் புதிதாகத் துவைத்த சலவைகளை முதலில் தங்கள் வெளிப்புற ஆடைகளை தொங்கவிடுவார்கள். “அவள் என்னை மறுபடியும் ஜெயித்துவிட்டாள்!” என்று என் அம்மா சொல்வார். ஆனால் அடுத்த வாரம், எனது மாமா முதல் ஆளாய் இருந்து அவர்களின் போட்டியை ரசிப்பார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் ஒருவருக்கொருவர் ஞானம், கதைகள் மற்றும் நம்பிக்கையை பகிர்ந்து கொண்டனர்.

அத்தகைய நட்பின் நற்பண்பைப் பற்றி பைபிள் மிகுந்த மென்மையுடன் பேசுகிறது. “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்” (நீதிமொழிகள் 17:17) என்று சாலெமோன் சொல்கிறார். மேலும் அவர், “ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்” (27:9) என்கிறார்.

இயேசுவே நம்முடைய சிறந்த சிநேகிதனாய் இருக்கமுடியும். தம்முடைய சீஷர்களுக்கு அன்பின் மேன்மையை வலியுறுத்தி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13) என்று கற்றுக்கொடுத்தார். அடுத்த நாளே, அவர் சிலுவையில் அதை நிரூபித்தர். அவர் அவர்களிடம், “நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (வச. 15) என்றார். பின்னர் அவர், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்” (வச. 17) என்று வலியுறுத்துகிறார்.

இதுபோன்ற வார்த்தைகளின் மூலம் சாதாரண மனிதர்களை சிநேகிதர்களாய் நம்பிக்கைக்குரியவர்களாய் இயேசு “தனக்கு செவிசாய்ப்பவர்களை உயர்த்துகிறார்” என்று தத்துவஞானி நிக்கோலஸ் வோல்டர்ஸ்டார்ஃப் கூறுகிறார். கிறிஸ்துவில், நாம் மற்றவர்களுடன் நட்பு கொள்ள கற்றுக்கொள்கிறோம். அத்தகைய அன்பை நமக்குக் கற்பிக்க இயேசு ஒரு சிறந்த சிநேகிதனாய் இருக்கிறார். 

 

விண்வெளி பந்தயம்

ஜூன் 29, 1955 இல், அமெரிக்கா செயற்கைக்கோள்களை விண்வெளியில் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. விரைவில், சோவியத் யூனியனும் அதைச் செய்வதற்கான திட்டங்களை அறிவித்தது. விண்வெளிக்கான பந்தயம் தொடங்கியது. சோவியத், முதல் செயற்கைக்கோளை (ஸ்புட்னிக்) ஏவியது மற்றும் யூரி காகரின் நமது கிரகத்தை ஒரு முறை சுற்றி வந்தபோது, முதல் மனிதனையும் விண்வெளியில் செலுத்தியது. ஜூலை 20, 1969 அன்று, நிலவின் மேற்பரப்பில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் “கால்தடம்” போட்டியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் முடிக்கும் வரை இந்த பந்தயம் நீடித்தது. இனைந்து பணியாற்றும் காலம் விரைவில் உதயமானது, இது சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்க வழிவகுத்தது.

சில நேரங்களில் போட்டி ஆரோக்கியமானதாக இருக்கலாம், அது நாம் முயற்சி செய்யாத விஷயங்களைச் சாதிக்க நம்மைத் தூண்டுகிறது. இருப்பினும், மற்ற நேரங்களில், போட்டி அழிவுகரமானது. கொரிந்துவில் உள்ள சபையில் இது ஒரு பிரச்சனையாக இருந்தது, ஏனெனில் வெவ்வேறு குழுக்கள் பல்வேறு சபை தலைவர்களை தங்கள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாகப் பற்றிக்கொண்டன. இதனைச் சமாளிக்க பவுல், “நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்” (1 கொரிந்தியர் 3:7) என்று எழுதியபோது, “நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்” (வ.9) என்று நிறைவு செய்தார்.

உடன்வேலையாட்கள்; போட்டியாளர்கள் அல்ல. மேலும் ஒருவருக்கொருவர் மட்டுமல்ல, தேவனோடும்! அவருடைய அதிகாரம் மற்றும் அவரது வழிகாட்டுதலின் மூலம், இயேசுவின் செய்தியை முன்னெடுத்துச் செல்ல உடன்வேலையாட்களாக நாம் ஒன்றுசேர்ந்து பணியாற்றலாம், நம்முடையதை காட்டிலும் அவருடைய மகிமைக்காக.