எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எஸ்டெரா பிரோஸ்க்கா எஸ்கோபார்கட்டுரைகள்

உற்சாகமாய் கொடுக்கிறவர்

மூன்றாம் நூற்றாண்டில் பிறந்த நிக்கோலஸ் என்பவர், அவர் மரித்த பல நூற்றாண்டுகள் கழித்து சாண்ட கிளாஸ் (கிறிஸ்மஸ் தாத்தா) என்று அழைக்கப்படுவார் என்பது அவருக்கு தெரியாது. அவர் தேவனை நேசித்து, மக்கள் மீது அக்கறைக்கொண்டு, தன்னுடையவைகள் எல்லாவற்றையும் உற்சாகமாய் மற்றவர்களுக்கு கொடுப்பதிலும் நற்கிரியை செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு சாதாரண மனிதர். அவரைக் குறித்து சொல்லப்பட்ட ஒரு கதையில், பணத் தேவையிலிருந்த ஒரு குடும்பத்திற்கு, இரவில் அவர்களின் வீட்டு ஜன்னல் வழியே ஒரு தங்கம் நிறைந்த பையை இவர் தூக்கி வீச, அது அவர்களின் வீட்டிலிருந்த காலணிக்குள் போய் விழுந்தது என்று கூறப்படுகிறது. 

நிக்கோலஸ்க்கு நீண்ட காலத்திற்கு முன்பு வாழ்ந்த பவுல் அப்போஸ்தலர் கொரிந்திய திருச்சபை விசுவாசிகளை உற்சாகமாய் கொடுக்கும்படிக்கு வலியுறுத்துகிறார். எருசலேமிலிருந்த மக்களின் பெரிய பொருளாதார தேவையைக் குறித்து கூறி, அவர்களை தாராளமாய் கொடுக்கும்படிக்கு உற்சாகப்படுத்துகிறார். தங்கள் ஆஸ்திகளையும் பொருளையும் கொடுப்பவர்களுக்கு வரும் ஆசீர்வாதங்களைக் குறித்து பவுல் கூறுகிறார். “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” (2 கொரி. 9:6)) என்று அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார். உற்சாகமாய் கொடுப்பதினால், அவர்கள் ஒவ்வொருநாளும் சம்பூரணமுள்ளவர்களாய் மாறி (வச. 11), தேவனை கனப்படுத்துகிறார்கள்.  

தகப்பனே, இந்த கிறிஸ்மஸ் நாட்களில் மட்டுமல்லாது, ஆண்டு முழுவதும் அனைவருக்கும் உற்சாகமாய் கொடுக்கிறவர்களாய் மாற எங்களுக்கு உதவிசெய்வீரா? விவரிக்கமுடியாத ஆச்சரியமான உம்முடைய குமாரனாகிய இயேசு என்னும் பரிசை எங்களுக்கு அருளியதற்காக உமக்கு நன்றி (வச. 15). 

துணிச்சலான முடிவு

ஜான் ஹார்ப்பரும் தனது ஆறு வயது மகளும் டைட்டானிக் கப்பலில் அடி எடுத்து வைக்கும் போது என்ன நிகழப்போகிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஹார்ப்பர் இயேசுவில் அன்புகூருவதிலும், மற்றவர்களுக்கு அவர் அன்பை அறிவிப்பதிலும் ஆர்வமாயிருந்தார். கப்பல் பனிப்பாறையை மோதியவுடன் தனது மகளை ஒரு உயிர்காப்பு படகின் மீது ஏற்றி விட்டு தம்மால் முடிந்தவறை மற்றவர்களை காப்பாற்ற சென்றார். மிதவைச்சட்டையை (லைப் ஜாக்கெட்) மற்றவர்களுக்கு கொடுக்கும் போது "பெண்களையும், குழந்தைகளையும், இரட்சிக்க படாதவர்களையும் படகில் ஏற்றுங்கள் " என்று கூச்சலிட்டுக் கொண்டே சென்றார். ஹார்ப்பர் தம் கடைசி மூச்சு வரை இயேசுவை பற்றி பகிர்ந்து தம் மூச்சை விட்டார்.

இதே  போல் இரண்டாயிரம் வருடத்திற்கு முன் ஒருவர் நாம் நித்தியமாய் வாழும்படி தம் ஜீவனை ஒப்புக்கொடுத்தார். இது அவர் ஒரு நாளில் எடுத்த முடிவல்ல. அவர் நம் பாவங்களுக்கு பரிகாரமாக மரிப்பது அவரது லட்சியமாக இருந்தது. யூத தலைவர்களிடம் அவர் பேசும்போது "ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்" (வச. 10:11,15,17,18) என்று பலமுறை கூறினார். இவைகளை அவர் சொன்னது மாத்திரம் அல்லாமல் அதன்படி வாழ்ந்து சிலுவையில் கொடூரமான மரணத்தை ஏற்றுக் கொண்டார். பரிசேயருக்கும், ஜான் ஹர்பெர்க்கும், நமக்கும் "ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்" (வ.10) என்றார்.

ஊக்கப்படுத்தும் நாள்

பேரழிவுகள் நிகழும்போது முதல் பதிலளிக்கிறவர்கள் முன்னணியில் இருக்கும்போது அர்பணிப்பையும் தைரியத்தையும் காட்டுகின்றனர். 2001 ம் ஆண்டு நியூ யார்க் நகரத்தின் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட போது ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயப்பட்டனர், நானூறுக்கும் மேலான அவசர தொழிலாளர்களும் உயிரிழந்தனர். இப்படி முன்னணியில் இருந்தவர்களை கௌரவிக்கும் விதமாக அமெரிக்க அரசாங்கம் செப்டெம்பர் 12ம் தேதியை தேசிய ஊக்குவிக்கும் நாளாக நியமித்தது.

ஒரு அரசாங்கம் தேசிய ஊக்க தினத்தை அறிவித்தது தனித்துவமானதாகத் தோன்றலாம், அப்போஸ்தலனாகிய பவுல், ஒரு சபையின் வளர்ச்சிக்கும் இது தேவை என்பதை உணர்ந்தார். அவர் மக்கெதோனியாவில் ஒரு பட்டணமான தெசலோனிக்காவில் இருக்கும் இளம் சபையாருக்கு, “திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்” என்று பரிந்துரைத்தார். (1 தெச. 5:14). அவர்கள் துன்புறுத்தத்திலிருந்தாலும் “உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள்” (வச. 15) என்று விசுவாசிகளை ஊக்குவித்தார். மனிதர்களாக அவர்கள் விரக்தி, சுயநலம் மற்றும் மோதல்களுக்கு ஆளாக நேரிடும் என்று அவர் அறிந்திருந்தார். தேவனுடைய உதவியும் பலமும் இல்லாவிட்டால் அவர்கள் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்த முடியாது என்றும் அவர் அறிந்திருந்தார்.

இன்று விஷயங்கள் வேறுபட்டவை அல்ல. நாம் எல்லோருக்கும் ஊக்கம் தேவை மற்றும் நம்மை சுற்றியிருப்பவர்களையும் நாம் ஊக்கப்படுத்த வேண்டும். ஆனாலும் நாம் நம்முடைய சுயபலத்தால் அதைச் செய்ய முடியாது. அதனால் தான் பவுல் “உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்” (வச. 24) என்று உறுதியளித்து ஊக்கப்படுத்துகிறார். தேவனுடைய உதவியால் நாம் அனுதினமும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோம்.

தேவையுள்ளோரைத் தொடு

அன்னை தெரெசா, சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார் என்ற செய்தி நம்மை ஆச்சரியப் படுத்துவதாக இல்லை, ஏனெனில், அனைவரின் எதிர்பார்ப்பின் படி, “பசியாயிருப்போர், ஆடையில்லாதிருந்தோர், வீடற்றவர், குருடர், குஷ்டரோகிகள், சமுதாயத்தால் ஒதுக்கப் பட்டோர், அன்பு கூர முடியாதவர், சமுதாயத்தினரால் கவனிக்கப் படாதவர், இவர்களின் பெயரால்” அவர் இந்த விருதைப் பெற்றார். இத்தகையோருக்குப் பணிசெய்வதற்காகவே தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டார்.

சூழ் நிலைகள் எவ்வாறு இருப்பினும், தள்ளப்பட்டவர்களை அன்பு செய்வதும், பாதுகாப்பதும் எப்படி என்பதை இயேசு காட்டினார். நோயுற்றோரைக் காட்டிலும் ஓய்வு நாள் சட்டத்தை அதிகமாக மதித்த மதத் தலைவர்களைப் போன்று அல்லாமல், இயேசு வேறுபட்டு செயல் பட்டார் (லூக்.13:14). இயேசு தேவாலயத்திலே ஒரு பெலவீனமான பெண்ணைப் பார்த்த போது, அவள் மீதுள்ள இரக்கத்தினால், மனதுருகினார். அவளுடைய சரீர குறைபாட்டையும் தாண்டி, தேவனுடைய அழகிய படைப்பு கட்டப்பட்டிருப்பதைக் கண்டார். அவர் அவளைத் தன்னிடம் அழைத்தார்,  விடுதலையாக்கப் பட்டாய் என்று கூறி, “அவள் மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப் படுத்தினாள்” (வ.13). அவளைத் தொட்டதினால், அது ஓய்வு நாளாக இருந்ததால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்தான். ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிற (லூக்.6:5) இயேசு, இரக்கத்தோடு, பதினெட்டு ஆண்டுகள், வசதியற்ற நிலையிலும், அவமானத்திற்கும் உள்ளான அவளைச் சுகப்படுத்தும்படி தெரிந்து கொண்டார்.

 நாம் எத்தனை முறை நம்முடைய இரக்கத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் தவறி இருக்கிறோம் என்று  நினைத்துப் பார்த்தேன். மற்றவர்களின் தகுதிக்கு நாம் ஏற்றவர்கள் அல்ல என்பதால், நாம் தள்ளப் பட்டோமா? சக மனிதர்களைக் காட்டிலும் சட்டங்களை உயர்வாக மதிக்கும், உயர்தர மதத் தலைவர்களைப் போலல்லாமல்,  நாம் இயேசுவை மாதிரியாகப் பின்பற்றுவோம், பிறரை இரக்கத்தோடும், அன்போடும், மதிப்போடும் பார்ப்போம்.

நித்திய கண்கள்

நித்திய கண்களை என்னுடைய குழந்தைகளுக்கும் என்னுடைய பேரக் குழந்தைகளுக்கும் தாரும் என்பதாக என்னுடைய சிநேகிதி மரியா ஜெபித்தாள். அவளுடைய குடும்பம் ஒரு கொந்தளிப்புக்குள் கிடந்து தத்தளித்தது, கடைசியில் தன்னுடைய மகளை இழந்தாள்.  இந்த பயங்கரமான இழப்பினால் வருத்தத்தில் இக்குடும்பம் இருக்கும் போது, மரியா  அக்குடும்பத்தினரை குறுகிய பார்வைக்குள் இழுத்துச் சென்றாள், இவ்வுலகின் வேதனையால் அவர்கள் ஆட்கொள்ளப்பட்டனர். நம்முடைய பார்வை தூரத்திற்குச் செல்லும் போது தான், நம்முடைய அன்பின் தேவன் தரும் நம்பிக்கையால் நிரப்பப் படுவோம்.

அப்போஸ்தலனாகிய பவுலும் அவனோடு ஊழியம் செய்தவர்களும் எதிர்ப்பாளர்களாலும், அவர்களின் பெயரைக் கெடுக்க எண்ணிய விசுவாசிகளாலும் அநேக துன்பங்களைச் சகித்தனர். ஆனாலும், அவர்கள் தங்கள் கண்களை நித்தியத்திற்கு நேராக வைத்திருந்தனர். பவுல், “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இந்த இலேசான உபத்திரவம்……… ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ  நித்தியமானவைகள்” (2 கொரி.4:17-18) என தைரியமாகச் சொல்கின்றார்.

அவர்கள் தேவனுடைய வேலையைச் செய்தாலும், உண்மையில் அவர்கள் “எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டனர்”, “கலக்கமடைந்தனர்”, “துன்பப்படுத்தப்பட்டனர்”, “கீழே தள்ளப்பட்டனர்” (வ.8-9). தேவன் அவர்களை, இத்தனை துன்பங்களில் இருந்து விடுவித்திருக்கக் கூடாதா? ஆனால், அவர்கள் ஏமாற்றம் அடைந்து, சோர்ந்துபோகவில்லை. பவுல் தன்னுடைய நம்பிக்கையை, சீக்கிரத்தில் நீங்கும் இந்த உபத்திரத்தையும் தாண்டி “நித்திய மகிமையின்” (வ.17) மீது வைத்திருந்தார். தேவனுடைய வல்லமை அவருக்குள் கிரியை செய்ததை பவுல் உணர்ந்திருந்தார். “கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக் கொண்டு எழுப்புவார்” (வ.14) என்ற உறுதியைப் பெற்றிருந்தார்.

நம்மைச் சுற்றியுள்ள உலகம் நிலையற்றதாக காணப்பட்டாலும், நாம் நம்முடைய கண்களை, அழிவில்லாத நித்திய கன்மலையாகிய  தேவனுக்கு நேராகத் திருப்புவோம்.

சமாதானம் என்கின்ற ஈவு

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ், தன்னுடைய மரணத்திற்கு முன்பு தன்னுடைய மகனிடம், “நான் இயேசுவை விசுவாசிக்கின்றேன், அவரே என் இரட்சகர், ஆகையால் மரணத்தைக் குறித்த பயம் எனக்கில்லை” என்றார். இந்த மிகச் சிறந்த நம்பிக்கை தரும் வார்த்தைகள், உறுதியான, ஆழ்ந்த விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றன. இயேசுவை அறிந்து கொண்டதால் கிடைக்கப் பெற்ற தேவனுடைய ஈவாகிய சமாதானத்தை, அவள் தன்னுடைய மரணத்தருவாயிலும் அநுபவித்தாள்.

முதலாம் நூற்றாண்டில், எருசலேமில் வாழ்ந்த சிமியோனும் ஆழ்ந்த சமாதானத்தை இயேசுவின் மூலம் பெற்றுக் கொண்டான். பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் சிமியோன் தேவாலயத்திற்கு வருகின்றான். அங்கு மேரியும், யோசேப்பும், நியாயப் பிரமாணத்தை நிறைவேற்ற, விருத்த சேதனம் செய்யும்படி, இயேசு பாலகனை தேவாலயத்திற்கு கொண்டு வருகின்றனர். வேதாகமத்தில் சிமியோனைப் பற்றி வேறெங்கும் குறிப்பிடவில்லையெனினும், லூக்கா அவனைக் குறித்து கூறியிருப்பதிலிருந்து, அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று கூறமுடியும். அவன் நீதிமான், தேவபக்தி நிறைந்தவன், மேசியாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்தவன், “அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்” (லூக். 2:25). ஆயினும் அவன், இயேசுவைக் காணும் வரையிலும், சமாதானத்தை (ஷலோம்) முழுமையாகப் பெற்றுக் கொள்ளவில்லை.

இயேசுவைத் தன் கரங்களில் ஏந்தியவனாக, சிமியோன் தேவனைப் போற்றி பாடுகின்றான், தன்னுடைய முழுதிருப்தியையும் வெளிப்படுத்துகின்றான், “ஆண்டவரே, உமது வார்த்தையின் படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போக விடுகிறீர்; ….தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” (வ.29-32) என்று பாடுகின்றான். அவன் தேவ சமாதானத்தைப் பெற்றுக் கொண்டான் ஏனெனில், இவ்வுலகிற்கு நம்பிக்கைப் பிறந்ததை அவனால் ணமுடிந்தது.

நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைக் கொண்டாடும் நாம், தேவன் தரும் ஈவாகிய சமாதானத்தில் மகிழ்ந்து களிகூருவோம்.

நம்முடைய தந்தை பாடுகின்றார்

மற்றவர்களுக்குப் பாடல்கள் பாடுவதன் மூலம் அவர்களை ஊக்கப்படுத்துவது பீட்டருக்கு மிகவும் விருப்பமானது. ஒரு நாள் அவனுக்குப் பிடித்தமான உணவுவிடுதியில் மதிய உணவு சாப்பிட்டோம், அப்பொழுது அவன் உணவு பரிமாறுபவர் மிகவும் களைப்பாக இருப்பதைக் கண்டான், அவளிடம் சில கேள்விகளைக் கேட்டான், பின்னர் அவளை உற்சாகப் படுத்தும்படி பிரசித்திப் பெற்ற பாடல் ஒன்றைப் பாடினான். “நல்லது, அன்புள்ள நண்பா, நீ எனக்கு இந்த நாளை மகிழ்ச்சியாக மாற்றினாய், மிக்க நன்றி” என்று அவள் ஒரு சிரிப்புடன் கூறிக் கொண்டே, எங்களது உணவு தேவையைக் குறித்துக் கொண்டாள்.

செப்பனியா புத்தகத்தை திறந்தோமானால், அங்கு தேவன் பாடுவதை விரும்புகிறார் என்பதாகக் காண்கின்றோம். இங்கு தீர்க்கதரிசி தன்னுடைய வார்த்தைகளினால் ஒரு அழகிய காட்சியை காண்பிக்கின்றார், அவர் தேவனை ஒரு இசைஞராகவும், அவர் தன்னுடைய பிள்ளைகளோடு சேர்ந்து பாட விரும்புகின்றார் எனவும் வர்ணிக்கின்றார். மேலும், “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (3:17) .என்கின்றார். அவருடைய இரக்கத்தினால் மாற்றம் பெற்றவர்களோடு எப்பொழுதும் தேவனாகிய கர்த்தருடைய பிரசன்னம் இருக்கும் என்று தேவன் வாக்களிக்கின்றார், மேலும், அதோடு நின்றுவிடவில்லை, அவர் தன்னுடைய பிள்ளைகளை, “நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு” (வ.14) என்கின்றார்.

ஒரு நாள், நாம் தேவனோடு கூட இருப்போம் என்பதை கற்பனை செய்து பார்க்க முடிகின்றது, அப்பொழுது, இரட்சகராகிய இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தவர்கள் யாவரும் அவரோடு இருப்பார்கள். நம்முடைய பரலோக பிதா, நம்மோடு சேர்ந்து பாடும் பாடல்களைக் கேட்பதற்கும், அவருடைய அன்பினையும், அவர் நம்மை அங்கிகரித்து, ஏற்றுக் கொண்டதையும் அநுபவிப்பது எத்தனை அற்புதமாக இருக்கும்.

பழி வாங்குவதற்குப் பதிலாக…

1956 ஆம் ஆண்டு, ஜிம் எலியெட்டும் மற்றும் நான்கு மிஷ்னரிகளும் வரானி என்ற பழங்குடியினரால் கொல்லப்பட்ட போது, அதற்குப் பின்பு என்ன நடந்தது என்பதை யாருமே எதிர் பார்க்கவில்லை. ஜிம்மின் மனைவி எலிசபெத், அவர்களின் இளம்வயது மகள், மற்றொரு மிஷ்னரியின் சகோதரி ஆகியோர் மனப்பூர்வமாக, தங்களுக்கு அருமையானவர்களைக் கொன்ற அதே மக்களோடு வசிக்கும் படி தேர்ந்து கொண்டனர். அவர்கள் அநேக வருடங்களை, வரானி சமுதாயத்தினரோடு செலவிட்டனர். அவர்களுடைய மொழியைக் கற்றுக் கொண்டனர், வேதகமத்தை அவர்களின் மொழியிலேயே எழுதினர். இந்த மூன்று பெண்களும் காட்டிய மன்னிப்பையும், இரக்கத்தையும் கண்ட வரானி இன மக்கள், தேவன் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பைப் புரிந்து கொண்டனர், அநேகர் இயேசுவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர்.

ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள் (ரோமர் 12:17) என்ற வேத வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக, எலிசபெத்தும் அவளுடைய சிநேகிதியும் நம்பமுடியாத காரியத்தைச் செய்தனர். தேவன் தங்களுடைய வாழ்வில் கொடுத்துள்ள மாற்றத்தை, அவர்கள்  தங்கள் செயலில் காட்ட வேண்டுமென, அப்போஸ்தலனாகிய பவுல், ரோமாபுரியிலுள்ள சபை மக்களை ஊக்கப்படுத்துகின்றார். பவுல் மனதில் சிந்திப்பது என்ன? அவர்களுக்குள், இயற்கையாகத் தோன்றும் பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு, இதையெல்லாம் தாண்டிய காரியங்களைச் செய்யச் சொல்கின்றார், தங்களுடைய எதிரிகளின் தேவைகளைச் சந்திக்கச் சொல்கின்றார், அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுக்கச் சொல்கின்றார்.

ஏன் இவற்றைச் செய்ய வேண்டும்? பவுல், பழைய ஏற்பாட்டிலுள்ள ஒரு பழமொழியைச் சுட்டிக் காட்டுகின்றார். “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரம்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.”(ரோமர் 12:20. நீதி.25:21-22) மேலும், விசுவாசிகள் அவர்களிடம் காட்டும் அன்பின் மூலம், தங்கள் எதிரிகளையும் ஆதாயப்படுத்திக் கொள்ள முடியும், அவர்களின் இருதயத்தில் மனம் திரும்புதலின் நெருப்பைக் கொளுத்திவிடவும் முடியும் என்கின்றார், இந்த அப்போஸ்தலன்.

ஏதாவது நம்பிக்கையுள்ளதா?

எட்வர்ட் பேசன்(1783-1827) மிகவும் கடினமான வாழ்க்கை வாழ்ந்தார். அவருடைய இளைய சகோதரனின் மரணம், அவரை மிகவும் ஆழமாகப் பாதித்தது. அவர், இருமுறை கோளாறினால் பாதிக்கப்பட்டார். அதனால், பல நாட்கள் தொடர்ந்து வரும் ஒற்றைத் தலை வலியினால் அவதியுற்றார். இதுவும் போதாதென்று, அவர் ஒரு குதிரையிலிருந்து தவறி விழுந்ததால், ஒரு கையை அசைக்க முடியாதபடி பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டார். மேலும், காச நோயினால் பாதிக்கப்பட்டு, சாவின் விளிம்பு வரை சென்றார்! ஆனாலும் அவர் விரக்தியோ, நம்பிக்கையின்மையோ கொள்ளவில்லை. அவருடைய நண்பர்கள், எட்வர்ட் மரிக்கும் வரை, அளவில்லாத மகிழ்ச்சியோடிருந்தார், என்றனர். அது எப்படி முடிந்தது?

ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளுக்கு, அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய கடிதத்தில், அவருடைய சூழ்நிலைகள் எவ்வாறிருந்த போதும், தேவனுடைய உண்மையான அன்பின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். அவர் தைரியமாகக் கேட்கிறார், “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோம. 8:31) தேவன் தம்முடைய சொந்த குமாரனாகிய இயேசுவையே நம்மை மீட்பதற்காகத் தந்தாரெனில், நாம் இந்த வாழ்வை நன்கு முடிப்பதற்குத் தேவையான அனைத்தையும் தருவது நிச்சயமல்லவா? பவுல் தன்னுடைய வாழ்வில் சந்தித்த ஏழு கடினமான சூழல்களைக் கூறுகின்றார். அவையாவன, உபத்திரவம், வியாகுலம், துன்பம், பசி,  நிர்வாணம், நாசமோசம், பட்டயம் என்பன (வச. 36). இந்த கெட்ட காரியங்களெல்லாம் நடைபெறாதபடி, இயேசுவின் அன்பு தடுத்துவிடும், என்பதாக அவர் கூறவில்லை. மாறாக, “இவை எல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே” என்கிறார் (வச. 37).

நிலையில்லாத இவ்வுலகில், நாம் தேவனை முழுமையாக நம்பி வாழலாம். ஒன்றும், “நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” (வச. 39).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார். 

 

தாகமும், நன்றியுள்ளமும்

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.