ஜூலை, 2020 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஜூலை 2020

பிரகாசிக்கும் ஒளி

எங்களுக்கு அருகிலுள்ள ஓர் ஆலயத்தில், ஐந்து வாரங்கள் வேதாகம வகுப்பு எடுக்கும்படி, நான் ஒப்புக்கொண்டதிலிருந்து, எனக்கு சற்று  நடுக்கமாக இருந்தது. அந்த மாணவர்கள் இதை விரும்புவார்களா? அவர்கள் என்னை விரும்புவார்களா? என்பதாக என்னுடைய எதிர்பார்ப்பு தவறான காரியங்களின் மீது திருப்பப் பட்டது, அதனால், நான் அதிகமாக தயாரிக்க ஆரம்பித்தேன்- பாடத் திட்டங்கள், மின்னணு தகடுகள், வகுப்பில் கொடுக்க வேண்டிய கைப்பிரதிகள் என பல தயாரிப்புகளைச் செய்தேன். இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், நான் இன்னமும் அநேகரை அதில் கலந்து கொள்ளும்படி அழைக்கவில்லை.

 இந்த வகுப்பு, தேவனுடைய வெளிச்சத்தைப் பிரகாசிக்கும் ஒரு தேவ பணி என்பதை ஜெபத்தின் மூலம் அறிந்து கொண்டேன். இந்த வகுப்பின் மூலம், பரிசுத்த ஆவியானவர் மக்களை பரலோகத்      தந்தைக்கு நேராக திருப்புவார் என்பதை அறிந்து கொண்ட நான், என்னுடைய உரையைக் குறித்த பயத்தை அகற்றி விட்டேன். மலைப் பிரசங்கத்தின் போது, இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்” (மத்.5:14-15). என்றார்.

இந்த வார்த்தைகளை வாசித்த நான், ஊடகத்தின் வாயிலாக ஓர் அறிவிப்பை வெளியிட்டேன். உடனடியாக, மக்கள் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.  தங்களின் நன்றியையும், ஆர்வத்தையும் தெரிவித்தனர். அவர்களின் பதிலைப் பார்த்த நான், இயேசுவின் போதனையான, “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக் கடவது” (வ.16) என்பதை அதிகமாக தியானித்தேன்.

அந்தக் கண்னோட்டத்துடன், நான் அந்த வகுப்பில், மகிழ்ச்சியோடு கற்றுக் கொடுத்தேன். என்னுடைய எளிய செயல், பிறரை ஊக்கப்படுத்தி, தேவனுடைய ஒளியைப் பிரகாசிக்கும்படி வழி நடத்துமாறு ஜெபிக்கின்றேன்.

தேவையுள்ளோரைத் தொடு

அன்னை தெரெசா, சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார் என்ற செய்தி நம்மை ஆச்சரியப் படுத்துவதாக இல்லை, ஏனெனில், அனைவரின் எதிர்பார்ப்பின் படி, “பசியாயிருப்போர், ஆடையில்லாதிருந்தோர், வீடற்றவர், குருடர், குஷ்டரோகிகள், சமுதாயத்தால் ஒதுக்கப் பட்டோர், அன்பு கூர முடியாதவர், சமுதாயத்தினரால் கவனிக்கப் படாதவர், இவர்களின் பெயரால்” அவர் இந்த விருதைப் பெற்றார். இத்தகையோருக்குப் பணிசெய்வதற்காகவே தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டார்.

சூழ் நிலைகள் எவ்வாறு இருப்பினும், தள்ளப்பட்டவர்களை அன்பு செய்வதும், பாதுகாப்பதும் எப்படி என்பதை இயேசு காட்டினார். நோயுற்றோரைக் காட்டிலும் ஓய்வு நாள் சட்டத்தை அதிகமாக மதித்த மதத் தலைவர்களைப் போன்று அல்லாமல், இயேசு வேறுபட்டு செயல் பட்டார் (லூக்.13:14). இயேசு தேவாலயத்திலே ஒரு பெலவீனமான பெண்ணைப் பார்த்த போது, அவள் மீதுள்ள இரக்கத்தினால், மனதுருகினார். அவளுடைய சரீர குறைபாட்டையும் தாண்டி, தேவனுடைய அழகிய படைப்பு கட்டப்பட்டிருப்பதைக் கண்டார். அவர் அவளைத் தன்னிடம் அழைத்தார்,  விடுதலையாக்கப் பட்டாய் என்று கூறி, “அவள் மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப் படுத்தினாள்” (வ.13). அவளைத் தொட்டதினால், அது ஓய்வு நாளாக இருந்ததால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்தான். ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிற (லூக்.6:5) இயேசு, இரக்கத்தோடு, பதினெட்டு ஆண்டுகள், வசதியற்ற நிலையிலும், அவமானத்திற்கும் உள்ளான அவளைச் சுகப்படுத்தும்படி தெரிந்து கொண்டார்.

 நாம் எத்தனை முறை நம்முடைய இரக்கத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் தவறி இருக்கிறோம் என்று  நினைத்துப் பார்த்தேன். மற்றவர்களின் தகுதிக்கு நாம் ஏற்றவர்கள் அல்ல என்பதால், நாம் தள்ளப் பட்டோமா? சக மனிதர்களைக் காட்டிலும் சட்டங்களை உயர்வாக மதிக்கும், உயர்தர மதத் தலைவர்களைப் போலல்லாமல்,  நாம் இயேசுவை மாதிரியாகப் பின்பற்றுவோம், பிறரை இரக்கத்தோடும், அன்போடும், மதிப்போடும் பார்ப்போம்.

அறிவுக்கு அப்பாற்பட்ட இரக்கம்

விஜய் ஒரு சட்ட நிறுவனத்தில் பணிபுரிந்ததால், சுரேஷின்  நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கமுடிந்தது. இருவரும் நண்பர்களாய் இருந்தனர். விஜய் அந்த நிறுவனத்தின் லட்சக்கணக்கான பணத்தை கையாடல் செய்ததை அறிந்த போது சுரேஷ், மிகவும் வருத்தப்பட்டான், கோபப்பட்டான், ஆனால், கிறிஸ்துவின் விசுவாசியான, அவனுடைய பாஸ் அவனுக்கு ஞானமான ஆலோசனை வழங்கினார். விஜய் மிகுந்த வெட்கத்தால், மனம் வருந்துவதை அவனுடைய பாஸ் கண்டார். அவர் சுரேஷிடம், விஜய் மீதுள்ள குற்றச் சாட்டுகளனைத்தையும் கைவிட்டு விட ஆலோசனை கூறினார், அவர் விஜயை வேலைக்கு அமர்த்தினார்.  “அவன் இழப்பைச் சரிக்கட்டும் வரை, அவனுக்கு சாதாரண அளவு சம்பளம் மட்டும் வழங்கு, நீ இவனைப் போல அதிக நன்றியும் உண்மையும் உள்ள ஒரு வேலையாளைப் பார்க்க முடியாது” என்றார். சுரேஷ் அப்படியே செய்தார், விஜயும் அப்படியே மாறினான்.

சவுல் அரசனின் பேரனான மேவிபோசேத் எந்த தவறும் செய்யவில்லை, ஆனாலும், தாவீது அரசனான போது, அவன் ஒரு இக்கட்டான நிலையில் இருந்தான். அநேக ராஜாக்கள், முந்தைய அரச பரம்பரையினரை கொன்று விடுவர். ஆனால், தாவீது, சவுல் அரசனின் மகனான யோனத்தானை நேசித்தான், எனவே அவனுடைய மகனை தன்னுடைய மகனாகப் பாவித்தான். (2 சாமுவேல் 9:1-13). அவனுடைய இரக்கம் ஒரு நண்பனின் வாழ்வைக் காப்பாற்றியது. அப்பொழுது மேவிபோசேத் ஆச்சரியப் பட்டு, “ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு முன்பாக என் தகப்பன் வீட்டார் எல்லாரும் சாவுக்கு ஏதுவாயிருந்தார்களே ஒழிய மற்றப் படியல்ல; ஆனாலும் உமது பந்தியிலே சாப்பிடுகிறவர்களோடே உமது அடியேனை வைத்தீர்” (19:28) என்றான். அவன் தாவீதுக்கு உண்மையாய் இருந்தான். தாவீதின் மகனான அப்சலோம் தாவீது அரசனை எருசலேமை விட்டு துரத்திய போதும் இவன் உண்மையாயிருந்தான் (2 சாமு.16:1-4; 19:24-30).

 நீயும் வாழ்க்கை முழுமைக்கும் உண்மையாய் இருக்கும் நண்பனைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றாயா? ஒரு வித்தியாசமான நபர் உன்னிடமிருந்து, வித்தியாசமான ஒன்றை எதிர் பார்க்கலாம். உன்னுடைய அறிவு ஒருவரைத் தண்டிக்குமாறு கூறலாம், ஆனாலும் இரக்கத்தை தெரிந்து கொள். அவர்களின் பொறுப்பை உணரும்படி செய், தகுதியற்றவர்களாக இருப்பினும், தவறை சரி செய்ய வாய்ப்பளி. இவரை நன்றியும் உண்மையும் உள்ள நண்பனாகக் காணமுடியும். நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்ட இரக்கத்தோடு சிந்தி.

துயரத்தின் மத்தியில் தேவனை நம்புதல்

“பப்பா ஜாண்” என்று அழைக்கப் படும் ஒரு மனிதன் தான் புற்று நோயின் கடைசி கட்டத்தில் இருப்பதாக அறிந்து கொண்டான். அவனும் அவனுடைய மனைவி கேரலும், நோயோடு தாங்கள் செய்யும் பயணத்தைக்குறித்து மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள தேவன் விரும்புகின்றார் என்பதை உணர்ந்தனர். அவர்களுடைய பாதிப்பின் வழியாகவும் தேவன் செயல்பட முடியும் என்பதை விசுவாசித்தனர். அவர்களின் மகிழ்ச்சி, துயரம் மற்றும் வேதனை நேரங்களை, இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் பதித்து வந்தனர்.

தன்னுடைய கணவன் “இயேசுவின் விரிந்த கரத்தினுள் சென்று விட்டார்” என்று கேரல் எழுதிய போது, நூற்றுக் கணக்கானோர் பதிலளித்தனர். கேரலின் வெளிப்படையான பகிர்வுக்காக அநேகர் நன்றி கூறினர். கிறிஸ்தவர்களின் மரணம் பற்றி கேட்பது ஒரு வகையில் நன்மையானது, ஏனெனில், “நாம் அனைவரும் ஒரு நாள்  மரிக்கப் போகின்றோம்” என்பதாக ஒருவர் குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர், நாங்கள் இந்த தம்பதியரை நேரடியாகப் பார்த்ததில்லை எனினும், அவர்கள் தேவன் பேரில் கொண்டுள்ள  நம்பிக்கையைப் பார்த்து,  நாங்களும் எங்களுடைய வாழ்வில் சொல்ல முடியாத அளவு ஊக்கத்தைப் பெற்றுக் கொண்டதாக    தெரிவித்திருந்தார்.

 சில வேளைகளில் பப்பா ஜாண், தாங்கமுடியாத அளவு வேதனையைச் சகித்த போதும், அவனும் கேரலும் தங்களின் கதையை பகிர்ந்து கொள்வதன் மூலம், தேவன் அவர்களை எப்படி தாங்கினார் என்பதை வெளிப்படுத்தினர். அவர்களின் சாட்சி, தேவனுக்கென்று கனி தரும் என்பதை அறிந்திருந்தனர். பவுல் துன்பங்களைச் சகித்த போது, தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில், “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக் கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக் கொள்ள வல்லவராய் இருக்கிறார் என்று நிச்சயித்துமிருக்கிறேன்” (2 தீமோ.1:12) என்றார்.

நாம் நேசிக்கும் நபரின் மரணம் மூலமாகவும் தேவன், நாம் அவர் மீது கொண்டுள்ள விசுவாசத்தை (பிறரின் விசுவாசத்தையும்) கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும் (வ.9) பெலப்படுத்த முடியும். நீயும் வேதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றாயா?  ஆறுதலையும் சமாதானத்தையும் நம் தேவனால் தர முடியும் என்பதை அறிவாயாக.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சத்தமாய் சிரித்தல்

அமெரிக்க நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான ஜான் பிரான்யன், “நாம் சிரிப்பதைக் குறித்து யோசிக்கவில்லை; அது நம்முடைய எண்ணமே இல்லை. அது வாழ்க்கை முழுவதும் நமக்கு தேவைப்படும் என்பதை அறிந்த தேவனே அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் போராட்டங்களை சந்திக்கப்போகிறோம் என்பதையும் உபத்திரவங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். சிரிப்பு என்பது ஒரு வரம்” என்கிறார். 
தேவன் படைத்த சில உயிரினங்களை பார்த்த மாத்திரத்தில் நமக்கு சிரிப்பு வரலாம். அவற்றின் விநோதமான உருவ அமைப்பும், அவைகள் செய்யும் குறும்புத்தனமும் நம்முடைய சிரிப்பிற்கு காரணமாகலாம். கடலில் வாழும் பாலூட்டிகளையும், பறக்க முடியாத நீண்ட கால்கள் கொண்ட பறவைகளையும் தேவன் படைத்தார். தேவன் இயல்பில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நமக்கும் நகைச்சுவை உணர்வு இயல்பானது.  
வேதாகமத்தில் நகைப்பு என்னும் வார்த்தையை ஆபிரகாம் மற்றும் சாராள் சம்பவத்தில் தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். இந்த வயதான தம்பதியருக்கு தேவன், “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” (ஆதியாகமம் 15:4) என்று வாக்குப்பண்ணுகிறார். மேலும், “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு... உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” (வச. 5) என்றும் தேவன் சொன்னார். இறுதியில் தன்னுடைய தொன்னூறாம் வயதில் சாராள் பிள்ளை பெற்றபோது, ஆபிரகாம் “நகைப்பு” என்று அர்த்தம்கொள்ளும் ஈசாக்கு என்னும் பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறான். சாராளும் ஆச்சரியத்தில், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்” (21:6) என்று கூறுகிறாள். அந்த பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது குறித்து அவள் வியப்பாகிறாள். அவளுக்கு பிள்ளை பிறக்கும் என்று தேவன் முதலில் சொன்னபோது, சந்தேகத்தில் சிரித்த அவளுடைய சிரிப்பை (18:2) ஆச்சரியமான சிரிப்பாய் தேவன் மாற்றுகிறார்.  
சிரிப்பு என்னும் வரத்திற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே! 

களைகளுக்கு நீர்ப்பாசனம்

இந்த வசந்த காலத்தில், எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தை களைகள் காடுபோல் வளர்ந்திருந்தது. அதில் பெரிதாய் வளர்ந்திருந்த ஒரு களையை நான் பிடுங்க முயற்சித்தபோது, அது என்னை காயப்படுத்தும் என்று நான் அஞ்சினேன். அதை வெட்டுவதற்கு நான் ஒரு மண்வெட்டியைத் தேடிக்கொண்டிருந்தவேளையில், ஒன்றைக் கவனிக்க முற்பட்டேன். என்னுடைய மகள் அந்த களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். “நீ ஏன் களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாய்?” என்று நான் அதிர்ச்சியில் கேட்டேன். அவள் ஒரு கசப்பான புன்னகையோடு, “அது எவ்வளவு பெரிதாய் வளருகிறது என்று பார்க்க விரும்புகிறேன்” என்று பதிலளித்தாள்.  
களைகள் நாம் விரும்பி வளர்க்கிற ஒன்றல்ல. ஆனால் சிலவேளைகளில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடைபண்ணுகிற நம்முடைய சுய விருப்பங்கள் என்னும் களைகளுக்கு நாமே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம். 
பவுல், கலாத்தியர் 5:13-26இல் இதைக் குறித்து எழுதுகிறார். அதில் மாம்சீக வாழ்க்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் ஒப்பிடுகிறார். அவர் சொல்லும்போது, நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்தால் மட்டும் நாம் எதிர்பார்க்கும் களைகள்-இல்லா வாழ்க்கையை சுதந்தரித்துவிடமுடியாது என்கிறார். களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்துவதற்கு “ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள்” என்று ஆலோசனை சொல்லுகிறார். மேலும் தேவனோடு நடக்கும்போது “மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” (வச. 16) என்றும் அறிவுறுத்துகிறார்.  
பவுலின் போதனைகளை முழுவதுமாய் அறிந்துகொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு முயற்சி. அவரின் எளிமையான வழிநடத்துதலை நான் நேசிக்கிறேன். நம்முடைய சுய இச்சைகளையும் சுயவிருப்பங்களையும் நாம் நீர்பாய்ச்சி வளர்ப்பதற்கு பதிலாக, தேவனோடு உறவுகொள்வதின் மூலம் நாம் கனிகொடுத்து, தேவ பக்தியின் அறுவடையை ஏறெடுக்கமுடியும் (வச. 22-25).   

உறுதியும் நன்மையுமான

அந்த இளம் கேம்பஸ் அலுவலர் என்னுடைய கேள்வியைக் கண்டு கலக்கமடைந்தார். “தேவனுடைய நடத்துதலுக்கும் உதவிக்காகவும் நீங்கள் ஜெபிக்கிறீர்களா?” என்று நான் கேட்டதற்கு அவர் முகநாடி வேறுபட்டது. “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” என்று பவுல் வலியுறுத்துகிறார். என் கேள்விக்கு பதிலாக, அந்த இளைஞன், “எனக்கு ஜெபத்தில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை” என்று கூறினான். “தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறார் என்றும் எனக்கு தோன்றவில்லை” என்று தன் முகத்தை சுருக்கினான். அந்த இளம் அலுவலர் தன்னுடைய சுயபெலத்தில் ஒரு துறைசார்ந்த சாதனையை நிகழ்த்த முற்பட்டு தோற்றுப் போனார். ஏன்? அவர் தேவனை மறுதலித்ததால்.  
சபையின் மூலைக்கல்லாகிய கிறிஸ்து தன் சொந்த ஜனத்தினாலேயே எப்போதும் புறக்கணிக்கப்படுகிறவராய் இருக்கிறார் (யோவான் 1:11). பலர் இன்றும் அவரை நிராகரிக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை, வேலைகளை, உறுதியாய் ஸ்தாபிக்கப்படாத தேவாலயங்களின் மூலமாகவும், தங்கள் சொந்த திட்டங்கள், கனவுகள் மற்றும் பிற நம்பகத்தன்மையற்ற தளங்களில் தங்களுடைய ஜீவியத்தைக் கட்டியெழுப்ப போராடுகிறார்கள். ஆனாலும், நம்முடைய நல்ல இரட்சகர் ஒருவரே நம்முடைய “பெலனும், என் கீதமுமானவர்” (சங்கீதம் 118:14). நிஜத்தில், “வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று” (வச. 22).  
நம்முடைய வாழ்க்கையின் மூலையில், அவரை விசுவாசிப்பவர்கள் எவ்விதம் வனையப்படவேண்டும் என்ற திசையை தேவன் தீர்மானிக்கிறார். எனவே அவரை நோக்கி “கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்” (வச. 25) என்று நாம் ஜெபிக்கிறோம். அதின் விளைவு? “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” (வச. 26). அவர் உறுதியான மற்றும் நல்ல தேவனாய் இருப்பதால் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம்.