நித்திய கண்களை என்னுடைய குழந்தைகளுக்கும் என்னுடைய பேரக் குழந்தைகளுக்கும் தாரும் என்பதாக என்னுடைய சிநேகிதி மரியா ஜெபித்தாள். அவளுடைய குடும்பம் ஒரு கொந்தளிப்புக்குள் கிடந்து தத்தளித்தது, கடைசியில் தன்னுடைய மகளை இழந்தாள்.  இந்த பயங்கரமான இழப்பினால் வருத்தத்தில் இக்குடும்பம் இருக்கும் போது, மரியா  அக்குடும்பத்தினரை குறுகிய பார்வைக்குள் இழுத்துச் சென்றாள், இவ்வுலகின் வேதனையால் அவர்கள் ஆட்கொள்ளப்பட்டனர். நம்முடைய பார்வை தூரத்திற்குச் செல்லும் போது தான், நம்முடைய அன்பின் தேவன் தரும் நம்பிக்கையால் நிரப்பப் படுவோம்.

அப்போஸ்தலனாகிய பவுலும் அவனோடு ஊழியம் செய்தவர்களும் எதிர்ப்பாளர்களாலும், அவர்களின் பெயரைக் கெடுக்க எண்ணிய விசுவாசிகளாலும் அநேக துன்பங்களைச் சகித்தனர். ஆனாலும், அவர்கள் தங்கள் கண்களை நித்தியத்திற்கு நேராக வைத்திருந்தனர். பவுல், “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இந்த இலேசான உபத்திரவம்……… ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ  நித்தியமானவைகள்” (2 கொரி.4:17-18) என தைரியமாகச் சொல்கின்றார்.

அவர்கள் தேவனுடைய வேலையைச் செய்தாலும், உண்மையில் அவர்கள் “எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டனர்”, “கலக்கமடைந்தனர்”, “துன்பப்படுத்தப்பட்டனர்”, “கீழே தள்ளப்பட்டனர்” (வ.8-9). தேவன் அவர்களை, இத்தனை துன்பங்களில் இருந்து விடுவித்திருக்கக் கூடாதா? ஆனால், அவர்கள் ஏமாற்றம் அடைந்து, சோர்ந்துபோகவில்லை. பவுல் தன்னுடைய நம்பிக்கையை, சீக்கிரத்தில் நீங்கும் இந்த உபத்திரத்தையும் தாண்டி “நித்திய மகிமையின்” (வ.17) மீது வைத்திருந்தார். தேவனுடைய வல்லமை அவருக்குள் கிரியை செய்ததை பவுல் உணர்ந்திருந்தார். “கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக் கொண்டு எழுப்புவார்” (வ.14) என்ற உறுதியைப் பெற்றிருந்தார்.

நம்மைச் சுற்றியுள்ள உலகம் நிலையற்றதாக காணப்பட்டாலும், நாம் நம்முடைய கண்களை, அழிவில்லாத நித்திய கன்மலையாகிய  தேவனுக்கு நேராகத் திருப்புவோம்.