பரிபூரண தகப்பன்
“உன் பிள்ளைப்பருவத்தில் நான் அதிகநேரம் வீட்டில் இல்லாததால், உன்னோடு சரியாக நேரம் செலவளிக்க முடியாமற்போயிற்று,” என்று என் தந்தை ஒருமுறை என்னிடம் கூறினார். ஆனால் எனக்கு அப்படி ஒன்றும் ஞாபகமில்லை. என் தந்தை, தன்னுடைய முழுநேர அலுவலக பணி முடிந்ததும், சிலநாட்கள், சாயங்கால வேளையிலே பாடகர் குழுவிற்கு பயிற்சி கொடுக்கும்படி ஆலயம் சென்றிடுவார். மேலும், எப்போதாவது, நான்கு பேர்கொண்ட ஒரு இசை குழுவுடன் சேர்ந்து இசைக் நிகழ்ச்சிக்காக ஒன்று அல்லது இரண்டு வார பயணம் மேற்கொள்வதுண்டு. இருப்பினும், என் வாழ்வின் மிகமுக்கியமான தருணங்களிலும், சில சாதாரண தருணங்களிலும் கூட அவர் என்னோடு இருந்துள்ளார்.
உதாரணத்திற்கு, நான் 8 வயதாய் இருந்தபொழுது, பள்ளி நாடகமொன்றில், ஒரு சிறிய கதாபாத்திரத்திலே நடித்தேன். மத்தியான வேளையிலே, அந்நாடகத்தை காண தாய்மார்கள் அனைவரும் வந்திருந்தார்கள். ஆனால் ஒரே ஒரு தகப்பனார் மட்டுமே வந்திருந்தார். அது என்னுடைய தந்தைதான். என்னையும் என் சகோதரிகளையும் அவர் எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதையும், நாங்கள் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், அநேக சின்னஞ்சிறு செயல்கள் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், என் தாயாருடைய கடைசி காலத்தில், என் தந்தை அவரை மிகுந்த பரிவோடு கவனித்ததின் மூலம், தன்னலமற்ற அன்பு எப்படி இருக்கும் என்பதை நான் கற்றுக் கொண்டேன். என்னுடைய தந்தை குறையொன்றும் இல்லாதவரல்ல. ஆனால், எப்பொழுதும் நம் பரமபிதாவை குறித்த ஒரு சிறிய கண்ணோட்டத்தை அவர் எனக்கு காண்பித்துள்ளார்.
சில சமயம், இப்பூமியில் வாழும் தந்தைமார்கள், தங்கள் பிள்ளைகளை ஏமாற்றவும் காயப்படுத்தவும் கூடும். ஆனால், நம்முடைய பரமபிதாவோ, “உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர்” (சங். 1௦3:8). தேவனை நேசிக்கும் ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை கண்டிக்கும்பொழுதும், தேற்றும்பொழுதும், கற்பித்து வழிநடத்தும்பொழுதும், அவர்கள் தேவைகளை சந்திக்கும்பொழுதும், பரிபூரணராகி நம் பரமபிதாவை மாதிரியாக வெளிப்படுத்துகிறார்.
ஒன்றாக நேரம் செலவழித்தல்!
இரண்டு மணிநேர பயணம் செய்து எங்கள் உறவினரின் திருமணதிற்கு சென்று திரும்பும் பொழுது, மூன்றாவது முறையாக என்னுடைய தாய் என் வேலையைக் குறித்து விசாரித்தார். நான் கூறும் வார்த்தைகள் விசேஷவிதமாக அவர்கள் மனதில் எவ்வாறு பதியவைப்பது என எண்ணியவாறு, முதல் முறை பதிலளிப்பதுபோல நான் சில விவரங்களை மறுபடியும் அவரிடம் கூறினேன். என் தாயார் அல்ஸைமர் (alzheimer) வியாதியினால் தாக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஞாபக சக்தியை இழந்து கொண்டிருந்தார். அவ்வியாதி ஒருவருடைய செயல்பாட்டுத் திறனை பாதித்து, இறுதியில் பேச்சுத்திறன் முற்றிலும் அற்று போகவும் இன்னும் அநேக பாதிப்புகள் ஏற்படவும் செய்கிறது.
என் தாயாருக்கு ஏற்பட்ட வியாதியினால் எனக்கு மிகுந்த மனவேதனை இருந்தாலும், அவரோடு நான் நேரம் செலவிடவும், அவரோடு பேசவும் அவர் இன்னும் உயிரோடு இருப்பதை எண்ணி, நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நான் அவர்களை காணச் செல்லும்பொழுதெல்லாம், மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு, “அலிசன்(alyson) என்னவொரு இன்ப அதிர்ச்சி,” என்று கூறுவார். நாங்கள் ஒன்றாக சேர்ந்து செலவிடும் நேரங்கள் எங்கள் இருவருக்குமே பிடிக்கும் சில சமயம் என்ன கூறுவதென்று தெரியாமல் அவர் மவுனமாயிருக்கும் பொழுதும் நாங்கள் உரையாடிக்கொள்வோம்.
தேவனோடுள்ள நம் உறவை விவரிப்பதற்கு, இது ஒரு சிறிய, சாதாரண உருவகம் தான். “தமக்குப் பயந்து, தமது கிருபைக்காகக் காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தர் பிரியாமாயிருக்கிறார்”, என வேதம் கூறுகிறது (சங். 147:11). இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட அனைவரையும், தேவன் தம்முடைய பிள்ளைகள் எனக் கூறுகிறார் (யோ. 1:12). ஒரு வேளை நாம் திரும்பத்திரும்ப அதே விண்ணப்பங்களை எறெடுத்தாலும், அல்லது அவரிடம் என்ன கூறுவது என தெரியாமல் விழித்தாலும், அவர் நம்மிடம் பொறுமையாகவே இருப்பார். ஜெபத்திலே அவரிடம் நாம் என்ன பேசுவது என தெரியாமல் மவுனமாயிருக்கும் பொழுதும் அவர் நம்மைக்குறித்து மகிழ்ந்திருக்கிறார்.
உயிர்ப்பிக்கப்பட்டு
என் தந்தை வாலிபனாக இருந்தபோது, வெளியூரில் நடக்கும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியைக் காண தன் நண்பர்களுடன் காரிலே சென்றார். அப்பொழுது, மழையினால் நனைந்திருந்த சாலையிலே கார் டயர் சறுக்கி விபத்திற்குள்ளானது. மிக மோசமான அவ்விபத்திலே என் தந்தையின் ஒரு நண்பர் இறந்து போனார், மற்றொருவருக்கு கைகால்கள் செயலிழந்து போயிற்று. என் தந்தையும் இறந்துவிட்டதாக கருதி சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டார். அப்பொழுது அவரை அடையாளம் காட்டும்படி, மிகுந்த அதிர்ச்சியோடும் துயரத்தோடும் அவருடைய பெற்றோர் அங்கு சென்றபோது, ஆழ்ந்த கோமாவிலிருந்து என் தந்தை சுயநினைவிற்கு திரும்பினார். அவர்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறியது.
நாம் “கிறிஸ்து அன்றி அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாய் இருந்தோம்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் 2ஆம் அதிகாரத்தில் நமக்கு நினைவூட்டுகிறார் (வச. 1). ஆனால், “தேவனோ இரக்கத்தில் ஐஸ்வரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாய் இருந்த நம்மைக் கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார்” (வச. 4-5). இயேசு கிறிஸ்துவின் மூலம் மரணத்திலிருந்து நாம் உயிர்ப்பிக்கப்பட்டோம். அப்படியென்றால், ஒருவகையில் நம் அனைவருடைய வாழ்வும் பரம பிதாவிற்கு சொந்தமானதே. பாவத்தில் மரித்துப்போயிருந்த நமக்கு, தேவன் தம் அளவற்ற அன்பினால், தம்முடைய குமாரன் மூலம் நாம் ஜீவனையும் வாழ்வளிக்கும் நோக்கத்தையும் பெற்றுக்கொள்ள கிருபை அளித்துள்ளார்.
சமாதான பிணைப்பு!
ஒரு விஷயத்திலே, எனக்கும் என் தோழிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைக்குறித்து மின்னஞ்சல்(e-mail) மூலம் நான் வெளிப்படையாக அவளிடம் பேசிய பிறகு அவளிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. ஒருவேளை நான் அப்படி பேசியிருக்கக்கூடாதோ என எண்ணத் தோன்றியது. அவளை கேள்விகள் கேட்டு பிரச்சனையை இன்னும் பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆனால் அவள் வெளிநாட்டிற்கு பிரயாணப்படுமுன் இப்பிரச்சனையை தீர்த்துவிட எண்ணினேன். இதற்குமேல் என்ன செய்வது என தெரியாமல், என் மனதிலே அவள் தோன்றும் பொழுதெல்லாம் அவளுக்காக ஜெபிக்க ஆரம்பித்தேன். பின்பு ஒரு நாள், காலை வேளையில் அருகில் உள்ள பூங்காவிற்கு நான் சென்ற போது, அவளை அங்கு கண்டேன். அவள் என்னை பார்த்த மாத்திரத்தில், அவளுடைய முகத்தில் வலி படர்ந்ததையும் கண்டேன். ஆனால், “தேவனே, இன்று அவளோடு பேச எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்திற்காக நன்றி,” என்று தேவனுக்கு நன்றி செலுத்திவிட்டு, புன்னகையோடு அவளை அணுகினேன். பின்பு நாங்கள் இருவரும் மனந்திறந்து பேசி பிரச்சனையை சரிசெய்து கொண்டோம்.
சில சமயங்களில், நம்முடைய உறவுகளில் வேதனையோ மவுனமோ நுழைந்துவிட்டால் பிரச்சனையை சரிசெய்வது மிகக் கடினமாகிவிடுகிறது. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் நிருபத்தில் குறிப்பிட்டுள்ளது போல, நம்முடைய உறவுகளில் தேவசுகம் உண்டாகும் பொருட்டு, சாந்தகுணத்தையும், தாழ்மையையும் பொறுமையையும் அணிந்துகொண்டு, சமாதானமும் ஐக்கியமும் உண்டாக நாம் செயல்பட வேண்டும். நாம் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என தேவன் ஏங்குகிறார். பூங்காவிலே எதிர்பாராத சந்திப்பினால் சமாதானத்தை ஏற்படுத்திய தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் தம்முடைய ஜனத்தை ஒன்றிணைப்பார்.
கிருபையின் தாளங்கள்
தொண்ணூறு வயதை கடந்த என் நண்பரும் அவர் மனைவியும் திருமணம் செய்து 66 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர்கள் தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் இனி வருகிற தலைமுறைகளுக்காக, தங்கள் குடும்ப வரலாற்றை, புத்தகத்தில் பதிவு செய்து வைத்துள்ளனர். “அம்மா அப்பாவிடமிருந்து ஓர் கடிதம்” என்னும் தலைப்பில் உள்ள அப்புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில், அவர்கள் தங்கள் வாழ்வில் கற்றுக்கொண்ட முக்கிய பாடங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள். அதில், “ஒருவேளை கிறிஸ்தவ மதத்தினால் உங்கள் பெலன் அனைத்தும் வற்றிப்போய், நீங்கள் துவண்டுபோய் உள்ளீர்கள் என்றால், இயேசு கிறிஸ்துவோடு ஐக்கியம் கொண்டு, அவ்வுறவிலே மகிழ்ந்திருப்பதற்கு பதில், நீங்கள் வெறும் மதத்தையே பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால், நீங்கள் தேவனோடு நடக்கும்போது சோர்ந்துபோக மாட்டீர்கள்; மாறாக நீங்கள் உற்சாகமடைந்து, பெலத்தின்மேல் பெலனடைந்து, புத்துயிர் பெறுவீர்கள்”, என்னும் கருத்து, என் வாழ்வை நான் சற்று ஆராய்ந்து பார்க்கத் தூண்டியது (மத். 11:28-29).
இயேசுவின் அழைப்பை, யூஜீன் பீடெர்சன் (Eugene Peterson) “நீங்கள் சோர்ந்துபோய் இருக்கிறீகளா? முற்றிலும் துவண்டுபோய் உள்ளீர்களா? மதத்தினால் வெறுமையாய் உணருகிறீர்களா?.. என்னோடு நடந்து என்னோடு சேர்ந்து பணிசெய்யுங்கள்... கிருபையின் இயல்பான தாளங்களை கற்றுக்கொள்ளுங்கள்”, என மொழியாக்கம் செய்துள்ளார்.
தேவனை சேவிப்பது முற்றிலும் என்னையே சார்ந்தது என நான் எண்ணினால், நான் அவரோடுகூட நடப்பதற்குப் பதில், அவருக்கு வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டேன் என்றே அர்த்தம். இவ்விரண்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. நான் கிறிஸ்துவோடு நடக்கவில்லை என்றால், என் ஆவி வறண்டு நொறுங்குண்டு காணப்படும். சக மனிதர்களை தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டவர்களாய் காண்பதற்கு பதில், நமக்கு இடையூறு ஏற்படுத்துகிறவர்களாக, நம்மை நச்சரிப்பவர்களாக காணத்தோன்றும். ஒன்றும் சரியாக தோன்றாது.
இயேசுவோடுள்ள உறவிலே மகிழ்ந்து களிகூருவதற்கு பதில், நான் மதத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறேன் என்று எனக்கு தோன்றினால், அத்தருணமே, என்னுடைய பாரத்தை கீழே இறக்கிவைத்துவிட்டு, அவருடைய “இயல்பான கிருபையின் தாளங்களில்” அவருடன் நடக்க வேண்டும்.
மேகங்களை எண்ணிப்பார்
பல வருடங்களுக்கு முன்பு, நானும் என் மகன்களும், எங்கள் மாடியில் படுத்துக்கொண்டு, மேகங்கள் மிதந்து செல்வதை கவனித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது மகன் ஒருவன், “ஏன் மேகங்கள் மிதக்கின்றன”, எனக் கேட்டான். உடனே நான், என் பரந்து விரிந்த ஞானத்திலிருந்து அவன் பயன்பெறும்படி அவனுக்கு பதில் கூற எண்ணி, “அதாவது”, என ஆரம்பித்து, விடை தெரியாததால் மௌனமானேன். பின்பு, “எனக்கு விடை தெரியவில்லை, ஆனால் அதை அறிந்துகொண்டு உனக்கு சொல்கிறேன்”, என மகனிடம் கூறினேன்.
ஏன் மேகங்கள் மிதக்கின்ற என்பதற்கு பதிலை பின்பு அறிந்துகொண்டேன். காற்றுமண்டலத்தில் உள்ள ஈரப்பதம் உறைந்துபோய், புவிஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு பூமியை நோக்கி வரும்பொழுது, அது பூமியின் வெப்பமான தட்பவெப்பநிலையை எதிர்கொண்டு நீராவியாகி, மறுபடியும் காற்றுமண்டலத்திற்குள் கடந்து செல்கிறது. இந்நிகழ்வைக் குறித்த மிகச் சாதாரணமான விளக்கம் இதுவே.
ஆனால் இயற்கையான விளக்கங்கள் ஒருபோதும் இறுதியான பதில்கள் ஆகாது. “மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும்,”
(யோபு 37:16) நாம் அறிந்துக்கொள்ளும் விதமாக தேவன் தம்முடைய அநாதி ஞானத்தினாலே இயற்கை விதிகளை ஏற்படுத்தியுள்ளார். மேகங்கள் மிதப்பதும் அப்படியே. தேவனுடைய நன்மையையும் கிருபையையும் அவருடைய சிருஷ்டிப்பில் நாம் காணும்படியாக, வெளியரங்கமாகவே வைக்கப்பட்ட அடையாளமாக மேகங்களைக் காணலாம்.
ஆகவே, நீங்கள் மேகங்களைப் பார்த்து ரசிக்கும்பொழுதும், அதில் என்ன உருவம் தெரிகிறது என கற்பனை செய்து பார்க்கும்பொழுதும், எல்லாவற்றையும் நேரத்தியாய் அழகாய் படைத்த தேவன்தாமே, அம்மேகக் கூட்டங்களை காற்றில் மிதக்கச்செய்கிறார் என்பதை நினைவுகூர்ந்திடுங்கள். நாம் அவற்றைக் கண்டு வியந்து, தேவனை அன்புள்ள இருதயத்தோடு பணிந்து தொழவேண்டும் என அவர் விரும்புகிறார். குமுலஸ் (Cumulus) என அழைக்கப்படும் திரளான சின்னஞ்சிறு மேகக்குவியல், ஸ்ட்ராடஸ் (Stratus) என்று அழைக்கப்படும் போர்வை போர்த்தியது போன்று சற்று கருத்த மேகக்கூட்டம் மற்றும் மெலிந்த நாணல் வடிவில் மங்கலாக உள்ள ஸிர்ரஸ் (Cirrus) என்று அழைக்கப்படும் மேகக்கூட்டம் உட்பட வானங்கள் அனைத்தும் தேவனுடைய மகிமையை விவரிக்கிறது.
எதுவும் பயனற்றதல்ல!
சரிரத்தில் மிகுந்த வலிவேதனைகளோடு, இயல்பாக இயங்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறேன். குறைந்துபோன செயல்பாட்டினால் மனமுடைந்து மிகவும் சோர்ந்துபோன வேளையில், “என் சரீரம் செயலற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே இப்பொழுது தேவனுக்கும் மற்றவர்களுக்கும் என்னால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தோன்றுகிறது”, என என் தோழியிடம் மனந்திறந்து கூறினேன்.
அப்பொழுது அவள் தன் கரத்தை என் கரம் மீது வைத்து, “நான் புன்னகையோடு உனக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொழுதும், உன் பேச்சை நான் கவனித்து கேட்கும் பொழுதும், உனக்குள் எவ்வித தாக்கத்தையும் நான் ஏற்படுத்துவதில்லை எனக் கூறுவாயா?”, எனக் கேட்டாள்.
அதைக் கேட்டு நான் சற்று தடுமாறி, என் சாய்வு நாற்காலியில் நன்கு சாய்ந்து, “கண்டிப்பாக இல்லை”, என பதிலளித்தேன்.
அதற்கு என் தோழி, “இதைத்தானே நீ எனக்கும் மற்றவர்களுக்கும் செய்கிறாய். அப்படியிருக்க ஏன் உனக்கு தானே பொய்களைக் கூறிக்கொள்கிறாய்”, என பாசத்தோடு முறைத்தாள்.
தேவனுக்கென்று நாம் செய்வது எதுவும் பயனற்றது கிடையாது என்பதை தேவன் எனக்கு நினைவூட்டியதற்காக அவளுக்கு நன்றி செலுத்தினேன்.
நம்முடைய சரீரங்கள் இப்பொழுது பலவீனமுள்ளதாயிருந்தாலும், “பலமுள்ளதாய் எழுந்திருக்கும்,” என பவுல் உறுதியளிக்கிறார் (1 கொரி. 15:43). மேலும், கிறிஸ்தவுக்குள் மரித்தோர் மீண்டுமாய் உயிர்த்தெழுவார்கள் என தேவன் வாக்குபண்ணியுள்ளதால், அவர் நம்முடைய ஒவ்வொரு
காணிக்கையையும், எல்லா பிரயாசங்களையும் அவருடைய ராஜ்ஜியத்தைக் கட்ட பயன்படுத்துவார் (58).
பலவிதமான நபர்களைக் கொண்ட கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலே நாம் ஒருவரையொருவர் சார்ந்து இருப்பதினால், நாம் நோய்வாய்ப்பட்டிருந்தாலும், நம் சரீர இயக்கம் குறைந்துபோயிருந்தாலும், சோதனை வேளையிலும் நாம் வெளிப்படுத்தும் விசுவாசம், ஒரு புன்னகை, உற்சாகமூட்டும் வார்த்தை அல்லது ஒரு ஜெபம் யாவும் அநேகருக்கு ஆசீர்வாதமாய் இருக்கும், நாம் செய்யும் எவ்வித பணியும் சாதாரணமானதுமன்று, பயனற்றதுமன்று.
இருதயத்தின் நிலைகள்
எங்கள் ஆலய ஆராதனைக்குழுவில் மௌத் ஆர்கன் (Mouth Organ) வாசிக்கும் என் கணவர், சில சமயம் இசை வாசிக்கும்பொழுது, கண்களை மூடிக்கொண்டு வாசிப்பதை நான் கவனித்துள்ளேன். அப்படி கண்களை மூடிக்கொள்ளும் பொழுது, கவனத்தை சிதறவிடாமல், தன்னுடைய மௌத் ஆர்கனில் மாத்திரம் கவனத்தை செலுத்தி, சிறப்பான இசை அமைப்பதின் மூலம் தேவனை முழு மனதோடு துதிக்க முடிவதாக என் கணவர் கூறுவார்.
நாம் ஜெபிக்கும் பொழுது, நம்முடைய கண்கள் கட்டாயம் மூடியிருக்க வேண்டுமோ என சிலர் எண்ணக்கூடும். நாம் எவ்விடத்திலும் எவ்வேளையிலும் ஜெபிக்கலாம். அப்படியிருக்கையில், எப்பொழுதும் நாம் கண்களை மூடிக்கொண்டு ஜெபிப்பது, சாத்தியமற்றது. ஏனென்றால், நாம் கட்டாயம் கண்களை மூடிக்கொண்டுதான் ஜெபிக்க வேண்டுமெனில் நாம் நடக்கும் பொழுது அல்லது செடிகளுக்கு நீர் பாய்ச்சும் பொழுது அல்லது வண்டி ஓட்டும் பொழுது நம்மால் ஜெபிக்க முடியாதே!
அதைப்போலவே, நாம் ஜெபிக்கும்பொழுது, சரீரப்பிரகாரமாக இந்நிலையில்தான் நாம் உட்காரவோ, நிற்கவோ, முழங்காற்படியிட வேண்டும் என எவ்வித விதியுமில்லை. சாலொமோன் ராஜா தேவாலயத்தைக்கட்டி பிரதிஷ்டை செய்தபொழுது, முழங்காற்படியிட்டு “தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து,” ஜெபம் செய்தான் (2 நாளா. 6:13-14). வேதத்திலே ஜெபத்தைக் குறித்து குறிப்பிடும்பொழுது, முழங்காற்படியிட்டும் (எபே. 3:15), நின்றும் (லூக். 18:10-13), முகங்குப்புற விழுந்தும் (மத். 26:39), எந்நிலையிலும் நாம் ஜெபிக்கலாம் என்பதைக் காணலாம்.
நாம் தேவனை முழுமனதோடு நோக்க, நம் சரீர நிலைகளாகிய நிற்பது, முழங்காற்படியிடுவது, கைகளை வானத்திற்கு நேராக உயர்த்துவது, கண்களை மூடுவது போன்றவை முக்கிய மானதல்ல. நம்முடைய இருதயத்தின் நிலையே முக்கியமானது. ஏனென்றால், “அதினிடத்திலிருந்து (இருதயம்) ஜீவஊற்று புறப்படும்” (நீதி. 4:23). நம்முடைய ஜெபங்களுக்கு, “(அவருடைய) கண்கள் திறந்தவைகளும், (அவருடைய) செவிகள் கவனிக்கிறவைகளுமாய் இருப்பதினால்,” (2 நாளா. 6:4௦) நாம் ஜெபிக்கும் பொழுதெல்லாம் நம் இருதயம் நம்முடைய அன்பான தேவனை நோக்கி பக்தியோடும், நன்றியோடும், தாழ்மையோடும் தலை வணங்குவதாக.
வால்டோவை கண்டுபிடி
சிறந்த சிறுவர் புத்தகங்களில், இன்று அதிகமாக விற்பனையாகும் “வால்டோ எங்கே” (Where’s Waldo) என்னும் கார்ட்டூன் புத்தகதொகுப்பின் நட்சத்திர ஹீரோ ‘வால்டோ’. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள காட்சிகளில், மற்ற கதாப்பாத்திரங்களுக்கிடையே வால்டோ மறைந்து கொள்வான். சிறுவர்கள் அவனை கண்டுப்பிடிக்கவேண்டும். இதுவே அப்புத்தகத்தின் கரு. உலகெங்கும் உள்ள பெற்றோர்கள், தங்கள் சிறு பிள்ளைகள் வால்டோவை கண்டு பிடிக்கும் பொழுது, அவர்கள் முகங்களில் வெளிப்படுத்தும் வெற்றிக் களிப்பைக் கண்டு ரசிப்பார்கள். சில சமயம் தங்கள் பிள்ளைகள் வால்டோவை கண்டுபிடிக்க அவர்களையும் சேர்த்துக்கொள்ளும் பொழுது, அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
ஆதித் திருச்சபையில் மூப்பராக இருந்த ஸ்தேவான், கிருஸ்துவைக் குறித்து பிரசங்கித்ததற்காக கல்லெறிந்து கொல்லப்பட்ட பின்பு, (அப். 7) கிறிஸ்தவர்களுக்கு எதிராக உபத்திரவம் பெருக ஆரம்பித்தது. ஆகவே அவர்கள் எருசலேமை விட்டு தப்பியோடினார்கள். அப்பொழுது இன்னொரு மூப்பராகிய பிலிப்பு, சமாரியவிற்கு தப்பிச்சென்ற கிறிஸ்தவர்களைப் பின் தொடர்ந்து சென்று, அவர்களுக்கு கிறிஸ்துவைக் குறித்து இன்னும் அதிகமாய் பிரசங்கித்தான். அதை அவர்கள் எற்றுக்கொண்டார்கள் (8:6). அவ்வேளை, பரிசுத்த ஆவியானவர், ஒரு “விசேஷ” பணி நிமித்தமாக “வனாந்திர பாதையிலே” பிலிப்பை அனுப்பினார். தன்னுடைய சுவிசேஷப் பணியின் மூலம், மிகுந்த பலனை சமாரியாவிலே காணும்பொழுது, ஆவியானவரின் வழிநடத்துதல் பிலிப்பிற்கு விசித்திரமாக தோன்றியிருக்கக்கூடும். ஆனால், வழியிலே ஒரு எத்தியோப்பிய நாட்டு மந்திரிக்கு, ஏசாயா புத்தகத்திலிருந்து, கிறிஸ்துவை அவன் கண்டுகொள்ள உதவி செய்தபொழுது, பிலிப்பிற்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! (வச. 26-40).
இதைப்போலவே, வேதத்தின் மூலம் பிறர் “இயேசுவை கண்டுக்கொள்ள” நாம் உதவும்படியான அநேக சந்தர்ப்பங்கள் நமக்கு கொடுக்கப்படுகின்றன. தன் பிள்ளை, வால்டோவை கண்டுப் பிடித்த போது, அவன் கண்களில் வெளிப்பட்ட சந்தோஷத்தைக் கண்டு மகிழும் பெற்றோரைப் போலவும், ஒரு எத்தியோப்பிய தலைவன் இயேசுவை கண்டடைந்த பொழுது பிலிப்புக்கு ஏற்பட்ட மன மகிழ்ச்சியை போலவும், நாமும் நம்மை சுற்றியுள்ளவர்கள் இயேசுவை கண்டுகொள்ளும்போது மிகுந்த சந்தோஷமடைவோம். ஒவ்வொரு நாளும் ஆவியானவரின் வழிநடத்துதலோடு, நமக்கு மிகவும் பரிச்சயமானவர்களானாலும் சரி, அல்லது ஒரே முறை சந்தித்தவர்களானாலும் சரி, கிறிஸ்துவைக் குறித்து அவர்களிடம் பகிர நாம் ஆயத்தப்படு வோமாக.